அம்மையப்பன் 9
எனக்கு இருப்பத்தியேழு இல்ல இருப்பத்தியெட்டுல தான் கண்ணாலம் பண்ணிக்கணும்ன்னு எண்ணம் அமுதா.. அப்பாறும் அப்பத்தாவும் சாதகம் அது இதுன்னு சொல்லி உன்ற அத்தைய எனக்கு கட்டி வச்சாங்க.. என மென்புன்னகையுடன் தொலைதூரத்தை பார்த்தவாரு சொன்னான் அகத்தியன்.. அப்புன்னகையில் மெல்லிய சோகம் இளையோடிக் கொண்டிருந்தது.. அமுதனும் சரவணனும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர்.. அவனின் சோகம் அவர்களையும் பாதித்தது..
ஐந்து நிமிடம் அமைதியாக நின்றவன்.. சட்டென விழி மூடி சிரத்தை உலுக்கி.. தன்னை ஆட்கொண்ட பழைய நினைவுகளையும் வேதனைகளையும் சற்று ஒதுக்கிவைத்து.. அமுதனிடம் தன் கவனத்தை பதித்தான்..
குழலி காலேஜ் படிப்பு முடிக்கட்டும்.. நீயும் அடுத்து என்னன்னு பாரு.. அப்பொறம் கண்ணலாம் பத்தி யோசிக்கலாம்.. என அமுதனின் தலையை வருடி மென்மையாக கூற..
உள்ளுக்குள் தன் மாமனை எண்ணி வேதனையடைந்தாலும்.. ம்ம்ம்ம் ஏதோ பெரிய மனுசன் கெஞ்சி கேட்குறீங்க.. அதுனால என் மனச மாத்திக்கிறேன்.. என அமுதன் முகத்தை தூக்கி வைத்து சொல்லி.. மாமனின் மனநிலையை மற்ற முயற்சி செய்து.. வெற்றியும் கண்டான்..
சரிடா இங்கன வேலை இருக்கு.. நீங்க கிளம்புங்க.. நான் அப்பொறம் வூட்டுக்கு வரேன்.. என சரவணன் கிளம்ப.. இவர்களும் வீட்டிற்கு சென்றனர்..
மாளிகையின் உள்ளே நுழையும் பொழுதே அமுதனின் கண்கள் தன்னவளைக் கண்டு கொண்டது.. அமுதன் எப்போது குழலியின் மேல் உள்ள காதலை உணர்ந்தானோ அன்றிலிருந்து.. அவளை தூரம் நின்றே ரசித்து கொண்டிருந்தான்.. அவளிடம் வம்பு செய்வானே அன்றி காதல் மொழிகள் பேசியதில்லை.. விழியால் மட்டுமே தன்னை உணர்த்தி கொண்டிருந்தான்.. அதுவும் அவள் பதினோராம் வகுப்பு சென்ற பின் அவள் உடன்படிக்கும் பையன் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்த பிறகு தான்.. அவளுக்கு தன்னை உணர்த்தினான்..
இப்பொழுது அகத்தியனிடம் பேசியதிலிருந்து மேலும் தெளிந்தவன்.. தன்னவள் படிப்புக்கு இடையூர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டான்..
****************************
குழலி ஷாலினிக்கு பொதுத்தேர்வுகள் ஆரம்பித்து விட்டன.. இன்றைக்கு தான் முதல் தேர்வு..
அம்மணி கிளம்பிட்டிங்களா.. என அகத்தியன் கேட்டான்..
ம்ம்ம்ம்.. கிளம்பிட்டேங் ஐயா.. என குழலி மட்டும் வர ஷாலினி காணவில்லை..
ஏய் குள்ளச்சி நீ மட்டும் வர ஷாலு எங்க.. எனக்கேட்டான் அமுதன்…
அவ அப்போவே கீழ வந்துட்டாளே என்றாள்..
அமுதா உன்ற தங்கச்சி காலைல இருந்தே சாமியறைக்குள்ளத்தான் இருக்காய்யா.. என்றார் வேதவல்லி..
சாமிகிட்ட எப்படியாவது பாஸ் பண்ண சொல்லி உருண்டுக்கிட்டு இருக்கா.. இம்புட்டு நேரம் இங்க சாமிக்கூட மல்லுக்கட்டிகிட்டு இருக்குறதுக்கு கொஞ்சமாச்சும் புத்தகத்தை எடுத்து வச்சு படிக்கலாம்.. என்னத்த சொல்ல.. என கடுப்பாக கூறினார்.. பவளம்
அப்பொழுது சரியாக பூஜையறையிலிருந்து வெளிவந்தாள் ஷாலினி.. நெற்றியில திருநீர் பட்டை அதன் நடுவில் குங்குமம்.. காதில் இருபக்கமும் பூ என பக்தி பழமாய் வெளியே வந்தவளைக் கண்டு அங்கிருந்தவர்கள்.. அவளை அதிர்ச்சியாகவும் சிரிப்பாகவும் பார்த்தனர்..
அடியே என்ன கோலம்டி இது.. என நொந்து போயி கேட்டார் பவளம்..
அம்மா வாயில போடுங்க.. இது கோலம் இல்ல.. பக்தி.. இது நம்ம குலசாமி துன்னூறு.. இது நம்ம காளி கோவில் குங்குமம்.. நான் பரீட்சைக்கு போகும் போது இவங்களையும் கூட்ட்டி போறேன்..
துன்னூறு குங்குமம் ஓகே ஷாலு.. அதென்ன ரெண்டு சைடும் சொருகியிருக்க பூவு என சிரிப்பாக கேட்டான் அமுதன்..
இந்த பூவு நம்ம வூட்டு சரஸ்வதிபடத்துல இருந்தது.. ஒருவேளை பரீட்சையில நான் படிச்சது மறந்துட்டா.. இல்ல படிக்காதது வந்துட்டா.. அதான் சரஸ்வதி சாமி மேல இருந்த பூவ எடுத்து காதுல வச்சுருக்கேன்.. அவங்க எனக்கு இந்த பூவு மூலமா உதவி செய்வாங்க என்று சொன்னாளே பார்க்கலாம்.. பவளம் அதிர்ந்து நின்ற இடத்தினிலேயே உட்கார்ந்து விட்டார்..
குழலி அமுதன் அதற்குமேல் சிரிப்பை அடக்க முடியாது வெடித்து சிரித்து கொண்டிருக்க.. பெரியோர்களும் அவளை சிரிப்பும் செல்ல முறைப்புமாய் பார்த்து கொண்டிருந்தனர்..
போதும் போதும் நிறுத்துங்க.. பல்லு சுளுக்கிக்க போகுது.. என அவர்களின் சிரிப்பில் முகத்தை சுருக்கினாள் சின்னவள்..
புன்னகையுடன் ஷாலினி அருகே வந்த அகத்தியன் அவளின் நெற்றியில் அதிகப்படியாக இருந்த திருநீரை அழிக்க.. ஷாலினி அலறினாள்..
அச்சோ மாமா என்ன பண்ணுறீங்க..
நாம கொஞ்சூண்டு வச்சாலே சாமி நம்ம துணைக்கு வரும் கண்ணு.. என மென்மையாக கூறியவன்.. மருமகளின் நெற்றியில் மெல்லிய கீற்றாக இரண்டையும் விட்டு.. மற்றதை துடைத்து விட்டான்.. அதனோடு காதில் இருந்த பூவை.. இரட்டை ஜடையில் அழகாக வைத்துவிட.. ஷாலினி அவனை உதட்டை பிதுக்கி பார்த்தாள்..
சேட்டைகார அம்மணி என வழக்கம் போல் அவள் மூக்கை ஆட்டினான்.. அதில் அவளுக்கும் புன்னகை பூத்தது..
அக்கா புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுங்க.. என அகத்தியன் சொல்ல.. பவளம் மகளை முறைத்துக் கொண்டே சென்றார்..
ஒருவழியாக இருவரும் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொண்டிருந்தனர்.. அமுதன் இவர்களின் முதல் பரீட்சைக்காக நேற்று இரவு கோவையிலிருந்து வந்திருந்தான்.. இப்பொழுது அவனும் கல்லூரி செல்ல வேண்டும்..
ரெண்டு பேரும் நல்லபடியா எழுதுங்க.. அம்மு பார்த்து டென்சன் ஆகாம எழுது.. உன்னால முடிஞ்ச அளவுக்கு எழுது போதும்.. ஆல் த பெஸ்ட் என இருவருக்கும் பல அறிவுரைகளுடன் வாழ்த்து கூறினான்..
அகத்தியன் அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல.. ஆண்கள் அனைவரும் தங்களின் வேலைகளை பார்க்க கிளம்பினர்..
அமுதா நான் இன்னைக்கு கோவைதான் போறேன்.. என்னோட காருல வந்துடுறியா.. என கேட்டார் திருநாவுக்கரசு..
இல்லீங் ஐயா.. நான் பைக்குலையே போயிடுறேன்.. அதுதான் எனக்கு தோதுபடும் என கிளம்பினான்..
ஆண்கள் அனைவரும் வெளியே செல்ல.. அம்மையப்பன் அறைக்குள் ஓய்வெடுக்க சென்றார்.. வயோதிகம் காரணமாக.. அவர் அதிகம் வெளியே செல்வதில்லை..
பேச்சியம்மை மற்ற பெண்களுடன் கூடத்தில் அமர்ந்தார்.. இவளை எந்த நேரத்துல பெத்தேன்னு தெரியலம்மா.. இப்படி போட்டு படுத்துறா.. என பவளம் புலம்பிக் கொண்டிருந்தார்.. இப்போது மட்டுமல்ல அவள் தேர்வுகள் முடியும் வரை ஏதாவது செய்து பவளத்தின் பிபியை எகிறவைத்து கொண்டிருந்தாள்..
அம்மா இந்த விளம்பரத்துல காமிக்கிற மாதிரி புத்தகத்தை மிக்சில போட்டு ஜுஸ் போட்டு தாங்கம்மா.. அப்போ சுலவமா நான் பாசாயிடுவேன்.. என இதுபோல் பல கிறுக்குதனங்களை செய்து பவளத்தை தலையால் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.. அவரும் பரீட்சை முடியும் வரை அவள் மேல் கைவைக்க முடியாது தவித்து கொண்டிருந்தார்.. ஏனெனில் இவர் சிறிதாக அடித்தாலும் அதனை பெரிதாக பாவித்து.. பரீட்சையே எழுத முடியவில்லை என சொல்லுவாள்.. அதற்காகவே அவள் செய்யும் அனைத்தையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துகொண்டிருந்தார்..
ஒருவழியாக பரீட்சை முடிய.. ஷாலினி குழலியை விட பவளம் தான் அதிகம் நிம்மதியடைந்தார்..
************************************
ஒருமாதம் ஓடிவிட்டது.. இன்று பொதுதேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன.. குழலி சாதாரணமாக இருக்க.. ஷாலிக்கு உள்ளுக்குள் சற்று பதட்டம் இருந்தாலும் வெளியில் அதனை காண்பிக்கவில்லை.. அவள் அன்னை வேறு அடிக்கடி அவளை குறுகுறுவென பார்க்க.. ஷாலினி வியர்த்து வழிந்தாள்..
பத்து மணி ஆகிவிட்டது.. அனைவரும் கூடத்தில் இருந்தனர்.. அமுதன் தன் லேப்டாப்பில் இருவரின் மார்க்குகளையும் பார்க்க முயற்சித்து கொண்டிருந்தான்.. சர்வர் முழுவதும் பிஸியாக இருந்ததால் தாமதம் ஆகியது..
ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு.. குழலியின் எண்ணை போட்டான்.. அதுவரை சாதாரணமாக இருந்த குழலி.. இப்பொழுது சற்று பதட்டமும் படபடப்புமாக தந்தையின் கரத்தை அழுத்த பற்றினாள்..
அகத்தியன் மகளின் பதட்டம் கண்டு.. அவளின் தலையை வருடி அமைதி படுத்தினான்..
ஏய் குள்ளச்சி என்னடி இப்படி மார்க்கு வாங்கிருக்க.. உன்கிட்ட இத நான் எதிர்பார்க்கல என அமுதன் அதிருப்தியாக சொல்ல.. குழலியின் விழிகள் கலங்கவிட்டது..
அமுதா என அழுத்தமாக அகத்தியன் அழைக்க.. அவன் வாய் பட்டென மூடிகொண்டது.. ஈஈஈ சும்மா விளையாட்டு மாமா என மாமனை பார்த்து இளித்தவன்.. அடியே உடனே நொழுவாதா உன்ற ஐயன் என்னை மொறக்குறாரு.. என குழலியை அதட்டினான்.. ஆனாலும் அவள் விழியின் கலக்கம் அப்படியே இருந்தது..
ஹேய் குள்ளகத்திரிக்காய்.. நீ பாசாகிட்ட.. உன்னோட மார்க்க பாரு.. எனக்கு தெரிஞ்சு நீதான் ஸ்கூல் பர்ஸ்ட்ன்னு நினைக்கிறேன்.. 1195 மார்க் எடுத்திருக்க.. என அமுதன் மகிழ்ச்சியாக சொல்ல.. குழலி சிரிப்பும் முறைப்புமாய் அவனை பார்த்தவள்.. தந்தையின் தோள் சாய்ந்து அவரை பார்த்து புன்னகைத்தாள்..
ஏன்டா இப்படி இருக்க.. கொஞ்ச நேரத்துல அவளை அழுக வச்சுட்ட.. என அமிர்தவல்லி தன் மகனை கண்டித்தார்..
ஹக்கும்.. நான் சும்மா சொன்னேன்.. அதுக்கே உங்க மருமக டேம்ம ஓபன் பண்ணா அதுக்கு நானா பொறுப்பு.. என அமுதன் நொடித்து கொண்டான்..
டேய் வாய அடக்கிட்டு ஷாலுவோட நம்பர போடு.. என்றான் அகத்தியன்..
ஷாலுவின் நம்பரை போட.. அனைவரும் பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.. ஏனெனில் குழலியை பற்றிய கவலை இல்லை.. அவள் எப்படியும் பாசாகி விடுவாள்.. அதனால் ஷாலினியை குறித்து தான் அனைவரும் கவலை பட்டுக் கொண்டிருந்தனர்.. அவளின் நேரமோ என்னமோ சர்வர் மீண்டும் சதி செய்து.. சுற்றிக் கொண்டே இருந்தது..
ப்ச் என்னடா வந்துச்சா இல்லையா என பவளம் கத்த.. குழலி சுற்றி முற்றி பார்த்தாள்.. அவள் நினைத்தது போல் ஷாலினியை காணவில்லை..
ஐயா.. வழக்கம் போல் அவ எங்கையோ போயி ஒழிஞ்சுகிட்டா.. என தந்தையின் காதை கடித்தாள்.. கார்குழலி
அகத்தியன் புன்னகையுடன் தன் விழிகளை அலசினான்.. இதோ வந்துடுச்சு என அமுதன் கூறவும் அனைவரும் அவனையே பார்த்தனர்..
தங்கச்சி பாசயாகிடுச்சுங் ம்மா.. என அமுதன் சொல்ல.. எல்லாரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கொண்டனர்..
பவளம் என்ற பேத்திய பத்தி புலம்பிகிட்டே கிடப்ப.. பாரு என்ற பேத்தி பாசாகிட்டா.. என மரகதம் பெருமிதமாக சொன்னார்..
ஹக்கும்.. ரொம்ப பெருமதான்.. இருங்கத்தே உங்க பேத்தி மொத எவ்வளவு மார்க்கு எடுத்திருக்கான்னு பாப்போம்.. என பவளம் நொடித்தார்..
அடேய் எவ்வளவு மார்க்குடா என அமுதனை கேட்க.. அவன் விழித்தான்..
என்னடா.. என்ன முழிக்குற..
ஹ்ம்ம்.. 650 ம்மா.. என அவன் மெல்லிய குரலில் சொல்ல.. பவளம் முகம் கோபமாக மாறியது..
பாத்திங்களா.. உங்க பேத்தி எடுத்திருக்க மார்க்க.. எழுநூறுக்கு மேலையாவது எடுத்திருக்கலாம்.. எங்க அந்த கழுதை என அவளை தேட.. அங்கு அவள் இருந்ததற்க்கான அடையாளமே இல்லை..
ஒழிஞ்சுக்கிட்டாளா.. அடியே எங்கன இருக்க ஒழுங்கா வெளியேவந்துடு.. என பவளம் கத்த அவளோ அம்மையப்பன் அறையினுள் பதுங்கி இருந்தாள்.. அனைத்தும் அவள் செவியினுள் விழத்தான் செய்தது.. எப்படியோ பாஸ் பண்ணியாச்சு என நிம்மதி கொண்டவள்.. அன்று முழுவதும் பவளத்தின் கண்ணில் படாமல் அங்கையே தங்கிவிடலாம் என திட்டம் போட்டுவிட்டாள்..
கழுதை எப்படி இருந்தாலும் இங்கன வந்துதானே ஆகணும்.. அப்போ பின்னிடுறேன்.. என சத்தம் போட்டவாறே.. இனிப்பு செய்வதற்காக சமையலறை நோக்கி சென்றார்..
சற்று நேரத்தில் ஆவி பறக்கும் பாதாம் அல்வாவுடன் பவளமும் அமிர்தவல்லியும் வந்தனர்.. அல்வாவின் வாசனை ஷாலினி வரைக்கும் வந்தது.. அவள் குட்டி போட்ட பூனையாய் சுற்றினாள்..
அய்யோ.. அல்வா வாசம் அள்ளுதே.. வெளிய போவோமா.. ஐயனும் அங்க இருக்காரு.. அவங்க முன்னாடி அம்மா அடிக்க மாட்டாங்க.. என ஷாலினி யோசிக்கும் பொழுது.. திருச்செல்வத்தின் குரல் கேட்கவும்.. கதவோரம் வந்து நின்றாள்..
அம்மணி வெளியே வாத்தா.. ஆத்தா ஒன்னும் பண்ண மாட்டாங்க என திருச்செல்வம் சத்தமாக அழைக்க.. இதுதான் சாக்கென்று.. மின்னலென தந்தையின் அருகே வந்தாள் ஷாலினி..
கோட்டிகழுதை.. நீ உன்ற ஆத்தாக்கு ரொம்ப பயந்தவ தான்.. என பேச்சியம்மை இழுத்து கூற.. ஷாலினி பல் தெரிய இளித்து.. பாதாம் அல்வாவை கபளீகரம் செய்ய ஆரம்பித்தாள்.. பவளம் அவளையே சிரிப்பும் முறைப்புமாய் பார்த்தார்..
குழலி உனக்கு என்ன படிக்கணும்னு விருப்பம்.. என கேட்டான் அமுதன்..
பிசினஸ் சம்பந்தமா ஏதாவது படிக்கணும் மாமா.. அப்பொறம் MBA படிச்சுட்டு ஐயனுக்கு ஹெல்ப் பண்ணனும் என குழலி சொல்ல.. அகத்தியன் தன் மகளை பெருமையும் கர்வமுமாக பார்த்தான்..
அம்மணி நீங்க எனக்கு உதவி செய்ய நினைக்கிறதெல்லாம் சந்தோசம் தான்.. அதுக்கு பிஸ்னஸ் கோர்ஸ் தான் படிக்கணும்னு அவசியம் இல்ல.. எது படிச்சாலும் நீங்க எனக்கு உதவியா இருக்கலாம்.. அதுனால உனக்கு என்ன படிக்க விருப்பம்.. எது உன் மனசுக்கு பிடிச்சுருக்குனு சொல்லு அம்மணி என்றான்..
குழலி யோசித்தாள்.. அவள் மனதுக்கு பிடித்தது என யோசிக்கும் பொழுதே அவர்களின் தோட்டம் அவள் நட்ட ரோஜா செடிகள்.. கொடிகள்.. என அனைத்தும் உலா வர.. அவள் விழிகள் பளிச்சிட்டது..
அதில்லையே மகள் அவள் விருப்பத்தை தெரிந்து கொண்டாள் என புரிந்த அகத்தியன்.. மகளை கேள்வியாக நோக்கினான்.. தாவரவியல் பத்தி படிக்க போறேங்க ஐயா என சொல்லவும்.. அகத்தியன் மகளை மென்புன்னகையுடன் பார்த்தான்.. இது அவன் எதிர்பார்த்தது தான்.. குழலியின் பிடித்தம் செடி கொடிகள் தான் என்று அவனும் அறிவானே..
சரி மாமா.. குழலிக்கும் ஷாலினிக்கு எங்க காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்கிடுறேன் ரெண்டு பேரையும் அங்கையே சேர்த்துக்கலாம்.. யாழினி கூட ஹாஸ்ட்டல்ல இருந்துக்கட்டும்.. என அமுதன் சொல்ல.. அகத்தியன் முகம் யோசனையாகியது..
மாமா.. நான் ஊட்டில படிக்கிறேன்.. தினமும் வந்து போற மாதிரி.. என குழலி சொல்ல அமுதன் மறுத்தான்..
ஊட்டிக்கெல்லாம் விடமுடியாது குழலி.. அதோட ஷாலினி நினைக்கிற படிப்பு அங்க கிடையாது.. கோவைல தான் இருக்கும்.. உன்ன ஒரு இடத்துலயும் அவளை ஒரு இடத்துலயும் சேர்க்க முடியாது.. என கண்டிப்பாக கூறினான் அமுதன்.. அதில் முகத்தை சுருக்கிய குழலி தன் தந்தையை பார்த்தாள்..
ஏன் அம்மணி.. எதுக்கு கோவை வேணாம்ங்குறீங்க.. என அகத்தியன் கேட்டான்..
ஐயா எனக்கு உங்களை எல்லாம் விட்டுட்டு ஹாஸ்ட்டல்ல போய் இருக்க முடியாது என முகம் வாடி சொன்னாள்.. அகத்தியனுக்கும் அதில் விருப்பமில்லை என்பதால் யோசனை செய்தான்..
ப்ச் நீ இன்னும் சின்ன பிள்ளையா.. மாமா பின்னாடியே நிக்கிறதுக்கு.. வெளில போனாத்தான் நாலு நல்லது கெட்டது தெரியும்.. ஒரு தன்னம்பிக்கை வளரும்.. பிஸ்னஸ் பாக்கணும்ன்னு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. அதுக்கு நம்மள வளத்துக்கணும் குழலி.. என அமுதன் கூறினான்..
பெத்தவங்க கூட வளருற பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை இல்லாமயா இருக்கு.. என பதிலுக்கு கோபத்துடன் கேட்டாள்..
ப்ச் அந்த அர்த்தத்துல சொல்லல அம்மு.. நீ சின்னதுல இருந்தே வூட்டுக்குள்ள வளர்ந்த புள்ள.. இங்க உள்ள எல்லாரும் உனக்கு நல்லா தெரிஞ்சவங்க.. அதுவே உன்ன விடுதியில விட்டா நீ நாலு பேர புதுசா பாப்ப.. அதுல நல்லவங்களும் இருப்பாங்க கெட்டவங்களும் இருப்பாங்க.. நீ தான் பார்த்து நடந்துக்கணும்.. மொதல்ல உனக்கு மிரட்சியா இருந்தாலும்.. அதெல்லாம் சமாளிச்சுடலாம்னு ஒரு தைரியம் வரும்.. அது ஒரு தன்னம்பிக்கைய கொடுக்கும்.. என பொறுமையாக விளக்கினான்.. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.. இதற்கெ இப்படி அலறுபவளிடம் வேறு என்ன சொல்வது என அமைதியானான் அமுதன்..