தனக்கு அன்றிலிருந்து பல பிரச்சனைகள் காத்துக் கொண்டிருப்பதைப் பற்றி அறியாத வராஹினி, சந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அர்ஜூன் வாங்கிக் கொடுத்திருந்த டார்க் பர்ப்பிள் கலர் சுடிதார் அவளின் நிறத்தை தூக்கிக் காட்ட, தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து, தன்னைத் தானே மெச்சிக் கொண்டாள். நேற்றில் இருந்தே அவளுக்கு கொஞ்சம் சந்தோசம் தான். நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒரு விஷயம் நடந்து முடிந்திருக்கிறது. அதற்கேற்றார் போல், அவன் வாங்கிக் கொடுத்த உடையும் மனசை அள்ளியது. ஆள் பாதி, ஆடை பாதி என்பதும் சரிதானோ?. எப்போதும் இருக்கும் நிதானம் அவளிடம் இல்லை. மனம் ஒரு பரபரப்புடனே இருந்தது.
இவளுடைய பரபரப்பு அர்ஜூனுக்கு இல்லை போலும். அவன் எப்போதும் போல் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் கிளம்பிக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து போன் வந்து கொண்டே இருந்தது. அவனும் பேசிக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தான்.
“நான் ரெடி சார்..!” என்றபடி வந்தவளைப் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மனம் தடுமாறிப் போனது.
மனைவியை காலையில் பூத்த புது மலராக, கொள்ளை கொள்ளும் அழகுடன் பார்த்தால், எந்த ஒரு ஆண் மகனாக இருந்தாலும் மனம் தடுமாறுவது இயல்புதானே.. அர்ஜூனுக்கும் அப்படித்தான்.
“என்ன யோசனை உங்களுக்கு..?” என்றாள்.
“ங்காம்..! அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றவனின் வார்த்தைகள் கொஞ்சம் தடுமாறித் தான் வந்தது.
“நீங்க கிளம்பிட்டிங்களா சார்..!” என்றாள். அவனோ அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“உனக்கு இன்னைக்கு ஒரு நாள் ஆட்டோ வர சொல்லியிருக்கேன். நாளையிலிருந்து கார் அரேஞ்ச் பண்ணித் தரேன்..” என்றான்.
“எதுக்கு சார் ஆட்டோ..! ரெண்டு பேரும் ஒரு இடத்துக்குத் தான் போறோம். அப்பறம் எதுக்கு ரெண்டு வண்டி. நீங்களே என்னை டிராப் பண்ணிடுங்களேன்..” என்றாள் எதார்த்தமாய்.
அவள் அப்படி சொன்னவுடன், காரணமேயில்லாமல் அவனுக்கு கோபம் வந்தது.
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…? உனக்கு டிரைவர் வேலை பார்க்கிறதுக்கு, நான் ஆள் கிடையாது வராஹினி. இன்னைக்கு ஆட்டோ வர சொன்னது கூட ஒரு உதவி தான். இதுவே தொடராது..” என்றான் அர்ஜூன், கொஞ்சம் கோபம் கலந்த குரலில். அவளைப் பார்த்தால் தடுமாறும் மனதை அடக்க அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
அர்ஜூன் அப்படி பட்டென்று பேசுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதுவரை ஒருவித பூரிப்பில் இருந்த அவளின் மனம் அப்படியே விழுந்துவிட்டது.
“நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா சாரி சார். ஆட்டோவோ, பஸ்ஸோ எப்படி காலேஜ் போகணும்ன்னு எனக்குத் தெரியும். இனி நீங்களே கூப்பிட்டாலும் நான் உங்க கூட வர மாட்டேன்..” என்றாள் அவளும் கோபமாக.
எவ்வளவு ஆசையாக கிளம்பி வெளியே வந்தாள். இப்படி காலையிலேயே அவனிடம் அர்ச்சனை வாங்குவாள் என்று நினைக்கவில்லை. அவன் அப்படி பட்டென்று சொன்னதும் அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.
அவள் அப்படி சொன்னதும் அர்ஜூனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
‘இப்படி முகத்தில் அடிச்ச மாதிரி பேசியிருக்கக் கூடாதோ..?’ என்று நினைத்தவன்,
“நான் அதுக்காக சொல்லலை. ரெண்டு பேரும் சேர்ந்து போனா, அதுக்கு பல கேள்வி வரும். அதையெல்லாம் தவிர்க்க தான் அப்படி சொன்னேன். அதை கொஞ்சம் கோபமா சொல்லியிருக்க கூடாது..” என்றான் அர்ஜூன்.
“நீங்க எதுக்காக சொன்னாலும் உண்மை அது தானே சார். நான் தான் லூசு மாதிரி எதையோ நினைச்சு என்னென்னமோ பேசி, கனவு, கற்பனைன்னு கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன். உங்களை மாதிரி சிலர் அப்போ அப்போ பட்டுன்னு தட்டும் போது தான் உண்மை என்னன்னு உறைக்குது..” என்றவள், அதற்குமேல் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.
“ஹேய்..! எதுவும் சாப்பிடாம போற..?” என்றான்.
“ஒரு நேரம் சாப்பிடலைன்னா ஒன்னும் ஆகிடாது சார். எனக்கு சமைச்சு தர்றதுக்கு நீங்க என்ன சமையல்காரறா என்ன..? உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் சார்…” என்றவள், வேகவேகமாய் வெளியேறி சென்று விட்டாள்.
“ஷிட்..!” என்று தரையை ஓங்கி மிதித்தவன், வீட்டைப் பூட்டி, காரை எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியே வருவதற்கும், அவள் ஆட்டோவில் ஏறி செல்வதற்கும் சரியாக இருந்தது.
‘என்ன இருந்தாலும் நீ அப்படி பேசியிருக்கக் கூடாது அர்ஜூன்..? எவ்வளவு ஆசையா கிளம்பி வந்தா..?’ என்று அவனைக் கடிந்து கொண்டது அவன் மனம்.
“அவ ஆசையா வர்றது தான் எனக்குப் பிரச்சனையே..?அது ஏன் உனக்குப் புரியவே மாட்டேங்குது..” என்றான் மனதிடம்.
“அவ உன்கிட்ட லவ்வரா நடிக்கத் தான் உதவி கேட்டா. நீயா தான் அவ கழுத்தில் தாலியை கட்டின. நாடகம்ன்னு நீ சொன்னாலும், எல்லாரும் அதை ஒத்துக்குவாங்களா..? உங்கப்பா முதல்ல ஒத்துக்குவாரா..? அவ கழுத்தில் இருக்கிறது உன் அம்மாவோட தாலி… அதை மறந்துடாத அர்ஜூன்…” என்று அவன் மறந்து போனதை, மனம் ஞாபகப் படுத்தியது.
“எப்படி பார்த்தாலும் நான் அவளுக்கு நல்லது தான் பண்ணியிருக்கேன். நீ என்னைய குற்றம் சொல்றதை விடு முதல்ல..” என்றான் தனக்குத் தானே.
ஆட்டோவில் சென்று கொண்டிருந்த வராஹினிக்கு அப்படி ஒரு எரிச்சல்.
“அப்படி நான் என்ன சொல்லிட்டேன்..? எதுக்காக அப்படி கோபமா பேசணும்..? ஒரே கார்ல வரலைன்னா மட்டும் எல்லாருக்கும் தெரியாம இருக்குமா..? நானே சொல்லிட்டா என்ன பண்ணுவான். முக்காவாசி நேரம் மூஞ்சிய முசுமுசுன்னு தான் வச்சிருக்கான்… எல்லாம் என்னை சொல்லணும்..” என்று அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே சென்றாள் வராஹினி.
அவன் அருகில் இருந்த போது வேலை செய்யாத மூளை, இப்போது அவளுக்கு தீயாக வேலை செய்தது.
“இந்த தாலியை எப்படி மறைச்சு வைக்க முடியும். நான் என்ன சினிமாவுல வர்ற ஹீரோயினா… வருஷக்கணக்கா மறைச்சு வைக்க..இதுல லாஜிக் எங்க இருக்கு..? எப்படி மறைக்க முடியும்..?” என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டே வந்தவள், காலேஜ் அருகில் வந்தவுடன், வீம்புக்கென்றே தாலி நன்றாகத் தெரியும் படி எடுத்து விட்டுக் கொண்டு தான் சென்றாள். அதுவும் அர்ஜூன் தனக்கு முன் அங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்த பிறகு தான் அவ்வாறு செய்தாள்.
வேகமாய் அவள் அருகில் வந்தவன்,
“எதுக்கு இவ்வளவு நேரம்..?” என்றான்.
“என்ன சார் பண்றது..? கார் அளவுக்கு ஸ்பீடா போற ஆட்டோ இன்னும் கண்டுபிடிக்கலை சார்…” என்றாள் நக்கலாக.
அவன் எவ்வளவு வேகத்தில் வந்தான் என்று அவனுக்குத் தானே தெரியும். ஆனால் அவள் பேசியதை கேட்டவனுக்கு சுள்ளென்று ஏறியது.
“உன்னையெல்லாம்..!” என்று ஏதோ சொல்ல வந்தவன், திரும்பி நெடுநெடுவென்று நடக்கத் தொடங்கினான். திடீரென அவனுக்கு ஏதோ தோன்ற, பட்டென்று திரும்பிப் பார்த்தான். சரியாக அதே நேரம் குருவும், மிதிலாவும் வந்தனர்.
“ஹேய் வரா..?” என்ற மிதிலா அவளை கட்டிக் கொள்ள,
“இந்தா உன்னோட புக்ஸ்..” என்றான் குரு.
“அம்மா ஏதாவது சொன்னாங்களா குரு..?” என்றாள் வராஹினி.
அவள் குரு என்று சொன்னதிலிருந்தே அவள் அப்செட்டாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான் குரு கோவிந்தன்.
“எதுவும் அதிசயம் நடந்ததான்னு தெரியலை. உங்க மம்மி ஒண்ணுமே சொல்லாம, அவங்களே எடுத்துக் கொடுத்தாங்க. அதுக்குமேல உங்க அண்ணன் இருக்கான் பாரு, அப்படியே பாசப் பயிரை வளர்த்தான். என்ன ஒன்னு, என்னால தான் இதையெல்லாம் சகிச்சுக்க முடியலை. அப்படி என்னதான் நடந்தது..?” என்றான் குரு.
“இப்ப உடனே எல்லாமே உனக்குத் தெரியனுமா..? வா கிளாஸ்க்கு போவோம். விட்டுப் போன எல்லா பேப்பரையும் கவர் பண்ணனும். நிறைய பெண்டிங் இருக்கு..” என்றாள்.
அர்ஜூன் அவளிடம் எதையோ சொல்ல முற்பட, அது தெரிந்தாலும் தெரியாத மாதிரியே காட்டிக் கொண்டாள்.
“ஹேய் வரா..! கல்யாணம் தான் நின்னு போய்டுச்சே. அப்பறம் எப்படி கழுத்தில தாலி..?” என்று அதிர்ந்து போய் கேட்டாள் மிதிலா.
“ஆமால்ல…! இதெப்படி வராஹி வந்தது. நேத்து கூட நான் கவனிக்கலையே..?” என்றான் குரு.
அர்ஜூன் அவளை முறைக்க,
“எனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு..” என்றாள்.
“என்னது…? எப்படி எப்போ..? அந்த ரஞ்சன் கூடவா..?” என்றாள் மிதிலா.
“இல்லை..” என்றாள் வராஹி.
“அப்பறம் யாரு..?” என்று இருவரும் கோரசாய் கேட்க,
அர்ஜூன் ஏகத்திற்கும் கடுப்பாகிக் கொண்டிருந்தான்.
‘நான் என்ன சொன்னேன்.. இவ என்ன பண்ணிட்டு இருக்கா..?’ என்று நினைத்தவனின் கோபம் இன்னமும் கூடிக் கொண்டு தான் போனது.
“இப்போதைக்கு சொல்ல முடியாது. கண்டிப்பா ஒரு நாள் சொல்றேன்..” என்றாள்.
“எல்லாரும் கேட்பாங்களே..” என்றாள் மிதிலா.
“எல்லாருக்கும் இதே பதில் தான்..” என்றவள் அடுத்து அந்த இடத்தில் நிற்கவில்லை. வேகமாய் செல்லும் அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். முடியை அழுந்த கோதிக் கொண்டவனுக்கு, யோசனைக்கான பதில் தான் கிடைக்கவில்லை.
“மிதிலா..!” என்று காதைக் கடித்தான் குரு.
“என்னடா..?” என்றாள் மிதிலா.
“எனகென்னமோ.. நம்ம வராஹியோட புருஷன் அர்ஜூன் சார் தான்னு தோணுது..” என்றான்.
“எதை வச்சு அப்படி சொல்ற..?” என்றாள் மிதிலா.
“நேத்து மாலில் பார்த்தப்பவே எனக்கு இந்த டவுட் இருந்தது. அர்ஜூன் சார் வராஹியை பார்க்கிற பார்வையில் என்னமோ இருக்குன்னு தோணுச்சு. இன்னைக்கு வராவோட வீட்டுக்குப் போனப்ப, அவ அம்மாவும் அப்படி தான் பேசினாங்க..” என்றான் குரு.
“என்னன்னு..?” என்றாள் மிதிலா.
“பொண்டாட்டிக்கு புருஷன் வாத்தியாரா இருந்தா, அவ எங்க படிக்கப் போறா.. அப்படின்னு பேசிட்டே தான் அவ புக்ஸ எடுத்துக் குடுத்தாங்க..” என்றான் குரு.
“ஒரு நேரம் கூட பசி தாங்க மாட்டியே… உனக்கு எப்படி பசியில்லாம போகும். காலையில ஹெவியா சாப்பிட்டியா..?” என்றாள்.
“ரொம்ப ஹெவியா..” என்றாள்.
“வர வர இவ நம்ம பிரண்ட் வராஹியே இல்லை கோவிந்தா. நம்மளை விட்டு ஹெவியா சாப்பிட்டிருக்கா… வாடா போகலாம்..” என்று குருவை இழுத்துக் கொண்டு போனாள். அவர்கள் கேண்டினுக்குள் நுழைய, அவர்கள் இருவரை மட்டும் பார்த்த அர்ஜூனுக்கு புருவம் நெரிந்தது.
“அது வராஹிக்கு பசிக்கலையாம் சார். அதான் நாங்க மட்டும் சாப்பிட வந்தோம். என்னன்னு தெரியலை சார், எப்பவும் பசி தாங்க மாட்டா. இன்னைக்கு என்னமோ இப்படி சொல்லிட்டா. உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தான சார். கொஞ்சம் கவனிச்சு விடுங்களேன்…” என்றான் குரு.
“வாட்..!” என்றான் அர்ஜூன்.
“அது… கொஞ்சம் கவனிச்சு, சாப்பிட சொல்லுங்கன்னு சொல்ல வந்தேன் சார், வேற ஒண்ணுமில்லை சார்..” என்றான். அவனை மேலும், கீழுமாக பார்த்துக் கொண்டு சென்றான் அர்ஜூன்.
அவன் சென்ற பின்.. குரு, மிதிலாவை அர்த்தத்துடன் பார்த்து வைக்க, அவளுக்கும் எதுவோ புரியத் தொடங்கியது.
“வராஹினி…! உன்னை கரெஸ்பாண்டேன்ட் கூப்பிடுறார்மா..” என்று கிளார்க் வந்து சொல்லி விட்டு செல்ல,
“என்னை எதுக்குக் கூப்பிடனும்..?” என்ற யோசனையுடன் சென்றாள் வராஹினி.
“மே ஐ கம்மின் சார்..!” என்று அவள் அனுமதி கேட்க,
“வாம்மா..!” என்றார் கார்த்திகேயன்.
“அங்கிள்…! நீங்க இங்க..” என்று இழுத்தாள்.
“இது நம்ம காலேஜ்ன்னு தெரியும் தானம்மா..?” என்றார் கார்த்திகேயன்.
“மாமான்னு சொல்லுமா..? இந்த அங்கிள் எல்லாம் என்னமோ மாதிரி இருக்கு..” என்றாள்.
“வீட்ல அப்படி கூப்பிடுறேன் அங்கிள். இங்க வேண்டாம்..!” என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வேகமாய் வந்தான் அர்ஜூன். அவன் அங்கு வருவான் என்று எதிர்பார்க்காத வராஹி, அப்படியே முழித்துக் கொண்டு நிற்க,
“உனக்கென்ன மனசுல பெரிய இவன்னு நினைப்பா..? மேடமை கெஞ்சி கொஞ்சி தான் சாப்பிட வைக்கனுமோ..? உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, உன்னோட அந்த அரைகிராக்கி அண்ணன் என்னை வந்து கேட்கவா..? வந்து சேர்ந்திருக்க பாரு..? மரியாதையா சாப்பிட்டு கிளாஸ்க்கு போ..! இல்லை நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். சொல்லி வைங்க இவகிட்ட..” என்று கார்த்திகேயனிடமும் முகத்தை காட்டிவிட்டு சென்றான் அர்ஜூன். வந்த வேகத்தில் கத்தி விட்டு சென்றிருந்தான்.
பிரஜேஷை அவன் ‘அரைகிராக்கி அண்ணன்’ என்று சொன்னதில் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கண்கள் குளம் கட்டி நிற்க,
“என்னம்மா பிரச்சனை..? எந்த பிரச்சனையா இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. உட்கார்ந்து சாப்பிடும்மா..” என்றார் அவளிடம்.
“இருக்கட்டும் அங்கிள்..! நான் கேண்டின் போய் சாப்பிட்டுகிறேன்..” என்றாள்.
“இது அங்க இருந்து வாங்கிட்டு வந்தது தான் வராஹினி. உன் புருஷன் தான் வாங்கிட்டு வந்தான். அதை நேரா குடுக்க அய்யாவுக்கு மனசில்லை போல. அதான் இப்படி பேசிட்டு போறான். நீ எதுவும் நினைச்சுக்காதம்மா… அவனுக்கு கோபம் வந்தா என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேசிடுவான்…” என்றார்.
“இட்ஸ் ஓகே அங்கிள்…” என்றாள்.
“ஏதாவது பிரச்சனையாம்மா.. ரெண்டு பேருக்கும்..?” என்றார்.
“அதெல்லாம் இல்லை அங்கிள்..! அவர் எதோ புரியாம பேசிட்டு போறார்..” என்றவள், அவன் வாங்கி வந்த உணவை எடுத்துக் கொண்டு,
“நான் கிளம்புறேன் அங்கிள்..!” என்றாள்.
“சரிம்மா..! ஏதாவது ஒண்ணுன்னா, எனக்கு உடனே கூப்பிடுமா..” என்றார்.
“ஓகே அங்கிள்..!” என்றவள் வெளியேறி செல்ல, அதை மேல் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
“நாம நினைக்கிற மாதிரி இவ லேசுப்பட்டவ இல்லை. கொஞ்சம் திமிரும் இருக்கத்தான் செய்து.. இவளை வேற மாதிரி தான் ஹேண்டில் பண்ணனும்” என்று நினைத்துக் கொண்டான். அது அவ்வளவு எளிதல்ல என்று புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரப் போகிறது என்று அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.