செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 04_2
அவள் மீண்டும் சிறைப்படப் போவது தெரிந்தது. மருத்துவமனை வாயிலில் ஒரு தடியன் காத்திருந்தான். முன்பே பார்த்திருக்கிறாள் இவனை. இவன் தான் அவள் காவலாளி. தப்பிக்க முயன்று பல முறை இவனிடம் பிடிபட்டு அடியும் மிதியும் இடியாய் வாங்கியதுண்டு! இதற்காகவே அவனைத் தீனி போட்டு வளர்த்திருப்பார்கள் போலும்.
கௌரவிடம் வாய் திறந்தாளில்லை. அவனிடம் சொல்லி என்ன சாதிக்கப் போகிறாள்? இடுப்பொடிந்து கிடப்பவனிடமிருந்து என்ன உதவி எதிர்பார்க்க முடியும்?
விபத்து நடந்து மூன்று மாதம் பின் கௌரவ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். நரக வாழ்வு முடிய, வீட்டில் அவனோடு இருந்தாள். அவள் கண்களில் ஜீவனில்லை. எழுந்து நிமிர்ந்து நிற்க உடலில் திராணி இல்லை. வாழ்க்கையில் பிடிப்பும் இல்லை!
அவன் வேலைக்குச் செல்லவில்லை. செலவைப் பார்ப்பது யார்? கேட்டால் ‘முதலாளி’ என்றான் கௌரவ்.
எந்த முதலாளி? கிழவனோ? கிழவன் தான் இது எல்லாவற்றுக்கும் காரணமா? பெரிய மனிதனாம் பெரிய மனிதன்!!
முதலாளி செலவிற்குப் பணம் தந்திருக்க… ஏன் அந்தாளுக்கு இத்தனை கரிசனை? கௌரவ் கேட்க வேண்டாமா? கேட்கவில்லை. கிடைத்தது வரை லாபம் என்றிருந்து விட்டான் போலும். ஓரு வேளை கஞ்சிக்கு வழி இல்லாதவனுக்கு மூன்று வேளை உணவைக் கண்டதும் கோமலும் தெரியவில்லை போலும்.
மருந்து செலவு இருக்கவில்லை. நல்ல ஆகாரம் உட்கொண்டால் போதும் என்றுவிட்டனர். ஏனாம் அப்படி? மருந்தில்லாமல் கூட உடல் குணமாகுமா? அவளுக்குப் புலப்படவில்லை.
எப்படியோ… ஆகாரத்திற்கு அவனுக்குப் பிரச்சினை இல்லை. அவளுக்கு ஓநாய்கள் பிரச்சினை இல்லை.
ஒருவழியாய் கோமலிற்கு இரவுகளின் ஓலம் அடங்கியது. வெளியே அனுபவித்ததை கௌரவிடம் அனுபவித்தாள். “ப்லீஸ் கோமல்..” என்றான். அது தான் வித்தியாசம். முன் போல் அவனிடம் சட்டம் பேசவில்லை. நண்பர்கள் என்று கோடு கிழித்து கோட்டிற்கு அந்த பக்கம் நிற்கவில்லை.
எல்லோருமாக அடித்துக் கொன்ற செத்த பாம்பை கணவன் என்று கூறிக்கொண்டவன் அடிக்கிறான். அடி என்று விட்டுவிட்டாள். இரவு தூக்கத்தின் நடுவே தினமும் நடுநடுங்கி எழுந்தாள். அதுவும் மாறவில்லை.. பயமும் தணியவில்லை.
பல பகல்களும் பல இரவுகளும் கரையக் கையிருப்பும் கரைந்தது. உடல் வலிகள் குறைந்திருக்க அவளும் வாழ முயன்றாள். கொஞ்சம் தெளிந்திருந்தாள்.
நாட்கள் கடந்து செல்ல, நடக்க ஆரம்பித்தான். ‘அதற்குள்ள?’ என்று தான் பார்த்தாள்! வந்து மாதம் ஒன்று கூட முடியவில்லை. இரண்டு வாரம் இருக்குமா? அதற்குள் சரி ஆகிவிட்டானா? அவன் ‘ஆம்’ என்று தான் கூறினான்.
[the_ad id=”6605″]
ஒரு காலை ஊன்றினான். மற்றது வலித்தது என்றான். இருந்தும் மீண்டும் பெரியவர் வீட்டில் வேலைக்குச் செல்ல அவன் முனைய, அவள் ஒத்துக் கொள்ளவே இல்லை.
அந்த மிருகம் பற்றிக் கூறினாள். அவன் பதறி போக.. முழுவதுமாக சொல்லாமல் மென்று விழுங்கினாள். அவள் வலியை அவனுக்குக் கொடுக்கவில்லை.
இடம் மாறி வேறு இடம் சென்றனர். பண்ணை வீட்டில் அவன் வேலை புரிய அவளையும் அங்குச் சேர்த்துவிட்டான். இரண்டு நாளில் அவனுக்கு வெளி வேலை என்று கிளம்பினான்.
“டவுனுக்கு போறேன் கோமல். உனக்கு ஏதாவது வேணுமா?” ஆசையாய் கேட்டான். கூட்டி வந்ததோடு சரி.. அவளுக்காக ஒன்றும் செய்தது இல்லையே..
“எனக்கு இவங்க பேசரது எதுவுமே புரியலை. நீ எங்கேயும் போகாத” என்றுவிட்டாள்.
“கோமல்…” என்றான்.
அந்த ஒற்றை வார்த்தைக்காக உயிரையும் கொடுப்பாளே. அப்படி ஒரு காதல் அதில் ஒழுகும். மனம் நொந்து சாவை எதிர்பார்த்து உண்ண மறுத்துக் கிடந்த நேரமெல்லாம்.. எப்படி தான் அவனுக்கு தெரியுமோ.. கனவில் வந்து இப்படி தான் கூப்பிடுவான்.
“கோமல்..” என்பான்.
“நான் இருக்கேன்..” என்பான்.
“எனக்காக இரேன்..” என்பான்
கண்விழிக்க அவன் இருக்க மாட்டான். இருந்தும் தனக்காக.. தன்னை நம்பி ஒருவன் இருக்கிறான் என்று எழுந்து அமர்ந்துவிடுவாள்.
மயக்கத்திலும் சரி… கைகள் கால்கள் கட்டி பாதி மயக்கத்தில் கிடந்த காலத்திலும் சரி.. இந்த ஒரு வார்த்தையைக் கேட்கக் காத்துக் கிடப்பாள். வாழ்வின் வலி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும் அவளுக்கு. கன்ன கதுப்பை விரலால் அளந்து கொண்டே பேசுவான். அவனை தவிற அவளிடம் ஒருவரும் இனிய வார்த்தை பேசுவதில்லையே!
இன்றும் கூப்பிட்டான்.. அதேபோல் “கோமல்..” என்று.
“வேலைன்னு வந்திட்டா.. இத செய்ய மாட்டேன் அத செய்ய மாட்டேன்னு சொல்ல முடியாது. நான் வர நேரமாகும் போல. இருட்டிடும். நீ எங்கேயும் போகாத. நான் வந்து கூப்பிட்டுக்கிறேன்” என்றான்.
“கண்டிப்பா தூங்கப் போகிறதுக்குள்ள வந்திடுவேன்” என்றான். மதியம் போல் கிளம்பினான்.
அவன் மகுடி ஊத, பாம்பாய் தலையாட்டி நின்றாள். வேறு வழி? அடுத்த நாள் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?
சொன்னபடியே அவனும் வந்தான், வைகறைப் பொழுதில்! அவன் வந்து சேரும் முன் அவள் அழுது முடித்திருந்தாள். மனதோடு தேகமும் வலித்தது. அவளுக்கு ஒன்று புரியவில்லை. ஏன் அவள் செல்லும் இடமெல்லாம் இப்படி என்று?
அவர்கள் செல்லும் இடம் தவறான இடமா? இல்லை அவள் சென்றபின் அவள் அவல நிலை கண்டு அலைக்கழிக்கப் படுகிறாளா? வெண் நிலா தேகம் சிகப்பாய் மாறியிருக்க.. காயங்கள் வலித்தது.
கௌரவ் வந்து சேர்ந்ததும் அவன் மார்பை நீரில் குளிப்பாட்டிக்கொண்டே நடந்ததை அவள் உறைக்க, அவன் சண்டைக்குப் போக.. அவள் கண்முன்னே அந்த நிலவின் வெளிச்சத்தில் அவனை அடித்து வெளியே தூக்கிப் போட மிரண்டு போனாள். அவளை தரதரவென இழுத்து செல்ல அவள் பார்வை எல்லாம் வெளியே தூரத்தில் அடிவாங்கிக் கொண்டிருந்தவன் மேல்.
இருட்டில் அவன் என்னவானான் என்று தெரியவில்லை. உயிரோடு இருக்கிறானா? அதுவும் தெரியவில்லை.
அவனிடம் சொல்லி இருக்கக் கூடாதோ..
உள்ளே இழுத்து செல்லப்பட்டவள், மீண்டும் சிறைப் பட்டாள். ரணமாய் நாட்கள் நகர்ந்தது. தப்பிச் செல்ல முயல., அடியும் மிதியும் இடியாய் இறங்கப் பெண் சத்தமில்லாமல் அழுதாள். இன்னும் அதே நீல நிற பத்மினி தான் இழுத்துச் சென்றது அவளை.
பல வாரங்கள் தப்பிச் செல்ல வழி தெரியாமல் கண்ணீரில் கரைந்தது. மீண்டும் கௌரவ் வந்தான்…
நொண்டி நொண்டி நடப்பது நிரந்திரமாயிருந்தது. என்ன செய்தானோ… யார் காலில் விழுந்தானோ.. இறந்ததாய் எண்ணியிருந்தவன் அவள் கண் முன் வந்தான், ஆறு வாரங்கள் முடிந்த பின்!
இந்த இடமே வேண்டாம் என்று பாம்பேயின் புறநகர்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
[the_ad id=”6605″]
இந்த பம்பாய் தானே முன்பே வருவதாய் இருந்தது. நேரே இங்கேயே வந்திருக்க வேண்டுமோ? இந்த வலிகளோடு வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? அவளுக்கு தெரியவில்லை. ஆனால், முன் போல் இப்பொழுது சாகத் தோன்றவில்லை. நடந்ததில் இவள் தவறெங்கே? யாரோ புரிந்த குற்றத்திற்கு இவள் ஏன் சாக வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கமென்றால்.. தற்கொலை செய்தால் ஆவியாய் நிம்மதி இல்லாமல் சுற்ற வேண்டி வருமாமே? ஆவியாய் இந்த பாழாய்ப்போன உலகில் நிம்மதி இல்லாமல் அலைந்து திரிய முடியாது.
“இப்போதைக்கு இங்க இருப்போம்… கூடிய சீக்கிரம் நாம செட்டில் ஆகிடலாம். எதையும் நினைச்சு கவலைப்படாத! நான் இருக்கேன்.” என்றான்
கௌரவின் காதல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும் என்று தான் கோமலுக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் கௌரவிற்கு மறையாமல் உறைத்தாள். துவண்டு போனான். ஆனால், பழையதைப் பேசி அவளை நோகடிக்கவில்லை. அன்பான வார்த்தைகளில் குறைவில்லாமல் மொழிந்தான். இன்னும் அதிகமாய் கண்ணிற்குள் வைத்துத் தாங்கினான்.
பத்து நாள் உருண்டோடியது. உடல் வலி அடங்க… மனம் மட்டும் வருந்துவதை நிறுத்தவில்லை. என்ன முயன்றும் அவளால் நடந்த அவலங்களிலிருந்து வெளிவர முடியவில்லை. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்று தாத்தா கூறுவார். அதனால் முயல்வதை தொடர்ந்து கொண்டே இருந்தாள். ஐந்து மாதத்திற்கு மேல் நரக வேதனை… அவ்வளவு சீக்கிரம் ஆறிவிடுமா?
பேசினால்.. ஒரு நட்பின் தோள் கிடைத்தால்.. ஆறுமே..
கௌரவிடம் ஒரு நாள் நடந்ததை பற்றிப் பேச எத்தனிக்க… அவன் பதில் அவளை அசைத்தது.
ஏனோ கௌரவ் சொன்ன, “இது எல்லாம் நீ நினைக்கிற அளவுக்குத் தப்பில்ல கோமல். யோசிச்சு பாரு.. இவ்வளவு நடந்தனால உனக்கு ஏதாவது ஆச்சா? இன்னும் அழகா தானே இருக்க? வெறும் உடம்பு தானே…” என்றது நெருடியது.
அவனிடம் அதற்கு விளக்கம் கேட்டதற்கு.. “உன் மேல தப்பில்லனு சொன்னேன்.. கோமல்” என்றான்.
இது விளக்கமா? மழுப்பலா?
இப்பொழுதெல்லாம் அவன் அருகில் வந்தாலே விலகிப் போனாள். அவன் ‘ப்லீஸ்’ எல்லாம் அவளிடம் எடுபடவில்லை. ஏனோ அவன் தொட்டாலே பிடிக்கவில்லை. தோலின் கீழ் புழு ஊருவது போல் தோன்றியது. தோலைக் கிழித்து புது தோல் உடுத்திக் கொள்ள முடியாதா?
அவன் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் தெரிந்தாலும் அவள் அதைப் பொருட்டாய் எடுத்துக்கொள்ளவில்லை. இனி யாராவது அருகில் வந்தால் குரல்வளையைக் கடித்துத் துப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளுக்குள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அது கௌரவாக இருந்தாலும் சரி!
திடமான பெண். அவள் தாத்தா கொடுத்த திடமாயிருக்கும். இல்லை என்றால் ஐந்து மாதம் பின்னும் நிமிர்ந்து நிற்கத் தான் முடியுமா? தைரியமாய் வாழ்வை எதிர்நோக்க முயன்றாள்.
அவள் இருந்த பாம்பேயின் புறநகர்ப் பகுதி மிகவும் பசுமையான அழகான பூமி. வண்ணங்களைப் பல மாதங்கள் பின் கண்ணில் கண்டாள்.
இதோ அவள் கண்களின் முன் பூத்துக் குலுங்கிய செடி போல்.. அவள் வாழ்வும் துளிர்க்கும் என்ற நம்பிக்கை கொண்டாள். அது அவளாய் அவளுக்கு கொடுத்துக் கொண்ட நம்பிக்கை. ஒவ்வொரு நாளும் எதையாவது பார்த்து அதில் ஒரு அர்த்தம் கொண்டு இழுத்துப் பிடித்து நம்பித்தான் ஆக வேண்டும்.. வாழும் காலம் வரை!
ஒன்றை மட்டும் எப்பொழுதும் சொல்லிக் கொள்ளுவாள். “இதுவும் கடந்து போகும்!” என்று.
[the_ad id=”6605″]
கடந்து போகுமா? கடந்து தான் போக விட்டு விடுவார்களா? இன்று வரை பாம்பே-யின் இந்த பகுதியிலிருந்து ஒருவரும் கடந்து போனதாய் சரித்திரம் இல்லை. அது அவளுக்குத் தெரியவில்லை பாவம்.
இன்றும் அப்படி தான். பூமியைப் பிளந்து கொண்டு வெளியே வந்த தளிர் மீது அவள் கண் நிலைத்தது. பூமிக்குள் புதைக்கப்பட்ட சிறு விதை போராடவில்லையா அதன் வாழ்விற்கு? அதன் மேல் விழுந்து கிடந்த அழுக்கு அதன் வளர்ச்சியை.. போராட்டத்தை நிறுத்தவில்லையே..
“போராடுவேன்.. மூச்சுள்ளவரைப் போராடுவேன்.”, சொல்லிக் கொண்டாள்.
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” (சுப்பிரமணிய பாரதியார்)
அமைதியான வாழ்வு ஏன் தடம் புரண்டது? எங்குத் தவறு நடந்தது? ஏன்? எப்படி? மனம் கணக்குப் போட ஆரம்பித்தது! கோமல் சிறுமி தான். உலகம் அறியா பெண் தான்.. ஆனால் முட்டாள் இல்லையே.
தில்லியில் கால் பதித்த நாள் முதல் இன்றைய தினம் வரை நடந்த நிகழ்வுகளை வரிசைப் படுத்த ஆரம்பித்தாள்.
நிதானமாக யோசித்துக் கொண்டிருந்தவள் மனம் எதையோ கணக்குப் போட…
கூடவே இருந்தவன் மனம் வேறு எதையோ கணக்கு போட்டது. அது பெரிய தொகையை ஈட்டுக் கொடுக்கும் கணக்கு! வாடகைக்கு விட்டுக் குறைந்த லாபம் பெறுவதை விட.. அழகு கொட்டிக் கிடக்கையில் நல்ல விலைக்கு விற்றால் கொழுத்த லாபம் உடனே பார்க்கலாம் என்ற கணக்கு! அதாவது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் கணக்கு!