தலை உயர்த்தி அவனைப் பார்த்தவள் என்ன என கண் அசைவில் கேட்க, அவன் இதழில் தோன்றிய சிரிப்பு விழிகளில் பிரதிபலித்தது. திவ்யாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, “என்னாச்சு நாராயணா?” கேட்டவளிடம், ‘இல்லை’ என தலையை ஆட்டினான். அவன் பார்வையின் வித்தியாசம் கண்டவள், “இல்ல, ஏதோ இருக்கு.” என்றாள்.
ஆழி புயலில் சிக்கிய படகாய் தத்தளித்தவன் மனம், சொல்ல முடியாத உணர்வுகளோடு போராடிக்கொண்டிருந்தது. இல்லை என்றால் விடாமல், அவன் முகத்தையே ஒருவித சங்கடத்தோடு பார்த்து தவிக்கும் அந்த பெண்ணின் மனதினில், என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடும் என அவனும் தான் அறிவானே?! அவளால் அவனின் கம்ஃபோர்ட் ஜோன் பாதிக்கப்பட்டுவிட்டதோ என்கிற பதட்டம் அவளிடம்.
“கொஞ்சம் பொறுத்துக்கோங்க, இன்னும் கால் மணி நேரம் தான்.”
“எதுக்கு இந்த திடீர் அவுட்டிங்?”
“சும்மா, உள்ளையே இருக்க போர் அடிச்சது.” என்றாள்.
“ஓ…” உன்னை நம்ப மாட்டேன் என்றது அஸ்வின் பதில்.
அதோடு அவன் பார்வையும் சேர்ந்து வர, புரிந்து கொண்டாள் பெண் அந்த பார்வையின் பொருளை.
“ஏன், என் பட்டாம்பூச்சிக்கு சொல்ல தோனல?” மென்மையாக கேள்வி எழுப்பினான்.
“அப்டி இல்ல… எனக்கு செலிப்ரேஷன் எல்லாம் புடிக்காது. அப்டியே எப்பவும் போல இந்த நாளும் போகணும். ஒரு வருஷம் கொஞ்சம் எக்ஸைட் ஆகி, அடுத்த வருசமும் அதே சர்ப்ரைஸ் எல்லாம் எதிர்பாத்துடும் மனசு. அதான் எல்லாத்தையும் அப்டியே போற போக்குல விடணும்.”
பிறந்தநாளை சாக்காக வைத்து கேலி கூத்து, அதற்காக சுளையாக பல லட்சங்களை வாரி இறைத்து, அதனை சமூக வலைத்தளங்களில் போட்டு, பிறந்தநாள் வாழ்த்துகளை பெறும் மக்கள் மத்தியில், அமைதியாக அந்த நாளை கடந்து செல்லும் மக்களுள் ஒருவளாய், தன்னுடைய மனைவி இருப்பது பெருமையாக இருந்தது அஸ்வினுக்கு.
“ம்ம்…” என்றவன் கைகள் மெல்ல உயர்ந்து அவள் கன்னத்திற்கு வர, ஆரோஹி விழிகள் பெரிதாக விரிந்தது.
அதில், “கிரிக்கெட்டரே…” என்றாள் சுற்றம் மறந்து. அவன் செய்யும் செயலை அனுபவிக்க கூட முடியாதே அவளால்.
“கொஞ்ச நேரம் முன்னாடி நீ சிரிச்சதை, பலர் ஒரு மாதிரி பாத்தாலும் நீ நீயா இருந்தியே, இப்பவும் அப்டியே இரு.” யாரையும் கருத்தில் கொள்ளாமல், அவன் கட்டைவிரல் அவள் கன்னத்தில் மென்மையாக வருட, சொக்கிய கண்களை சிரமப்பட்டு விரித்தே வைத்திருந்தாள்.
உன்னை அறிவேன் நான் என அன்று அவளிடம் இறுமாப்பு தட்டியவன் எண்ணத்தை, தினம் தினம் உடைக்கிறாள் இந்த பெண். முதலில் அவளை முழுமையாக வாசிக்கவே கற்க வேண்டும் போலும்…
அவளது இந்த அலங்காரம் கூட அவளுக்கானது அல்ல, அவனுக்காக. அவனோடு வெளியே வருவதால் என இப்பொழுது தான் புரியவே செய்கிறது.
அவளிடம் யார் கூறுவர், வான்மதியானவளுக்கு வெளிச்சங்கள் என்பது அனாவசியமானதென.
பார்வையை அவளிடமிருந்து எடுத்தவன் சுற்றிப் பார்க்க, வயதான பலர் இவர்களை கோவமாக பார்ப்பதும், இளையவர்கள் பலர் அடிக்கடி திரும்பி பார்ப்பதும் தெரிந்தது.
உடனே இருவருக்கும் இடைவெளியை உருவாக்கினால், அவர்கள் நெருக்கம் கூட வெளியுலகிற்கு தவறாகி விடுமே… அவள் விரல்களோடு விரல் கோர்த்தவன் இறுக்கம், பல சாத்தியங்களை மௌனமாய் கொடுத்தது.
‘அஸ்வின்!’ இதே பெயரை வைத்து தான் உலகமே அவனை அழைக்கிறது. ஆனாலும் அவள் அழைப்பதில் மட்டும் இருக்கும் போதை, வேறு எவராலும் கொடுக்க முடியவில்லையே ஆணுக்கு.
“ஹாப்பி பர்த்டே பட்டாம்பூச்சி!” அவள் உயரத்திற்கு குனிந்து, தன்னுடைய வாழ்த்தை வைத்தவன் இறுக்கம், அவளது விரல்களின் பிணைப்பில் கூடியது.
அவன் அணிந்திருந்த மாஸ்க்கை அவிழ்த்து, அவன் இதழ்களில் தோன்றிய புன்னகையைப் பார்த்தால் மட்டுமே அவள் நாளானது முழுமையடையும் போல் இருந்தது ஆரோஹிக்கு.
“தேங்க்ஸ்!” என்றாள் முகம் எல்லாம் விரியும் புன்னகையோடு.
இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வரவிருந்த அவர்கள் நிலையத்தில் இறங்காமல், அதற்கு முன்பே அவளையும் அழைத்துக்கொண்டு, நேராக ஒரு பெரிய நகை கடைக்கு வந்து சேர்ந்தான். வழக்கம் போல் அஸ்வினை மக்கள் பார்க்கும் பார்வை இங்கும் மாறவில்லை. ஏதோ முகமூடி கொள்ளையனைப் பார்ப்பதை போல் சந்தேகத்தோடு, அவனை சுற்றி இரண்டு பேர் வந்து நின்றுகொண்டனர்.
அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், “வா!” என அழைத்துச் சென்று அவளுக்கு எது பொருத்தமாக இருக்குமோ, அத்தனையும் கை நீட்டினான்.
வெளியே இருந்த உற்சாகம் அவளுக்கு இங்கு வந்து சுத்தமாக இல்லை. “ரொம்ப க்ராண்டா இருக்கே எல்லாம்?” என்றாள் எதனையும் ஏற்றுக்கொள்ளாத பாவனையோடு.
“சரி, வா.” விறுவிறுவென வெளியே செல்லவிருந்தவன் கையைப் பிடித்து,
“ஏங்க கோவப்படுறிங்க?”
“இல்லையே ம்மா, வா போகலாம்.”
“சரி, நீங்களே எது வேணாலும் வாங்கி தாங்க. ஆனா சிம்பிளா…” அவள் கேட்கவும், மொத்த கடையையும் புரட்டினான் அஸ்வின்.
அவன் தேடும் தேடலில் எதையோ மனதினில் நினைத்து தேடுகிறானோ என ஆரோஹிக்கு சந்தேகம். கேட்டாலும் கோவம் வரும், அமைதியாகிவிட்டாள். இறுதியாக எடுத்தான் அந்த காப்பை. பிளாட்டினம் உலோகத்தில் ஆன அந்த ப்ரேஸ்லெட் பார்க்க அத்தனை மென்மையாக இருந்தது. தன்னுடைய கைகளில் எடுத்தவன் அதன் மென்மையை சோதித்து திருப்தியடைந்தவன், அதை எடுத்துக் காட்டினான்.
பளிச்சென்ற புன்னகையோடு கையை நீட்டினாள் ஆரோஹி. மெதுவாக அவள் கைகளில் போட்டு அழகு பார்த்தவன் கண்களுக்கு, பூவில் அமர்ந்து வண்டை பருகும் பட்டாம்பூச்சி மின்னியது. இரண்டு பட்டாம்பூச்சி ஒன்றை ஒன்று ஒட்டி உரசி நிற்பது போல் பதித்த காப்பு.
நிறைந்த புன்னகையோடு அஸ்வின் கண்கள் பளபளக்க, “ரொம்ப அழகா இருக்கு.” என்றாள், அவனுக்கு நன்றி சொல்ல மனம் வராமல்.
அதோடு நிறுத்தவில்லை அவள் கணவன். அவளுக்கு எதையாவது வாங்கி கொடுக்க அவன் கைகள் எல்லாம் பரபரத்தது. அதற்கெல்லாம் விதிவிலக்காக இந்த பெண் எதையும் வேண்டாமென தவிர்க்கிறாள். அவள் மனம் குளிர, அவளது ஆசைக்கிணங்க வகை வகையாக உணவு வாங்கி அடுக்கினான்.
தலையை உயர்த்தாமல் அதனை ஒரு கை பார்த்தவள், “உங்களுக்கு?” என கேட்டாள்.
வலுக்கட்டாயமாக அவள் அடியை கையை மடித்து நிறுத்தினான் அஸ்வின்.
“என் அப்பா எல்லாம், என் அம்மா பர்த்டேக்கு பட்டு சேரி எல்லாம் வாங்கி தருவாங்க. அத்தைக்கும் மாமா வாங்கி தருவங்களாமே, அப்படியா?”
“உனக்கு வேணுமா?” என்றான் அஸ்வின் நேரடியாக.
“எனக்கு சேரி கட்ட தெரியாதே…” உதட்டைப் பிதுக்கி சோகமாக கூறினாள்.
அவள் உதட்டோரம் இருந்த ஒரு பருக்கை உணவைத் துடைத்தவன், “நான் ஆள் வர வைக்கிறேன். இதென்ன பெரிய விஷயம்?” அவள் எதுவும் பேசவில்லை.
அடிக்கடி அவனிடம் ஏதோ கூற வருவது போல் வந்து அமைதியாகினாள். “என்கிட்ட என்ன தயக்கம்?”
“எனக்கு ஹால்ஃப் சேரி வாங்கி தரீங்களா?” தான் சரியாக கேட்டோமா என அஸ்வின் மீண்டும் கேட்டான்.
“ம்ம்… தாவணி தான்.” அவள் கேட்டு மாட்டேன் என்பானா? அழைத்துச் சென்று ஒரு கடையில் அவளுக்கான அளவுகளை எடுக்க கூறி, வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.
“எப்ப தாவணி வரும்?” இரவு உணவை முடித்து, அறைக்குள் சென்று மறையவிருந்த அஸ்வினை நிறுத்தி கேள்வி கேட்டாள்.
“தெரியல ஆரூ.” என்றான் கைப்பேசியை பார்த்தபடியே.
“கிரிக்கெட்டரே…”
“ம்ம்…” என்றான் பார்வையை அவளிடம் திருப்பாமல்.
“ரெண்டு நாள்ல நீங்க ஆஸ்திரேலியா போகுறீங்கல்ல?”
“ஆமா ம்மா, அங்க இருந்து வெஸ்ட் இண்டீஸ் போகணும். வர எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்.”
“நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ண போறேன்.” சத்தமின்றி வந்தவள் குரல், இரவின் அமைதியில் அஸ்வின் காதுகளில் சென்று விழுந்திட, இன்ப அதிர்ச்சியோடு அவளை ஏறிட்டான்.
இருவருக்கும் அடுத்தடுத்த அறையாக இருப்பதால் அறைக்குள் செல்லவிருந்தவர்கள், வாசலிலே நின்று உரையாடலை நிகழ்த்தினர்.
காலையிலிருந்து அவனோடு சுற்றி திரிந்தவளுக்கு நேரம் ஓட ஓட, அந்த நாளையே வெறுத்தது போல் ஆனது. நீண்டு கொண்டே செல்லாதா இந்த நாள் என ஏங்கி தவித்தாலும், தோல்வியே இறுதியில் கிட்டியது. இதோ நாளும் முடிந்துவிட்டது, அவனும் உறங்க தயாராகிவிட்டான்.
சுவற்றில் சாய்ந்து அவனைப் பார்த்தவள் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்துச் செல்ல, அவனுக்கும் தான் எத்தனை நொடிகள் பிடித்துவிட போகிறது. குண்டு கண்கள் கூறும் செய்தியை அவளை விட அவன் மனம் நன்கு அறிந்தது.
“உள்ள வரியா?” கேட்க கூடாதென நினைத்தவன், மனம் ஆறாமல் அவளிடம் கேட்டும் விட்டான்.
ஓரிரண்டு நொடிகள் பதில் கொடுக்காமல் தாமதித்து, “வேண்டாம்.” என்றாள் சோகமாக.
அவளைப் போலவே சுவற்றில் சாய்ந்து, “என்ன ஓடுது இந்த குட்டி மண்டைக்குள்ள?”
“உங்க கூடயே இருக்க சொல்லுது.”
அஸ்வின், “கேக்க வேண்டியது தான?”
ஆரோஹி, “வேணாமே…”
‘என்னடா இது சோதனை’ தலையைக் கோதி அஸ்வின் யோசித்து, தன்னுடைய அறைக்குள் சென்று போர்வை எடுத்து வந்து, இருவரது அறை வாசலில் போட்டுவிட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
உடனே அவன் செயலின் அர்த்தம் புரிந்தவள் இருவருக்குமான தலையணையை எடுத்து வந்து போட, இருவருக்கும் நடுவே கணிசமான இடைவெளி இருந்தாலும், மனம் மெல்ல மெல்ல மற்றவர் மனதோடு இறுக்கமாக ஒட்டி பிணைந்துகொண்டது.
பேச்சு மெல்ல வளர்ந்துகொண்டே செல்ல, தன்னையறியாமல் அஸ்வினை நெருங்கி வந்துவிட்டது பெண். பேச்சின் ஸ்வாரஸ்யத்தில் இருவரும் அதை கவனிக்க தவறியிருந்தனர். ஒருவர் வெப்பத்தை மற்றவர் பெற்று மொத்தமும் மறந்து நின்ற தருணத்தில், அஸ்வின் கைப்பேசி சிணுங்கி இருவரின் பொன்னான நேரத்தைச் சீண்டியது.
எடுத்து பேசியவன் அவளிடம் ஒரு நிமிடமென சைகை செய்து எழுந்து கீழே சென்றான். அந்த நிமிடம் வரை படத்தில் இல்லாத கவனம், அவன் சென்ற பிறகே வந்தது. இரண்டே நிமிடத்தில் வந்த அஸ்வின் பின்னே ஒரு பெண்.
“ஹாய்!” விகல்பம் இல்லாமல், சிரித்த முகமாய் தன்னைப் பார்த்த ஆரோஹியை, அந்த பெண்ணுக்கு முதல் பார்வையிலே பிடித்துப் போனது.
“ஆரூ, அவங்க கூட போ.”
“எதுக்கு கிரிக்கெட்டரே?”
“போடா, நீ கேட்ட தாவணி வந்துடுச்சு.”
சோர்வாய் சோம்பல் முறித்தவள், “அது எப்படி ஒரே நாள்ல வரும்? எனக்கு தூக்கம் வருது, தூங்கவா?”
“இல்ல மேம், ஹாஃப் சாரீ குடுக்கதான் நான் வந்தேன்.” அந்த பெண் கூறவும், அடித்துப் பிடித்து எழுந்த பாவை, அவள் அறையை நோக்கிச் செல்ல, அவர்களைத் தடுத்து அவன் அறைக்குள் அஸ்வின் அனுப்பியதன் காரணம் அவனுக்கே தெரியவில்லை.
நிமிடங்கள் கடந்த பிறகு கதவு திறக்க, ஆரோஹியை எதிர்பார்த்து ஒரு ஆவலோடு அஸ்வின் தலையைத் தூக்க, வெளியே வந்ததோ அந்த பெண். வந்தவள் அஸ்வினிடம் சிறிய புன்னகை கொடுத்து, அறைக்குள் சென்று மறைந்தாள். மீண்டும் வெளியே வந்து அவன் அறையின் வாசலிலே நின்று, ஆரோஹியிடம் ஒரு பையை நீட்டிவிட்டு, அஸ்வினிடம் நன்றி கூறி விடைபெற்றாள்.
இவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை. நிற்பதும் நடப்பதுமாய் அல்லாடிக் கொண்டிருந்தவனுக்கு, கதவின் ஓசை கவனத்தை ஈர்த்தது. முழுதாய் தரிசனம் கொடுப்பாள் என எதிர்பார்க்க, அவன் மனைவியோ தலையை மட்டும் வெளியே தள்ளி, அவனைப் பார்த்து குறும்பாய் சிரித்தாள்.
“வெளிய வா ஆரூ.”
“வர்றேன், ஆனா இந்த மாதிரி அடிக்கடி தாவணி வாங்கி தர்றேன்னு சொல்லுங்க.”
சிரித்தான், இதெல்லாம் அவள் சொல்லவும் வேண்டுமா? அவள் விருப்பம், ஆசையை அவளே அலுத்துப் போகும் வரை விடப்போவதில்லையே அவள் கணவன்.
“சரி, வா.” சோதனைக்கென்றே நேரம் எடுக்கிறாள் இவள் என்கிற கோவம் மெல்ல துளிர்த்தது.
வெட்கம், நாணம் எதையும் அதிகம் காட்டாது, முலாம் பூசாமல் சாதாரணமாக வந்து அவனை மொத்தமாய் சொக்க வைத்துவிட்டாள் இந்த சண்டாளி. அவன் கேட்டு அவளுக்கு பிடித்த அடர் நீல நிற தாவணியை அவன் கூறியிருக்க, அவனுக்கு பின்பு சென்று ரகசியமாக சிகப்பு நிற தாவணியை மாற்றம் கூறி வந்துவிட்டாள். ஏற்கனவே சிறிய பெண் போல் தான் உடற்கட்டமைப்பு, இதில் தாவணி வேறு.
எடுத்துக் கொடுத்த தன் மீதல்லவா அவன் குற்றத்தை வைக்க வேண்டும். இப்படி கிச்சென இரண்டாம் தோல் போல், அவள் உடல் அங்கங்களின் நெளிவு, சுழிவெல்லாம் அதிபதியாக தெரிகிறதே. அதில் மோட்சம் பெற்று சற்று மூச்சு வாங்கியது அந்த செல்ல இடை. நிறம் மங்கிய நிறத்தில், அன்று உடுத்தியிருந்த புடவையில் தப்பித்திருந்த அவள் இடையே அன்று வசீகரித்தது. இன்றோ அடர்ந்த நிறம். அதோடு விட்டாளா?
அவன் தேடி தேடி எடுத்த அந்த காப்பு அவள் கைகளில் வைரமாய் மின்னியது. பெருமூச்சோடு பின்னந்தலையைக் கோதியவன் விரல்கள் தடுமாற, முன்னுச்சியை மீண்டும் மீண்டும் கோதி சிரமப்பட்டான்.
“நல்லா இருக்கா, இல்லையா?” எதிர்பார்ப்பை கண்ணில் தேக்கி வைத்துக் கேட்டவளிடம், ‘கொல்லுறடி…’ என கிறங்கி கூற நா பரபரத்தது.
வார்த்தை வெளியிடாமல் மெச்சுதலான பார்வையோடு அழகாய் இதழ் விரித்தான். கோடி வார்த்தைகள் கூறி பாராட்டினாலும், அந்த கிறக்கமான மெச்சுதல் சிரிப்பிற்கு ஈடாகிடுமா?
“இந்த தாவணிக்கு காண்ட்ராஸ்ட்டா இந்த டார்க் கிரீன் பட்டு பார்டர் ரொம்ப அழகா இருக்குல்ல? ரொம்ப அழகா டிசைன் பண்ணிருக்காங்க.” விடாமல் உடையையும், அதனை வடிவமைத்தவரையும் பாராட்டி தள்ளிக்கொண்டே ஆரோஹி போக,
உணர்வுகளின் பிடியில் இருந்த அஸ்வின் கட்டவிழ்த்த காளையாக, ஒரே எட்டில் வஞ்சியவளின் வஞ்சனையான இடை வளைத்து நெஞ்சோடு இறுக்கினான்.
“ஹா…” விழுக்கென திண்ணமாக திடமேறியிருந்த அவன் மார்பினில் மோதிய ஆரோஹி, விழிப்போடு அவன் கண்களைப் பார்க்க, அதில் அவள் கண்டறிந்த சொக்கலில் தலையே கிறுகிறுத்தது.
‘இப்டி பாக்காதய்யா கிரிக்கெட்டரே…’ சிணுங்கியது பெண்ணின் மனம்.
“ஏன் தாவணி மேல உனக்கு இவ்ளோ ஆசை?” இப்படி நெருக்கத்தில் வைத்து கேள்வி கேட்டால், எப்படி பதில் கொடுக்க முடியும்?
விழி விரித்து தன்னையே கண் சிமிடாது பார்த்தவள் நெற்றி முட்டினான், “ம்ம்… சொல்லுடா.” என்று அவள் பூ முகம் எங்கும் அலைபாய்ந்தது அவன் பார்வை.
“அம்மாவோட சின்ன வயசு பழைய போட்டோஸ்ல பாத்து அப்பாகிட்ட ரொம்ப கேட்ருக்கேன். வாங்கி தர்றேன்னு சொன்னவர் வாங்கியே தரலை கடைசி வரை. அப்டியே விட்டுட்டேன், இப்போ கேட்டுட்டேன்.” பெற்றவர் பற்றிய வேதனையை மறைத்து சிரிப்போடு கூறினாள்.
அவள் மனதின் ரணத்தைக் கிளறாமல், “நீதான் வேலைக்கு போனியே, வாங்கிருக்கலாமே?” கேள்வி எழுப்பினான் மனைவியைத் தன்னோடு மேலும் இறுக்கி.
“தெரியல” நெளிந்தது பெண்.
“நகராதடி…” அதட்டினான், “அம்மாகிட்ட கேட்ருக்கலாமே, ஏன் என்கிட்ட கேட்ட?”
தலை கவிழ்ந்தாள் அவன் கேள்வியில். “நீங்க தானே…” அவள் பேச வருவதை உணர்ந்து, நாடியைப் பற்றி தலையைத் தூக்கினான்.
“புருஷன்னு சொல்லக்கூடாது, உண்மையான ரீசன் வேணும் எனக்கு.” மன்றாடினான்.
பெரும் தயக்கம் தொண்டையை அடைக்க வார்த்தையை கடினப்பட்டு உருவாக்கினாள். “நான் ஒடம்பு சரியில்லாம படுத்தா, அப்பாதான் எப்பவும் தூங்காம விடிய விடிய என்னை பாத்துக்குவாங்க. வாரம் தவறாம சண்டே அப்பா சமையல் தான். எனக்காக ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து செய்வாங்க.” குரல் கமற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
இதற்கு மேல் அவனுக்கு விளக்கம் வேண்டுமா? அவனின் ஒவ்வொரு செயலிலும் தந்தையைத் தேடி, வெற்றியும் பெற்றுவிட்டாள் என, இதற்கு மேல் வெளிப்படையாக சொல்ல தோன்றவில்லை ஆரோஹிக்கு.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் அடிவயிற்றினில் பட்டாம்பூச்சி பறக்குமாமே?! அவனுக்கு பறந்தது, அவன் பட்டாம்பூச்சியாலே…
தேஜஸ் முகத்தில் பிரகாசமாக மின்ன, மீண்டும் கவிழ்ந்து கிடந்த அவள் முகத்தை, ஒற்றை விரல் கொண்டு தூக்கினான். காணக்கிடைக்கா வரம் போல் கண் இமைக்காது, அந்த மதி முகத்தை உள்வாங்கி மெல்ல மெல்ல தலை கவிழ்ந்தான்.
‘இதுதான்’ என அவள் இதயம் அடித்துக் கூற, இதழ் விரித்து அவளது பஞ்சு கன்னத்தில் மீசை உரச அழுத்தமாய், மிக அழுத்தமாய் இதழ் ஒற்றி, கிறக்கமாய் அவள் கன்னக் குழியில் புதையுண்டு போனான் ஆரோஹியின் கணவன் அஸ்வின் நாராயண்.
புதையுண்ட குழியில் முக்தி பெறவே சென்றவன் போல் அசையவே இல்லை. கன்னம் தொட்டு, நாடி உரசி, மறு கன்னத்தில் இளைப்பாறினான். அவனுக்கு உணர்வுகளைக் கட்டி வைக்க போராட்டம் என்றால், அவனவளுக்கோ இன்ப அவஸ்தை. எத்தனை தரம்தான் உணர்வுகளைப் போராடி பூட்டி வைப்பது?
‘உன்னால், உன் வருகையால், உன் நெருக்கத்தால் என்னுள் எந்த மாற்றமும் எழவே இல்லை’ என பொய் கூறியே, நரகத்தில் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தாயிற்று. இனியேனும் மோட்சத்தை தேடிச் செல்லத் தோன்றியது.
“சொக்க வக்கிறடா ஆரூ…” தன் கண்ணெதிரில் குழைந்து நிற்கும் அவன் அவஸ்தை, அவளை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கியது. பாரபட்சம் இல்லாமல் வளர்ந்திருந்த அவனுடைய நான்கு நாள் தாடி, பெண்ணை கூசி சிலிர்க்க செய்தது. தயங்காமல் அவன் கன்னத்தை இரு கை கொண்டு பிடித்து விலக்கப் பார்க்க, மெல்ல தலை அசைத்து அதற்கு மறுப்பு தெரிவித்தான்.
“கொஞ்சம் நேரம் சும்மா இருடா…” என்ற அஸ்வினின் இதழோ அவள் கன்னத்தையே குத்தகைக்கு எடுக்க,
“என்ன பண்றீங்க?” என்றவளுக்கு வெறும் காற்று மட்டுமே வெளிவந்து, அவன் மூச்சின் உஷ்ணத்தைக் கூட்டியது.
தான் வைத்த பெயருக்கு ஏற்றாற் போலவே பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் விழிகளோடு, தன் தோள் பற்றி நின்ற பெண்ணின் அந்தக் கேள்வியிலே அவன் இதழ்கள் மந்தகாசமாய் விரிந்தது.
“என்னென்னவோ பண்ணத்தான் தோனுது. ஆனா என் பட்டாம்பூச்சி பயந்திட கூடாதுனு தான், வெறும் கிஸ்ஸோட நிறுத்திருக்கேன்.” என்று கிசுகிசுப்பாய் உரைத்தவனின் இதழ்கள், அவள் கன்னத்தினையே உறைவிடமாய் கொள்ள,
பெண்ணின் மறுப்புகள் விலகி அணைப்புகள் இறுகியது, இன்ப அரங்கேற்றத்தின் ஒத்திகையாய்.