கல்லூரி முடிந்து வெகு நேரமாகியும் வராஹினி இன்னமும் வீட்டிற்கு வரவில்லை. அவளை நினைக்க நினைக்க அர்ஜூனுக்கு கோபம் கூடிக் கொண்டு தான் போனது.
“என்ன பொண்ணு இவ..? ஒரு பொறுப்பு வேண்டாம்..? எல்லாரையும் இப்படி தான் டென்ஷன் பண்ணிட்டே இருப்பா போல..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.
இதற்குள் அவள் கிளம்பியதை பார்த்துவிட்டுத் தான் அர்ஜூனும் கிளம்பியிருந்தான். ஆனால் இன்னமும் அவள் வீடு வந்து சேரவில்லை.
“எங்க போனா..? போன் பண்ணி கேட்கலாம்ன்னு பார்த்தா, போனும் இல்லை..” என்று எரிச்சல் பட்டவன், கோபத்துடன் வீட்டிற்குள் உலாத்திக் கொண்டிருக்கும் போது, வந்து சேர்ந்தாள் வராஹினி. அவளைப் பார்த்தவுடன் பிடித்து வைத்த பொறுமை எல்லாம் பறந்து போனது.
“நில்லு..! என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல..?” என்றான் கோபமாய்.
“ஒன்னையும் நினைக்கலை..” என்றாள் கடுப்பாய்.
“இவ்வளவு நேரம் எங்க போயிருந்த..? எங்க போனாலும் சொல்லிட்டு போக மாட்டியா..? இப்படித்தான் இருக்குறவங்களை டென்ஷன் பண்ணுவியா..? இதென்ன பழக்கம்..?” என்றான் கோபம் கலந்த குரலில்.
“நீங்க யார் சார் எனக்கு..? நான் எதுக்கு சார் உங்ககிட்ட சொல்லிட்டு போகணும். கணவன்,மனைவியா நடிக்கத் தானே செய்றோம். உண்மையான கணவன் மனைவி இல்லையே. அப்பறம் ஏன் சார், ஒரிஜினல் புருஷன் குதிக்கிற மாதிரி குதிக்கிறிங்க..?” என்றாள் வராஹினி.
“உன்னோட இஷ்ட்டத்துக்கு வந்துட்டு போக இது ஒன்னும் ஹோட்டல் கிடையாது. என்னோட வீடு. இங்க இருக்குற வரைக்கும் நீ என்னோட பொறுப்பு. அது உன்னோட ஞாபகத்துல இருந்தா ரொம்ப நல்லது..” என்றான் அர்ஜூன்.
“நீங்க தான சார் காலையில எதுக்கும் உங்களை எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொன்னிங்க. அதைத் தான் நான் பண்றேன். ஆனா, அதுவும் உங்களுக்கு பிரச்சனையா இருக்குன்னா, நான் என்னதான் பண்றது..?” என்றாள்.
“பாவம் சின்ன பொண்ணுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசுற நீ..” என்றான் அர்ஜூன்.
“என்னைய சின்ன பொண்ணா பாருங்கன்னு நான் சொல்லவே இல்லையே. பெரிய பொண்ணா பார்க்க உங்களுக்கு மனசு வரலைன்னா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது..” என்றாள்.
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா..?” என்றவன் எரிச்சலுடன் வெளியே கிளம்ப,
“ஒரு நிமிஷம் சார்..!” என்றாள்.
“என்ன..?” என்றான்.
“இந்தாங்க..!” என்றவளின் கையில் கத்தையாக பணம் இருந்தது.
“என்னதிது..?” என்றான் கோபமாக. அதுவரை கொஞ்சம் டென்ஷன் கலந்த எரிச்சல் மட்டுமே அவன் முகத்தில் இருந்தது. இப்போது அதையெல்லாம் மீறிய கோபம் அவன் முகத்தில் தெரிய, வராஹிக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது. கொஞ்சம் பயத்துடன் முழித்துக் கொண்டு நிற்க,
“என்னதிதுன்னு கேட்டேன்..!” என்றான் மீண்டும் சத்தமாக.
“நேத்து நீங்க எனக்காக செலவளித்த பணம்..!” என்றாள், கொஞ்சம் தைரியத்துடன்.
“வாட்..!!!!” என்றான்.
“ஆமா சார்..! நேத்து உங்க கார்ட்ல நான் எவ்வளவு பணத்துக்கு பர்சேஸ் பண்ணேனோ அந்த பணம் தான் இது. சரியா இருக்கு..” என்றாள்.
“பணம் ஏது..?” என்றான், இறுக்கிப் பிடித்த பொறுமையுடன்.
“எங்க அப்பாகிட்ட வாங்கினேன். அவரைப் பார்க்கத்தான் போயிருந்தேன்..” என்றாள் சாவகாசமாய்.
“இப்படி சொல்ல உனக்கு வெட்கமாயில்லை..” என்றான்.
“இதுல வெட்கப்பட என்ன இருக்கு..? முன்ன பின்ன தெரியாத உங்ககிட்ட வாங்கவே நான் வெட்கப்படலை. அப்படி இருக்கும் போது அவர் என்னோட அப்பா. அவர்கிட்ட எனக்கென்ன வெட்கம், சூடு, சொரணை வேண்டிகிடக்கு..? இன்னைக்கு இப்படி பேசுன நீங்க, நாளைக்கு எல்லாத்துக்கும் கணக்கு பார்ப்பிங்க. அதெல்லாம் எதுக்குன்னு தான் நானே முந்திகிட்டேன். நான் இங்க இருக்குற வரைக்கும் எனக்கான செலவை நானே பார்த்துக்கிறேன்.” என்றாள் பதிலுக்கு.
“இது என்னோட வீடு. நான் இங்க ஹாஸ்ட்டல் வச்சு நடத்தலை. உனக்கு அப்படி ஒரு இடம் வேணும்ன்னா, நிறைய ஹாஸ்ட்டல் இருக்கு. அங்க போய் ஸ்டே பண்ணிக்க. திஸ் ஸ் மை லாஸ்ட் வார்னிங்..” என்றான் கோபமாக.
“அது எப்படி சார் போக முடியும். நீங்க என் கழுத்தில் தாலி கட்டியிருக்கிங்க..? அதனால தான் இங்க இருக்கேன்..” என்றாள்.
“இல்லைன்னா மட்டும் என்ன பண்ணியிருப்ப…? நான் தான் உனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன். என்னமோ நீ எனக்கு ஹெல்ப் பண்ண ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க..?” என்றான் அர்ஜூன்.
“நான் உங்ககிட்ட இந்த ஹெல்ப் கேட்கவேயில்லை. அந்த நிமிஷத்துக்கு லவ்வரா நடிக்க சொல்லி கேட்டது கூட ரொம்ப தப்புத்தான். அதுக்காக நான் இப்போ மன்னிப்புக் கேட்டுக்கிறேன். பணத்தை வாங்கிக்கங்க..” என்றாள்.
“மரியாதையா போய்டு..” என்றான் அர்ஜூன்.
“நீங்க கட்டின தாலியை நீங்களே கழட்டிடுங்க. நான் போயிடுறேன்..” என்று பட்டென்று சொல்லிவிட்டாள். ஆனால் அப்படி செய்துவிடுவானோ என்ற பயமும் மனதிற்குள் இருந்தது.
“இப்ப என்ன தாண்டி சொல்ல வர்ற..?” என்றான் எரிச்சலுடன்.
“இது தான் சான்ஸ் வராஹி. அப்படியே ரூட்டை போடு..” என்று மனதிற்குள் நினைத்தவள்,
“என்னால பொண்டாட்டியா நடிக்க முடியாது. பொண்டாட்டியா தான் இருப்பேன்..” என்றாள் பட்டென்று.
“புரியலை..!” என்றான் அவளைப் கூர்ந்து பார்த்தபடி.
“அதாவது என்ன சொல்ல வரேன்னா, இந்த நடிப்பெல்லாம் வேண்டாம். எல்லா உரிமையோடவும் நான் இந்த வீட்ல இருக்கணும். அதுக்கு நீங்க எனக்கு நிஜமாவே புருஷன் ஆகணும்..” என்றாள்.
“வாய்ப்பேயில்லை..! படிக்கிற வயசுல படிக்கிற வேலையை மட்டும் பார்.” என்றான் உறுதியாக.
“அதெல்லாம் எனக்குத் தெரியும். ஒன்னு இந்த தாலி கடைசி வரைக்கும் என் கழுத்தில் மட்டும் தான் இருக்கணும். இல்லையா, இப்பவே நீங்களே இதை கழட்டிடுங்க..” என்றாள், அவளும் உறுதியாக.
“எல்லாத்துக்கும் சரின்னு நீ தலையாட்டினதா ஞாபகம். இப்போ உன்னோட காரியம் முடிஞ்ச உடனே, உன்னோட இஷ்ட்டத்துக்கு என்னை வளைக்கப் பார்க்குறியா..?” என்றான் கோபமாக.
“புருஷனை நான் ஏன் வளைச்சிப் போடணும்..?அதுக்கென்ன அவசியம் வந்தது. நான் சொல்ல வர்றது ஒண்ணுதான். என்னால பொய்யா நடிக்க முடியலை. நடிக்கவும் முடியாது. இந்த தாலியை மறைக்கிறது, மனசுக்குள்ள ஒன்னை வச்சுகிட்டு வெளிய ஒன்னு பேசுறது இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு தோணுது.. ஏன்னா நீங்க போன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். கண்டிப்பான முறையில் என்னை டைவேர்ஸ் பண்ணி, எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தரணும்ன்னு நீங்க பேசிட்டு இருந்தது அச்சுப் பிசகாமல் என் காதில் விழுந்தது.” என்றாள்.
அன்று காலை கிளம்பும் அவசரத்திலும் அவன் பேசியதை கேட்டிருந்தாள் அவள். அவன் யாரிடம் பேசினான் என்றுதான் தெரியவில்லை அவளுக்கு.
“இப்ப என்ன? இந்த தாலியை நான் கழட்டிட்டா, உன்னோட பிரச்சனை முடிஞ்சிடும் அப்படித்தான..?” என்றவன் வேகமாய் அவளின் அருகில் சென்று தாலியில் கையை வைக்க, அதுவரை ஒரு குருட்டு நம்பிக்கையில் பேசிக் கொண்டிருந்தவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“என்ன பண்றிங்க சார்..?” என்றாள், தனக்குள் எழுந்த படபடப்பை மறைத்து.
“நீ சொன்னதைத் தான் செய்யறேன். எனக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது. உன்னோட நல்லதுக்காகத் தான் இதை உன் கழுத்தில் போட்டேன். இப்ப இதுவே உன்னோட எதிர்கால வாழ்க்கைக்கு தடையா இருக்குனா, அதை எடுத்துக்கிறதுல எந்த தப்புமில்லை…” என்றான் அர்ஜூன்.
“இப்ப தான் நான் சரியா யோசிக்கிறேன். காலையில உன்னை காலேஜில் டிராப் பண்ணலைன்ற ஒரு காரணத்துக்காக எவ்வளவு ஆட்டம் ஆடுற. நீ ஆடுற ஆட்டத்துக்கு தாளம் போடுறவன், இந்த அர்ஜூன் கிடையாது. சின்ன பொண்ணுன்னு நினைச்சு கொஞ்சம் சாதரணமா பேசினது தப்பா போய்டுச்சு…” என்றான் அர்ஜூன்.
“இனிமேல் அப்பாகிட்ட பணம் வாங்கினேன், ஆட்டுக்குட்டிகிட்ட பணம் வாங்கினேன்னு வந்து நின்ன, நீயென்ன சொல்றது..? நானே அனுப்பிடுவேன்..” என்றான் அர்ஜூன்.
“அப்படியெல்லாம், நீங்க நினைச்ச உடனே செய்ய முடியாது. நீங்க என்னதான் குட்டிக்கரணம் அடிச்சாலும், நான் தான் உங்க பொண்டாட்டி. நீங்க தான் என் புருஷன். அதை யாராலும் மாத்த முடியாது. இப்ப என்ன..? எங்கப்பாகிட்ட பணம் வாங்கிட்டு வந்தது உங்களுக்கு பிடிக்கலை, அதான..? விடுங்க, நான் திருப்பிக் குடுத்திடுறேன்..” என்றவள்,
“அப்படியே நான் என் அப்பாகிட்ட பணத்தை வாங்கிட்டு வந்தது தப்புன்னாலும், உண்மையான புருஷனுக்குத் தானே கோபம் வரணும். அப்பறம் ஏன் உங்களுக்கு வருது..? நீங்க தான் நடிக்கிறிங்களே…?” என்றாள்.
“என்ன சொன்ன..?” என்றான் அர்ஜூன்.
“அது வந்து புருஷனா நடிக்கிறிங்களேன்னு சொல்ல வந்தேன் சார். அவ்வளவு தான்..” என்றவள் உள்ளே ஓடி விட்டாள்.
“அவ சொன்ன மாதிரி.. எனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வந்ததுச்சு..? அவளை நான் வெளி ஆளா நினைச்சிருந்தா, இந்நேரத்துக்கு அந்த பணத்தை வாங்கி வச்சிருக்கனுமே. எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகணும்..?” என்றவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
உள்ளே சென்ற வராஹினி, லேசாக அவனை எட்டிப் பார்க்க,
“எல்லாம் வேலை செய்து வராஹினி. இப்படியே தினமும் நாலு பிட்டைப் போடுவோம். இல்லைன்னா, நிஜமாவே இவரு தாலியை வாங்கிட்டு அனுப்பினாலும் அனுப்பிடுவார்..” என்று நினைத்தவள்,
“வாத்தி… இன்னைக்கு குடுத்த குடுல நாளைக்கு நீங்களே என்னை காலேஜ்ல டிராப் பண்ணுவிங்க பாருங்க..” என்று தனக்குத் தானே தோள் தட்டிக் கொண்டு சென்றாள்.
“எதுக்கு அர்ஜூன் வீணா டென்ஷன் ஆகுற..? அவ சொல்றதும் சரிதானே..? எத்தனை நாளைக்கு நடிக்க முடியும். எல்லா தப்பையும் உன்மேல வச்சுகிட்டு அந்த பொண்ணை கோவிச்சுகிட்டு என்ன ஆகப் போகுது..? இப்போதைக்கு எதைப் பத்தியும் யோசிக்க வேண்டாம். காலப்போக்கில் என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். அதுவரைக்கும் எதைப் பத்தியும் யோசிக்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம்..” என்று தனக்குள் ஒரு உறுதியான முடிவை எடுத்துக் கொண்டான் அர்ஜூன்.
உள்ளே வராஹினியும் அதைத் தான் யோசித்தாள்…
“இனி தேவையில்லாம அவர் வம்புக்கு போகக் கூடாது. இன்னைக்கு நடந்த கலவரத்துல எப்படியும் இனி நடிக்கிறோம் அப்படி இப்படின்னு பேச மாட்டார். அவர் சொன்ன மாதிரி படிக்கிற வேலையையும் பார்க்கணும். இன்ஜினியரிங் முடிச்ச உடனே, தைரியமா அவர்கிட்ட சொல்லணும், அவரை பிடிச்சிருக்குன்னு. அதுவரைக்கும் அடக்கி தான் வாசிக்கணும். எப்படியும் ஸ்டூடண்ட்டா இருக்கிற வரைக்கும் இப்படி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாதிரி தான் இருப்பார். கரைப்பார் கரைக்க கல்லும் கரையும்ன்னு சொல்லுவாங்க. பார்ப்போம்..” என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
கார்த்திகேயன் வீட்டிற்குள் நுழையும் போதே, முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்தது.
“என்னங்க..? எப்பவும் இந்த நேரத்துக்கு ரொம்ப டயர்டா வருவிங்க. இன்னைக்கு கொஞ்சம் சந்தோஷமா வர்ற மாதிரித் தெரியுது..?” என்றார் சுமித்ரா.
“அது ஒண்ணுமில்லை சுமி..! எல்லாம் அர்ஜூனை நினைச்சுத் தான்..” என்றார்.
“அதான, உங்களுக்கு எப்பவும் அவன் நினைப்பு மட்டும் தான..” என்றான் ரஞ்சன்.
“என்னங்க ஆச்சு..?” என்றார் சுமித்ரா.
“பொண்டாட்டி சாப்பிடலைன்னதும் அவனுக்கு எவ்வளவு கோபம் வருது. அந்த பொண்ணு சாப்பிடுற வரைக்கும் இவனும் சாப்பிடமா, அப்படியே கண்ணுலையே அக்கறையை காட்டுறான். என்ன? கொஞ்சம் கோபமா காட்டுறான். நான் கூட பயந்துகிட்டே இருந்தேன். கோபத்துல, இப்படி தாலியை கட்டிட்டானே..? அடுத்து என்ன செய்யப் போறானோன்னு. ஆனா, இனி அந்த கவலை எனக்கு இல்லை. இன்னைக்கு கண் கூடாவே பார்த்துட்டேன். என்ன பிரச்சனை வந்தாலும் அந்த பொண்ணை விட்டுக் குடுக்க மாட்டான்..” என்றார் கார்த்திகேயன்.
“அவனெங்க கோபத்துல தாலியை கட்டினான். எல்லாம் பிளான் பண்ணி தான செஞ்சான். அதான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கான். நீங்களும் அதைப் பார்த்துட்டு வந்து இங்க மெய் சிலிர்த்து பேசிட்டு இருக்கீங்க. ஆனா, அவனை நம்பி நம்ம வீட்ல ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கிறதை அடிக்கடி மறந்துடுறிங்க..” என்றான் ரஞ்சன்.
அப்போது தான் கார்த்திகேயனுக்கு மீண்டும் ரூபினியின் நினைவு வந்தது.
“அது ஒன்னு தான் எனக்கு மனசுக்குள்ள நெருடலாவே இருக்கு. ரூபிணிக்காக பார்த்து, நான் அர்ஜூனோட கோபத்தை வாங்கிக்கிட்டது தான் மிச்சம். இப்போ என்ன பண்றதுன்னு எனக்குப் புரியலை. அந்த பொண்ணோட அப்பா-அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?” என்று யோசனையில் ஆழ்ந்தார்.
“இப்பதான் வந்திங்க..? அதுக்குள்ளே ஏன் இவ்வளவு யோசனை. முதல்ல கொஞ்சம் பிரஷ்ஷாகிட்டு வாங்க..” என்றார் சுமித்ரா.
“என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சவன் ரஞ்சன். நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ். இப்போ அவனே என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான். அதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு யோசிக்கிறான். யோசிச்சு பார்த்தா எனக்கும் அது தான் சரின்னு படுது…” என்று ரஞ்சனுக்கு வேலையே வைக்காமல், நினைத்ததை கச்சிதமாக பேசி முடித்தாள் ரூபிணி.
“என்னம்மா ரூபிணி சொல்ற..? ரஞ்சன் நிஜமாவா..?” என்றார் கார்த்திகேயன். அவரால் நம்பவே முடியவில்லை. நேற்று வரை வராஹினியை உயிர் அது இது என்று பிதற்றிக் கொண்டிருந்தான் ரஞ்சன். இன்று ரூபிணி இப்படி சொல்லவும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரின் குழப்பம் அவளுக்குப் புரிந்தது.
“நிஜம் தான் அங்கிள்..! ரஞ்சனே இதை என்கிட்டே சொன்னான். அதைத்தான் நான் உங்ககிட்ட சொன்னேன்..” என்றாள் ரூபிணி.
“என்ன ரஞ்சன்..? ரூபிணி சொல்றது..?” என்று கார்த்திகேயன் அவனின் முகத்தைப் பார்க்க, அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் பேச வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. இதெல்லாம் தெரிந்து தானோ என்னவோ ரூபிணி சரியான நேரத்தில் பேசினாள்.
“டாட்.. அது வந்து..” என்று இழுத்தான் ரஞ்சன்.
“சொல்லு ரஞ்சன்..! அங்கிள் கிட்ட உனக்கென்ன பயம்..? உண்மையை சொல்லப் போனா, உன்னோட முடிவை நினைச்சு அவர் பெருமை தான் படுவார்..” என்றாள் ரூபிணி.
“ஆமா ரஞ்சன்..! இது வரைக்கும் நீ என்ன பண்ணியிருந்தாலும், இந்த ஒரு விஷயத்துல அதை சரி பண்ணிட்ட. வாக்குக் குடுத்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தவிச்சுகிட்டு இருந்த எனக்கு, நீ நிஜமாவே ஒரு நல்ல வழியை காட்டியிருக்க ரஞ்சன்..” என்றார் கார்த்திகேயன்.
அவனுக்கு எதுவும் சொல்ல முடியாத நிலை. வாயைத் திறந்தால், அவன் தான் மாட்டிக் கொள்வான். அதே சமயம் ரூபிணியை திருமணம் செய்வதில் அவனுக்குத் துளியும் விருப்பம் கிடையாது. அவன் யோசித்துக் கொண்டிருக்க,
“என்னப்பா.. அப்பா பேசிட்டு இருக்கார், நீ அமைதியா இருக்க..?” என்றார் சுமித்ரா.
“மாம்..! அவரே டயர்டா வந்திருக்கார். நீங்க முதல்ல அவரை சாப்பிட சொல்லுங்க. இதை காலையில கூட பேசிக்கலாம். ஒன்னும் அவசரமில்லை. நானும் எங்கயும் போய்ட மாட்டேன். ரூபியும் எங்கயும் போய்ட மாட்டா..” என்று பேச்சை அப்படியே திசை திருப்பினான் ரஞ்சன்.
“அதுவும் சரிதான்..! நீங்க பிரஷ் ஆகிட்டு வாங்க. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்..” என்று உள்ளே சென்று விட்டார் சுமித்ரா. கார்த்திகேயன் அவரின் அறைக்குள் சென்று விட,
“என்ன ரூபி இதெல்லாம்..?” என்று பல்லைக் கடித்தான் ரஞ்சன்.
“என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா..?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“அப்கோர்ஸ்..! இதோ பார், நானும் ஒன்னும் சாதாரண பொண்ணு இல்லை. உங்களுக்கு உங்க ஸ்டேட்டஸ் எப்படி முக்கியமோ, அந்த அளவுக்கு என்னோட ஸ்டேட்டஸ் எனக்கு முக்கியம். உனக்காக நான் எவ்வளவோ பண்ணியிருக்கேன். எனக்காக நீ இந்த ஒரு விஷயத்தை பண்ணக் கூடாதா..?” என்றாள் ரூபிணி.
“எனக்கு உன்னை பிடிக்கலை..” என்றான் ரஞ்சன்.
“ஆஸ்திரேலியாவுல என்கூட லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது மட்டும் பிடிச்சதோ. உங்க டாட், உன்னை நல்லவன்னு நம்பிட்டு இருக்கார். இதை இப்படியே மெயின்டெய்ன் பண்ணினா உன்னோட இந்த பேராவது தப்பிக்கும்..” என்றாள் ரூபிணி.
“முடிவு பண்ணிட்டியா..?” என்றான் ரஞ்சன்.
“என்னோட முடிவு மட்டுமில்லை, உன்னோட முடிவும் இப்போ என் கையில தான் இருக்கு…” என்று சிரித்தாள் ரூபிணி. அந்த சிரிப்பில், இத்தனை நாள் பார்த்த ரூபிணி இல்லை அவள்.
நடந்த அனைத்தும் ரஞ்சனின், ரஞ்சன் நடத்திய அனைத்தும் அவன் கண்முன்னால் வந்து நடனமாடிக் கொண்டிருந்தது.