Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வினியின் நதி

அன்பு நவியின் வினியின் நதி அத்தியாயம் 4

வினியின் நதி அத்தியாயம் 4

மறுநாள் காலை அனைவரும் ஃப்ரசர்ஸ் டே-க்காக கலக்கலாக தயாராகி வந்தனர். ஒவ்வொருவரும் அவர்கள் நண்பர்களுடன் கல்லூரி முழுவதும் சுற்றி விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மதியம் தான் நிகழ்ச்சி எனவே காலை சற்று ஓய்வாக அனைவரும் பயிற்சி எடுப்பது, கல்லூரியை சுற்றுவது என இருந்தனர். 



Advertisement

”ஹே அழகி போட்டில நான் தான் பரிசு வாங்குவேன் தெரியுமா?” என்றாள் வெண்ணிலா. 

”இங்க மட்டும் என்னவாம்.. நான்லாம் எவ்ளோ செலவு பண்ணிருக்கேனு தெரியுமா? முதல் பரிசு எனக்கு தான் டி…” என்றாள் ராதா. 

Advertisement

Advertisement

”அடி போங்கடி அங்குட்டு… சிங்கு பிங்குனு மினுக்கிட்டு வந்துட்டு.. இயற்கைலயே நான்லாம் அழகு .. எனக்கு தான் பரிசு கிடைக்கும்” என்றாள் மரியா.

”ஆமா ஆமா ஆறுதல் பரிசு கண்டிப்பா உனக்கு தான் செல்லம்” என மரியாவை கலாய்த்தாள் வெண்ணிலா.

Advertisement

’வேற ஒன்னும் இல்லைங்க.. இன்னைக்கு ஃப்ரசர்ஸ் டே கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கட்டும்னு அழகுநயப்புக் காட்சி (Fashion Show) வச்சுருக்காங்க.. அதுக்கு தான் இந்த அலப்பறை.’ 

வெண்ணிலா ஆசையின்படி ‘புதுப்பேட்டை வரியா’ பாடலுக்கு ஆட அனுமதிக்கவில்லை என்றாலும் இந்த அழகுநயப்புக் காட்சி (Fashion Show) வைத்ததால் அவளுக்கு சற்று ஆறுதல்.

நடனத்திற்கு புடவை என்பதால் நதி தற்போது சுடிதாரில் தான் வந்திருந்தாள். அவள் தோழிகள் அனைவரும் புடவையில் வந்திருந்தனர். சிறிது நேரம் இருந்து விட்டு அவள் ரெடியாக சென்று விட்டாள். 

நிகழ்ச்சி ஆடிடோரியத்தில் ஆரம்பமானதும் வினோதனும், அவன் நண்பர்களும் கூட்டத்தோடு கலந்துவிட்டனர். நதியின் நடனக்குழு அவர்கள் முறை வந்ததும் நன்றாகவே ஆடி முடித்து மேடையை விட்டு இறங்கினர். நதியின் குழு மேடை ஏறியதிலிருந்து வினோதனின் கூட்டம் பயங்கரமாக கத்தி இவர்கள் ஒரு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களை அடக்கவே பெரும்பாடாக இருந்தது. 

அழகுநயப்புக் காட்சி (Fashion Show) மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. கணினித்துறை தலைவர் மேடை ஏறி அனைவரையும் பாராட்டி பேசினார். தேவதைகள் வானில் மிதந்தது போல இந்த அழகுநயப்புக் காட்சி (Fashion Show) அழகு தேவதைகளின் நடையும், உடையும் மிகவும் நளினம் என கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி அனைவருக்கும் ஒரு பேனா நினைவு பரிசாக கொடுத்தார். 

”முதல் பரிசு ஆசபட்ட உனக்கு ஆறுதல் பரிசா பேனா தான் கிடச்சுருக்கு.. உனக்கு அதிர்ஷ்டம் அவ்ளோ தான் போல” என நதி வெண்ணிலாவை கலாய்த்தாள். 

”நதி கிடைக்குறது கிடைக்காம இருக்காது… இல்லவே இல்லனு இருக்குறது கிடைக்கவே கிடைக்காது… எனக்கு மட்டும் கிடைக்கலேனா வருத்தப்பட்டுருப்பேன்… யாருக்குமே கிடைக்கலயே எனக்கு சந்தோஷம் தான்டி” என்றாள் வெண்ணிலா.

”ரொம்ப நல்ல எண்ணம்டி தங்கம்” என நதி கூறினாள்.

நிகழ்ச்சி எல்லாம் முடிந்து நதி மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு சென்றாள். கல்லூரியிலிருந்து ஆட்டோவில் பேருந்து நிறுத்தில்  வந்து இறங்குவாள். அங்கிருந்து ஒரு 10 நிமிடம் நடைப்பயணம் அவள் வீட்டிற்கு. கல்லூரியிலிருந்து ஆட்டோவில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து இறங்கியதும் அருகில் சாலையை கடக்க அவள் நிற்கையில் எதிரில் உள்ள ஜவுளிக் கடையில் வினோதன் அவன் நண்பனுடன் பைக்கில் வந்து இறங்கினான்.

நதியைப் பார்த்ததும் அவன் ‘ஹாய்’ என கையசைத்தான். நதிக்கு ஒரு நிமிடம் படபடவென வந்து விட்டது. ‘என்னைப் பார்த்தா கையசைத்தான்?’ என சுற்றி அவள் பின்னால் யாரும் இருக்கிறார்களா என பார்த்தாள். யாரும் இல்லை அங்கே.. அவள் மட்டுமே அங்கே சாலையை கடக்க நிற்கிறாள். 

அவளால் நம்பவே முடியவில்லை ’அவன் என்னை கண்டு பிடித்துவிட்டானா? எப்படி? பெயரை கண்டு பிடித்தாலும் என்னை எப்படி அடையாளம் கண்டான்? வாய்ப்பில்லையே’ என படபடப்பும், வெட்கமுமாக அவனுக்கு பதிலளிக்காமல் சாலையை கடந்து அவள் வீட்டை நோக்கி சென்றுவிட்டாள். 

வீட்டிற்கு சென்றும் அவளுக்கு படபடப்பு குறைய நேரமெடுத்தது. எப்படி எப்படி?? என வெகுநேரம் யோசிக்கிறாள். பிறகு அவனிடமே கேட்கலாமா? என அவள் மடிக்கணினி எடுத்து அவனுக்கு முகநூலில் “ஹாய்’’ குறுஞ்செய்தி அனுப்புகிறாள். 

வினோதனும் உடனே “ஹாய் நதி.. எதுக்கு இன்னைக்கு என்கிட்ட பேசாம போனிங்க?” என கேட்டான்.

”ஹே… என் பேரை கண்டுபிடிச்சுட்டிங்களா? எப்படி என்ன அடையாளம் கண்டுபிடிச்சிங்க?” என நதி கேட்டாள்.

”பொதுவாகவே நான் ரொம்ப அறிவாளிங்க… உங்க பேரை நேத்து நீங்க சொன்னதும் நான் கண்டுபிடிச்சுட்டேன்.. நீங்க யாருனு பாக்கனும்னு தான் நேத்து நான் சொல்லல..” என்றான்.

”பார்டா… அவ்ளோ அர்றிவாளியா நீங்க? சூப்பர்ங்க” என்றாள்.

”நீங்க ஏன் என் கிட்ட பேசாம போனிங்க.. அதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல..” என்றான். 

அவளோ ”திடீர்னு வந்து நீங்க ஹாய் சொன்னதும் என்ன பண்றதுனு தெரியல அதான்… இனி பேசுவேங்க” என்றாள்.

”என்ன விஷேசம் துணிக்கடைக்கு போனிங்க? என அவள் கேட்க 

”நாளைக்கு எனக்கு பிறந்தநாள்ங்க.. அதான் டிரஷ் எடுக்க நானும், என் நண்பனும் போனோம்” என்றான்.

“உங்க அப்பா, அம்மா கூட போகமாட்டிங்களா? நண்பன் கூட போறிங்க?” என நதி கேட்க, 

“அவங்களுக்கு நிறையா வேலை இருக்கும்.. அதுவும் இல்லாம நான் என்ன சின்ன பையனா எல்லாத்துக்கும் இன்னும் அவங்களவே கூப்டு போக?” என்றான்.

”அதுவும் சரி தான்.. உங்க பிறந்தநாள்க்கு என்ன ஸ்பெஷல்? எங்களுக்கெல்லாம் எதுவும் கிடையாதா??” என்றாள் நதி.

”உங்களுக்கில்லாமலா?? நீங்க எது கேட்டாலும் தருவேங்க… என்ன வேணும் சொல்லுங்க?” என்றான்.

”எனக்கு 5 ஸ்டார் தான் ரொம்ப பிடிக்கும்… அதுதான் வேணும்” என்றாள்.

”அவ்ளோ தானா.. நாளைக்கு கண்டிப்பா உங்களுக்கு 5 ஸ்டார் தரேன்..” என்றான்.

”எப்டி தருவிங்க? என அவள் கேட்க, ”காலைல 10 மணி இடைவேளை நேரத்தில் தரேங்க” என அவன் கூறினான்.

அவனுக்கு ஏதாவது பிறந்தநாள் பரிசு தரவேண்டுமென்று அவள் கடைக்கு சென்று ஒரு கீசெயின் வாங்கி வந்தாள்.

அவன் கூறியது போல மறுநாள் காலை அவள் வகுப்பறை வாசலில் வந்து அவளுக்கு இரண்டு 5 ஸ்டார் சாக்லேட் தந்தான். இவளும் அவனுக்கென வாங்கிய கீசெயினை தந்தாள்.

மாலை பேசலாம் என கிளம்பினான். இதைப் பார்த்த நதியின் தோழி வெண்ணிலாவோ ”யாருடி அது?” என கேட்டாள்.

”சொந்தக்காரங்க டி.. இன்னைக்கு பிறந்தநாள் அதான் சாக்லேட் குடுக்க வந்தாங்க” என்றாள் நதி.

”இவ்ளோ நாள் இத நீ சொல்லவே இல்ல.. எங்களுக்கு தெரியாம புது சொந்தமா இருக்கே… சரி கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகனும்” என்றாள் வெண்ணிலா.

”கத்தரிக்காவும் முத்த வேண்டாம்.. கடலைப்பருப்பும் வேக வேண்டாம் எதாச்சும் உளறாதடி எரும… ஆமா இன்னைக்கு உன் பேருந்து கதைய சொல்லவே இல்லயே” என பேச்சை மாற்றினாள் நதி.

அது சரியாக வேலை செய்ய, வெண்ணிலாவும் ”அத ஏன்டி கேக்குற? அவன் இன்னைக்கு என்ன பண்ணான் தெரியுமா?” என அவள் பேருந்து காதல் கதையை கூற தொடங்கினாள்.

அன்று இரவு வழக்கம் போல், அவனுக்கு முகநூலில் வாழ்த்து செய்தி அனுப்ப அவனிடமிருந்து பதில் வரவில்லை. பார்த்ததாகவும் தெரியவில்லை. வெகுநேரம் காத்திருந்தும் அவன் ஆன்லைனில் வந்ததாக தெரியவில்லை. சரி அவன் பிறந்தநாளை கொண்டாடட்டும் என விட்டுவிட்டாள்.

மறுநாள் அவள் செய்தியை பார்த்ததற்கான புளூ டிக் இருந்தது.. ஆனால் அவனிடமிருந்து பதில் இல்லை. அவன் பிறந்தநாளை அவன் நண்பர்களுடன் கொண்டாடியது அவன் போட்ட முகநூல் பதிவின் மூலம் தெரிந்தது.. அவளுக்கு கோபமே.. ‘எவ்ளோ வேலைனாலும் ஒரு நன்றி சொல்ல முடியாதா? ஆண்களே இப்டி தான் போல… யாரையும் நம்பக்கூடாது’ என நினைத்துக் கொண்டாள்.  

அடுத்த சில நாட்கள் அவள் முகநூல் பக்கம் செல்லவில்லை.. ஆனால் வாரம் இருமுறை இடைவேளை நேரத்தில் அவன் வகுப்பிற்கு சென்றுவிடுவாள்.. அவள் அதிர்ஷ்டம் அவன் அங்கே இருக்கமாட்டான்…

இரு வாரங்களுக்கு பிறகு முகநூல் பக்கம் சென்றாள். அடுத்த நிமிடம் அவனிடமிருந்து செய்தி.. ”ஹாய்… ரொம்ப வேலையா? முகநூல் பக்கம் ஆளையே காணும்..” என வினோதன் கேட்க,

“இல்ல.. சும்மா தான்.. இன்டெர்னல் தேர்வு வருதுல அதான் கொஞ்சம் பிஷி.. அப்டியே நாங்க மெசேஜ் பண்ணாலும் நீங்க பதில் உடனே அனுப்பிருவிங்க பாருங்க” என நதியும் கூற,

”பிறந்தநாள்-க்கு சொல்றிங்களா.. அன்னைக்கு எனக்கு 300க்கு மேல செய்தி வந்துருச்சுங்க .. அதான் யாருக்கும் சரியா பதில் சொல்ல முடியல…” என்றான்.

“சரி.. உங்க கோபம் போக இந்த வார இறுதியில் உங்களுக்கு என் விருந்து ஓகே வா?” என்றான்.

அவளும் ’சரி’ என ஒப்புக்கொண்டாள். 

”எங்க போகலாம்?” என அவன் கேட்க, முதல் முதல்லா வெளிய சேர்ந்து போறோம்.. என் வீட்டு கிட்ட இருக்கிற கோவிலுக்கு போய்ட்டு அப்றம் ஸ்வீட், ஐஸ்கீரிம் சாப்ட போலாம் ஓகே வா?” என நதி கேட்க, அவனும் சரி எனக் கூறினான். 

அந்த வார இறுதியில் இருவரும் முதலில் கோவிலில் சந்தித்து, பின்பு அவன் கொண்டு வந்திருந்த வண்டியில் ஒரு ’ஸ்வீட் ஸ்டால்’-க்கு சென்றனர்.

ஒரு ஆணுடன் நதிக்கு முதல் பைக் பயணம். அதுவும் மனதுக்கு பிடித்தவனுடன்.. பிடிக்காமல் போகுமா என்ன?? அவள் வீட்டில் பைக் இல்லை. எனவே அவளுக்கு இந்த பயணம் மிகவும் பிடித்தது.

 ”யாரு வண்டி இது?” என நதி கேட்க, 

”என் நண்பன் வண்டிங்க.. எனக்குன்னு ஒரு வண்டி வாங்கனும்.. அதான் இப்ப என்னோட ஆசை” என்றான்.

”உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்?” என அவன் கேட்க, 

”எனக்கு குடிக்க ரோஸ்மில்க் போதுங்க.. உங்களுக்கு?” என நதி அவனைக் கேட்க, 

வினோதனோ, ”எதுவும் வேண்டாங்க..” என கூறி விட்டு அவளுக்கு மட்டும் ஒரு ரோஸ்மில்க் வாங்கிக்கொண்டான்.

அவளும் அவனுக்காக, ஒரு டைரிமில்க் சாக்லேட் வாங்கி கொடுத்தாள். ”உங்கள பாக்க வச்சு சாப்டா எனக்கு தான வயிறு வலிக்கும்” என்றாள்.

அவனும் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான். 

”உங்க பிறந்தநாளுக்கு நீங்க போட்டு இருந்த கருப்பு சட்டை, சந்தன நிற பேண்ட் அழகா இருந்துச்சு.. நல்ல செலக்ஷன்” என நதி கூற,

”ரொம்ப நன்றிங்க” என்றான்.

நதி அவனிடம் ”ஒரு சின்ன கோரிக்கை… தயவுசெஞ்சு நீங்க, வாங்கனு மரியாதை வேண்டாங்க… நீ, வா-னு என்னை ஒருமைல பேசுங்க” என கேட்க, 

அவனோ, ”அப்ப நீங்களும் என்னை ஒருமைல கூப்டுங்க” என்றான்.

நதியோ, ”நான் போக போக முயற்சி பண்றேன்.” என கூறினாள்.

வினோதனோ சரி என கூறி, இருவரும் வெகுநேரம் ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ பேசிவிட்டு நேரமாவதால் கிளம்பி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!