அன்று இரவு முழுவதும் ரஞ்சன் வீட்டிற்கு வரவேயில்லை. அவனை எதிர்பார்த்து காத்திருந்த சுமித்ரா அவனுக்கு பலமுறை போன் செய்தும் அவன் எடுக்கவேயில்லை.
மறுநாள் காலையில் தான் வீட்டிற்கு வந்தான் ரஞ்சன். அவன் உள்ளே வரும் போதே அர்ஜூன் வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டான். அர்ஜூன் அவன் அறையின் பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
“என்ன? அதிசயமா வீட்டுக்கு வந்திருக்கான். ஒருவேளை நேத்து நடந்ததை வீட்ல சொல்லியிருப்பானோ..?” என்று நினைத்தபடியே வந்தான் ரஞ்சன். அப்படி சொல்லியிருந்தாலும் என்ன சொல்லி சமாளிப்பது என்று அவன் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
“என்ன ரஞ்சன்..? எங்க போய்ட்ட நீ..? எத்தனை தடவை போன் பண்ணேன்..? ஏன் எடுக்கவேயில்லை..?” என்று சுமித்ரா பிடித்துக் கொண்டார்.
“சாரி மாம்..! மொபைல் சைலன்ட்ல இருந்தது. அதான் கவனிக்கலை..” என்றான் ரஞ்சன்.
“தண்ணியடிக்கும் போது தொந்தரவா இருக்கும்ன்னு சைலன்ட்ல போட்டிருந்தியா ரஞ்சன்..?” என்றார் கார்த்திகேயன்.
“இவரு வேற..? காலங்காத்தலையே கேள்வி கேட்டு மனுஷனைக் கொல்லுவார்..” என்று மனதிற்குள் புலம்பியவன்,
“என்ன டாட் சொல்றிங்க..? நான் டிரிங்க் பண்ணேனா..? இதென்ன புதுக்கதை..? நான் பார்டிக்கு போனது உண்மைதான். ஆனா, நான் டிரிங்க் பண்ணவேயில்லை..” என்றான் ரஞ்சன்.
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ரஞ்சன். அது உனக்கு வரலை. பார்டிக்கு போன உனக்கு விடியற வரைக்கும் அங்க என்ன வேலை..?” என்றார் கார்த்திகேயன்.
“டாட், அப்படியே பிரண்ட் வீட்டுக்கு போய்ட்டோம் எல்லாரும். அங்கயே ஸ்டே பண்ணிட்டோம். ஏன்..? இதுக்கு முன்னாடி நான் இப்படி ஸ்டே பன்னதேயில்லையா..? இப்ப மட்டும் என்ன புதுசா கேள்வி கேட்குறிங்க..?” என்றான்.
“இதுக்கு முன்னாடி போனப்ப எல்லாம் இப்படி சரக்கடிச்சுட்டு தான் போயிருக்கன்னு இப்பத்தானே தெரியுது..” என்று கார்த்திகேயன் கோபமாக பேசத் தொடங்கினார்.
“நீங்க பார்த்திங்களா..? நான் டிரிங்க் பண்ணதை..?” என்றான் அவனும் கோபமாக.
“நான் பார்த்தா என்ன? அர்ஜூன் பார்த்தா என்ன..? இதுல உனக்கு ஆதாரம் வேற வேணுமா..?” என்று கார்த்திகேயன் பேச,
“நான் நினைச்ச மாதிரி போட்டுக் குடுக்கத்தான் இங்க வந்திருக்கான். வந்த வேலையையும் செஞ்சு முடிச்சுட்டான். இவன் பக்கத்துல இருந்தாலே பிரச்சனை தான்..” என்று மனசுக்குள் நினைத்த ரஞ்சன்,
“அவன் சொல்றதை நம்புறிங்க…ஆனா, நான் சொல்றதை நம்ப மாட்டிங்களா..? மாம்..! நீங்க கூட என்னை நம்பலைல..” என்று நாடகத்தை ஆரம்பித்தான். இவன் இப்படித்தான் பேசுவான் என்பது தெரிந்து தானோ என்னவோ அர்ஜூன் அங்கு வரவேயில்லை.
“சும்மா இந்த நாடகமாடுற வேலையெல்லாம் வேண்டாம் ரஞ்சன்..இது தான் உனக்கு முதலும் கடைசியுமா இருக்கணும்..” என்றார் கார்த்திகேயன் கோபமான குரலில்.
“நான் பேசுறது எல்லாமே உங்களுக்கு நாடகமாத்தான் தெரியும் டாட். ஆனா, அவன் பேசுனா அப்படியே சத்தியத்தை மட்டும் தான் பேசுவான் உங்களுக்கு. இப்படி எப்பவும் ஒரு ஒருதலை பட்சமா இருக்காதிங்க. அவன் எப்பவுமே உங்களுக்கு உசத்தி தான். என்ன இருந்தாலும் நான் ரெண்டாம் தாரத்து மகன் தானே..” என்று குறி பார்த்து அடித்தான் ரஞ்சன்.
“நான் பேசுனதுக்கும், நீ இப்போ பேசிட்டு இருக்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ரஞ்சன்..” என்று அவர் ஏதோ சொல்ல வர,
“அவன் சொல்றதும் சரி தானே..! உங்க மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்கப் போயிதான், அவன் எது செஞ்சாலும் குத்தம் கண்டு பிடிக்கிறிங்க. இதேது அர்ஜூன் விஷயத்துல நான் ஏதாவது சொல்றேனா..?” என்றார் சுமித்ரா.
“என்னோட விஷயத்துல யாரும் சொல்ற அளவுக்கு நான் நடந்துகிட்டதும் இல்லை. அப்படி வச்சுகிட்டதுமில்லை. உங்களோட சொந்த பையனா இருந்திருந்தா, இப்படித்தான் கவலைப் படாம இருந்திருப்பிங்களா..? உங்க பையன் ஒரு நாள் வீட்டுக்கு வராததுக்கே இந்த பாடு படுறிங்க..? நான் ஒரு வருஷம் வராம இருந்தாலும் என்னைக்காவது ஏன்னு கேட்டிருக்கிங்களா..? நீங்க எங்க அப்பாவை எப்படி குறை சொல்லலாம்..” என்று அழுத்தமாய் கேட்டான் அர்ஜூன்.
“அவர் உனக்கு அப்பா மட்டுமில்லை அர்ஜூன்.. எனக்கு கணவரும் கூட..” என்றார் சுமித்ரா.
“அர்ஜீன்..! என்ன பேச்சு இதெல்லாம்..? அவன் பொறுக்கித் தனம் பண்ணினதை நீ பார்த்தியா..?” என்ற சுமித்ராவுக்குள் அப்படி ஒரு கோபம்.
“பார்க்க போய் தான் சொல்றேன்..” என்றான் அவனும் விடாமல்.
“என்ன சுமித்ரா இது..? அர்ஜூன் இவ்வளவு தூரம் சொல்றான், நீ ரஞ்சனை அதட்டுறதை விட்டுட்டு, அர்ஜூனை கேள்வி கேட்டுட்டு இருக்க..?” என்றார் கார்த்திகேயன்.
“அதுக்காக பொறுக்கி அப்படி இப்படின்னு சொல்லலாமாங்க..?” என்றார் சுமித்ரா.
“மாம்..! இது நமக்கு ஏற்கனவே தெரிஞ்சது தான..? டாட் என்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருக்கார்..? என்ன இருந்தாலும் அவன் செல்ல மகன்.. நான் அப்படியா..? எல்லா விஷயத்திலும் எனக்கு செக்கேன்ட் ஆப்ஷன் தான்..” என்றான் ரஞ்சன்.
“நீயா ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு பேசினா, அதுக்கு யாரும் பொறுப்பாக முடியாது ரஞ்சன். உன்னோட பழக்க வழக்கங்களை நீ மாத்திக்கிறது தான் நல்லது. இல்லைன்னா, எதிர்காலத்துல உன்னை நம்பி எந்த பொறுப்பையும் என்னால ஒப்படைக்க முடியாது..” என்றார் கார்த்திகேயன்.
‘ஒப்படைக்க முடியாதா..? ஹோ.. மொத்தமா எல்லாத்தையும் அவன் பக்கம் இழுக்கப் பார்க்கிறானா..?’ என்று மனதிற்குள் நினைத்த ரஞ்சன்,
“இதுக்கு நீங்க நேரடியாவே சொல்லலாம் டாட். படிச்சு முடிச்சு வந்தாலும் எனக்கு எதுவுமே கிடையாது. உங்க செல்ல மகன் அர்ஜூனுக்கு தான் எல்லாமேன்னு..” என்றான் ரஞ்சன்.
“நான் எப்ப அப்படி சொன்னேன்..?” என்றார் அவர்.
“நீங்க நேரடியா சொல்லலைன்னாலும், அது தான் உண்மை டாட். இதோ, இத்தனை நாள் வராதவன் இன்னைக்கு ஏன் வரணும்..?” என்றவன்,
“நான் சொல்லவா..? என்னைப் பத்தி போட்டுக் கொடுத்து, உங்க மனசுல என்மேல இன்னும் வெறுப்பை வளர்க்கணும். அப்பத்தான எல்லா பொறுப்பையும் அவன்கிட்ட ஒப்படைப்பிங்க..? இவன் எல்லாமே பிளானோட தான் செய்றான். அது தெரியாம நீங்க தான் என்னை தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க..?” என்றான் ரஞ்சன்.
“வார்த்தையை அளந்து பேசு ரஞ்சன். சின்னப் பையன் மாதிரி உன்னோட பேச்சுமில்லை, பிகேவியருமில்லை. எல்லா நேரத்துலயும் இப்படி பொறுமையா இருக்க மாட்டேன்..” என்றான் அர்ஜூன்.
“பொறுமையா இல்லைன்னா, என்ன பண்ணுவ அர்ஜூன்..? அவனை அடிப்பியா..?” என்றார் சுமித்ரா.
“என் பையன் மேல கை வைக்க நீ யாரு..?” என்றார் சுமித்ரா.
“வாயை மூடு சுமித்ரா. யாரை பார்த்து என்ன கேள்வி கேட்குற..? இத்தனை நாளைக்கு அப்பறம் இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கான். அம்மாவும், மகனும் இப்படி பேசியே அவனை அனுப்பனும்னு பார்க்கிறிங்களா..?” என்றார் கார்த்திகேயன்.
“நான் என்னைக்காவது அப்படி நினைச்சிருக்கேனா..? அவன் பேசுறது அப்படித்தானே இருக்கு..? என்னைக்காவது ரஞ்சன் கூட அவன் சகஜமா பேசியிருக்கானா..?” என்றார் சுமித்ரா.
“இந்த கேள்வியை அப்படியே மாத்தி கூட கேட்கலாம். அப்போ தெரியும் உண்மை..” என்றான் அர்ஜூன் பட்டென்று.
“நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு அர்ஜூன்..!” என்று கார்த்திகேயன் இயலாமையில் சொல்ல, அனைவரையும் முறைத்த அர்ஜூன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்.
சொந்த வீட்டிலேயே தனிமைப்பட்ட உணர்வு அவனுக்கு. இது இன்று நேற்று வந்ததில்லை. பல வருடங்களாக இதே உணர்வு தான் அவனுக்கு. தொண்டையில் சிக்கிக் கொண்ட மீன் முள்ளைப் போல சில உறவுகள் அவனுக்கு. இன்று ஏனோ மிகவும் தனிமையாய் உணர்ந்தான் அர்ஜூன். என்னதான் கார்த்திகேயன் அவன் மீது பாசத்தைக் கொட்டினாலும், அவர்களில் இருந்து தான் விலகி இருப்பதைப் போன்ற மாய பிம்பம் அவனுக்கு சிறு வயதிலிருந்தே உண்டு. அந்த பிம்பத்தை உடைக்க கார்த்திகேயன் மட்டுமே முயன்றார். சுமித்ரா அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. அர்ஜூனுடன் ஒட்டி உறவாடவும் இல்லை. வெட்டி பகையாடவும் இல்லை.
‘இப்படியே இருந்தா வேலைக்காகாது அர்ஜூன்..! ஆஸ்திரேலியா கிளம்புற வழியை பாரு. உனக்கு என்ன தேவையோ அதை மட்டும் யோசி..’ என்று தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும், அவன் ஒருவன் அந்த வீட்டிலேயே இல்லை என்பதைப் போலவே நடந்து கொண்டான். எந்த பேச்சும் இல்லை. அவசியம் இருந்தால், இரண்டு ஓர் வார்த்தையுடன் முடித்துக் கொண்டான். கார்த்திகேயனுக்கு தான் வருத்தம் அதிகரித்தது. அவன் மீண்டும் தன்னை சுருக்கிக் கொண்டானோ என்ற பயம் தான் அவருக்கு. அன்று சொல்லிவிட்டு ஆஸ்திரேலியா கிளம்பியவன் தான், படிப்பு முடியும் வரை வீட்டுப் பக்கம் வந்தானில்லை.
அங்கே படிப்பை முடித்தவன் திரும்பி வருவான் என்று பார்த்தால், அங்கேயே வேலைக்கு சேர்ந்திருந்தான். இங்கே ரஞ்சனோ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அர்ஜூன் என்ன படித்தானோ, எங்கு படித்தானோ அங்கு தான் தானும் படிப்பேன் என்று போட்டி போட்டுக் கொண்டு அவனும் ஆஸ்திரேலியா கிளம்பியிருந்தான். ரஞ்சனின் இந்த போட்டியும், பொறாமையும் அவனை எங்கு கொண்டு நிறுத்தப் போகிறது என்ற கவலை நாளுக்கு நாள் கார்த்திகேயனுக்கு கூடிக் கொண்டு தான் போனது.
“ஏங்க…? ஏங்க..? சார்..!” என்று வராஹினி பல முறை கூப்பிட்டும் அவன் அசையாததால்,
“அர்ஜூன்..” என்று அவனை உலுக்கினாள். அவளின் தொடுகையில் உயிர்பெற்றவன், பட்டென்று அவளின் கையைத் தட்டிவிட்டு, அவளை முறைத்தான்.
“இப்ப எதுக்கு பக்கத்துல வர்ற..?” என்றான் கோபமாய்.
“நல்லா இருட்டிடுச்சு..! நீங்க இன்னும் இப்படியே உட்கார்ந்திருக்கிங்களேன்னு தான் கூப்பிட்டேன். நீங்க அசையவே இல்லை. அதான்..” என்றாள்.
“ஆமா.. உங்களை சார் மோர்ன்னு கூப்பிட கடுப்பா இருக்கு. பேர் சொல்லிக் கூப்பிடலாம்ன்னு பார்த்தா நீங்க என்னை விட பத்து வருஷத்துக்கு பெரியவர். அதான் வாத்தியாரேன்னு கூப்பிட்டு பார்த்தேன். இது கூட நல்லாத்தான் இருக்கு..” என்றாள் வராஹினி.
“என்ன கிண்டலா..?” என்றான் முறைத்துக் கொண்டே.
“நீங்க என்ன வாத்தியாரே..? எது பேசுனாலும் அதுல ஒரு குறை கண்டு பிடிக்கிறிங்க..?” என்றவள் அலுத்துக் கொண்டாள்.
“இப்போ உனக்கு என்ன வேணும்..?” என்றான் அர்ஜூன்.
“நான் எங்க தூங்குறது..?” என்றாள்.
“அதோ..! அந்த ரூமையே யூஸ் பண்ணிக்க…” என்றான் அர்ஜூன்.
“அப்பறமென்ன பேசாம போய் தூங்க வேண்டியது தானே..?” என்றான் அர்ஜூன்.
“நிஜமாவே எனக்குத் தனியா தூங்கி பழக்கமில்லை. அதுவுமில்லாம இது புது இடம் வேற..” என்றாள் வராஹினி.
“நீ மதியம் தூங்கின தூக்கத்தைப் பார்த்தா, புது இடத்தில் தூங்கின மாதிரி தெரியலையே..?” என்றான் நக்கலாய்.
“மூணு நாளா சரியா தூங்கலை. அதான் டயர்ட்ல தூங்கிட்டேன். ஆனா, நைட் என்னால தனியால்லாம் தூங்க முடியாது வாத்தியாரே..” என்றாள் வராஹினி பாவமாய்.
“தயவு செஞ்சு இந்த வாத்தியாரேன்னு சொல்றதை விடு. போடா வாடான்னு கூட கூப்பிடு. இப்படி கூப்பிட்டு மட்டும் மானத்தை வாங்காதே..” என்றான் அர்ஜூன், சிடுசிடுப்புடன்.
“எனக்கு இங்க பழகுற வரைக்கும், நான் உங்க ரூம்ல தூங்கிக்கவா..?” என்றாள்.
“வாட்..? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..? எந்த தைரியத்தில் இந்த கேள்வியை என்கிட்டே கேட்ட நீ..?” என்றான்.
“எல்லாம் இந்த தைரியத்தில் தான்..” என்றவள் தாலியை காட்ட,
“அதுக்கு அர்த்தமேயில்லை… இதைப் பத்தி ஏற்கனவே நாம பேசிட்டோம்ன்னு நினைக்கிறேன்..கொஞ்சமாவது சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்க..” என்றான்.
“நானும் இந்த தாலியை வைத்து ஆதாயம் தேட நினைக்கலை. நிஜமாவே எனக்கு பயம் தான் சார்..” என்றாள்.
“அதுக்கு என்கூடத்தான் தூங்கனும்ன்னு அவசியமில்லை. நீ கதவை திறந்து வைச்சுட்டு தூங்கு. நான் இங்க ஹால்லையே படுத்துக்கிறேன்..” என்றான்.
“அது எப்படி சார்..!” என்று அவள் ஏதோ சொல்ல வர, அவன் முறைத்த முறைப்பில் அப்படியே அடங்கிப் போனாள்.
தனக்கான தலையணையையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு வந்தவன், ஹாலிலேயே படுத்துக் கொண்டான். வராஹினிக்கு தான் சங்கடமாய் போனது. அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. அவனை யோசனையுடனே பார்த்துக் கொண்டு சென்றவள், தயக்கத்துடன் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
கண்களை மூடியவனின் நினைவுகளில் முழுவதும் வராஹினி முகம் தான். பார்த்தவுடனே ஈர்த்த முகம் தானே அவளின் முகம் . எதையோ செய்ய போய், எதிலோ முடிந்து, இப்போது அவனுடன், அவனுடைய வீட்டில், அவனுடைய மனைவியாக. அவன் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், உண்மை ஓங்கி அவன் முகத்தில் அறைந்தது. அவனை கையோடு அணைத்து, அவன் தோள் வளைவில் முகம் புதைத்தவளின் வாசம் இன்னமும் அவனுக்குள் இருந்தது. அந்த குறுகுறுப்பு இன்னமும் அவனை விட்டு போகவில்லை. சில ஆழ்ந்த உணர்வுகளும், படபடக்கும் மனமும் பெண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று யார் சொன்னது..? இதோ அத்தனையும் அனுபவித்து, அதை வெளியே காட்டாமல் அர்ஜூன் அணிந்திருக்கும் முகமூடி எத்தனை நாளைக்கு இருக்கும்..?
பகலிலும் சரியாக தூக்கமில்லாததால், வராஹியின் நினைவுகளுடனேயே தூங்கிப் போனான் அர்ஜூன். நன்றாக தூங்கி எழுந்திருந்த வராஹினிக்கு தான் இப்போது தூக்கம் வருவேனா என்று சண்டித் தனம் செய்தது.
மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், வெளியே சொல்ல முடியாத ஏக்கமும், ஒரு விதமான அழுத்தமான உணர்வும் அவளுக்குள் இருந்தது. செய்யும் போது பெரிதாக தெரியாத சில விஷயங்கள் செய்து முடித்த பின் பூதாகரமாய் தெரியும். வராஹியின் நிலைமையும் இப்போது அப்படித்தான் இருந்தது. போனும் கையில் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியவில்லை.தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்தில் எழுந்து வெளியே வந்தாள்.
ஹாலில் எறிந்த மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் அர்ஜூன் ஆழ்ந்து தூங்குவது தெரிந்தது. மெல்ல அவனின் அருகில் அமர்ந்தவள், அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சீராக ஏறி இறங்கிய மூச்சு அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை சொல்ல, அந்த சோபாவுக்கு அருகிலேயே அமர்ந்து, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அலையலையாய் படிந்திருந்த அவனின் சிகைக்குள் கைகளை விட்டு, அதை அளந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
‘வராஹி..! இதெல்லாம் ரொம்ப ஓவர். அவன் மட்டும் எந்திருச்சான்… உன்னைய பொங்கல் வச்சிடுவான்..’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள். எப்போதும் வசீகரிக்கும் அவன் முகம் இப்போது அளவுக்கு அதிகமாய் அவளை வசீகரித்தது.
“இப்படி ஹேண்ட்சமா இருந்தா, நானும் என்ன தான் பண்றது. நீங்க அக்சப்ட் பண்ணலைன்னாலும் இப்போதைக்கு நான் தான் உங்க வொய்ப். இப்படி புருஷனையே திருட்டுத் தனமா சைட் அடிக்க வேண்டியிருக்கு..” என்று மனதிற்குள் நினைத்தவளுக்கு, கடந்து போன சில ஞாபகங்கள் வந்து போக, அந்த நினைவுகளின் சுகத்தில், அர்ஜூனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு….
பிரின்சிபால் அறைக்கு வெளியே நின்று எதையோ பேசிக் கொண்டிருந்தனர், வராஹினியும் அவளது நண்பர்களும். உடன் குரு கோவிந்தனும் இருந்தான்.
“யார் கூட இந்த பிரின்சிபால் மேடம் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்காங்க..?” என்று உதட்டைக் குவித்தவள்,
“ஏண்டா கோவிந்தா… உனக்குத் தெரியுமா..?” என்றாள்.
“என் பேர் குரு..!!” என்று பல்லைக் கடித்தான் குரு கோவிந்தன்.
“இப்ப இது ரொம்ப முக்கியமா..?” என்றாள் வராஹினி.
“உங்களால் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதா..?” என்றார் அருகில் இருந்த அவர்கள் டிப்பார்ட்மென்ட் ஹெச்ஓடி.
“இல்ல சார்..! மேடம் பொதுவா இவ்வளவு நேரம் பேச மாட்டாங்களே..! அதான் கேட்டேன்..” என்றாள் வராஹினி.
“அவங்ககிட்ட கேட்டு சொல்லவாம்மா..?” என்றார் அந்த சார் நக்கலாக.
“பாரேன்..! சாருக்கு காமெடி கூட வருது..” என்றவள்,குருவிடம் சொல்லி சிரிக்க,
“கொஞ்ச நேரம் அமைதியா இரு வராஹி..” என்று குரு கெஞ்சி கேட்க, போனால் போகட்டுமென்று அமைதியாக இருந்தாள் வராஹினி.
இன்டர் காலேஜ் காம்பட்டிஷனில் கலந்து கொண்டு, ஆளுக்கு ஒரு பிரிவில் மெடல் வாங்கியிருந்தனர். அதனை பிரின்ஸ்பாலிடம் காட்டுவதற்காக அனைவரும் அங்கே நின்றிருந்தனர்.
அப்போது அவர்களையும் அழைக்க, மொத்தமாய் உள்ளே சென்றனர்.
“குட் மார்னிங் மேம்..!” என்று அனைவரும் விஷ் செய்ய, அவர்களுக்கு பதில் வணக்கம் செய்தவர், ஹெச்ஓடியை பார்த்து,
சார்,
“மீட் மிஸ்டர். அர்ஜூன் கார்த்திகேயன்..! உங்க டிப்பார்ட்மென்ட்க்கு புதுசா வந்திருக்கிற ப்ரொபசர்..” என்று அறிமுகம் செய்து வைத்தார் அந்த பெண்மணி.
“ஹலோ சார்..!” என்றபடி அர்ஜூன் அவரிடம் கைகுலுக்க, அசட்டையாக நின்றிருந்த வராஹினி,அவனின் அந்த குரலில் அவனை சரியாகப் பார்த்தாள். அங்கிருந்த பத்து பேர்களுள் ஒருத்தியாய் நின்றிருந்தவளை அவன் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், வராஹினி தான் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு இப்படி பார்த்துகிட்டு இருக்க வராஹி..” என்றான் குரு.
“ஆளு செம்ம ஹேண்ட்சம் இல்லையா கோவிந்தா..?” என்றாள் வராஹி.
“உன்னை..!” என்று பல்லைக் கடித்தவன்,
“இப்ப அதுக்கு என்ன செய்யனும்ன்னு சொல்ற..?” என்றான்.
“ஒன்னும் செய்ய வேண்டாம். ஆனா, பார்க்க செம்மையா இருக்கார். எனக்கு பார்த்த உடனே பிடிச்சுப் போய்டுச்சு…” என்றாள்.
“கவலைப்படாத…! அவர் பைனல் இயர்க்கு தான் கிளாஸ் எடுக்க போறாராம். நமக்கு இல்லை..” என்றான் குரு.
“சோ வாட்..! நாமளும் அடுத்த வருஷம் பைனல் இயர் தான் கோவிந்தா…கடவுள் கண்ணைத் திறந்துட்டான் கோவிந்தா. வயசான மூஞ்சியா பார்த்து சலிச்சு போன நமக்கு இப்படி ஒரு ஹேண்ட்சம் மேனை அனுப்பி வைப்பார்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை..” என்றாள் வராஹி.
“இங்க வந்தும் உங்க ரெண்டு பேருக்கும் பேச்சு குறையலையா..?” என்ற ஹெச்ஓடியின் குரலில் கலைந்தனர் இருவரும். அப்போது பார்த்தால் அர்ஜூன் அங்கே இல்லை.
“எங்கடா அந்த சாரை காணோம்..?” என்றாள் வராஹி.
“அவர் போய் அரைமணி நேரம் ஆகுது…” என்றான் குரு.
“அவர் இல்லாத இந்த இடத்தில் நான் எப்படி இருப்பேன்..?” என்று அவள் நாடக பாணியில் சொல்ல,
“ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. உனக்கு ரொம்ப முத்திப் போய்டுச்சு. எதுக்கும் அந்த சாரோட வொய்ப் கிட்ட சொல்லி வைக்கணும்..” என்றான் குரு.
“அவரைப் பார்த்தா கல்யாணம் ஆனா மாதிரி தெரியலையே..?” என்றாள் வராஹினி.
“இப்பல்லாம் யாரையும் அப்படி சொல்லிட முடியாது..” என்றான் குரு.
“கங்கிராட்ஸ் வராஹினி..!” என்று பிரின்சிபால் மேடம் அவளை வாழ்த்த, அவள் அதை கவனிக்காமல் குருவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அனைவரும் அவளை திரும்பிப் பார்க்க,
“வெரி ப்ரௌட் ஆப் யு காய்ஸ்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, அதெல்லாம் அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவள் பார்வை எப்போதடா வெளியே செல்வோம் என்று இருந்தது.
“வராஹி..! வா போகலாம்..!” என்று குரு தான் அவளை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
“டேய்..! கையை விடுடா..!” என்று அவனை முறைக்க,
“இது உனக்கே ஓவரா தெரியலை. காலேஜ்ல பாதிப் பயலுக உன் பின்னாடி சுத்துறானுக. நீ என்னமோ அந்த வாத்தியாரை பார்த்து வழிஞ்சுகிட்டு நிக்கிற..?” என்றான் குரு கோபமாக.