Skip to content
Post Views: 7,378
மகன் தயாராகி வந்திருக்க, “எங்க கிளம்புற?” என்றார்.
“இங்க பக்கத்துலதான், சின்ன வேலைதான், பத்து நிமிஷத்துல வந்துடுவேன். வந்ததும் சாப்பிட்டு சென்னை கிளம்பனும்”
“சென்னைக்கா? கல்யாணம் செய்துட்டு நீ பாட்டுக்கு சென்னைக்கு கிளம்பினா என்ன அர்த்தம்?”
“நான் இன்னைக்கு சென்னை கிளம்பனும்னு நேத்தே உங்ககிட்ட சொல்லியிருந்தேன். கல்யாணம் திடீர்னு நடந்த விசயம். அதுக்காக கமிட் ஆன ஒர்க்கை விட முடியாதில்லை ம்மா”
Advertisement
“தாலி கட்டிட்டு பிள்ளையை விட்டுட்டு போய்ட்டா, பழி வாங்க தாலிதான் கட்டனுமானு அந்த பிள்ள சொந்தக்காரங்க கேட்க வரமாட்டாங்களா? என்னாலலாம் அவங்ககிட்ட பேச முடியாது. நீயே இருந்து எல்லாத்தையும் முடிச்சு வச்சிட்டு போ”
“ஓ… பேச முடியாதா? சரிங்கம்மா. அவங்க வந்து கேட்டாங்கனா எனக்கும் என் மகன் தாலி கட்டினதுக்கும் ஏதும் சம்பந்தமில்லைனு சொல்லிடுங்க” என்றான் வெகு இயல்பாக.
“எல்லாமே ஈஸியா போச்சில்ல உனக்கு? முதல்ல உனக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கானு சொல்லுடா?” என்றார் கண்ணீரோடு.
Advertisement
“சம்பந்தம் இல்லாமலா இங்க வந்துருக்கேன்? நீங்க என்னை எப்படி நினைச்சாலும் எனக்கு நீங்க முக்கியம்தான்ம்மா. ஆனா என்ன? சில விசயங்களை ஜீரணம் பண்ண டைம் தேவைப்படுது.
Advertisement
நேத்து வரைக்கும் இந்த உலகத்துல நம்ம குடும்பத்தைத் தவிர வேற யாரும் எனக்கு முக்கியமில்லை. ஆனா இன்னைக்கு நம்ம கூட்டுல பொன்மணியும் சேர்ந்துருக்கா.
அவ சம்பந்தப்பட்டவங்ககிட்ட உங்களால பேச முடியாதுனு சொல்றிங்க, உங்களை கம்ப்பல் பண்ண எனக்கு பிடிக்கல. அப்போ நான் இப்படித்தான பேசியாகனும்? நான் வேற என்ன பண்றது?” என்றான் பொறுமையாகவே.
“அதுக்காக உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவளையே எப்படிடா” எனும்போதே “ஏத்துக்கிட்டுதான் ஆகனும் செல்லம், நம்ம மகன் சந்தோசத்துக்காக இதையாவது செய்வோம். இனி வாக்குவாதம் பண்ணாத” என மனைவிக்கு கட்டளையிட்டார் வில்வராஜ்.
Advertisement
“அப்பா பைக் கீ எங்க இருக்கு?”
கவுன்சிலர் குடும்பத்தோடு பொன்மணிக்கு தகறாரு ஆகியிருக்க, தற்போது வெளியில் சென்றால் மகனுக்கு ஏதும் ஆபத்தாகிடுமோ என, “எது வரைக்கும்ப்பா?” என்றார்.
“சத்யப்ரகாஷை பார்க்க போறேன்ப்பா”
“இனி எதையும் தாங்குற சக்தி இல்லப்பா” என்றார்.
“பொன்மணிக்கும் சக்தி இருக்காதுதானப்பா? இவ்வளோ பிரச்சனை நடந்துருக்கு. அவனை பழி வாங்கியிருக்கா, நிச்சயம் அவன் எதாவது ப்ளான் பண்ணுவான். என்னால அப்படியே விட்டுட்டு போக முடியாதுப்பா” என்றான்.
செல்லம்மாள் எதே சொல்ல வர, திருனேஷ்வரனுக்கு அழைப்பு வந்தது. “ம்மா, முக்கியமான கால் பேசனும், நம்ம விசயத்தை அப்புறம் பேசலாம்” என்று அறைக்குள் சென்றான்.
சுந்தரம்தான் அழைத்திருந்தார். திருனேஷ்வரன் நேற்றே சென்னை கிளம்பவேண்டியது. அன்னையின் வற்புறுத்தலுக்காக ஓரிரவு தங்கியிருந்து காலை கிளம்புவதாக இருந்தான். ஆனால் இன்று நடந்த நிகழ்வுகளில் இரவு நடக்கவிருக்கும் மீட்டிங்கைப் பற்றி பேச மறந்திருந்தான்.
“இன்னும் சேலத்துல இருக்கியா? நைட் மீட்டிங் இருக்கு நியாபகம் இல்லையா?” என கடுகடுத்தார் சுந்தரம்.
“சார், தவிர்க்க முடியாத சூழ்நிலையாலதான் கிளம்ப முடியாம ஆகிடுச்சு, நைட் பதினொரு மணிக்குத்தான மீட்டிங்? நான் பத்து மணிக்குள்ள ஜாயின் பண்ணிக்குவேன்”
“நீ ஜாயின் பண்ணிப்ப, என் மருமகன் என்ன பேசனும்னு எப்போ சொல்வ? அவன் ப்ரிப்பேர் ஆக வேண்டாமா?”
“ஓ… அதைகூட நான்தான் சொல்லனுங்களா?” என எரிச்சலோடு சொன்னவன், “சரி நான் இப்போ ப்ரிப்பேர் பண்ணி மெயில் பண்றேன், உங்க மருமகன் மெயில் ஐடி அனுப்பிவிடுங்க” என்று இணைப்பை துண்டித்து, ராஜ்குமார் பேசுவதற்கான விசயங்களை யோசித்து டைப் செய்ய ஆரம்பித்தான்.
அரைமணி நேரத்தில் அனுப்பி வைத்து அதனை சுந்தரத்திற்கு தெரிவித்து, மொபைலை பெட்டில் வைத்தவனுக்கு பொன்மணியின் நியாபகம் வந்தது.
சத்யப்ரகாஷை பழிவாங்கும் எண்ணத்தை இத்தோடு நிறுத்திக்கொள்வாளா? எங்கு வேலை செய்கிறாள்? அல்லது வீட்டில் இருக்கிறாளா? இல்லை படிக்கிறாளா? அன்றாடங்களில் ஈடுபடும்போது வழியில் அவனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது? என நினைத்திருக்க, சுந்தரத்திடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.
“ராஜ்குமாருக்கு டௌட்டாம், நீ சென்னை எப்போ கிளம்பற?”
“சொன்ன டைம்க்கு கரெக்ட்டா அங்க இருப்பேன் சார். ராஜ்குமாருக்கு டௌட்னா அவரை கால் பண்ண சொல்லுங்க” என்று இணைப்பை துண்டித்தான்.
இரண்டு நிமிடத்தில் ராஜ்குமார் அழைக்கவே, கால்மணி நேரம்வரை அவனுக்கு சொல்லிகொடுத்து, வெளியே வந்தான்.
“அந்த தண்டி மஞ்சக்கட்டியோட தாலியை கட்டியிருக்கான், கயித்துலயிருந்து மஞ்சக்கட்டி விழுந்துடுச்சுனா ஆகாதுங்க” என கணவனிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் செல்லம்மாள்.
ஐந்துரூபாய் மஞ்சள் கயிறென்றாலும் அதற்கிருக்கும் மகத்துவமும் மதிப்பும் தனிதான் என்பதால்தான் ஊரார் முன்னே தாலியை கட்டினான் பொன்மணியின் கழுத்தில்.
அன்னையின் பேச்சை கேட்டவனுக்கு, மாங்கல்யம் பற்றி தன்னிடம் எதாவது கேட்பார்களா என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் கணவனிடம் பேசிக்கொண்டிருந்த செல்லம்மாவிற்கு தற்போது மகனிடம் அதனை சொல்ல வாய்வரவில்லை.
சத்யப்ரகாஷை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் பொன்மணியை பார்க்க வேண்டும் என சில நிமிடங்கள் யோசித்திருந்தவன், “வெளில போய்ட்டு வரேன்ம்மா” என்றான்.
“எதாவது பிரச்சனை ஆகிடப்போகுது திருனேசு” என்றார் வில்வராஜ்.
தந்தையின் கவலையை உணர்ந்து, “அவன் என்ன பெரிய இவனாப்பா? எதுக்கு இவ்வளோ பயப்படுறிங்க?” என்றான்.
“இல்லப்பா, அவங்க பெரிய இடம், எம்.எல்.ஏ சம்மந்தி. உன்மேல பொய் கேஸ் போட்டுடுவாங்களோனு பயமா இருக்குப்பா” என்றார் உண்மை கவலையாக.
“அப்படியே அவங்க முயற்சி பண்ணினாலும் பொய் கேஸ்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குற அப்பாவி திருனேஷ்வரன் எப்போவே செத்துட்டான்ப்பா, இப்போ இருக்கிறவன் ஒரு விசயத்தை பத்து விதமா யோசிக்கிறவன்.
எரியுறதை எடுத்தா கொதிக்கிறது நிக்கும்னு நம்ம பாட்டிதான் அடிக்கடி சொல்லும், எவன் தலைகீழா ஆடுறானோ அவன் ஆணிவேரை பிடிங்கிட்டோம்னு வைங்க… ஆடுறவன் ஆட்டம் தன்னால நின்னுடும். நீங்க பயப்படாதிங்க. எதுவானாலும் நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்” என தைரியமளித்தான்.
“சாப்பிடு திருனேசு”
“பொன்மணியை பார்த்துட்டு வந்துட்டு சாப்பிடறேன்ம்மா”
“அங்க எதுக்கு போற?” பட்டென கேள்வி வெளிவர, திருனேஷ்வரன் அமைதியாக பார்க்க, “பொண்டாட்டியை பார்க்க காரணம் வேணுமா செல்லம்?” என மனைவியை அடக்கினார் வில்வராஜ்.
பொன்மணி வீட்டின் முன்னே வந்து பைக்கை நிறுத்தியவன், சில நொடி யோசனைக்கு பின்னே வாயிலை நெருங்கினான். கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் யாரும் முன்னறையில் இல்லை ஆதலால் அழைப்பு மணியை ஒலிக்கவிட்டான்.
பொன்மணியின் அன்னை வெளியே வந்தார். திருனேஷ்வரனை கண்டதும், பேச்சு வரவில்லை. செய்வதறியாது அஞ்சுகம் நின்றிருக்க, மீண்டும் அழைப்பு மணியை ஒலிக்கவிட்டான்.
சத்யப்ரகாஷால் ஏதும் பிரச்சனையோ என அசோகன் பொன்மணி இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களும் திருனேஷ்வரனை உள்ளே அழைக்கவில்லை.
அழைக்கக்கூடாதென்றில்லை, அடுத்து என்ன பிரச்சனையோ என்ற பயம் இருக்க, அதிர்ந்துதான் பார்த்திருந்தார் அசோகன்.
“சத்யப்ரகாஷ் எதாவது பிரச்சனை செய்தா உடனே எனக்கு கால் பண்ணனும்” என அசோகனுக்கு கட்டளையிட்டு தனது எண்ணை சொன்னான்.
அசோகன் சரியென்பதாய் தலையசைக்க, “மொபைல் எடுத்துட்டு வந்து என் நம்பரை சேவ் பண்ணுங்க. மறந்துடப்போறிங்க” என்றான்.
திருனேஷ்வரன் மருமகனாக வருவான் என்றெல்லாம் கனவிலும் நினைத்திருக்கவில்லை அசோகன். அவன் மீதான குற்றவுணர்வு இன்றும் கூட குறையவில்லைதான். ஆனால் மகளை போல வெளிகாட்டிக் கொள்ளமாட்டார்.
திருனேஷ்வரன் விரும்பி தனது மகளை மணந்திருக்க மாட்டான் என்பது மனதில் உறுதியாய் இருந்த போதும், அத்தனை பேர் முன்னிலையில் தனது மகள் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்.
தற்போது சூழ்நிலை சரியில்லை, ஊரார் சொன்னது போல பழிவாங்க நடந்த கல்யாணம் என்றபோதும், பொன்மணியின் கணவன் திருனேஷ்வரன்.
தனது மருமகன் என்ற உணர்வோடு “உள்ள வாங்க தம்பி” என்றார்.
“இல்ல இருக்கட்டும்” என்றவன், பொன்மணியிடம் “உன் கையில மொபைல் இருக்குதான? சேவ் பண்ணு” என்று மீண்டும் தனது எண்ணை சொன்னான்.
திருனேஷ்வரன் எண்ணை பத்திரப்படுத்தினாள் தனது மொபைலில்.
“உன்கிட்ட தனியா பேசனும், ரூம்க்கு போய்ட்டு கால் பண்ணு” என்று இவன் கிளம்பினான் தனது வீட்டிற்கு.
ஐந்து நிமிடம் கழிந்த பின்னேயும் பொன்மணி அழைக்காமல் இருக்க, தெரு முனையில் நின்றபடி இவன் அழைத்தான் அவளுக்கு.
பொன்மணி அழைப்பை ஏற்க, “வீட்டுக்குள்ள இருக்க ரூம்க்கு போக எவ்வளோ நேரம் ஆகும்?” என்றான்.
என்ன பேசவென புரியாமல் பொன்மணி அமைதிகாக்க, “எனக்கு உன்னைப்பத்தி தெரிஞ்சுக்கனும், பேசுவியா? மாட்டியா?” என்றான்.
“ம்”
“என்ன பண்ணிட்டிருக்க?”
“சும்மாதான் உக்கார்ந்துட்டிருக்கேன்”
“நான் அதை கேட்கல, வேலை பார்க்குறியா? இல்ல படிக்கிறியானு கேட்குறேன்” என்றான்.
“வேலை பார்க்குறேன்”
“எங்க?”
“சென்னையில” என்று பொன்மணி கம்பெனியின் பெயரை சொல்ல, ‘நல்ல அறிவாளிதான் போல’ என மெச்சுதலாக நினைத்தவனுக்கு, பொன்மணி சென்னையில் வேலை பார்ப்பது மகிழ்வையும் கொடுக்க, “எப்போ ஜாயின் பண்ணின?” என்றான்.
“ஒன்றரை மாசத்துக்கு முன்ன”
“பணம் வச்சிருக்கியா? அதாவது உன் சம்பளப் பணம் வச்சிருக்கியா?”
“ம் வச்சிருக்கேன்”
“எனக்கு வேணும்”
“சரி”
“கேஷா இருந்தா எடுத்துட்டு வா, இல்லைனா கார்ட் எடுத்துட்டு கிளம்பி வா, நான் என் வீட்டு பக்கத்துல இருக்கேன்” என்றான்.
“இப்போவா?”
“இப்போதான்”
சிறையிலிருந்து வந்திருக்கிறான், கையில் பணம் இருக்காது, வேலை கிடைக்கவும் எவ்வளவு நாள் ஆகுமோ? அவசர பணத்தேவை போல என நினைத்தவள், “சரி வரேன்” என்று தந்தையிடம் விசயத்தை சொல்லி கிளம்பினாள்.
ஐந்து நிமிடத்தில் பொன்மணி வர, “உக்காரு” என்றான்.
பொன்மணி தயங்க, “ம்ப்ச்… எனக்கு டைம் ஆகுது, உக்காரு” என்றான் அதட்டலாக.
உங்களோட வாழ முடியாது என்று தீர்க்கமாக சொல்லிவிடும் வாய்ப்பாக நினைத்தபடி, “எங்க வரனும்னு சொல்லுங்க, ஸ்கூட்டி எடுத்துட்டு வரேன்” என்றாள்.
முறைத்தவன், “அதுக்கெல்லாம் டைம் இல்ல, வரியா? இல்ல வேற யார்கிட்டயும் ஹெல்ப் கேட்டுக்கட்டுமா?” என்றான்.
“இல்ல நானே வரேன்” என்று பைக்கில் அமர, காமலாபுரம் ஊரைத்தாண்டி கால்மணி நேரம் பயணம் செய்தபின்னே சிறிய நகைக்கடை முன் பைக்கை நிறுத்தினான்.
பொன்மணி இறங்க, தானும் இறங்கியவன், “உனக்கு தேவையானது போக எவ்வளோ பணம் வச்சிருக்க?” என்றான்.
“எழுபதாயிரம் இருக்கு”
“பணத்தை திருப்பித்தர கொஞ்சம் லேட் ஆகும், பரவால்லையா?”
“ம்”
“சரி உள்ள வா” என்று நகைக்கடைக்குள் அழைத்துச்சென்றவன், கடையில் தனது குலசாமி பெயரை சொல்லி, “மாங்கல்யம் இருக்கிறதா? இல்லை இனிதான் செய்யனுமா?” என்றான்.
வேண்டாம் என சொல்ல நினைத்து திருனேஷ்வரனை நிமிர்ந்து பார்க்க, அவன் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க, என்னவென்று அழைப்பதென்றும் தெரியவில்லை பொன்மணிக்கு.
“நிறைய இருக்கு சார், பாருங்க” என்று பணியாளர் எடுத்து காண்பிக்க, அதில் தனது அன்னை போட்டிருந்ததை போல ஒன்றினை எடுத்தவன், “இது எவ்வளோ ஆகும்?” என்றான்.
நாற்பதாயிரம் என விலையை சொன்ன பணியாள், மாங்கல்யத்தோட போட வேறு சிலதையும் சொல்ல, “கம்ப்பல்சரி போடனுமா?” என்றான்.
“இதெல்லாம் தேவையில்லைனாலும் இரண்டு குண்டுமணியாவது போடனும்” என்று அவர் சொல்ல, “மொத்தமாக எவ்வளோ ஆகும்?” என்றான்.
“அறுபதாயிரம் கிட்ட வரும் சார்”
“சரி பேக் பண்ணுங்க” என்றான்.
“எனக்கா வாங்குறிங்க?”
“இது தாலி, உனக்கில்லாம பின்ன யாருக்கு?”
“ப்ளீஸ் வேண்டாம்ங்க, என்னால”
“உன்னால என்னோட வாழ முடியாது, அதான? அதான் தாலி கட்டும்போதே சொல்லிட்டியே, மஞ்சக்கட்டி ரொம்ப பெருசா இருந்தது, உனக்கு உறுத்தும்னுதான் இதை வாங்குறேன்.
மத்தபடி இந்த தங்கத்தாலியை போட்டாத்தான் நீ என் பொண்டாட்டினு இல்ல, நமக்கு கல்யாணம் நடந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.” என்றான்.
கடைக்காரர் அழைக்க, “பணத்தை கொடுத்துட்டு வாங்கு” என்றான்.
பொன்மணி மாங்கல்யத்தை வாங்கியதும், அழைத்துக்கொண்டு கூட்டமில்லாத கோவிலுக்குள் அழைத்துச்சென்றான்.
“இங்க வந்து உக்கார்ந்து நீ கட்டியிருக்க கயித்துல இருக்க மஞ்சக்கட்டியை எடுத்துட்டு மாங்கல்யத்தை கோர்த்துவிடு” என்றான்.
என்ன சொல்வாள்? செய்யவும் மனமில்லை, செய்யாமல் தன்னை விடமாட்டான் என்றும் தயக்கமாகிட, அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“டைமாகுது எனக்கு” என இவன் அதட்ட, “இல்ல, இன்னொரு நாளைக்கு” எனும்போதே, “இப்போவே போடு” என்றான் கட்டளையாக.
அப்பொழுதும் பொன்மணி தயங்க, “இங்க கொடு” என்று மாங்கல்யத்தை வாங்கியவன், பொன்மணி கயிற்றில் கை வைக்கப் போக, அவனின் ஸ்பரிசத்தை விரும்பாமல், “நானே போட்டுக்கறேன்” என்றாள்.
“சீக்கிரம்” என்று மீண்டும் பொன்மணி கையில் திணித்தான் மாங்கல்யத்தை.
கயிற்றைப் பிரித்து மாங்கல்யத்தை கோர்க்கும் வரை காத்திருந்தவன், “இங்க கொடு” என்று இறைவன் சன்னிதி முன்னே அழைத்துச் சென்று பொன்மணி கழுத்தை சுற்றி தனது கையை கொண்டு வந்து, பொறுமையாக மூன்று முடிச்சிட்டு, அங்கே தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து பொன்மணியின் நெற்றிக்கு இட்டுவிட்டு தானும் இட்டுக்கொண்டான்.
பின்னே பொன்மணியோடு நெருங்கி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டவன், “ம்ச்… அடடா, மெட்டி வாங்காம விட்டுட்டோமே” என்று வருந்தி,
“சரிவிடு, அதையாவது என் சம்பாத்தியத்துல வாங்கி போட்டுவிடறேன்” என்றவன், “நீயா விருப்பப்பட்டு என்னோட வாழ ஆரம்பிக்கிற அன்னைக்கு போட்டுவிடறேன்” என்றான் மலர்ந்த முகத்தோடு.
தலைகவிழ்ந்த பொன்மணி, “எனக்கு உங்களோட பேசனும், ஆனா உங்க எதிர்க்க பேச வரமாட்டேங்குது” என்றாள் அழுகையை உள்ளடக்கியபடி.
“என் முன்னாடி எப்போ பேச வருதோ அன்னைக்கு பேசலாம், இப்போ டைம் ஆகுது, கிளம்பலாம் வா”
“நீங்க போங்க, நான் போய்க்கறேன்”
“என்னை மன்னிக்காதிங்க, தண்டனை கொடுங்க, திட்டுங்க, சாபம் விடுங்கனு அன்னைக்கு என்னென்னவோ சொன்ன? இதெல்லாம் செய்ய நீ என்னோட இருக்கனும்ல? கொஞ்ச நேரம் என்னோட சேர்ந்து நடக்கக்கூட மறுக்குற? அப்போ அன்னைக்கு சொன்னதெல்லாம் வெறும் பேச்சுதானா?”
“தண்டனைதான் கொடுக்க சொன்னேன், தாலியா கட்ட சொன்னேன்?”
“இதையே தண்டனையா நினைச்சுக்கோ, வா” என கைப்பிடித்து அழைத்து வந்தான் பைக் அருகே.
பொன்மணி நின்றேயிருக்க, “ஷப்பா… பைக்ல உக்காரவும் க்ளாஸ் எடுக்கனுமா?” என சலித்துக்கொள்ள, பின்னே பைக்கில் அமர்ந்தாள்.
பொன்மணியின் முகம் வாடியே இருக்க, “தண்டனை பத்தலைனா சொல்லு, பத்து பதினஞ்சு பிள்ள பெத்துக்கனும்னு சாபம் விடறேன், அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு சாபம் விடவும்தான விரும்பி கேட்ட” என்றான் சின்ன சிரிப்போடு.
பொன்மணியின் மூக்கு நுனி பெரிதாய் விடைக்க, உதடுகளும் துடிக்க, பேச்சை மாற்ற எண்ணி “எப்போ சென்னை போகனும்?” என்றான்.
“நாளைக்கு”
“இனி சத்யப்ரகாஷ் விசயத்துல என்னை கேட்காம எதுவும் செய்யக்கூடாது” என்று அறிவுரைகளை வழங்கி பொன்மணியை அவளின் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினான்.
error: Content is protected !!