புது இடம், புது வீடு என்கிற தயக்கம் கொஞ்சம் மனதிற்குள் இருந்தாலும், வராஹினி அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தான் இயல்பாக இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டாள்.
அர்ஜூனின் பாடு தான் திண்டாட்டமாக இருந்தது. இப்படி செய்தது தவறோ என்று ஆயிரம் முறையாவது யோசித்திருப்பான்.
காலையில் அவளுக்கு டிபனை வாங்கிக் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்தவன் தான், வெளியே வரவேயில்லை. அங்கிருந்த இன்னொரு அறையில் வராஹினி நல்ல தூக்கத்தில் இருந்தாள். அவள் சரியாகத் தூங்கி கிட்ட தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. இப்போது எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
இவளை வெகு நேரமாக காணாததால், அர்ஜூன் எழுந்து வெளிய வந்தான்.
“எங்க போயிருப்பா..?” என்று யோசித்துக் கொண்டே அருகில் இருந்த அறையைத் திறந்து பார்த்தவன், அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் எரிச்சலானான். கொஞ்சம் கடுப்பாக கூட வந்தது.
“புது இடத்துக்கு வந்திருக்கோம்ன்ற பயம் கொஞ்சமாவது இருக்கா..? காலம் காலமா இங்கயே இருந்த மாதிரி தூங்கிட்டு இருக்கா..?எல்லாம் என்னைச் சொல்லனும்..?” என்று தலையில் அடித்துக் கொண்டான் அர்ஜூன்.
நேரம் மதியம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது. அர்ஜூனுக்கு லேசாகப் பசிப்பதைப் போல் இருக்க..
“என்ன செய்யலாம்..?” என்று யோசித்தான்.
“வெளிய ஆர்டர் போட்டுடலாமா..?” என்று யோசித்தவன்,
“ஏற்கனவே இந்த வாரம் முழுவதும் ஹோட்டல் சாப்பாடு தான். ஏதாவது வீட்டிலையே செய்யலாம்..” என்று சமையலறைக்குள் நுழைந்தவன், இருந்ததை வைத்து சிம்பிளாக, சாதம்,பருப்பு, ரசம் வைத்து உருளைக் கிழங்கை வறுத்து எடுத்தான். அவன் அவ்வளவு வேலை செய்து கொண்டிருந்த போது கூட வராஹினி எழுந்து வரவில்லை.
அனைத்தையும் செய்து முடித்தவன், எடுத்து வைத்துவிட்டு குளிக்க சென்றான்.
“ஏற்கனவே, ஒரு ஆளுக்கு வேலை செய்யவே எரிச்சலா இருக்கும். இனி இந்த பொண்ணுக்கும் சேர்த்து நம்ம தான் செய்யனுமா..? விளங்கிடும்..” என்று புலம்பிக் கொண்டே குளித்து முடித்து வந்தான் அர்ஜூன். பொதுவாக அவனுடைய வேலைகளை அவனே செய்து தான் பழக்கம். வேலைக்கு இருந்த பெண்மணிக்கு சமையல் செய்யும் வேலையெல்லாம் இல்லை. தனக்குத் தேவையான சமையலை அர்ஜூனே செய்து கொள்வான். அந்த பெண்மணி, வீட்டு வேலைகளை மட்டும் செய்து விட்டு போவார்.
குளித்து முடித்து, சாப்பிடலாம் என்று வந்த அர்ஜூனுக்கு அங்கே வராஹினியைப் பார்த்ததும் அப்படி ஒரு அதிர்ச்சி.
கூந்தலை ஒன்றாய் இரண்டாய் தூக்கி கிளட்ச்சிற்குள் அடக்கியிருந்தாள். அதிலும் பாதி அடங்குவேனா என்று முன் நெற்றியில் விழுந்து அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. தூங்கி எழுந்து முகம் கூட கழுவவில்லை என்பதை அவள் சோர்வான முகமே சொல்லியது.
தட்டில் சாப்பாட்டைப் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் அங்கிருந்த டிவியில் இருந்தது. ஏதோ ஒரு காதல் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, வராஹியோ வெகு இயல்பாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் இந்த வீட்டிற்கு இன்று தான் வந்திருக்கிறாள் என்று யாராவது சுவற்றில் முட்டி சொன்னால் கூட நம்ப முடியாது. பாட்டில் லயித்திருந்தவள் வந்தவனை கவனிக்கவில்லை.
அவள் பக்கத்தில் சென்று டிவியை மறைத்தவாறு நின்றவன், அவளை முறைத்தான்.
“இப்ப எதுக்கு சார் டிவியை மறைக்கிறிங்க..? பிளீஸ் விலகுங்க. எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிக்கும்..” என்றாள்.
“எனக்கு சாப்பிடும் போது டிவி பார்த்தா பிடிக்காது..” என்றான் பட்டென்று.
“எனக்கு சாப்பிடும் போது தான் பார்க்க பிடிக்கும்..” என்றாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பட்டென்று டிவி சுவிட்சை ஆப் செய்தான்.
“இப்ப என்ன சார் உங்களுக்கு பிரச்சனை..?” என்றாள்.
“என்ன பிரச்சனைன்னு நான் எப்படி சொல்லுவேன். இப்படி நடு ஹால்ல உட்கார்ந்து ஆளை மயக்கினா, என்ன தான் பண்றது. ஒழுங்காவாவது உட்கார்ந்திருக்கிறாளா..?” என்றவனுக்கு, பார்வை முன் கழுத்து இறங்கியிருந்த வளைவுகளுக்குள் செல்ல, பட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஆனால் அவளோ, அவனை முறைத்துவிட்டு மறுபடியும் சாப்பிடுவதில் முனைப்புக் காட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன பண்ற அர்ஜூன்..? உனக்கு பார்வை ஏன் அங்க போகுது..? இதுக்குப் பேர் பொறுக்கித்தனம்..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
“எங்க உட்கார்ந்தாலும் ஒழுங்கா உட்காரு…” என்று பட்டென்று சொன்னவன், சமையலறைக்குள் சென்று விட்டான்.
“நல்லாத்தான உட்கார்ந்திருக்கேன்…! இவருக்கு என்னமோ ஆயிடுச்சு..?” என்றவள் மீண்டும் தன்னுடைய வேலையை தொடர, அங்கே அர்ஜூனோ ஒரு சொம்புத் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்திருந்தான்.
“முதல் நாளே இப்படி ஒரு சோதனையா..?” என்று நினைத்தவன், நொந்து போனான். ஒரு வழியாக இயல்புக்குத் திரும்பியவன், தனக்கான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தான்.
“கொஞ்சம் மாங்கா ஊறுகாய் இருந்திருந்தா இன்னமும் நல்லா இருந்திருக்கும் சார்..” என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்திருந்தாள் வராஹினி.
“செம்ம பசி சார். முதல்ல சோறு தான் முக்கியம். அதுக்கப்பறம் தான் எல்லாமே..” என்றாள்.
“அதுசரி… அதுக்காக தினமும் உனக்கு சமைச்சு குடுக்குற வேலையெல்லாம் என்னால செய்ய முடியாது..” என்றான் அர்ஜூன்.
“சத்தியமா எனக்கு சமைக்கத் தெரியாது சார். இனிமேல் தான் கத்துக்கணும். ஆனா, உங்க சமையல் சும்மா சொல்லக் கூடாது, செம்ம போங்க…இன்னையில இருந்து உங்க சமையலுக்கு நான் அடிமை..” என்றாள் தலையை சாய்த்து.
“நீ அடிமையா இருக்கிறதுக்காக, நான் சமைக்க முடியாது. இதுக்குத் தான் சொல்றேன், ஹாஸ்ட்டல சேர்ந்துக்கோ, உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது..” என்றான் அர்ஜூன்.
“இங்கயுமே எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல சார். நான் ஹேப்பியா தான் இருக்கேன். சொல்லப் போனா, பத்துநாளைக்கு பிறகு இன்னைக்குதான் நான் நிம்மதியா தூங்கினேன்..” என்றாள் மனதார.
“ஏன்..? அவ்வளவு வசதியான வீட்டுப் பொண்ணுக்கு அப்படி என்ன தூங்க முடியாத அளவுக்கு கஷ்ட்டம்..?” என்றான் நக்கலாக.
“என்ன பண்றது சார்..? நிம்மதி, தூக்கம், சந்தோசம் இதையெல்லாம் அந்த பணத்தைக் கொண்டு வாங்க முடியாதுன்னு எங்க வீட்ல இருக்கவங்களுக்கு புரியலை. அது கூட காரணமாயிருக்கலாம்..” என்றாள் வராஹினி. இதுவரை மகிழ்ச்சியாக இருந்த அவளின் முகம் இப்போது கொஞ்சம் வேதனையைக் காட்டியதோ.
“அந்த வீட்ல பிறந்த நீ மட்டும் எப்படி இப்படி இருக்க..? அவங்ககிட்ட இருந்து கொஞ்சம் வித்யாசமா..?” என்றான்.
“ஐஞ்சு விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு..? அப்படித்தான் சார் இதுவும்..” என்றாள்.
“அது சரி..! காலேஜ் போற எண்ணம் இருக்கா இல்லையா..? உன்னோட புக்ஸ் எல்லாம் எங்க இருக்கு..? எந்த காலேஜ்ல படிக்கிற..?” என்றான் அர்ஜூன்.
“எல்லாம் நம்ம KK காலேஜ்ல தான் சார்..” என்று வாய் போன போக்கில் உளறியவள், அவன் அதிர்ந்த முகம் பார்த்து அப்படியே நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“வாட்..! எந்த காலேஜ் சொன்ன..?” என்றான் மீண்டும் முறைத்துக் கொண்டு.
“அது வந்து..” என்று அவள் இழுக்க,
“என்ன..? வந்து போயி…?” என்று அதட்டிய அதட்டலில்,
“KK..” என்றாள் வேகமாக.
அர்ஜூனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போய் வைத்தவன், கோபமாய் அறைக்குள் சென்று பட்டென்று கதவை சாற்றிக் கொண்டான். அவனின் கோபத்தைப் பார்த்து திகைத்தவள், சோபாவிலேயே ஒரு ஓரமாக முடங்கிக் கொண்டாள். அவ்வளவு நேரம் இருந்த சந்தோசம் முழுவதும் நொடியில் வடிந்து போனது.
“நல்லவேளை, கோபத்துல கூட சாப்பாட்டை தூக்கி எறியலை. கொண்டு போய் வச்சிட்டு தான் கதவை சாத்தியிருக்கார்..” என்ற தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
அறைக்குள் சென்ற அர்ஜூனுக்கு கோபம் அடங்குவேனா என்று சண்டித் தனம் செய்தது. கண்ணாடி முன் நின்றவன்,
“என்ன பண்ணி வச்சிருக்க அர்ஜூன்..? இந்த விஷயமெல்லாம் எப்படி உனக்குத் தெரியாம போச்சு. அந்த பொண்ணு காலேஜ் படிப்பையே முடிக்கலைன்ற அதிர்ச்சியே இன்னும் மறையலை. அதுக்குள்ளே, இப்ப அடுத்த அதிர்ச்சியை குடுக்குறா..? எப்படி ஒரே காலேஜ்ல இருந்தும் அவளை எனக்குத் தெரியாம போச்சு..? இது எப்படி சாத்தியம்…?” என்று கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்திடமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
“என்னைக் கேட்ட எனக்கு எப்படி தெரியும். நீ ஹேண்டில் பண்றது பைனல் இயர் தானே. நீயே காலேஜ்ல ஜாயின்ட் பண்ணி ஆறு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள எல்லாரையும் எப்படி தெரிஞ்சிக்க முடியும். அது தெரியாம என்னை முறைச்சிக்கிட்டு நிக்கிற..?” என்றது கண்ணாடியில் இருந்த உருவம்.
“நோ..! நான் அவ டிப்பார்மென்ட்க்கு ரெண்டு தடவை கிளாஸ் எடுத்திருக்கேன். ஆனா, இவளைப் பார்த்ததில்லை. என்னமோ நடந்திருக்கு..” என்று யோசித்தான் அர்ஜூன்.
“ரொம்ப ஓவரா யோசிக்காத அர்ஜூன்..! அந்த ரெண்டு நாளும் அந்த பொண்ணு ஆப்சன்ட் கூட ஆகியிருக்கலாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா..?” என்றது அவனின் மனம்.
“இது பெரிய விஷயமில்லையா..? எப்படி ஒரே காலேஜ்குள்ள இவளை வச்சுகிட்டு…” என்று அவன் தன்னைத் தானே நொந்து கொள்ள,
“சிம்பிள்..! நீ அவகிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடு. ஜஸ்ட் இது ஒரு டிராமா தானே. இதுக்கு ஏன் நீ இவ்வளவு பீல் பண்றன்னு தான் எனக்குப் புரியலை..” என்றது மனம்.
என்னதான் யோசித்தாலும், அவனுக்கு சில விஷயங்கள் இடறியது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டவன், நிதானமாக கதவைத் திறந்தான். வராஹினி இன்னமும் அதே நிலையில் தான் அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த சோபாவின் மறு ஓரத்தில் அமர்ந்தவன், தன் இரண்டு கைகளையும் கோர்த்து, அதில் முகத்தைத் தாங்கியபடி யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு முடிவுடன் அவளைப் பார்த்தவன்,
“நீ அந்த காலேஜ்ல என்னை பார்த்திருக்கியா..?” என்றான் வெறுமையான குரலில்.
“என்ன சார் சொல்றிங்க..? நீங்களும் KK ல தான் வொர்க் பண்றிங்களா..?” என்றாள் அதிர்ச்சியாய்.
“உன்னோட இந்த அதிர்ச்சி எனக்கு உண்மையா தெரியலை..” என்றவன், அவளை ஆழம் பார்த்தான்.
“நிஜமாவே எனக்குத் தெரியாது சார்..!” என்றாள்.
“இதை நான் நம்பனும்..” என்றான் அர்ஜூன் இடக்காக.
“இதென்ன சார் வம்பா போச்சு. நானா உங்களை என் கழுத்தில் தாலி கட்ட சொன்னேன். நானா இந்த டிராமா பிளான் குடுத்தேன். செஞ்சது எல்லாமே நீங்க… இப்போ எல்லா பழியையும் தூக்கி எம்மேல போடுவிங்க போல..” என்றாள் வராஹினி.
“சொன்னாலும், சொல்லாட்டியும் இந்த டிராமா பிளான் உன்னோடது தான..?” என்றான் அர்ஜூன்.
“அப்கோர்ஸ்..! நான் இல்லைன்னு சொல்லலை. நான் டிராமா பிளான் பண்ணி வச்சிருந்தது என் பிரண்ட் குருவோட. உங்களோட இல்லை. குருவுக்கு பதிலா உங்களை இணைச்சுகிட்டது நீங்க தான், நான் இல்லை. ஒரு நிமிஷத்துல ஐடியாவை யோசிச்சு, என்கிட்டே சொல்லி, அடுத்த நிமிஷம் தாலியை கட்டினது நீங்க தான், நான் இல்லை..” என்றாள் அவளும் கோபமாக.
“லீவ் இட்..! நீ சொல்ற மாதிரி நானே எல்லாத்தையும் பன்னதாவே இருந்தாலும், இனி அதெல்லாம் முடியாது. ஏற்கனவே நீ சின்ன பொண்ணுன்ற குற்ற உணர்ச்சியே இன்னும் என்னை விட்டு போகலை. அதுக்குள்ளே, அடுத்த ஷாக். இதெல்லாம் சரிப்பட்டு வராது…” என்றான் அர்ஜூன்.
“எது சார் சரிப்பட்டு வராது. இப்ப என்ன சொல்ல போறிங்க..? நான் இங்க இருந்து போகனுமா…?உங்க பதில் அதுவா இருந்தா கண்டிப்பா என்னால அது முடியாது..” என்றாள் வராஹினி.
“இது விதண்டாவாதம்..” என்றான் அர்ஜூன் கோபமாக.
“இது என்னோட சரியான வாதம் தான் சார். உங்களுக்கு என்னைக் கண்டு பயம். எங்க என்கிட்டே மயங்கிப் போய்டுவிங்களோன்னு பயப்படுறிங்க..!” என்று காலம் காலமாக பயன்படுத்தும் யுக்தியை கையில் எடுத்தாள்.
“இப்ப நான் கோபப்பட்டு, அப்படியெல்லாம் இல்லை, நீ இங்கயே இரு.. நான் அதை நிருபிக்கிறேன்னு சொல்வேன்னு நீ எதிர்பார்த்தா அது உன்னோட முட்டாள் தனம்… மயங்கிப் போய்டுவேன்ற பயமும் இருக்கத்தான் செய்து. இதை சொல்றதுல எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆனா, நான் அதை செய்யக் கூடாதுன்னு நினைக்கிறேன். நமக்குள்ள எப்பவுமே செட்டாகாது. நீ இங்க இருந்து கிளம்புறது தான் சரியா இருக்கும். நான் செஞ்ச தப்பை நானே சரி பண்ணிடுறேன்..” என்றான் அர்ஜூன்.
“இப்போ நீங்க என்னை வெளிய அனுப்பினா, அடுத்த நிமிஷம் என் அண்ணனும், அம்மாவும் சேர்ந்து ரஞ்சனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அதுக்கு நான் சாகுறதே மேல். உங்களுக்கும் அந்த ரஞ்சனுக்கும் ஒரு மூணு வருஷ வித்யாசம் இருக்குமா..? அந்த மூணு வருஷம் என்னை ஒன்னும் முழுங்கிடாது..”என்றாள் வராஹினி.
“ராஹினி..! நான் உன்கிட்ட செய்ன்னு சொல்லலை. செய்யணும்…” என்றவன் அதற்குமேல் அவளிடம் பேசவில்லை.
வராஹினிக்கு ஒரு மாதிரியாகிப் போனது. அவளே வலிய அங்கே இருப்பது போன்ற பிரம்மை அவளுக்கு.
“ஒரு நாள் டிராமாவுக்காக எதுக்காக சார் என் வாழ்க்கையோட விளையாடுறிங்க..? நான் உங்களை ஹெல்ப் பண்ணுங்கன்னு சொல்லி கேட்டேனா..?” என்றாள் கோபமாக.
“அதுக்காக நான் எத்தனை சாரி வேணும்ன்னாலும் கேட்டுகிறேன் ராஹினி. ஆனா, இது கண்டிப்பா ஒத்து வராது…” என்றான் உறுதியாக.
“அப்படியெல்லாம் என்னால போக முடியாது சார். கண்டிப்பா நான் போகணும்ன்னு நீங்க நினைச்சா, அதுக்குமேல உங்க பிரியம் சார். ஆனா, அதுக்கப்பறம் எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கும் நீங்க தான் காரணம். அதை மட்டும் மனசுல வச்சுக்கங்க..” என்று தன்னுடைய முடிவைக் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட,
“நான் உண்மையை தான் சொன்னேன்..” என்றவளின் முகமும், குரலும் ஒரு சேர கலங்கியிருந்தது. அவளை அப்படி பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,
“காலேஜ்ல இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது…” என்றான் அர்ஜூன் இறுகிப் போன குரலில்.
“என் மூலமா கண்டிப்பா வெளிய வராது சார். தானா தெரிஞ்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது சார்..” என்றவள் அதற்கு பிறகு அவன் முன் நிற்கவில்லை.
அர்ஜூன் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தான். எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தான் என்றால் கண்டிப்பாக அவனுக்குத் தெரியாது. வாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு முதன் முறையாக தப்பாக போயிருக்கிறது.
விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தவனின் எண்ணங்கள், அதன் விருப்பத்திற்கு சென்று கொண்டிருந்தன.
அர்ஜூனுக்கு ஒரு வயது இருக்கும் போது, கர்ப்பப்பை புற்றுநோய் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவனுடைய தாய், அந்த மருத்துவமனையை விட்டு உயிருடன் வீடு திரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக வசதி வாய்ப்பு இருந்தும், மனைவியை இழந்து, ஒரு வயது குழந்தையுடன் தனியாக நின்ற கார்த்திகேயனின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை தான் அவரின் பெற்றோருக்கு.
மனைவியை இழந்து ஒரு வருடம் வரை, அர்ஜூன் மட்டுமே அவருடைய உலகம் என்று வாழ்ந்து வந்தவரை பெற்றோர் மெல்ல மெல்ல கரைத்தனர்.
கடைசியில், ‘அர்ஜூனுக்காக’ என்று அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் கார்த்திகேயனிடம் தன்னுடைய வேலையைக் காட்டியது. மகனுக்காக, இன்னொரு திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். சுமித்ராவை அவருக்கு இரண்டாம் தாரமாக மணம் முடித்து வைத்தனர். சுமித்ராவின் மீது அர்ஜூனும் நல்ல பாசமாகத் தான் இருந்தான். எல்லாம் ரஞ்சன் பிறக்கும் வரை மட்டுமே. ரஞ்சன் பிறந்து அவனுக்கு விபரம் தெரியும் வரை எல்லாம் நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது. விபரம் தெரிந்த ரஞ்சனிடம், சுமித்ராவின் அம்மா உண்மையை போட்டுடைத்திருந்தார். அர்ஜூன் தன்னுடைய சொந்த அண்ணன் இல்லை என்ற விபரம் அவனை தள்ளி நிறுத்தியது.
இயல்பிலேயே ரஞ்சன் பிடிவாதக்காரனாக வளர, அர்ஜூனுக்குள் இருந்த அவனின் வைராக்கிய குணம் யாருக்குமே தெரியாமல் போனது. அர்ஜூன், சுமித்ரா அருகில் வருவதைக் கூட வெறுத்தான் ரஞ்சன்.
ஆரம்பத்தில், அவன் அறியாத வயதில் அப்படி செய்கிறான் என்று எடுத்துக் கொண்ட அர்ஜூனும், நாளடைவில் ஒதுங்கத் தொடங்கினான்.
கார்த்திகேயன் மூத்த மகன் மீது பாசமாக இருக்க இருக்க, ரஞ்சனுக்கு அவனின் மீது வன்மம் அதிகரித்துக் கொண்டு தான் சென்றது.
அதற்கு தகுந்த மாதிரி அர்ஜூன் எல்லா விஷயத்திலும் ஆளுமையுடன் வளர, ரஞ்சனின் மனதில் தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது.
‘எதையாவது செய்து அர்ஜூனின் பெயரைக் கெடுக்க வேண்டும்..’ என்று இருபத்திநான்கு மணி நேரமும் யோசிக்கும் அளவிற்கு சென்றிருந்தான் ரஞ்சன்.
அவனுடைய பாட்டி அவன் மனதில் விதைத்த விஷ விதைக்கு தண்ணீர் ஊற்றி மரமாக வளர்த்து வைத்திருந்தான் ரஞ்சன். காரணமேயில்லாமல், ஒவ்வொரு விஷயத்தையும் கற்பனை பண்ணிக் கொண்டு ஒருவன் மீது விஷத்தை கக்க முடியுமென்றால் அது ரஞ்சனாகத் தான் இருக்கும்.
அறியாத வயதில் தெரியாமல் செய்த அனைத்தையும், அறிந்த வயதில், தெரிந்தே செய்யத் தொடங்கினான் ரஞ்சன்.
அவனுடைய எண்ணங்கள் மெதுவாக கார்த்திகேயனுக்குத் தெரியவர, அதுவரை இருந்த அவரின் மனநிலை அடியோடு மாறிப் போனது. அர்ஜூன் ஒதுங்கிப் போவதற்கான காரணமும் அவருக்குத் தெரிய வந்தது.
“வீட்ல நீ என்னதான் பண்ணிட்டு இருக்க சுமித்ரா..?” என்று அவரின் மீது கோபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.
“என்ன சொல்றிங்க..? நான் என்ன பண்ணேன்..?” என்றார் சுமித்ரா.
“அர்ஜூன் இப்பல்லாம் சரியா வீட்டுக்கே வர்றதில்லை. காலேஜ் ஹாஸ்ட்டல்லயே இருந்துக்கிறான். இதுக்கு என்ன காரணம்ன்னு என்னைக்காவது நீ யோசிச்சிருக்கியா..?” என்றார் கோபமாக.
“அவன் தானங்க ஹாஸ்ட்டல இருந்து படிக்கிறேன்னு சொன்னான்..” என்றார் சுமித்ரா.
“அவன் சொன்னான் தான். அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா..? ரஞ்சன் நாளைக்கு இப்படி இருந்தா நீ இப்படித்தான் இருப்பியா..?” என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தார்.
“இப்ப எதுக்கு டாட்..? மம்மியை சத்தம் போடுறிங்க..? உங்க செல்ல மகன் அவனா வராம இருந்தா அதுக்கு என்னோட மம்மி என்ன பண்ணுவாங்க..?” என்று ரஞ்சன் மல்லுக்கு நின்றான்.
“என் மம்மி என்னை மட்டும் தான் பெத்தாங்க. அர்ஜூனை இல்லை. அவன் உங்க பையன் மட்டும் தான்…” என்றான் ரஞ்சன் பட்டென்று.
“என்ன ரஞ்சன் பேசிட்டு இருக்க..?” என்று சுமித்ரா அவனை அதட்ட,
“சும்மா நிறுத்துங்க மம்மி. டாட் தான் எப்பப் பார்த்தாலும் அவனைத் தூக்கி வச்சு பேசிட்டு இருக்கார். ஆனா, அவன் அவரைப் பத்தி என்னைக்காவது யோசிச்சிருக்கானா..? சரியான சுயநலம் பிடிச்சவன். அவனுக்கு காரியம் ஆகணும்ன்னா மட்டும் தான் இங்க வருவான். ஒரு நாள் இல்ல ஒரு நாள் மொத்த சொத்தையும் அவன் பேருக்கு எழுதிகிட்டு நம்மளை நடுத்தெருவுல நிறுத்துவான் பாருங்க..” என்று ரஞ்சன் சொல்லி முடிக்கும் முன், கார்த்திகேயன் அவனை அறைந்திருந்தார்.
“என்னங்க..?” என்று சுமித்ரா அதிர்ந்து நின்றார்.
“உன் பையனுக்கு என்ன வயசாகுது. ஸ்கூல் படிக்கிற வயசுல இவ்வளவு பேச்சு இவனுக்குத் தேவையா..? அவனை சொல்றதுக்கு முன்னாடி நீ முதல்ல ஒழுங்கா இருக்கியாடா..?சனிக்கிழமை நைட் ஒரு நாளாவது நீ வீட்ல இருந்திருக்கியா..? ஸ்கூல் படிக்கும் போதே சார், பப்புக்கு போறது ரொம்ப நல்ல காரியமோ..? அர்ஜூனைப் பத்தி ஏதாவது பேசின தொலைச்சுக் கட்டிடுவேன்.. ஜாக்கிரதை..” என்று கோபத்தில் கத்தித் தீர்த்துவிட்டு சென்றார் கார்த்திகேயன்.
நடந்த அந்த விஷயத்திற்கு பிறகு, ரஞ்சன்-அர்ஜூன் இடையே இருந்த நூலளவு பந்தமும் அறுந்து போயிருந்தது. ரஞ்சனின் மனதில் வேரூன்றிய எண்ணங்களை அவனே நினைத்தாலும் பிடுங்க முடியாத அளவிற்கு ஆழமாய் வளர்ந்திருந்தது.
ரஞ்சன் பகையை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அர்ஜூன் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் நண்பனின் பிறந்த நாள் பார்டிக்காக சென்றிருந்த இடத்தில் ரஞ்சனைப் பாரத்த அர்ஜூனுக்கு அப்படி ஒரு கோபம். அந்த வயதில் அவன் கையில் இருந்த உயர்ந்த ரக சரக்கு பாட்டிலைப் பார்த்தால் யாருக்குத் தான் கோபம் வராது. எதுவும் பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு வந்தவன், நீண்ட நாட்களுக்கு பிறகு அன்று தான் வீட்டிற்கு சென்றான்.
“என் வீட்டுக்கு வர்றதுக்கு கூட நான் சொல்லிட்டு தான் வரணுமா..?” என்றான் படக்கென்று.
“நான் எப்போ அப்படி சொன்னேன்..?” என்றார் சுமித்ரா.
“நீங்க கேட்ட விதம் அப்படித்தான் இருந்தது..?” என்றான் அர்ஜூன்.
“நீ என்னை உன்னோட அம்மாவா நினைச்சா எதுவும் தப்பா தெரியாது அர்ஜூன்..” என்றார் சுமித்ரா.
“என்னோட அம்மாவா இருந்திருந்தா, எப்படி இருக்கேன்னு தான் கேட்டிருப்பாங்க..? ஏன் வந்திருக்கன்னு கேட்க மாட்டாங்க..” என்றான் அர்ஜூன்.
“இப்ப எதுக்காக அர்ஜூன் இப்படி எடுத்தெறிஞ்சு பேசிட்டு இருக்க..?” என்று கார்த்திகேயன் அவனை அதட்ட,
“என்னை அதட்டுறதை விட்டுட்டு, வீட்ல ஒருத்தன் இருக்கான் பாருங்க… அவனை அதட்டி ஒழுக்கமா வளர்க்கிற வழியைப் பாருங்க. இந்த வயசுலையே குடிக்கிறான். இன்னும் என்னென்ன பழக்கமெல்லாம் இருக்கோ யாருக்குத் தெரியும்..?” என்றான் அர்ஜூன்.
“என்ன சொல்ல அர்ஜூன்..? ரஞ்சன் குடிக்கிறானா..? எங்க பார்த்த அவனை..? நீ சொல்றது நிஜமா..?” என்றார் கார்த்திகேயன்.
“பொய் சொல்லி என்ன ஆகப் போகுது..? பார்த்தைத் தான் சொல்றேன். நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. அதை கட்டிக் காப்பாத்தலைன்னாலும், கெடுக்காம இருக்க சொல்லுங்க..” என்றான் அர்ஜூன், சுமித்ராவைப் பார்த்து.
“ரஞ்சன் அப்படி பண்ண மாட்டான். உனக்கு அவன்மேல கோபம்னா அதை இப்படி காட்டாத அர்ஜூன்…” என்றார் சுமித்ரா.
“பெத்த பையனைப் பத்தி, மத்த பையன் சொன்னா நம்புறது கொஞ்சம் கஷ்ட்டம் தான். ஆனா, எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதே அவன் இடத்துல என் கூடப் பிறந்தவனா இருந்திருந்தா நாலு அப்பு அப்பி கூட்டிட்டு வந்திருப்பேன்.. என்னால அதையும் தான் செய்ய முடியாதே..” என்றான் அர்ஜூன் வெம்பிப் போன குரலில்.
“நீ என்னைக்குமே அவனை தம்பியா நினைக்கிறதே இல்லையே..?” என்றார் சுமித்ரா ஒரு ஆதங்கத்தில்.
“நீங்களும் என்னைக்குமே என்னை மகனா நினைச்சதா எனக்கு ஞாபகம் இல்லை..” என்றான் பட்டென்று.
“நீ அவனை அங்கயே நாலு சாத்து சாத்தியிருந்தா என் மனசு ஆறியிருக்கும் அர்ஜூன்..” என்றார் கார்த்திகேயன்.
“அதெப்படி ரஞ்சன்கிட்ட கேட்காம நீங்களே அவன் ஒரு விஷயத்தை செய்றான்னு முடிவு பண்றிங்க..? அர்ஜூன் ஏன் பொய் சொல்ல கூடாது..?” என்றார் சுமித்ரா.
சுமித்ரா அப்படி சொன்னதும் அர்ஜூனுக்கு உள்ளுக்குள் கோபம் தெரித்தது. அங்கேயே இருந்தால் தேவையில்லாத பிரச்சனை என்று நினைத்தவன்,
“நான் கிளம்புறேன்ப்பா..!” என்றான் அர்ஜூன்.
“என்னப்பா? வந்த உடனே கிளம்புனா எப்படி..? எத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்க..? நாங்க எல்லாரும் இருந்தும் நீ இப்படி தனியா இருக்கனுமா..?” என்ற கார்த்திகேயனின் பரிதவிப்பு அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.
“அது சரிப்பட்டு வராது…” என்றான்.
“எப்போ ஆஸ்திரேலியா கிளம்புற..?” என்றார் கார்த்திகேயன்.
“இன்னும் இரண்டு நாள்ல..” என்றான் அர்ஜூன்.
“அந்த இரண்டு நாள் இங்க இருக்கலாமே அர்ஜூன்..! பிளீஸ்..! எனக்கும் பையன் கூட இருக்கனும்ன்னு ஆசை இருக்கும் தான அர்ஜூன்..” என்று கார்த்திகேயன் மன்றாட, வேறு வழியில்லாமல் அவருக்காக அந்த இரண்டு நாள் இருக்க சம்மதித்தான் அர்ஜூன்.
பின் நாளில் இப்படி ஒரு பிரிவு வரும் என்று தெரிந்திருந்தால், அன்று அவனை அங்கு தங்கவே சொல்லியிருக்க மாட்டார் கார்த்திகேயன்.