“வசு, மூணு பேருக்கு இந்த காரம் சரியா இருக்கும்தானே?” கையில் குழம்பு கரண்டியை வைத்து ஒற்றை விரலால் அதனை நாவில் தொட்டு சுவைத்த சித்ரஞ்சன் வீடியோ காலில் மனைவியிடம் கேட்டான்.
“உங்களுக்குப் போதுமானு பாருங்க, நான் சொன்ன அளவு கரெக்ட்தான். அந்த காரம் போதும்னா கொதிக்க வச்சு கறி வெந்ததும் ஆப் பண்ணிடுங்க” என்று கணவனுக்குச் சொன்னவள்
“சோறு வெந்திருக்கும், ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு ரைஸ் குக்கரை தனியா எடுத்து வைங்க” என்றாள்.
“எல்லாம் பண்ணிட்டேன்.”
“சமைச்சது ஓகே, நாளைக்கு ஊருக்கு வரதுக்கு முன்னாடி எல்லாத்தையும் க்ளீன் பண்ணி நான் வச்ச பொருள் எல்லாம் வச்ச இடத்துல இருக்கணும். சாப்பிட்டு சுத்தம் பண்ணிடுங்க ரஞ்சன்” என்று சொல்லிய வசுந்த்ராவிடம்
“நீ மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி நான் எல்லாம் சுத்தம் பண்ணி வைக்கிறேன் பாருடி.” என்று சித்ரஞ்சன் கழுத்தில் கிடந்த துண்டால் வியர்வையைத் துடைக்க
“முதல்ல வாய்ல வைக்கிற சமைச்சிருக்கீங்களாலனு பசங்க சொல்லட்டும்..” என்று கணவனை கிண்டலடிக்க
“ஹேய்! பெல் அடிக்குது, நான் போய்ப் பார்க்கிறேன் வசு” என்று சித்ரஞ்சன் சொல்ல
“டேய் லாலா வா வா, என்ன லேட்” என்றபடி அண்ணன் மகனை உள்ளே அழைத்தான் சித்ரஞ்சன். சித்ரஞ்சன் நேற்று சென்னையில் நடந்த காவல்துறையினர் சந்திப்பிற்காக வந்திருந்தான். அண்ணன் மகனும் இங்கிருக்க அவனை பார்க்கலாம் என்று நினைத்து அழைக்க, அவனே நேரில் வருகிறேன் என்றான். மனைவியிடம் சொல்ல, அவள் லாலா வீட்டு சாப்பாடு சாப்பிடாமல் இருப்பான், சமைத்துக் கொடுங்கள் என்று சொல்லியிருக்க மாலையில் கோழி வாங்கி வந்து சமைத்து முடித்திருந்தான். இதில் நான்கு மணி போல் சக்திவேலும் சிறிது நேரத்தில் சென்னை வருகிறேன் என்றான்.
என்னவென்று விசாரிக்க நேரில் பேசுகிறேன் என்றான். வசுந்த்ராவிடம் கேட்க அவளுக்கும் விவரம் தெரியவில்லை. சக்தியின் மனைவி சரோஜினியிடம் வசுந்த்ரா கேட்க, வழக்கு விஷயமாக சென்றதாக சொன்னாள்.
“க்ளாஸ் முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சு சித்தப்பா” என்றான்.
“சரிடா, பார்க்க டயர்டா இருக்க. போய் ப்ரஷ் ஆகிட்டு லுங்கி மாத்திக்க. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சித்ரஞ்சன் சொல்ல
“சக்தி வந்ததும் சாப்பிடுவோம்” என்றவன் அறைக்குச் சென்று முகம் மட்டும் கழுவி வந்தான். சட்டையை மட்டும் கழட்டிப்போட்டவன் உள்பனியனுடன் நின்றான்.
“என்னடா சக்தி தீடீர்னு வரான்? கேஸ்னு சரோ கிட்ட சொல்லியிருக்கான். எனக்குத் தெரியாம அவன் என்ன கேஸ் ஹாண்டில் பண்றான்? நீயும் பார்க்கணும்னு சொல்ற” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க
“சித்தப்பா, உங்க விசாரணையைத் தாங்குற அளவு இப்போ சக்தி இல்லை. சக்தி வந்ததும் கேளுங்க, அவனே சொல்லுவான்” என்ற லாலா அப்படியே தரையில் படுத்துக் கண்களை மூடிகொண்டான். சித்ரஞ்சனும் லாலாவை தனியே விட்டு குழம்பு தயாரா என்று பார்த்தான், அவித்த மூட்டை, கோழி குழம்பு, கோழிகறி பிரட்டல், ரசம், வெள்ளரிக்காய்ப் பச்சடி என்று அண்ணன் மகனுக்கும், மருமகனுக்கும் சுவையான விருந்தே தயார் செய்திருந்தான் சித்ரஞ்சன்.
சக்திவேல் வரவும் சித்ரஞ்சன் கதவைத் திறந்தான். சித்ரஞ்சனையும் லாலாவையும் பார்த்த சக்தி,
“என்ன குடும்ப யுனிபார்மா? ரெண்டு பேரும் பனியனோட நிக்குறீங்க” என்று கிண்டலடித்தபடி
“மாமா, எனக்கு எங்க ரூம்?” என்று கேட்க, சித்ரஞ்சன் வழி சொல்ல, அவன் டீ ஷர்ட், ஷார்ட்ஸ் என்று உடைமாற்றி வந்தான்.
மணி எட்டரை ஆகியிருக்க, லாலா சிறிது நேரம் தூங்கியே விட்ட்டான்.
“என்ன சக்தி? காலையில கிளம்பி இப்போ இங்க வந்திருக்க? அவனுக்கும் நீ வரது தெரிஞ்சிருக்கு, என்னடா விஷயம்?” என்று கேட்க உண்டு பேசலாம் என்றான் சக்தி.
மூவரும் உண்ண லாலா உண்டவன், “சித்தப்பா! என்ன இவ்வளவு டேஸ்டா சமைச்சிருக்கீங்க? நம்ம வீட்ல ஒரு நாளும் செஞ்சதில்ல” என்று ஆச்சரியப்பட
“நம்ம வீட்ல உங்கம்மா, எங்கம்மா எல்லாம் கிச்சன் பக்கம் விடமாட்டாங்க. நாங்க தனியா இருந்தவரைக்கும் நான் டைமிருக்கப்ப உன் சித்திக்குக் கூட சமையலுக்கு எதாவது செஞ்சு தருவேன்.. அவளைப் பார்த்துக் கத்துகிட்டதுதான்” என்றான் சித்ரஞ்சன்.
“எங்க வீட்டு டேஸ்ட் வரப்பவே நான் சந்தேகப்பட்டேன்” என்று சக்தி சித்ரஞ்சனைப் பார்க்க
“டேய்! நல்லாயிருக்குத்தானே?” என்று லாலா கேட்டான்.
“எங்கத்தையை இப்படி சமைச்சுப் போட்டுத்தான் உன் சித்தப்பா இம்ப்ரெஸ் பண்ணியிருப்பார் போலடா” சக்தி சித்ரஞ்சனைக் கிண்டலாகப் பார்க்க
“டேய் இதெல்லாம் செஞ்சா இம்ப்ரெஸ் ஆகுற ஆளா உங்கத்த? அப்படி தெரிஞ்சிருந்தா லீவ் எடுத்துட்டு போய் குக்கிங் க்ளாஸ் போயிருப்பேன் டா. வசுவுக்கு இதெல்லாம் பேஸி’க்கான விஷயம், கல்யாணம் ஆன புதுசுல எனக்குக் காபி போட தெரியாதுன்னு சொன்னதுக்கு ஒரு வாரம் என்னையே டீ, காபி போட வச்சு, நான் நல்லா போடுற வரைக்கும் விடல. அப்படி ஒவ்வொன்னா கத்துக்கிட்டேன் டா. நீ வேற…” என்று சித்ரஞ்சன் சலிப்பாக சொல்ல
“அதேதான்! டீ காபி போட தெரியல.” சக்தியும் சீண்ட சித்ரஞ்சனும் பதில் சொல்ல என்று பேச்சோடு அவர்கள் உணவு முடிய, சக்தி எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். லாலா அவன் உண்ட தட்டை கழுவி வைத்தவன் நடுவீட்டுக்கு வந்து தரையில் கால் நீட்டி உட்கார்ந்தான்.
“என்னங்கடா விஷயம்?”
சித்ரஞ்சன் பொறுமையின்றி கேட்க
“எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க சித்தப்பா” என்று கேட்டான் லாலா.
“என்ன?” என்று சித்ரஞ்சன் அதிர
“டேய் ஒழுங்கா சொல்லுடா” என்று அதட்டிய சக்தி
“இவன் லவ் பண்றான். அந்த பொண்ணு வீட்ல சீக்கிரம் கல்யாணம் பண்ண சொல்றாங்க” என்று சக்தி அத்தனையும் சொல்ல, சித்ரஞ்சன் அதிருப்தியாக அண்ணன் மகனைப் பார்த்தான்.
“லாலா! அஞ்சு வருஷம் மேல போயிடுச்சுடா, இன்னமும் இப்படியே இருக்க போறியா? நான் உனக்கு எதாவது மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட இண்டஸ்டீரில வேலை வாங்கித் தரேன், அதுல போயிடுடா. அதானே உன் மேஜர்” என்று சொல்ல
“சித்தி கூட பிடிக்கலன்னு சொன்னாங்க, வேண்டாம்னு ஒதுங்கிப்போனீங்களா சித்தப்பா?” என்றான் லாலாவும் கோபமாக.
சித்ரஞ்சன் திருமணம் செய்தது சக்திவேலின் அத்தையான வசுந்த்ராவை. அதுவும் அவருக்கு விருப்பமில்லை என்று சொல்லியும் கட்டாயமாகக் கல்யாணம். அவர்கள் சண்டையிட்டு சமாதானமாகி இன்று நல்லவிதமாக வாழ்கிறார்கள். இருவீட்டிற்குமே சக்தி கல்யாண சமயத்தில்தான் அதுவே தெரிந்தது. அதுவரை சித்ரஞ்சன் வசுந்த்ரா திருமணம் காதல் திருமணமாகக் கருதப்பட்டது.
“இப்போ நான் உன்னை லவ் பண்ணாதன்னா சொன்னேன்? எக்ஸாம் செட் ஆகலன்னு வேற வேலக்குப் போக சொன்னா? எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம். முன்னாடியெல்லாம் நீ இப்படியில்ல” என்று சித்ரஞ்சனும் கோபமாகப் பேசினான்.
அவன் நலன் கருதி அக்கறையில் சொல்ல, அது கூட புரியாதா என்ற எரிச்சல்.
“சாரி சித்தப்பா! எனக்கு என்ன பண்றதுனு தெரியலனுதான் உங்ககிட்ட வந்திருக்கேன். எனக்கு அஞ்சு வருஷம் கேரியர் கேப் இருக்கு, சும்மாவே மெக்கானிக்கல் படிச்சுட்டு போனா கோர் இன்ஸ்ட்டீரில வேலை கம்மிதான், வேலையிருந்தாலும் ஐடிஐ, டிப்ளமோ முடிச்சவன வச்சு கம்மி சம்பளம் கொடுத்து வேலை வாங்கிடுறானுங்க, இல்லையா டிரெயினியா சேர்த்துட்டு ஒரு வருஷம் ஆனதும் அனுப்பிடுறாங்க. நானும் எல்லாம் கேட்டுதான் சித்தப்பா வச்சிருக்கேன். பீல்ட்லயே இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இப்போ படிச்ச பேப்பர் பெயர் கூட ஞாபகமில்ல”
“நீயாச்சும் தாத்தா சொல்றதைக் கேட்காம இருந்திருக்கலாம் சித்தப்பா, நீங்களும் அப்பாவும் நல்ல வேலையில இருக்கீங்க. அது பார்த்து வளர்ந்து எனக்கும் அதே ஆசை. இப்போ மட்டும் நான் விட்டுட்டு வந்தா உங்கண்ணனே நான் இத்தன வருசம் ஒழுங்கா படிக்கலன்னு சொல்லுவார்.”
லாலா வருத்தங்களை அப்படியே கொட்டினான்.
“அவர் கிடக்குறார்டா, அஞ்சாறு வருசமாச்சே டா” என்று சித்ரஞ்சன் கவலையாக இழுக்க, சக்தி சித்ரஞ்சனுக்குக் கண் காட்டினான்.
“ரொம்ப தூரம் வந்துட்டேன் சித்தப்பா, திரும்பப் போக முடியாது” என்று லாலா வசனம் பேச
“கொப்பன் மவனே! இப்போ என்னதான் நான் செய்யணும்” என்றான் சித்ரஞ்சன் கோபமாக.
“அதான் சொன்னேனே எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க, சரோவுக்கு மட்டும் வீட்ல சண்டைப் போட்டு கல்யாணம் பண்ணி வச்சீங்க, எனக்கும் வீட்ல எதாவது சொல்லி கல்யாணம் பண்ணி வைங்க. உதயாவை என்னால மிஸ் பண்ண முடியாது சித்தப்பா. ப்ளீஸ்” என்று சித்தப்பாவின் பக்கம் வந்து அவன் கையைப்பிடித்துக் கேட்ட லாலாவிடம்
சிறுவயது லாலாவைக் கண்டான் சித்ரஞ்சன்.
“இதுக்குத்தான் நீ கிளம்பி வந்தியா டா?” என்று சக்தியைப் பார்க்க
“ஆப்கோர்ஸ்” என்றான் அவன்.
“நான் என்னடா பண்றது? நீயும் சரோ மாதிரி வீட்ல சொல்லு. நான் சப்போர்ட் பண்ணி பேசுறேன்”
“சித்தப்பா! நீங்க எவ்வளவு பெரிய ஆளு” லாலா ஆரம்பிக்க
“காதல் மன்னன்” என்று சக்தி வேறு எடுத்துகொடுத்தான்.
“டேய்ய் ராஸ்கல்ஸ்! என்னடா செய்யணும் நான்?” என்று சித்ரஞ்சன் அவர்களைப் பார்த்துக் கேட்க
“நீங்கதான் தைரியமான ஆளாச்சே சித்தப்பா, நம்ம குடும்பத்துல முதன்முதல்ல காதல் கல்யாணம் பண்ணினவர், எங்களுக்கெல்லாம் முன்னோடி. நீங்களா எதாவது வீட்ல பேசி எனக்கு உதயாவைக் கட்டி வைங்க.” என்றான் லாலா.
“சரிடா, நீ ரொம்ப கெஞ்சாத. போய்த் தூங்கு, நாளைக்குப் பேசலாம்” என்று சித்ரஞ்சன் சொல்ல
“நான் கிளம்புறேன் சித்தப்பா, காலையில அகாடெமில க்ளாஸ் எடுக்கணும். இங்கயிருந்து போக லேட்டாகும். நீங்க பேசிட்டு சொல்லுங்க” என்று சென்றுவிட
“என்ன சக்தி இதெல்லாம்? எங்கண்ணன் சும்மாவே பேசுவான், இதுல இவன் வேலையில்லாம கல்யாணம் பண்றானு தெரிஞ்சா..” என்ற சித்ரஞ்சனின் பேச்சை சக்தியின் உயர்ந்த குரல் தடை செய்தது.
“போதும் மாமா! சும்மா வேலையில்ல சொல்லாதீங்க. காலையில க்ளாஸ் எடுக்கணும்னு பொறுப்பா இப்பவே கிளம்பிப் போறான். அதுவும் வேலைதானே? அவனை கம்மியா பீல் பண்ண வைக்கிறதே உங்க வீட்டாளுங்கதான், எக்ஸாம், கவர்மெண்ட் வேலைனு சின்னதுல இருந்தே சொல்லி சொல்லி அவனுக்கு இப்போ அது கிடைக்கலன்னா ஒன்னுமே இல்லனு நினைக்கிற அளவுக்கு வந்துட்டான். ஏன் நமக்குத் தெரிஞ்சு எத்தனை பேர் எக்ஸாம் க்ளீயர் பண்ண முடியலன்னாலும் கோச்சிங் இன்ஸ்ட்யூட் நடத்துறாங்க”
“நம்ம வெற்றி வச்சு அடுத்தவங்களை ஜட்ஜ் பண்ணக்கூடாது மாமா.”
“சக்தி! நான் அவனை என்னைக்கும் அப்படி சொன்னதில்லை. நான் பதினைஞ்சு வருசம் முன்னாடி எஸ்.ஐ எக்ஸாம் எழுதினப்போ இவ்வளவு போட்டி இல்லை, இவ்வளவு சோர்ஸ் இல்லை. இவ்வளவு ஊழலில்லை. இப்போ அவன் கஷ்டப்படுறான் தான் நான் சொன்னேனே தவிர அவன் ஜெயிக்கலன்னா அவனை நான் கம்மியா நினைக்கப் போறதில்லை. என் பையன் டா அவன், பாஸ் ஆகலன்னா அவன் படிச்சதெல்லாம் இல்லன்னு ஆகிடுமா?” என்று சித்ரஞ்சன் கேட்க சக்தியிடம் ஒரு நிம்மதி புன்னகை.
“அட்லீஸ்ட் நீங்களாச்சும் இப்படி பேசுறீங்களே, அவன் ரொம்ப பீல் பண்றான் மாமா. என்னோட, உங்களோட அவனை கம்பேர் பண்றான். நான் காலேஜ் படிக்கும்போதே எஸ்.ஐ எக்ஸாம்’னு டிசைட் பண்ணி அதுக்கு மட்டும் படிச்சேன், ஒரு வருஷம் சென்னையில இருந்தே கோச்சிங் போனேன். கிடைச்சிடுச்சு. உங்கப்பா நான் எஸ்.ஐ ஆனா அவன் ஐபிஎஸ் ஆகணும்னு சொல்லி யுபிஎஸ்சி எழுத சொல்லி அங்க ஆரம்பிச்சு அவன் எழுதாத எக்ஸாமே இல்லனு ஆகிடுச்சு.”
“இப்ப அவன் எங்க ப்ரண்ட்ஸ் யார்கிட்டயும் பேசுறதே இல்லை. என்னோடவும் சென்னை வந்ததிலருந்து பேசுறதைக் குறைச்சிட்டான், என் வேலையும் காரணம்னாலும் அவன் பழைய மாதிரி இல்லை. என் லாலாவை எனக்குத் தெரியும் மாமா, இப்போ அவன் அப்படி இல்ல. அவனுக்கு அந்த பொண்ணு ரொம்பப் பிடிச்சிருக்கு மாமா, அவளைப் பார்த்த அன்னிலிருந்து பார்க்கிறப்ப எல்லாம் அவளைப் பத்திப் பேசுவான், அவ ப்ரோபோஸ் பண்ணினப்போ அவ்வளவு சந்தோஷப்பட்டான்.” என்று சொல்ல சித்ரஞ்சனும் அமைதியாக சக்தி பேசுவதைக் கேட்டான்.
“நீங்க நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட பேசி பாருங்க மாமா. அப்புறம் வீட்ல எப்படியாச்சும் பேசிக்கலாம்” என்று சக்திவேல் சொல்ல சித்ரஞ்சனும் சம்மதமாகத் தலையாட்டினான்.