அன்று ஞாயிற்று கிழமை அதனால் அந்த மால் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.மாலின் உள்ளே நுழைந்ததுமே ஏசியின் குளுமை கயல்விழியின் முகத்தை தாக்கியது.
“ஊப்….”என்று தன் மூச்சை இழுத்துவிட்டவள் சுற்றிலும் கண்களை சுழலவிட்ட படி நடந்து கொண்டே அவ்வபோது தனது கைபேசியையும் பார்த்தபடி வர,அவள் எதிர்பார்த்த நபரிடம் இருந்து எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை.
“ப்ச்…இப்ப என்ன பண்றது….”என்று யோசித்தவள்,மாலில் உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்துவிட்டாள்.நேற்று தான் கோவையில் இருந்து வந்திருந்தாள். மீட்டிங் ஒன்றிற்கு அவள் வந்தாக வேண்டிய சூழ்நிலை அதனால் வந்திருந்தாள்.அதோடு இன்னொரு முக்கிய விஷயமும் இருந்தது அது அவளின் தந்தை அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையை சந்திக்கவும் வந்திருந்தாள்.
குருமூர்த்தி கயல்விழியின் கல்யாண விடயத்தில் மிக தீவிரமாக இருந்தார்.எப்படியும் மகளுக்கு நல்ல இடத்தில் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் மாப்பிள்ளை தேட தொடங்கினார்.கயல்விழி நல்ல வேலையில் இருப்பதால் அவளுக்கு நல்ல வரன்கள் வர தொடங்கியிருந்தன,அதில் எதை தேர்ந்தெடுக்க என்று புரியாமல் அவர்கள் மகளிடம் செல்ல அவளோ,
“ப்பா…நீங்க பாருங்க….உங்களுக்கு பிடிச்சிருந்தா மேல பேசுங்க….”என்று விட குருவிற்கு மனதில் சுணக்கம் தான்.இப்படி மகள் எதிலும் பற்றில்லாமல் இருக்கிறாளே அவள் மனதில் வேறு ஏதாவது இருக்குமோ தன்னிடம் கூற தயங்குகிறாளா என்று மனதில் ஒரு எண்ணம் ஓட,அதை மனைவியிடமும் பகிர்ந்தார்.
“என்ன பாரூ….இவ இப்படி இருக்கா….நீங்களே பாருங்கனு சொல்லுறா….பழைய கயலே தேவலாம் போல இருக்கு….அவ மனசுல என்ன நினைச்சாளும் அதை முகத்துக்கு நேரா சொல்லிட்டு போயிட்டே இருப்பா….இப்ப என்னனா அவ முகம் ஒண்ணு சொல்லுது…வாய் ஒண்ணு சொல்லுது….”என்று வருத்தமாக கூறினார்.அவருக்கு மகளை பழைய மாதிரி பார்க்க வேண்டும் என்று ஆசை.
கயல்விழியிடம் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அவள் நீங்களே பாருங்கம்மா என்று சென்றுவிடுவாள் அந்த பேச்சை தவிர்ப்பது போல் தான் அவளின் செயல்பாடுகள் இருக்கும் அதை பார்வதியும் உணர்ந்திருந்தார்.ஆனால் அதற்காக திருமணத்தை தள்ளி போட வேண்டாம் என்று நினைத்த பார்வதி,
“எனக்கு புரியுதுங்க….அதுக்காக அவ கல்யாணத்தை எல்லாம் தள்ளி போட வேண்டாம்….நாம பார்ப்போம்….அவ தான் நம்மளை பார்க்க சொல்லிட்டாள்ல நாம நல்ல வரனா பார்ப்போம்…..”என்று கூற,குருவிற்கும் மனைவியின் கூற்று சரியென பட,
“சரிமா பார்க்கலாம்….”என்று கூறி,வந்திருக்கும் மாப்பிள்ளைகளை அலசி ஆராய்ந்து ஒன்றை தேர்ந்தெடுத்து மகளிடம் கொடுக்க,அவளோ உங்களுக்கு பிடிச்சா போதும் என்று விட,
“ப்ச்….கயல் வாழப்போறது நீ….நீ தான் பார்க்கனும்….நீ நாளைக்கு சென்னை போற இல்ல….பார்த்து பேசி பாருங்க…அப்புறமா மேற்கொண்டு பேசலாம்….”என்றவர் அவளின் பதிலை எதிர்பாராமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி சந்திக்க ஏற்பாடு செய்தார்.
கயல்விழிக்கு திருமணம் என்ற ஒன்றில் மனது ஒன்ற முடியவில்லை.இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தான் யோசிக்கிறாள் ஆனால் தாய்,தந்தையின் முகம் அவளை அவ்வாறு செய்யவிடவில்லை.
“என் மனசுல உன்னை தான் மனைவியா நினைச்சுட்டேன் கயல்….நீயே நினைச்சாலும் அதை மாத்த முடியாது கயல்….”என்று சத்யாவின் வார்த்தைகள் மனதில் ரீங்காரமிட திடுக்கிட்டு போனாள்.இது என்ன திருமணம் என்றதில் இருந்து அவனின் நினைவுகளே தன்னை அதிகமாக தாக்குகின்றன.என் மனது அவனிடம் சாய்கிறது இது நல்லதற்கு அல்லவே அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்று கூறிக் கொண்டாள்.
கயல்விழியின் கைபேசியில் குறுஞ்செய்தி வர எடுத்து பார்த்தாள்.தன் தந்தை கூறிய மாப்பிள்ளை தீபக் தான் செய்தி அனுப்பியிருந்தான்.இன்னும் பத்து நிமிடத்தில் மாலிற்கு வந்துவிடுவதாக அனுப்பியிருந்தான்.அதை பார்த்துவிட்டு ஓகே என்ற பதிலை அனுப்பிவிட்டு மீண்டும் யோசனைக்கு சென்றுவிட்டாள்.
தீபக் வந்தால் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருக்க,அதே சமயம் சத்யா பார்மல் உடையில் மாலிற்கு தன் நண்பன் நவீனை சந்திக்க வந்தான்.
“ஆங்…மச்சான் நான் வந்துட்டேன்….நீ எங்க இருக்க….”என்று கைபேசியில் பேசியபடியே வந்துகொண்டிருந்தவன் உணவகத்தை தாண்டும் போது கயல்விழியை கண்டு கொண்டான்.
சத்யாவிற்கு திடீர் என்று கிடைத்த கயலின் தரிசணத்தை பார்த்தவரே அவளின் அருகே நெருங்கிய போது தான் பார்த்தான் அவள் வேறு ஒரு ஆடவனுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு மனதில் எரிச்சல் மண்டியது.
“என்கிட்ட மட்டும் தான் இவளுக்கு பேச நேரம் இருக்காது….பாரு எப்படி சிரிக்கிறானு அதுவும் எவன் கூடயோ உட்கார்ந்து கிட்டு இவளை கொன்னா என்ன…இருடி…”என்று கயலிற்கு மனதில் மண்டக பொடி போட்ட படி கயலுக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“ஹாய் கயல்விழி….”என்றான் தீபக்,
“ஹாய்….”என்று மெல்லிதாக புன்னகைத்தாள் கயல்,அவளால் தீபக் வந்தவுடன் இயல்பாக இருக்க முடியவில்லை.முயன்று தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாள்.
“பீல் பிரி கயல்….இது எல்லாம் ஜஸ்ட் ஒரு பார்மாலிட்டி தான்….நாம பேசி ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்க தான் இந்த மீட்….மத்தபடி நான் எங்க வீட்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்……நீங்க டென்ஷன் ஆகாதீங்க….ம்ம்ம்…எதாவது சாப்பிடுரீங்களா…”என்று கேட்க,
“இல்லை எதுவும் வேண்டாம்…”என்று கூறினாலும் கயலின் மனதில் இவன் என்ன இவ்வளவு பாஸ்டா இருக்கான் என்று தான் தோன்றியது.
“அச்சோ எனக்கு கம்பெனி கொடுங்க…ப்ளீஸ்…”என்று கெஞ்சுவது போல் முகத்தை வைக்க,கயலிற்கு வேறு வழியில்லாமல் தலையாட்டினாள்.ஆனால் அவளின் பின் அமர்ந்திருந்தவனுக்கு உடம்பே பற்றிக் கொண்டு வந்தது.
“ஓஓ….மேடம் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாங்களா….அதுவும் எவன் கூடயோ….எவ்வளவு தைரியம்…”என்றவனுக்கு கைகள் பரபரத்தது எதையாவது எடுத்து அடித்துவிடும் வேகம் பிறந்தது.எழுந்து சென்றுவிடலாமா என்று நினைக்க தான் முடிந்தது ஆனால் முடியவில்லை.மனதெல்லாம் ரணம் ரணம் இதயத்தை குத்தி கிழிப்பது போன்றதொரு வலி பரவியது.சுற்றம் எல்லாம் மங்களாக தெரிய தொடங்க சத்யாவின் கைகள் நடுங்க தொடங்கியது.அதைக் கண்டவனுக்கு மனதில் அலாரம் அடிக்க,
“ப்ச்….இது….இந்த நடுக்கம் திரும்பி….ப்ச்….”என்று தன்னையே நொந்தவன் நொடியும் தாமதியாது எழுந்து சென்றுவிட்டான்.
கயல்விழிக்கு தீபக்குடன் அமர்ந்திருக்கும் நொடிகள் ஏதோ நெருப்பின் மீது இருப்பது போலவே இருந்தது.அதனால் அவன் எது கேட்டாளும் ஆம்,இல்லை என்றபடி தலையாட்டினாள்.தீபக்கிற்கும் கயல்விழியை விட அவளின் வேலை அதில் வரும் வருமானமே முக்கியமாக இருந்தது.அதை கயலும் உணர்ந்தாள் அவனிடம் பட்டும் படாமல் தான் பதிலை கூறினாள்.
“ம்ம்….கயல் எனக்கு எல்லாம் ஓகே தான்….நான் எங்க வீட்டுல சொல்லுறேன்….”என்று தீபக் கூற,கயல் மையமாக தலையாட்டினாள்.இருவரும் பரஸ்பரமாக கூறி விடைபெற்று கிளம்பினர்.
%%%%%%%%%%%
தனது வீட்டிற்கு வந்த சத்யாவிற்கு இன்னும் கைகளின் நடுக்கம் குறையவில்லை.அவனின் கைகளின் நடுக்கம் மெல்ல தனது உடலிலும் பரவுவதை போல் இருக்க,சத்யா மிகவும் நிலைகுலைந்து போனான்.அவன் கண்களில் மீண்டும் அதே பரிதவிப்பு கயல்,கயல் என்று மனது ரீங்காரமிட தொடங்கியது.
“கயல்….கயல்….போயிடாதடீ…..ஏன்டீ….என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குற….”என்று தலையை பிடித்தபடி பேசியவனின் உடலும் நடுங்க தொடங்க உடனே நவீனிற்கு அழைத்து தன் நிலையை கூற,அடுத்த பத்து நிமிடத்திற்கு எல்லாம் சத்யாவின் வீட்டிற்கு வந்துவிட்டான் நவீன்.வந்தவன் தன் நண்பனின் நிலை கண்டு நெஞ்சம் எரிந்தது.தரையில் உடல் முழுவதும் நடுங்க படித்துக் கிடந்தான்.அவனின் உதடுகள் கயல் கயல் என்று நாமம் போல உச்சரித்துக் கொண்டிருந்தது.
சத்யா கயல்விழி விட்டு பிரிந்த போது எப்படி நிலைகுலைந்தவனாக அவனை பார்த்தானோ அதைவிட மோசமாக இருந்தான்.இது இரண்டாவது முறை அவன் இப்படி நிலைகுலைந்து போவது.சத்யாவின் நிலை மோசமடைவதை கண்ட நவீன் உடனே கலைவாணனிற்கு அழைத்துவிட்டான்.
மருமகனின் நிலை கேட்ட கலைவாணிற்கும் பதட்டம் தான் அவர் நவீனிடம் அவனை கவனமாக பார்த்துக் கொள்ளும் படி கூறிவிட்டு சென்னையை நோக்கி புறப்பட்டார்.அவரின் மனது முழுவதும் அன்று அந்த மனநல மருத்துவர் கூறியதே ஓடியது,
“மிஸ்டர்.கலைவாணன்….சத்யாவுக்கு இருக்குறது ஒருவித மனநோய்….அதாவது அவர் ரொம்ப ஆழமா அந்த பொண்ணை நேசிச்சிடார்….அவரால அந்த பொண்ணு ஏமாத்திட்டாங்கறத ஏத்துக்கவே முடியலை….இந்த மாதிரி மனநோய்க்கு எல்லாம் மருந்து கிடையாது அதனால அவரை திசை திருப்புங்க….அவருக்கு பிடிச்ச விஷயத்துல அவரை போக விடுங்க….அப்ப தான் அவரை நாம குணப்படுத்த முடியும்….”என்று கூறியவரிடம்,
“டாக்டர்….இது….இந்த மாதிரி திரும்ப வருமா டாக்டர்….”என்று பயத்துடன் கேட்டார் கலைவாணன்.மனதெங்கும் தங்கை மகனின் நலன் மட்டுமே இருந்தது.
“ம்ம்ம்…..இது மாதிரி வரக் கூடாதுனு வேண்டிக்கங்க….அது தான் அவருக்கு நல்லது…..”என்று மருத்துவர் கைவிரித்துவிட்டார்.கலைவாணனிற்கு மருத்துவர் கூறியதே காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்து இறங்கிவிட்டார்.கலைவாணன் சத்யா வீட்டிற்கு வரும் முன் கயல்விழியை பற்றிய விபரங்களை சேகரித்துவிட்டார்.சத்யாவின் வீட்டுற்கு வந்தவரை நவீன் தான் வரவேற்றான்.
“எப்படி இருக்கான் நவீன்???”என்று ஒருவித பரபரப்புடன் தான் கேட்டார்.நவீனிற்கே அவரின் பதட்டம் கண்டு பயம் வந்தது.
“என்ன அங்கிள்….நீங்களே இப்படி பயப்படுறீங்க….”என்று கேட்டுக் கொண்டிருக்க அவர் சத்யாவின் அறைக்குள் சென்று பார்க்க,அவன் உறக்கத்தில் இருந்தான்.ஆனால் முழுமையாக உறங்கவில்லை என்பது அவனது உதடு முணுமுணுப்பில் தெரிந்தது.
“ரொம்ப ஹார்ஷா பிகேவ் பண்ணானா நவீன்….”என்று கலைவாணன் கேட்க,நவீன் பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியை பார்த்தான்.அங்கு சில உடைந்த பொருட்கள் கிடந்தன நவீன் தான் சுத்தம் செய்திருப்பான் என்று புரிந்தது.
“ம்ம்…ஆஆஆ…அது…”என்று முதலில் தயங்கியவன் அவரின் அழுத்தமான பார்வையில் ஆம் என்று தலையாட்டினான்.
“ப்ச்…இன்னும் என்ன எல்லாம் நான் பார்க்கனும்னு இருக்கோ….”என்று தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார்.
“ப்பா….என்ன இது ஏன் இப்படி திரும்பியும் அந்த பொண்ணு பெயரையே சொல்லுறான்….அவளால பிரச்சனையா…நான் அந்த பொண்ணை சும்மா விடமாட்டேன்…”என்று நவீன் கொந்தளிக்க,
“இல்ல நவீன்…அந்த பொண்ணு காரணம் இல்ல…ஆனா…அவளும் ஒரு காரணம்….”என்றார் கலைவாணன்.
“என்ன அங்கிள் சொல்லுறீங்க….எனக்கு புரியலை…..”என்று நவீன் கேட்க,கலைவாணன் அனைத்தையும் கூறினார்,கேட்டிருந்த நவீனிற்கு யாரின் மீது தவறு என்று கூற முடியவில்லை.
%%%%%%%%%%%%%%%%%
கயல்விழி தீபக்கை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாளே கோவை வந்ததுவிட்டாள்.பார்வதி,குருமூர்த்தியும் பொதுவாக விசாரித்தனர்.பையன் எப்படி உனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்க,கயல்விழி பிடித்துள்ளது என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள்.
குருமூரத்தி தீபக்கின் வீட்டில் பேச அவர்களும் இரு நாட்களில் பெண் பார்க்க வருவதாக கூறி வைத்தனர்.அதோ இதோ என்று பெண் பார்க்கும் நாளும் வந்தது.குருமூர்த்தியும்,பார்வதியும் பரபரப்பாக இருந்தனர்.கயல்விழி ஒருவித குழப்ப நிலையில் தான் இருந்தாள்.மாலை தீபக்கின் வீட்டினர் வருவதாக இருந்தது.மணி நான்கரை நெருங்கி கொண்டிருந்த நேரம் குரு வாசலை பார்த்தபடி இருக்க,
“அதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்…எடுக்கலை…”என்று அவர் கூறினார்.இவ்வாறு நேரம் ஆனதே தவிர அவர்கள் வந்தபாடில்லை.குருமூர்த்திக்கும்,பார்வதிக்கும் பயம் பிடித்துக் கொண்டது.அதுவரை தனது அறையில் இருந்த கயல் பொறுக்க முடியாமல் எழுந்து வந்துவிட்டாள்.
“ப்பா….அவங்க வரலை போல….”என்று கூற பெற்றவர்கள் இருவருக்கும் அதே எண்ணம் தான் இருந்தும் கூறமுடியாமல் இருக்க,சரியாக குருவின் பேசி இசைத்தது.
“இதோ மாப்பிள்ளை வீட்டுலேந்து தான் போன்….”என்றவர் பேசியபடி வெளியில் சென்றார்.சற்று நேரத்திற்கு எல்லாம் அவர் திரும்பி வரும் போது அவரது முகமே ஏதோ சரியில்லை என்று கயலுக்கும்,பார்வதிக்கும் உணர்த்த,அவர்கள் என்னவென்று கேட்கும் முன் அவர் மயங்கி சரிய,
“ப்பா….”
“என்னங்க…”என்ற கூவலுடன் பார்வதியும்,கயலும் அவரை தாங்கி பிடித்தனர்.
அடுத்த அரை மணிநேரத்தில் குருவை மருத்துவமணையில் சேர்ந்திருந்தாள் கயல்விழி.அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார் வெளியில் பார்வதி கலங்கி போய் அமர்ந்திருந்தார்.தனது அன்னையின் நிலைக் கண்டு அவரின் அருகே அமர்ந்தவள்,
“ம்மா…ப்பாக்கு ஒண்ணும் ஆகாது….”என்று கூறிக் கொண்டிருந்த நேரம் மருத்துவர்கள் வர,வேகமாக அவரிடம் நெருங்கியவர்கள்,
“என்ன ஆச்சு டாக்டர்….”என்று கேட்க,
“பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல….பீபி அதிகமாகிடுச்சு…அதான்….ஜாக்கிரதையா பார்த்துங்குங்க….”என்று கூறிவிட்டு சென்றார்.இரு நாட்கள் குருமூர்த்தி மருத்துமனையில் இருந்தார்.அவரிடம் அன்று என்ன நடந்தது என்று தாயும்,மகளும் கேட்கவில்லை.குருவும் எதுவும் கூறும் மனநிலையில் இல்லை.எப்போதும் ஏதோ யோசனையில் தான் இருந்தார்.இதற்கு இடையில் வனிதாவும்,ராகவும் குருமூர்த்தியை காண வந்துவிட்டு சென்றனர்.
வனிதா கயலிடம் முன்பு போல் பேசவில்லை என்றாலும் கேட்டதற்கு பதில் அளித்தாள்.ராக்விற்கு அதெல்லாம் இல்லை அவன் எப்போதும் போல் கயல்விழியிடம் பேசினான்.நந்துவும்,அவளின் கணவனும் வெளிநாடு சென்றதால் வரமுடியவில்லை ஆனால் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தனர்.மூன்றுவது நாள் தான் குருமூர்த்தி வீடு திரும்பி இருந்தார்.
கயல்விழி அவரை வீட்டில் விட்டுவிட்டு பார்வதியிடம் சென்றவள்,
“ம்மா….நான் போய் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரேன்….வேற ஏதாவது வேணுமா….”என்று கேட்க,
“வேண்டாம்…கயல்…நான் பேசிக்கிறேன்….நீ போ…போய் வாங்கிட்டு வா….”என்று கூறி மகளை அனுப்பி வைத்தார் பார்வதி.அவருக்கும் கணவரிடம் தனியாக பேச வேண்டும் அதனால் மகளை வேண்டாம் என்று மறுத்து அனுப்பினார்.
குருமூர்த்தி அறையில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க,பார்வதி அவருக்கு கையில் பழச்சாருடன் உள்ளே வந்தார்.
“என்னங்க…என்னதிது இப்படி இடிஞ்சி போய் உட்கார்ந்து இருக்கீங்க….அவங்க வேண்டாம்னு போயிட்டா….நம்ம பொண்ணுக்கு இதைவிட நல்லா இடம் கிடைக்காமலா போயிடும்….விடுங்க….”என்று பார்வதி கணவரின் அருகே அமர்ந்து கூற,
“ம்ம்….மரியாதை தெரியாத மனுஷன்ங்க பாரூ….அவங்க அன்னைக்கு எப்படியெல்லாம் நம்ம பொண்ணை தப்பா பேசிட்டாங்க தெரியுமா….எனக்கு மனசே விட்டு போச்சு….அவ தப்பு பண்ணிட்டா தான் அதுக்காக இப்படி எல்லாமா பேசுவாங்க….”என்று குரு புலம்ப,
“என்னங்க என்ன சொல்லுரீங்க நீங்க….கயலை பத்தின விஷயம் எல்லாம் எப்படி அவங்களுக்கு தெரியும்….யார் சொல்லியிருப்பா….”என்றவருக்கு அப்போது தான் புத்தியில் உரைத்தது.
“ஏங்க….நீங்க இந்த சம்பந்தம் பத்தி நம்ம பெரிய சம்பந்தி அம்மா கிட்ட தான விசாரிச்சீங்க….”என்று கேட்க,குருமூர்த்திக்கும் அப்போது தான் நியாபகம் வந்தது ராகவின் அம்மாவிற்கு தீபக் சொந்தம் என்பதால் அவரிடம் தான் விசாரித்திருந்தார்.
“கயலை பத்தின விஷயம் நம்ம வீட்டு ஆளுங்கள தவிர வேறு யாருக்கும் தெரியாது…அவங்க தான் இதை சொல்லியிருக்கனும்….”என்று பார்வதி கூற,குரு வேகமாக எழுந்து தனது பேசியை எடுக்க,அவரிடம் இருந்து பரித்தால் கயல்விழி.பணத்தை மறந்து வைத்துவிட்டு மீண்டும் எடுக்க வந்தவள் அன்னையும்,தந்தையும் பேசியதை கேட்டுவிட்டாள்.
“ப்பா….அவசரபடாதீங்க……நீங்க இப்ப ஏதாவது பேசினா….அக்காவுக்கு தான் பிரச்சனை வரும்….அதனால இதோட இதை விடுங்க….”என்று கயல்விழி கூற,
“அதுக்காக அவங்களை சும்மா விட முடியுமா….”என்று குரு கொந்தளிக்க,அவரை அமைதி படுத்தி அமர வைத்தவள்,
“ப்பா….ப்ளீஸ்….புரிஞ்சுக்குங்க….நமக்கு அவங்க தான் செஞ்சாங்கனு எப்படி தெரியும்….விடுங்க…எல்லாம் நல்லதுக்கு தான் நினைச்சுக்குங்க….”என்று கயல் கூற,பார்வதிக்கும் மகள் கூறுவதே சரியெனப்பட்டது.
“ஆமாங்க….நாம இப்ப பேசினா அந்த அம்மா பிரச்சனை தான் பண்ணுவாங்க….விடுங்க….”என்று கூற,குருவிற்கும் இப்போது மகளின் திருமணத்தை எப்படியேனும் நடத்திவிட வேண்டும் என்ற எண்ணம் வலுபெற்றது.அதன்படியே அடுத்த ஒரு வாரத்திலேயே அவர் மாப்பிள்ளையும் பார்த்து நிச்சயத்தையும் ஏற்பாடு செய்துவிட்டார்.