அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கார் அந்த பிரமாண்டமான வீட்டின் உள்ளே சென்றது.
“இது யார் வீடு..?” என்றாள்.
“என்னோட வீடுதான். சில திங்க்ஸ் எடுக்கணும்..! எடுத்துட்டு உன்னை, நீ சொன்ன அட்ரஸ்ல டிராப் பண்றேன்..” என்றான்.
“ஓகே சார்..!” என்றவள்,
“நான் கார்லயே வெயிட் பண்றேன்..” என்றாள்.
“அது உன்னோட ப்ரியம்…” என்றவன், செல் போனை எடுத்துக் கொண்டே காரை விட்டு கீழே இறங்கினான். அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அங்கு நின்றிருந்த காரைப் பார்த்ததும் அதிர்ச்சி.
“இதென்ன அப்பாவோட கார் இங்க நிற்குது..?” என்று நன்றாகப் பார்த்தாள்.
“ஊர்ல உங்கப்பா மட்டும் தான் இப்படி கார் வச்சிருக்காரா..?” என்றது மனம்.
“இல்லைதான். ஆனா, எங்க கார் எனக்குத் தெரியாதா..?” என்று பதில் சொன்னவள், வேகமாக கீழே இறங்கினாள்.
“என்னாச்சு..??” என்றான் அர்ஜூன்.
“நத்திங்..” என்றவள், அந்த காரை அருகில் சென்று பார்க்க, அது மோகனின் கார் தான் என்று உறுதியானது. அவனையும், அந்த காரையும், வீட்டையும் மாறி மாறி பார்த்தாள்.
“என்னாச்சு? எதுக்கு இப்படி பார்க்குற..?” என்றான் அர்ஜூன்.
“இவ்வளவு பெரிய வீடு, லேட்டஸ்ட் கார் வச்சிருக்க நீங்க ஏன் சார் சாதாரண பஸ்ல வரணும்..?” என்றாள்.
“பரவாயில்லையே..? உனக்கு மூளை வேலையெல்லாம் செய்து..” என்று நக்கலாக சிரித்தவன்,
“இது எங்கப்பாவோட கார்..? இதெப்படி உங்க வீட்டு முன்னாடி..?” என்றாள் யோசனையாய்.
“இசிட்..! எனக்குத் தெரியாது. இங்க அந்த கார் மட்டுமா இருக்கு. பாரு எத்தனை கார் நிற்குதுன்னு..” என்றான் அர்ஜூன்.
அவன் சொல்வது உண்மைதான் என்பதைப் போல ஐந்தாறு கார்கள் நின்றிருந்தது.
வீட்டிற்குள் இருந்த சிசிடிவியில் இவள் நிற்பது தெரிய, அர்ஜூன் காருக்குள் எதையோ எடுத்துக் கொண்டிருந்தான்.
“பிரஜேஷ், உன் தங்கச்சி வந்துட்டா.. அட்லாஸ்ட் வந்து சேர்ந்துட்டா…” என்று சொன்ன ரஞ்சன் வேகமாக வெளியே சென்றான். அவனைத் தொடர்ந்து அனைவரும் செல்ல, அவர்களை அங்கு எதிர்பார்க்காத வராஹினி அதிர்ந்து போனாள்.
நேராக அவளின் அருகில் சென்ற கல்பனா, அவளை ஓங்கி அறைந்தார்.
“அம்மா..!!” என்றவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவரை முறைத்துக் கொண்டு நின்றாள்.
“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு? நீ செஞ்சதுக்கு உன்னைக் கொஞ்சுவாங்களா..? எங்க மானத்தை வாங்கனும்ன்னு தான் இத்தனை நாளா இருந்தியா..? ரஞ்சனா இருக்க போய் சரியா போச்சு. இதேது அவனோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்..? அவனா இருக்க போய், இப்ப வரைக்கும் நீ திரும்ப வந்துடுவன்னு அமைதியா இருக்கான்..” என்றான் பிரஜேஷ் கோபமாக.
“நானா இருக்க சொன்னேன்..? எனக்கு பிடிக்கலைன்னு தான போனேன்…” என்றாள் கோபமாக.
“அப்படி என்ன பிடிக்கலை உனக்கு..? என்ன இல்லை என்கிட்டே..?” என்றான் ரஞ்சன்.
“பிடிக்காத பெண்ணை கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ண நினைக்கிற உன்கிட்ட என்ன நல்ல குணம் இருந்திடப் போகுது..?” என்றாள். இவர்களுக்கு பின்னால் நின்றிருந்த அர்ஜூனை அவர்கள் கவனிக்கவேயில்லை.
“அப்பா, இன்னொரு தடவை இந்த கல்யாணத்தை பத்தி பேசுனா, இப்ப மாதிரி ஓடிப் போக மாட்டேன். நேரா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..” என்றாள்.
“என்ன மிரட்டுறியா..? பத்திரிகை அடிச்சு ஊரெல்லாம் கொடுத்திருக்கு. நின்னு போன இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். நடத்திக் காட்டுவான் இந்த ரஞ்சன்..” என்றான் கோபமாக.
“நான் தான் சொல்றேனே, எனக்கு உன்னை பிடிக்கலை..” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“காரணம்..?” என்றான்.
“காரணமெல்லாம் சொல்ல முடியாது..” என்றாள்.
“அப்போ, நீ எதையும் பேசாம, நாங்க சொல்றதைக் கேளு..” என்றார் கல்பனா.
“எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்கு. நான் அவரைத்தான் லவ் பண்றேன்..” என்றாள் பட்டென்று.
“என்ன? அடுத்த பொய்யா..?” என்றான் ரஞ்சன்.
“பொய்யெல்லாம் இல்லை, நிஜம் தான்..” என்றாள்.
“யார் அவன்..? என்னை விட உனக்குப் பிடிச்சவன்..?” என்றான் ரஞ்சன்.
‘இப்ப நான் என்ன செய்வேன்..? இல்லாத ஒருத்தனை நான் எங்க இருந்து காட்டுவேன்.. அடேய் குரு, எல்லாம் உன்னால வந்ததுடா… தேவையில்லாம அமேசான் காட்டுக்குள்ள வந்து சிக்கிக் கிட்டேன்…” என்று மனதிற்குள் புலம்பியவள், அப்போது தான் அர்ஜூனை நினைத்தாள்.
“இவன் எதுக்கு இங்க வந்தான். இவனுக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்..? இதுக்கு முன்னாடி இவனைப் பார்த்தது இல்லையே..?” என்று மனதிற்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள்.
“இல்லைன்னு யார் சொன்னா..? இதோ இவர் தான். இவரைத் தான் லவ் பண்றேன். கல்யாணம் பண்ணினாலும் இவரைத் தான் பண்ணுவேன்… அவர் கூட தான் நான் வந்தேன்…”என்று சைடில் திரும்பிப் பார்க்க, அங்கே அர்ஜூன் இவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
அர்ஜூனைப் பார்த்த ரஞ்சன் திகைத்தான் என்றால், சுமித்ராவுக்கு சந்தோசம், கார்த்திகேயனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அர்ஜூனின் அருகில் சென்ற வராஹினி,
“சார், பிளீஸ்.. பஸ்ல காப்பாத்துன மாதிரியே இங்கயும் காப்பாத்திடுங்க பிளீஸ்..” என்று யாருக்கும் கேட்காதவாறு, பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல, அதைக் கேட்டு அர்ஜூன் தான் பல்லைக் கடிக்க வேண்டியிருந்தது.
“ ரஞ்சன் இது..” என்று பிரஜேஷ் இழுக்க,
“அர்ஜூன்..” என்றான் ரஞ்சன் கோபமாக.
“வாப்பா அர்ஜூன்..! உனக்கு இப்போதான் இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா..?” என்றார் கார்த்திகேயன்.
“நான் உறவு கொண்டாட வரலை..” என்றான் முகத்தில் அடித்தார் போல்.
“வேற எதுக்கு வந்த..? எப்பவுமே நீ எனக்கு இடைஞ்சல் தான்..” என்றான் ரஞ்சன் கோபமாக.
“அதை நீ சொல்றது தான் விசித்திரம்..” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சன்..! கொஞ்ச நேரம் உன்னால அமைதியா இருக்க முடியாதா..?” என்றார் சுமித்ரா.
“எப்படிம்மா அமைதியா இருக்க முடியும். ஆரம்பத்துல இருந்தே இவன் தான் எனக்கு இடைஞ்சல். இதோ இப்போ நான் கல்யாணம் பண்ண இருக்குற வராஹினி கூட அவனைத் தான் லவ் பண்றேன்னு சொல்றா..? என் கல்யாணம் நின்னு போனப்பவே நான் இவனை சந்தேகப்பட்டிருக்கணும்.ஆனா, இப்ப தான தெரியுது? விஷயம் எப்ப எப்படி நடந்திருக்கும்ன்னு..?” என்றான் ரஞ்சன்.
அவர்கள் பேசுவதைக் கேட்ட வராஹினிக்கு ஒன்றும் புரியவில்லை.
“இவங்களை உங்களுக்குத் தெரியுமா..?” என்று அர்ஜூனைப் பார்த்து கேட்டு வைத்தாள்.
“இப்ப அது தெரிஞ்சு நீ என்ன செய்ய போற..?” என்று பல்லைக் கடித்தான் அர்ஜூன்.
“வராஹி.. நான் அன்னைக்கு அப்படி பேசினது தப்புத்தான். அது உன்னை ரொம்ப ஹெர்ட் பண்ணியிருக்கும். அதுக்கு வேணும்ன்னா நான் சாரி கேட்டுக்கிறேன். அதுக்காக இப்படி இவன் கூட சேர்ந்துகிட்டு டிராமா பண்ணாத..?” என்று ரஞ்சன் கெஞ்சிக் கொண்டிருந்தான் அவளிடம்.
“கொஞ்சம் வழியை விடுறிங்களா..?” என்றான் அர்ஜூன் அழுத்தமான குரலில். அவன் குரலில் அவர்கள் விலக, யாரையும் சட்டை செய்யாமல் உள்ளே சென்று விட்டான்.
“அவன் யாரைக் கேட்டு உள்ள போறான்..?” என்றான் ரஞ்சன் கோபமாக.
“இது என்ன பேச்சு ரஞ்சன்..? இது அவன் வீடும் தான்…” என்றார் கார்த்திகேயன்.
“உங்களுக்கு என்னோட கல்யாணம் நின்ன வருத்தமில்லை. இப்படி நான் வருத்தப்பட்டு பேசிகிட்டு இருக்கேன்..அதைப் பத்தியும் கவலையில்லை… ஆனா, அவன் வந்த உடனே அவன் தான் உங்களுக்கு முக்கியமா போயிட்டானா..?” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சன்..! நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என்றான் பிரஜேஷ்.
அவர்கள் பேசுவதைக் கேட்ட வராஹினிக்கு குழப்பம் தான் மிஞ்சியது.
“எங்கம்மா போயிருந்த..?” என்ற மோகன், மகளை ஆதுரமாய் விசாரிக்க,
“அவ என்ன டூரா போய்ட்டு வந்திருக்கா.. நம்ம மான மரியாதையை வாங்கிட்டு, ஓடிப் போய் திரும்பி வந்திருக்கா. அப்படியே செல்லம் கொஞ்சிட்டு இருக்கீங்க..?” என்றார் கல்பனா.
“அர்ஜூனை உனக்கு எப்படி தெரியும்..? நீயும் அவனும் எப்ப இருந்து லவ் பண்றிங்க..? இல்ல, இப்படி சொல்லுன்னு சொல்லி கூட்டிட்டு வந்தானா..?” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சன் உன்னால கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதா..?” என்ற ரூபினியின் குரலில், வராஹினியின் கோபம் மேலும் கூடியது.
ரூபினியின் குரலைக் கேட்டு திரும்பிய ரஞ்சன் அப்படியே அமைதியாகிப் போனான்.
“இது யாரு..?” என்றாள் வராஹி நக்கலாய்.
“ரூபிணி, அர்ஜூனுக்கு நிச்சயம் பண்ணியிருக்கும் பொண்ணு. அப்படி இருக்கும் போது உன்னை எப்படி லவ் பண்ணியிருப்பான்..” என்றான் ரஞ்சன்.
“என்னது..? இது வேறையா..? அவன் எங்க என்னை லவ் பண்ணினான். எல்லாம் நான் அடிச்சு விட்டது தான..? இப்ப நான் பொய் சொன்னேன்னு சொன்னா, கண்டிப்பா உனக்கு கழுத்தை நீட்ட வச்சிடுவாங்க. நான் என்னதான் பண்றது..?” என்று மனதிற்குள் குழம்பிப் போனாள் வராஹினி.
“உன்னோட சுயநலத்துக்காக அர்ஜூன் வாழ்க்கையை ஏன் கெடுக்குற வராஹி..! அவன் இதுவரைக்கும் உனக்கு உதவி மட்டும் தான் பண்ணியிருக்கான். ஆனா, நீ அவனுக்கு என்ன பண்ணிட்டு இருக்க..? அவன் இந்த ரூபினியை விரும்பிகிட்டு இருந்தா, நீ சொன்ன இந்த பொய்யால அவங்க வாழ்க்கை கேள்விக் குறியாகிடும்.. அப்படி நடக்கலாமா..? அதுக்கு நீ காரணமாகலாமா..?” என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள், எந்த காரணம் கொண்டும்… அர்ஜூன் வாழ்க்கை தன்னால் கெடக் கூடாது என்று நினைத்தாள்.
உண்மையை சொல்லி விடலாம் என்று அவள் வாயைத் திறக்க போன நிமிடம்,
“ராஹினி..!!!” என்ற அழுத்தமான, அதே சமயம் கொஞ்சம் அதிகாரமாகவும் அர்ஜூனின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.
“ங்கான்” என்ற வராஹினி ஒரு நிமிடம் உலுக்கி விழுந்தாள். இவ்வளவு நேரம் அவள் பார்த்த அர்ஜூனின் குரல் இல்லை. இது வேறு. இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்தவன், அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டு வந்தவன் இவன் இல்லை. இவன் வேறு.. என்று எண்ணும் விதமாக இருந்தது அவனின் குரலில். அந்த குரலில் தான் என்ன ஒரு அதிகாரம் கலந்த கம்பீரம். அப்படியே நின்றுவிட்டாள் வராஹினி.
“ராஹினி..!” என்று அவன் மீண்டும் அதே தொணியில் அழைக்கவும் தான் சுயத்திற்கு திரும்பினாள்.
“உன்னை உள்ள வான்னு சொன்னேன்..!!” என்றான் மீண்டும்.
அவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்தவள்,
‘இப்ப எதுக்கு இப்படி அதிகாரமா கூப்பிடுறான்..’ என்று நினைத்தபடி மெதுவாக உள்ளே சென்றாள்.
“இங்க என்ன நடக்குது அங்கிள்..? நீங்க எனக்கு குடுத்த வாக்கு என்னாச்சு..?” என்றாள் ரூபிணி.
“அர்ஜூன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்லை ரூபிணி. என்னால இன்னமும் நம்பவே முடியலை..” என்றார் கார்த்திகேயன்.
“ஏன் உங்களால நம்ப முடியலை. இதோ உங்க முன்னாடி தானே கூப்பிட்டார், ஏதோ பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுறார். அவ, ரஞ்சனுக்கு பார்த்த பொண்ணு. இப்படி நடந்துக்கிறது நல்லாவா இருக்கு..?” என்றாள் ரூபிணி.
அவளிடம் எந்த முகம் கொண்டு பேசுவார் அவர். அவள் தன் வீட்டு மருமகள் என்று வாக்குக் கொடுத்தவராயிற்றே. அதானால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.
“அவரு எப்படி பேசுவாரு ரூபிணி..? என்ன இருந்தாலும் அவருக்கு அவன் தான் எப்பவும் உசத்தி. நான் ரெண்டாம் பட்சம் தான..?ஆரம்பத்துல இருந்தே எல்லாத்தையும் என்கிட்டே இருந்து பறிச்சுகிட்டே இருக்கான். வராஹினி காணாமப் போனது கூட இவனோட வேலையா தான் இருக்கும். யாரு கண்டா..?” என்றான் ரஞ்சன்.
“நான் இருக்க வரைக்கும் அப்படி நடக்க விட்ருவேனா ரஞ்சன்.. வராஹிக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா, அது உன் கூடத்தான். அதை யாராலையும் தடுக்க முடியாது..” என்று பிரஜேஷ் வீர வசனம் பேசிக் கொண்டிருக்க, அங்கே பூஜையறையில் அர்ஜூனின் தாய் புகைப்படத்தின் முன்னால் வைத்து வராஹியின் கழுத்தில் தாலியை கட்டி முடித்திருந்தான் அர்ஜூன். குடும்பமே வெளியில் நிற்க, யாரையும் சட்டை செய்யாத அர்ஜூன் தன் தாயின் மாங்கல்யத்தை வராஹியின் கழுத்தில் அணிவித்திருந்தான்.
வராஹிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அவன் என்ன பேசினான்..? என்ன செய்யப் போகிறான் என்று அவள் உணர்ந்து கொள்ளும் முன்பே எல்லாமே நடந்து முடிந்திருந்தது.
உள்ளே அவள் வந்ததும் அவன் பேசியது இது தான்.
“நீ எதுக்காக ஒவ்வொரு தடவையும் என்னை ஹஸ்பண்ட், லவ்வர்ன்னு சொன்னன்னு எனக்குத் தெரியாது. அது எனக்குத் தேவையுமில்லை. எனக்கு இப்போதைக்கு நீ மனைவியா நடிக்கணும். அதுக்காக உறவே இல்லாமல் ஒரு பொண்ணை என் கூட வச்சுக்கிற அளவுக்கு நான் தரம் தாழ்ந்தவன் கிடையாது. கல்யாணம்கிறது நிஜம். ஆனா, எப்ப வேணும்ன்னாலும் நீ பிரியப்பட்டா பிரிந்து போகலாம். அதுக்கான முழு உரிமையும் உனக்கு இருக்கு. இப்போதைக்கு எனக்கு வேற வழி தெரியலை. எப்படியும் உன் பிரண்ட் குருவை நடிக்க வைக்கிறது தான உன் பிளான். அது நானா இருந்தா பிரச்சனையில்லைன்னு நினைக்கிறேன். நான் உனக்கு பண்ணின உதவிக்கு, நீ எனக்கு இந்த உதவியை செய்வியான்னு கேட்க மாட்டேன். ஆனா, நீ செஞ்சு தான் ஆகணும். ஏன்னா, உனக்கும் இப்போ என்னோட உதவி தேவைப்படுது. இதெல்லாம் வேண்டாம், ‘நான் ரஞ்சனையே மேரேஜ் பண்ணிக்கறேன்னு’ அப்படின்னு நீ சொன்னாலும் எனக்குப் பிராப்ளம் இல்லை…” என்று அவளை பேசவே விடாமல் பேசி முடித்திருந்தான்.
அவளுக்கும் அப்போதைக்கு அதுவே பெரிய உதவியாகப் பட்டது. அவளின் மௌனத்தையே சம்மதமாக நினைத்து தாலியையும் கட்டிவிட்டான். இதை முதலில் பார்த்தது சுமித்ரா தான். பார்த்தவர் அப்படியே அதிர்ச்சியாகி நிற்க,
“என்னாச்சு சுமித்ரா..?” என்று கார்த்திகேயனும், மற்றவர்களும் உள்ளே வந்து பார்க்க, யாரின் முகத்திலும் ஈயாடவில்லை.
“ஏய்..! என்ன பண்ணி வச்சிருக்க..?” என்றபடி பிரஜேஷ், அர்ஜூனின் சட்டையைப் பிடித்தான்.
“பிரஜேஷ்..!” என்று கத்திவிட்டார் கார்த்திகேயன்.
“என்ன மாமா..? இவன் பண்ணின காரியத்துக்கு கொஞ்ச சொல்றிங்களா..?” என்றான் பிரஜேஷ்.
“கூட உன் தங்கச்சியும் அமைதியா நிக்கிறது தெரியலை..” என்றார் கார்த்திகேயன்.
“எனக்கு உறுதியா தெரியும் மாமா.. வராஹினி யாரையும் லவ் பண்ணலை. அவ வீட்டை விட்டு போனப்ப கூட, அந்த ஒரு விஷயம் தான் என்னை தைரியமா இருக்க வச்சது. உங்க பையன் தான் என்னமோ பண்ணியிருக்கான்..” என்று குற்றம் முழுவதையும் அர்ஜூனின் மேல் சுமத்தினான் பிரஜேஷ்.
“என்னோட வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க அங்கிள்..?” என்று ரூபிணி கத்தத் தொடங்கினாள்.
“மோகன் அங்கிள்..!” என்றான் அர்ஜூன் திடீரென்று.
அவனின் அழைப்பில் அதிர்ந்தவர் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க,
“உங்க பொண்ணோட பாதுகாப்புக்கும், சந்தோஷத்திற்கும் நான் பொறுப்பு. நீங்க கவலைப் பட அவசியமில்லை..” என்றவன், கார்த்திகேயனை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.
மோகன் குமாருக்கு நடந்த விஷயத்தில் உடன்பாடு இல்லையென்றாலும், ஏதோ ஒரு விதத்தில் மனம் அமைதியடைந்தது.
“போதுமா மாம்..! நான் சொன்னப்ப நீங்க நம்பலை. ஆனா, இப்போ நம்புறிங்களா..? நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணமே இவன் தான். இப்போ பேசிகிட்டு இருக்குற நேரத்துல அவ கழுத்துல தாலியையும் கட்டிட்டான். இப்ப உங்க எல்லாருக்கும் சந்தோஷமா..? இப்ப திருப்தியா இருக்கா..?” என்ற ரஞ்சன் ஆங்காரமாய் கத்தத் தொடங்கினான்.
அர்ஜூன் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்,
“ராஹினி..! போய் கார்ல உட்காரு. நான் வர்றேன்..!” என்றான்.
“அவ எங்கயும் வர மாட்டா..! தாலியை கட்டிட்டா, நீ அவளுக்கு புருஷன் ஆகிட முடியாது..” என்றார் கல்பனா.
“வேண்டாம்ப்பா..! என்ன இருந்தாலும் அவ என்னோட மனைவி..” என்றார் மோகன் குமார்.
“ஆன்ட்டி… உங்க பொண்ணு கோடீஸ்வரனான என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு ஒரு மாச சம்பளம் வாங்குற வாத்தியாரை போய் பிடிச்சிருக்கா பாருங்க.. இதை நீங்க எப்படி தாங்கப் போறிங்கன்னு தான் தெரியலை..” என்றான் ரஞ்சன். அவனுக்கு கல்பனாவை எங்கே அடிக்க வேண்டுமென்று தெரியும்.
“வாயை மூடு ரஞ்சன்..! இந்த சொத்துல அவனுக்கு தான் முதல் உரிமை..” என்றார் கார்த்திகேயன்.
“நான் ஒன்னும் இல்லைன்னு சொல்லலையே..! சார் தான், எனக்கு எந்த சொத்தும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு, வீட்டை விட்டு போனார். சாருக்கு வேற மான, ரோஷம் எல்லாமே ஜாஸ்தி.. நீங்களே குடுத்தாலும் வாங்கவா போறான்” என்றான் ரஞ்சன் நக்கலான குரலில்.
“யார் சேர்த்து வச்ச சொத்தையும் நம்பி, இந்த அர்ஜூன் இல்லை..” என்றவன், வராஹினியை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். வராஹினிக்கு அவர்கள் பேசியது எதுவும் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
“இங்க என்ன நடக்குது சம்பந்தி..! அவன் என் பொண்ணை கூட்டிட்டுப் போறான்..” என்று கல்பனா ஆத்திரமாய் பேச ஆரம்பித்தார்.
“நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு கல்பனா. இது அவங்களுக்குமே அதிர்ச்சி தான்..” என்றார் மோகன்.
“அர்ஜூன் இங்க வந்ததே ஆச்சர்யம்ன்னா, அதுக்கு அடுத்து நடந்த எல்லாமே அதிர்ச்சி தான்… இது எதிர்பாராம நடந்த ஒன்னு..” என்றார் கார்த்திகேயன்.
“எதிர்பாராம எதுவுமே நடக்கலைப்பா..! அவங்க அம்மா போட்டோல இருந்த தாலி தான் அவனுக்கு மனைவியா வரப் போறவளோட கழுத்துல கட்டணும்ன்னு சொல்லிட்டே இருப்பான்ல. இப்போ அந்த தாலிக்காகத் தான் இங்க வந்திருப்பான். இல்லைன்னா, அவனாவது இங்க வர்றதாவது. எல்லாமே பிளான் தான். ஆனா, இந்த தடவை அவன் என்னோட வாழ்க்கையோட விளையாடியிருக்கான். கண்டிப்பா இந்த ரஞ்சன் அவனுக்கு பாடம் புகட்டுவான்..” என்றான் ரஞ்சன். குரலில் அப்படி ஒரு ஆத்திரம்.
“இத்தனை பேர் இருக்கும் போதே, அவ்வளவு தைரியமா தாலியை கட்டி, என் பொண்ணை கூட்டிட்டு போறான். அப்பவே ஒன்னும் கிழிக்கத் துப்பில்லை. இவரு பாடம் புகட்டுவாராமா..?” என்று மனதிற்குள் நினைத்த மோகன், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.
“இப்பவும் சொல்றேன்…! என்னைக்கா இருந்தாலும் வராஹி தான் எனக்கு மனைவி. தாலி கட்டுனவன் எல்லாம் புருஷன் ஆகிட முடியாது. அவளை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்ன்னு எனக்குத் தெரியும்..” என்றான் ரஞ்சன்.
“அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்டவங்களோட நிலைமையெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..” என்றார் கார்த்திகேயன்.
“நீங்க என்னைக்கு எனக்கு அப்பாவா நடந்துப்பிங்க..?” என்றான் ரஞ்சன்.
“உனக்கு நல்ல அப்பாவா இருக்கப் போய்தான், இப்போ எடுத்து சொல்லிட்டு இருக்கேன்..” என்றார் கார்த்திகேயன்.
“எப்படி..? யார்கிட்டயும் சொல்லாம, தாலியை கட்டின அவன் நல்லவன், உங்க எல்லார் சம்மதத்தோட கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்ச நான் இப்போ கெட்டவன்..அப்படித்தானப்பா..” என்றான் ரஞ்சன் நக்கலாய்.
“எங்க எல்லார் சம்மதமும் முக்கியமில்லை. கட்டிக்க போற பொண்ணோட சம்மதம் தான் முக்கியம். உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போன பொண்ணு தான், இன்னைக்கு அவன் யோசிக்காம தாலி கட்டினாலும், பேசாம அவன் பின்னாடி போகுது. இதுல இருந்து உனக்குத் தெரிய வேண்டாம். நல்லவனா இருந்தா இதோட ஒதுங்கிக்கிறது தான் உனக்கு நல்லது..” என்றார் கார்த்திகேயன்.
“ரஞ்சன் தம்பி சொல்றதுல எங்களுக்கும் தப்பு இருக்குற மாதிரி தெரியலை. எங்களுக்கு அந்த அர்ஜூனை சுத்தமா பிடிக்கலை. என் மகளுக்கு புருஷன்னா, அது இவர் மட்டும் தான். அதை எப்படி நடத்தனும்ன்னு எனக்குத் தெரியும்..” என்ற கல்பனா,
“நான் சொல்றது சரிதான பிரஜேஷ்..” என்றார்.
“கரெக்ட்ம்மா..!” என்றான்.
இவர்கள் பேச்சில் அவர்கள் ரூபினியையும், அவள் கண்களில் தெரிந்த கோபத்தையும், குரோதத்தையும் காணத் தவறிவிட்டார்கள்.
காரில் ஏறியது முதல்… தாலியையும், அர்ஜூனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே வந்தாள் வராஹினி. இவ்வளவு நேரம் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் இப்போது கொஞ்சம் தளர்வாய் ஆனதைப் போல் இருந்தது. அவள் பார்ப்பது தெரிந்தாலும், அதை கவனியாதவன் போல், காரை ஒட்டிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.