“சோமசுந்தரம் கண் ஆஸ்பத்திரி” என்று பெரியதாக நியான் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த அந்த இரண்டடுக்கு மாடியின் முன்புறம் அவர்கள் இருவரும் நின்றிருந்தனர். மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டிருக்க, அதன் வாயிலில் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியில் இரவுக் காவலாளி அமர்ந்திருந்தார்.
“இவன் கிட்ட பேச்சு குடுக்கலாமா? வேணாமா? கால் வேற வலிக்க ஆரம்பிக்குதே!” என்று ஜோதி எண்ணிக் கோண்டிருக்க, “வா கண்ணு, சித்த நேரம் படியில உட்காரலாம்” என்று ஜோதியின் முகபாவனை புரிந்து படிக்கட்டை நோக்கி அழைத்துச் சென்றார் செல்வி.
“பஸ்ஸு இப்போ வந்துருங்கத்த! “என்று ஜோதி சற்றே இழுக்க,“
அட, அது வாரப்போ வரட்டும். சித்த உட்காரலாம் வா! காலெல்லாம் நோகுது.” என்றபடிக்கு படியில் அமர்ந்தார். படியில் அமரவுமே குளிர்ந்திருந்த கைப்பிடி கம்பியில் தலைசாய்த்துக் கொண்டார் செல்வி.
எப்போதும் உடுத்தும், வாயில் புடவையும், புடவைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ரவிக்கையும், தோட்டத்தில் நடந்து நடந்தே வெடிப்பு ஏற்பட்டிருந்த பாதங்களுமாக மட்டுமே செல்வி அத்தை அவள் நினைவுகளில் வலம் வருவார்.
இப்போது செல்வி அத்தையின் முகத்தை ஆழ்ந்து கவனிக்கலானாள் ஜோதி. தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுத்தாயிற்று, பேரப்பிள்ளை பெற்றாயிற்று என்ற நிம்மதியும், தன் பிரிய மகனும் பெங்களூரில் கணினி துறையில் நல்ல வேலையில் உள்ளான் என்ற பூரிப்பும் அவர் முகத்தில் எங்கேணும் தென்படுகிறதா என்று தேடினாள்.
ஒரு வீடு பொருளாதார வளர்ச்சி அடையும் போது, அந்த வீட்டினர் குணாதிசயங்களில் தான் எத்தனை மாறுதல்கள் ஏற்படுகின்றன.
முன்னெல்லாம், செல்வி அத்தையின் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் சேர்ந்து ஒரு சிறிய தங்கத் தாலிச் சங்கிலி ஊஞ்சலாடும். அதுவும், மகனின் படிப்புக்காக, தோட்ட குத்தகைக்காக, தீபாவளிக்காக என்று அவ்வப்போது கழுத்தில் இருந்து காணாமல் போயி, கொஞ்ச நாளில் திரும்ப வந்துசேரும்.
விவரம் தெரியாத வயதில், “செயின் எங்க அத்தை” என்று சில சமயம் ஜோதி வினவுவதுண்டு. “அதுவா, செயினு, பேங்குக்கு படிக்க போயிருக்கு.படிப்பு முடியவும் திரும்பி வரும்” என்று சிரிப்புடன் செல்வி அத்தையிடமிருந்து பதில் வரும்.
தங்கச் சங்கிலி இருந்தால் அதை அவ்வப்போது பேங்கிற்கு படிக்க அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த வயது தான் ஜோதிக்கு அப்போது. அதனால், விவரம் தெரியும் வரையிலும், எப்போதெல்லாம் செல்வி அத்தையின் சங்கிலி படிக்கப் போயிருக்கிறது என்று கணக்கிடுவதை ஒரு வேலையாவே கொண்டிருந்தாள்.
அந்த பலவருட பழக்கத்தின் காரணமாகவோ என்னவோ, இன்றும் செல்வி அத்தையின் முகத்தில் இருந்து ஜோதியின் கண்கள் அவளையறியாமல் அவர் கழுத்தை மொய்த்தன. இப்போது அந்த மெல்லிய கோதுமை சங்கிலி அவர் கழுத்தில் இருக்கவில்லை. சங்கிலியின் இடத்தை ஒரு தடிமனான முகப்பு வைத்த முறுக்குத் தாலிச் சரடு ஆக்கிரமைத்திருந்தது. அது ஏனோ ஜோதிக்கு கொஞ்சம் வேற்றுமை எண்ணத்தைக் கொடுத்திருந்தது.
பல வருடம் பார்த்து மனதில் பதிந்து போன முகங்களிலும், சாயல்களிலும் இடங்களிலும் நம் மனதை நிறைக்கும் நினைவின் மீதங்கள் எங்கேணும் தென்படுகிறதா என்றே நாம் தேடுகிறோம். ஏனென்றால் மாறிவிட்ட முகங்களுடன், அவர்களது பாசமும் மாறிவிட்டிருக்குமோ என்ற பயம் உண்டாகிவிடுவதால், நம் மனம் பழக்கப்பட்ட விஷயங்களில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை.
அதனால் தானோ என்னவோ, பள்ளியின் காவலாளியை சீருடை இல்லாமல் பார்க்க நேரிடும் சமயங்களில் அடையாளம் தெரிவதில்லை. அவரை காவலாளியாக மட்டுமே மனம் ஏற்றுக் கொண்டுவிட்டிருந்தது. அதே போல் தான் ஜோதிக்குத் தோன்றிய வேற்றுமையும்.
அவள் பல வருடங்களாக பார்த்துப் பழகியிருந்த செல்வி அத்தையின் பிம்பத்தை, தான் கண்ட தாய்மையின் சாயலை புதிதான பளபளப்பு ஆக்கிரமித்திருக்க, அந்த மினுப்பில் பழைய பாசமும் மாறுதல் அடைந்திருக்குமோ என்ற கவலையில் தடுமாறியது அவள் மனம்.
ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. இவள் தலை கண்டவுடன் சட்டெனச் சிரிக்கும், வாஞ்சையாக இவள் தலையில் பூசூட்டிவிடும், அன்றைய செல்வி அத்தையையே அவள் மனம் எதிர்பார்த்தது என்னவோ நிஜம்.
முன்னெல்லாம் களைப்புடனேயே தோற்றமளிக்கும் அவர் கண்களிலும் முகத்திலும் இன்றைக்கு ஒரு நிம்மதியும், கொஞ்சம் பயமின்மையும், நிறைய ஆசுவாசமும் குடியிருந்ததைக் காண ஜோதிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், “இது என் பழைய செல்வி அத்தை இல்லையோ? தோற்றம் மாறிவிட்டதைப் போல அவர் குணமும் வேறுபட்டிருக்குமோ” என்ற எண்ணத்தை அவளால் தவிர்க்க இயலவில்லை.
இந்த குயுக்தியான எண்ணம் ஏற்படவும், தன் கவனத்தைக் கலைத்து தன்னையே ஒரு முறை நொந்து கொண்டாள். “எனக்காக இவளோ சிரமப்பட வேண்டிய அவசியமே இவங்களுக்கு இல்லை. இருந்தாலும் பழகின பழக்கத்துக்காக இத்தனையும் செய்யறாங்க. அவங்களைப் போயி இப்படியெல்லாம் நினைப்பானேன்.” என்று ஜோதி எண்ணிக் கொண்டிருக்கும் போதே, செல்வியின் கைப்பேசி ஒலி எழுப்பியது.
மணிபர்ஸில் துளாவி கைப்பேசியை எடுத்த செல்வி, “அலோ… புவி? இல்லை.. இங்க தான் உட்கார்ந்திருக்கோம். நம்ம அஜந்தா எல்லோரா தேட்டருகிட்ட. பஸ் வர இன்னும் நேரம் இருக்குனு ஜோதி சொல்லுச்சு. பாப்பா என்ன செய்யறா? தூங்கிட்டாளா? அவுக அப்பா வந்துட்டாறா?” என்று கேள்வி பதில்களுக்கு ஆட்பட்டார்.
“புவி” என்ற பேரைக் கேட்கவும் ஜோதியின் இதழில் சிறிய புன்னகை பூ முளைத்தது. “புவிக்கா, புவிக்கா” என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டே புவனாவின் பின்னால் சுற்றி வந்த தினங்களின் நினைவில் மனம் நெகிழ்ந்தது.
ஜோதி எதிர்பார்த்தது போலவே, செல்வி அத்தை பேசிவிட்டு, கைப்பேசியை அவளிடம் நீட்டினார். “இந்தா ஜோதிக்கண்ணு, புவி பேசறா” என்றார்.
“ஹலோ, புவிக்கா” என்று கைப்பேசியை காதில் வைத்தவள், மறுமுனையில் புவனா பேசுவதை வழக்கமான ரசனையுடன் கேட்கலானாள்.
“உனக்கு வாட்ஸ்ஸப் மேசேஜ் பண்ணேன்.பஸ் வந்திருச்சா?ஏறிட்டீங்களான்னு? நீ இன்னும் பார்க்கலையா ஜோ?”
“இல்லைக்கா, ஃபோன் பேக்குள்ள இருக்கு. பார்க்கலை”
“சரி, சரி. பஸ் ஏறிட்டு மெசேஜ் பண்ணு. நான் அப்பறம் கால் பண்ணறேன் ஜோ” என்றாள் புவனா உரிமையுடன்.
“ம்ம். சரிக்கா. “ என்ற ஜோதி, கைப்பேசியைத் திரும்ப அத்தையிடம் சேர்பித்தவள், பேருந்து வருகிறதா என்று பார்க்கிற சாக்கில் அங்கிருந்து எழுந்து கொஞ்சம் ரோட்டின் அருகே வந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு புவனாவிடம் பேசியது அவள் மனதை சற்றே அழுத்தியது. அவளுக்கு அறிந்தவர் தெரிந்தவர் அனைவருவே அவளை ஜோதி என்று அழைக்கும் போது, புவனா மட்டுமே “ஜோ” என்று பழைய படியே அழைத்தது என அவள் நினைவுகள் அவளை பல வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டிருக்க, ஜோதியால் தன் மனதின் அழுத்ததையும் அதனால் ஏற்பட்ட கண்களின் கரிப்பையும் கட்டுக்குள் வைக்க இயலவில்லை.
“அவன் கூட பேச்சு வார்த்தை இல்லாம போனாலும், புவிக்காகிட்டயாவது டச்ல இருந்திருக்கலாம்” என்ற எண்ணம் தோன்றவும் மூக்கை உரிஞ்சி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், ரோட்டில் கவனம் பதித்தாள். கரூரின் பிரதான ரவுண்டானா அது. ரவுண்டானாவின் மேலே புதிதாக கட்டப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை அமையப் பட்டிருக்க, அஜந்தா எல்லோரா தியேட்டரில் இரவு 10 மணி காட்சி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். சர்ரென வேகமாகக் கடந்த இருசக்கர வாகனங்களைத் தாண்டி பார்வையைச் செலுத்தி, இவர்களது பேருந்து வருகிறதா என்று நோட்டமிட்டாள்.
“திட் திட் திட்” ஓசையுடன் இவளின் மீது ஏறிவிடும் போல வெகு அருகே வந்துவிட்டிருந்த ஒரு டி.வி.எஸ் எக்ஸலின் சக்கரத்தில் இருந்து தப்பிக்க பின்னால் நகர்ந்தவளை, செல்வியின் கைகள் இன்னமும் பின்னுக்கு இழுத்திருந்தன.
“கடங்கார பரதேசி! எப்படி வண்டியை முறுக்கிட்டு வேகமா போறான் பாரு. மனுஷ மக்க நிக்கறது கூட கண்ணுக்குத் தெரியாம! நீ வா ஜோதி. வந்து உட்காரு! பஸ் வாரப்போ வரட்டும் கண்ணு. நீ வா” என்று இவள் கைகளைப் பிடித்துக் கொண்டு திரும்ப படியில் சென்று அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் திரையரங்கின் கூட்டம் சென்றுவிட்டிருக்க, மீண்டும் அவ்விடம் இரவின் அமைதியை பூண்டது. திரும்ப படிகளில் அத்தையுடன் அமரவுமே நடப்பவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த கட்டிடத்தின் காவலாளி, “எந்தூரு பஸ்ஸுக்கு காத்திருக்கீங்க?” என்று சினேகமாக வினவினார்.
“பெங்களூர்” என்று ஜோதி பதிலளிக்கவும், தூரத்தில் பேருந்தின் ஹாரன் ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது. பேருந்தின் நடத்துனரிடம் ட்ராலியைக் கொடுத்து, பேருந்தின் பக்கவாட்டில் பத்திரப்படுத்த பணிந்த செல்வி, ஜோதியின் கைகளைப் பற்றியபடிக்கு பேருந்து ஏறினார்.
செல்வியின் செயல்கள் ஜோதிக்கு ஒரு வித பிரமிப்பைக் கொடுத்திருந்தன எனலாம். அவள் அறிந்த செல்வி அத்தை இது போலெல்லாம் தைரியமாக முன் நின்று ஒருவரிடமும் பேசுபவர் அல்ல. எல்லா விஷயங்களுக்கும் அவரது கணவர் ராமசாமியின் துணையை நாடுபவர்.
கடைக்குச் செல்ல கவினையும், வார சந்தைக்குப் போக பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சின்னாத்தாளையும் எதிர்பார்ப்பவர். சந்தையில் காய் வாங்கையில் கூட, “சின்னாத்தாக்கா, தக்காளி கிலோ எம்புட்டுன்னு கேளு” என்று அருகில் இருப்பவரை ஏவுபவர்.
அப்படிப்பட்டவர் இன்று நடத்துனரிடம், “பொட்டியை பத்திரமா வைங்க. தூக்கி கிடாசீப்புடாதீங்க” என்று மொழிவது அவள் அளவில் ஆச்சர்யமான விஷயம் தான்.
பேருந்தில் ஏறி, இவர்களது படுக்கை இருக்கையில் தேடிப்பிடித்து கைப்பை, தண்ணீர் பாட்டில் என சகல சாதனங்களையும் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, செல்வியின் கைப்பேசி மீண்டுமாய் ஒலித்தது. ஜோதியின் கையருகே இருந்த கைப்பேசியில் தென்பட்ட பெயரைக் காணவும் அவள் முகம் ஒரு நொடி சிவந்து, அடுத்த கணமே சுருங்கி இருள் படிந்து கொண்டது.
செல்வி கைப்பேசி அழைப்பினை கவனிக்கவில்லை. முழுவதும் அடித்துமுடித்து மீண்டும் கைப்பேசி அழைக்க, இம்முறை கைப்பேசியை செல்வி அத்தையிடம் சுட்டிக் காட்டினாள் ஜோதி.
“கண்ணு, பஸ் ஏறிட்டங்கண்ணு. இப்போ தான் உட்கார்ந்தோம். ம்ம். ஆச்சு. நீ சாப்பிட்டியா தம்பி? வெளியவா? அப்படியா? தோசையா? தொட்டுக்க சட்னியா? சரி சரி! காலையில இறங்கிட்டு கூப்பிடறேன். சரியா! வச்சிறவா?” என்று ஒருபக்க சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டாள் ஜோதி.
புவனா தன்னிடம் பேச ஆசைப்பட்டதைப் போல, கவின் எண்ணப் போவதில்லை என்று நிச்சயமாய் தெரிந்திருந்த போதும், மனசு ஏனோ பிசைந்தது. ஏன் தானொருத்தி உடன் வருவது கூட அவனுக்கு பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை.
“எனக்குத் தான் அவனும், அவன் பத்தின செய்திகளும் பெரிய விஷயம். அவனுக்கு நான் அப்படியில்லைன்னு என்னைக்கோ நிரூபிச்சுட்டான். இப்பவும் ஏன் மனசைப் போட்டு கஷ்டப்படுத்திகிட்டு இருக்க?” என்று எண்ணத் தோன்றிய போதும், குட்டிச் சாத்தான் மனது என்னவோ அவனையே சுற்றிக் கொண்டிருக்கிறது.
மகனிடம் பேசிவிட்டு, செல்வி அத்தை “இந்தா ஜோதி பேசுதாம்” என்று கைப்பேசியைத் தன் கையில் கொடுத்துவிடுவாரோ என்ற படபடப்பு தோன்றினாலும், அவன் அப்படியெல்லாம் அவளிடம் பேசிவிடும் ரகம் அல்ல என்று தெளிவாய் தெரியும் ஜோதிக்கு.
அப்படி கைப்பேசி மாறினால், இவளிடமும் பேச எந்த விஷயமும் இல்லை. ஆம், ஒட்டுதல் விட்டுப்போன பின்பு, என்ன பேசி என்ன? இத்தனை நாட்கள், ஏன் வருடங்களில் என்னைப் பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், கொஞ்சமும் குற்ற உணர்வு தோன்றாமல் தன் நலத்தை மட்டுமே பெரியதெனக் கருதி வாழ்ந்தவன் தானே!
இந்த எண்ணமெல்லாம் அறிவில் மேடையிட்ட குவிவிளக்கு போல் ஒளிர்ந்தாலும், காதுகள் என்னவோ செல்வி அத்தையின் சம்பாஷனையை ஊர்மையாகவே கவனித்தன.
மறுமுனையில் பேசும் குரலைக் கேட்டு விடவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. ஆனால், பேருந்தின் ஓசையில் அது சாத்தியப்படவில்லை. கைப்பேசியை வைத்த மறு நிமிடமே செல்வி அத்தை அவனைப் பற்றித் தான் பேசலானார்.
“கவினு தான். பஸ் ஏறிட்டனா இல்லையான்னு கேட்க கூப்பிட்டான்.” சொல்ல, ஜோதி செல்வியின் அடுத்த வார்த்தைகளுக்காக ஆவலுடன் காத்திருக்க, செல்வி மேலே பேசும் முன்னர், ”இந்த அடைச்சு வச்ச மாதிரி ஏசி பஸ்ல ஏறினாலே தலை விண்ணு விண்ணுன்னு தெறிக்க ஆரம்பிக்குது” என்று சொல்லிக் கொண்டே தன் கைப்பையில் இருந்து தலைவலி தைலம் தேடத் துவங்கிவிட்டார்.
ஜோதிக்கு சப்பென்றாகிப் போனது. இன்னமும் அவனைப் பற்றி அவர் மேலே ஏதேணும் தானாகச் சொல்ல வேண்டுமே என்று ஆர்வமாக இருந்தது. ஆனால் அதைத் தானாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் மனம் ஒப்பவில்லை. அவனைப் பற்றித் தெரியவேண்டும், ஆனால் அது தானாகவே தன்னிடம் வந்து சேர வேண்டும். சை என்ன ஒரு மானம்கெட்ட மனதோ!
“ராத்திரி தோசை சாப்பிடானாமா? சமையல்லாம் அவனே செஞ்சுக்கறானா? அதிசயமா இருக்கே? ஊர்ல இருக்கற வரைக்கும் அடுப்படி பக்கம் கூட எட்டிப் பார்க்கமாட்டானே. தண்ணி வேணும்னா கூட நீங்களோ புவிக்காவோ தானே எடுத்து குடுப்பீங்க. அவளோ செல்லமா கவினு, கவினுன்னு வளர்த்தீங்க, இன்னைக்குத் தானே சமைச்சு சாப்பிட்டுக்கறானா?” என்றெல்லாம் கேட்கத் தோன்றியது.
ஆனால், எவ்வளவு வருடங்கள் ஆன போதிலும், சில விஷயங்கள் மாறிவிடாது அல்லவா. ஜோதியும் அது போலத் தான். மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டாள். எல்லாவற்றிற்கும் ஒரு சிரிப்பும் தலையசைப்பும் மட்டுமே பதிலாக இருக்கும். சிலர் அதை தலைக்கணம் என்று தவறாக எண்ணிக் கொள்ளக் கூடும். ஆனால் அவள் சுபாவமே அப்படித் தான்.
ஏன் இவள் கல்லூரித் தோழிகள் கூட முதலில் ஜோதியை அப்படித் தான் எண்ணியிருந்தனராம். “அது, கொஞ்சம் அழகா இருக்கியா. அந்த திமிர்ல யார்டையும் பேச மாட்ட, ஒழுங்கா பதில் சொல்ல மாட்டன்னு நினைச்சோம் ஜோதி. உன் சுபாவமே இப்படித் தான்னு போகப் போகத் தான தெரியுது” என்று இவளிடமே சொல்லியிருக்கின்றனர். ஜோதி இதற்கும் சிரித்துக் கொள்வாள்.
இதோ இப்போதும் செல்வி அத்தை தானாகக் கவின் பற்றி ஏதேணும் சொன்னால் நன்றாக இருக்குமே என்று மனதளவில் மட்டுமே ஆசை ஏற்பட்டது. வாய்விட்டுக் கேட்க வழிதெரியாமல் மெளனமாய் இருந்துவிட்டாள்.
செல்வி அத்தைக்கு அவர் மகன் கவின் குமார் பற்றி தீராத பெருமை உண்டு. தானாகவே கவினைப் பற்றி சொல்வார் என்று ஜோதி எதிர்பார்த்தாள். இவளாக முன்வந்து கொஞ்சம் போலப் பேச்சைத் துவங்கியிருதாலும் கூட அத்தை அங்கிருந்து பிடித்துக் கொண்டு தன் மகன் கவின்குமார் பற்றி பேசத் துவங்கியிருக்கக் கூடும்.
செல்வி கைப்பேசியில் பேசிய விஷயங்களை பஞ்சில் பட்ட நீர் போல கிரகித்து உள்வாங்கி இதயத்தின் பல நூறு அறைகளில் சேமித்துக் கொண்டாள் ஜோதி. அதிலும் அவள் மனதின் அலமாறியில் அவள் தந்தைக்கு அடுத்து கவினின் நினைவுகளே பிரதானமாக ஆக்கிரமித்திருந்தன என்று அவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியப் போகிறது?
“கவினே சமைப்பானாமா?” என்று மீண்டும் அந்த இரண்டு வார்த்தைகளை வைத்து மனக்கோட்டை கட்டத் துவங்கினாள். இதயம் அசை போட்டபடியே மெல்ல ஊர்ந்தது. அவன் சமைக்கும் போது எப்படி இருக்கும்? எப்படி நடப்பான்? எப்படி சமையல்கட்டில் நடமாடுவான்? உப்பு சரிபார்க்க கையில் சாம்பாரை விட்டுக் கொள்வானா?
ஸ்டைலாக கரண்டியை சுழற்றிக் கொண்டே பாத்திரத்தில் கிண்டுவானா? எனக்காக ஒரு தடவை சமைத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதிலும், சமையல் திண்டில் என்னை அமரச் செய்துவிட்டு, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே எனக்காக தோசை ஊற்றிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்துக் கொண்டது அவள் மனம்.
இடது உதட்டைஒரு பக்கமாய் இழுத்துக் கொண்டு அவன் சிரிக்கும் நொடிகள் மனதில் வந்து இம்சை செய்தன. எத்தனை பக்கத்தில் அந்த உதட்டின் சுழிப்பைப் பார்த்திருக்கிறாள் என்று யாரிடமாவது சொல்ல முடியுமா? அத்தனை அருகாமையில் நின்றவன் இன்று யாரோ போல பேச்சு வார்த்தையற்று எங்கோ இருக்கிறான் என்று சொல்லத்தான் இயலுமா? இதையெல்லாம் நினைக்க நினைக்க, அவள் மீதே ஆத்திரம் எழுந்தது.
அவளையும் மீறி கண்கள் இஷ்டத்துக்கும் கரிக்கத் துவங்க, “தூக்கம் வருதுத்த, நான் படுக்கறேன்” என்று சொல்லிவிட்டு, ஜன்னல் பக்கமாகத் திரும்பி படுத்துக் கொண்டாள். கண்ணீர் வழிந்தோடி தலையணையில் மெல்லமாய் ஈரப்படுத்த, பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த வானத்தையும், பின் தொடர்ந்து வந்த சாலையோர விளக்குகளையும் வெறித்த வண்ணம் படுத்திருந்தாள்.