ஷேடோ அனுப்பிய இடத்தை பார்த்து அந்த இடத்துக்கு விரைந்துக் கொண்டிருந்த அமிழ்தினியனுக்கு ரீப்ளே பட்டனை அழுத்தியதை போன்ற உணர்வு. ஒரு வருடம் முன்னால் நடந்த இதே போன்ற காட்சிக்கு மனம் அவனை கூட்டிச் சென்றது!!
———————————————————————————————————————
அன்று ப்ரேக் அப் பார்ட்டி என்று சொல்லி போனவள் இரவு வீடு திரும்ப வெகு நேரமானது. பாகீரதியும் பதட்டத்தில் இருந்தார். அமிழ்தினியன் அவள் சொன்ன ஹோட்டலுக்கு கிளம்பி விட்டான்.
“அம்மா! பயப்படாதீங்க மா. ப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி, கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்ல. இங்க பக்கத்துல தான் பி.பி.கியுவில, நான் போய் அவளை கூட்டிட்டு வந்துடுறேன்”
பார்ட்டி என்று தெரிந்த அவருக்கு தன் மகள் ப்ரேக் அப் பார்ட்டிக்கு போயிருக்கிறாள் என்று தெரிந்தால் எப்படி உணர்வாரோ?! எத்தனை நாள் தான் அவளுக்கு முட்டுக் கொடுத்து பாகீரதியிடமிருந்து அவள் காரியங்களை மறைப்பது? அது தவறில்லையா? ஆனால் இன்னொரு கோணத்தில் யோசித்தால் அவரிடம் தெரிவித்தால் என்ன நடக்கும்? ஒன்று அவர் ரிபுவிடம் பேசலாம், அப்படி பேசினால் அவள் எதிர்வினை ஆற்ற தான் முயற்சிப்பாள். அல்லது அவர் எதுவும் பேசாமல் மகளை நினைத்து மனதிற்குள் மறுகுவார். ஏன் அந்த கஷ்டத்தை அவருக்கு கொடுப்பானேன்? தான் ஒருவன் இருக்கும் போது அவளை எதுவும் நெருங்க விடாது பார்த்துக் கொள்ள மாட்டோமோ என்ற தைரியம் தான் அவனை ரிபு நோக்கி ஓட வைத்துக் கொண்டிருந்தது!
அவள் சொன்ன ஹோட்டலுக்கு அவன் சென்று பார்த்த போது, ரிபு அங்கு இல்லை. ஊழியர்களிடம் அவள் பேர் சொல்லி விசாரித்தபோது அப்படி யாரும் பதிவு செய்யவில்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவேளை அவள் நண்பர்களே யாரேனும் பதிவு செய்திருக்கலாம். அப்படியென்றாலும் இப்பொழுது அவள் எங்கே? கிளம்பும் போது அவன் வந்து விடுவதாக சொன்னபோது அவள் வேண்டாமென்று மறுத்து தடுமாறியது நினைவுக்கு வந்தது.
வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் அவள் அழைத்தாள், ஆனால் பேசியது அவள் தோழி!
“ஹாய் ப்ரோ! ப்ரோ நீங்க ரிபுவை பிக் அப் பண்ண வந்துட்டு இருக்கீங்க தானே?”
“எங்க?”
“உங்க கிட்ட சொல்லலியா? நாங்க பிக் பிட்சர்ல இருக்கோம்”
ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டான். தன்னிடம் ஹோட்டல் என்று பொய் சொல்லிவிட்டு ‘பப்’பிற்கு சென்றிருக்கிறாள். அவனால் நம்பவே முடியவில்லை. ரிபுவா தன்னிடம் பொய் சொன்னது?
“ஒண்ணுமில்ல ப்ரோ, முதல பீர் தான் குடிச்சா, லைட்டா தான் வைன் டேஸ்ட் பண்ணி பார்த்தா. ப்ர்ஸ்ட் டைம்ல அதான் கொஞ்சம் ஸ்டெடியா இல்லை. பார்த்து கூட்டிட்டு போங்க”
அவனை நிமிர்ந்து பார்க்காமல் சின்ன தள்ளாட்டதுடன் நின்றவளை பார்த்தவன் முகம் கல்லாகி போயிருந்தது! கண்கள் கலங்கி சிவந்தது!!
“ப்ரோ! ஏன் இவ்வளோ எமோஷன்ஸ்? இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. எங்களுக்கு இது பழக்கம் தான். ரிபு தான் ஒவ்வொரு முறையும் வேண்டாம்னு சொல்லிடுவா. அதிப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாங்கனு தான் சொல்லுவா. இன்னைக்கு நாங்க தான் ஃபோர்ஸ் செஞ்சு குடிக்க வச்சோம். வாழ்க்கையில இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை கூட அனுபவிச்சு பார்க்கலேனா எப்படி? இதுவே இவ தம்பி அபி இப்படி குடிச்சிட்டு வந்தா இந்தளவுக்கு ரியாக்ட் பண்ணுவீங்களா, திட்டிட்டு என்னவோ போனு விட்டுடுவீங்க தானே? ஆம்பளைக்கு ஒரு சட்டம், பொம்பளைங்களுக்கு ஒரு சட்டமா? என்னைக்கு தான் நீங்களாம் திருந்த போறீங்களோ?” ஒரு மகாப்பெரிய பெண்ணிய தத்துவத்தை உதிர்த்து விட்டு சென்ற அவள் தோழிகளை காணும் போது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இந்த பெண்களின் சம உரிமை கோட்பாடுகளை கேட்டிருந்தால், ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்’ என்று எழுதிய பாரதி தன் பேனாவை இரண்டாய் உடைத்து போட்டிருப்பார்!!
திரும்பி வருகிற வழியெல்லாம் அவன் மனம் கடல் அலைகளென அடங்க மறுத்தது! இளமை பருவம் கட்டுபாடுகளற்ற ஒரு வண்டியை போன்றது! அதன் நிறுத்து விசையை கண்டுபிடிக்காவிட்டால் எங்கோ மோதி வண்டிக்கும் நமக்கும் சேதாரத்தை விளைவிக்கும்! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வாழ்க்கை அமைந்ததற்கு ஒரு காரணம் இருக்கும்! ஒரு அர்த்தம் இருக்கும்!! திரிபுரசுந்தரி தான் பிறந்ததன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், காரணத்தை தெரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் அதை கடந்து போய்க்கொண்டிருக்கிறாள்!! அவளை ஒருவழிப்படுத்துவது எப்படி?!
அவளை வீட்டில் கொண்டு சேர்த்தவன் இடிந்து போய் அமர்ந்திருந்த பாகீரதியை சமாதானம் செய்து, தன் அம்மா சந்திராவை அவர்களுக்கு துணை வைத்துவிட்டு ஓய்ந்து போய் வீடு வந்து சேர்ந்தான்.
மறுநாளிலிருந்து அமிழ்தினியன் ரிபுவிடம் சரியாக பேசவில்லை. வழமை போல் அவளை கொண்டு கல்லூரியில் விட, கூட்டி வர என்று அவன் கடமைகளை சரியாக செய்தவன் அதற்கு மேல் எதுவுமில்லை என்பது போல் மௌனம் காக்க, அவனது மௌனம் அவளை வதைத்தது. சண்டையிடுவது, திட்டுவது, அடிப்பதை காட்டிலும் வலிமையான ஒரு தாக்குதல் உண்டு! மௌனம் என்னும் ஆயுதம்! மௌனமென்னும் அஹிம்சை ஆயுதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு!
அவனின் மௌன போராட்டத்தை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. தன் தப்பை ஒத்துக்கொண்டு அவனிடம் மனிப்பு கேட்கவும் மனம் இடம் தரவில்லை, ‘அப்படியென்ன நான் தப்பு செஞ்சிட்டேன். ஒரே ஒரு தடவை ஏதோ கொஞ்சம் குடிச்சிட்டேன். நான் என்ன மொடா குடிகாரியா?’ உள்ளுக்குள் மருகி மருகி தவித்தவள், ஷேடோவிடம் தான் தன் மொத்த ஆதங்கத்தையும் இறக்கி வைத்தாள்.
“ஏன்டா எது செய்யுறதா இருந்தாலும் உன் கிட்டயும், ஷேடோகிட்டயும் சொல்லிட்டு தானே செய்யுறேன். நான் லவ் பண்ணினது, டேட்டூ போட போனது எல்லாமே சொல்லிட்டே தானே செஞ்சேன். இது ஒன்னு தானே உங்க ரெண்டு பேர்ட்ட மறைச்சேன். அதுக்கு என்னை எப்பவும் போல திட்டு, அட்வைஸ் பண்ணு கேட்டுகிறேன். ஏன் பேசாம இருக்க?”
“ரிபு! நான் பேச தான் செய்யுறேன். உனக்கு தான் ஏதோ முரணா தெரியுது. உனக்கு எது நல்லது கெட்டதுனு புரியாம இல்லை, தெரிஞ்சும் ஒரு தப்பை நீ செய்யும் போது அந்த தப்போட பின் விளைவுகளையும் நீ சந்திச்சு தானே ஆகணும்?! ஃபேஸ் இட். எதுவுமே நடக்காத மாதிரி என்னால சாதாரணமா கடந்து போக முடியாது”
“க்ரிஞ் மேக்ஸ் வெர்ஷன் 2.0 மாதிரி பேசுற. இது ஒரு சின்ன விஷயம் தானே?”
“தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான். அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி. குடிக்கிறது தப்பு. எத்தனையோ குடும்பங்களை அழிக்கிற, எத்தனையோ பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகுற அடிப்படை காரணிகளில் ஒன்றான இந்த குடிப்பழக்கம், இப்படிப்பட்ட சோசியல் ட்ரிங்க்கிங்ல தான் ஆரம்பிக்குது. இந்த குடியை நார்மலைஸ் (Normalise) செஞ்சா தான் நான் இப்போ ட்ரெண்டுல இருப்பேன்னா அது தேவையேயில்லை, நான் க்ரிஞ்ஜாவே இருந்துட்டு போறேன். பூமராவே இருந்துட்டு போறேன்”
“சரி அதிப்பா குடிக்கிறது தப்பு தான் ஒத்துகிறேன். இனிமே கண்டிப்பா அந்த தப்பை நான் செய்ய மாட்டேன். என் கூட எப்பவும் போல பேசு ப்லீஸ்”
மனதும் கண்களும் சேர்ந்து மன்றாட நின்றிருந்தவளை ஒரு நொடி அழுத்தமாய் பார்த்தவன், “எனக்கு உன் மேல கோபமே கிடையாது இஞ்சிமொரப்பா, அதுக்காக நீ செஞ்சதை நான் ஏத்திகிட்டேன்னு இல்லை, இன்னொரு தடவை இதே தப்பை நீ செஞ்சா இதோ இந்த மாதிரி நீ கேட்டுட்டிருக்க நான் இங்க இருக்கமாட்டேன். இன்னொரு தடவை இந்த தப்பை நீ செய்யும்போது உன்னை காப்பாத்த நானிருப்பேன், ஆனால் உன் கூட நானிருக்க மாட்டேன். அதுக்கு பின்ன நீ என்னை பார்க்கவே முடியாது”
இஞ்சிமொரப்பா என்று அவன் அழைத்ததுமே அவள் முகமும் அகமும் மலர்ந்துவிட்டது. சில வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, அவை எத்தனையோ உணர்வுகளின் கூட்டெழுத்து ஆகும்!! மின்னும் கண்களுடன் குதித்து கொண்டு அவள் தலையாட்டியது இன்றும் அவன் கண்களுக்குள் மின்னி மறைந்தது!!
————————————————————————————————————————————-
பிக் பிட்சரின் வெளியே அருகிலிருந்த மரத்தின் திண்டு ஒன்றில் தலை கமிழ்ந்தபடி அமர்ந்திருந்த திரிபுரசுந்தரியை காரிலிருந்தே பார்த்து விட்டான். எங்கே காரை நிறுத்தினான் எப்படி நிறுத்தினான் என்று கூட தெரியாமல் பதறி அடித்து அவள் முன் சென்று நின்றான்.
தலையை நிமிராமலே தெளிவாக உளறினாள், “அந்த கிழவி எனக்கு காசு கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிடுச்சு அதிப்பா! நான் என்ன பிச்சைக்காரியா, கை நீட்டி நிற்க? இதே எங்க அப்பா இருந்திருந்தா என்ன இப்படி விட்டிருப்பாரா?”
அவள் கைபிடித்து எழுப்பியவன் அவளை காருக்கு நகர்த்த முயல, அவள் அந்த இடத்திலே வேரூன்றி நின்றாள், “நீ என்னை விட்டு போய்டாத அதிப்பா”
எவ்வளவு முயன்றும் அவள் நகர மறுக்க, அவளை உட்கார வைத்துவிட்டு காரை நகட்டி அவள் பக்கம் கொண்டு வந்து கதவை திறந்து வைத்தான். அவளை தூக்கி உள்ளே படுக்க வைத்தவன், காரை கிளப்பினான்.
“அந்த கிழவியும் எங்க அம்மாவும் சேர்ந்து ரொம்ப படுத்துறாங்க அதிப்பா. என்னை அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போகாத”
போகும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தாள்!
“நான் குடிச்சேனு கோபப்படாத அதிப்பா. நான் மறுபடியும் குடிச்சா என்னை விட்டு போய்டுவேன்னு சொன்னியே, இப்போ போய்டுவியா?”
“இல்லை இல்லை நீ போக மாட்ட! உன்னால என்னை விட்டு போகவே முடியாது”கூறிவிட்டு கெக்கேபிக்கேவென்று சிரித்தவள், “உன்னால என்னை விட்டு போகவும் முடியாது, பேசாம இருக்கவும் முடியாது எனக்கு தெரியுமே”
அவள் வீடு பக்கம் வந்ததை கவனித்தவள், “அதிப்பா! நான் இந்த வீட்டுக்கு போக மாட்டேன். பேசாம ஒன்னு பண்ணலாமா? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” சடாரென்று ப்ரேக் போட்டு காரை நிறுத்த, அவன் அழுத்திய ப்ரேக்கில் காரை ஒரு கால் வட்டம் அடித்து அங்கிருந்த மரத்தின் முன்பு ஒரு அடி தள்ளி நின்றது!!!!
———————————————————————————————————————————
காலை பனிமூட்டம் இருபது அடி வரை ரோட்டை மறைத்திருக்க, ஜில்லென்ற காற்று காதில் ரீங்காரமிட, காற்றை கிழித்துக் கொண்டு தன் புது ஹார்லி டேவிட்சன் வண்டியில் பறந்துக் கொண்டிருந்தான் அவன்! வண்டியைக் கொண்டு சென்று ரிபு முன் நிறுத்தும் போது சாசர் போல் விரியும் அவள் கண்களையும் வாயையும் கற்பனை செய்து பார்த்தவன் சிரித்துக் கொண்டான்! எத்தனை நாள் ஆசை!! வாயு வேகம் மனோ வேகமாக ஓட்டும் போது உடம்பிலிருந்து உயிர் தூர பறந்து அப்படியே காற்றை கிழித்து கொண்டு செல்வது போன்றதொரு போதை!! வண்டி ஓட்ட ஆசைப்படாத இளந்தாரிகள் உண்டா என்ன? இவன் மட்டும் விதிவிலக்கா? பதினெட்டாம் பிறந்தநாளுக்கு அப்பா இப்படியொரு இன்ப அதிர்ச்சி தருவாரென்று அவன் நினைக்கவேயில்லை!!
“ஹலோ என்ன பசங்க நீங்க மட்டும் தான் பெரிய பைக் ஓட்டுவீங்களா? நானும் ஓட்டிக் காட்டுறேன் பாரு” சண்டைக்கோழி போல சிலுப்பி நிற்கும் அந்த குட்டி இஞ்சிமொரப்பாவுக்கு வளர்ந்ததும் ஓட்டச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டே ஓட்டியவன் கவனம் சாலையில் இல்லை! அதிகாலை நேரமாதலால் வெறிச்சோடி கிடந்த சாலை அவன் மனம் போலவே தறிக்கெட்டு கிடந்தது! ரிபு வீட்டு பக்கம் வரும் போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது!!! தன் வண்டி எது மேலோ மோதியதை உணர்ந்து தடுமாறி சிறிது தூரம் தள்ளி பக்கமிருந்த மணல் மேட்டில் முட்டி சரிந்து கீழே விழ, முதலில் வண்டிக்கு என்ன ஆயிற்றோ என்று தான் பதறினான்.
அதன் பின் தான் எதிலோ மோதிய நினைவு வர பின்னால் பார்த்தவனுக்கு கை கால்கள் சில்லிட்டு, மயிர்கூச்சம் ஏற்பட்டது. பயத்தில் நா வளர, கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. ஒருவர் அடிபட்டு கீழே விழுந்து கிடப்பது பனிமூட்டத்தின் நடுவே தெரிந்தது. யாரென்று தெரியவில்லை. அவர் விழுந்திருந்த இடத்தில் இரத்தம் சிதறிக் கிடப்பது கண்ணில் பட, என்ன செய்கிறோமென்றே புரியாமல் வேகவேகமாக வண்டியை எடுத்தவன் சற்று தூரம் தள்ளி வந்த பின்பே நிறுத்தினான். கண்கள் நிறுத்தாமல் கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த டீ கடையை ஒருவர் திறந்துக் கொண்டிருக்க, அங்குச் சென்று அவரின் அலைபேசி வாங்கி ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு யாரென்று சொல்லாமல் வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான்!!!!
————————————————————————————————————————————-
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அதிப்பா” ரிபுவின் குரல் அவன் காதில் நீருற்றுபோல் பொங்கி எழுந்துக் கொண்டேயிருக்க, வியர்த்து வழிய, கை கால்கள் நடுங்க, பயந்து நடுங்கியபடி நின்ற பதினெட்டு வயது அமிழ்தினியனாக மாறியிருந்தான் அவன்!! பக்கத்தில் தன் தந்தையை கொன்றதே தன் அதிப்பா என்பதை அறியாத ரிபு!!!!!