“நீ சொல்றது எல்லாம் உண்மையா பிரஜேஷ்..?” என்ற கல்பனாவிற்கு கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது.
“ஆமாம்மா..! ரஞ்சன் கூப்பிட்டதால இப்போதான் போயிட்டு வந்தேன். இப்போ அவனுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..” என்றான் பிரஜேஷ்.
“தன் வினை தன்னைச் சுடும்ன்னு சும்மாவா சொன்னாங்க..?” என்றார் மோகன் குமார்.
“அப்பா ப்ளீஸ்..! என்ன இருந்தாலும் அவன் என் நண்பன். அவனுக்கு ஒண்ணுன்னா நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்..” என்றான் பிரஜேஷ்.
“உன்னால அவன் கெட்டானா..? இல்லை அவனால நீ கெட்டியான்னு தெரியலை.ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி இருந்த பிரஜேஷ் வேற.. இப்ப இருக்குற பிரஜேஷ் வேற..” என்றார் மோகன் குமார்.
“தப்பு செய்யாத மனுஷன்னு இந்த உலகத்துல யாரும் கிடையாது. வயசுல இந்த மாதிரி சின்ன சின்ன தப்புகள் பண்றது எல்லாம் சகஜம். அதுக்காக அவன் நல்லவனே இல்லைன்னு சொல்லிட முடியாது..” என்றான் கோபமாக.
“நல்லவனா இருந்திருந்தா என்ன பண்ணியிருக்கணும்..? செஞ்ச தப்பை இப்போ வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் உணரலை. உன்னோட பிரண்ட் கூட பாசப் பயிரை வளர்க்க என் பொண்ணு வாழ்க்கை தான் கிடைச்சுதா..? நீ சொன்ன ஒரே காரணத்துனால தான், ரஞ்சனை பத்தி நான் ரொம்ப விசாரிக்கலை. பொறுப்பான அண்ணனா நீ இருக்க.. எல்லாத்தையும் நீ சரியா செய்வன்னு நினைச்சேன். ஆனா, இப்படி என் பொண்ணோட வாழ்க்கையில மண்ணை அள்ளிப்போடுவன்னு நான் நினைக்கவேயில்லை பிரஜேஷ்..” என்றார் மோகன் குமார்.
“என்னப்பா இப்படி பேசுறிங்க..? வராஹி வாழ்க்கையில நான் மண்ணை அள்ளிப் போட்டேனா..?” என்றவனுக்கு கோபம் மூக்கிற்கு மேல் வந்தது.
“ஆமா..! அது தான் உண்மை. இப்போ விசாரிச்சா அந்த ரஞ்சனை யாரும் நல்ல விதமா சொல்லலை…” என்றார் மோகன்.
“கெட்ட விதமாவும் சொல்ல முடியாது. நம்ம வராஹி மட்டும் அவனுக்கு மனைவியா ஆகியிருந்தா எல்லாம் சரியாகிருக்கும். அவனும் எல்லாப் பழக்கத்தையும் விட்டு திருந்தியிருப்பான்..” என்றான் பிரஜேஷ்.
“பணம் இருக்குன்னு தறிகெட்டு, முறைகெட்டு திரியறவனை திருத்துறதுக்காக, நான் ஒன்னும் பொண்ணைப் பெத்து வளர்க்கலை. எந்த சாமி புண்ணியமோ, என் பொண்ணு இதுல இருந்து தப்பிச்சுட்டா. இனியாவது அவ வாழ்க்கையில நீ தலையிடாம இரு. அதுவே அவளுக்கு நீ பண்ற பெரிய உபகாரம்..” என்றார் மோகன்குமார்.
“என்னம்மா..? அப்பா என்னை இப்படி பேசிட்டு இருக்கார்.. நீங்களும் அமைதியா இருக்கீங்க..?” என்றான் கல்பனாவிடம்.
“விடு பிரஜேஷ்…! எப்படி பார்த்தாலும் நாம நினைச்சது தான் நடந்திருக்கு. இப்பவும் வராஹி அந்த வீட்டுக்கு தான் மருமகளா போயிருக்கா. அதனால இனி நாம அடுத்து என்ன செய்யணுமோ, அதைத் தான் செய்யணும்..” என்றார் கல்பனா.
“என்னம்மா சொல்றிங்க..?” என்றான் பிரஜேஷ் கொஞ்சம் அதிர்ச்சியுடன்.
“ஆமா பிரஜேஷ்..! நானும் நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன். ரஞ்சனை விட இவன் எல்லா விதத்துலையும் ஒழுக்கமானவனா இருக்கான். தகுதியானவனாவும் இருக்கான். வராஹிக்கு நல்ல புருஷன் அமைஞ்ச மாதிரியும் ஆச்சு. நம்ம எண்ணமும் நிறைவேறுன மாதிரியும் ஆச்சு..” என்றார் கல்பனா.
“நீங்க நினைக்கிற எதுவுமே அர்ஜூன் கிட்ட நடக்காதும்மா. அவன் எல்லாத்துலையும் சரியா இருக்கனும்ன்னு நினைப்பான். அதே ரஞ்சனா இருந்தா நம்ம வேலை ஈசியா முடியும்..அவன் நம்ம என்ன சொன்னாலும் கேட்டுப்பான்..” என்றான் பிரஜேஷ்.
“நீங்க ரெண்டு பேரும் திருந்துற ஐடியாவே இல்லையா..? உங்க சுயலாபத்துக்கு என் பொண்ணை பலியாடு ஆக்காதிங்க. இது நான் உங்களுக்கு கடைசியா குடுக்குற வார்னிங்..” என்ற மோகன் எரிச்சலுடன் வெளியே சென்றுவிட்டார்.
“என்னம்மா அப்பா இப்படி சொல்லிட்டு போறார்..?” என்றான் பிரஜேஷ்.
“அவரை விடு பிரஜேஷ்..! அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம். இனி அந்த ரஞ்சன் விஷயத்துல நீ தலையிடாத..” என்றார் கல்பனா.
“இதுல ரஞ்சன் மேல எந்த தப்புமில்லைம்மா..! இந்த அர்ஜூன் தான் ஏதோ பிளான் பண்ணி பண்ணியிருக்கான்..” என்றான்.
“இப்போதைக்கு நம்ம பிஸ்னஸ்ல இருக்குற நஷ்ட்டத்தை சரி பண்ணனும்ன்னா அந்த காலேஜ் கூட நம்மா டையப் பண்ணனும். இல்லைனா அது நம்ம கைக்கு வரணும்.. அது யார் மூலமா நடந்தாலும் சரி தான்..” என்றார் கல்பனா.
“இந்த அர்ஜூன் அந்த காலேஜ்ல வேலை தான் பார்க்கிறான். காலேஜ்க்கு ஒனர்ன்னு பார்த்தா ரஞ்சன் தான் ம்மா..” என்றான் பிரஜேஷ்.
“அவன் வேணாம்ன்னு சொன்னாலும், சட்டபடி எதுவும் ரிஜிஸ்தர் ஆகலை. அது மட்டுமில்லாம, வேண்டாம்ன்னு சொன்னவன், அதே காலேஜ்ல ஏன் வேலை பார்க்கணும். அவனுக்கு இருக்குற தகுதிக்கு எதுக்காக காலேஜ்ல வந்து, அதுவும் சொந்த காலேஜ்லயே வேலை செய்யணும்..?” என்றார் கல்பனா.
“அவன் பார்க்கத்தான் அமைதியா இருக்குற மாதிரி இருப்பான்ம்மா. ஆனா, பயங்கரமான கேடி..ரஞ்சன் நிறைய சொல்லியிருக்கான்.” என்றான் பிரஜேஷ். எதை யார் சொல்வது என்ற விவஸ்தை இல்லாமல்.
“ஒவ்வொன்னையும் நமக்கு சாதகமா நடத்திக்கலாம் பிரஷேஜ்..” என்றார் கல்பனா.
“ஆனாம்மா.. இதுக்கு அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார். ஏற்கனவே நீதி நேர்மை பேசிட்டு இருக்கார்..” என்றான்.
“உங்கப்பா பிஸ்னஸ்லயும் இப்படி நீதி, நேர்மை பேசுனதுனால தான் இன்னைக்கு இப்படி ஒரு நஷ்ட்டம். கட்டிக்கிட்டு இருக்குற காலேஜ் பில்டிங் பாதியோட நிக்கிறதுக்கு காரணமும் அவர் தான். அவரை நம்பினா இனி கதைக்காகாது…” என்ற கல்பனா வியாபாரியின் நோக்கத்தோடு ஒவ்வொன்றையும் பார்த்தார்.
“நானும் உன்னை மாதிரிதான் யோசிச்சுட்டு இருந்தேன் பிரஜேஷ். நாம என்ன பிளான் பண்ணாலும்,அதை எல்லாம் கார்த்திகேயன் நடக்க விட மாட்டார். நடக்காதுன்னு தெரிஞ்சு அதை முயற்சி பண்றதை விட, நடந்ததுல இருந்து என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம். இந்த பேச்சை இனி விட்ரு. ரஞ்சனால இனி நமக்கு ஒரு பிரைஜோனமும் இல்லை..” என்றார் கல்பனா.
ஒவ்வொருவரும் தம்மைத் தாமே அதி புத்திசாலிகளாக எண்ணிக் கொள்வதால் தான், பல பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. பல தொழில் வட்டாரங்களில் இன்னமும் திருமணங்கள் ஒரு ஆதாயம் தரும் டீலாகத் தான் பார்க்கப் படுகிறது. எந்த ஒரு மனிதனும் ஆதாயமில்லாமல் எதையும் செய்வதில்லை.
ஷாப்பிங் மாலில்…
“இது நல்லாயிருக்கா சார்..? அது நல்லாயிருக்கா சார்..?” என்று அர்ஜூனைப் போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் வராஹினி.
“அம்மா தாயே..! உனக்கு என்ன தோணுதோ அதை வாங்கிக்க. எதுக்கெடுத்தாலும் இப்படி என்கிட்டே கேட்டு, என்னை கடுப்பாக்காத. எனக்கு லேடிஸ் ஐயிட்டம் என்னன்னே தெரியாது. அதைப் பத்தின ஐடியாவே கிடையாது..” என்றான் அர்ஜூன்.
“சும்மா ஒரு சஜஷன் கேட்டா அதுக்குப் போயி அலுத்துக்கிறிங்களே சாரே..” என்றாள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“இப்ப எதுக்கு முகத்தை இப்படி அப்பாவியாய் வச்சிருக்க..? சத்தியமா பார்க்க முடியலை..” என்றான்.
“என் முகத்தை உங்களால பார்க்க முடியலையா..? நான் அந்த அளவுக்கு மோசமாவா இருக்கேன்..?” என்றவள்,
“அண்ணா..! நீங்க சொல்லுங்கண்ணா, நான் எப்படி இருக்கேன்..?” என்றாள் அருகில் இருந்தவனை அழைத்து.
“உனக்கென்னமா..? அப்படியே செப்பு சிலை மாதிரி இருக்கம்மா..” என்றான்.
“கேட்டிங்கல்ல..??” என்றாள் கெத்தாய்.
“அட அல்பமே..” என்று பார்த்து வைத்தான் அர்ஜூன். இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த கடையின் சேல்ஸ் கேர்ள்,
“என்ன இருந்தாலும் உங்களை விட, சார் தான் லுக்கா இருக்கார். அப்படியே ஹீரோ மாதிரி..” என்றாள் அந்த பெண்.
அந்த பெண் அப்படி சொன்னதும், அர்ஜூன் வராஹினியைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தான்.
“ஒரு பொண்ணு உங்களைப் புகழ்ந்த உடனே அப்படியே உச்சி குளிர்ந்து போய்டுவிங்களே..” என்று அவனைப் பார்த்து பல்லைக் கடித்தவள், அந்த பெண்ணிடம் திரும்பி,
“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் சார் ஹீரோ தான்…ஆனா என்னோட ஹீரோ..” என்று வெடுக்கென்று தலையை வெட்டியவள், அவனின் கைகளுக்குள் கைகளை கோர்த்துக் கொண்டு,
“நீங்க வாங்க சார்… நாம போகலாம்..!” என்று எதார்த்தமாய் செல்வதைப் போல் சென்றாள்.
‘கையைப் பிடிச்சிருக்கிறதை எதார்த்தமா பிடிச்சிருக்கிற மாதிரியே மெயின்டெயின் பண்ணுவோம். வராஹி உன் நிலைமை இப்படி ஆகிடுச்சே…என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு..’ என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டவள், அப்படியே நடக்க.. அவன் தான் நின்றான்.
“என்ன..?” என்றாள் புரியாமல். அவன் கண்ணால், கோர்த்திருந்த கைகளைக் காட்டினான்.
“ஆமா..! கை.. அதுக்கென்ன இப்போ..?” என்றாள்.
அவளை ஒரு நிமிடம் பார்த்தவன், அவள் கைகளை பிரித்து விட்டு,
“இப்போதான் இது உன் கை..! தொட்டுப் பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதன்னு சொன்னேனா இல்லையா..?” என்றான் முகத்தை கோபமாய் வைத்தபடி.
“ஹோ.. சொன்னிங்களா..! ஹி..ஹி.. மறந்துட்டேன் சார்..” என்றவள் முன்னால் செல்ல,
“ஹூப்..! அர்ஜூன் இவ ரொம்ப டேஞ்சர். நீ ரொம்ப கவனமா இருக்கனும்..” என்று தனக்குத் தானே சொன்னாலும், அவள் கைகளை விலக்கி விட்ட பின்பு ஒரு மாதிரி தவிப்பாக உணர்ந்தான் அர்ஜூன். அவள் பின்னால் சென்ற மனதை இழுத்துப் பிடித்தான்.
“இன்னும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். ஆனா, அதுக்கு முன்னாடி சாப்பிடனும்..” என்றாள்.
“என் நேரம்..!” என்று புலம்பிக் கொண்டே அவளுடன் புட்கோர்ட் சென்றான். அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் ஜோடி ஜோடியாக தெரிய, வெறுத்துப் போனான் அர்ஜூன்.
“கண்டிப்பா இங்க தான் சாப்பிட்டாகனுமா..? வெளிய ஒரு நல்ல ஹோட்டல்ல, அமைதியா சாப்பிடனும். எனக்கு இங்க செட்டாகாது..” என்றான்.
“இங்கே எல்லாமே புல் சார். இன்னைக்கு ஹாலிடே வேற. அதான். விடுங்க இதுவும் ஒரு அனுபவம்..” என்றாள்.
‘என்ன அனுபவமோ..? ஒன்னும் சிங்கிளா இல்லை. எல்லாம் மிங்கிளா தான் இருக்கு..’ என்று முணுமுணுத்தான்.
“நீங்க மிங்கிளாகலைன்னா இருக்குறவங்களை குறை சொல்லுவிங்களா சார்..” என்றாள்.
“நான் அப்படி சொன்னேனா..?” என்று எரிச்சலுடன் சொன்னவன், அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான்.
“சார் உங்களுக்கு..?” என்றாள் சாப்பிட்டபடி.
“எனக்கு எதுவுமே வேண்டாம்.. பசியில்லை..” என்றான்.
“ஹேய் வராஹி..! நீ எங்க இங்க..?” என்ற குரலில் கோபமாக திரும்பினாள். குரு தான் நின்றிருந்தான்.
வேகமாய் எழுந்தவள், அவனை தலையிலே கொட்டத் துவங்கினாள்.
“ஹேய் விடு வரா..! பிசாசே விடு..” என்றான் குரு.
“நீயெல்லாம் ஒரு பிரண்டாடா கோவிந்தா..? கடைசி நேரத்துல எல்லாத்தையும் சொதப்பிட்டியே கோவிந்தா…” என்று கொட்டிக் கொண்டே இருந்தாள்.
“விடு வரா பிளீஸ்..” என்ற குரு, அப்போது தான் அர்ஜூனைப் பார்த்தான். பார்த்தவனுக்கு பக்கென்று இருந்தது.
‘இவரெங்க இங்க..? அதுவும் இந்த பிசாசு கூட..?’ என்று யோசிக்க, அவன் முகத்தை வைத்தே அவன் எண்ணம் போன போக்கை கண்டு கொண்டாள்.
“தெரியாத மாதிரியே கொஞ்சம் சீனைப் போடு குரு..” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி.
“இப்ப மட்டும் குருவா..?” என்றான் அவளை முறைத்துக் கொண்டு.
“சார் எப்படி இருக்கீங்க..?” என்றான் குரு வேண்டுமென்றே.
“அப்படியா..?” என்றான் அர்ஜூன். பார்வை என்னமோ வராஹியிடம் இருந்தது.
“என்னடா கோவிந்தா சொல்ற..? சார் நம்ப காலேஜ் தான்னு உனக்கு முன்னமே தெரியுமா..? என்கிட்டே கூட நீ சொல்லவே இல்லையேடா..?” என்றாள் அப்படியே ஒன்றும் தெரியாதவளைப் போல.
‘உலக மகா உருட்டுடா சாமி..’ என்று மனதில் நினைத்த குரு, அர்ஜூனை பார்த்து சிரித்து வைத்தான்.
“நம்புங்க சார்..! நம்பிக்கை தானே வாழ்க்கை. இப்ப நீங்க கூடத் தான் என்னை பார்த்ததில்லை. நான், ஏன்? என்னனு கேட்டேனா..? பிறகு நீங்க மட்டும் ஏன் சார்.. என்னைத் தோண்டி துருவுறிங்க..?” என்றாள்.
“சொல்லுடா குரு..” என்று அவனையும் அதட்டினாள்.
“ஆமா சார்..! நான் மட்டும் தான் பார்த்திருக்கேன். அது மட்டுமில்லாம, வராஹிக்கு இதுக்கெல்லாம் நேரமே இருக்காது. அவ எப்பவுமே படிப்பு படிப்புன்னு தான் இருப்பா. காலேஜ்ல என்ன நடந்தாலும், நாங்க சொன்னாத்தான் அவளுக்கே தெரியும். அந்த அளவுக்கு அமைதியான பொண்ணு..” என்று என்ற குரு,
‘வாழ்க்கையிலையே நான் சொன்ன பெரிய பொய் இதுவாகத்தான் இருக்கும் கடவுளே..!’ என்று நினைத்துக் கொண்டான்.
‘இது தெரிஞ்ச பொண்ணு இல்லை சார்.. ரொம்ப தெளிஞ்ச பொண்ணு’ என்று மனதிற்குள் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தான் குரு.
“ஆமா, என்ன இவ்வளவு தூரம்..?” என்றான் குரு.
“சும்மா, ஷாப்பிங்..” என்றாள்.
“என்னாச்சு அந்த ரஞ்சன் மேட்டர். எப்படியோ நீ நினைச்ச மாதிரி கல்யாணத்தை நிறுத்திட்ட. ஆனா, உங்கண்ணன் என்னைத் தான் ரவுண்டு கட்டி அடிச்சான்..” என்று குரு தன் போக்கில் பேசிக் கொண்டு போக,
“கோவிந்தா…” என்று பல்லைக் கடித்தாள்.
“சார் தான் உங்களுக்கு ஹஸ்பண்டா நடிக்க இருந்தவரா..?” என்றான் அர்ஜூன், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ம்ம்..ஆமா..! அதுக்கு ஏன் சிரிக்கிறிங்க..?” என்றாள் முறைத்துக் கொண்டு.
“இல்ல..! மீசையே இன்னும் சரியா வரலை. உனக்குத் தம்பி மாதிரி இருக்கான். இவனை நடிக்கக் கூட்டிட்டுப் போயிருந்தா, அங்க இருக்கவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்ன்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்திடுச்சு..” என்றான் அர்ஜூன்.
“ரொம்ப சிரிக்காதிங்க சார்..? என் குருவுக்கு என்ன குறைச்சல்.. அப்படியே மீசையில்லாத அப்பாஸ் மாதிரி இருக்கான்..” என்றாள் வராஹி.
“அப்பாஸ் மாதிரி இல்லை..அம்பி மாதிரி இருக்கான்..” என்றான்.
“என்ன சார், என்னை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கிங்களா..?நான் ஏற்கனவே இவகிட்ட சொன்னேன் சார். நான் பொணமா கூட நடிக்கிறேன். ஆனா, உன்னோட புருஷனா நடிக்க மாட்டேன்னு. எங்க கேட்டா இவ..? கடைசியில இவ அண்ணனும், அந்த நிரஞ்சனும் என்னை சாத்து சாத்துன்னு சாத்தினது தான் மிச்சம்…” என்றான் கோபமாக.
“நட்புக்காக இதைக் கூட செய்யலைன்னா எப்படிடா..?” என்றாள் வராஹினி.
“இப்படி சொல்லியே இன்னும் எத்தனை உயிரை காவு வாங்கப் போறியோ தெரியலை..” என்றவனுக்கு அப்போது தான் அந்த சந்தேகம் வந்தது.
‘சார், தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்றார். ஆனா, இவ அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..?” என்று யோசித்தவன்,
“தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்றிங்க..? அதே காலேஜ்ல தான் இவளும் படிக்கிறான்னு எப்படி சார் தெரியாம போச்சு உங்களுக்கு..?” என்றான், அர்ஜூனை மடக்கிவிட்ட சந்தோஷத்துடன்.
“தெரிஞ்ச பொண்ணுன்னு தான் சொன்னேன். ரொம்ப நாள் தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லவே இல்லையே. இப்போதான் ஜஸ்ட் த்ரீடேஸா தெரியும்..” என்றான் அர்ஜூன்.
“நீ கூட சொல்லவே இல்லையே..? இப்போ நீ எங்க இருக்க” என்றான் வராஹியிடம்.
“போன் மிஸ்சாகிடுச்சு குரு…நான் எல்லாத்தையும் விபரமா நாளைக்கு சொல்றேன்..” என்றாள்.
“என்னவோ சொல்ற..? ஆனா, ஒண்ணுமே புரியலை..” என்று குரு சொல்லிக் கொண்டிருக்க, அர்ஜூனுக்கு போன் வந்தது.
“ஒரு நிமிஷம்..!” என்றவன் சற்று தள்ளி சென்று பேசிக் கொண்டிருக்க,
“கூமுட்டை..! எதுக்குடா இப்படி உளறி வைக்கிற..?” என்றாள் குருவிடம் கோபமாக.
“அர்ஜூன் சார் கூட நீ எப்படி வராஹி. அதான் எனக்கு இன்னமும் புரியலை. அவர் வேற தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்றார்..” என்றான் குரு.
“இப்ப எந்த கேள்வியும் கேட்காத. நாளைக்கு காலேஜ்ல எல்லாம் சொல்றேன்..” என்றாள்.
“அப்போ, நாளைக்கு காலேஜ் வருவியா..?” என்றான்.
“கண்டிப்பா வருவேன்..” என்றாள்.
“இப்போ எங்க இருக்க..? உங்க வீட்லையா..?” என்றான்.
“யப்பா கேள்விக்குப் பிறந்தவேனே…! இப்போ அர்ஜூன் சார் வீட்ல தான் இருக்கேன்..” என்றாள்.
“என்ன சொன்ன..??” என்ற குருவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
அதற்குள் அர்ஜுன் பேசி முடித்து வர,
“அப்போ நான் கிளம்புறேன் சார்..!” என்றான் குரு.
“நீ மட்டும் தான் வந்தியா..?” என்றான் அர்ஜூன்.
“இல்ல சார்..!பேமிலியோட வந்தேன்..!” என்றவன், அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அவர்களை இரண்டு கண்கள் வெறித்துக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.
ஒருவழியாக அவள் ஷாப்பிங்கை முடிக்க, அர்ஜூனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. எரிச்சலையும் மீறிய ஒரு சந்தோசம் மனதிற்குள் இருக்கத்தான் செய்தது. இத்தனை நாட்கள் தனிமையையே துணையாக்கிக் கொண்டவனுக்கு, இந்த இனியவளின் வரவு கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது.
காரில் ஏறிய அடுத்த நிமிடம் தூங்கி விட்டாள் வாராஹினி. அப்படி ஒரு அசதி அவளுக்கு.
“கொஞ்சமா சாப்பிட்டாத்தான ஆகும். வயிறு முட்ட சாப்பிட்டா, இப்படித்தான் தூக்கம் வரும்..” என்று தலையில் அடித்துக் கொண்டவன், அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
‘அவன் சொன்ன மாதிரி செப்பு சிலை மாதிரி தான் இருக்கா.. இப்படியே வாழ்க்கை முழுசுக்கும் வந்தா நல்லாத்தான் இருக்கும்…’ என்று யோசித்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அந்த சிந்தனைகளில் இருந்து மீண்டான்.
“இந்த யோசனையெல்லாம் உனக்கு வரவே கூடாது அர்ஜூன். அந்த பொண்ணோட வாழ்க்கையோட விளையாடாத. எப்படி இருந்தாலும் செட்டாகாது…” என்றது ஒரு மனம்.
“பத்து வயசு வித்யாசம் ஒரு விஷயமா..?” என்றது இன்னொரு மனம்.
“அந்த பொண்ணு மனசுல என்ன இருக்கோ..? இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் அவங்க வயசுலதான் பையனை தேடுறாங்க..வராஹி மனசுலயும் அப்படி ஒரு எண்ணம் தான் இருக்கும்..” என்றது ஒரு மனம்.
“எது எப்படியோ..? இப்போதைக்கு இருக்கிறதை பார்ப்போம்..” என்று அதன் போக்கில் விட்டுவிட்டான் அர்ஜூன்.
வராஹியின் பேச்சில் இருந்து அவனால் எதையும் கணிக்க முடியவில்லை. படிப்பையே முடிக்காமல், ரஞ்சனுக்கு கட்டி வைக்க அவள் வீட்டில் காட்டிய அவசரம் தான் அவனுக்கு யோசனையைத் தந்து கொண்டிருக்கிறது.
தூங்கிக் கொண்டிருந்தவள், ஒரு ஸ்பீட் பிரேக்கில் கண் விழிக்க, கார் இன்னமும் சென்று கொண்டிருப்பதை அறிந்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
தூங்கிக் கொண்டே, அர்ஜூனின் தோளில் சாய்ந்தால் வராஹினி. அவள் பட்டென்று அப்படி சாய்வாள் என்று எதிர்பார்க்காதவன், என்ன செய்வதென்று முழித்தான்.
“ராஹினி..!” என்றான். அவள் எதுக்கும் அசரவில்லை.
“சீட் எங்க இருக்கு..? இவ எங்க வந்திருக்கா..? சீட்லயே சாஞ்சு தூங்க வேண்டியது தான..?” என்று முனங்கியவன்,
“ஒருவேளை நடிக்கிறாளா..?” என்று உற்றுப் பார்த்தான். அப்படியும் தெரியவில்லை.
“எல்லாம் என் நேரம்..! இன்னும் என்னென்ன சோதனையெல்லாம் நான் தாங்கனுமோ தெரியலை..” என்று பல்லைக் கடித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவன் கைகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டே, வாகாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். இருந்த கடுப்பில் அர்ஜூன் அதை கவனிக்காமல் போனான்.
“அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க வாத்தியாரே..!” என்று மனதில் நினைத்தவள், மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அந்த நிமிடங்களை ரசிக்கத் தொடங்கினாள் வராஹினி.