Skip to content
Post Views: 6,580
அத்தியாயம் 14:
சந்தியாவிற்கும் ஸ்ரீதருக்கும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்தனர்.
ஸ்ரீதரின் அத்தை மகளும், சோபனாவின் நாத்தனாருமான நிவேதிதா கூட சந்தியாவிடம் பகை பாராட்டாமல் நன்றாகவே நடந்து கொண்டாள்.
ஸ்டேஜிற்கு வந்து ஸ்ரீதரிடம் “உங்க செலக்சன் சூப்பர் அத்தான்” என்று சந்தியாவை பார்த்து சொன்னவளை “இது என் அத்தை பொண்ணு சந்தியா. பேர் நிவேதிதா. பிஇ முடிச்சுட்டு எக்ஸ்பிரியன்ஸ் வேணுங்கிறதுக்காக ஒரு கம்பெனில வேல பாத்துட்ருக்கா” என்றான் ஸ்ரீதர்.
Advertisement
“ஓ உங்க சக்ரவர்த்தி க்ரூப்ல வேலை பாக்கலையா சீனியர்”
“இல்ல சந்தியா. வெளில போனாதான் நல்லா வேல கத்துக்க முடியும்ன்னு வேற கம்பெனிக்கு போய்ட்டா”
“ஓ சூப்பர்ங்க நிவேதிதா” என்ற சந்தியாவிடம் “அது இருக்கட்டும் சந்தியா. நீ என்ன இன்னும் அத்தான சீனியர்ன்னு கூப்புட்டுட்டு இருக்க” என்றதும் சந்தியாவை முறைத்தான் ஸ்ரீதர். அவனும் பலமுறை பேர் சொல்லி கூப்பிட சொல்லிவிட்டான். அவனை கெஞ்சலாக பார்த்து மன்னிப்பு கேட்கும் விதமாக காதை பிடித்தவளை பார்த்து சிரித்துவிட்டான். அவன் சிரித்ததும் நிவியிடம் திரும்பியவள்
Advertisement
“அது அப்படியே பழகிடுச்சு நிவி. கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும்”
Advertisement
அதுசரி என்று சிரித்துக்கொண்டே சென்று விட்டாள் நிவி.
“இவங்களதான உங்களுக்கு பேசுனாங்க சீனியர்”
“ஆமா. வீட்ல எல்லாருக்கும் அந்த ஆசைதான். ஆனா எனக்கும் நிவிக்கும் அந்த மாதிரி ஒரு தாட் இல்ல” என்றான் ஸ்ரீதர்.
Advertisement
நிச்சயத்தில் கல்பனாதான் சிறு சிறு பிரச்சனைகளை கிளப்பி கொண்டிருந்தார். தாத்தா பாட்டிதான் அவரை சமாளித்து கொண்டிருந்தனர்.
செல்வத்திற்கு சொத்துக்கள் இருந்தது திருப்பூரில். நிறைய நிலபுலன்கள், தோப்புகள், டவுனில் இருபது கடைகள் என இருந்தது. அவரின் ஒன்று விட்ட பங்காளிகள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டனர். அவருக்கு அதிலிருந்து நிறைய வருமானமும் வந்து கொண்டிருந்தது. அவரின் ஆசைக்காகத்தான் அவர் இந்த வேலைக்கு வந்தது. வருமானத்துக்காக அல்ல.
அதனால் ஒரே பெண்ணான சந்தியாவிற்கு அவரால் நிறையவே செய்ய முடியும். ஆனால் ஒன்றுமே இல்லாதவர்கள் என்பது போலவே பேசி கொண்டிருந்தார் கல்பனா.
முதலில் பர்பிள் ஷேடில் அணிந்திருந்த லெஹன்காவிற்கு ஏற்றவாறு வைர நகைகள்தான் அணிந்திருந்தாள் சந்தியா. மேடைக்கு வந்து அவளிடம் “இது என்ன பார்லர் மேக்கப்க்காக போட்டுவிட்ட நகைங்களா. நாங்கதான் கேட்டோம்ல. என்ன வேணுன்னாலும் எங்கட்ட வாங்கிக்கங்கன்னு. உங்கப்பா அதெல்லாம் எங்ககிட்டையே எல்லாம் இருக்குன்னு பேசுனாரு. இப்ப இப்படி கில்ட் ஜ்வெல்லரிய போட்டுக்கிட்டு நின்னா எங்க மரியாதை என்ன ஆகறது” என்றார்.
அதற்கு சந்தியா பதில் சொல்வதற்குள் பக்கத்தில் நின்றிருந்த ஸ்ரீதர் “அப்படியா சந்தியா. இது எல்லாம் டைமண்ட் நினைச்சேன் நான். அம்மா சொல்றது உண்மையா. நீ என்னட்டையாவது சொல்லிருக்கலாமே. எப்படியும் இந்த நிச்சய ட்ரஸ்க்கு மேட்சா டைமண்ட் ஜ்வல்ஸ் உனக்கு ஸ்டேஜ்ல போட்றதுக்காக எடுத்தோம். அப்படியே மொத்தமா சேத்து எடுத்துருக்கலாமே” என்றவனை வினோதமாக பார்த்தாள் சந்தியா.
இதே ஸ்ரீதர்தான் சந்தியா மேடை ஏறிய போது “மேக்கப் சூப்பர் சந்தியா. உனக்கு பெர்ஃபெக்டா பொருந்திருக்கு. ரொம்ப அழகா இருக்க” என்று மயங்கிப்போய் சொன்னதை யோசித்து கொண்டிருந்தாள்.
அதற்குள் நிச்சயம் நடக்க ஆரம்பித்ததால் இந்த விவாதம் அதோடு முடிந்தது. ஆனால் ஸ்ரீதரை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தாள் சந்தியா.
நிச்சயம் முடிந்து தனியாக அறையில் இருந்த சந்தியாவிடம் வந்த மங்கை பாட்டி “சந்தியா. இதெல்லாம் இப்ப வர்ற வைர நகை மாதிரி இல்ல. வைரம் நல்ல மதிப்பா தெரியுதே”
“இதெல்லாம் எங்க பரம்பரை நகைங்க பாட்டி. இப்பலாம் ஆன்டிக்தான பேஷன். அதான் இந்த ட்ரஸ்க்கு மேட்சா எடுத்து போட்ருக்கேன்”
“அதான பாத்தேன். எங்க மாமியார் நகைலதான் இத மாதிரி நா பாத்துருக்கேன். அதான் கேட்டேன்” என்று சென்றுவிட்டார். இது போல் சில சல சலப்புகளுடன் நிச்சயம் முடிந்திருந்தது.
அடுத்து ஒரு நாளில் கால் பண்ணிய ஸ்ரீதர் “ரெடியா இரு சந்தியா. நா வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன். பிரெண்ட்ஸ்லாம் நம்ம நிச்சயத்துக்காக பார்ட்டி கேட்டாங்க” என்றான்.
“சீனியர். என்ன திடீர்னு சொல்றீங்க. நாளைக்கு எனக்கு செமினார் இருக்கு”
“என்ன சந்தியா. இன்னையோட உனக்கு எக்ஸாம் முடியுதுன்னு சொல்லிருந்த. நாளைக்கு உனக்கு லீவா இருக்கும்ன்னு நினைச்சிதான் இன்னைக்கு பார்ட்டிக்கு ஓகே சொன்னேன்”
“என்னட்ட கேட்டுட்டு ஓகே சொல்லிருக்கலாம் நீங்க” என்று சட்டென்று சந்தியா சொன்னதும் அமைதியாகிவிட்டான் ஸ்ரீதர்.
பிறகு சந்தியாவே “சரி வந்து என்ன பிக்கப் பண்ணிக்குங்க சீனியர்” என்றதும் வந்து அழைத்து சென்றான்.
பார்ட்டியெல்லாம் பெரிதாக பிடிப்பதில்லை சந்தியாவிற்கு. ஸ்ரீதரின் ஆண் பெண் நட்பு வட்டத்தினர் கலந்து கொண்டிருந்தனர். எல்லோரிடமும் பெயருக்கு செயற்கையாக சிரித்து வைத்தாள் சந்தியா. டயர்டாக வேறு இருந்தது.
ஒரு வழியாக பார்ட்டி முடிந்து திரும்ப வரும்போது ஸ்ரீதர் “பார்ட்டி நல்லாருந்தது இல்ல சந்தியா” என்று கேட்டு பதில் வராததால் திரும்பி பார்த்தான். சந்தியா தூங்கியிருந்தாள். யோசனையாக அவளை பார்த்தான் ஸ்ரீதர்.
இன்று கிளம்பும் போது நிவி கூட கேட்டிருந்தாள். “என்ன அத்தான். நீங்க சந்தியா மேல ஆர்வமா இருக்கிற மாதிரி சந்தியா இல்லையோன்னு எனக்கு தோணுது”
“ஏன் அப்படி கேக்குற நிவி”
“இல்லத்தான். நேத்து அவளுக்கு கால் பண்ணி நிவி பேசறேன்னு சொல்றேன். அவளுக்கு நா யாருன்னே தெரியல. உங்க பேர சொன்ன பிறகு கூட அவளுக்கு தெரியல”
“இல்ல நிவி. அவ எக்ஸாம் டென்ஷன்ல இருந்துருப்பா” என்று சமாளித்து வந்தாலும் இப்பொழுது உறுத்தலாக இருந்தது.
அவள் அபார்ட்மெண்ட் வந்ததும் எழுப்பி விட்டவனை பார்க்காமல் கூட பாய் சொல்லிவிட்டு சென்றாள்.
அது முடிந்து ஒரு சன்டே அன்று ஸ்ரீதரிடம் இருந்து கால் வந்தது. ஒரு குறிப்பிட்ட மாலின் பெயரை சொல்லி அங்கு வருமாறு அழைத்தான். சந்தியாவும் பிரீயாக இருந்ததால் கிளம்பி சென்றாள். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது ஸ்ரீதரின் குடும்பத்தில் இருந்த இளையவர்கள் அனைவரும் அங்குள்ள தியேட்டரில் படம் பார்க்க பிளான் செய்திருந்த விஷயம்.
ஸ்ரீதரிடம் சந்தியா “என்ன ஸ்ரீதர் சினிமாக்குத்தான் போறோம்ன்னு நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாமே”
இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதர் என்று அழைக்க பழகியிருந்தாள்.
“ஏன் சந்தியா” என்று நிவியை பார்த்து கொண்டே கேட்டான் ஸ்ரீதர்.
“இல்ல ஸ்ரீதர். எனக்கு தியேட்டர் சவுண்ட் அட்மாஸ்பியர் சுத்தமா ஒத்துக்காது. கொஞ்ச நேரத்திலேயே தலைவலி வந்துரும்” என்றதும் சிறியவர்கள் உற்சாகம் இழந்து விட்டார்கள்.
“என்ன அக்கா இப்படி சொல்றீங்க. அப்ப நீங்க வரலையா. அப்ப அத்தானும் வரமாட்டாரா” என்று கேட்டாள் ஸ்ரீதரின் இரண்டாவது அத்தையின் மகள் அனு.
“ஹே நான்தான் வரமுடியாதுன்னு சொன்னேன். நீங்க உங்க அத்தானை அழைச்சுட்டு போங்க”
“அப்ப நீ என்ன பண்ண போற சந்தியா” என்று கேட்டாள் சோபனா
“ஒன்னும் ப்ராப்லம் இல்ல அண்ணி. நீங்கல்லாம் போங்க. நா கொஞ்சம் மால்ல ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே கிளம்பிடறேன்” என்றதும் சரியென்று அனைவரும் கிளம்பினார்கள்.
ஸ்ரீதர் மட்டும் சந்தியாவின் அருகில் நின்றவன் “என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்ன்னு உனக்கு ஆசையே இல்லையா சந்தியா” என்று ஒரு மாதிரியாக கேட்டான்.
“சீனியர் என்ன இப்படி கேக்குறீங்க. உண்மையாவே எனக்கு தலைவலி வரும். அது வந்துச்சுன்னா நாள் புல்லா போகாது. ரொம்ப படுத்திரும்”
“ஓகே ஆனா நீ என்னையும் உன் கூட ஷாப்பிங் பண்ண கூப்ட்ருக்கலாம். நீயாவே அவங்க கூட என்ன சினிமா பாக்க போக சொல்ற. அன்னைக்கும் பார்ட்டி வந்துட்டு அவ்ளோ டல்லா இருந்த. உன்ன வீட்ல விடும்போது என்ன திரும்பி கூட பாக்காம போற” என்று கூறியதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை சந்தியாவிற்கு.
“சீனியர் நீங்க என் சைட்லேந்தும் கொஞ்சம் யோசிச்சு பாக்கணும்”
“என்ன யோசிக்கணும் சந்தியா. நீ என்ன கட்டாயத்துனாலத்தான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட அப்படீங்கிற விஷயத்த யோசிச்சு பாக்க சொல்றியா. இப்பகூட யாரோ மாதிரி சீனியர்ன்னுதான் உன் வாயில வருது. நிவி அப்பவே கேட்டா. பிடிக்காத பொண்ண வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு. அவ போன் பண்ணா அவள யாருன்னே உனக்கு தெரியலையாம். என்ன தெரியலன்னா கூட பரவால்ல அத்தான். உங்க பேர சொல்லியும் அவளுக்கு என்ன தெரியவே இல்லன்னு சொல்றா நிவி . எனக்கு எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா ” என்று ஸ்ரீதர் கூறியதும் அதிர்ச்சியானாள் சந்தியா.
ஏனென்றால் நிவி கால் பண்ணியது காலேஜில் எக்ஸாம் தொடங்கும் நேரத்திற்கு சிறிது நேரம் முன்பாக. அந்த அவசரத்தில் ஒரு முறை மட்டுமே பார்த்து பேசியவளை உண்மையிலேயே நியாபகம் வரவில்லை. அதிலும் அவள் ஸ்ரீ அத்தான் என்று கூறியதால் ஒன்றும் புரியவில்லை சந்தியாவிற்கு.
ஆனால் அப்பொழுது வைத்துவிட்டாலும் எக்ஸாம் முடிந்ததும் திரும்ப நிவியின் நம்பருக்கு கூப்பிட்டு சாரி கூறிவிட்டு இயல்பாகவே பேசி வைத்திருந்தாள். ஆனால் இதை ஸ்ரீதரிடம் நிவி எந்த அர்த்தத்தில் சொன்னாள், இவன் என்ன புரிந்து கொண்டு பேசுகிறான் என்று ஒன்றும் விளங்கவில்லை சந்தியாவிற்கு. இதையெல்லாம் இப்பொழுது விளக்கி கூறினாலும் ஏற்று கொள்வானா இவன் என்று ஸ்ரீதரை பார்த்தாள்.
முதலில் இவன் என்னை பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறான் இந்த மூன்று வருடத்தில் என்று யோசித்தாள் சந்தியா.
“சரி வாங்க சீனியர். இப்ப என்ன நா உங்க கூட சினிமாக்கு வரேன்” என்று கிளம்பியவளை தடுத்தவன் “நீ உன்ன கஷ்ட படுத்திகிட்டு எனக்காக வரவேண்டாம் சந்தியா” என்று கடுப்பாக கிளம்பி போய் விட்டான்.
வீட்டுக்கு வந்த சந்தியாவிற்கு அலுப்பாக இருந்தது. நானும் நிறைய விட்டு கொடுத்துதான் போறேன் ஏன் இப்படியாகுது என்று யோசித்து கொண்டிருந்தாள். இன்னொரு பக்கம் நிவியை பற்றியும் குழப்பமாக இருந்தது. சந்தியாவிடம் அவளாகவே அடிக்கடி நன்றாக கால் செய்து பேசுவாள். அவள் ஸ்ரீதரிடம் எதார்த்தமாக கூறினாளா இல்லை வினயமாக கூறினாளா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் மூன்று வருடமாக பார்க்கிறார். என்னை பற்றி தெரிந்து வைத்திருப்பார் என்ற நம்பிக்கையில்தான் கல்யாணத்திற்கு சம்மதம் கூறியது. ஆனால் இப்பொழுது பயமாக இருந்தது.
அந்த பிரச்சனை முடிந்து இரு நாட்களில் கல்பனாவும் நிவியும் சந்தியாவின் வீட்டுக்கு வந்தனர். சந்தியா கல்லூரிக்கு சென்றிருந்தாள். செல்வமும் வேலைக்கு சென்றிருந்தார். வந்தவர்களை வாங்க வாங்க என்று வரவேற்றார் பத்மா.
உள்ளே வந்து அமர்ந்தவர்களிடம் “என்ன சாப்பிடறீங்க” என்றார்.
கல்பனாதான் “ஒன்னும் வேண்டாம். நாங்க சாப்டுட்டுதான் வந்தோம்” என்றார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் பத்மா.
கல்பனா வாங்கி டீபாயில் வைத்து விட்டார். நிவி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போன் பேச எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டாள்.
“வர்ற சன்டே எனக்கும் அவருக்கும் வெட்டிங் அனிவர்சரி . அதுக்குதான் உங்கள முறையா அழைக்கணும்ன்னு சொல்லிட்டார் என் மாமனார். அதனாலதான் நானே நேர்ல வந்தேன்”
“ஒ ரொம்ப சந்தோசம்மா”
“எல்லா வருசமும் க்ராண்டாதான் கொண்டாடுவோம். இந்த வருஷம் எங்களுக்கு முப்பத்து அஞ்சாவது வருஷம். அதான் எல்லாருக்கும் சொல்லி செய்றோம். பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வீட்ல இருந்தெல்லாம் வருவாங்க. நீங்கதான் பாவம். வந்தீங்கன்னா உங்களுக்கு யாரையும் தெரியாது. கண்ணை கட்டி காட்ல விட்டது போல இருக்கும்”
“அதனால என்னம்மா. நம்ம வீட்ல எல்லாரையும் தெரியுமே. வேற யாரை தெரிஞ்சா என்ன தெரியலன்னா என்ன”
“அதனால உங்களுக்கு ஒன்னும் இல்ல. ஆனா எனக்குதான சங்கடம்”
“என்னம்மா சொல்றீங்க”
“அதெல்லாம் ஒன்னுல்ல. நேர்ல வந்து சொல்லணும்ன்னு என் மாமனார் பிரியப்பட்டார். அதான் வந்தேன். அப்ப நா கிளம்புறேன்” என்றுவிட்டு நிவியை கூப்பிட்டார்.
நிவி காலை கட் பண்ணிவிட்டு உள்ளே வந்தவள் கல்பனாவிடம் “பேசிட்டிங்களா அத்தை” என்றாள்.
“பேசிட்டேன் நிவி. நாம கிளம்பலாம்” என்றுவிட்டு கிளம்பினார். நிவியும் குழப்பமாக அமர்ந்திருந்த பத்மாவிடம் “பை ஆன்ட்டி” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
இந்த சம்பவத்தை செல்வத்திடமும் சந்தியாவிடமும் விவரித்த பத்மா “ஆனா கடைசிவரை வீட்டுக்கு வாங்கன்னு சொல்லவே இல்லங்க. இப்ப நம்ம பங்க்சனுக்கு போறதா என்னங்க” என்றார்.
சந்தியாதான் “நீங்கதானே இந்த கல்யாணம் நடக்க ரொம்ப ஆர்வம் காட்டுனீங்க. இப்ப நல்லா உக்காந்து யோசிங்க” என்று சென்றுவிட்டாள்.
“என்னங்க இப்படி சொல்லிட்டு போறா”
“நாம போய் தலைய காட்டிட்டு வந்துருவோம் பத்மா. எனக்கே இப்பல்லாம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு அந்தம்மா பேசறத பாக்கும்போது” என்று எழுந்து சென்றார் செல்வம்.
error: Content is protected !!