கோர்ட்’டை விட்டு வெளியே வந்து நிற்காமல் நடந்தாள் மாதங்கவதனா.
படித்து முடித்து அவள் விருப்பப்படி வேலை ஒன்றில் சேர்ந்த சில நாட்களிலேயே ‘அருமையான இடம்’ என்று பெற்றோர் வற்புறுத்தலில் ராஜரத்தினத்திடம் மாட்டிக்கொண்டவள் அவள்.
மூன்று வருடம் அவனோடு முட்டிமோதி பார்த்துவிட்டு ‘போதும்டா யப்பா!’ என தப்பித்து வந்திருந்தாள்.
வேகவேகமாய் நடந்துக்கொண்டிருந்தவளின் கால்கள் சற்று தேங்கியது, அவளது கைபேசி சப்தத்தில்.
அவள் ‘அம்மா’ தான் அழைத்திருந்தார்.
தன்னால் ஒரு சலிப்பு வந்தது அவளுக்கு. நடையும் அவள் சோர்வை காட்ட, “சொல்லும்மா!” என்றாள்.
“டிவோர்ஸ் வேண்டாம்ன்னு சொல்லிட்டியா?” அதற்குள் செய்தி போய்விட்டிருந்தது.
“ஆமா” என்றாள்.
“அந்த கடவுள் உனக்கு இப்போவாச்சும் நல்ல புத்தியை கொடுத்தானே!? இனியாவது மாப்பிள்ளை’கிட்ட மன்னிப்பு கேட்டு ஒத்துமையா அடங்கி வாழ பழகு”
அவர் பேசிக்கொண்டே போக, “என்ன? மன்னிப்பு கேட்கணுமா? எதுக்கு?” என்றவள்,
“அவனோட சேர்ந்து வாழணும்ன்னு ஒன்னும் நான் டிவோர்ஸ் வேண்டாம்ன்னு சொல்லல!” என்றுவிட,
“அடச்சீ! என்ன பொண்ணு நீ? அமைச்சு கொடுத்த வாழ்க்கையை தக்கவச்சுக்க துப்பில்லாம இப்படி தாந்தோன்றித்தனமா நடந்துக்குற?”
“ம்மா? பிடிக்காதவனோட எப்படிம்மா வாழ முடியும்?”
“அவருக்கு என்னடி கொறச்சல்? தங்கமான பையன்!!” என சர்டிபிகேட் கொடுத்தார் அவள் அன்னை.
‘ஹும்! பத்து மாதம் சுமந்து, பல வருடம் கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் தாய்க்கே, தன் மகனின் சுயரூபமும், லட்சணமும் தெரியாது எனும்போது, தள்ளி நின்று பார்ப்பவருக்கு என்ன தெரிந்து விடும்?’
“கட்டுன பொண்டாட்டிக்கு தான் தெரியும், புருஷனோட யோக்கியதை! சும்மா பாக்குறவங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது!” வெடுக்கென சொன்னாள் மாதங்கவதனா.
“உன் யோக்கியதை என்னான்னும் உன் புருஷனுக்கு தானே தெரியும்! பெத்த எனக்கே நீ இப்படின்னு இப்போ தான் தெரியுது!” அவரும் வெடுக்கென பதில் கொடுத்தார்.
கைபேசியை அழுத்திப்பிடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள் மாதங்கவதனா. கால்கள் தன்போக்கில் ரயில்நிலையத்தை அடைந்திருக்க, மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டை வாங்க வரிசையில் நின்றாள்.
“இங்க பாருடி! ஒழுங்கா உன் புருஷனோட ஒத்து வாழற வழியை பாரு! இப்போவே சொந்தக்காரங்க மத்தில தலை காட்ட முடியல! உங்க பொண்ணு புருஷனை வீட்டை விட்டு அனுப்பிட்டாளாமேன்னு நக்கலா கேட்குறாங்க!”
“அது என் காசுல வாங்குன வீடு! ஈ.எம்.ஐ மாசாமாசம் நான் கட்டுறேன்! அப்போ அந்தாளு தானே வெளில போகணும்?” நியாயமாய் கேட்டாள்.
ஆனால் அவள் நியாயம் எல்லாம் அவருக்கு அநியாயமாய் பட்டது போலும்.
“நாலு காசு சம்பாதிக்குற திமிரு! அதான் இந்த பேச்சு பேசுற”
“என் ‘நிமிர்வு’ உங்க கண்ணுக்கு ‘திமிரா’ தெரிஞ்சா…. ஐ…..டோன்ட்…..கேர்!” அழுத்தமாய் சொன்னாள்.
“உனக்கடுத்து ஒரு தங்கச்சி கல்யாண வயசுல நிக்குறா! அவளையாவது நினைச்சு பார்த்தியா? இப்படி நீ ஒழுக்க கேடா இருந்தா எவன் வந்து நம்ம வீட்டுல பொண்ணு எடுப்பான்?”
‘ஒழுங்கக்கேடா!?’
“ஏம்மா? பொண்டாட்டி இருக்கும்போதே வேற ஒருத்தி கூட சுத்துறவன் ஒழுக்கமானவன், அது தெரிஞ்சு விலகி நிக்குற நான் ஒழுக்கக்கேடானவ? அப்படிதானே?” ஆற்றாமையாய் வந்தது அவளுக்கு.
“நீ ஒழுங்கா இருந்தா ஆம்பளை ஏன் வெளில போகப்போறான்?”
அதற்கும் அவளையே குற்றவாளியாக்கினார் அவள் அன்னை.
பேசுவது தன் அன்னையிடம் தானா? என்ற ஐயமே வந்து போனது அவளுக்கு.
“எனக்கு வேலை இருக்கு… வைக்குறேன்!” என்றவள் நொடியும் தாமதிக்காது அழைப்பை துண்டித்துவிட்டாள்.
மனது சோர்ந்துப்போய் ஊமையாய் அழுதது.
தவறு செய்தவனை விட்டுவிட்டு இவளுக்கே உபதேசம் செய்யும் சமூகத்தை அறவே வெறுத்தாள்.
‘விவாகரத்து!’ அத்தனை கொடூரமானதா?
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல தானே அது!?
வாங்கிய டிக்கெட்டுடன் ரயிலில் ஏறி இருக்கை தேட, அத்தனையும் நிரம்பி இருந்தது.
படிக்கட்டின் ஓரம் சாய்ந்து நின்று கண்மூடினாள்.
“சுவாதி, இன்னும் பைவ் மினிட்ஸ் தான் இருக்கு! சீக்கிரமா போ!” ஸ்கூட்டியின் பின்னே இருந்து அவளை முடுக்கினான் அஜய்.
“எதுக்கு இந்த கலவரம்? ஒரு கார், அட்லீஸ்ட் பைக் வாங்குனா கூட போதும்ல?” கேட்டுக்கேட்டு சலித்துப்போன கேள்வியையே சலிக்காமல் கேட்டாள் சுவாதி.
“என் ஒருத்தன் போறதுக்கு பஸ், ட்ரைன் போதாதா? தேவையில்லாம பைக்கு, கார் எல்லாம் வாங்கி காசை கொட்டி பெட்ரோல், டீசல் போட்டு ரோட்ல அலங்காரமா நிறுத்தி ‘ட்ராபிக் ஜாம்’ பண்ணனுமா?”
வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவளின் முறைப்பு கூட பின்னால் இருந்தவனுக்கு தெரியவில்லை. என்னவோ இந்த ரயிலை விட்டால், அடுத்த ரயிலை பிடிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்பது போல துடித்துக்கொண்டிருந்தான்.
ரயில் நிலைய வாசலில் அவள் நிறுத்தியதும், குதித்து இறங்கியவன் நொடியும் நிற்காது உள்ளே ஓட, “பாஸ் இருக்காடா?” என்று நியாபகப்படுத்தினாள் சுவாதி.
அதற்குள் வெகு தூரம் சென்றிருந்தவன், ‘இய்யா…!’ என கரத்தை தூக்கி சைகை காட்டிவிட்டு ஓடினான்.
பிளாட்பார்முக்குள் அவன் நுழையும்போதே ரயில் தண்டவாளத்தில் நகர ஆரம்பித்திருந்தது.
இப்படியொரு ‘ஸீன்’ அவனுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று!
கால்கள் விரைந்தாலும், உதடுகள் ‘துஜ்ஜே தேக்கா தொயே ஜானா சனம்…’ என முனுமுனுக்க, சிரித்துக்கொண்டு துள்ளலாய் சென்றவன் எட்டும் கம்ப்பார்ட்மென்ட்டை பிடிக்க, அத்தனை சிரமமாய் ஒன்றும் இல்லை.
படிகளில் கால் வைத்ததுமே, கம்பியை பிடித்து உள்ளே நுழைந்தவன், ஏறிய வேகத்தில் ‘மைய விலக்கு விசையால்’ மோதி நின்றான் மாதங்கவதனாவின் மீது!!!
“ஹே…ஏஏஏ….” அவள் கத்தியதில் அங்கிருந்த அத்தனை பேரின் விழிகளும் அவன் மீதே!
மோதிய கணமே விலகியிருந்தாலும் அது தவறு தானே?!
“சாரி…சாரி..சாரி…” அவள் முகத்தை கூட பாராது ஜபம் போல ஒப்பித்தான்.
அவனது கௌரவ தோற்றமும், சற்றே முதிர்ச்சியான முகவடிவும் அவனை ‘பொறுக்கி’ என்ற கேட்டகரியில் அவனை தள்ள விடாது பிடித்து நிறுத்த, அவனது மன்னிப்பை சிறு முகசுளிப்புடன் ஏற்றாள் அவள்.
அங்கிருந்து நகர்ந்து வேறு இடம் போகத்தான் அவனும் நினைத்தான். ஆனால், அதற்கு வழியும் இடமும் இல்லாது போக, அவளுக்கு எதிரிலேயே நிற்கும்படி ஆனது.
மாதங்கவதனாவின் சிந்தனை முழுக்க அவள் வாழ்க்கையை பற்றி மட்டுமே இருந்தது.
அஜய் இடித்ததில் கலைந்தவள், மீண்டும் சிந்தனை வலைக்குள் புகுந்தாள்.
மொபைலை எடுத்து சில நேரம் நோன்டிக்கொண்டிருந்தான் அஜய்.
குருவிடம் இருந்து குறுஞ்செய்தி.
‘டிட் யூ போர்ட்[BOARD] தி ட்ரைன்?’
குறுஞ்சிரிப்புடன் ‘யெஸ்’ என்று அனுப்பினான்.
சில நொடிகளிலேயே, ‘குட் நைட், ஹேவ் ‘மாதங்கவதனா’ ட்ரீம்ஸ்’ என்று மெசேஜ் வர, தன்னால் ஒரு இளநகை வந்து அவன் வதனத்தில் சேர,
‘இது ஈவனிங்டா முண்டம்!’ என அனுப்பிட்டு அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே நிமிர்ந்தவன், ஸ்தம்பித்தான்.
எதிரே இருப்பது!?
இப்போது தான் அவள் முகத்தை பார்க்கிறான்!
பாவாடை சட்டையில், மடித்து கட்டிய ஜடையுடன், கையில் எதாவது ஒரு புத்தகத்தை சுமந்துக்கொண்டே சுற்றியவளை பார்த்தவனுக்கு,
காட்டன் புடவையில், விரித்து விட்ட கேசம் ஒருபுறமாய் கிடக்க, பெரிய ஹேன்ட்பேக்குடன் பார்த்தால், அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன!?
‘என்னடா இது? இன்னைக்கு இவ நியாபகம் ஹெவியா இருக்கேன்னு பாத்தா, கண்ணு முன்னவே நிக்குறா?’ என்று ஆச்சர்யப்பட்டு போனவன், அவளுக்கும் தன் பார்த்தால் அதே ஆச்சர்யம் எழும் என தப்புக்கணக்கு போட்டு,
“ஹாய்?” என்றான்.
முதல் மோதலில் பார்த்தவன் சில நிமிடங்களில் ‘ஹாய்’ என்றால் எந்த பெண் தான் பேசுவாள்?!
“உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?”
கண்டுக்கொள்ளாததை போல நின்றுக்கொண்டாள். உண்மையில் சொல்ல வேண்டுமானால் அவன் முகத்தை ஊன்றி பார்க்கும் மனநிலையில் கூட அவள் இல்லை!
“ஊருல, உங்கக்கிட்ட பேச வந்தப்போ என்னை துரத்தி துரத்தி அடிச்சாங்களே?!”
அவன் பேசியது முழுதாய் அவள் செவி சேரும் முன்னே, ‘நிறுத்தம்’ வந்திருக்க, இறங்குவதற்கு மக்களிடம் தள்ளுமுள்ளு நடந்தது.
“ஏங்க! நான் அஜய்! உங்கள பத்து வருஷம் முன்ன பாத்துருக்கேன்! மறந்துட்டீங்களா அவ்ளோ சீக்கிரம்?” பேசிக்கொண்டே குறுக்கே நின்றவனை இறங்க வேண்டி அவசரமாய் வந்த ஒருவர் நகர்த்தி தள்ள, பேலன்ஸ் இன்றி எதிரே இருந்தவளின் மீது கவிழ்ந்தான்.
அவ்வளவு தான்!!!
‘பளார்’ என்ற சத்தம் கேட்டு அத்தனை பேரும் திரும்பி பார்த்தனர்.
உச்சகட்ட கோவத்தில், யார்யார் மீதிருந்த கடுப்போ, எல்லாம் சேர்த்து அவனை அடித்துவிட்டவள், “பொறுக்கி!” என்றாள், பல்லைக்கடித்துக்கொண்டு.
இது போதாதா நம் சமூக ஆர்வலர்களுக்கு!!!
‘இவன் வந்ததுமே அந்த பொண்ணை இடிச்சான்!’
‘இதுக்குன்னே வரானுங்க!’
‘நாலு அடி போட்டாதான் திருந்துவானுங்க!’
‘போலிஸ் கிட்ட புடிச்சுகுடுங்கப்பா!’
‘கருத்து கந்தசாமிகள்’ ஆங்காங்கே கிளம்ப,
“ஏங்க, உங்களுக்கு என்னை தெரியலையா?” தான் தவறாய் நடக்கவில்லை என்று புரியவைக்க எண்ணி, அவன் மீண்டும் பேசப்போக,
சுற்றி நின்ற பொதுஜனம் இதான் சாக்கென்று அவனை அடிக்க ஆரம்பித்திருந்தது.
எல்லாம் பார்த்தாலும், தடுக்கவோ, நிறுத்தவோ, ஏன்… அதை கவனிக்கவோ கூட அவளுக்கு விருப்பமில்லை. நகர்ந்து சென்று வேறிடம் நின்றுக்கொண்டாள்.