Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 21

அம்மையப்பன் 21

 

அதான் உன்ற ஆசை மவ கண்ணலாம் முடிஞ்சிடுச்சில்ல,  கிளம்பு போகலாம், இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே இருக்குறது என அலமேலு தன் மகனிடம் எரிந்து விழ.. மதுமித்ரா பயத்துடன் அவர் கரத்தை பிடித்தாள்..

 



Advertisement

ஆனால் அவரோ, விடுடி.. வரமாட்ட சொன்ன என்னை வம்படியா இழுத்துட்டு வந்துட்டான்.. அவ என் காலுல கூட விழுகல இந்த அவமானம் எனக்கு தேவையா.. இதுக்கெல்லாம் நல்ல அனுபவிப்பா பாரு என அலமேலு சாபம் கொடுப்பது போல் கத்த..

 

அச்சோ பாட்டி அக்கா பாக்குறா.. என மதுமித்ரா மெல்லிய குரலில் சொல்லவும்.. திகைத்து போனவர், மெல்ல திரும்ப.. அதி அவரையே அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தாள்..

Advertisement

 

Advertisement

அதைகண்டு அவரின் உடல் நடுங்கியது..

 

வீட்டுக்கு போகணுமா என அழுத்தமாக அவள் கேட்க..

Advertisement

 

அலமேலுவின் சிரம் அவரின் அனுமதியின்றி மறுப்பாய் தலையசைத்தது..

 

சாபம் கொடுக்குறீங்களோ என நக்கலாக அவள் கேட்க..

 

அவரின் சிரம் இப்பொழுது முன்னை விட வேகமாய் மறுத்தது.. 

 

உன்னை நானறிவேன் என்ற ரீதியில் அவரை எள்ளலாக பார்த்தவள்.. எல்லாரும் என்கூட அந்த வீட்டுக்கு வாங்க என அழுத்தமாக சொல்லிவிட்டு, வந்த காரிலேயே ஏறிக்கொண்டாள்..

 

அண்ணா வாங்க என சிற்பிகா அகத்தியனை அழைத்தாள்..

 

அவனோ தன் மகளை நினைத்து கவலையுடன் திரும்பி பார்த்தான்..

 

நீ அதுல வா மாமா நான் எல்லாரையும் அழைச்சுட்டு வரேன்.. என கண் மூடி மாமனுக்கு தைரியம் அளித்தான்.. அமுதன்.

 

இருந்தாலும், பார்வையால் மகளிடம் அனுமதி வாங்கியே சிற்பிகாவுடன் பின்னால் ஏறினான் அகத்தியன்..

 

திருமணம் முடிந்து முதன் முதலில் செல்கிறார்கள்.. இப்படியா ஆளுக்கொரு புறமாய் அமர்வது என நினைத்த சிற்பிகா, தன் கணவனை மனதிற்குள் திட்டினாள்..

 

வெளியில் திட்ட இன்னும் அவளுக்கு தைரியம் வரவில்லை.. அது எப்பொழுதும் வராது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்..

 

குட்டி அபய் அகத்தியன் கழுத்தில் உள்ள மாலையை பிடுங்க முயற்சி செய்ய.. சிற்பிகா தடுத்து கொண்டிருந்தாள்..

 

ஆனால் அவனா கேட்பான்.. யாரின் மகன் அவன்.. அஸிகரன் சிம்ஹா அபயசிம்ஹா சக்சேனா வாச்சே.. தாயின் கரத்திலிருந்து வெண்ணையாய் நழுவி கொண்டே இருந்தான்..

 

பூமாலையை இழுத்தே ஆகவேண்டும் என முழுமுயற்சியில் இருந்தான்..

 

அஸிகுட்டி இப்படியெல்லாம் பண்ணக்கூடாது.. என அதட்டலையும் கெஞ்சுதலாக சிற்பிகா சொல்ல.. பொக்கை வாய் சிரிப்பில் மயக்கியவன்.. நொடியில் அவள் கரத்திலிருந்து நழுவி அகத்தியனின் மாலையைப் பிடித்து விட்டான்..

 

அச்சோ, விடுங்க குட்டி.. அஸி விடு என சிற்பிகா அவன் கரத்தை விலக்க முற்பட.. பிஞ்சு கரத்தினால் அவ்வளவு அழுத்தம் கொடுத்து பிடித்திருந்தவன் விட மறுத்தான்..

 

விடுங்கம்மணி சின்ன குழந்தை தானே என அகத்தியன் மென்மையாக கூறி, அஸியை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்..

 

அஸி பூக்கள் கைக்கெட்டிய மகிழ்ச்சியில் காலை உதறி துள்ளியவாறு பூக்களை ஒவ்வொன்றாய் பிய்த்து போட சிற்பிகா அதட்டினாள்..

 

சிற்பி எப்படியும் வேஸ்டாக போற பூதானே விடு.. என அதி சொல்லவும்.. சின்னவள் அமைதியானாள்..

 

ஆனால் அதுவரை அவளின் மெனக்கிடல்களை மென்சிரிப்புடன் ரசித்து கொண்டிருந்தவனை.. செல்ல கோபத்தோடு ஓரக்கண்ணால் அவள் பார்க்க.. இதற்க்காகவே காத்திருந்தவன் தன்னவள் விழியோடு பின்னி பிணைந்து கொண்டான்.. அது கொடுத்த தாக்கத்தில் சிற்பிகாவின் முகம் செவ்வானமாக மாறியது.. தன்னவனின் சேட்டையில் யாரையும் பார்க்காது தலை குனிந்து கொண்டாள் பெண்ணவள்.. 

 

அம்மையப்பன் மாளிகையின் வாசலில் அனைவரும் மணமக்களுக்காக காத்திருக்க.. அகத்தியன் மனம் பின்னோக்கி சென்றுவிட்டது..

 

அன்றும் இப்படித்தான் ஊர் மக்கள் சொந்த பந்தங்கள் சூழ அன்பழகியும் அகத்தியனும் மாளிகையின் வாசலில் நிற்க.. அமிர்தமும் பவளமும் வாய்க்கொள்ளா புன்னகையுடன், கேலியும் கிண்டலுமாய் ஆரத்தி பாடல் பாடி இருவரையும் வரவேற்றனர்.. அதில்லையே அவன் மூழ்கும் நேரம், ஓர் கரம் அவனை பிடித்து இழுத்தது..

 

அதில் திடுக்கென தன்னிலை வந்தான் அகத்தியன்..

 

என்ன மிஸ்டர் அகத்தியன் அப்பப்போ மெண்டலி ஆப்சண்ட் ஆகிடுறீங்க.. என அபய் கேட்டான்..

 

ஒன்னுமில்ல அபி, சார் கடந்த கால நினைவுகளுக்கு போயிட்டாங்க.. என நண்பனிடம் கூறியவள்.. என்ன சரியா? என நக்கலாக அகத்தியனிடம் கேட்க.. அவன் வெறுமையாக அவளைப் பார்த்தான்..

 

அவர்கள் பின்னேயே வந்திருந்த மணிமேகலை கிருஷ்ணகுமாரும் அம்மாளிகையை வெறித்து கொண்டிருந்தனர்.. பல வருடங்களுக்கு முன்பு இவ்வூரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என இருவரும் வெறுத்து கிளம்பியவர்கள்.. இன்றுதான் மீண்டும் இங்கு காலடி எடுத்து வைக்கின்றனர்..

 

அலமேலுவோ பொறாமையும் புகைச்சலுமாக நின்றார்.. ச்ச எப்படியெல்லாம் திட்டம் போட்டேன்.. அம்புட்டையும் அந்த மரகதம் கெடுத்துட்டா.. இவளால தான் என் மகன் அம்புட்டு கஷ்ட்டபட்டான்.. அதுக்கு பாதி வகையில் அவரும் காரணம் என்பதை மறந்துவிட்டார் போலும்.. 

 

நாத்தனா மாருங்க வந்து ஆராத்தி சுத்துங்க என பெரிய பெண்மணி ஒருவர் சொல்ல.. அமிர்தமும் பவளமும் தங்கள் விருப்பமின்மையை அப்பட்டமாக முகத்தில் காட்டினர்..

 

திருநாவுக்கரசு திருச்செல்வம் இருவரும் பல்லை கடித்து தங்கள் மனைவிமார்களை முறைக்க, அப்பொழுதும் அவர்கள் அசையவில்லை.. 

 

அப்பத்தா என்ற அக்காக்கும் மாமாக்கும் நான்தான் ஆரத்தி எடுப்பேன்.. என முகம் முழுவதும் புன்னகையுடன் ஷாலினி ஆரத்தி தட்டுடன் வர.. யாழினி கொலைவெறியுடன் அவளை பார்த்தாள்..

 

பாத்தியா குட்டி, இவ அந்த மகாராணிக்கு ஆரத்தி எடுக்க போறாளாம்.. நம்மள கடத்தி மாமாவை எப்படியெல்லாம் அலையவச்சா, இப்போ அவரை மிரட்டி கல்யாணமும் பண்ணிக்கிட்டா, அவளை போய் இவ எப்படி தாங்குறா பாரு.. மாமாவையும் நம்ம குடும்பத்தையும் நிம்மதியில்லாம ஆக்கணும்கிறதுக்காக தானே அந்த அதி இங்க வரதே.. அதுக்கு இந்த ஷாலினி கூட்டு போடுறா.. எனக்கு அதுக்கூட பெரிசா தெரியல குட்டி, அவ உன்னோட உணர்வையும் மதிக்கல பாரு என யாழினி ஷாலினியை குறித்து குழலியிடம் வெறுப்பாக கூறி கொண்டிருந்தாள்..

 

அதற்கு பதில் கூறாமல் ஷாலினியையே வெறித்து கொண்டிருந்தாள் குழலி.. 

 

ரொம்ப நல்லது கண்ணு.. நீயே எடு.. என அம்மையப்பன் கூறினார்..

 

ஆராத்தி ஆராத்திங்க

அருமையான ஆராத்திங்க

நல்ல மனசோட நாங்க

சுத்தும் ஆராத்திங்க

 

என்ற மாமன் சிறப்பை சொல்லும்

பெருமையான ஆராத்திங்க

 

வெள்ள வேட்டி சட்டைகாரர்

குழந்தை போல மனசுகாரர்

 

வீரத்திலும் சலச்சதில்ல

சிங்கம் போன்ற நடைக்காரர்

 

என்ற மாமன் சிரிப்புக்கு

ஈடு இணை ஏதுமில்லை..

 

வேதவல்லி அத்தையோட செல்ல

பையன் என்ற மாமன்..

 

என அகத்தியனை பார்த்து கண் சிமிட்டியவாறு பாட.. மருமகளின் குறும்பில் அகத்தியன் முகத்தில் புன்னகை விரவியது.. 

 

மரகதம் பேத்தியிவ

அருமையுள்ள அக்காயிவ

 

அதிகம் பேசாத கோயம்புத்தூரு இளவரசி..

 

கோயம்புத்தூரு இளவரசி..

 

வீரத்துக்கும் சலைச்சவ இல்ல 

வேலுநாச்சி வம்சம் இவ 

 

சிங்கம் போல எங்கக்கா

சீறிடுவா பார்த்துக்கோங்க

 

என அதியை பார்த்தவாறு சிரிப்புடன் ஷாலினி பாட. அதியும் அபயும் அவளை புருவம் உயர்த்தி பார்த்தனர், என்றால் திருச்செல்வம் திருநாவுக்கரசு, நாகநாதன் மூவரும் மீசையை தடவியவாறு பெருமையாக பார்த்தனர்..

 

இவளுக்கு இருக்க கொழுப்ப பாரேன்.. மரகதம் பேத்தியாமா என உள்ளுக்குள் ஓர் வித உணர்வுடன் நொடித்து கொண்டார் மரகதம்.. 

 

தங்கத் தாரகைய சொந்தமாக்கி

தாரமுங்க 

கண்ணு கலங்காம கருத்தா

பார்த்துக்குங்க

 

வாழையடி வாழையாக உங்க

குலம் தழைக்கோனுங்க

 

பதினாறு செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்

 

அம்மையப்பன் வம்சத்துக்கு

கதையுண்டு பெருமையுண்டு

அந்த பெருமை சிறந்தோங்க

பெருவாழ்வு வாழ வேண்டும் 

 

நான் சுத்தும் ஆராத்தி

நல்ல மனசோட

நான் சுத்தும் ஆராத்தி

நல்ல மனசோட

 

அள்ளிகொடுங்க மாமா 

தங்க காசுகள

 

அள்ளிகொடுங்க மாமா 

தங்க காசுகள

 

அள்ளிகொடுங்க மாமா..

 

அப்பத்தான் வழிவிடுவோம்

அப்பத்தான் வழிவிடுவோம்

அப்பத்தான் வழிவிடுவோம்..

 

என ஷாலினி பாடியவாறு கிளுக்கி சிரிக்க.. அதியின் இதழ்களின் ஓரத்தில் ஓர் மென்னகை பூத்தது..

 

பரவாயில்ல என்ற பேத்தி அவங்க அக்காளையும் மாமனையும் சேர்த்தே புகழ்ந்துடுச்சு என உறவுக்கார பெண்மணி கூறினார்..

 

என்ன பாத்துகிட்டு நிக்கிறீங் மச்சான்.. அதான் தங்க காசு தந்தாதான் வழிவிடுவோம்னு புள்ள சொல்லிடுச்சுல.. அள்ளி கொடுங்க.. என ஒருத்தி கேலி பேச, கூட்டம் கொள்ளன சிரித்தது..

 

அகத்தியன் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுக்க முற்பட, அதி தடுத்தாள்..

 

என்னடி உங்கக்கா உனக்கு ஒன்னும் கொடுக்க விட மாட்டேங்குறா..

 

இதுக்குத்தான் அம்புட்டு பீத்திக்கிட்டியாக்கும் என உறவு பெண்கள் நக்கலடித்தனர்..

 

ஷாலினியோ அதனை கண்டுகொள்ளாமல் அதியையே ஆவலாக பார்த்து கொண்டிருந்தாள்..

 

இங்க வா என்பது போல் அதி தலையசைக்க, தன் பக்கத்தில் நின்றிருந்த பெண்மணியிடம் ஆரத்தி தட்டை கொடுத்தவள் வேகமாக அதியிடம் விரைந்தாள்..

 

தன் கரத்தில் அணிந்திருந்த வைர ப்ரெஸ்லட்டை கழட்டிய அதி ஷாலினியின் கரத்தில் மாட்டிவிட.. அனைவரும் வாய் பிளந்தனர்..

 

அக்கா.. இது எனக்குத்தானா என வியப்பாக ஷாலினி கேட்கவும்.. அதி ஆம் என்பதாய் தலையசைத்தாள்..

 

அதனை ஆசையாக பார்த்த ஷாலினி, பாத்திங்களா என்ற அக்கா எனக்கு வைரத்தையே கொடுத்துருக்காங்க என உறவு பெண்களிடம் பழிப்பு காட்ட.. அவர்கள் புகைச்சலை மறைத்து கொண்டு சிரித்தனர்.. 

 

ஹேய் லிட்டில் கேர்ள்.. இந்தா என அபய் தன் கழுத்திலிருந்த பிளாட்டினம் அண்ட் டைமண்ட் பதித்த செயினை தர, ஷாலினி தயங்கினாள்..

 

வாங்கிக்கோ என அதி சொல்ல, அப்பொழுதும் தயக்கத்துடன் ஷாலினி நிற்கவும்.. அதி அதனை வாங்கி அவள் கழுத்தில் போட்டு விட்டாள்..

 

பவளம் கொதிகலன் போல் கொதித்து கொண்டிருந்தார்.. ஷாலினி செய்கைகள் அனைத்தும் அவரை கோபமாக்கிக் கொண்டிருந்தது.. இது புரிந்த யாழினி அவருக்கு மேலும் தூபம் போட்டு கொண்டிருந்தாள்..

 

பாத்திங்களா ம்மா.. இந்த ஷாலினி பண்றத, உங்க பேச்சை மீறி அந்த அதிக்கூட கூடி குலாவிக்கிட்டு திரியிரா.. நீங்களும் பெரியம்மாவும் எவ்வளவு வருத்தத்துல இருக்கீங்க.. அதெல்லாம் நினச்சு பாக்குறாளா.. என யாழினி தன் வன்மத்தை அன்னையிடம் கக்கிக் கொண்டிருந்தாள்.. 

 

மணமக்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.. அடுத்தடுத்த சம்பிரதாயம் செய்ய ஆயத்தமாக.. அதி யாரையும் கண்டுகொள்ளாமல் விருவிருவென, மேலே உள்ள அகத்தியனின் அறைக்கு சென்றுவிட்டாள்..

 

அபய் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், தன் மனைவியை ஓர் பார்வை பார்க்கவும், குழந்தையுடன் அவன் அருகே அமர்ந்தாள்..

 

அதியின் செய்கையில் மற்றவர்கள் எல்லாம் திகைத்து போயினர்.. 

 

வேதவல்லி கையை பிசைந்து கொண்டிருந்தார்.. இன்னும் அதி விளக்கேற்றவில்லை, பால் பழம் சாப்பிடவில்லை, அதற்குள் மேலே சென்றுவிட்டாளே.. இப்பொழுது அனைவரும் என்ன சொல்வார்களோ என பயந்து கொண்டிருக்க..

 

வேதவல்லி நினைத்தது போல் எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டனர்..

 

என்ன பேச்சியம்மை இது?

 

என்ன நடக்குது இங்க? நானும் ஆரம்பத்துல இருந்து பாத்துகிட்டு தான் இருக்கேன்.. அந்த புள்ள பெரியவங்களுக்கு மரியாதையே கொடுக்க மாட்டேன்குது.. என பேச்சியமையின் வயதையொத்த ஒருவர் கூறினார்.. 

 

நானும் கேட்க கூடாது தான் நினைச்சேன் ஆனா இங்க நடக்குறதையெல்லாம் பாத்தா சும்மா இருக்க முடியல.. அந்தப் பிள்ளை யாரு? அத பாக்குறதுக்கு அப்படியே நம்ம சின்ன வயசு மரகதம் மாதிரியே இருக்கு என மற்றொரு பெண்மணி கேட்டார்..

 

ஒருவர் ஆரம்பிக்க காத்திருந்தது போல் மற்றவர்களெல்லாம் அடுத்தடுத்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்..

 

அம்மையப்பன் குடும்பத்தின் பெண்கள் அவர்களின் கேள்வியை எப்படி சமாளிப்பது என தினறி கொண்டிருக்க.. அதனை உள்ளுக்குள் தோன்றிய அல்ப்ப மகிழ்ச்சியுடன் அலமேலு பார்த்து கொண்டிருந்தார்..

 

ஆண்களுக்கு இப்படியொரு சூழ்நிலையை சந்திக்க நேரும் என தெரிந்து தான் இருந்தது.. மெல்ல அனைவரிடமும் அதி பற்றிய விஷயத்தை சொல்லலாம் என அவர்கள் நினைத்திருந்தனர்.. 

 

அகத்தியனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. கையறு நிலையில் நின்று கொண்டிருந்தான்.. இல்லை அப்படி நிற்க வைத்துவிட்டாள் அவன் மனைவி..

 

தன் குடும்பத்தை உயிராய் நினைப்பவன் அவன், அவர்களுக்கு ஏதேனும் சிறு வருத்தம் ஏற்பட்டாலும் தாங்கி கொள்ள மாட்டான்.. ஆனால் இன்று ஆளாளுக்கு அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்பதை பார்த்து அவன் உள்ளம் வேதனையடைந்தது..

 

அவர்களை அவன் அடக்க முற்படும் பொழுது அமுதன் தடுத்தான்..

 

என்ன பண்ண போற மாமா..

 

என்ன கேள்வி இது அமுதா? இங்க என்ன நடக்குதுன்னு நீயும் பாத்துகிட்டு தானே இருக்க..

 

படம் பாக்குற மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் நல்லா கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.. என அவன் இழுத்தான்.. 

 

அப்பொறம் ஏன் என்ன தடுக்குற..

 

ஹ்ம்ம் இன்னைக்காவது அந்த ராட்சஷியை பற்றி முழுசா தெரியனும்ன்னு தான் தடுக்குறேன்.. எல்லாருக்கும் அதியபத்தி ஏதோ சந்தேகம் வந்துடுச்சு.. அவளை யாரு என்னன்னு விசாரிக்குறாங்க அவ்வளவு தானே.. அவங்க மூலமாவது நம்ம குடும்பத்துல புதைஞ்சுருக்க ரகசியம் வெளிவரட்டும் விடு.. கலகம் பொறந்தாதான் வழி பொறக்கும் என அமுதன் அமைதியாக சொன்னான்..

 

அதோடு மாமனையும் தன் கரத்திலேயே பிடித்து கொண்டான்.. 

 

மணிமேகலை கிருஷ்ணகுமாரும் பார்வையாளராக அமர்ந்து விட்டார்கள்.. மித்ரன் எப்பொழுது இங்கிருந்து செல்வோம் என்ற மனநிலையில் இருந்தான்..

 

மதுமித்ரா தன் நண்பனுடன் தனிமையில் பேசுவதற்க்காக காத்திருந்தாள்.. 

 

என்ன மரகதம் நாங்க கேட்டுகிட்டு இருக்கோம் நீங்க பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க.. என எரிச்சலுடன் சொன்னவரின் பேச்சு பாதியிலேயே நின்றுவிட, அவர் அதிர்வும் திகைப்புமாக எதிரே பார்த்து கொண்டிருந்தார்..

 

அவர் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் இருந்தனர்..

 

ஹை வெயிஸ்ட் பிளாக் ஃபிட் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஒயிட் டாப் அதன் மேலே டெனிம் ஜாக்கெட் அணிந்து, ஹை ஹீல்ஸ்சுடன் படியிறங்கி கொண்டிருந்தாள்.. அதி.

 

இவளுக்கு இன்றுதான் திருமணம் ஆகியது என சத்தியம் பண்ணி சொன்னாலும் நம்பமாட்டார்கள்.. அப்படியிருந்தது நம் அதியின் கோலம்..

 

சோபாவில், அபயின் மற்றொரு பக்கம் அமர்ந்து, ஹப்பா இப்போதான் ஃப்ரீயா இருக்கேன் அபி.. சிற்பி எப்படித்தான் நாள் முழுக்க இப்படி சேரில இருக்களோ.. என்னால ஒன்னவர்க்கு மேல தாங்க முடியல.. என கழுத்தை இருப்பக்கமும் நெளித்தவாறு சொன்னவள்..

 

நான் இப்படியே வந்துருக்கலாம் ஆன்ட்டியும் சிற்பியும் சேர்ந்து எனக்கு அந்த புடவைய சுத்தி விட்டுட்டாங்க.. என அலுப்பும் சலிப்புமாக சொல்ல.. சிற்பிகா அதை கட்டிவிடும் முன் தாங்கள் பட்ட பாட்டை நினைத்து பெருமூச்சு விட்டாள்..

 

அதோடு இப்பொழுதே இப்படி பார்ப்பவர்கள் திருமணத்திற்கும் அவள் இவ்வுடை அணிந்திருந்தாள் அவ்வளவு தான்.. என சிற்பிகா நினைத்து கொண்டாள்..

 

அதியும் அபயும் தாங்கள் மட்டும்தான் அம்மாளிகையில் இருக்கிறோம் என நினைத்து, அளவளாவிக் கொண்டிருந்தனர்… சிற்பிகா அமைதியாக அவர்களை பார்ப்பதும் சுற்றியுள்ளவர்களை பார்ப்பதுமாக இருந்தாள்.. 

 

கண்டிப்பாக இருவரும் இங்கு ஏதோ பிரச்சனை செய்ய போகிறார்கள் என அவர்களின் செயல்களிலேயே புரிந்து கொண்டவள், அனைவரையும் பாவமாய் பார்த்தாள்.. 

 

இந்தாமா பொண்ணே உனக்கு கொஞ்சமாச்சும் நெஞ்சுல பயம் இருக்கா.. இன்னைக்குத்தான் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்துருக்க.. அதை மனசுல வை.. என அவளின் போக்கு பிடிக்காத வயதான பெண்மணியொருவர் சிடுசிடுக்க.. அதி அவரையே அழுத்தமாக பார்த்தாள்..

 

ஹக்கும் இந்தா ஆரம்பிச்சுட்டாங்க.. இனி எல்லாம் அமோகமா இருக்கும் பாரு மாமா என அமுதன் சொல்ல, அகத்தியன் பதட்டமாக அதியை பார்த்தான்.. 

 

அதியின் பார்வையில் அவளை பற்றி நன்கு அறிந்திருந்தவர்களுக்கு, உள்ளுக்குள் குளிரெடுக்க தொடங்கியது..

 

என்னமா உடுப்பு இது, கழுத்துல உள்ள கயிரோட மஞ்சள் ஈரம் காயல அதுக்குள்ள இப்படியொரு கோலத்துல நிக்குற.. பொட்டில்லாம பூவுல்லாம, நெத்தியில வச்ச குங்குமத்தையும் அழிச்சிட்டு வந்துருக்க.. இது எவ்வளவு பெரிய அபசகுணம் தெரியுமா என மற்றொருவர் கேட்க, வேதவல்லி உள்ளுக்குள் தன் மகனை நினைத்து துடிதுடித்து போனார்..

 

உன் பொண்டாட்டி இன்னைக்கு ஏதோ நல்ல மூடுல இருக்குற தால, இந்தளவுக்கு நாகரிகமா ட்ரெஸ் போட்டுருக்கான்னு அந்த அத்தைக்கு தெரியல மாமா என அதியின் உடைகளையெல்லாம் நினைத்து அமுதன் கேலியாக கூற, அகத்தியன் முறைத்தான்.. 

 

ஏய் ஒருநிமிசம் இருங்கப்பா.. மொதல்ல இந்த புள்ளயோட பொறந்த வீட்டு வகையறா யாரு.. இந்த பொண்ணு எப்படி அச்சு அசப்புல நம்ம மரகதம் மாதிரி இருக்கு.. அத மொதல்ல கேளுங்க.. என ஒரு பெரிசு சொல்ல.. அமிர்தமும் பவளமும் உள்ளுக்குள் பயந்தனர்..

 

இந்தா விசயத்துக்கு வந்துட்டாங்கள்ள.. என அமுதன் கூலாக சொல்ல.. அதற்கு மாறாக அகத்தியனின் மனம் பரபரத்து கொண்டிருந்தது..

 

இத்தனை நேரம் அதியின் அலங்காரத்தில் மற்றவர்கள் இப்பேச்சினை மறந்திருக்க, மீண்டும் கேட்க ஆரம்பித்தார்கள்..

 

இப்போ என்ன அதி யாருன்னு தெரியனும் அவ்வளவு தானே.. என திருநாவுக்கரசு சத்தமாக கேட்கவும் அவ்விடம் அமைதியாகியது..

 

அமிர்தம் கோபமும் தவிப்புமாக தன் கணவனை பார்த்தாள்.. எந்த உண்மை யாருக்கும் தெரிய கூடாது என நினைத்தாளோ, அது எல்லாம் மெல்ல மெல்ல வெளி வரத் தொடங்கிவிட்டது.. அதனை தடுக்க முடியாத இயலாமையில் அவர் நின்று கொண்டிருந்தார்..

 

அதியின் விஷயத்தில் ஆதி முதல் அந்தம் வரை அவருக்கு தெரியும்.. அவரின் தங்கை பவளத்திற்கு கூட பல விஷயங்கள் தெரியாது.. அது மட்டும் அவருக்கு தெரிந்தால் என்ற நினைப்பே அமிர்தத்தை நடுங்க செய்தது..

 

அவரின் பக்கத்திலிருந்த பவளம் அமிர்தத்தின் நடுக்கத்தை தவறாக புரிந்து கொண்டு, ஆறுதலாக தமக்கையின் கரத்தை பவளம் பிடித்தார்..

 

அமிர்தம் பவளத்தின் பரிவில் உள்ளுக்குள் மரித்து போனார்.. உண்மை தெரிந்த பிறகு தங்கையின் கோபத்தை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ என நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார்.. 

 

சொந்த பந்ததோடு அவ்வீட்டின் வாரிசுகளும் அவரின் பதிலுக்காக ஆர்வமாக நின்றனர்..

 

அதி, அதிமதுராந்தகியம்மை இந்த வீட்டோட, நாகநாதன் வம்சத்தோட மூத்தவாரிசு.. என்ற திருநாவுக்கரசு, அவள் என் மகள் என சொல்ல முற்படும் பொழுது..

 

என்னோட மூத்த மக.. எனக்கு பொறந்த, என்னோட ரத்தத்துல பொறந்த மக.. என் மகள் அதிமதுராந்தகியம்மை, என்னோட மதுகுட்டி என நெகிழ்வும் தழுதழுப்புமாக அதியையே பார்த்தவாறு கூறினார் திருச்செல்வம்.. அவரின் விழிகள் இரண்டும் கலங்கி சிவந்திருந்தது..

 

அவர் சொன்னதை கேட்டு மொத்த பேரும் அதிர்ந்து போனார்கள்.. அமுதனும் அகத்தியனும் இதனை ஓரளவு எதிர்பார்த்து இருந்ததால் அவர்களின் முதற்கட்ட அதிர்ச்சி தெளிந்து, அடுத்து என்னவோ என திருச்செல்வத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்..

 

பவளம் கணவனின் பேச்சு புரியாத மழலையாய் முழித்துக் கொண்டிருந்தார்.. தான் கேட்டது உண்மையா இல்லை, தவறாக தன் செவியில் விழுந்து விட்டதோ என்ற தவிப்புடன் அவரையே பார்க்க, மனைவியின் அலைபுருதலை காண முடியாது திருச்செல்வம் வேதனையும் வலியுமாக தலை குனிந்தார்.. அவரால் பவளத்தை எதிர்கொள்ள முடியவில்லை.. 

 

பவளம் கணவனின் செய்கையில் அவரையே விழிகளில் வழியும் கண்ணீருடன் வெறித்து கொண்டிருந்தவர்.. தன் தமக்கையின் முகத்தை பார்க்க.. அமிர்தம் தங்கையின் பார்வையை எதிக்கொள்ள இயலாமல் தலை குனிந்தார்..

 

பவளத்தின் கடைசி நம்பிக்கையும் பொய்த்து விட நின்ற இடத்திலேயே அமர்ந்து விட்டார்.. அவரின் பார்வை விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. 

 

அதி திருநாவுக்கரசுவின் பெண் என்று தான் அவளுக்கு சொல்லியிருந்தார்கள்.. ஆனால் இங்கு நடப்பது எல்லாம் அவர் முற்றிலும் எதிர்பாராதது..

 

செல்வம் என திருநாவுக்கரசு தன் தம்பியை அதட்ட,

 

இப்போவாவது என்னை பேச விடுண்ணே.. இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்ன, அம்மா பவளம் குடும்பம்ன்னு சொல்லி எல்லாரும் என் வாய அடச்சுட்டிங்க..

 

அப்போ நானும் கோழையா, ஊமையா, நின்னதுனால என் பொண்ணு என்னை விட்டு பிரிஞ்சா.. அன்னைக்கே என் பாதி உசுரு போயிடுச்சு..

 

இப்பவும் அந்த தப்ப நான் செய்யறதா இல்ல.. என அழுத்தமாக கூறிய என திருச்செல்வம் தன் பிள்ளைகளையும் சொந்த பந்தங்கள் அனைத்தையும் பார்த்து, இப்போ உங்களுக்கு அதி யாருன்னு தெரிஞ்சுடுச்சுல என கூறியவர்.. தன்னுடைய அன்னை தந்தை அறைக்கு சென்று ஓர் புகைப்பட சட்டத்தை எடுத்து வந்தார்..

 

அதை மென்மையாக வருடி அதியை ஓர் பார்வை பார்த்தவர் புகைப்பட சட்டத்தை சுவற்றில் மாட்டினார்..

 

அதில் ஐந்து வயது அதி, கோழி குண்டு கண்கள் மின்ன, பால் வெள்ளை சிரிப்புடன், திருச்செல்வத்தின் கழுத்தை இரு கரங்களாலும் கட்டிக் கொண்டிருப்பது போல் இருக்க, அவரும் தன் மகளை பாசமாக அணைத்து கொண்டிருந்தார்..

 

அனைவரும் அப்புகை படத்தையே பார்த்து கொண்டிருந்தனர்.. சிறுவயது அதி முகம் கொள்ளா சிரிப்புடன் கொள்ளை கொள்ளும் அழகில் இருந்தாள்.. திருச்செல்வம் முகத்தில் தந்தையின் பாசம் அபரிமிதமாய் இருந்தது.. மொத்தத்தில் அப்புகைப்படம் பார்ப்பதற்கெ கவிதையாய் இருந்தது..

 

யப்பா திரு அந்த புள்ள உன்னோட பொண்ணுன்னு சொல்ற.. அது சரிதான் ஆனா அந்த புள்ளையோட அம்மா யாரு.. என ஒருவர் கேட்க, அங்கு மீண்டும் ஓர் அமைதி நிலவியது..

 

அதி என்னோட முதல் மனைவி மணிமேகலைக்கும் எனக்கும் பொறந்த பொண்ணு.. பவளத்துக்கும் எனக்கும் கண்ணாலம் ஆகுறதுக்கு முன்னாடியே நாங்க பிரிஞ்சுட்டோம்.. அவங்களும் வேறொரு வாழ்க்கைக்குள்ள போயிட்டாங்க என அமைதியாக கூறினார்.. அவர் பார்வை பவளத்தை பார்க்க.. அவரோ சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தையே வெறித்து கொண்டிருந்தார்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!