கார்த்திகேயன் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளியில் இருந்து வந்த ரஞ்சன், வந்த வேகத்தில் கோபமாய் கத்தத் தொடங்கினான்.
விஷயம் என்னவென்று புரியாத கார்த்திகேயனும், சுமித்ராவும் புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருக்க, விஷயம் புரிந்த ரூபிணியோ அவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளின் அந்த போக்கு அவனின் கோபத்தை மேலும் தூண்டியது.
“நான் பேசிட்டே இருக்கேன்..! நீ இப்படி காது கேட்காத மாதிரி சாப்பிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?” என்றான்.
“நீ பேசுறதை நான் கணக்குலையே எடுக்கலைன்னு அர்த்தம். இன்னும் ஓப்பனா சொல்லப் போனா, உன்னை ஒரு ஆளாவே மதிக்கலைன்னு அர்த்தம்..” என்றாள் சாவகாசமாய்.
“ஏய்..! நானும் போனா போகுதுன்னு பார்த்தா நீ ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க சொல்லிட்டேன். இதெல்லாம் நல்லதுக்கில்லை..” என்றான் எச்சரிக்கும் குரலில்.
“என்ன பிரச்சனை ரஞ்சன்..? எதுக்காக இப்படி கத்திட்டு இருக்க..?” என்றார் கார்த்திகேயன்.
“நான் பேசுறது உங்களுக்கு கத்துற மாதிரி தான் இருக்கும். ஆனா இவ பண்றது எல்லாம் உங்க கண்ணுக்கே தெரியாது. என்னைக்கு இவளை என் தலையில கட்டி வச்சிங்களோ.. அன்னைக்கு ஆரம்பிச்சது பிரச்சனை..” என்றான்.
“என்னம்மா ரூபிணி..? என்ன பிரச்சனை..?” என்றார்.
“அதை என்கிட்டே கேளுங்க சொல்றேன். இவ என்னோட கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட்னு எல்லாத்தையும் பிளாக் பண்ணி வச்சுட்டா. இன்னைக்கு பார்ட்டிக்கு போன இடத்துல என்னோட மானம் போச்சு, மரியாதை போச்சு..” என்றான்.
“இதெல்லாம் உனக்கு இன்னுமா இருக்கு…” என்று ரூபிணி நக்கலாய் கேட்க, முறைத்தான்.
“கண்டிப்பா இல்லை. அவ்வளவு மான ரோஷம் இருக்குறவன் உழைச்சு சாப்பிடனும். இப்படி உட்கார்ந்து ஊதாரி மாதிரி அழிக்கக் கூடாது…” என்றாள் சூடாக.
“கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற..?” என்றான்.
“ஆபீஸ்க்கு போனா, உனக்கு எல்லாம் கிடைக்கும். இல்லைன்னா வீட்ல சோறு கூட கிடையாது. இது தான் என்னோட முடிவு. இனி நீதான் முடிவு பண்ணனும்..” என்றாள்.
“என்ன ரூபிணி இது..? இதெல்லாம் அவன் சொத்து தான். ஏன், என் பிள்ளையை இப்படி எதுக்கு அல்லல் பட வைக்கணும்..?” என்றார் சுமித்ரா.
“நீங்க பேசாம இருந்தா உங்களுக்கு நல்லது. நான் உங்க பிள்ளைகிட்ட பேசலை. என் ஹஸ்பண்ட்கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க பிள்ளை வளர்த்த லட்சனத்தை தான் எல்லாரும் பார்த்தோமே..! இனியாவது இவன் திருந்தி ஒழுங்கா இருக்கனும்ன்னு நினைச்சா, எந்த விஷயத்துலையும் தலையிடாதிங்க..” என்றாள் உறுதியாக.
“என்னங்க..? இவ இப்படி சொல்றா..?” என்றார் கார்த்திகேயனிடம்.
“அந்த பொண்ணு சொல்றதுல எந்த தப்பும் இருக்கிறதா எனக்கு தெரியலை. இனியாவது அவன் உருபட்டா சரித்தான்..” என்றவர் எழுந்து விட்டார். சுமித்ராவும் வேறு வழியில்லாமல் செல்ல,
“இப்ப என்னதான்டி சொல்ல வர்ற..?” என்றான் கடைசியாக.
“நான் தான் தெளிவா சொன்னேனே..! உனக்குப் புரியாமையா இருக்கும். நீ ஒரு மனுஷனா, புருஷனா நடந்துக்குற வரைக்கும் இப்படித்தான்…” என்றாள்.
“மனுஷனா கூட நடந்துக்குவேன்..! ஆனா, புருஷனா நடந்துக்குவேன்னு கனவுல கூட நினைக்காத…” என்றான்.
“சரி இருந்துட்டு போ..! யாருக்கு என்ன வந்தது. எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது. என்ன உனக்கு தான் பிரச்சனை. ஏற்கனவே அர்ஜூனை விட எல்லா விஷயத்துலையும் முன்னாடி இருக்கனும்ன்ற எண்ணம் உனக்கு. இப்ப அவங்க சந்தோஷமா இருக்காங்க. கூடிய சீக்கிரம் வராஹினி குழந்தை கூட பெத்துப்பா. அப்போ கூட அர்ஜூன் குழந்தை தான் முதல் வாரிசா வரும்..” என்று அவனை எங்கு அடிக்க வேண்டுமோ, அங்கு அடித்தாள்.
‘என்னது எனக்கு முன்னாடி அவன் அப்பா ஆகிடுவானா..? கண்டிப்பா நடக்காது. இந்த ரஞ்சன் தான் முதல்ல அப்பா ஆவான். இந்த விஷயத்துல கண்டிப்பா அவனை ஜெயிக்க விட மாட்டேன்..!’ என்று மனதிற்குள் உறுதி எடுத்தவன்,
“இங்க பார்..! என்ன செய்வியோ எனக்குத் தெரியாது…நான் தான் முதல்ல அப்பா ஆகணும்..” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
“அப்படி வாடி மகனே வழிக்கு..” என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டவள்,
“அதுக்கு முதல்ல, நான் சொன்ன எல்லாத்தையும் நீ பண்ணனும்…” என்று பிகு பண்ணினாள்.
“பண்றேன்..! வேற வழி… வசமா சிக்கிட்டேன். இனி எனக்கு எங்க விடிவு.. எல்லாம் என் நேரம்..” என்று அலுத்துக் கொண்டான் ரஞ்சன்.
‘எப்பா சாமி..! கடைசி வரைக்கும் இவனை அர்ஜூன் பேரை சொல்லித் தான் திருத்தணும் போல. இந்த மனப்பான்மை இருக்குற வரைக்கும் உன்னை ஈசியா ஹேண்டில் பண்ணுவா இந்த ரூபிணி..’ என்று தனக்குத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள்.
காரில் வந்து கொண்டிருந்த அர்ஜூனுக்கு போன் செய்தாள் வராஹினி.
“சொல்லு ராஹினி..!”
“எங்க சார் இருக்கீங்க..? வந்துடுவேன்னு நீங்க சொல்லி ஒரு மணி நேரம் ஆச்சு. இங்க ரிஷப்ஷன் நடந்துகிட்டு இருக்கு..” என்றாள் வராஹினி.
“லுக்..! எனக்கு வேலை இப்போதான் முடிஞ்சது. கிளம்பிட்டேன். வந்துடுவேன்..” என்றான்.
“இவ பிரண்ட் கல்யாணத்துல அந்த பொண்ணு மிதிலாவை விட இவ தான் ஓவர் எக்சைட்மென்டா இருக்கா. சின்னப் பிள்ளைன்றது சரியா இருக்கு..” என்று செல்லமாய் அலுத்துக் கொண்டு சென்றான் அர்ஜூன்.
“என்ன அர்ஜூன் சார் வருவாரா மாட்டாரா..?” என்றான் குரு.
“அதெல்லாம் வருவார்..” என்றாள் மிடுக்காக.
“எங்க ரெண்டு தடவை கல்யாணம் பண்ணியும் ஒரு தடவை கூட பிரண்ட்ஸ் எங்களைக் கூப்பிடலை…” என்றான் குரு.
“கோவிந்தா..!” என்று வராஹி பல்லைக் கடிக்க,
“குரு..!” என்றான் அவன் அழுத்தி.
அடுத்து அவர்களின் பிசியான பேச்சில் அர்ஜூனை மறந்து விட்டிருந்தாள் வராஹி. அடுத்து அங்கு ஒலித்த மம்புட்டியான் பாடலுக்கு நண்பர்கள் அனைவரும் நடனமாட, அதில் ஐக்கியமானாள்.
அவள் அணிந்திருந்த மாதுளை சிகப்பு வர்ண லெஹங்கா அவளின் நிறத்தை மேலும் தூக்கிக் காட்ட, நெளிவு சுளிவுகளுடன் அற்புதமாக நடனமாடிக் கொண்டிருந்தாள். அர்ஜூன் வந்ததை அவள் கவனித்திருக்கவில்லை. ஆனால் குரு பார்த்து விட்டிருந்தான். அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க,
‘பேசாம இரு..’ என்பதை போல் ஜாடை காட்டிய அர்ஜூன், அவளை நன்றாக பார்க்கும் படி அமர்ந்து கொண்டான்.
அவள் நடனமாடிக் கொண்டிருக்க, அவளின் அழகிலும், நடனத்திலும், அந்த துறுதுருப்பிலும் இங்கே அர்ஜூனின் மனமும் அல்லாடிக் கொண்டிருந்தது. அதை முகத்தில் காட்டாமல் இருக்க அவன் பட்ட பாடு, கடவுளுக்குத் தான் வெளிச்சம். அவள் ஒரு புறமாக வழிய விட்டிருந்த மேலாடை, அவளின் முன்னழகை அப்பட்டமாய் காட்ட, அதில் கொஞ்சம் மனதிற்குள் கடுப்படைந்தான். சுற்றும் யாராவது அவளை பார்க்கிறார்களா என்று சாதரணமாய் பார்ப்பவனைப் போல் பார்த்து வைத்தான். மொத்த கூட்டமும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
‘லூசு..! டிரசை ஒழுங்கா போட்டுட்டு ஆடக் கூடாது… இவளை..’ என்று பல்லைக் கடித்தான்.
“இப்ப எல்லாரும் இப்படித்தான் போடுறாங்க. அது உனக்கும் தெரியும். அப்பறம் ஏன் இந்த கோபம் உனக்கு..?” என்றது மனம்.
“யாரு வேணும்னாலும் போடட்டும். என் வராஹினி போடக் கூடாது..” என்றான்.
“ம்ம்..! பாருங்கப்பா, உன்னோட வராஹினியா..? நீ நடத்து மகனே..” என்றது மனம் நக்கல் சிரிப்புடன்.
மற்றவர்கள் அவளைப் பார்ப்பது ஒரு வித பொறாமை உணர்வைத் தவிர, பட்டென்று எழுந்து வராஹினியின் முன் போய் நின்றான்.
“உன்ன போல யாருமில்ல மாமா..” என்ற வரிகளில் அவன் மீது மோதி நிற்க, அவள் தடுமாற அவன் பிடிக்க, அது அழகியலாக கேமாரவில் பதிவானது.
“சும்மா சொல்லக் கூடாது… அர்ஜூன் சார் உன்னை அப்படி ரசிக்கிறாரு…” என்றான் குரு.
அவனை முறைத்தவள்..”அட ஏண்டா நீ வேற..?” என்று சலித்துக் கொண்டாள்.
“நிஜமா வராஹி..! அவர் உன்னைப் பார்த்த பார்வையில ரசனையையும் மீறி ஒரு காதல், ஒரு பொஸிசிவ்நஸ் எல்லாமே இருந்தது. அவர் கண்ணில் வழிந்த காதலைக் காண கண் கோடி வேண்டுமப்பா..” என்றான் சிரிப்புடன்.
“நிஜமாவாடா..” என்றாள் ஆர்வமாய்.
“சத்தியமா சொல்றேன். அவர் உன்னை ரொம்ப நேசிக்கிறார். அவரோட ஒவ்வொரு செயலும் சொல்லுது..” என்றான் குரு.
அவனைப் பார்த்து சலித்தவள்…”ஆனா, அவர் மட்டும் ஒன்னும் சொல்லவே மாட்டேங்குறார்..” என்றாள்.
“அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் டோலி..” என்றான்.
‘சரி சரி விடுடா..!” என்றவள் அதே மகிழ்ச்சியுடன், அர்ஜூனுடன் ஜோடியாக மேடை ஏறினாள். மிதிலாவையும், அவளுடைய பியான்சியையும் வாழ்த்திவிட்டு, அவர்களுடன் ஒரு போட்டோவையும் எடுத்துவிட்டு இறங்கினாள்.
அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவளுடன் சென்று கொண்டிருந்தான் அர்ஜூன்.
அவனை உரசியபடியே நடந்தவள்..’ரொம்ப தேங்க்ஸ் சார்..’ என்றாள்.
“எதுக்கு..?” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள்..”நீங்க எனக்காக இவ்வளவு தூரம் வருவிங்கன்னு எதிர்பார்க்கலை.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” என்றாள்.
“நானும் கூட எதிர்பார்க்கலை..” என்றான் அர்ஜூன்.
அவனை ரசனையுடன் பார்த்தவள் “எதை..?” என்றாள்.
அவளைப் பார்த்து சிரித்தவன்..” இப்படி உன்கூட சகஜமா பேசுவேன்னு. இப்பல்லாம் நீ என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற ராஹினி. எனக்குள்ள ஒரு விதமான பீல். அது என்னன்னு நான் ஆராய்ச்சி பண்ண விரும்பலை. பட் அந்த பீல் நல்லா இருக்கு. எனக்கு ஒரு பெரிய சக்தியை கொடுக்குது. நம்பிக்கையை கொடுக்குது. இன்னும் பொறுப்பு இருக்குன்னு ஞாபகப்படுத்திட்டே இருக்கு. சம்திங் டிப்ரன்ட். பட் ஐ லைக் திஸ் பீல். ஒரு மாதிரி சுகமா, எந்த எண்ணங்களும் இல்லாம, பறக்குற மாதிரி..” என்றான் அர்ஜூன். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“என்ன பார்க்குற..?” என்றான்.
“நிஜமாவே நீங்க ரொம்ப நல்லவர், ரொம்ப ஹேண்ட்சம் சார். அதுவும் இப்படி கொஞ்சம் ரசனையோட பேசுறப்போ என்னோட கண்ணுக்கு இன்னமும் அழகா தெரியறிங்க. நான் உங்களை ஓவரா சைட் அடிக்கிறேன்..” என்றாள்.
“மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா..?” என்றான் சின்ன சிரிப்புடன்.
‘என்னது இங்கயே தங்க போறாளா..? கிழிஞ்சது..அர்ஜூன் இன்னைக்கு உன் பாடு திண்டாட்டம் தான்.’ என்று நினைத்தவன்,
“அப்படி சொல்றியா..? அப்போ ஓகே..! நான் கிளம்புறேன்..!” என்று கிளம்பியவன்.. சிறிது தூரம் நடந்த பின், திரும்பி,
“நானும் இங்க தங்கவா..?” என்றான்.
“சார் உங்களுக்கு டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே..?” என்றாள் பாவமாய்.
‘எடுத்துட்டு வரலையா..? அதான, நீ இதுல எல்லாம் நல்ல விவரம் தான்..’ என்று நினைத்தவன்,
“ஓகே..பை..!” என்று கிளம்பிவிட்டான்.
மனமேயில்லாமல் கிளம்பினான் அர்ஜூன். காரை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்கும் போதே, கையில் பேக்குடன் ஓடி வந்தாள் வராஹினி. அந்த லெஹங்காவுடன் ஓடி வர அவள் கொஞ்சம் சிரமப் பட,
“ஹேய்.. என்னாச்சு..பார்த்து..” என்று பதறியபடி காரை காரை நிறுத்தினான்.
“மெதுவா..? என்ன அவசரம்..?” என்றான்.
“நானும் உங்க கூடவே வர்றேன். மார்னிங் உங்க கூடவே கிளம்பி வந்திடுறேன். ஒன்பது மணிக்கு மேல தான் முகூர்த்தமாம்..” என்றாள்.
“எனக்கொண்ணும் பிரச்சனையில்லை ராஹினி. நீ உன் பிரண்ட்ஸ்சோட என்ஜாய் பண்ணுமா..” என்றான்.
“அதெல்லாம் நல்லா பண்ணியாச்சு. நீங்க வண்டியை எடுங்க..” என்று அதிகாரமாய் ஏறி அமர்ந்தாள். ஏனோ அர்ஜூனுக்கும் அவள் உடன் வருவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
ஓடி வந்ததில் அவள் நெஞ்சுக் குழி ஏறி இறங்க, அர்ஜூனுக்கு பார்வை என்னமோ அங்கு தான் சென்றது.
‘அர்ஜூன் இது ரொம்ப தப்பு. வர வர உன் பார்வை போற போக்கே சரியில்லை..’ என்றது மனம்.
‘அது இப்பத்தான் உனக்குத் தெரியுதா..? நீ அவகிட்ட வழுக்கி விழுந்து மாசக் கணக்கு ஆகுது ராசா..” என்றது மனம். ஏனோ அன்று அவனுக்கு எல்லாமே வராஹினி மயமாக இருந்தது. முயன்று தன் உணர்வுகளை அவன் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாலும், அவளோ அவனின் அடக்கப்பட்ட உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் ஏதேதோ பேசிக் கொண்டே வர, அவனுக்கோ அவள் பேசிய எதுவுமே கவனத்தில் பதியவில்லை. பேசிக் கொண்டே வந்தவள், அசதியில் உறங்கியும் விட்டாள்.
‘அப்பாடா.. தூங்கிட்டா..’ என்று நினைத்தவன், இப்போது அவளை எந்த தடங்களும் இல்லாமல் ரசனையுடன் பார்த்துக் கொண்டே வந்தான்.
அப்படியே வாழ்க்கை முழுவதும் அந்த பயணம் செல்ல வேண்டும் என்று அப்போதும் ஆசை கொண்டான் அவன்.
வீடு வந்து சேர்ந்த பின்னரும் அவள் விழிக்காமல் இருக்க,
“ராஹிணி..!” என்று கன்னத்தைத் தட்டினான். அவள் அசையவேயில்லை.
இறங்கி, வீட்டின் கதவை திறந்த பிறகு, அவளை கைகளில் தூக்கிக் கொண்டு செல்ல முற்பட, முழித்துக் கொண்டாள் வராஹினி. ஆனாலும் அந்த வாய்ப்பை விட அவளுக்கும் மனமில்லை. கண்களைத் திறவாமல் அவனுடன் மேலும் ஒட்டிக் கொண்டாள். அது அர்ஜூனுக்கும் பெரும் அவஸ்தையாக இருந்தது.
அவளின் அருகாமையில் உணர்வுகள் பேயாட்டம் போட ‘இன்னைக்கு என்னை ஒரு வழியாக்காம விட மாட்டா போலவே..’ என்று நினைத்தான்.
அவளை கட்டிலில் போட போக, அவனின் சட்டையை இறுக்கிப் பிடித்திருந்த காரணத்தால் அவள் மேலேயே விழுந்து வைத்தான். அவள் அப்போது தான் கண்களைத் திறப்பவளைப் போல் திறந்து,
“என்னாச்சு..?” என்றாள்.
“ஒண்ணுமில்லை ராஹிணி..!” என்றவனுக்கு, ஏனோ அவளில் இருந்து எழும் எண்ணமே வரவில்லை. அவளின் சிவந்த முகமும் வெட்கப் பார்வையும் அவனின் பொறுமைக்கு பொங்கல் வைத்தன.
“வாத்தியாரே..” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன் அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தாள். அவனின் அத்தனை தவத்தையும் தகித்துக் கொண்டிருந்தது அந்த அணைப்பு.
அவளின் முகத்தைப் பார்த்தவன்…”உனக்கு ஆட்சேபணையில்லைன்னா..” என்று அவன் கேட்க, அவளோ பதிலின்றி அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அதையே அவளின் சம்மதமாக எடுத்துக் கொண்டவன், அவளை ஆளத் தொடங்கினான். அவனின் இத்தனை கால தவங்கள் எல்லாம் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் புதிய பக்கத்திற்கு சென்று கொண்டிருந்தனர் இருவரும். அவளுக்கு தாம்பத்திய பாடத்தில் எழும் அச்சங்களை எளிமையாக போக்கி… அவளை முழுமையாக தன்னவளாக்கி கொண்டிருந்தான் அர்ஜூன்.
சிறு பெண்ணாய் இருந்தவள் இன்று அவனின் சிந்தை முழுவதும் அவளென்றாகிப் போனாள். அவன் தேடல்களின் முற்று புள்ளி அவள் தான். அந்த கூடல் இருவருக்கும் அழகானதாகவும், அவர்களின் ஆழமான நேசத்தை தாங்கியதாகவும் இருந்தது.
மனதில் இருந்த அனைத்து எதிர்மறை சிந்தனைகளும் மறைந்து, அவள் மட்டுமே சிந்தனையாகிப் போனாள். அவன் அவளுக்காய் புது உலகம் படைக்க, அதில் அவனுடன் பயணம் செய்து கொண்டிருந்தாள் வராஹினி.