மித்ரா அரவிந்த் இருவரும் ஜோடியாகச் சென்றதற்கு, அந்த மருந்துக்கடைக்காரர் அவர்கள் தம்பதிகள் என்றே நினைத்திருப்பார். ஆனால், இருவரும் பயந்து, தயங்கிக் கேட்கவும் தான் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தார் அவர்.
ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட்டுடன், ரதியிடம் சொல்லிவிட்டு வந்ததற்காக ஒரு ஃபேஸ் வாஷையும் சேர்த்து வாங்கிக்கொண்டு மருந்தகத்தை விட்டு வெளியேறினர்.
இரண்டையும் தோளில் மாட்டியிருந்த தனது கைப்பையில் திணித்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள் மித்ரா.
“நம்ப இப்டி பண்ணியிருக்கக் கூடாதுல்ல” என்று நூறாவது முறையாக அரவிந்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள் மித்ரா.
அவனுக்கும் ‘அவசரப்பட்டுவிட்டோமே’ என்ற எண்ணம் தான். ஆனால், ஒவ்வொருமுறையும் தவறு செய்துவிட்ட எண்ணத்தில் சோர்ந்து போகும் மித்ராவைத் தேற்றுவதற்காகவே அவனது எண்ணத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அதெல்லாம் பாசிட்டிவ் வராது. அப்டியே வந்தாலும், ஒரு வாரத்துல கல்யாணம் மித்து. எதுவும் பிரச்சனை ஆகாம பாத்துக்கலாம். நீ டென்ஷன் ஆகாத” என்று ஒவ்வொரு முறையும் அவளைச் சமாதானம் செய்தான்.
“ஆனா, நம்ப இதுக்கு ரெடி இல்ல தான அரவிந்த்?” என்று அவள் பாவமாய் கேட்க, “அதுக்குள்ள எதுக்கு பேனிக் ஆகுற? நாளைக்கு டெஸ்ட் பண்ணி பாப்போம். அப்புறம் பேசிப்போம்” என்று அவளைச் சமாதானம் செய்து அமைதியாய் மீண்டும் அந்த உணவகத்திற்கே அழைத்துச் சென்றான்.
அரவிந்தும் மித்ராவும் ஒருவரையொருவர் பார்த்து நான்கு மாதங்கள் தான் இருக்கும். பெற்றோரே ஏற்பாடு செய்த திருமணம் தான். ஆனால், தானே ஒருவனைத் தேடிக் காதலித்திருந்தால் கூட, அரவிந்தைப் பிடித்த அளவிற்குப் பிடித்திருக்காதோ என்ற எண்ணம் தான் மித்ராவுக்கு. அரவிந்திற்கும் அப்படியே தான்.
மித்ரா ஃபேஷன் டிசைனிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்று, அதன் பின் நான்கு ஆண்டுகள் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஸ்டைலிஸ்டாக பணிப்புரிந்தாள். படிப்பு, வேலை என அனைத்தும் பெங்களூரில் தான். அதன் பின் தான் முதுகலைப் பட்டம் பெறும் ஆர்வம் வர, NIFT கல்லூரியில் படிக்க நுழைவுத்தேர்வு எழுதித் தேர்வுப் பெற்று பெங்களூரில் உள்ள NIFT-இல் சேர்ந்தாள்.
இரண்டாண்டுகள் முதுகலைப் படிப்பில், முதல் வருடம் முடிந்ததுமே, மித்ராவின் தாய் லக்ஷ்மி ஒரு வரன் தேடும் வலைத்தளத்தில் அவளது தகவல்களைப் பதிந்து வைத்தார்.
“இன்னும் ஒரு வருஷப் படிப்பை முடிச்சிட்டுப் பார்த்துக்கலாமே” என்று சொன்ன மித்ராவை, “இப்போ தொடங்குனா தான் அப்போ முடியும்” என்று சொல்லி அடக்கினார்.
அவ்வப்போது லக்ஷ்மியும், கிருஷ்ணமூர்த்தியும் வலைத்தளத்தில் அவர்கள் வலைவீசித் தேடிய வரன்களை இவளிடம் காண்பிக்க, அதில் சிலரை மித்ராவுக்குப் பிடிக்கவில்லை. சிலருக்கு மித்ராவைப் பிடிக்கவில்லை. இப்படியாக வரன்கள் தட்டிக்கழிந்துக்கொண்டே போக, ஒரு நாள் அரவிந்தின் தகவல்களோடு வந்து நின்றார் லக்ஷ்மி.
விடுமுறை எனச் சென்னையில் உள்ள இல்லத்திற்கு வந்திருந்த மித்ராவிடம் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த அரவிந்தினுடைய புகைப்படத்தைக் காண்பித்துக்கொண்டே, அவனைப் பற்றிய தகவல்களை அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் லக்ஷ்மி.
வெளிர் நீல நிறத்தில் சட்டை அணிந்துக்கொண்டு பளீரெனச் சிரித்துக்கொண்டிருந்தான் அவன். சாந்தமான முகம், மாநிறம், அலையலையாய் கேசம், முகத்தில் தவழ்ந்த புன்னகை எல்லாமும் சேர்த்தே அவனை மித்ராவுக்கு மிக வசீகரமாய் காட்டியது.
பொதுவாகத் தாடியை க்ளீன் ஷேவ் செய்திருப்பவர்கள் மித்ராவை அத்தனை கவர்வதில்லை. ஆனால், அதிலும் கூட அவன் மிக அழகாக இருப்பது போல் தோன்றியது அவனுக்கு.
முகத்தைப் பார்த்தே பணிவானவன், ஒழுக்கமானவன் என்றெல்லாம் யூகம் செய்துவிடக்கூடிய முகம் தான். ‘சுத்தப் பழம்’ என்று நினைக்கத் தோன்றினாலும், ஒரு கையை பாக்கெட்டில் வைத்து மறுகையால் தலையைக் கோதுவது போல் போஸ் கொடுத்திருந்தவனைப் பார்த்து, ‘ஸ்டைலான பழம்’ என்று தான் நினைத்தாள் மித்ரா.
“பையன் ஸ்கூல் டீச்சர்” என்று லக்ஷ்மி சொல்லவும், “என்னது?” என்று தான் பார்த்தாள் மித்ரா.
இதுவரை வந்த மாப்பிள்ளைகள் எல்லாம் பொறியாளர்கள், எம்.பி.ஏ பட்டதாரிகள் அல்லது சொந்தமாகத் தொழில் செய்பவர்களாகத் தான் இருந்தனர்.
“ஆமா டி. சென்னைல ஏதோ ப்ரைவேட் ஸ்கூல்ல எக்கனாமிக்ஸ் டீச்சராம்” என்று சொல்ல வினோதமாக இருந்தது மித்ராவுக்கு.
“ஆனா பெரிய குடும்பம். நம்ப ஊர் தான். கடலூர். நாங்க சின்னதா இருக்கும் போதே, அந்த ஊர்லையே பெரிய பாத்திரக் கடை இவன் தாத்தாவுடையது தான்.
அதுக்கப்புறம் அவங்க பிள்ளைங்க வந்து, பாத்திரக் கடையோட சேர்த்து, எலெக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் விக்குற கடையைத் தொடங்குனாங்க. இப்போ RR டிஜிட்டல் வேர்ல்ட், RR எலக்ட்ரானிக்ஸ்ன்ன்னு கடலூர்ல திரும்பற பக்கம் எல்லாம் இவங்க கம்பெனி பேனர் தான் இருக்கு” என்று அவர்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போனார் லக்ஷ்மி.
‘அது என்ன? குடும்பத்தொழில் இருந்தும், இப்படி வீட்டை விட்டு சென்னையில் வந்து ஆசிரியராகப் பணிபுரிந்துக்கொண்டிருக்கிறான்!!!’ என்ற கேள்வி மித்ராவுக்கு.
அவனைப் பார்க்கப் பிடித்திருந்தது. அவனைப் பற்றித் தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தது. அதற்காகவேணும் அவனை நேரில் சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்தாள்.
“அம்மா. மேட்ரிமோனில யார் நம்பர் குடுத்திருக்காங்க? அப்பாவ அந்த நம்பர்க்கு பேசிப் பார்க்கச் சொல்லுங்க. அவங்க பேரண்ட்ஸ் நம்பரா இருந்தா அவங்க கிட்ட பேசி பையன் நம்பர் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க” என்றாள் மித்ரா.
“வாங்கி?” என்று லக்ஷ்மி கேட்க, “நான் அந்தப் பையன் கிட்ட பேசிட்டு சொல்றேன்ம்மா” என்றவளை முறைத்தார் லக்ஷ்மி.
“என்ன விளையாடுறியா? நீயா நேரா போய் பையன் கிட்ட பேசுவியா? பெத்தவங்க எதுக்கு இருக்கோம்?” என்று லக்ஷ்மி கேட்க, “நான் தான கல்யாணம் பண்ணப் போறேன். நீங்க அவங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசி, அந்தப் பையன் கிட்ட பேசி, அவங்க பொண்ணு பார்க்க வந்து, அப்போ நான் பையன் கிட்ட பேசி, அப்போ பிடிக்கலன்னா? எல்லார் டைமும் வேஸ்ட் தான. அதான், அந்தப் பையன் நம்பர் கெடச்சா நானே பேசிட்டு சொல்றேன்” என்று சொன்னவளின் கோரிக்கையை முதலில் மறுத்தார் தான் லக்ஷ்மி.
அதன் பின் ,மித்ராவோடு சேர்ந்து, ப்ரித்வியும் தாயையும் தந்தையும் சம்மதிக்க வைத்தனர்.
அரவிந்தின் வீட்டில் பேசி, அவனுடைய அலைபேசி எண்ணை வாங்கித்தந்தார்கள்.
அன்று மாலை அரவிந்துக்கு அழைத்தாள் மித்ரா.
“ஹெலோ…” என்று இவள் சொல்லவும், “சொல்லுங்க” என்றான் அவன் மறுமுனையில். ஒரு பெண்ணின் இனிமையானக் குரல் கேட்கவும், நிச்சயம் ‘லோன் வேணுமா? க்ரெடிட் கார்ட் வேணுமா?’ என்று தான் ஏதோ அடுத்து கேட்பாள் என்று தான் நினைத்தான் அரவிந்த்.
“என்ன சொல்லணும்?” என்று அவள் மறுமுனையில் சிரிக்கவும் தான், வேறு யாரோ என்று புரிந்து, “யார் நீங்க?” என்றான்.
“மித்ரா…” என்று சொல்ல, “ஓஹ். சொல்லுங்க மித்ரா…” என்று அவன் ஏதோ இவளைத் தெரிந்தது போல் பேசவும், ஆச்சரியித்தாள் இவள்.
“என்ன? மித்ரான்னு சொன்னதும் சொல்லுங்கங்கறீங்க? எந்த மித்ரான்னு நினைச்சுப் பேசறீங்க?” என்று கேட்க, “ஃபேஷன் டிசைனிங் படிச்சிட்டு இருக்க மித்ரா தான?” என்றான் அவன் அலட்டிக்கொள்ளாமல்.
அவள் எதுவும் சொல்லும் முன், “அம்மா சொன்னாங்க. மேட்ரிமோனில ப்ரொஃபைல் பாத்துட்டு ஒரு பொண்ணு வீட்ல இருந்து என் நம்பர் வாங்குனாங்கன்னு. அப்போ அவங்க கிட்ட கேட்டு அந்தப் பொண்ணோட டீடெய்ல்ஸ் வாங்குனேன். அதான் மித்ரான்னு சொன்னதும் அந்த மித்ராவா தான் இருக்கும்ன்னு நினச்சேன்” என்று அவனே விளக்கினான்.
“நல்ல யூகம் தான். ஆனா, அது எப்டி பொண்ணே நேரா ஃபோன் பண்ணும்ன்னு நினைச்சீங்க?” என்று மித்ரா கேட்க, “அதுவா. பொண்ணு ஃபோட்டோல பாக்கவே அமைதியா எல்லாம் தெரியல. மாடர்ன் பொண்ணு. பெங்களூர்ல படிச்சு, ஃபேஷன் இண்டஸ்ட்ரில இருக்க பொண்ணு. ‘எனக்குத் தான மாப்ள, நானே பேசிக்கறேன்’னு முடிவுப் பண்ணி கால் பண்ண நிறைய வாய்ப்பு இருக்கே” என்றான் அரவிந்த்.
“அது என்ன? ஃபேஷன் இண்டஸ்ட்ரில இருக்க பொண்ணு? அப்போ இந்த இந்த வேலை செய்யுற பொண்ணுங்க இப்டி இப்டித்தான்னு நினைப்பீங்களா?” என்று அவள் கேட்க, அதற்கும் அவன் அமைதியாகவே, “அட. வேலையை வச்சு சொல்லலைங்க. வெளியுலகம் தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்ல வந்தேன்” என்று பதிலளித்தான் அரவிந்த்.
“சரி. என் ஃபோட்டோ பாத்தீங்களா?” என்று மித்ரா கேட்க, “ம்ம். பாத்தேன்” என்றான்.
“என்னைப் பிடிச்சிருக்கா?” என்று அவள் கேட்க, “ஃபோட்டோவ பார்த்து என்ன சொல்ல? பார்க்கப் பிடிச்சிருக்குன்னு வேணா சொல்லலாம். மொத்தமா பிடிச்சிருக்குன்னு எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்டான் அரவிந்த்.
“அப்போ. நாளைக்கு ஒரு கப் காஃபி? ஆனா, பேரண்ட்ஸ்க்கு தெரியாம? ஒரு ஃபோன் கால்க்கு பெர்மிஷன் வாங்குறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு” என்று அவள் சொல்ல, சிரித்தான்.
“நாளைக்கு ஈவ்னிங் இதே டைம்” என்று அவன் சொல்ல, இவளே ஒரு கஃபேவைத் தேர்வு செய்து சொன்னாள்.
அடுத்த நாள் மாலை, அக்காவும் தம்பியுமாக, பெற்றோரிடம் ஏதோ ஒரு ஆங்கில சூப்பர்-ஹீரோ படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு அரவிந்தைப் பார்க்கச் சென்றனர்.
அரவிந்த் வரும் முன்னரே அங்குச் சென்றுவிட்டாள் மித்ரா. எதற்கும் ஒரு பாதுகாப்பிற்கு இருக்கட்டும் என்று அதே கஃபேவின் ஒரு மூலையில் ப்ரித்வியையும் யாரோ போல் அமரவைத்திருந்தாள்.
அவன் வந்ததும், எழுந்து நின்று கைக்குளுக்கினாள். “ஆர்டர் சார்!” என்று வந்த வெய்ட்டரிடம், அவனுக்கு ஒரு கோல்ட் காஃபியும், அவளுக்கு ஒரு சாக்லேட் மில்க்க்ஷேக்கும் கூறிவிட்டு அமர்ந்தனர்.
‘அவனே முதலில் பேசட்டும்’ என்று அமைதியாக இருந்தவள் பொறுமையிழக்கும் வரை அவன் பேசவேயில்லை.
“ஸோ… மிஸ்டர். அரவிந்த். எக்கனாமிக்ஸ் டீச்சர்!” என்று அவள் தொடங்க, “ம்ம்…” என்று புன்னகைத்துக்கொண்டே நிமிர்ந்து அமர்ந்தான்.
“அது ஏன் ஸ்கூல் டீச்சர்?” என்று அவள் கேட்க, “வை நாட்?” என்றான் அவன்.
“உங்க குடும்பத்துக்கு ஊர்ல பெரிய பிஸ்னஸ் இருக்குன்னு சொன்னாங்களே… அதெல்லாம் விட்டுட்டு ஏன்?” என்று நேராடியாகக் கேள்விக்கு வந்தாள் மித்ரா.
“அது! எனக்கு அந்த பிஸ்னஸ் வேண்டாம். அது என்னமோ ரொம்ப டென்ஷனான வேலைல. நிறைய மேனேஜ் பண்ணனும்? ஓடிட்டே இருக்கணும். கொஞ்சம் நின்னாலும் காம்படீட்டர்ஸ் அது இதுன்னு லாஸ் ஆகும். அப்புறம் அந்த லாஸை ஈடுகட்ட திரும்ப ஓடணும். முக்கியமா எந்த நேரமும் அதைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கணும். எனக்கு இஷ்டமில்ல” என்றான் அரவிந்த்.
“அது என்ன எக்கனாமிக்ஸ்?” என்று கேட்க, “எங்க அப்பா எக்கனாமிக்ஸ்ல பேச்சுலர்ஸ் பண்ணிட்டு, அப்புறம் எம்.பி.ஏ படிப்பான்னு ஒரு ஐடியால சேர்த்து விட்டாங்க. நான் அப்டியே எக்கனாமிக்ஸ்லையே மாஸ்டர்ஸ், எம்.எட்ன்னு படிச்சிட்டு வந்துட்டேன். இப்போ ஒரு சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல 11th, 12th க்கு எடுத்துட்டு இருக்கேன்” என்றான் அவன்.
“அப்டி அந்தக் குடும்ப பிஸ்னஸ்ல கிடைக்காதுன்னு நினைச்ச எது, உங்களுக்கு இந்த வேலைல கிடைச்சிருக்குன்னு நினைக்கறீங்க?” என்று கேட்டாள் மித்ரா.
“வீக்-டேஸ்ல க்ளாஸ் எடுத்தோமா, வீக்-எண்ட்ல மிச்சம் எதுவும் வேலை இருந்தா பார்த்தோமா, ரெஸ்ட் எடுத்தோமா, ஊர் சுத்துனோமான்னு இருக்கலாம். இதுல வேற ஸ்கூல் புள்ளைங்களுக்கு எப்போ எல்லாம் லீவோ அப்போ எல்லாம் நமக்கும் லீவு. மாசம் பொறந்தா கைல சம்பளம்ன்னு நிம்மதியா இருக்கலாம்.
அது மட்டுமில்லாம, இப்போ நாமலே கல்யாணம் பண்ணிக்கறோம்ன்னு வச்சிக்கோங்க. நீங்க ஃபேஷன் டிசைனிங் படிக்கறீங்க. பெங்களூரோ, இல்ல மும்பைலயோ, உங்களுக்கு கரீயர் ஆப்ஷன்ஸ், க்ரோத் எல்லாமே நல்லா இருக்கும். எங்க கம்பெனி ஷோ-ரூம்ஸ் எல்லாம் கடலூர், விழுப்புரம், சிதம்பரம்ன்னு சுத்திச் சுத்தி அங்கேயே தான் இருக்கு. உங்கள அங்க வந்துடுன்னு சொல்லியிருக்க முடியாது. என்னாலையும் வேற சிட்டில இருக்க முடியாது.
ஆனா, இப்போ பாருங்க. நான் உங்க கூட பெங்களூருக்கு வந்து அங்க ஏதோ ஒரு ஸ்கூல்ல எக்கனாமிக்ஸ் டீச்சரா வேலை செஞ்சிக்க போறேன்” என்று அரவிந்த் அதை ஒரு எடுத்துக்காட்டாகச் சொன்னாலும், மித்ரா விழுந்தது அங்கே தான்.
அதன் பின்னான ஒன்றரை மணி நேரம் அவனுடன் பேசியதில், எப்படிப் போனது என்றே தெரியாமல் ஓடியது. அந்த ஒன்றரை மணி நேர முடிவில் அவளுக்கு அவனை இன்னும் பிடித்தது.
ஏதோ சமையல் பற்றிப் பேச்சு வரவும், “சமாளித்துக்கொள்ளும் அளவிற்குச் சமைப்பேன்” என்று சொல்லியிருந்தாள் மித்ரா. “நானும் அதே தான். சென்னை வந்து கத்துக்கிட்டது தான்” என அவன் பதில் சொல்லவும், “கேக்கணும்ன்னு நினைச்சேன். கடலூர்லயே ஏதாவது ஒரு ஸ்கூல்ல வேலைச் செய்யாம, ஏன் இப்டி ஊரை விட்டு வந்து. சென்னைல?” என்று கேட்டாள்.
“இப்போ வீட்ல என்ன பொய் சொல்லிட்டு வந்தீங்க?” என்று அரவிந்த் கேட்க, “இங்க்லிஷ் படம் பார்க்க தியேட்டர் போறேன்னு” என்றாள் அவள், அவனுடைய சம்பந்தமே இல்லாத கேள்வியில் முழித்துக்கொண்டே.
“இப்டி அடிக்கடி டிஸைன் டிஸைனா பொய் யோசிக்க வேண்டி இருக்காதுன்னு தான்” என்று அவன் சொல்லவும், வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.
வெகு நிதானமாக, வார்த்தையில் சத்தத்தைக் கூட்டாமல், வாய்விட்டுச் சிரிக்காமல் பேசினாலும், அவன் பேச்சில் அவ்வப்போது எட்டிப்பார்த்த நையாண்டி அவனுடனான உரையாடலை மித்ராவை ரசிக்க வைத்தது.
“அதுவுமில்லாம. அங்க அப்பா தினந்தினம் எதுக்கு இந்த வேலைன்னு திட்டிட்டே இருப்பாங்க. அதோட, ஊர்ல இருக்கவங்க, நான் இன்னாரோட பேரன்னு தெரிஞ்சா, நீ எதுக்கு டீச்சர் வேலைப் பார்க்கறன்னு கேப்பாங்க. இப்போ நீங்க கேட்டா சொல்லலாம். நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். போற வர்றவனுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?” என்று அவன் பதில் சொல்ல, அதற்கும் மித்ரா எப்போதும் போல, “ம்ம்” என்று தலையாட்டிவிட்டாள்.
அதன் பின் தான் அவன் சொன்னதை முழுதாக ஒரு முறை மனதில் ஓட்டிப்பார்த்துவிட்டு, “நான் எப்போ சொன்னேன்? உங்கள கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு?” என்று அவனிடம் கோபமாகக் கேட்பது போல் கேட்டும், அவன் சிரித்தான். அவனுடைய சிக்னேச்சர் சிரிப்பு. சத்தமே வராத சிரிப்பு.
“ஆனா, நான் ஒரு டீச்சரைக் கல்யாணம் பண்ண ஓகே சொல்லுவேன்னு நினைக்கவே இல்ல தெரியுமா? புருஷன்னு ஒரு பீஸை கற்பனைப் பண்ணப்போ அவன் டீச்சரா இருக்க மாதிரி நான் யோசிச்சதே இல்ல தெரியுமா?” என்று அவள் பாவம் போல் சொல்ல, அதற்கும் சிரித்தான்.
“ஆனா, இப்போ ஓகே சொல்லிடுவேன் போல” என்று அவள் முகத்தை இன்னும் பாவமாக வைத்துக்கொள்ள, “ஹ்ம்ம். தெரியும்” என்றான் அரவிந்த்.
“எப்டி? எப்போ தெரியும்?” என்று அவள் பரபரப்பாகக் கேட்டும், அவளுடைய பரபரப்புத் தொற்றிக்கொள்ளாமல், நிதானமாகவே சொன்னான், “வந்ததும் முதல் கேள்வியே வேலையைப் பத்திக் கேட்ட பொண்ணு, அதோட கிளம்பிப் போகாம, ரெண்டு மணி நேரமா உக்காந்து பேசிட்டு இருக்குல்ல. அதனால தெரியும்” என்றான் அவன்.
“நல்ல லாஜிக்” என்று அவள் சொல்ல, “அப்போ, நான் பெங்களூர்ல வேலைப் பார்க்கத் தொடங்கட்டுமா?” என்று கொஞ்சம் முன்னே நகர்ந்து அமர்ந்து அவன் ரகசியம் போல் கேட்க , “அப்பா அம்மா கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்று அவளும் ரகசியம் போல் சொல்ல, “அடேயப்பா” என்றான் அரவிந்த்.
இவர்கள் பேசிக்கொண்டே இருக்கவும், இவர்கள் பாதி மட்டும் குடித்துவிட்டு வைத்திருந்த க்ளாஸை யாரோ எடுக்கவும், “ஹெலோ ப்ரதர். இன்னும் நாங்க முடிக்கவே இல்ல. அதுக்குள்ள எதுக்கு க்ளாஸ் எடுக்கறீங்க???” என்று கேட்டான் அரவிந்த், எடுத்தவர் அங்குப் பணிபுரியும் ஊழியர் என்று நினைத்துக்கொண்டு.
“ப்ரதர் தான். ஆனா, உங்களுக்கு இல்ல. இவளுக்கு.” என்று சொன்னது இரண்டுமணி நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து போர் அடித்துப்போன பிரித்வி தான்.
“ஒரு மில்க்க்ஷேக்க ரெண்டு மணி நேரமாவா குடிப்பீங்க. அநியாயமா இல்லையா? வேணாம்ன்னா விடுங்கடா. நானாவது குடிப்பேன். நானும் பாஸ்தா, மொஜிட்டோன்னு வாங்கி சாப்ட்டு அது செரிச்சே போச்சு. இன்னமும் ஒரு மில்க்க்ஷேக்க வச்சிட்டு கடலைப் போட்டுக்கிட்டு இருந்தா, மனுஷனுக்குக் கடுப்பாகாது!!!” என்று மடைத்திறந்த வெள்ளம் போல் புலம்பித்தள்ளியவனை “சும்மா இருடா” என்று அடிக்குரலில் அடக்கினாள் மித்ரா.
அவளைப் பார்த்த அரவிந்திடம், “என் தம்பி. எதுக்கும் ஒரு பாதுகாப்புக்கு இருக்கட்டும்ன்னு கூட்டிட்டு வந்தேன்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள் மித்ரா.
“நான் என்ன ஃபோட்டோல பார்க்க பொண்ணு கடத்துறவன் மாதிரியா இருந்தேன்?” என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க, “ஃபோட்டோல பார்க்க அப்டி தெரியல தான். ஆனா, என்ன நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் அப்டி ஏதாவது ஐடியா வந்து என்னைத் தூக்கிட்டுப் போய்ட்டீங்கன்னா?” என்றாள் மித்ரா.
“ஓஹ். அதுக்குத் தான் உன் பாடிகார்ட் தம்பியைக் கூட்டிட்டு வந்தியாக்கும்” என்று சிரித்த அரவிந்த், ப்ரித்வியை அவனுக்கருகில் அமரவைத்துக்கொண்டான்.
“ஆமா. மாச மாசம் தெண்டமா ஜிம்க்கு காசு அழுவுறானே. இதுக்காவது பயன்படட்டும்ன்னு தான்” என்று மித்ரா ப்ரித்வியை முறைத்துக்கொண்டு சொல்ல, “நீ பார்லர்க்கு அழுவுற காசை விட ஒன்னும் தெண்டம் இல்ல” என்று பதிலுக்கு அவளை வாரினான் ப்ரித்வி.
“அப்பா-அம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னல்ல. அவங்க ஒருவேளை முடியாதுன்னு சொல்லிட்டா அப்போ ஒருவேளை உன்னைத் தூக்குற ஐடியா வரலாம். அப்போ மச்சான் நமக்கு ஹெல்ப் பண்ணுவாப்டி” என்று அரவிந்த் ப்ரித்வி தோள் மேல் கை போட்டு, “ஆமா தான மச்சான்?” என்றான்.
“என்ன வேணா பண்றேன். இந்தத் தொல்லையைக் கூப்ட்டுட்டு போய்டுங்க” என்றவனின் தலை மேலே மில்க்க்ஷேக் க்ளாஸைப் போடப்போன மித்ராவை அமைதிப்படுத்தி அமரவைத்து, ஒருவழியாக இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அரவிந்த்.