சுகந்தி சத்யன், முல்லை அன்பரசு நால்வரும் சிவன் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசனம் முடிந்து, பிரகாரத்தை சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“என்னடா? ஜவுளிக்கடையே வைக்கலாம் போல?” என கிண்டலடித்தான் சத்யன்.
“ஆமா சத்யா. பத்து சர்ட்க்கு மேல எடுத்து வச்சிருக்கார்” என்றான் அன்பரசு.
“இந்த வயசுலயும் ஒரு ஆளா எவ்வளோ வேலை பார்த்திருக்கார்? பணத்தை வாரி இறைச்சிருக்கார் அன்பு. சாப்பாட்டை பாராட்டதவங்களே இல்ல” என்றான் வியப்போடு.
“போய் ரெஸ்ட் எடுங்கனு சொல்றேன், எனக்கு டையர்டாவே இல்லைன்றார்” என அன்பரசும் வியப்போடு சொன்னான்.
“முல்லை மேலயும் உன்மேலயும் அவ்வளோ பாசம் அன்பு” என்று சுகந்தி சொல்ல, “ம்” என ஒப்புகொண்டவன் தனது அண்ணிம்மாவை ஆராய்ந்தான்.
“குட் அண்ணிம்மா, முன்னலாம் நல்ல டிரஸ் பண்ணிக்க சொல்லி அத்தை படாத பாடு படுவாங்க. இப்போ சத்யனை கட்டிக்கவும் திருந்திட்ட” என்றான் மெச்சுதலாக.
“அவனை கட்டிக்கிட்டதால இல்ல, உன் கல்யாணத்தை என்ஜாய் பண்றேன்” என்றாள் சுகந்தி.
“ஹம்… எதோ ஒன்னு” என சிரித்தவன், “ஆமா… நீ எதுக்குடா கோவிலுக்கு வந்திருக்க? நந்தி மாதிரி. இங்க இருக்க கோவிலுக்கு எனக்கு வரத்தெரியாதா?” என்றான் கோபம்போல்.
“அச்சோ என்ன இப்படி பேசுறிங்க” என முல்லை பதற, “உண்மையைத்தான சொன்னேன்” என்றான் சிரிப்போடு.
“இன்னைக்கு நல்ல நாளாச்சே, சரி நாமளும் கோவிலுக்கு வந்து தரிசனம் பண்ணிட்டு போலாம்னு வந்தேன், இது ஒரு குற்றமா?” என சிரித்தான் சத்யன்.
சத்யனின் நன்னடத்தையால் அவனின் இரட்டை அர்த்த பேச்சுகள் ஏதும் தப்பாகவே தெரியவில்லை சுகந்திக்கு. ஆனால் அன்புக்கு சந்தோசமாகிட “குற்றமேயில்ல சாமி. நீ நல்லா தரிசனம் பண்ணு” என்றான் சிரிப்போடு.
“இதுல இளிக்க என்னடா இருக்கு? இருக்குறது கோவில். இத்தனை பேர் சுத்தியிருக்காங்க, நாங்க இருக்குறதுதான் உனக்கு தொல்லையா போச்சா?” என அன்பரசை முறைத்தாள் சுகந்தி.
“இது மட்டுமா? சாயங்காலம்தான வரேனு சொன்னிங்க? அப்புறம் எதுக்கு கிளம்பின ஒரு மணி நேரத்துல வந்து நின்னிங்க?”
“அடப்பாவி, கோட்சூட்டோட இருப்பியேனு மாத்திக்க துணி கொண்டு வந்தேன் பாரு, என்னை சொல்லனும்” என்றாள் சங்கடமாக.
“சரி சரி விடு அண்ணிம்மா, ரொம்ப ஃபீல் பண்ணாத. தூங்கலாம்னு அப்போதான் படுத்தேன், நீ வரவும் தூக்கம் போச்சா? அதான் கோப்பப்பட்டுட்டேன்” என்றான் சிரிப்போடு.
“நீ வாடா நாம போலாம். அப்படியொன்னும் இங்கயிருக்க வேணாம், அதான் சாமி கும்பிட்டாச்சில்ல?” என சத்யனை அழைக்க, “போலாமே… உன் விருப்பம்தான் எனக்கு முக்கியம்” என எழுந்து சுகந்தியோடு நடந்தான் சத்யன்.
“மாமா எதாவது நினைக்கப்போறார், நாமளும் போலாமே” என முல்லை சொல்ல, “ம்” என எழுந்தவன் முல்லைக்கு கை கொடுக்க, தானே எழுந்தாள்.
“முல்லை” என இவன் ஏக்கமாக அழைக்க, இவள் சங்கடமாய் பார்க்க, “ஆக்சுவலா இன்னைக்கு ஈவ்னிங் நான் கிளம்பியாகனும். டைரக்டர்கிட்ட வேற சீன் எடுக்க சொல்லி ரிக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டேன்” என்றான்.
முதலிரவிற்காக என முல்லை முகம் சிவக்க, தவித்தவன், “ஹேய்… குண்டுமல்லி, நான் சொல்றதை முழுசா கேளு” என அதட்டி, “எனக்கு அவசர அவசரமாலாம் வேணாம். அனுபவிச்சு வாழனும்” என்றான் ரசனையாக.
“வாழுங்களேன், யார் வேணாம்னா?” என அதற்கும் முல்லை சிலிர்க்க, ‘படுத்துறாளே’ என மனதினுள் கடிந்தவன் “சும்மா பேசுறதுக்கெல்லாம் சிலுத்துக்குவியா?” என்றான் முறைப்போடு.
“நான் என்ன பண்ண? இப்படி பேச்செல்லாம் இப்போதானே புதுசா கேக்குறேன். தானா அப்படி ஆகுது” என்றாள் பாவமாக.
தற்போதும் முறைத்தவன், “இப்போ எடுத்திட்டிருக்க படத்தோட டைரக்டர் இரண்டு நாள் கழிச்சு வந்திடனும், ஹீரோ கால்ஷீட்டை மாத்திக்கமாட்டார்னு இன்விடேஷன் கொடுக்கும்போதே சொல்லியிருந்தார்.
இரண்டு மாசம் முன்ன முடிச்சு கொடுத்த படத்துல ஒரு சின்ன திருத்தம், அதுக்கு இன்னைக்குதான் டேட் கொடுத்திருந்தேன். ஆனா கல்யாணத்துக்கு அப்பா டேட் சொல்லும்போது இன்னைக்கு டேட்தான் அன்னைக்கு கொடுத்திருந்தேனு நியாபகமில்ல. நேத்து டைரக்டர் கால் பண்ணவும்தான் நியாபகம் வந்தது.
அவர் ஃபாரின்ல இருக்கிறதால இன்விடேஷனும் வைக்கல. நமக்கு கல்யாணம்னு தெரியாம கூப்பிட்டுட்டார். ஷெட்லாம் ரெடி பண்ணியிருப்பாங்க, இன்னைக்கு போகலனாலும் திரும்ப டேட் கொடுக்க எனக்கும் கஷ்டம். நான் ஒரு பனெண்டு மணிபோல கிளம்பிடுவேன். இப்போ சொன்னா அப்பா ரொம்ப கோப்பப்படுவார். கிளம்பும்போது சொல்லிக்கறேன். நீ ஏதும் காட்டிக்காத” என்றான் கட்டளையாக.
அப்படித்தான் நினைத்திருந்தான் அன்பரசு. ஆனால் முல்லை இன்றிரவை எதிர்பார்த்திருந்தால் அவளுக்கு ஏமாற்றமாகிடும் என்று தற்போதே சொன்னான்.
அதோடு மற்றொரு உண்மை காரணத்தையும் விளக்கிட எண்ணி, “இப்போவே அப்பாகிட்ட சொன்னா இன்னைக்கு கோவிலுக்கு வேணாம்னு சொல்லியிருப்பாங்க. நான் என்னைக்கு வீட்டுக்கு வரேனோ அன்னைக்கு உன்கிட்ட நெருங்க முடியாது.
திரும்ப நல்லநாள் பார்த்து கோவிலுக்கு போகனும்னு ஆரம்பிப்பாங்க. இன்னைக்கு நமக்கான சம்பிரதாயம் முடிஞ்சிட்டா அப்புறம் யாரும் கண்டுக்கமாட்டாங்க. இதுக்காகத்தான் யார்கிட்டயும் சொல்லல” என்றான்.
ஆத்தி… என்ன ப்ளான் என இவள் வியந்து பார்க்க, சிரித்தவன், “வா, சத்யன் நமக்காக வெய்ட்டிங்” என்று முல்லையை முன்னே நடக்கப்பணித்து இவன் பின் தொடர்ந்தான்.
“முல்லைக்காகத்தான் வெய்ட் பண்ணினோம்” என சுகந்தி ரோசமாக சொல்ல, “சரி முல்லையை கூட்டிட்டு போங்க, நான் நடந்து வரேன்” என்றான் சிரிப்ப்போடு.
“ஏறுடா, அப்பா கால் பண்ணிட்டே இருக்கார்” என சத்யன் அதட்ட பின்னே ஏறினான்.
கார் தனது வீட்டின் தெருவிற்குள் நுழையாமல் போகவே, “நான் இப்போ அங்க வரேனா?” என்றாள் படபடப்போடு.
“ம்” என அன்பரசு கண்ணிமைக்க, “அப்பாம்மா” என முல்லை முணுமுணுக்க, “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட்நைட்னால நம்மளோட வர சங்டப்பட்டுகிட்டு நாளைக்கு வரேனு சத்யன்கிட்ட சொன்னாங்களாம்” என இவனும் கிசுகிசுத்தான்.
முதலிரவென்றதும் கண்கள் படபடக்க, “ப்ச், அது மத்தவங்க பார்வைக்குத்தான? நான்தான் மிட்நைட் கிளம்பிடுவேனே” என எடுத்துரைக்க இயல்பானாள் முல்லை.
ஆனாலும் கணவன் வீட்டிற்கு முதன்முதலாய் வருவதால் மனம் இன்ப அவஸ்த்தையை கொடுக்க, சமாளிக்க முடியாமல், “எனக்கு மாத்திக்க டிரஸ் கூட எடுத்துக்கலயே” என்றாள் தவிப்பாக.
“எல்லாம் மதியமே வந்துடுச்சு முல்லை. அன்பு ரூம் கபோர்ட்ல இருக்கும்” என்றாள் சுகந்தி.
சரியென தலையசைக்க, “இறங்கு” என அன்பரசு இறங்கினான். பின்னே முல்லையும் இறங்க, “சுகந்தி அங்கையே நிற்க வை. இந்தா வந்துடறேன்” என்று குரல் கொடுத்தார் கல்பனா.
பின்னே ஆரத்தியோடு வெளிவே வந்து, “நீயே எடு” என்று தட்டை நீட்ட, வாங்கியவள் முகம் பதட்டத்திற்குள்ளானது. ‘கடவுளே… முல்லைக்கு கஷ்டமா இருக்கக்கூடாது’ என்று வேண்டியபடி சுற்றி பொட்டு வைத்து “உள்ள போங்க” என்றாள்.
சுகந்தியின் பதட்டத்தை அன்பரசு கவனித்த நேரம் சத்யனும் கவனித்திருந்தான். அன்பரசு மனைவியோடு உள்ளே சென்றிட, “என்னாச்சு?” என வாயிலிலேயே மனைவியை வழி மறைத்தான் சத்யன்.
“இல்லையே… ஒன்னுமில்லையே” என்றாள் பதட்டம் மறைத்து.
“சரி வா, முல்லைக்கு பூஜை ரூம் காட்டி என்ன செய்யனு சொல்லிக்கொடு” என்று இயல்புபோல உள்ளே சென்றான் சத்யன்.
உள்ளே செல்ல, அனு மற்றும் அவளின் குழந்தைகளும், ஜனனியும் சூழ்ந்து கொண்டனர் முல்லையை. “முல்லை இன்னைக்குத்தான நம்ம வீட்டுக்கு வந்திருக்கு… வாங்க எல்லாரும் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லலாம்” என்று குழந்தை பட்டாளங்களோடு முல்லையை பூஜையறைக்கு அழைத்து வந்தாள் சுகந்தி.
“அண்ணிம்மா… முதல்ல இங்க வா, அப்புறம் அங்க விளக்கேத்தலாம்” என்று அன்னை படத்தின் முன்னே நின்றான் அன்பரசு.
அனு முல்லையை அழைத்து வர, அன்னையை வணங்கியவன், பின்னே பூஜையறை சென்று விளக்கேற்றி வணங்கினர். அடுத்து என்னவோ என முல்லை மலங்க விழித்திருக்க, “ஏன்ம்மா பதட்டமா இருக்க? இது உன் வீடு” என பாசத்தோடு தேற்றினார் மாதவன்.
சரியென்பதாய் தலையசைத்த முல்லைக்கு எங்கு செல்வதென தெரியாமல் விழிக்க, மாதவன் “இப்படி வந்து உக்காரும்மா” என்றார்.
முல்லை அங்கிருந்த சோபாவில் அமர, அன்பரசு “உனக்கு எதாவது படிக்கனும், வேலைக்கு போகனும், இல்ல எதாவது கத்துக்கனும்னா சொல்லு. நான் இல்லாத நேரம் உனக்கு ரிலாக்ஸா இருக்கும், உனக்கான வாழ்க்கையை வாழ்ந்த திருப்தியும் கிடைக்கும்” என்றான்.
“எனக்கு அப்பாம்மாவை பார்த்துக்கிறதை தவிர வேற ஆசை ஏதும் இல்ல”
“அத்தை மாமாவை நீதான் பார்த்துக்கனும்னு இல்ல, அப்பா இருக்கார். இனி எவனும் அவங்ககிட்ட வம்பு பண்ணமாட்டான்” என தைரியம் சொல்ல,
“ம் எனக்கும் நம்பிக்கை இருக்கு” என ஒப்புக்கொண்டு, “என் அப்பாம்மாவுமே நான் என்னோட வாழ்க்கையை வாழனும்னுதான் விரும்புவாங்க. ஆனா எனக்கு அவங்களை பக்கத்துலயிருந்து பார்த்துக்கனும்.
இரண்டு பேரும் நல்லா இருக்கும் வரை பிரச்சனையில்ல. திடீர்னு மயக்கம் அதுயிதுனு எதாவது அசம்பாவிதம் ஆகிட்டா அந்த நேரம் நான் கூட இல்லாம போய்ட்டேனா என்னை என்னால எப்போவும் மன்னிக்க முடியாது” என்றாள்.
அன்பரசு அதிருப்தியாய் பார்க்க, “நம்மளை நாம நிரூபிக்கனும்னு நிறைய பேர் போராடுறாங்க. அது தப்புனு நான் சொல்லல. அவங்கவங்க சூழ்நிலை பொருத்து அது மாறுபடும். எனக்கு என் அப்பாம்மா கனவு நிறைவேறனும். நம்ம சந்தோசமா வாழுறதை அவங்க பார்க்கனும்”
“அதுக்கும் நீ உனக்கு பிடிச்சதை செய்யிறதுக்கும் சம்மதமேயில்ல. எனக்கும்தான் என் குடும்பம் முக்கியம். உன்னோட சேர்த்து எல்லாரையும் விட்டுட்டு நான் எனக்கு பிடிச்சதை செய்யிறேன்தான?” என்றான் புரிய வைக்கும் நோக்கோடு.
“வாழ்க்கையில எதாவது ஒரு கட்டத்துல சம்பாதிச்சாகனும்னற சூழல் வந்தா அதை செய்யுவும் என்னால முடியும். நல்ல படிப்பையும் தைரியத்தையும் கொடுத்துதான் அப்பா என்னை வளர்த்துருக்கார். ஆனா இப்போ எனக்கு உங்களோட சந்தோசமா வாழனும்” என்றாள் தீர்க்கமாக.
அன்பு எதோ சொல்ல வர, “விடுடா, அதான் மருகமக அது விருப்பத்தை சொல்லிடுச்சே. எப்படியாவது உன் விருப்பத்தை திணிக்கலாம்னு நினைக்காத” என அதட்டினார் மகனை.
அன்பரசு சத்யன் அறைக்கு செல்ல, முல்லை அன்பரசை பார்க்க, “அன்பு ரூம்க்கு டின்னர் முடிச்சிட்டுதான் போக முடியும். அதுவரை எங்களோடதான்” என கிசுகிசுத்து சிரித்தாள் அனு.
“அண்ணி” என முல்லை வெக்கத்தோடு சிரிக்க, “ம்… வா, கொஞ்ச நேரம் பேசிட்டிருப்போம்” என்று முன்பு சுகந்தி தங்கியிருந்த அறைக்கு அழைத்துச்சென்றாள் அனு. பிறகு எட்டு மணிபோல் இரவு உணவுண்ட பின்னே முல்லையை தயார் செய்ய ஆரம்பித்தனர் அனுவும் சுகந்தியும்.