எப்பொழுதும் உடன் பயணிக்கும் மெய்காப்பாளர்களை அந்த கிராமத்தின் ஒரு மூலையில் நிறுத்தி வைத்த சித்தார்த், தன்னுடைய உடைகளை களைத்து எளிதான உடைக்கு மாறியிருந்தான்.
“சார் இன்னும் ஒரு மணி நேரத்துல டிசைனிங் டீம் கூட மீட்டிங். ப்ராஜெக்ட் ரெவ்யூ காட்டணுமாம் உங்ககிட்ட”
காற்றினில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அங்கிருந்த செடி அருகே சென்று முகத்தை கழுவியவன் தன்னுடைய காரியதரிசி கூறியதை கேட்டது போல் இல்லை.
ஆனால் அவனுக்கா கேட்காமல் போகும். கிட்டத்தட்ட ஆறு மணி நேர பயணம் சென்னை மாநகரத்திலிருந்து. வழியெங்கும் தொழில் சார்ந்த பேச்சுகள் தான் அவனிடம் அதிகமிருந்தது, இனி ஒரு நாளுக்கு தாக்குப்புடிக்கும் அவன் அலுவலகம் அவன் இல்லாமல்.
“சார்…” மீண்டும் அந்த காரியதரிசி அழைக்க, முகத்தை துடைத்தவன், “நான் இல்லாம அங்க வேலை தானா நடக்கும். எந்நேரமும் என்ன நம்பி தான் இந்த பிஸ்னஸ் இருக்குன்னா நான் சரியா வேலை பாக்கலனு அர்த்தம்”
மீண்டும் காரினை திறந்து ஒரு பையை எடுத்தவன் அதிலிருந்த பணப்பையில் பணமில்லாததை பார்த்து, “காசிருக்காடா கணேஷ்?” என்றான் அவனிடம் மீண்டும் திரும்பி.
அவன் கேட்டது தான் தாமதம், சுற்றி நின்ற ஐவரும் ஒன்றை போல் இருந்த அனைத்தையும் எடுத்து நீட்டினர். நீட்டியவற்றிலிருந்து இரண்டு ஐநூறு தாள்களை எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான்.
“நான் கால் பண்றப்போ வந்தா போதும். எந்த கால்ஸ், மெசேஜ் எதுவும் வர கூடாது. ஆரோஹி சம்மந்தமான விஷயமா இருந்தா மட்டும் தான் கால் வரணும்”
தான் அலுவலுக்காக பயன்படுத்தும் கைபேசியை கணேஷிடம் ஒப்படைத்து அந்த சிறிய தார் சாலையில் நடந்தவனிடம் எத்தனையோ மல்லுக்கட்டி பார்த்தனர் ஊருக்குள் விட்டு வருகிறேன் என, அடங்கவே இல்லை.
இதோ இப்பொழுது நடக்கிறான், அந்த முக்கிய சாலைக்கும் அந்த ஊருக்கு செல்லும் சாலைக்கும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தொலைவு இருக்கும். நடந்தே சென்றான்.
கால் நோக அவளிடம் செல்வது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல, நன்றாக இருட்ட துவங்கிய வேளை கூட தான் வந்தது சரியான நேரம் என்றே உணர்ந்தான்.
இல்லையேல் இந்த வழி தடங்களை பார்த்து அதற்கொரு மனம் அழுது புலம்புமே, எப்பா அதனை சமாளிக்க அவனிடம் தெம்பில்லை. இருந்தாலும் ஓரிரு பாதைகளை பார்த்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை, அதோடு மன பாரமும்.
“தம்பி ஆட்டோ வேணுமா?” தன்னை ஒட்டி நடக்கும் வேகத்திற்கு வந்தது அந்த ஆட்டோ.
“இல்ல ண்ணே” தன்மையாக மறுத்தான்.
“மொத்த காசும் குடுக்க வேணாம்ய்யா, ஷேர் ஆட்டோ காசு குடுத்தா போதும்” என்றார் அவர் விடாமல்.
பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து காட்டி, “இதுக்கு சில்லறை இருந்தா சொல்லுங்க தாராளமா வர்றேன்”
அவரோ அவனை மார்க்கமாய் பார்த்து, “நீ நடந்தே வா ப்பா” என கூறி அவர் விலக சித்தார்த் இதழில் மீண்டும் புன்னகை.
அந்த சிறிய ஊரின் அத்தனை தெருவும் அவனுக்கு பரிட்சயமான ஒன்றாக இல்லை என்றாலும் ஓரளவிற்கு தெரிய, மக்கள் பதவிசாக உடுத்தி போகும் உடையை பார்த்தே அவர்களை பின் தொடர்ந்தான்.
சிறிய திருமண மண்டபம் தான். பார்த்ததுமே பெருமூச்சு ஒன்று எழ தடையில்லாமல் மண்டபத்தினுள் நுழைந்தான்.
மேள சத்தம் வாயிலில் அடி எடுத்து வைக்கும் பொழுதே காதில் கேட்க கண்களை இறுக்கமாக மூடி திறந்தவன் நெஞ்சினில் தன்னுடைய திருமணம் நிழல் படமாய் ஓடியது. கால்கள் வேரூன்ற நின்றவன் காலில் ஏதோ ஒரு குழந்தை இடித்து செல்ல சுயம் பெற்றவன் மேலும் முன்னேறினான்.
நிச்சயத்திற்காக அந்த திருமண மண்டபமே பேரின்பத்தில் குதூகலித்திருந்தது. ஒரு கோடியிலிருந்த நாற்காலியை பார்த்து அமர்ந்துவிட்டான்.
நடக்க வேண்டிய வேலை எல்லாம் அமோகமாக நடந்தது. எதற்கும் எந்த விதமான பாவனையும் அவனிடம் இல்லை. மணமகன் சகல மரியாதையோடு மனமேடையை அலங்கரிக்க அந்த ஆண் மகனின் தோற்றத்தை கன்னத்தில் கை வைத்து உள் வாங்கினான்.
வாட்டசாட்டமான ஆண் மகன் தான். முப்பத்தி மூன்று வயதாம். அதற்கு சான்றாய் அவனிடம் சிறு மாற்றம் கூட இல்லை. முப்பது வயது என்று கூறினால் கூட நம்பலாம்.
அடுத்து பெண்ணை அழைத்து வராமல் புடவையை வாங்கி ஒரு கூட்டம் அறையினுள் நுழைய அடுத்த பத்து நிமிடத்தில் மொத்த மண்டபமும் அங்கு பார்வையை பதித்தது.
“என்னங்க இது, கொஞ்சம் பொறுமையா பொண்ணு தேடிருக்கலாமே, நம்ம வீட்டு பையனுக்கு அப்டி என்ன குறை”
“ரெண்டாவது கல்யாணம்ல அதுவே ஒரு பின்னடைவு தான். அதுனால கூட குறையுள்ள பொண்ண பாத்துருப்பாங்க”
தனக்கு முன்னே இருந்த ஒரு தம்பதி பேசுவதை கேட்ட சித்தார்த் கைகள் இறுக்கமாக மூடின கோவத்தின் விளைவாய்.
அவர்கள் பேச்சு மேலும் தொடர மனமேடையை நோக்கிய சித்தார்த் பார்வை அலைபாயும் அவளது பார்வையை சந்தித்தது.
மேடை வரும் வரை அமைதியாக வந்தவள் ஏதோ உணர்ந்தவளாய் மொத்த மண்டபத்தையும் அலச இங்கே அமைதியாக அமர்த்திருந்தவனுக்கு உல்லாச புன்னகை. பின்னங் கழுத்தை நீவி நன்றாக தூணின் மறைவில் அமர்ந்தான்.
அவன் பார்வை மொத்தமும் அவள் மேல் இருக்க, அவளோ ஒரு பார்வைக்காக ஏங்கியோ பயந்தோ தடுமாறினாள்.
“ஜனனி… இங்க பாருடி” அவளது கையை அழுத்தமாக பிடித்த அவளது சித்தியிடம், “சித்தி…” என இயலாமையோடு அழைக்க, “மூடிட்டு இந்த மோதிரத்தை போட்டுவிடு, இல்ல நாளைக்கே சோத்துல விஷம் வச்சு எல்லாரும் செத்துடுவோம்”
முகத்தில் தென்பட்ட அந்த சில நிமிட உணர்வுகளை துடைத்தவளாய் மீண்டும் இருகினாள் பெண். இயந்திர கதியில் நிச்சயம் முடிய மீண்டும் வீட்டினில் நுழைந்தவன் இதயமெல்லாம் உணர்ச்சி துடைத்து உயிரற்ற நிலையில் இருந்தது.
உறக்கம் தீண்டாமல் அறையில் அமர்த்திருந்தவளுக்கு கதவு தட்டும் சத்தம் எரிச்சல் மூட்டியது. சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் சத்தம்… அவளது மனநிலையில் அது சுத்தமாக காதினை சென்றடையாமல் போனது.
மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டு, “என்னங்க சித்தி?” மனதின் குமுறலில் வார்த்தைகள் கூட்ஸ் மெல்லிய காற்றாய் தான் ஒலித்தது.
அழைப்பு வந்த பக்கமோ பேரமைதி நிலவ அப்பொழுது தான் அந்த அமைதியான இரவு வித்தியாசமாய் இருந்தது. இது அவள் வசிக்கும் வீடு இல்லையே, இத்தனை மென்மையாய் ஒருநாளும் அவள் சித்தி அவளை அழைத்தது இல்லை.
அந்த இரும்பு கட்டிலில் இருந்து எழுந்தவள் கதவினை திறக்க, தன்னை பார்த்து மெல்லிய புன்னகை சிந்திய சித்தார்த்தை பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது.
திக்ப்ரமை பிடித்தவளாய் சில நொடிகள் விழி சிமிடாது பார்த்தவளிடம் புருவன் உயர்த்தி என்ன என அவன் கேட்கவும் தான் நினைவிற்கு வந்தவளாய் அவனை தாண்டி வீட்டினை பார்த்தாள் பரபரப்போடு.
“ஹாய்” என்றான் எதுவும் நடவாதது போல்.
“இங்க என்ன பண்றீங்க?” அவனிடம் கேட்டாலும் அவனை தாண்டி தன்னுடைய சித்தியின் அறையை பார்த்தாள்.
மூடி தான் இருந்தது. ஓரிரு சொந்தங்கள் வரவேற்ப்பையை ஆக்ரமித்திருக்க எவர் எழுந்தாலும் அது தனக்கே பிரச்சனை என பயத்தோடு பார்வையை அங்கும் இங்கும் சிதறவிட்டாள்.
கேள்வி கேட்ப்பட்டவனோ அவளை கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைய, வேகமாக உள்ளே வந்த ஜனனி, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க, வெளிய போங்க” அவசரப்படுத்தினாள் அவனை.
சித்தார்த் மும்முரமாக தன்னுடைய பையிலிருந்து எதையோ தேட, “நீங்க எதுக்கு இங்க வந்திங்க, இப்படியா நடு ராத்திரி ஒரு பொண்ணோட வீட்டுக்கு வந்து நிப்பிங்க”
“ஷ்” தன்னுடைய உதட்டில் விறல் வைத்து அமைதி காக்க கூறினான்.
“யாரவது எழுந்துட்டா என்ன தா..”
“ஷ்” மீண்டும் அமைதிப்படுத்தி கட்டிலை காட்டினான் அவளை அமர கூறி.
“மாட்டேன். வெளிய போங்க. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?” பிடிவாதமாய் கூறியவள் குரல் எப்பொழுதும் போல மெல்லிய ராகமாக தான் வந்தது.
“காம் டவுன்”
அவள் பதில் கேட்காமல் அவள் முன் மண்டியிட்டு சித்தார்த் அமர, வேகமாக சென்று கதவினை தாளிட்டு, “எந்திரிங்க” என்றாள் அதிகாரமாக.
அவனோ தன்னுடைய கைலிருந்ததை எடுத்து அவள் புடவையை கீழே சற்று தூக்க, பதறிய ஜனனி பின்னே நகர முயல அவள் கால் பற்றி நிறுத்தினான்.
“மண்டபத்துல யாரை அப்டி தேடுன?”
இதென்ன இரவின் சதியா? ஒரு மனிதன், அதிலும் தான் அதிகமாய் வெறுக்கும் மனிதன் சாதாரணமாக தான் பேசுகிறான், என்ன குரலின் கணம் குறைந்துள்ளதே தவிர வேறு எந்த விதமான மாற்றமும் இல்லை.
அதற்கே அவள் எந்த மாதிரி உணர்ந்தாள் என்றே கூற முடியவில்லை. அந்த குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு, இனம்புரியாத வேகம், ஆவேசம் என அவளது உணர்வுகள் குவியலாய் பெருக்கெடுக்க, அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூட கொடுக்க முடியவில்லை.
“நான் கற்பனை பண்ணிட்டேன். என்னோட ஸ்ரீ என்னை மட்டுமே தேடுனானு கற்பனை பண்ணி சந்தோஷப்பட்டேன்”
தன் கண் பார்த்து பேசியவன் குனிந்து அவள் புடவையை இம்முறை தூக்க அதிர்ந்து நின்றவள் எதுவும் செய்யவில்லை, மென்னகை மறைத்து அவளது பாதத்தை வருடியவன் தான் பார்த்து பார்த்து வாங்கிய அந்த வெள்ளி கொலுசினை அவளுக்கு இரு கால்களிலும் அணிவித்தான்.
பேச்சற்று அவனை தடுக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் திண்டாடிய ஜனனி ஸ்ரீ உணர்ச்சியற்று அவனை பார்க்க, அவள் முகம் பார்த்து பாதங்களை மீண்டும் வருடினான். குழந்தையின் ஸ்பரிசம் ஒத்து இராவிடினும், மங்கை பாதமும் கூட தனி மென்மையே.
“இந்த பொண்ணு கொலுசு சத்தம் எனக்கு கேட்டுட்டே இருக்கும்” என்றவன் என்ன நினைத்தானோ குனிந்து அவள் வலது பாதத்தில் இதழ் பதிக்க, உணர்வு குவியலாய் உடல் சிலிர்த்து தளர்ந்து போனாள் பெண் பாவை.
அவளது அதிர்ந்த தோற்றத்தில் இவனுக்கு இங்கு மூச்சு முட்ட கதவினை திறந்து வெளியே வந்தான். வாசல் திறந்து தான் இருந்தது, வந்த வழியே செல்லவிருந்தவன் யூ டர்ன் அடித்து மீண்டும் அவள் அறை செல்ல எப்படியோ கட்டிலை பிடித்து அமர்ந்திருந்தாள்.
திரும்ப சித்தார்த்த வந்து நிற்பதை பார்த்து எழப் போனவள் தோள் பிடித்து அமர வைக்க இவளுக்கோ உடல் வெடவெடத்தது.
அவளுக்கு தான் அதிர்ச்சி போதாதென நினைத்தான் போல நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைத்து அந்த குண்டு கண்களை பார்த்து, “இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன். தேங்க்ஸ்”
அவள் சருமத்திலிருந்து பிரிய மனமில்லாமல் அவள் கன்னத்திலும் இதழ் தடத்தை ஒத்தியவன் நாசி கொண்டு அவள் ஒற்றை கண்ணீரை துடைத்து விலகினான்.
மூச்சு விடவே சிரமம் ஏற்பட தவித்தவள் கன்னத்தை செல்லமாக தட்டி, “தூங்கு குட் நைட்” என கூறி அவன் சென்றுவிட்டான். அவளுக்கு தான் அன்றைய இரவும் உறங்கா இரவாகி போனது.