செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 07_2
நான்கு தெரு தள்ளியிருந்த வீட்டிற்கு கோமலைக் கூட்டிக் கொண்டு வருவதற்குள் கௌரவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. அவளால் என்ன முயன்றும் நடக்கவே முடியவில்லை. மூர்த்தி.. மூர்த்தியின் முகம் மட்டுமே அவள் சிந்தனை முழுவதும். ‘காங்கேயம் பெயர் மூர்த்தியா?’ மூர்த்தி.. மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.
‘ஏன் அப்படிப் பார்த்தார்?’ என்ன மாயமோ.. ஒரே கேள்வி தான் இருவர் மனதையும் அரித்தது…
அவள் வீட்டினுள் நுழையவும்.. தனியே அழுது வடியட்டும் என்று நினைத்தானோ என்னவோ.. கௌரவ் சென்றுவிட்டான்.
பத்து நிமிடம்.. பத்தே பத்து நிமிடம் கூட அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மூர்த்தியைப் பார்த்தே ஆகவேண்டும். தன் மேல் என்ன கோபம் என்று கேட்க வேண்டும். தன்னை அவருக்கு முன்பே தெரியுமா என்று தெரிந்து கொள்ள வேண்டும்…
கதவைத் திறந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக இரண்டு வீடு தாண்டியிருப்பாள்… பலமான ஒரு கரம் பின்னனிருந்து வாயை மூட மற்றொன்று அவள் வயிற்றை இறுக்கிப் பிடித்தது. என்ன திமிறியும் விடுபடமுடியவில்லை.
நேரே வீட்டினுள் தூக்கிப் போட்டவனைப் பார்த்தாள்… அதே தடியன். இங்கு வரும் முன் இவளைக் காவல் காத்தவன். அவன் ஒன்றும் பேசவில்லை. எப்பொழுதும் போல் அடிக்கவில்லை. கதவைச் சாத்திவிட்டுச் சென்றுவிட்டான்.
கதவைத் திறக்க முயல.. அது வெளியே பூட்டப்பட்டிருந்தது. பின் வாசல் கதவில் சத்தம் வர.. அதைத் திறக்க.. அதுவும் வெளியே பூட்டப்பட்டிருந்தது.
ஆக… அவளாய் விரும்பினாலும் இங்கிருந்து போக முடியாது. இன்று வரை சிறையிலா இருந்தாள்? வெளியே செல்ல பிடித்தமின்மை நிமித்தம் வீட்டில் இருக்கவில்லையா? சிறை வைத்திருப்பது யார்? தினமும் அவள் அரியணையிலிருந்து யோசித்தும் புரியாத அனைத்து புதிருக்கும் இன்று விடை கிடைத்தே விட்டது. ஏனோ அதிர்ச்சியாய் இல்லை.
தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய நல்லவன் வரவுக்காகக் காத்திருந்தாள். மணி ஐந்து… இன்னும் அவன் வந்தபாடில்லை. வேளா வேளைக்கு வரும் உணவும் இன்று வரவில்லை. போகும் இடத்தில் உணவருந்தட்டும் என்று விட்டுவிட்டான் போலும்!
சத்யன் வீட்டில் உறவினர்கள் வந்தவண்ணம் இருக்க… இருவராலும் அங்கிருந்து வெளிவர முடியவில்லை.
கான்ஸ்டபிள் மூலம் அவள் காலை சென்ற மருத்துவமனை பெயர் ஒரு மணி நேரத்தில் சத்தியனை வந்தடைந்தது.
சத்யனுக்கு உறுத்தல் தான். அந்த மருத்துவமனைக்கு வரும் ஆட்கள் பற்றிய விபரம் தெரியும். மூர்த்தியிடம் எப்படிக் கூறுவான்? மருத்துவமனை பற்றி அவளுக்கு தெரியாமலும் சென்றிருக்கலாமே… அதனால் மூர்த்தியிடம் வாய் திறந்தானில்லை.
“நீ வீட்டில இருடா… நான் பார்த்துட்டு வரேன்..” மூர்த்தியிடம் சொல்லிப் பார்த்தான். அவன் முறைப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்.
நேரம் ஆக ஆக மூர்த்தி முகத்தை சத்தியனால் பார்க்க முடியவில்லை. இதற்கு மேல் தாமதிக்க முடியாதென்று வீட்டினரிடம் ஏதேதோ கூறி… நண்பர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு வெளியே வந்தனர்.
வெள்ளை அம்பாசிடர் மித்ரனின் சிறிய மருத்துவமுகாம் முன் நின்றது.
“மூர்த்தி… எதனாலும் கொஞ்சம் பொறுமையா இரு…” உள்ளே செல்லும் முன்னே சத்யன் கையை பிசைந்தான்.
ஒரு நிமிடம்.. ஒற்றை அறை… இரண்டு துளி இரத்தம்… வாய் திறந்தான் மித்ரன். அவனிடம் கொஞ்சிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்த இருவருக்குமே பொறுமையில்லை.
“அஞ்சு மாசம் தொழில் பண்ணியிருக்கா.. கௌஷிட்ட கை மாற போறா… அதுக்கு தான் இங்க டெஸ்ட்டுக்கு வந்தா சார்…”
சத்யனுக்கு மூச்சு முட்டியது. மூர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன தொழில்? என்ன டெஸ்ட்? யார் கௌஷி?
புருவம் சுருங்க கேட்டான், “என்ன தொழில்?”
சத்யன் இடை புகுந்து, “இரு டா…” என்றவன் புகைப்படத்தை மீண்டும் காட்டி, “நல்லா பார்த்து சொல்லு… இவங்க பத்தி தானே பேசற?”
“ஒரு தரம் பார்த்தா ஆயுசுக்கும் மறக்க முடியுமா சார் இவள?. இவளே தான்… செய்யறது ****** வேலை… வந்தது எயிட்ஸ் இருக்காணு பாக்க.. இதுல கொஞ்சம் ஆசையா தொட்டுட்டேனாம்.. கைய தட்டி விடுறா **** ”
சொல்லி முடிக்கவில்லை… மூர்த்தி எட்டி உதைத்த வேகத்தில் மேசையோடு அவன் அமர்ந்திருந்த நாற்காலியும் பின்னோ சென்று சுவரை முத்தம் கொடுக்க… சுவரில் சிகப்பு சாயம்.
[the_ad id=”6605″]
அவன் எழுந்திருக்கும் முன் கொத்தாய் சட்டையோடு அவனைத் தூக்கி நிறுத்தி… “நீ யாரைப் பத்தி பேசுற தெரியுமா? அவ துளசி டா..” என்றான் முழு சீற்றத்தில்.
சத்யன் நகர்ந்து நின்று கொண்டான். அவன் எதிர்பார்த்தது தான்.
“இல்ல சார்… அது பேரு கோமல் சார். கூட்டிட்டு வந்தவன் இந்த வேல செய்றவன் தான்.. நீங்க தான் தப்பா..”
அவன் காதில் விழுந்தால் தானே…. “தொட்டியா?” கர்ஜித்தான்
“என்ன சார்?” பயந்தே போனான்.
“அவங்கள தொட்டியா?” கேள்வியில் அடக்கப்பட்ட கோபம்
“கை பட்டதும் தட்டிட்டாங்க சார்..” குரலில் தடுமாற்றம்.. கண்ணில் பயம்.
அவன் பயம் வீண் போகவில்லை. அதன் பின் அலறல் சத்தம் காதை அடைக்க…
சத்யன், “டேய்… சொல்லும் போது எந்த கையால தொட்டன்னு சொல்லித் தொலைய மாட்டியா..? பாரு ரெண்டத்தையும் உடைச்சுட்டான்!”
அலறல் நிற்காது போகவே.. “போதும் மூர்த்தி.. அவன் இதுக்கே ஆறு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருக்கணும். கொஞ்சம் விபரம் கேட்கணும்.. எனக்கு அவன் வேணும் அந்த நாய விடு..”, என்று ஒருவழியாய் மித்ரனை காப்பாற்றி விட்டான்.
மித்ரனுக்கு கௌரவை தெரியும் அவன் செய்யும் தொழிலும் தெரியும். அவ்வளவு தான். நிரந்தர இருப்பிடம் இல்லாதவனைப் பற்றி என்ன விபரம் கொடுக்கமுடியும்.
“நான் பொய்யெல்லாம் சொல்லலை சார். அவன் சொன்ன தான் சொன்னேன். அவங்கள அஞ்சு மாசமா இதுக்கு தான் யூஸ் பண்றதா… அவன் தான் சொன்னான். அவன் பேரு மட்டும் தான் தெரியும். அதுவும் உண்மையான்னு தெரியாது. வேற தெரியல சார்.
கௌஷிட்ட அனுப்ப போறான்னு அவன் தான் சொன்னான் சார். பொண்ணுக்கு நோயெல்லாம் இருக்கமாதிரி இல்ல சார்… நல்லா தான் இருக்கு. அதனால இன்நேரம் அனுப்பி இருப்பான். நாளைக்கு ரிசல்ட் வந்ததும் பணம் கைமாறிடும்!”
‘ஐந்து மாதம்! ஐந்து நீளமான மாதம்… துளசி… என்ன பாடுபட்டாளோ? எத்தனை முறை செத்துப் பிழைத்தாள் என் துளசி?’
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தது. ‘நெஞ்சோடு கட்டிக்கொண்டு ஆறுதல் கூறாமல் அப்படி ஒரு பார்வை பார்த்தேனே.. உடைந்து போனாயா துளசி….’ காரில் அமர்ந்திருந்தவன் ஜீவனெல்லாம் வடிந்தே போனது.
இதே பார்வையைப் பார்த்திருக்கிறான் ஒரு முறை. எங்கோ தலை தெறிக்க நண்டுகள் இரண்டும் ஓட.. பாண்டியன் வீட்டின் முன் குப்புற விழுந்தாள் ஒருத்தி. அங்கிருந்த தென்னந்தோப்பில் காய் பறித்துப் போட்டுக் கொண்டிருக்க.. அங்கு தான் இவனும் இருந்தான் நடப்பதை பார்த்துக்கொண்டு.
விழுந்தது என்னமோ தலைவி தான்.. அழுதுகொண்டே பாண்டியனின் தாயை கூப்பிட்டது சுந்தரி. மூர்த்தியின் தூரத்துச் சொந்தம் பாண்டியன். அவன் வந்து போகும் ஊர் தான் இது. ஆனால் இது வரை தங்கியது இல்லை. இது தான் முதல் முறை. பாண்டியனின் சகோதரி திருமணத்தை ஒட்டி, பத்து நாள் பாண்டியனுக்கு ஒத்தாசையாய் சுற்றித் திரிகிறான், முத்துமங்கையின் வேண்டுதலின் பெயரில்.
சுந்தரி கண்ணீரில் கரைய.. தலைவி, ‘இது எல்லாம் ஒரு விஷயமா?’ என்பது போல் நின்றிருந்தாள்.
“அத்த வலிக்க போது பாத்து கழுவுங்க…” சுந்தரி தேம்ப..
“சும்ம இரு டி சுந்தரி… நம்ம தான் எல்லோரையும் அழ விடணும். நீ அழாத. எனக்கு வலியே இல்ல..” என்றாள் தெம்பாய்.
இவன் தள்ளி நின்றிருந்தாலும், பார்வை இவர்களை தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அடிபட்டவள் வீட்டினுள் சென்றிருக்க.. சுந்தரி மீண்டும் எங்கோ ஒட்டம் பிடித்தாள்.
அந்த இடம் முழுவதும் தென்னை இருக்க அங்கு வேலையாட்களும் அதிகம். வேலையாட்களோடு நின்றிருந்த இவனை அவள் கவனிக்க சாத்தியம் இல்லை. அவளுக்கிருந்த வலியில்.. அவள் கண் அவள் விழுப்புண் மேல் தான்.
கையை தூக்கி பிடித்து ஊதிக்கொண்டே வந்தாள். வெள்ளை தோல் கிழிந்து உள்ளே வெள்ளையும் சிகப்புமாய் தெரிந்தது. இரத்தம் இன்னும் கசிந்து கொண்டு தான் இருந்தது. பச்சை நிறத்தில் மருந்தெண்ணை பூசீயிருக்க காயம் மினுமினுத்தது. பலமான அடி தான். கை வீக்கம் கொடுத்து பார்க்கவே பாவமாய் இருந்தது.
[the_ad id=”6605″]
பரட்டை குட்டியின் முகமும் வாடி போயிருக்க, அவனால் பார்வையை அவளிடமிருந்து பிரிக்க முடியவில்லை. முகத்தில் அப்பட்டமாய் வலியின் சாயல். இருந்தும் ஒருவரிடமும் வலி என்று சொல்லவில்லை. அவள் அவனை நெருங்கி வரும் வேளை எங்கிருந்தோ மூச்சு வாங்க பெரியவர் ஒருவர் வந்தார். அவரை பார்த்த மாத்திரத்தில் அவள் கண் கலங்க.. உதடு துடிக்க ஆரம்பித்தது. இருவரும் ஒன்றும் பேசவில்லை…. U உதடு, தலைகீழாய் மாற… சின்ன பிஞ்சாய் உதடு துருத்தி நின்றவளை நெஞ்சோடு மனிதன் அணைத்து கொண்டார்.
அன்று மாலையே இரு நண்டுகளும் செய்த சேட்டைகள்…? அதை அவன் பார்த்து மிரண்டு நின்றது? அதெல்லாம் வேறு லெவல்.. அதைப் பற்றி சொல்லுவதற்கொன்றுமில்லை.
உணர்வுகளை அனைவரிடமும் நம்மால் வெளிக்காட்ட முடிவதில்லை. ஏதோ.. எங்கோ, ஒரு மூலையில் ‘இவரிடம் நம் உணர்வுக்கு மதிப்பிருக்கும்’ என்ற நம்பிக்கை வரும் போது உணர்வுகள் வெளிப்படும். அவள் தாத்தாவின் மீது வைத்திருந்த நம்பிக்கை அப்படி. அவளை விழாமல் தடுக்க தாத்தா தேவைப் படவில்லை. விழுந்தவளை எழுப்பவும் தாத்தா தேவைப் படவில்லை. வலி தாள முடியாமல் போன வேளை அவள் தலை சாய்க்க அன்பு நெஞ்சம் தேவைப்பட்டது. அவரும் அந்த வெயிலில் ஓடோடி வந்தாரே…
அதே நம்பிக்கை இவனிடம் தோன்றியிருக்க வேண்டும்… ஏக்கமாய் பார்த்தவள் தலை சாய்க்கத் தோளும் தரவில்லை… பார்வையால் துரத்தியும் விட்டாயிற்று!!
எங்குப் போய் அவளைத் தேட… தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
“மூர்த்தி… துளசி கௌஷிட்ட போகமா இருந்தா கண்டிப்பா காப்பாத்திடலாம் டா…” என்று அவன் இழுக்க…
“அவ என் துளசி. அவ யார் கிட்ட இருந்தாலும்.. எப்படி இருந்தாலும் நான் காப்பாத்தியே தீருவேன். அது பல தல உருண்டா தான் முடியும்னா.. அதுக்கும் நான் தயார். அவ இல்லாம நான் தனியா திரும்பிப் போக மாட்டேன்.. அப்படி அவ இல்லாம நான் போனா.. நான் செத்துட்டேன்னு நினைச்சுக்கோ..”
மொழிந்தவன் அமைதியாய் மொழிய.. கேட்டுக்கொண்டிருந்தவன் அமைதியைத் தொலைத்தான்.