அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வரும் அந்த இரண்டு நாயைப் பார்த்தவன் முகம் ஆசை சுமந்து நிற்க, அவன் மனைவியோ பயத்தை சுமந்து நின்றாள்.
போராடி பார்த்துவிட்டாள் பெண், அவனிடமிருந்து கையை உருவ, அவனோ விடவே இல்லை. ஏதோ செய்கிறாள் என நினைத்தவன் கவனம் முழுவதும், அவனது இரண்டு நாய்கள் மீது இருந்தது.
அஸ்வின் செல்ல பிராணிகளோ ஓடி வந்து முதலில் அஸ்வினைப் பார்த்தாலும், அவனுக்கு அருகில் புதிதாக நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் ஒரே நொடியில் அவளை நோக்கி திரும்பிட, அஸ்வின் கரங்களை உதறி தள்ளி அலறி ஓடியவளை விடாது, எளிமையாக இரண்டும் சூழ்ந்து கொள்ள அவ்விடத்தையே ரணகளப்படுத்தி விட்டாள் ஆரோஹி.
அஸ்வின் தானும் அவளுக்கு அரணாக முன்னே வந்து நின்று, “டேய், இது நம்ம பொண்ணுடா, குரைக்காதீங்க.” என்றபிறகே அவை சற்று ஆசுவாசமடைந்தன.
இதையே சாக்காக வைத்து அவ்விடம் விட்டு தப்ப எண்ணி மெல்ல தப்பித்தவளை, இந்த முறை பாசத்தோடு அவைகள் தொடர, அவ்விடத்தையே அஸ்வினுக்கும் அவன் செல்ல பிராணிகளுக்கும் பலமுறை சுற்றி காட்டிவிட்டாள்.
அவனோ அவளைப் பிடித்து நிறுத்த போராடி பார்த்துவிட, அசைந்தே கொடுக்கவில்லை அவள். அவன் வேகத்தை விஞ்சியிருந்தாள் பெண். ஒரு வழியாக அவை இரண்டையும் பிடித்து வைத்து மூச்சிரைக்க நின்றவளிடம்,
“நான் தான் நில்லுன்னு சொல்றேன்ல, அப்டி என்ன நம்பாம ஓட்டம்?” என்றவன், “இது காப்பர்…” கருப்பு நிறத்தில் இருந்த நாயைக் காட்டி கூறியவன், வெள்ளை நிறத்தில் இருந்த நாயைப் பார்த்து, “இது மேவரிக்.”
“ஆமா ரொம்ப முக்கியம், வச்சிருக்குறது நாட்டு நாய், பேர் மட்டும் ஃபாரின் நாய் பேர். சுப்பிரமணி, பால்பாண்டினு வைக்க வேண்டியது தான? அப்டியே புடிச்சுக்கோங்க, நான் உள்ள ஓடிடுறேன்.” நகரப் போனவளைப் பார்வையாலே நிறுத்தினான்.
“முறைக்காதீங்க, நான் தான் கோவப்படணும். வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல, புடிச்சு இழுத்து வச்சிருக்கீங்க? நான் போறேன்.”
“நீ போனா நான் ரெண்டு பேரையும் விட்டுடுவேன்.”
தன்னைப் பார்த்து வாலாட்டி நின்ற அவை இரண்டையும் பார்த்தவள் அவனை கெஞ்சலோடு பார்க்க, “இனி இதுதான் உன் வீடுனு ஆச்சு. அப்போ நீ இவங்கள பழகி தானே ஆகணும்? எத்தனை நாள் இப்டியே ஓடுவ?”
ஆரோஹி, “அதுங்க என் பக்கம் வராம இருக்கவரை.”
அஸ்வின், “பிடிவாதம் புடிக்காத, நான்தான் இருக்கேன்ல? என்னை நம்பி பக்கத்துல வா ஆரூ.”
அவனிடமிருந்து வந்த அவளது பெயர் உச்சரிப்பில், கண் சிமிட்டி நம்பாமல் அவள் அப்படியே நிற்க, “ஆரூ…” மீண்டும் அழைத்தான் அஸ்வின்.
“ஆ…?”
விழித்தவளிடம், “பக்கத்துல வா.” என்றான்.
அவனுக்கு, அவனுக்கு நெருக்கமானவை அனைத்தும் அவளுக்கும் நெருக்கமாக வேண்டும் என்கிற ஆசை. அதனால் தான் அவள் மறுக்க மறுக்க மீண்டும் அவளிடமே வந்து நிற்கிறான்.
இந்த இரண்டு நாய்களும் பிறந்து சரியாக இருபதாவது நாள், அஸ்வினிடம் வந்தது. அன்றிலிருந்து அவை இரண்டும் அஸ்வின் பொறுப்பானது. அவனைப் பார்த்தாலே ஓடி வந்து காலை சுற்றி, அவன் மேல் பாய்வது, அவன் சில நேரம் வீட்டினுள்ளே நடக்கும் பொழுது, அவனுக்கு பின்னாலே வால் பிடித்து ஆளுக்கு ஒரு பக்கம் நடக்க என, அஸ்வினுக்கு அவை இரண்டின் மேலும் அதீத பிரியம்.
“இல்ல, நான் இங்கையே நின்னுக்குறேனே… கொஞ்சம் கொஞ்சமா பழகுறேன். பாருங்க, கை எல்லாம் இன்னும் நடுங்குது. ப்ளீஸ் கிரிக்கெட்டரே…” கை இரண்டையும் அவன் முன்பு நீட்ட நிஜமாகவே அவை நடுங்கியது, அதோடு அவள் முகம் எங்கும் வியர்வைத் துளிகள் வழிய சிரித்துவிட்டான்.
“சரி, இரு வர்றேன்”. காப்பர், மேவரிக் இரண்டையும் சற்று தூரம் அழைத்து சென்றவன், அவை இரண்டிடமும் ஏதோ பேசி சிரிக்க, அவை அவனைப் பார்த்து குரைத்து, அவன் மீதே தாவி அவன் முகத்தை எச்சில்படுத்த, கீழே விழுந்த அஸ்வின் காப்பர் முகத்தைப் பிடித்துக்கொண்டான்.
இரண்டிடமும் போராடி ஒரு வழியாக அவைகளை அங்கிருந்த வேலையாளிடம் ஒப்படைத்து, ஆரோஹிக்கு மீண்டும் அவ்விடத்தை சுற்றி காட்டினான். ஒரு பக்கம் முழுவதும் தோட்டம் போன்ற அமைப்பு. அனைத்தும் காய் வகைகள், சில பழ வகைகள்.
“வெளிய மருந்து அடிச்சு காய் எல்லாம் வருதுல, அதான் எல்லாம் உள்ளையே வளர்க்குறேன். எல்லாம் என்னோட டயட்டிசியன் ஐடியா. இதனால தான் நான் இங்க வர்றதே. அங்க அப்பா வீட்டுல இருந்தா, அம்மா சாப்பாட்டுக்கு அடிமையாகி எல்லாம் மறந்துடுவேன், கண்ட்ரோல் பண்ணி இங்க வந்துடுவேன். இந்த மரத்தை பாரேன்,
இந்த இடம் வாங்கி இருபது வருஷம் மேல ஆச்சு. அப்போ ரொம்ப அவுட்டர். இடம் எதுக்கு சும்மா இருக்கணும்னு ரெண்டு மரம் வச்சு விடலாம்னு, அம்மா வச்சது இந்த வேப்பமரம், புளிய மரம். இப்ப எவ்ளோ பெருசா வளந்து நிக்கிது. அத டிஸ்டர்ப் பண்ணாம இங்கையே ஒரு ஸ்டோன் பெஞ்ச் போட்டாச்சு.”
அப்படியாக அவனது நினைவுகள் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து, மகிழ்ச்சியாக அந்த இரவைக் கழித்தான்.
ஆரோஹிக்கு அவன் பேசியது அனைத்தும் காதில் கேட்டாலும் நடுக்கம் மட்டும் குறையவில்லை. எதேச்சையாக அவளது கைகளைப் பார்த்தவன் இரண்டு கைகளையும் எடுத்து, “இன்னும் உனக்கு பயம் போகலையா?”
அதிகமாகவே வருத்தம் அவனுக்கு, அவளிடம் நாய்களுக்கு பயம் உள்ளதா என கேட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும் என.
‘அய்யய்யோ! என்ன கை எல்லாம் புடிக்கிறான்?’ பதறியவள், “இல்ல, நார்மல் தான்.” இதய துடிப்பின் வேகம் சீரானாலும், அவன் கைகள் அவள் கைகளைப் பற்றிய நொடி மீண்டும் வேகம் எடுத்தது.
“சரி, வா சாப்பிடலாம்.” அன்றும் அதே போல் அவனே அவளுக்கு உணவு செய்து கொடுத்து, அவன் உண்ணும் பொழுது சொல்லும் கதைகளைக் கேட்டு நிம்மதியான உறக்கத்தைத் தழுவினான்.
நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவனை, கதவு தட்டும் சத்தம் உசுப்பிவிட, எழுந்து பார்த்தால் ஆரோஹி அவன் அறையின் சுவற்றில் தலை சாய்த்து கண்களை மூடி நின்றாள்.
சோர்வு முகம் எங்கும் தாண்டவமாட, பதறியது ஆண் மனம். “ஆரூ…” அவள் தோள் தொட படக்கென கண் விழித்தவள், “பாராசிட்டமல் இருக்கா கிரிக்கெட்டரே?” குரல் மிகவும் நலுங்கி வந்தது.
உடனே அவள் நெற்றியைத் தொட்டு பார்த்தவன் உடல் அனலாக கொதிப்பதை உணர்ந்து, அவள் அறையை நோக்கி இழுத்தான்.
அவளால் நடக்கவே முடியவில்லை, “மெதுவா…” வலுவிழந்து வலியோடு கூறியவள் நிலை, அஸ்வினை சாய்த்துப் பார்க்க பூவாய் கைகளில் ஏந்தி, அவள் அறையில் கிடத்தி உடனே மருத்துவரை அழைத்துவிட்டான்.
மருத்துவர் வந்து பார்த்து, மருந்திட்டு ஓய்வெடுக்கும்படி கூறி சென்றிருந்தார்.
அவள் மருந்தின் வீரியத்தில் நல்ல உறக்கத்திற்கு சென்றுவிட, அஸ்வின் தூக்கத்தை இழந்து மனம் நொந்து கிடந்தான். விடியும் வரை பொறுத்தவன் அன்னைக்கு உடனே அழைத்து,
“ஏன், எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க? இதுக்கு தான் இப்ப வேணாம்னு சொன்னேன். என்னை நம்பி வந்த பொண்ண கூட என்னால ஒழுங்கா பாத்துக்க முடியல, தயவு செஞ்சு இங்க வாங்க.” அன்னையிடம் சீறி, மீண்டும் மனைவியின் முகம் பார்த்தே அமர்ந்துவிட்டான்.
என்னதான் இந்த பெண் அவனை செய்தாளோ? காரணமே இல்லாமல் அவள் சோகம் அவனைத் தாக்குகிறது, அவள் பசி அவன் பசியாகிறது, அவள் புன்னகை அவனது நிம்மதியாகிறது. இதற்கெல்லாம் பொறுப்பு என அவன் பெயர் கூறிக்கொண்டாலும், இல்லை அதற்கு வேறொரு பெயரை வைத்தாலும், இரண்டே நாட்களிலா என்கிற இமயமலையாக கேள்வி குறி வந்து நிற்கிறது.
அவனுக்கு யார் கூறுவது, இரட்டை சதம் அடித்த அன்றே காதலிக்கு, இறைவனுக்கு ஏன் பெற்றோருக்கு கூட நன்றியை, சதத்தை சமர்ப்பிக்காமல் அவள் நினைவில் துள்ளினானோ, அன்றே அவன் மனம் அந்த பட்டாம்பூச்சியின் கூட்டில் சிக்கியதென்பதை?