“சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? உன்னை உண்மையான பிரண்டா தானே பாத்தேன்? என் ஜானு கிட்ட எதுக்கு அப்படிச் சொன்ன? நான் தப்பு பண்ணிட்டேன். முதல் தடவை நீ பைத்தியக்காரி மாதிரி உளறினப்பவே உன்னை என் வாழ்க்கைல இருந்து கட் பண்ணிருந்தா இன்னைக்கு நீ இப்படி பண்ணிருக்க மாட்ட. உன்னால எப்படி உண்மையான நட்புக்கு துரோகம் பண்ண முடிஞ்சது? இனி நீ எனக்கு பிரண்டா இருக்குற தகுதியை இழந்துட்ட. இனி இந்த ஜென்மத்துல உன் முகத்துல நான் முழிக்க மாட்டேன். குட் பாய்”, என்று சொன்னான் ஸ்ரீராம்.
“ஸ்ரீ.. சாரி ஸ்ரீ…. நான்..”, என்று ஏதோ ரம்யா சொல்ல வர அவள் முகத்தைக் கூட பார்க்க விரும்பாதவனாய் விருட்டென்று வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
திருச்செந்தூர் செல்லும் வழியில் இருந்த கிளைச் சாலையில் வண்டியை நிறுத்தியவன் ஜானகியைப் பற்றி யோசித்தான். அவள் பக்க நியாயமும் இத்தனை நாள் அவள் ஏன் தன்னை தவிர்த்தாள் என்றும் புரிந்தது. கூடவே ரம்யா செய்த துரோகமும் அவனுக்கு வலித்தது. நட்பு என்ற பெயரில் கூட ஒரு பெண்ணிடம் உரிமையாக பழக கூடாது என்ற பாடத்தை அவள் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறாள்.
கூடவே ஜானகியை எப்படி சமாதானப் படுத்த போகிறோம் என்று கவலையாகவும் பயமாகவும் இருந்தது.
“எப்படியும் அவளிடம் பேசி தான் ஆக வேண்டும். முதல்ல கெஞ்ச வேண்டியது தான். மசியலைன்னா மிஞ்ச வேண்டியது தான்”, என்று எண்ணிக் கொண்டு வண்டியை எடுத்தான்.
வீட்டுக்கு வந்தவனை வரவேற்றது அரசி தான். “வாங்க மாப்பிள்ளை”, என்று வரவேற்றாள்.
“ஆமா மாப்பிள்ளை. கோபமா வந்தா. என்ன டின்னு கேட்டா பதிலே சொல்லாம ரூமுக்கு போயிட்டா? ஏதாவது பிரச்சனையா? ஏதாவது தப்பு பண்ணிட்டாளா? இவளைப் பத்தின கவலை தான் எனக்கு”, என்று கவலையுடன் சொன்னாள் அரசி.
“பிரச்சனை எல்லாம் இல்லை அத்தை. சும்மா ஒரு சண்டை. சின்ன சண்டை தான். சீக்கிரம் சரியாகிரும். நான் பாத்துக்குறேன். நீங்க வொரி பண்ணாதீங்க. அதிக அன்புனால வந்த சண்டை தான். பெருசா ஒண்ணும் இல்லை”, என்று அரசிக்கு தைரியம் சொன்னவன் அவளைத் தேடி அவளுடைய அறைக்கு சென்றான்.
அங்கே கட்டிலில் குப்புறப் படுத்து அழுது கொண்டிருந்தாள் ஜானகி. அவள் விடும் கண்ணீர் அவனுக்கானது என்று எண்ணி பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. அவள் மனதில் அவன் இல்லை என்றால் அவளுக்கு கோபமும் வெறுப்பும் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் அவன் அவளுடைய மனதில் இருப்பதால் தான் அந்த கண்ணீர் வெளியே வந்தது. அதை உணர்ந்த ஸ்ரீராம்க்கு நிம்மதியாக இருந்தது.
“ஜானு”, என்று அழைத்த படி அவன் அவள் அருகே அமர அவன் குரல் கேட்டு விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். அவன் அவளை சமாதானமாக பார்க்க அவளோ அவளை முறைத்துப் பார்த்தாள்.
அவன் பேச ஆரம்பிப்பதற்குள் “எங்க டா வந்த? இருக்கேனா செத்தேனான்னு பாக்க வந்தியா? எங்க உன் காதலி? அவ கூடவே போயிருக்க வேண்டியது தானே? இங்க எதுக்கு வந்த?”, என்று கண்ணீருடன் கேட்டாள்.
“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு ஜானு”
“என்ன கேக்கணும்? இனி நீ சொல்ற பொய்யை எல்லாம் கேக்க நான் இளிச்சவாய் இல்லை. என்னை விட்டுரு பிளீஸ். நீ அவளையே கல்யாணம் பண்ணிக்கோ. என்னை உப்புக்கு சப்பாணி மாதிரி வச்சிக்கிட்டு அவ கூடயும் கடலை போடுற. உன்னை உனக்கு பிடிக்கலை. வீட்ல உள்ளவங்க கிட்ட எல்லாம் நான் பேசிக்கிறேன். நீ வேண்டாம். இங்க இருந்து போயிரு ராம்”
“இப்படி நான் பேச வரதைக் கேக்க கூட செய்யலைன்னா என்ன அர்த்தம் ஜானு?”, என்று சற்று கோபமாக கேட்டான்.
“எதுக்கு கேக்கணும்? என்னை எப்படியும் ஏமாத்த தான் போற?”
“என் மேல உனக்கு நம்பிக்கையே வராதா டி?”
“நம்பிக்கை வர மாதிரி நீ என்ன செஞ்சிருக்க? இன்னைக்கு கூட நீ தானே அவளை அங்க வரச் சொன்ன? அதான் சரியான நேரத்துக்கு வந்திருக்கா”
“ஏண்டி காதலியை யாராவது பொண்டாட்டி கூட இருக்கும் போது வரச் சொல்லுவாங்களா?”
“பாத்தியா பாத்தியா நீயே அவளை காதலின்னு சொல்லிட்ட?”
“போச்சு டா, ஏய் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி. சத்தியமா அவ எனக்கு பிரண்ட் தான் ஜானு”
“நம்ப மாட்டேன்.. நம்ப மாட்டேன்”
“ஆக இத்தனை நாள் பழகியும் நீ என்னை புரிஞ்சிக்கலை அப்படி தானே?”, என்று நிறுத்தி நிதானமாக கேட்டான்.
அவள் அமைதியாக இருக்கவும் “இதுக்கு மேல நாம சேந்து வாழுறதுல அர்த்தமே இல்லை ஜானு”, என்று சொல்லி விட்டு அவள் முகத்தையே கூர்மையாக பார்த்தான்.
அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அந்த வார்த்தையை அவள் சொல்லும் போது அவளுக்கு இவ்வளவு வலி இல்லை. ஆனால் அவன் சொல்லும் போது அவளுக்கு அதிகம் வலித்தது. அவளுடைய வேதனையை கண்டு கொண்டவன் “இவ்வளவு அன்பு வச்சிட்டு ஏண்டி பிடிவாதம் பிடிக்கிற?”, என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.
“வாழ்க்கைல நம்பிக்கை ரொம்ப முக்கியம் ஜானு. நீ என்னை நம்பனும், நான் உன்னை நம்பனும். அந்த நம்பிக்கை இல்லைன்னா வாழுறது வேஸ்ட். ஆனா நீ என்னை கொஞ்சம் கூட நம்பலை. இத்தனை நாள்ல நான் எவ்வளவோ உனக்கு விளக்கம் கொடுத்துட்டேன். ஆனா அதை நீ காது கொடுத்து கேக்கவே இல்லை. அவ அப்படி பேசினது எனக்கு எப்படித் தெரியும்? இத்தனை நாள்ல நீ இதை என் கிட்ட சொன்னியா? உன்னை பாத்ததுல இருந்து நீ தான் என் மனசுல இருக்க. நீ என்னைத் திட்டினதுக்கு முதல்ல உன் மேல கோபம் இருந்தாலும் உன்னை நான் ரசிச்சது உண்மை. அதுவும் உன்னை இந்த இடத்துல கை வச்சிட்டு எவ்வளவு அவஸ்தைப் பட்டேன்னு எனக்கு தான் தெரியும்”, என்று அவன் சொல்ல அவன் சொன்ன நிகழ்வு நினைவில் வந்தது அவளுக்கு. அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.
அதை ரசனையாக பார்த்தவன் மேலும் பேச ஆரம்பித்தான். “நான் உன்னை ரசிச்சது காதல் இல்லாமயா? உன்னை உண்மைலே விரும்பி தான் பாட்டி கிட்ட உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன். ஆனா நீ என்ன நம்பலை. அவ அப்படி பேசுவான்னு நான் நினைக்கவே இல்லை. நம்பிக்கை துரோகி. அன்னைக்கு பத்திரிக்கை கொடுக்க போனப்ப தான் நம்ம பிரச்சனையை அவ கிட்ட பிரண்ட்லியா பகிர்ந்து கிட்டேன். அதை வச்சு அவ இப்படி பிளே பண்ணுவான்னு நினைக்கலை. நீ இப்ப சொன்னதும் அவளை நல்லா வெளுத்து கட்டிட்டு தான் வந்துருக்கேன். இனி ரம்யான்னு ஒருத்தி என் வாழ்க்கைலே இல்லை. ஆனா நீ தான் அதை நம்ப மாட்டியே. உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் பொறுக்கி, அப்படி தானே? எத்தனை தடவை உன் கிட்ட கெஞ்சினாலும் உனக்கு என் மேல நல்ல அபிப்ராயம் வரவே செய்யாதுள்ள?”, என்று கேட்டான்.
அவள் அவனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க “அவ என்னோட நட்புக்கு துரோகம் பண்ணிட்டா. நீ என் மேல நம்பிக்கை வைக்காம நம்ம உறவை உடைச்சிட்ட. இத்தனை நாள் என்னோட போன் உன் கிட்ட இருந்துருக்கே. அதுல என்னைக்காவது ரம்யா தப்பா மெஸ்ஸேஜ் அனுப்பிருப்பாளா? அப்படி அனுப்பினா நான் அவ உறவையே முறிச்சிருவேன்னு அவளுக்கு தெரியும். அப்படி இருக்குறப்ப ஏண்டி என்னை சந்தேகப் படுற? இனி நான் உனக்கு எந்த விளக்கமும் குடுக்கப் போறது இல்லை. பிரியணும்னு நினைச்சது நீ தான். முடிவையும் நீயே எடுத்துக்கோ. என்னால் உன் நிம்மதி போச்சுன்னு சொன்ன தானே? இனிமேலாவது நீ நிம்மதியா இரு. ஒரு வேளை மனசு மாறி என் மேல நம்பிக்கை வந்தா நம்ம வீட்டுக்கு வா. இல்லைன்னா…. உன் இஷ்டம்… இப்போதைக்கு எல்லார்க் கிட்டயும் ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்ல இருந்துட்டு வருவான்னு சொல்லுறேன். அதுக்கு அப்புறம் நீயே பிரச்சனையை எல்லார்க் கிட்டயும் சொல்லிக்கோ. நான் வரேன்”, என்று சொன்னவன் வேகமாக கீழே வந்தான்.
அரசி அங்கேயே அமர்ந்திருக்க தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டவன் அரசியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அவள் கொடுத்த காபியை குடித்து விட்டு “ஒரு ரெண்டு நாள் அவ இங்க இருக்கட்டும் அத்தை. அப்புறம் வந்து கூட்டிட்டுப் போறேன்”, என்று சொல்லி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அவன் சாதாரணமாக பேசியதாலும் மகளுடைய பிடிவாதம் தெரிந்ததாலும் அரசியும் இந்த விஸயத்தை பெரியதாக நினைக்க வில்லை. அவர்களே சமாதானம் ஆவார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.
அவன் பேச்சில் திகைத்து போய் இருந்த ஜானகிக்கு தவறு பண்ணி விட்டோமோ என்ற எண்ணம் வந்தது தான். ஆனால் இதெல்லாம் உண்மையா பொய்யா என்ற பயமும் வந்தது. உண்மையிலே அந்த ரம்யா பேசிய பேச்சால் அவன் மீது அவளுக்கு நூறு சதவீதம் நம்பிக்கை வர மறுத்தது. கூடவே அவன் தன்னை இங்கே விட்டுச் சென்றதற்கும் அவள் மனது சிணுங்கியது. அவள் என்ன எதிர் பார்க்கிறாள் என்று அவளே அறிய வில்லை.
ஜானகியுடன் சென்ற ஸ்ரீராம் தனியாக வீட்டுக்கு வரவும் “எங்க டா என் மருமக? கூட்டிட்டு போன பிள்ளையை பத்திரமா கூட்டிட்டு வரத் தெரியாதா? தறுதலை. எப்ப தான் உனக்கு புத்தி வருமோ?”, என்று கேட்டார் ரகு.
அவர் அப்படிக் கேட்டதும் கடுப்பானவன் தன்னுடைய சட்டைப் பை, பேண்ட் பாக்கெட் என எதையோ தேடினான். அவர் அவனை திகைப்பாக பார்க்க “இவ்வளவு நேரம் உங்க மருமகளை சட்டைப் பையிலே தான் வச்சிருந்தேன். இப்ப தான் இறக்கி விட்டேன்”, என்று நக்கலாக சொன்னான்.
அவர் அவனை நே என்று பார்க்க “அவ வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு வறேன்னு சொன்னாள். அதான் போய் விட்டுட்டு வந்தேன்”, என்று அவரிடம் சொன்னவன் “அம்மா தலை வலிக்குது, ஒரு காபி தா”, என்று கேட்ட படி அவர் அருகில் அமர்ந்தான்.
மகனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ரகு. அவருக்கு இந்த ஸ்ரீராம் புதிது. அவன் சாதாரணமாக இல்லை என்பதை அவன் முகமே அவருக்கு காட்டியது. ஜானகியை பிரிந்ததால் தான் அவன் இப்படி இருக்கிறான் என்று அவருக்கு புரிந்து போனது. அந்த அளவுக்கு தங்களின் மகன் மனைவியை நேசிக்கிறான் என்று எண்ணி அவருக்கு நம்பிக்கை வந்தது.
ஏனென்றால் வேண்டாம் என்றவனுக்கு கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டோமோ என்ற கவலை அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. அது இப்போது அவரை விட்டு அடியோடு சென்று விட்டது.
காபி குடித்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்தவர் பின் தன்னுடைய அறைக்கு வந்து ஜானகியை போனில் அழைத்தார்.
அதை எடுத்த ஜானகி “சொல்லுங்க மாமா”, என்றாள். “ஏதாவது வீட்ல போய் உளறிட்டானோ?”, என்று அவளுக்கு பதட்டமாக இருந்தது.
“அதைக் கேக்க கூப்பிடலை மா. இவனையும் அங்கயே இருக்க வச்சிருக்கலாம்ல? உன்னை அங்க விட்டுட்டு வாழ்க்கையை தொலைச்ச மாதிரி வந்து உக்காந்துருக்கான். உன்னை இந்த அளவுக்கு தேடுவான்னு நானே நினைக்கலை மா. இந்த மாற்றம் எல்லாம் உன்னால தான். நான் அவனை அங்க அனுப்பி வைக்கவா மா?”
“இல்லை மாமா நானே வரேன்”
“சே சே, அங்க இருக்க போறேன்னு சொல்லிட்டு உடனே கிளம்பினா சம்பந்தி வருத்தப் பட போறாங்க. நீ ரெண்டு நாள் இருந்துட்டே வா. ஆனா அதுக்கு முன்னாடி இவனுக்கு போன் பண்ணி பேசு சரியா மா? நீ இல்லாத வீடு வெறுமையா இருக்குற மாதிரி எனக்கே இருக்கு. பின்ன அவனுக்கு இருக்காதா? ஸ்ரீராம் இப்படி இருந்ததே இல்லை மா. அவன் திருந்தணும்னு நினைச்ச நானே இவன் பழைய மாதிரி இருக்க கூடாதான்னு நினைக்கிறேன். இவன் இப்படி அமைதியா இருக்குறது நல்லாவே இல்லை. நீ பேசி அவனை சரி பண்ணு மா”
“சரி மாமா”
“அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். கிரி யமுனாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கான்”
“ஆஸ்பத்திரிக்கா? அக்காக்கு என்ன ஆச்சு மாமா? இல்லை மச்சானுக்கு எதுவுமா?”
“ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்லை. எல்லாம் நல்ல விஷயம் தான். இப்ப தான் கிரி கால் பண்ணினான். எனக்கு பேரப் பிள்ளை வரப் போகுது. இப்ப தான் சம்பந்திக்கும் கூப்பிட்டுச் சொன்னேன். வீட்டுக்கு வந்த அப்புறம் யமுனாவை பேசச் சொல்றேன். உனக்கும் இவனுக்கும் நேர்ல சொல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ அங்க போயிட்ட”
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அக்கா வந்த உடனே கால் பண்ணச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டு அரசியைத் தேடிப் போனாள்.