தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலிரவு அறைக்குள் வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவனுக்கு எல்லா விஷயத்திலும் தோற்றுப் போன உணர்வு. அதுவும் அர்ஜுனிடத்தில் முற்றிலுமாக தோற்றுப் போன உணர்வு. இனி அவனே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ரூபிணி வந்தது கூட தெரியாமல் அமர்ந்திருந்தான்.
“என்ன யோசனை ரஞ்சன்..?” என்றாள் கொஞ்சம் தணிந்த குரலில்.
“வந்துட்ட போல..! எல்லாம் நீ நினைச்ச மாதிரி நடந்து முடிஞ்ச சந்தோசம் தான.. அதான் உன் முகம் அப்படியே ஜொலிக்குது..” என்றான் ரஞ்சன்.
“நீ நினைச்சது தான் நடக்கலை. அட்லீஸ்ட் நான் நினைச்சதாவது நடந்துச்சே..” என்றாள் ரூபிணி.
“கடைசி வரைக்கும் எனக்குத் துணையா இருப்பேன்னு சொல்லிட்டு, இப்படி அந்த அர்ஜூனுக்கு சாதகமா சாய்வன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை ரூபிணி..” என்றான், வெறுப்பான குரலில்.
“கடைசி வரைக்கும் உனக்குத் துணையா இருக்கனும்ன்னு தான் இந்த முடிவை எடுத்தேன் ரஞ்சன். அதுக்கு காரணம் கூட அர்ஜூன் தான்..” என்றாள்.
“இதுக்கும் அவன் தான் காரணமா..?” என்றான் எரிச்சலுடன்.
“முதல்ல அர்ஜூன் மேல எனக்கும் கோபம் இருந்ததது. அந்த கோபத்தோட ஒரு நாள் அர்ஜூனை மீட் பண்ண போனேன். ஆனா, அன்னைக்கு தான் அர்ஜூன் என் மண்டையில உரைக்கிற மாதிரி சில விஷயங்கள் சொன்னாரு. அப்பத்தான் என்னோட தப்பே எனக்கு புரிஞ்சது. அப்போகூட உன்னை மேரேஜ் பண்ணனும்ன்னு நான் நினைக்கவேயில்லை. அர்ஜூன் தான் சொன்னார், நீங்க ரெண்டு பெரும் ஏற்கனவே நல்ல நண்பர்கள். ரிலேஷன்ஷிப்லயும் இருந்திருக்கிங்க. நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறது தான் சரியா வரும்ன்னு சொன்னார். யோசிச்சு பார்த்தப்போ, எனக்கும் அது தான் சரியா பட்டுச்சு. உடனே டாடி கிட்ட சொன்னேன். அவருக்கும் ஓகே தான்..எப்படியோ நம்ம மேரேஜ் முடிஞ்சது..அந்த வரைக்கும் எனக்கும் சந்தோசம் தான்..” என்று மேலோட்டமாய் கூறினாள் ரூபிணி.
“உனக்கு அர்ஜூனைத் தான் பிடிச்சிருந்தது. அப்படித்தான் என்கிட்டே சொன்னதா ஞாபகம்.. ஆனா இப்போ நீ சொல்ற கதை வேற மாதிரி இருக்கே” என்றான் கடுப்புடன்.
“அர்ஜூனை யாருக்குத் தான் பிடிக்காது. எனக்குப் பிடிச்சதுல அதியசமும் இல்லை. அது ஒரு பெரிய விஷயமும் இல்லை..” என்றாள்.
“நீயே திருந்துற அளவுக்கு அப்படி என்ன சொன்னான் அவன்..? சொல்லேன் கொஞ்சம் நானும் தெரிஞ்சுக்கிறேன்..உண்மையை மட்டும் தான் சொல்லணும்” என்ற ரஞ்சனின் குரலில் எகத்தாளம் மட்டுமே மிஞ்சியிருந்தது.
“உன்னோட விதியை யாரால மாத்த முடியும்…” என்ற ரூபிணியின் நினைவு அர்ஜூனை சந்தித்த தினத்திற்கு சென்றது.
அர்ஜூன் மேல் இருந்த கோபத்தில் அன்று அவனை சந்தித்து பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் அவனை சந்திக்க சென்றிருந்தாள்.
“நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு நான் நினைக்கலை அர்ஜூன்..” என்பது தான் அவளின் முதல் கேள்வியாக இருந்தது. அவளை ஒரு நிமிடம் பார்த்தவன்,
“வேற எப்படி பண்ணும்ன்னு எதிர்பார்த்த ரூபிணி..?” என்றான் அசராமல்.
“நிச்சயம் பண்ணது என்கூட..! உங்களுக்கு சம்மதமில்லைன்னு தெரிஞ்சப்போ, நீங்க ஏதாவது செய்விங்கன்னு நான் எதிர்பார்த்தேன். ஆனா இப்படி வராஹினிக்கு தாலி கட்டுவிங்கன்னு எதிர்பார்க்கலை..” என்றாள்.
“ஏன்..? ரஞ்சன் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்த நீ, என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கும் போது, நான் வராஹினியை மேரேஜ் பண்ணது எப்படி தப்பா போகும்..?” என்றான்.
“நீங்க என்ன சொன்னாலும் நீங்க பண்ணினது தப்புத்தான்..!” என்றாள் மீண்டும்.
“லுக்..! என்னை தப்பு சொல்ற அளவுக்கு நீங்க யாரும் யோக்கியம் இல்லை. பிராடு தனம் பண்ணி தான அந்த நிச்சயதார்த்தத்தை முடிச்சிங்க. உங்களுக்கு உங்க பாணியில தான் பாடம் சொல்ல முடியும்..” என்றான் அர்ஜூன்.
“நான் உங்களை சும்மா விடப் போறதில்லை..” என்றாள்.
“என்ன? பழி வாங்க போறியா..? அதுக்கு முன்ன நான் ஒரு விஷயம் கேட்கிறேன் பதில் சொல்லு… அண்ணிங்கிறது அம்மாவுக்கு சமம். அவன் கூட வாழ்ந்த நீ, அவனுக்கு அண்ணியாகனும்ன்னு நினைக்கிற..? உன்னை நான் மேரேஜ் பண்ணினா, அவன் உன்னை எந்த கண்ணோட்டத்துல பார்ப்பான். உன்னைப் பத்தி அவனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அதனால தான் உன்னை என் தலையில கட்டப் பார்க்கிறான்..” என்றான் அர்ஜூன், வேண்டுமென்றே.
“ரஞ்சனுக்கு என்னைப் பத்தி நல்ல அபிப்ராயம் தான். உங்களை எனக்குப் பிடிச்சிருந்தது. அதான் அவனே சேர்த்து வைக்கிறேன்னு சொன்னான்..” என்றாள் நடந்ததை மறைத்து.
“நல்ல ஜோக்..! நீ சொல்லலைன்னாலும் நடந்தது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா..? அது மட்டுமில்லாம, அவனுக்கு உன்மேல நல்ல அபிப்ராயமா..? கேட்கவே காமெடியா இருக்கு. நீ ஒன்னு பண்ணு… நேரா அவன் கிட்ட போய், நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா ரஞ்சன்.. அப்படின்னு கேளு. அப்ப தெரியும் அவன் உன்னைப் பத்தி மனசுல என்ன அபிப்ராயம் வச்சிருக்கான்னு..” என்றான் அர்ஜூன்.
“கண்டிப்பா ரஞ்சன் சரின்னு தான் சொல்லுவான். அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…” என்றாள் ரூபிணி உறுதியாக.
“அதையும் தான் பார்ப்போமே..!” என்று சிரித்தவன்,
“சப்போஸ் அவன் உன்னை ஏத்துக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவ..?” என்று தூண்டில் போட்டான்.
“அவன் அப்படி சொல்லிடுவானா என்ன..? ரஞ்சன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. அதை உங்களுக்கு நான் நிரூபிக்கிறேன்..” என்று கோபமாய் சொல்லிவிட்டு கிளம்பினாள் ரூபிணி.
“ஒரு நிமிசம்..!” என்ற அர்ஜூன், கையில் இருந்து கத்தையாக ஒரு கவரை டேபிளில் போட்டான். அதிலிருந்து சிதறிய போட்டோக்களில் ரூபிணியும், ரஞ்சனும் பல போஸ்களில் இருந்தனர். சில போட்டோக்கள் கண் கொண்டு பார்க்க முடியாதபடி இருந்தது. ஏனோ, அந்த போட்டோக்களைப் பார்த்த ரூபிணிக்கே ஒரு மாதிரி இருந்தது.
“நீங்க எடுத்த போட்டோவை உன்னாலையே பார்க்க முடியலையே..? அப்போ எனக்கு எப்படி இருக்கும்..? இதுல அவன் என்கிட்டையே சவால் விடுறான். அவன் என்ன சொன்னான் தெரியுமா..? அவன் சாப்பிட்ட எச்சில் இல்லை தான் எனக்காம். இந்த போட்டோவையெல்லாம் பார்க்கும் போது எனக்குக் கூட அப்படித்தான் தோணுச்சு..” என்றான் அர்ஜூன்.
அந்த வார்த்தைகளில் வெகுண்டவள்,“இல்லை..! ரஞ்சன் அப்படி சொல்லியிருக்க மாட்டான்..!” என்றாள் அப்போதும் உறுதியாக.
“எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவன் என்னைப் பழிவாங்குறதா நினைச்சு, உன்னைக் கேவலப்படுத்திட்டு இருக்கான். இந்த போட்டோவையெல்லாம் காட்டி… உன்கூட எனக்கு ஏற்பாடு பண்ணியிருந்த கல்யாணத்தை நான் நிறுத்தியிருக்க முடியும். இதெல்லாம் என் அப்பா பார்த்தா, நான் ஒன்னும் சொல்லத் தேவையில்லை, அவரே எல்லாத்தையும் நிறுத்தியிருப்பார். ஆனா, ஒரு பொண்ணோட மானத்தை வாங்க வேண்டாம்ன்ற எண்ணத்துல தான் நான் அதைப் பண்ணலை. உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்…” என்றான் அர்ஜூன்.
“அர்ஜூன்..!” என்றவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. வரும் போது அவன் மீது எவ்வளவு பழி உணர்ச்சி இருந்ததோ, அது இப்போது இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. என்னதான் மார்டனாக இருந்தாலும் தன்னுடைய கேரக்டரை பிறர் வாயால் கேட்கும் போது உள்ளுக்குள் கொஞ்சம் வலிக்கத் தான் செய்தது.
“ரஞ்சன் சொன்ன மாதிரி நீ எச்சில் இலையா இருக்கத்தான் ஆசைப் படுறியா ரூபிணி..?” என்றான் அர்ஜூன்.
“ரஞ்சன் அப்படி சொன்னானான்னு எனக்குத் தெரியாது. நான் போய் கல்யாணத்துக்கு கேட்டா, கண்டிப்பா அவன் மறுக்க மாட்டான். அதை உங்களுக்கு நான் நிரூபிச்சு காட்டுறேன்..” என்று அப்போது கூட அர்ஜூனிடம் சவாலாக சொல்லி விட்டுத்தான் வந்திருந்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சனுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அர்ஜூன் அவளிடம் எப்படி பேச வேண்டுமோ, அப்படி பேசி தூண்டி விட்டிருக்கிறான் என்று. அது தெரியாமல் ரஞ்சனும் அவளிடம் பேசி மாட்டிக் கொண்டான்.
உனக்கு ஒன்னு தெரியுமா ரஞ்சன்..? நான் எவ்வளவு கான்பிடன்ட்டா அர்ஜூன் கிட்ட சொல்லிட்டு வந்தேன் தெரியுமா..? ஆனா, உன்கிட்ட வந்து நான் மேரேஜ்க்கு கேட்ட உடனே அர்ஜூன் சொன்னது எல்லாமே சரின்ற மாதிரி தான் நீ பேசுன..? என் முன்னாடியே என்னென்ன பேசின..? அப்போ அர்ஜூன்கிட்டயும் கண்டிப்பா நீ இப்படித்தான் பேசியிருப்பன்னு எனக்குப் புரிஞ்சது.
நான் உன்கிட்ட வந்து முதல்ல பேசுனப்போ, நீ உடனே ஓகே சொல்லியிருந்தா கூட, நான் பேசாம கிளம்பி போயிருந்திருப்பேன். எனக்கும் உன்னை மேரேஜ் பண்ற எண்ணமெல்லாம் இல்லை. நீ பேசுன பேச்சு தான், எல்லாத்துக்கும் காரணம். நீ உன் வாயால் தான் கெட்ட. என்னைய எச்சில் இலைன்னு சொன்னியாமே..? அப்படி பார்த்தா நீ கூட எச்சில் இலைதான்… என்றாள் சிரிப்புடன்.
“அவன் உன்னைத் தூண்டிவிட்டது தெரியாம, இப்படி பண்ணிட்டியே ரூபிணி..” என்றான் ரஞ்சன்.
“இதுக்கெல்லாம் அர்ஜூன் காரணமில்லை. நீ அவனுக்கு செய்யனும்ன்னு நினைச்சது உனக்கே திரும்பிடுச்சு. சும்மாவா சொன்னாங்க, தன்வினை தன்னைச் சுடும்ன்னு. இனி காலம் முழுவதும் உனக்கு இதே நிலைமை தான். என்னோட பிடியில இருந்து நீ தப்பவே முடியாது. மீறி ஏதாவது செய்யனும்ன்னு நீ நினைச்சா… வெளிய உனக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் கெடுத்து நாறடிச்சுடுவேன் பார்த்துக்கோ. என்கிட்டே உன்னோட தில்லாலங்கடி வேலையெல்லாம் எடுபடாது. நீ எப்போ எப்படி இருப்ப, என்ன பண்ணுவன்னு கூட இருந்து பார்த்தவ நான். அதனால என்னோட கணிப்பு எப்பவுமே தப்பாது..” என்றாள் ரூபிணி.
“என்னடி மிரட்டுறியா..? இப்போ நான் உனக்கு புருஷன். நான் என்ன சொல்றானோ அதைத் தான் நீ கேட்டாகணும்..” என்றான் ரஞ்சன்.
“புருஷன்னா உனக்கு கொம்பா முளைச்சிருக்கு.அதெல்லாம் வேற எங்கையாவது வச்சுக்க. என்னைப் பத்தி உனக்குத் தான் நல்லா தெரியுமே. பாம்பின் கால் பாம்பறியும். நீ என்கிட்டே நல்ல விதமா நடந்துகிட்டா, நானும் உன்கிட்ட நல்ல விதமா நடந்துப்பேன். இனி உன்னால ஒரு ஆணி கூட புடுங்க முடியாது. அங்கிள் எல்லாமே பக்காவா செட் பண்ணிட்டார். அங்கிள் கூட நான் பிஸ்னஸ் பார்க்க போறேன். நீ அர்ஜூன் கிட்ட அசிட்டன்ட்டா இரு. அப்பத்தான் உனக்கு புத்தி வரும். புத்தி வருமான்னு உறுதியா சொல்ல முடியாது. பார்க்கலாம்..” என்றாள்.
“இப்படி வெறும் கத்தல் மட்டும் தான் உன்னால போட முடியும் உன்னால. உண்மையிலையே நீ அர்ஜூனை ஜெயிக்கனும்ன்னு நினைச்சா, அது என்கூட நீ வாழப் போற உருப்படியான வாழ்க்கையில் தான் இருக்கு. புரிஞ்சா சரி..” என்றவள், கட்டிலில் ஏறி படுத்துவிட்டாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த வீட்டிற்கு வருகிறாள் வராஹினி. அதுவும் நல்ல சூழ்நிலையில் இல்லை. அந்த நேரத்தில் கல்பனாவுடன் வந்த வராஹினியைப் பார்த்த பிரஜேஷிற்கு அதிர்ச்சி என்றால், மோகனால் நம்ப முடியவில்லை.
“என்ன வராஹி..? இந்த நேரத்துல..? எதுவும் பிரச்சனையாம்மா..?” என்றவரின் முகத்தில் உண்மையான தவிப்பும், அக்கறையும் மட்டுமே.
“என்னாச்சு வரா..?” என்றான் பிரஜேஷ்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“அங்க என்ன நடந்தது..? நீ எப்போ அங்க போன..? நீயா போனியா? இல்லை வராஹி கூப்பிட்டு போனியா..? கேட்டுட்டே இருக்கேன், அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?” என்றார் மோகன் உட்ச சத்தத்தில்.
“மனுஷனாங்க அவன்..? நம்ம பொண்ணை அந்த பாடு படுத்துறான்.. அதான் கையோட கூட்டிட்டு வந்துட்டேன்..! நம்ம பொண்ணு என்ன அவனுக்கு அடிமையா..?” என்று கல்பனா சொன்னது தான் மாயம்,
“எனக்கு அர்ஜூனைப் பத்தியும் தெரியும். உன்னைப் பத்தியும் தெரியும். நீ திருந்தவே மாட்டியா கல்பனா. எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு அறிவே வராதா..? இவ பேச்சை கேட்டுட்டு இவ கூட வந்திருக்கியே வராஹி… நான் தான் அத்தனை தடவை மண்டபத்துல சொன்னேனே..” என்றார் மோகன்.
“மம்மியை நான் வர சொல்லலை டாட்..! அவங்களா எதையோ புரிஞ்சுகிட்டு வந்து, அங்க பேச்சு வளர்ந்திடுச்சு..” என்றாள் வராஹினி.
“அதான் உனக்கே தெரியுதே..! அப்பறம் எதுக்காக இவ கூட, அதுவும் இந்த நேரத்தில் கிளம்பி வந்திருக்க..?” என்றார் மோகன்.
“டாடி..! அவர் அம்மாவை ரொம்ப மோசமா பேசுறார். அதைப் பார்த்துட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும். அப்பவும் அப்படி பேசாதிங்கன்னு தான் சொன்னேன். ஆனா, அவர் இவங்க கூட உறவு வச்சுகிட்டா அங்க இருக்கக் கூடாதுன்னு சொல்றார். அவர் எப்படி அப்படி சொல்லலாம்..?” என்றாள் வராஹினி.
“மான ரோஷமுள்ள எந்த மனுஷனும் அதைத் தான் சொல்லுவான். உங்கம்மா ரொம்ப நல்லவளாக்கும். உனக்கெல்லாம் பட்டும் புத்தி வரலையாம்மா… இவ பேசுன பேச்சுக்கு வேற ஒரு ஆளா இருந்திருந்தா, உன்னைய எப்பவோ விரட்டி விட்டிருப்பாங்க. அர்ஜூன்றதுனால தான் அப்படி எதுவும் செய்யலை. ஆனா, இன்னைக்கு இவளுக்கு ஏத்துகிட்டு, நீ மாப்பிள்ளையை விட்டுட்டு வந்து பெரிய தப்பு பண்ணிட்ட வராஹினி..” என்றார் மோகன் குமார்.
“என்ன டாடி சொல்றிங்க..? அம்மா அர்ஜூன் சாரை பேசினாங்களா..? என்ன பேசினாங்க..? எப்போ பேசினாங்க..?” என்றாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவளிடம் தான் அர்ஜூன் எதையும் சொல்லவில்லையே.
மோகனின் மொத்த கோபமும் கல்பனாவின் மேல் திரும்பியது. அவரை ஓங்கி ஒரு அறை விட்டவர்,
“உன்னையெல்லாம் ஒரு அறையோட விடக் கூடாது..” என்று மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.
“ஐயோ.. டாடி என்ன பண்றிங்க..? விடுங்க அவங்களை..!” என்று வராஹினி எவ்வளவோ தடுத்தும் மோகன் உண்டு இல்லை என்றாக்கி விட்டார். கடைசியில் பிரஜேஷ் தான் அவரைப் பிடித்து இழுத்து, கல்பனாவை காப்பாற்ற வேண்டியதாய் போயிற்று.
“என்ன டாட் இதெல்லாம். மாம்க்கு ஏதாவது ஆகிடப் போகுது..” என்றான் பிரஜேஷ்.
“ஆனா ஆயிட்டு போகுது. இவ செத்தா தான் இருக்குறவங்க நிம்மதியா இருக்க முடியும். என்ன ஜென்மம் இவ..? அவனவன், பெத்த பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை, நல்ல வாழ்க்கை அமையாதான்னு ஏங்கிட்டு இருக்கான். இவ என்னடான்னா, வராஹினிக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையையும் அழிச்சுடுவா போல. இனியும் இவளை விட்டு வைச்சா, யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டா..” என்று மோகன் குமார் மீண்டும் அவரை அடிக்க போக,
“போதும் நிறுத்துங்க டாடி..” என்று வராஹினி கத்திய பிறகு தான், கொஞ்சம் நிதானம் ஆனார்.
“இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லப் போறிங்களா இல்லையா..?” என்றாள்.
கல்பனாவின் திட்டம் முதல் அவர் அர்ஜூனை பேசிய வார்த்தைகள், போட்ட டீல், அவர் எதிர்பார்த்தது, அதற்கு அர்ஜூன் கொடுத்த பதில் என்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தார் மோகன். அவர் சொன்னதையெல்லாம் நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் வராஹினி.
“நீங்க சொல்றதெல்லாம் நிஜமா டாடி..” என்றவள் கொஞ்சம் உடைந்து போனாள்.
“நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லைன்னா, இதோ இவ கூட எல்லாத்துக்குமே கூட இருந்தானே உன் அண்ணன்.. அவனைக் கேளு. அவன் சொல்லுவான், இதெல்லாம் உண்மையா,பொய்யான்னு..” என்றார் மோகன்.
“அண்ணா..!!” என்று அவன் பக்கம் திரும்பியவளுக்கு, கண்கள் கலங்கியிருந்தது.
“சாரி வரா…! அம்மா பேச்சை கேட்டுட்டு நானும் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஆனா, இப்போ அம்மா அங்க வந்தது சத்தியமா எனக்குத் தெரியாது வரா..” என்றான் பிரஜேஷ் குற்ற உணர்ச்சியில்.
“நான் கூட அந்த ரஞ்சனுக்கு பேசி முடிச்சப்போ, உன்னோட பிரண்டுன்ற எண்ணத்துல இந்த சம்பந்தத்துல ஆர்வம் காட்டுறன்னு நினைச்சேன். ஆனா, இப்போ தான் உண்மை என்னன்னு தெரியுது.. அப்போ எல்லாரும் சொன்ன மாதிரி சொந்த தங்கச்சிக்கு மாமா வேலை பார்க்க ரெடியா இருந்திருக்க.. இல்லையாண்ணா..?” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“வராஹி..!!” என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை. அவள் சொல்வது உண்மை தானே. அவன் தெரிந்தே செய்த தப்புத்தானே அது.
கல்பனாவின் அருகில் சென்றவள்,
“உன்னையெல்லாம் அம்மான்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு. அர்ஜூன் சார் கிட்ட எங்கம்மா அப்படி இல்லை, எங்கம்மா இப்படியில்லைன்னு என்னென்ன பேசுனேன். ஆனா, இப்படி எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டிங்களே..! நீங்க எனக்கு பிடிவாதமா கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறிங்கன்னு தான் நினைச்சேனே தவிர, இப்படி மொத்தமா என்னைய வச்சு, உங்க காரியத்தை சாதிக்க பார்த்திருக்கிங்கன்னு எனக்கு தெரியாம போய்டுச்சு. அர்ஜூன் சார் ஏன் உங்களைப் பத்தி பேசினாலே அவ்வளவு டென்ஷன் ஆனாருன்னு எனக்கு இப்போதான் புரியுது.
அர்ஜூன் சார் அப்பப்போ சொல்லுவார்… உனக்கு உதவி பண்ணியிருக்கேன், உதவி பண்ணியிருக்கேன்னு. எனக்கு அதைக் கேட்கிறப்போ எரிச்சலா இருக்கும், அப்படி என்ன உதவி பண்ணி கிழிச்சுட்டாருன்னு. ஆனா, இப்பத்தான் தெரியுது, தெரிஞ்சோ தெரியாமலோ உங்களை மாதிரி ஒரு பிசாசுகிட்ட இருந்து என்னைக் காப்பாத்தியிருக்கார்.
வியாபார நோக்கத்துல தான் என்னைப் பெத்துகிட்டிங்களா..?” என்று அவள் கடைசியாய் கேட்ட கேள்வியில் கல்பனா கொஞ்சம் ஆடித்தான் போனார்.
“வராஹி..! எல்லாம் உன்னோட நல்லதுக்காகத் தான்..” என்று அவர் முடிக்கவில்லை,
“இனி உங்களுக்கு பொண்ணே இல்லைன்னு நினைச்சுக்கங்க. என் முகத்துலையே முழிக்காதிங்க. எனக்கு உங்களைப் பார்க்கவே பிடிக்கலை..” என்றாள் பட்டென்று.
“வராஹி..” என்ற கல்பனாவிற்கு அடுத்து பேச்சே வரவில்லை.
“டாடி..! இன்னைக்கு ஒரு நாள் இங்க இருந்துக்கிறேன். நாளைக்கு என்னை ஒரு நல்ல ஹாஸ்ட்டலா பார்த்து சேர்த்து விட்ருங்க..” என்றாள்.
“என்னடா..? இது உன் வீடு. இதுக்கெல்லாம கேட்கணும். அர்ஜூன் தம்பிகிட்ட நான் பேசுறேன் வராஹினி..” என்றார் மோகன் குமார்.
“வேண்டாம் டாடி..! என்னால அவருக்கு ஏற்பட்ட கஷ்ட்டம், மன உளைச்சல் எல்லாமே போதும். அவருக்கென்ன தலையெழுத்தா..? இனியும் அவருக்கு கஷ்ட்டம் குடுக்க எனக்கு விருப்பமில்லை டாடி..!” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.
“வரா..!” என்று பிரஜேஷ் அழைக்க,
“எனக்கா எப்போ பேசனும்ன்னு தோணுதோ, அப்போ பேசுறேன் அண்ணா. அதுவரைக்கும் என்கிட்டே பேசாதிங்க. அது நீங்க பண்ணினதை ஞாபகப் படுத்திட்டே இருக்கும். புரியும்ன்னு நினைக்கிறேன்..!” என்றவள் அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.
“இப்ப சந்தோஷமா உனக்கு..? நீயெல்லாம் ஒரு ஜென்மம்..? என் முகத்துலையே முழிக்காத…” என்ற மோகன், போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.
கார்த்திகேயனுக்கு அழைத்தவர், நடந்ததை சொல்ல, அந்த பக்கம் அவருக்கு நெஞ்சே வெடிப்பதைப் போல் இருந்தது.
“என்ன சொல்றிங்க மோகன்..?கல்பனா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கலை. நீங்க அப்பவே எனக்கு போன் பண்ணியிருக்கலாமே..?” என்றார் கார்த்திகேயன்.
“எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சம்பந்தி. வராஹினி வேற இப்படி சொல்லிட்டு இருக்கா..” என்றார் மோகன்.
“அர்ஜூன் எல்லாருக்கும் நல்லது தான் நினைக்கிறான். ஆனா, அவனுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலை. நீங்க எதுக்கும் கவலைப் படாதிங்க… வராஹினியை அர்ஜூன் கிட்ட வரவைக்க வேண்டியது என்னோட பொறுப்பு…” என்று போனை வைத்தார் கார்த்திகேயன்.
தூக்கம் வராமல் பால்கனி பக்கம் நின்றிருந்த ரஞ்சனின் காதில் பக்கத்துக்கு அறை பால்கனியில் இருந்து கார்த்திகேயன் பேசிய அனைத்தும் கேட்டது.
“அப்போ.. வராஹினி அவங்க அம்மா வீட்டுக்கு போயாச்சு. எல்லாம் கல்பனா ஆன்ட்டி பிளான் தான் போல. உனக்கு வேணும்டா அர்ஜூன்..” என்று மனதில் கறுவிக் கொண்டவன்,
“எனக்கு இது பத்தாதே..!” என்று எண்ணியபடி, வேகமாக அர்ஜூனுக்கு அழைத்தான்.
அங்கு விட்டத்தைப் பார்த்து படுத்திருந்த அர்ஜூனுக்கு, ரஞ்சன் இந்த நேரத்தில் அழைப்பதற்கான காரணம் புரியாவிட்டாலும், யாருக்கும் பிரச்சனையோ என்று எடுத்தான்.
“அப்பறம் பிரதரே..! வராஹினி அண்ணி.. என்று ‘அண்ணியில்’ அழுத்தம் கொடுத்தவன், இப்போ இல்லை போல..” என்றான்.
“இப்ப உனக்கு என்ன வேணும்..?” என்றான் அர்ஜூன்.
“இந்த விஷயத்தை கேள்விப் பட்ட உடனே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா..? ஒருவேளை உன்னோட பெர்மான்ஸ் பத்தலைன்னு கிளம்பி போய்ட்டாளோ…இதுல எனக்கு அனுபவம் ஜாஸ்தி. என்கிட்டே கேட்டிருந்திருக்கலாம். ” என்றான்.
“ரஞ்சன்..” என்ற அர்ஜூனின் சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.
“என்கிட்டே கத்தி என்ன பிரயோஜனம்..?இப்ப புரியுதா..? என்னோட வலி என்னன்னு..? இப்ப வரைக்கும் தூக்கம் வராம தவிச்சுட்டு இருந்தேன். இனி நான் நிம்மதியா தூங்குவேன்டா..!” என்று போனை வைத்தான் ரஞ்சன்.
அங்கே அர்ஜூன் கோபத்தில் செல்லை தூக்கி ஏறிய அது சில்லு சில்லாய் உடைந்து போனது, அவனின் மனதைப் போல.
அங்கே வராஹினி இவனின் நினைவில் தூக்கத்தை தொலைத்திருக்க, இங்கே அர்ஜூனோ கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், சுவரை ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தான்.