Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 1

அத்தியாயம் 1

“அம்மா, நாளைக்கு தான் என் உயிர் தோழி பிறந்தநாள் அம்மா.. நான் போகணும். நியாபகம் இருக்கு தானே?”



Advertisement

“யாருப்பா அது, என் செல்லத்தோட உயிர் தோழி.. எனக்கு தெரியலையே?”

“சும்மா சொல்லாதீங்க அம்மா.. உங்களுக்கு தெரியாதா?”

Advertisement

Advertisement

“யாரு ஷர்மிளா தானே?”

“போங்க அம்மா.. அவ வெறும் தோழி தான்..”

Advertisement

“பின்ன மீராவா, இல்ல ஸ்வேதாவா?”

பதில் கூறாமல் உம்மென்று அமர்ந்து கொண்டாள் குட்டி வராஹி.

அதற்கு மேலும் அவளை சீண்டாமல்,

“இதோ பாரு உன் உயிர் தோழிக்காக அம்மா நீ கொண்டு போக பரிசு கூட வாங்கிட்டு வந்துட்டேன்” என்று ஒரு பெரிய பரிசு பொருளை கொண்டு வந்து மகளிடம் கொடுத்தார் வினோதா.

இளஞ்சிவப்பு நிற காகிதத்தால் அழகாக மூடபட்டு, அதன் மேலே சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்டிருந்தது..

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீர்யநந்திதா” என்று அதன் மேலே அழகாக  எழுதப்பட்டிருந்தது.

“என் அம்மான்னா அம்மாதான்” என்று ஓடி வந்து தாயின் கழுத்தை  கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள் வராஹி.

வராஹியும் வீர்யநந்திதாவும் மழலையர் பள்ளியில் இருந்து ஒன்றாக படித்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது மூன்றாம் வகுப்பில் இருக்கிறார்கள்.

இருவர் வீடும் வேறு வேறு ஏரியாவில் இருந்தது. இருவர் வீட்டிற்கும் நடுவில் இருந்தது அவர்களது பள்ளி. தூரம் என்பதால் பள்ளியில் பேசுவதோடு சரி. இருவரும் வீட்டிற்கு சென்றதில்லை.

இம்முறை தான் வாராஹியை வீட்டிற்கு அழைத்திருந்தாள் வீர்யா.

அதனால் ஒரு வாரமாகவே ஆசையாக காத்து கொண்டிருக்கிறாள் தோழியின் வீட்டிற்கு செல்வதற்காக. 

“நான் சொன்ன பொம்மை தானே வாங்கி இருக்கீங்க.. கலர் வேற மாத்திடலயே?” என்றாள் அம்மாவிடம்.

“நீ இப்படி கேட்பன்னு தெரியும், அதான் ஃபோட்டோ பிடிச்சிட்டு வந்திட்டேன்  பாரு”, என்று தன் கைபேசியில் பரிசுக்காக வாங்கிய பொம்மையை காட்டினார்.

“சூப்பரா இருக்கும்மா.. கண்டிப்பா வீர்யாக்கு பிடிக்கும்.. நாளைக்கு நான் என்ன டிரஸ் போட?”

“விட்டா இப்பவே அவங்க வீட்டுக்கு போய்டுவ போல.. எல்லாம் அம்மா ரெடியா வச்சிருக்கேன்.. இப்ப போய் கொஞ்ச நேரம் படி வரா.. வீட்டு பாடம் எல்லாம் முடிச்சு வச்சுட்டா தான் நாளைக்கு இலகுவா போய்ட்டு வரலாம்”

வராஹியின் அம்மா வினோதா, அப்பா ராம்பிரசாத். இருவருமே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

மாறி மாறி இருவரும் அலுவலகத்தில் வேறு வேறு ஷிப்ட் வருவது போல பார்த்து கொள்வார்கள். அதனால்  பிள்ளைகளை இலகுவாகவே வளர்த்து வருகிறார்கள்.

வராஹியின் அண்ணன் வல்லபன். அவனும் இவர்கள் படிக்கும் பள்ளியிலே ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.

“அண்ணா, நாளைக்கு நீயும் என்கூட வாயேன்..” என்று அண்ணனிடம் கேட்டாள் வராஹி ஆசையாக.

“உன் பிரண்ட் பிறந்தநாள் விழா.. நீ தான் போகணும். என்னை கூப்பிடல தானே” என்றான் உம்மென்று, குழந்தைகளுக்கே உரிய சிறு பொறாமையுடன்.

“நான் வேணா உன்னையும் கூப்பிட சொல்லட்டுமா?”

“ஒன்னும் தேவை இல்ல.. உனக்கு ஒரு பிரண்ட் தான், ஆனா எனக்கு எத்தனை பிரெண்ட்ஸ்ன்னு எண்ண கூட முடியாது. நான் அவங்க வீட்டுக்கு எல்லாம் போனா எனக்கு நேரமே இருக்காது தெரியுமா?”

“நீ அவங்க வீட்டுக்கு போகும் போது என்னை கூட்டிட்டு போக மாட்டியா?”

“மாட்டேன்.. “

“நீ கூட்டிட்டு போலன்னா பரவாயில்லை போ அண்ணா.. உன் பேச்சு கா.. எனக்கு வீர்யா மட்டும் போதும்” என்று எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

————–

மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் நிதானமாக எழுந்தனர் வினோதாவும் ராமும்.

அப்பொழுதே வராஹி எழுந்து பல் துலக்கி குளிப்பதற்காக எல்லாம் எடுத்து கொண்டிருந்தாள்.

“என்ன வினோ அதிசயமா இருக்கு, காலையிலேயே வரா இவ்வளவு சமர்த்தா இருக்கா?” என்றார் ராம் மனைவியிடம்.

“இன்னிக்கு வீர்யா பிறந்தநாளுக்கு போக போறா இல்ல அதான்”

“சாயந்தரம் தானே கொண்டாடுவாங்க?”

“இல்ல ராம், அவங்க நிறைய பேர் எல்லாம் கூப்பிடல போல. நம்ம வராஹி மட்டும் தான். அவங்க அம்மா காலையிலேயே கொண்டு வந்து விட சொல்லி இருக்காங்க..”

“அப்ப சரி”

அழகிய வெளிர் நீல நிற கவுன் அணிந்து ஜம்மென்று தயாராகி வந்தாள் வராஹி.

பின் ராம் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்தார். 

இவர்கள் இருப்பது அடுக்கு மாடி குடி இருப்பில். ஆறாம் தளத்தில் மூன்று படுக்கை அறை கொண்ட வீடு. 

வீர்யாவின் வீடு தனியாக இடம் வாங்கி கட்டி இருந்தார்கள். சுற்றி இடம் விட்டு, காற்றோட்டமாக இருந்தது. இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு.

“வீர்யா உங்க வீடு சூப்பரா இருக்கு ப்பா”

“தேங்க்ஸ் வரா.. இன்னிக்கு தான் என் பெஸ்ட் பர்த்டே.. ஏன்னா நீ வந்திருக்கல்ல” என்றாள் மகிழ்ச்சியாக.

“எங்க அண்ணா ரொம்ப அலட்டிக்கிறான் தெரியுமா வீர்யா, அவனுக்கு நிறைய பிரெண்ட்ஸ்ன்னு.. “

“இந்த அண்ணன்களே இப்படி தான் விடு வரா, எங்க அண்ணா கூட இப்படித்தான் அலட்டிக்கிட்டான். நான் என்ன சொன்னேன் தெரியுமா?”

“என்ன சொன்ன?”

“எத்தனை பேர் இருக்காங்கன்னு முக்கியம் இல்ல.. எவ்வளவு நெருக்கமா இருக்காங்கன்னு தான் முக்கியம்.. “

“நல்லா சொன்ன.. நம்மளை மாதிரி ஒரு பிரெண்ட் இருப்பாங்களா அவங்களுக்கு”

“வா நாம வெளிய போய் விளையிடலாம் “

“என் டிரஸ் அழுக்காயிடுமே?”

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வீர்யாவின் அம்மா நிவேதித்தா, “நீ போய் வீர்யாவோட டிரஸ் மாத்திக்கோ வராஹி, விளையாடிட்டு ஈவினிங் கேக் கட் பண்றப்ப வந்து திரும்ப உன் கவுன் போட்டுக்கோடா” என்றார் 

“சரி ஆன்ட்டி… “

பிறகு இருவரும் வெளியே சென்று விளையாடினார்கள்.

அங்கே சிறிய பூந்தோட்டம் இருந்தது. சில பட்டாம்பூச்சிகளும் வந்தது..

“வரா, இந்த பட்டாம்பூச்சி பிடிப்போம் வா..”

“எப்படி வீர்யா பிடிக்கிறது?”

“அது பூ மேலே உட்கார்ந்ததும் மெதுவா, அது நம்மை பார்க்காத மாதிரி பின்னாடி இருந்து போய், சத்தம் போடாம, பிடிக்கணும்..”

“அப்புறம்..”

“அப்புறம் விட்டுடனும்..”

“விடறதுக்கு எதுக்கு ப்பா பிடிக்கணும்?”

“அது ஒரு விளையிட்டு.. ஆனா மெதுவா தான் பிடிக்கணும் சரியா? அழுத்தி பிடிச்ச செத்துடும்..”

“ஓ ..”

“நீ பிடிச்சு காட்டு வீர்யா, எனக்கு பயமா இருக்கு..”

அந்த பட்டாம்பூச்சி பின்னே சுற்றுவதும், இவர்கள் நெருங்குகையில் அது  பறப்பதும், மீண்டும் தேன் குடிக்க அது ஆசை பட்டு வருவதும் என வராஹிக்கு  சுவாரசியமாக இருத்தது.

அரை மணி நேத்துக்கு பிறகு வீர்யா அதை பிடித்து காட்டினாள். பின் இருவரும் குஷியாக அதற்கு டாட்டா காட்டி பறக்க விட்டு விட்டார்கள்.

“இங்க பார்த்தியா வரா, அந்த பட்டாம்பூச்சி எனக்கு பிறந்த நாள் கிப்ட் கொடுத்திட்டு போய் இருக்கு” என்று தன் விரல்களை காட்டினாள்.

அதில் பட்டாம்பூச்சியின் உடம்பில் இருந்த வண்ணங்கள் ஒட்டி இருந்தது..

“வாவ்வ்…”

“சீக்கிரம் வா, இதை நான் பத்திர படுத்தணும்..”

“உனக்கு எவ்வளவு விஷயம் தெரியுது வீர்யா.. எனக்கு இது எல்லாம் தெரியவே இல்ல” என்றாள் வருத்தமாக.

“எனக்கு தெரிஞ்சா உனக்கு தெரிஞ்ச மாதிரி தானே, வா..வா..” என்று அவளுடன் வீட்டிற்குள் சென்றாள்.

“அந்த நோட் புக்கை எடு” என்று ஒரு புத்தகத்தை காட்டினாள்.

“சீக்கிரம், திற..” அதில் ஒரு வெள்ளை பக்கத்தை திறக்கவும், “இப்ப பாரு” என்று கூறி, தன் விரல்களை அந்த பக்கத்தில் வைத்தாள்.. கையில் இருந்த வண்ணம் அழகாக அதில் பதிந்தது..

“அழகா இருக்கு வீர்யா..”

பிறகு பக்கத்தில் இருந்த கலர் பேனாவை கொண்டு, “பட்டாம்பூச்சியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று எழுதி வைத்தாள்.

இருவருக்கும், நிவேதித்தா மாதுளை ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

இருவரும் குடித்து விட்டு உள்ளே விளையாடினார்கள்.

சிறிது நேரத்தில் வீர்யாவின் அண்ணன் ரகுநந்தன் அவர்களது அப்பாவுடன்  வந்துவிட்டான். அவன் கிரிக்கெட் கோச்சிங் சென்று இருந்தான்.

“வாம்மா … நீங்க தான் வராஹியா” என்று உற்சாகமாக வரவேற்றார் வீர்யாவின் தந்தை நிரஞ்சன்.

ரகுநந்தன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். ஆனால் நல்ல உயரம்.

“வீர்யா உங்க அண்ணா ரொம்ப டால் இல்ல?”

“ஆமா , ஆனா அவன் கிட்ட சொல்லாத.. ரொம்ப அலட்டிப்பான்..” என்றாள் தோழியிடம் ரகசியமாக.

“பேசாம நம்ம இரண்டு பேரும் ஒரு வீட்லயும், அண்ணா ரெண்டு பேரும் ஒரு வீட்லயும் இருந்திருக்கலாம் இல்ல.. ஜாலியா இருக்கும்..”

“அடி பாவிங்களா?” என்று இருவரையும் முறைத்து பார்த்தான் ரகுநந்தன்.

அனைவரும் மதிய உணவிற்காக அமர்ந்தார்கள்.

நந்தனும் வீர்யாவும் சென்று உணவு பாத்திரங்களை அடுப்படியில் இருந்து கொண்டு வந்து கீழே வைத்தனர்.

வாராஹிக்கு எல்லாம் புதிதாக தெரிந்தது. வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தாள்.

“நீங்களும் பசங்களோட சாப்பிடறீங்களா?” என்றார் நிவேதித்தா கணவரிடம்.

“நீயும் உட்கார்ந்திடு நிவே, நேரம் ஆயிடுச்சு இல்ல..” 

“இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” என்றாள் வீர்யா ஆர்வமாக.

“காளான் பிரியாணி, பூரி, பன்னீர் கிரேவி, அப்புறம் காலிஃளார் மன்ச்சூரியன், தயிர் சாதம்”

“சூப்பர் சூப்பர் அம்மா” என்று குதித்தாள் வீர்யா. 

உனக்கு இது பிடிக்குமா பிடிக்குமா என்று வராஹியிடம் கேட்டு கேட்டு வைத்தார் நிவேதித்தா..

வராஹியும் வைங்க வைங்க என்று அனைத்தையும் வாங்கிகொண்டாள்.

“சமர்த்து பொண்ணா இருக்காங்களே வராஹி.. எல்லாமே பிடிக்குதே” என்றார் நிரஞ்சன்.

அதில் வேறு வராஹிக்கு பெருமை.

அவளுக்கு காளான் உண்மையிலும் பிடிக்காது. அதனால் பிரியாணியை  தவிர்த்து அனைத்தையும் உண்ண தொடங்கினாள்.

மெல்ல, வீர்யா அவள் தொடையை சொரிந்தாள்.

“என்ன வீர்யா..”

“பிரியாணியை ஏன் அப்படியே வச்சிருக்க?”

“எனக்கு பிடிக்காது ப்பா?”

“அப்புறம் ஏன் வாங்கின?”

“இதுல என்ன இருக்கு?” என்று குழப்பமாக தோழியை பார்த்தாள்.

“எங்க வீட்ல தட்டுல வைச்சத வேஸ்ட் பண்ணக்கூடாது வரா..”

“எனக்கு பிடிக்காதே.. பிடிக்காட்டி எங்க வீட்ல வச்சிடுவேன்”

“அது எல்லாம் எனக்கு தெரியாது.. தட்டுல வச்சிட்டா சாப்பிடணும்.. அதான் எங்க வீட்ல”

“சாப்பிடாட்டி என்ன செய்வீங்க?” என்றாள் பீதியாக.

“சாப்பிடாட்டியா? தெரியலையே.. நாங்க எல்லாம் சாப்பிட்டிடுவோம்” என்று கூறி அவள் மீண்டும் உண்ண தொடங்கினாள்.

வராவின் அந்த பக்கம் உட்கார்ந்திருந்த ரகு நந்தனுக்கு இவர்கள் பேசியது கேட்டது..

“இங்க பாரு பாப்பா..”

வரா மிரண்ட பார்வையில் அவனை பார்க்கவும்,

“அது ரொம்ப ஈசி.. நான் சொல்ற மாதிரி செய்..”

அவள் அவனையே பாவமாக பார்க்கவும்,

“உனக்கு பூரி பிடிக்கும் தானே.. அதை எடுத்து, இப்படி அதுக்குள்ள பிரியாணியை  ஒளிச்சு வச்சுக்கோ..”

“ஓகே..”

“இப்ப அந்த பூரியை பன்னீர் கிரேவி தொட்டு பார்க்காம வாயில போட்டுக்கோ.. இப்படி பிடிக்காத்தை பிடிச்ச உணவுக்குள்ள ஒளிச்சு வச்சு சாப்டா, சாப்பிட முடியும்”

“நிஜமாலுமே வா..”

“ட்ரை பண்ணி  பாரு..”

வராஹியும் அவன் கூறியதை மாதிரி செய்து வாயிற்குள் வைத்து கொண்டாள்.

சரியாக அப்பொழுது, “அப்புறம், வீர்யா இன்னிக்கு ஈவினிங் என்ன எல்லாம் பிளான்?” என்று தங்கையிடம் கேள்வி கேட்டான்.

அவள் பேசவும், வராஹி அதை கவனித்து கொண்டே வாயில் உள்ளதை சாப்பிட்டு விட்டாள்.

அவளுக்கே தெரியாமல் அனைத்தையும் காலி செய்தும் விட்டாள்.

உண்மையிலே உணவை காலி செய்ததை பார்த்ததும் அவளுக்கே மகிழ்ச்சியாக இருந்தது.

“தேங்க்ஸ் அண்ணா..” என்றாள் திரும்பி அவனிடம் உள்ளார்ந்து.

அன்று  மாலை பிறந்தநாள் கொண்டாட்டாட்டம் எல்லாம் முடிந்து மகிழ்ச்சியாக வீடு திரும்பினாள் வராஹி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!