ரூபிணி அப்படி சொன்னதிலிருந்து ரஞ்சனுக்கு பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்தது. அவன் நினைத்தது ஒன்று. இப்போது நடந்து கொண்டிருப்பது ஒன்று. அர்ஜூனின் பெயரை கெடுக்க வேண்டும் என்று அவன் பட்ட பாடெல்லாம், விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.
‘இப்படியே இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சாலும் பிடிச்சுடும்… அதுக்கு முன்ன இந்த பிரச்சனையை முடிச்சாகணும்…” என்று யோசித்தவன், பிரஜேஷிற்கு அழைத்தான்.
“சொல்லு ரஞ்சன்..!” என்றான் பிரஜேஷ்.
“உடனே கிளம்பி வா பிரஜேஷ். முக்கியமான விஷயம் பேசணும்..” என்று சொல்லிவிட்டு ரஞ்சன் போனை வைக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் முன் ஆஜராகியிருந்தான் பிரஜேஷ்.
“என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்க ரஞ்சன்..?” என்றான் பிரஜேஷ்.
“எல்லாம் உன் தங்கச்சியால வந்தது. அவ மட்டும் ஒழுங்கா ஓடிப் போகாம இருந்திருந்தா, இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை இல்லை. நாம நினைச்ச எல்லாமே நடந்திருக்கும்…” என்றான் ரஞ்சன்.
“இதை சொல்லத்தான் கூப்பிட்டியா ரஞ்சன்..? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சு வந்தேன்..” என்றான் பிரஜேஷ்.
“விஷயம் இருக்கு..! ரூபிணியை நான் மேரேஜ் பண்ணிக்கனுமாம்..” என்றான் ரஞ்சன்.
“இதென்ன புதுக்கதை..? அப்படின்னு யார் சொன்னது..?” என்றான் பிரஜேஷ்.
“ரூபிணி தான் சொன்னா..!” என்றான் ரஞ்சன்.
“வாய்ப்பே இல்லை. ரூபிணி அப்படி சொல்லியிருக்க மாட்டா..” என்றான் பிரஜேஷ்.
“சந்தேகமே வேண்டாம். ரஞ்சன் என்னை கல்யாணம் பண்ணியாகணும். இது என்னோட முடிவுன்னு சொல்ல முடியாது, ஆர்டர்..” என்றாள்.
“என்ன மிரட்டுறியா..?” என்றான் பிரஜேஷ்.
“நீங்க ரெண்டு பேரும் இதை எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்கோங்க. ஆனா, எனக்கு நான் சொன்னது நடந்தே ஆகணும்..” என்றாள் உறுதியாக.
“நடக்கலைன்னா..?” என்றான் பிரஜேஷ்.
“சிம்பிள்..! ஆஸ்திரேலியால நடந்த எல்லாத்தையுமே நான் அங்கிள் கிட்ட சொல்லுவேன்.அங்க நாம எப்படி இருந்தோம்ன்னு சொல்லுவேன். அதுக்கப்பறம் என்ன செய்யனும்ன்னு அவரே முடிவு பண்ணட்டும்…” என்றாள்.
“இதெல்லாம் ரொம்ப தப்பு ரூபி..! முதல்ல எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு, இப்போ இப்படி பேசுறதுல கொஞ்சம் கூட ஞாயமில்லை. ரஞ்சன் மட்டும் தப்பு பண்ணின மாதிரி பேசுற..? நீயும் தான் சேர்ந்து பண்ணியிருக்க. அதை முதல்ல மறந்திடாத..” என்றான் பிரஜேஷ்.
“நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே..! நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் தலையாட்டுனதுக்கு ஒரே காரணம் அர்ஜூன். எனக்கு அவனைப் பிடிச்சிருந்தது. இப்போ வரைக்கும் கூட பிடிக்குது. எனக்கு அர்ஜூனை மேரேஜ் பண்ணி வைக்கிறேன்னு நீங்க தான் சொன்னிங்க. அதனால தான் நானும் நீங்க சொன்ன எல்லாத்தையும் பண்ணேன். இப்போ அர்ஜூன் உன் தங்கச்சியை மேரேஜ் பண்ணிட்டு போய்ட்டான். சோ, எனக்கு இப்போதைக்கு வேற ஆப்ஷன் இல்லை. ரஞ்சன் மட்டும் தான்..” என்றாள் கூலாக.
“நோ…! என்னால முடியாது. உன்கூட எப்படி நான்…?” என்று ரஞ்சன் எரிச்சலுடன் சொல்ல,
“ஏன்..? ஆஸ்திரேலியால என் கூட டேட்டிங் வந்தப்ப எல்லாம் உனக்கு நல்லா இருந்தது. மேரேஜ்ன்னு வரும் போது மட்டும் கசக்குதோ..” என்றாள் ரூபிணி.
“பழசை எல்லாம் பேச வேண்டாம்..” என்றான் ரஞ்சன் கோபமாக.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் முடிவெடுத்து ரொம்ப நேரம் ஆகுது. உனக்கு வேற சாய்ஸ் இல்லை ரஞ்சன். நீயே அங்கிள் கிட்ட சொல்றியா..? இல்லை நான் சொல்லவா..?” என்றாள்.
“இது உனக்குத் தேவையில்லாத விஷயம் பிரஜேஷ். எல்லா விஷயத்துலையும் மூக்கை நுழைக்காத. எனக்கு சுத்தமா பிடிக்கலை. இவனைத் தூண்டி விடுறதே நீதான். உன்னோட பிளான் எல்லாமே எனக்குத் தெரியும். அதனால நீ கொஞ்சம் அடக்கி வாசி..” என்று பட்டென்று சொன்னவள்,
“நீங்க போகலாம்..!” என்றாள் திமிராக.
“ஷிட்..!” என்று தரையை ஓங்கி மிதித்த ரஞ்சன் அதே கோபத்துடன் வெளியே வந்தான்.
“இப்ப என்ன தான் பண்றது..? இவ இப்படி திருப்புவான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. இப்போ நான் சம்மதிக்கலைன்னா, நடந்த எல்லாமே டாடிக்கு தெரிய வரும். சும்மாவே அந்த மனுஷன் என்னை நம்ப மாட்டாரு. இப்போ சுத்தமா நம்ப மாட்டாரு..” என்றான் ரஞ்சன்.
எங்கிருந்து இனி யோசிக்க..? இனி என்ன யோசித்தாலும் அது கதைக்காகாது என்று தெரிந்திருந்தும் அதை செய்யும் முட்டாள்கள்.
ரஞ்சன் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த சமயம்….
பிரஜேஷ், ரஞ்சன், ரூபிணி மூவரும் ஒன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் ரூபிணியின் மேல் ரஞ்சனுக்கு ஈர்ப்பு இருந்தது. காதலா என்று கேட்டால் சத்தியமாக இல்லை. இது வேற வகையான ஈர்ப்பு. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம், இருவரையும் நெருங்கிப் பழக வைத்தது. டேட்டிங் எல்லாம் சேட்டிங் மாதிரி போய் கொண்டிருந்தது.
மூவரும் ஒன்றாக அடிக்கடி அர்ஜூனின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால் ஏற்கனவே நடந்த பிரச்சனையில், இது தேவையில்லாத விஷயம் என்று நினைத்து அர்ஜூன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
ரஞ்சனும், பிரஜேஷும் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுக்கு எதிர்த்த பிளாட்டில் தான் ரூபிணி இருந்தாள்.
“யார் கூட பேசிட்டு இருக்க பிரஜேஷ்..?” என்றபடி வந்தான் ரஞ்சன்.
“என் சிஸ்டர் வராஹினி கூட பேசிட்டு இருக்கேன்…” என்றவன், மீண்டும் அவளிடத்தில் பேசிக் கொண்டிருக்க, எதார்த்தமாய் வந்து பார்த்தான் ரஞ்சன். வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தவளை பார்த்தவனின் மனதிற்குள் அப்படியே ஒட்டிக் கொண்டாள் வராஹினி.
“அது என் சிஸ்டர்..” என்று முறைத்துக் கொண்டே பதில் சொன்னான் பிரஜேஷ்.
“சோ வாட்..! அழகை அழகுன்னு சொல்றதில் என்ன தப்பு..?” என்றான் ரஞ்சன்.
“ஓகே வராஹி, பை..!” என்று போனை வைத்தவன்,
“அவ இப்போதான் ஸ்கூலிங்..” என்றான் பிரஜேஷ்.
“ரியல்லி..! பெரிய பொண்ணு மாதிரி இருக்காளே..” என்றான் ரஞ்சன்.
“இந்த பேச்சு எனக்குப் பிடிக்கலை..” என்றான் பிரஜேஷ்.
“ஹேய்..! இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன். ஸ்கூலிங் முடிச்சு, காலேஜ் போனதுக்கு அப்பறம் வேணும்ன்னா சொல்லவா..?” என்றான் கிண்டலாய்.
“என்ன ரஞ்சன் கிண்டலா..?” என்றான்.
“நோ பிரஜேஷ்..! நிஜமாவே செம்ம அழகு. எப்பவா இருந்தாலும் நீயே என் மச்சானா இருந்தா எனக்கு சந்தோசம் தான்..” என்றான் மறைமுகமாய்.
“இந்த பேச்சு இப்போ தேவையில்லாதது. அவளுக்கு என்ன செய்யனும்ன்னு என் பேரன்ட்ஸ்க்கு தெரியும். சோ, இனி இதைப்பத்தி பேச வேண்டாம்..” என்றான் பிரஜேஷ்.
“எனக்கென்ன குறைச்சல் பிரஜேஷ்..?” என்றான்.
“அப்போ ரூபிணி..?” என்றான் பிரஜேஷ்.
“நீ எந்த காலத்துல இருக்க..? ரூபிணி எப்படி லைப் லாங் செட்டாவா..?அவளுக்கும் அப்படி ஒரு எண்ணமே இல்லை. டேட்டிங் போறதெல்லாம் சகஜம். அதுக்காக டேட் வர்ற எல்லாரையும் மேரேஜ் பண்ணிக்க முடியுமா என்ன..?” என்றான் ரஞ்சன்.
“அதுக்காக என் தங்கச்சி வாழ்க்கையை பாழாக்க என்னால முடியாது..” என்றான் பிரஜேஷ்.
“உன்னை யார் அப்படி செய்ய சொன்னது. நாம இந்தியா போனதுக்கு அப்பறம் இதைப் பத்தி பேசிக்கலாம். அதுக்குள்ளே உன் அன்பு தங்கச்சியும் ஸ்கூலிங் முடிச்சிடுவா தானே..” என்றான் ரஞ்சன்.
“அதை அப்ப பார்ப்போம்..” என்ற பிரஜேஷ் ஆரம்பத்தில் கொஞ்சம் வராஹிணிக்காகத் தான் யோசித்தான். உண்மையை சொல்லப் போனால், ரஞ்சனின் குணம் தெரிந்து தானோ என்னவோ, அவளைப் பற்றி அதிகம் அவனிடம் பேசியதில்லை. இன்று எதேச்சையாக வந்து விட்டான் ரஞ்சன்.
அதற்கடுத்து வந்த நாட்களில், ரஞ்சன்-பிரஜேஷ் நட்பு மேலும் வலுவடைந்தது. ஒருவர் இல்லாமல் ஒருவர் எதையும் செய்வதில்லை என்னும் அளவிற்கு.
அதற்கடுத்து வந்த நாட்களை அவர்கள் ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இளைமையின் ஆட்டம் கொஞ்சம் கூடுதலாகத் தான் இருந்தது.
பிரஜேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒரு பெரிய ஹோட்டலில் நண்பர்கள் அனைவரையும் அழைத்து பார்டி கொடுத்துக் கொண்டிருந்தான் பிரஜேஷ்.
“நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் மச்சான்..” என்ற ரஞ்சன் முழு போதையில் இருந்தான். அவர்களுடன் இருந்த ரூபிணியும் மது அருந்தியிருந்தாள். பாட்டு, நடனம் என அந்த இடமே இரைச்சலுடன் இருந்தது.
அந்த ஹோட்டலில் அமர்ந்து யாருடனோ தீவிர டிஸ்கசனில் இருந்தான் அர்ஜூன். அவர்கள் பேசி முடித்து ஒரு வழியாக கிளம்ப, கிளம்பும் நேரத்தில் தான் அவர்களை கவனித்தான் அர்ஜூன். பார்த்தவனுக்கு அப்படி ஒரு கோபம்.
“இதெல்லாம் நாடு விட்டு நாடு வந்தும் திருந்தாத ஜென்மம்…” என்று மனதிற்குள் நினைத்தவன், எதுவும் சொல்லாமல் கடந்து போக பார்த்தான்.
“ஹெலோ… பிரதரே…!” என்று ரஞ்சன் போதையில் அவனை அழைக்க, திரும்பிய அர்ஜூன் அவனை முறைத்தான்.
“எந்த பிரதர்..?” என்றான் பிரஜேஷ்.
“இதோ..! இந்த மகான் தான் என்னோட பிரதர். ஐ மீன் ஒன் டாட், டூ மதர்ஸ்..” என்றான் குழறலாய்.
“அதை நீ சொல்லக் கூடாது. எங்களுக்குப் போக தெரியும்…ஆமா, இங்க எதுக்கு வந்த..? என்னை வேவு பார்க்க வந்தியா..? அப்படியே மிஸ்டர்.கார்த்திகேயன் கிட்ட சொல்லி, என்னை இன்னும் கெட்டவனா காட்டனும். அது தான உன் பிளானு..” என்றான் தள்ளாடியபடி.
“ஆமா, எனக்கு வேற வேலையில்லை…!தறுதலைங்க பின்னாடி திரிய..” என்றவன், ரஞ்சனை விலக்கி விட்டு நடந்தான்.
“பிரதரே…பிரதரே..!” என்று பின்னாடியே சென்ற ரஞ்சன், அவன் சட்டையைப் பிடித்து இழுக்க, அர்ஜூன் இழுத்துப் பிடித்த பொறுமையெல்லாம் பறந்தது.
கோபமாய் திரும்பியவன்,ரஞ்சனின் இரண்டு கன்னத்திலும் ஓங்கி இரண்டு அறை விட்டான் அர்ஜூன்.
“ஹேய்..! அவனை விடுடா..” என்று பிரஜேஷ் வர, அவனுக்கும் ஒரு அறை விழுந்தது.
“தொலைச்சுக் கட்டிடுவேன்..! ஜாக்கிரதை..! இங்க வந்தும் நீயெல்லாம் திருந்தின பாடில்லை. இதை சொன்னா, உங்கம்மா என் பையனை போல உண்டான்னு டயலாக் வேற. எப்படியோ கெட்டு ஒழி…” என்றவன் கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட்டான்.
“உன்னையவே அடிக்கிறான்..? நீயும் இப்படி நிக்கிற..?” என்றான் பிரஜேஷ்.
“நீயும் தான அடிவாங்கிட்டு நின்ன..?” என்றான் திருப்பி அவனிடம்.
“பேர் என்ன..?” என்றாள் ரூபிணி.
“என் பேர் தெரியாதா உனக்கு..?” என்றான் ரஞ்சன்.
“உன் பேர் இல்லை..! அந்த செக்சி மேனோட பேர்..” என்றாள் குழறலாய்.
“அர்ஜூன்…!” என்றான் ரஞ்சன்.
“சோ..ச்வீட்..!” என்றவள், ரஞ்சனின் மீதே சரிந்தாள்.
வெளியே வந்த அர்ஜூனுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. என்னதான் அடித்து விட்டு வந்தாலும், ஒரு பக்கம் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. அவர்கள் வரும் வரை காரிலேயே காத்திருந்தவன், அவர்களை தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்கு செல்லும் வரை, பின்தொடர்ந்து பார்த்துவிட்டு தான் சென்றான்.
“என்ன ஆஸ்திரேலியா ஞாபகமா..?” என்றான் பிரஜேஷ். அவன் கேட்ட பிறகு தான் இப்போது நடப்பிற்கு வந்தான் ரஞ்சன்.
“ம்ம்..!” என்றான்.
“நம்மளும் அங்க கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டோம். அது ஒரு காலம்..” என்றான் பிரஜேஷ்.
“என்னால ரூபியை அக்சப்ட் பண்ண முடியாது பிரஜேஷ். நினைச்சாலே ஒரு மாதிரி இருக்கு..” என்றான் ரஞ்சன்.
“உனக்கு மட்டும் அப்படி இப்படி இருந்த பொண்ணு வேண்டாம். ஆனா, என் தங்கச்சிக்கு மட்டும் எப்படியெல்லாமோ இருந்த நீ புருஷனாகனுன்னு ஆசைப் பட்ட..?” என்றான் பிரஜேஷ்.
“மச்சான்..! நான் எதார்த்தமா தான் சொன்னேன்..” என்றான் பிரஜேஷ்.
“எப்படியெல்லாமோ இருந்த நான் தான், உன் தங்கச்சிக்காக எல்லாத்தையும் விட்டேன். அதையும் நீ மறந்திடாத..” என்றான் ரஞ்சன்.
“இப்ப அதை விடு. ரூபி பிரச்னைக்கு வருவோம். அடுத்து என்ன பண்றது..?” என்றான் பிரஜேஷ்.
“என்னை எந்த விஷயத்துல எல்லாம் தறுதலைன்னு அவன் சொன்னனானோ, அந்த விஷயத்தில் எல்லாம் தறுதலையா இருந்த ஒருத்தியை அவனுக்கு கட்டி வச்சு பழி வாங்கனும்ன்னு நான் பிளான் போட்டா, அது இப்போ எனக்கே திரும்பி நிற்குது. இதை எப்படி நான் ஹேண்டில் பண்ண போறேன்னு தான் தெரியலை..” என்றான் ரஞ்சன்.
அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரஜேஷ்.
அர்ஜூனுடன் காரில் சென்று கொண்டிருந்த வராஹினிக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. ஓவர் எக்சைட்மென்ட்டாக இருந்தது. அவள் திரும்பி அர்ஜூனை பார்க்க, அவன் ஏதோ யோசனையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“அடிச்சு பல்லுகில்லு எல்லாம் பேத்துடுவேன். பேசாம வா. மனுஷனை கடுப்பேத்திகிட்டு..” என்றான் அர்ஜூன்.
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுறிங்க..? அப்படி ஒன்னும் போனாப் போகுதுன்னு நீங்க கூட்டிட்டு போக வேண்டாம்..” என்றாள் வராஹி.
“இங்க பார்..! எனக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு டென்ஷன் இருக்கு. நீயும் உன் பங்குக்கு எதையாவது செஞ்சு வைக்காத..” என்றான்.
“அப்படி என்ன டென்ஷன்..?” என்றாள்.
“நாளைக்கு காலேஜ் போகணும்..” என்றான்.
“அட ஆமாம்ல..! செமஸ்டர் வேற வருது. இந்த வருஷத்தை கம்ப்ளீட் பண்ணிட்டா.. அடுத்து பைனல் இயர் உங்க கூட தான்..” என்றாள் அவனை ரசித்துக் கொண்டே.
“என்ன சொன்ன..? பைனல் இயர் தான் எடுக்குறேன்னு உனக்கு எப்படி தெரியும்..?” என்றான் முறைப்பாக.
அவனின் கேள்வியில் சுதாரித்தவள்,
“நான் எங்க அப்படி சொன்னேன்..?” என்றாள்.
“இதோ இப்ப சொன்னியே..?” என்றான்.
“அது..அது..பைனல் இயர் உங்க கூட இருந்து தான படிக்க போறேன். அதைத்தான் அப்படி சொன்னேன்..!” என்றாள் சமாளிப்பாக.
“அது தான் என்னோட பயமே..! எந்த காரணத்தை கொண்டும், நம்ம விஷயம் காலேஜில் தெரியவே கூடாது. அப்படி தெரிஞ்சது நீ வேற ஒரு அர்ஜூனைத் தான் பார்ப்ப..” என்றான் அர்ஜூன்.
“கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன் சார்..!” என்றவள்,
“ஆனா, உங்களை சொல்ல வைப்பேன் சார்..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“ஷாப்பிங் மால் தான் போறோம்..! என்னென்ன வேணுமோ வாங்கிக்கோ..” என்றான்.
“அதை கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னாதான் என்ன சார்..? எப்பப் பார்த்தாலும் இப்படி கடுவன் பூனை மாதிரியே பேசுறிங்க..?” என்றாள்.
அவள் பேச்சை மனதிற்குள் ரசித்தாலும்,வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“உன்னோட புக்ஸ் எல்லாம் எங்க இருக்கு..?” என்று பேச்சை மாற்றினான் அர்ஜூன்.
“அதெல்லாம் எங்க வீட்ல தான் இருக்கு..” என்றாள்.
“அப்ப வேண்டாம்..!” என்றான்.
“சார்..! செமஸ்டர் வந்திடுச்சு. நோட்ஸ் எல்லாமே அங்க தான் இருக்கு..” என்றாள்.
“உன் பிரண்ட்..! குருவை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லிடு..” என்றான் அர்ஜூன்.
“நானே போய்..” என்று இழுத்தாள்.
“தென், உன்னோட பிரியம். ஆனா, போனா அங்க தான் இருக்கணும். திரும்பி வரக் கூடாது..” என்றான்.
“எப்படியும் இந்த நடிப்பெல்லாம் முடிவுக்கு வந்து தான சார் ஆகும். அப்போ நான் மறுபடியும் அங்க தான சார் போகணும்..” என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு.
“அப்போ..போகும் போது பார்த்துக்கலாம்.. இப்ப கொஞ்ச நேரம் அமைதியா வா” என்றான்.
“அப்ப கூட கடைசி வரைக்கும் என்கூடவே இருன்னு சொல்ல, உங்களுக்கு மனசு வரலைல..” என்று மனதிற்குள் நினைத்தவள், அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவள் பார்ப்பதில் கடுப்படைந்தவன், சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.