“நீ பேசுறது எதுவும் சரியில்லை சொல்லிட்டேன்”, என்று கோபத்துடன் சொன்னாள் ஜானகி.
“நான் உன்னை மரியாதை கொடுத்து பேச சொன்னேன் ஜானு. வருங்கால புருசனுக்கு மரியாதை ரொம்ப முக்கியம்”, என்று ஸ்ரீராமும் எரிச்சலுடன் சொன்னான்.
“உனக்கு எல்லாம் என்ன மரியாதை? கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லி என்னை இங்க வரச் சொல்லிட்டு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க? உனக்கு எதுக்கு நான் மரியாதை தரணும்? முடிவா கேக்குறேன், இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா முடியாதா?”, என்று அவள் கேட்டதும் அவளைக் கண்டு நக்கலாக சிரித்தான் ஸ்ரீராம். அவன் பார்வையில் அவளுக்கு பயத்தில் நாக்கு உலர்ந்தது.
“இவன் என்ன வில்லன் மாதிரி சிரிக்கிறான்?”, என்று எண்ணியவள் “உன் சிரிப்பு சகிக்கலை. பதில் சொல்லு டா”, என்றாள்.
“நானே ஆரம்பிச்ச இந்த பிரச்சனையை நானே எப்படி ஜானு முடிச்சு வைப்பேன்?”, என்று நிறுத்தி நிதானமாக அவள் தலையில் இடியை இறக்கினான்.
“என்ன சொல்ற நீ?”
“உன்னைக் கல்யாணம் பண்ணணும்னு என் பாட்டியை விட்டு எங்க அப்பா கிட்ட பேச சொன்னதே நான் தானே? அப்புறம் நானே எப்படி இதை நிறுத்துவேன்?”, என்று உல்லாசமாக கேட்டான்.
“என்னது நீயா?”
“ஆமா நானே தான். எங்க அப்பா கொஞ்சம் குசும்பு புடிச்சவர். நானே போய் ஒரு விஷயம் சொன்னா கண்டிப்பா அதை செய்ய மாட்டார். அதனால தான் என் பாட்டி கிட்ட உன்னை நான் தீவிரமா லவ் பண்ணுறதாவும் கட்டினா உன்னைத் தான் கட்டிக்குவேன்னும் சொல்லி அப்பா கிட்ட பேசச் சொன்னேன். சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு அப்பாவும் உங்க வீட்ல வந்து பேசிட்டார். முடிச்சது அவர்ன்னாலும் பிள்ளையார் சுளி நான் போட்டேன் டி”, என்று சொன்னவனை வியப்பாக பார்த்தாள் ஜானகி.
“இவ்வளவு பிளான் பண்ணி எதுக்கு இந்த கல்யாணம்? எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை”, என்று குழப்பமாக சொன்னாள்.
“எனக்கும் தான் உன்னைப் பிடிக்கலை”, என்று சொல்லி அவனும் உதட்டைப் பிதுக்கினான்.
“அப்புறம் எதுக்கு நம்ம கல்யாணம் நடக்கணும்? எதுக்கு தெய்வீக காதல்னு நாடகம் போட்டிருக்க? அதை அந்த கிளவியும் நம்பிருச்சா?”
“பாட்டிக்கு என் காதல் தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம். ஒரே நைட்ல அப்பா கிட்ட பேசி என் பிளானை சக்ஸஸ் பண்ணிருச்சு”, என்று பெருமையாகச் சொன்னான்.
“கிழவி புராணம் போதும். எதுக்கு அப்படிச் சொன்ன? அதைச் சொல்லு முதல்ல”
“ஏன்னா நீ செஞ்ச விசயத்துக்கு உன்னைப் பழி வாங்க”
“என்ன?”
“ஆமா உன்னைப் பழி வாங்க மட்டும் தான் இந்த கல்யாணம்”
“என்னது பழி வாங்கப் போறியா? நான் என்ன தப்பு செஞ்சேன்? நியாயமா பாத்தா நீ செஞ்ச விசயத்துக்கு நான் தான் உன்னைக் கொன்னு போடணும்?”, என்று கோபமாக சொன்னாலும் அன்றைய நிகழ்வின் நினைவில் அவள் முகம் சிவந்தது.
கோபத்தையும் வெட்கத்தையும் ஒரே நேரத்தில் காட்டும் ஜானகியை வியப்பாகப் பார்த்தான். பட்டாசாய்ப் பொரியும் அவளின் அந்த வெட்கம் அழகான பொக்கிஷம் போல அவனுக்கு தோன்றி வைத்தது. அவளை ரசித்துப் பார்த்தவனின் மனம் சிறகில்லாமல் வானில் பறந்தது.
அவளிடம் வம்பிழுக்க எண்ணி “நான் என்ன செஞ்சேன் மேடம்? என் அண்ணானோட கொழுந்தியான்னு சொல்லி உன்னை சைட் அடிச்சேனா? கையைப் பிடிச்சு இழுத்தேனா? இல்லை கட்டிப் பிடிச்சேனா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
அவளோ கொதித்துப் போய் அவனை முறைத்து விட்டு “உனக்கு நான் எதைச் சொல்றேன்னு மறந்துறோச்சோ? இதை நான் நம்பனுமா?”, என்று கேட்டாள்.
“ஓ…. நீ அதைச் சொல்றியா?”, என்று சொன்னவனின் பார்வை அவள் முகத்தில் இருந்து அவளது மேனியில் திசை மாற அவன் பார்வை போகும் திக்கைப் பார்த்தவள் “கொன்னுறுவேன் கொன்னு”, என்ற படி துப்பட்டாவை சரி செய்தாள். “மறந்திருந்தவனை நானே நினைவு படுத்திட்டேனே?”, என்று தன்னையும் கடிந்து கொண்டாள்.
அவளுடைய மிரட்டலில் தன்னிலை அடைந்தவன் சீரியஸான குரலில் “இங்க பாரு ஜானு, நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இதுல எந்த மாற்றமும் இல்லை”, என்றான். “உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது ஜானு”, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
“அதான் ஏன்? இவ்வளவு கட்டாயமா நம்ம கல்யாணம் எதுக்கு நடக்கணும்?”
“ஏன்னா நீ அன்னைக்கு செஞ்ச காரியம் அப்படி பட்டது ஜானு. அன்னைக்கு கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் இன்னைக்கு நான் நடு ரோட்ல தான் நின்னுருப்பேன் டி உன்னால”
“நான் என்ன செஞ்சேன்?”, என்று குழப்பமாக கேட்டாள்.
“அன்னைக்கு நீ எங்க அண்ணன் கிட்ட என்ன பேசின?”
“ஐயோ இது இவனுக்கு இப்படித் தெரியும்?”, என்று எண்ணியவள் “ஆன்… அது வந்து… அது.. நான் ஒண்ணும் பேசலையே?”, என்றாள்.
“பொய் சொல்லாத”, என்று கோபமாக சொன்னான்.
அவனுடைய கோபத்தில் கொஞ்சம் மிரண்டவள் “கிரி மச்சான் ஏதாவது சொன்னாங்களா?”, என்று கேட்டாள்.
“அவன் எதுக்கு சொல்லணும்? அன்னைக்கு நீ பேசினதே என் கிட்ட தான்”, என்று அவன் சொன்னதும் “என்னது? அன்னைக்கு பேசினது நீயா?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள்.
“ஆமா அன்னைக்கு நான் தான் போன் எடுத்தேன். என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் எங்க வீட்ல சொல்லிக் கொடுப்ப, நான் அதை சும்மா பாத்துட்டு இருக்கணுமா? அன்னைக்கு நீ என் அண்ணன் கிட்ட பேசிருந்த கண்டிப்பா அவன் எங்க அப்பா கிட்ட வத்தி வச்சிருப்பான். நான் தொலைஞ்சிருப்பேன். அவர் என்னை வீட்டை விட்டே துரத்திருப்பார். அதுக்கு தான் இந்த பழி வாங்குற பிளான் போட்டேன். எப்படி என் ஐடியா?”
“உன் தலை. நீயும் உன் பிளானும். கல்யாணம்னா சாதாரண விசயம்னு நினைச்சியா? அப்புறம் நான் ஒண்ணும் அன்னைக்கு இல்லாததை சொல்லலை. உண்மையை தான் சொன்னேன்”, என்று நிமிர்வாகவே சொன்னாள்.
“என்ன உண்மை? நான் என்ன பொம்பளைப் பொறுக்கியா டி?”
“ஆமா இதுல என்ன சந்தேகம்?”, என்று கேட்ட ஜானகி “இந்த டி சொல்ற வேலையை வச்சிக்கிட்ட பாத்துக்கோ”, என்று சொல்லி ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்.
நீட்டிய அவள் விரலைப் பிடித்தான் ஸ்ரீராம். அதில் திகைத்துப் போனவள் “ஏய் என்ன பண்ணுற? விடு டா. விடுன்னு சொல்றேன்ல?”, என்றாள். அவளுக்கு அவனுடைய தொடுகையில் கூச்சமும் வந்திருந்தது.
“இப்ப நீ எந்த உரிமைல டான்னு சொன்னியோ அதே உரிமைல தான் நான் டின்னு சொன்னேன். அதை விடு. நம்ம கல்யாண விசயத்துக்கு வா”, என்று சொல்லிக் கொண்டே அவள் விரலை விட்டான்.
“கண்டிப்பா கல்யாணம் நடக்காது. என்னால ஒரு பொறுக்கியை கல்யாணம் பண்ண முடியாது. அன்னைக்கு நீ பண்ணினதை மறந்துருவேன்னு நினைக்கிறியா?”
“நீ அன்னைக்கு பொறுக்கின்னு சொன்னதுனால தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன். அதுவும் நான் ஒண்ணும்…..”, என்று சொல்ல வந்தவன் பின் “அதை விடு. நீ எதுக்கு அன்னைக்கு என்னை பொறுக்கின்னு சொன்ன? அதைச் சொல்லு முதல்ல”, என்றான்.
“நான் உண்மையைத் தான் சொன்னேன். ஒரு பொண்ணு கூட நீ வெளிய சுத்திருந்தா அது உன் லவ்வர்னு நினைச்சிருப்பேன். ஆனா நான் உன்னை ரெண்டு பொண்ணுங்க கூட பாத்தேன். அதுவும் ஒரு தடவை தியேட்டர்ல வச்சு, சுத்தி ஆட்கள் இருக்கும் போது அவ உன் கன்னத்துல கிஸ் பண்ணுறா. பப்ளிக்ல இண்டீசண்ட்டா நடந்துக்குறீங்க? இது பொறுக்கித் தனம் இல்லாம என்னதாம்? அதான் உன்னை மாதிரியே கிரி மச்சானும் இருப்பாங்கன்னு நினைச்சேன்”, என்று அவள் சொன்னதும் அவன் அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான்.
அவள் தன்னை தவறாக நினைத்திருப்பது அவனுக்கு புரிந்தது. “இவ்வளவு தானா? நான் கூட பயந்துட்டேன். உண்மையைச் சொன்னா புரிஞ்சுக்குவா. எல்லாம் அந்த ரம்யாவால தான்”, என்று எண்ணிக் கொண்ட ஸ்ரீராமுக்கு ஜானகியை பழி வாங்கும் எண்ணம் எல்லாம் அந்த நொடி மாயமாக மறைந்து போனது.
ஆனாலும் அவள் அவனுக்கு வேண்டுமே. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவளை அடைய முடியாது. இப்போது அவன் ரம்யா பற்றிச் சொன்னாலும் கிரியின் திருமணத்தன்று நடந்த விசயத்துக்கு சண்டை போடுவாள் என்று எண்ணியவன் இவளை இவ வழியில போய் தான் அடக்கணும் என்று முடிவு எடுத்தான்.
“சரி மா சரி, இப்ப நான் பொறுக்கின்னு ஒத்துக்கணும். அவ்வளவு தானே? நான் ஒத்துக்குறேன். ஆனா இந்த ஜென்மத்துல இந்த பொறுக்கி தான் உன் புருஷன். நம்ம கல்யாணத்துக்கு ரெடியா இரு”, என்றான்.
“அது ஒரு நாளும் நடக்காது. நான் செத்து கூட போவேன். ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”
“எனக்கென்ன? செத்துப்போ”, என்று அவன் சொன்னதும் அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“நீ செத்துப் போனா எனக்கு என்ன? நீயில்லைன்னா பொண்ணுங்களுக்கா பஞ்சம்? நீ செத்தா உன் அம்மா அப்பா தான் கவலைப் படுவாங்க. எனக்கு என்ன?”, என்று ஸ்ரீராம் கேட்டதும் சரவணன் அவள் மனக் கண்ணில் வந்தார்.
“இவனுக்காக நான் சாவணுமா?”, என்று எண்ணியவள் “இங்க பாரு ஒழுங்கு மரியாதையா இந்த கல்யாணத்தை நிறுத்திரு. இல்லைன்னா பாதிக்கப் படப் போறது நீ தான்”, என்றாள்.
“எனக்கு என்ன பாதிப்பு? உனக்கு தான் பாதிப்பு. இந்த பொறுக்கியைக் கல்யாணம் பண்ணிட்டேன்னு நீ தான் அழனும்? எனக்கு பிரச்சனையே இல்லை. நான் என் கேர்ள் பிரண்ட்ஸ் கூட ஜாலியா இருப்பேன். நீ என்ன யோசிச்சாலும் இந்த கல்யாணம் நடக்கும். முடிஞ்சா நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திக்கோ. அப்புறம் சாப்பிட்டதுக்கு பில்லைக் கொடுத்துட்டு போயிரு என்ன? வரேன் பொண்டாட்டி”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான்.
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ஜானகி. அவன் இப்படி எல்லாம் பேசுவான் என்று அவள் கனவிலும் நினைக்க வில்லை. இதில் இருந்து மீளும் வழியும் அவளுக்கு தெரிய வில்லை. “இது தான் என்னோட வாழ்க்கையா?”, என்று எண்ணி அவளுக்கு விரக்தியாக இருந்தது.
இதற்கெல்லாம் காரணமாக இருந்த ஸ்ரீராம் மேல் கொலை வெறியே வந்தது. “அப்படிக் கல்யாணம் முடிஞ்சா நீயும் என் கிட்ட செத்த டா. உன்னை என்ன டார்ச்சல் பண்ண போறேன் பாரு”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்றாள்.
அன்று மாலை ஸ்ரீராம் வீட்டில் இருந்து அனைவரும் ஜானகி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொள்வது போல முகத்தை வைத்திருந்தான் ஸ்ரீராம். அவன் சந்தோஷத்தை முகத்தில் காட்டினால் ரகு கண்டு கொள்வாரே.