அ31-3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
Post Views:54
கொல்லை துளசி எல்லை கடந்தால் – (கடைசி அத்தியாயம்)
பிரவீன் அலர்விழியோடு உறவாடும் எண்ணத்தோடு நெருங்க, சில நிமிடங்களில் பெண்ணின் கை கால் இழுத்துக் கொள்ள ஆரம்பித்தது. வலிப்பு போல் ஆரம்பிக்கவுமே 911 அழைத்தான்.
அலர்விழியை ஏந்திக் கொண்டு பிணியூர்தி போக பின்னோடு சென்ற பிரவீன் வாகனத்தின் உருளிப்பட்டை வெடிக்கவும், நிலை தடுமாறிய வாகனம், சாலை ஓரமிருந்த சுவரில் இடித்து உருண்டு பற்றிக் கொண்டு எரிந்தது. சற்றும் எதிர்பார்க்காத விபத்து. வாகன கதவில் Child lock போடப்பட்டிருக்க, பிரவீனால் கதவை உள்ளிருந்து திறக்க முடியாமல் போனது.
பாஸ்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த எபி வாகனம் பின்னால் காவல்துறை வாகனம் வர, எபியின் வாகனம் சாலை ஷோல்டரில் ஓரம் கட்டி நின்றது. அதி வேகமாக சென்றதற்காக அபராத தொகைக்கான சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு காவல் அதிகாரி சென்றுவிட, சுயநினைவிற்கு வந்தவன், தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவனாக மீண்டும் அலர்விழியை தேடிப்போனான்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர்:
காலையில் பெற்றோர் முன்னிலையில் ரிஜிஸ்டர் ஆஃபீசில் கையொப்பமிட்டு சட்டப்படி திருமணம் பிதைவாகிவிட, மாலையில், அந்த அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பெண்ணும்-மாப்பிள்ளையுமாக அலர்விழி-எபெனேசர்.
பெண் முகத்தில் மாறா புன்னகை. இந்த புன்னகை அப்படி ஒன்றும் எளிதில் கிடைக்கவில்லை.
எபி தான் வேண்டும் என்று அலர்விழி உண்ணாவிரதம் இருக்க, பாட்டி தான் அவளுக்காக சௌந்தர்யாவிடம் பேசினார். “அவங்க இருந்த ஊர்லயே சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். அங்கேயே அவ அந்த பையனோட இருந்திட்டிருந்தா நீ போய் இழுத்துட்டு வந்திருக்க முடியுமா? நம்மள மதிச்சு பிள்ளைங்க நம்ம முகம் பாக்கும் போது, அவங்க மனசையும் பாக்கிறது நம்ம கடமை. பையன் வீட்டுல இருந்து வர சொல்லுவோம்… பாத்து பேசுவோம். நம்ம பொண்ணுக்கு ஏந்த குடும்பம்னா சரி சொல்லுவோம்.
அன்னைக்கு சொன்னது தான் சௌந்தர்யா… மதம், ஜாதி, பழைய கோட்பாடு எல்லாம் முக்கியம் தான், ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. அந்த எல்லையைத் தாண்டும் போது நல்லது நடக்கும்னா ஏன் யோசிக்கணும் சௌந்தர்யா? காலம் மாறுது! சாதிக்க எவ்வளவோ இருக்கும் போது ஜாதியை பிடிச்சுக்கிட்டு தொங்காத. வெளியில வா! நாளைக்குன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியாத போது இன்னைக்கு, பிள்ளைங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டுமே
நமக்கு நம்ம எண்ணங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் எல்லாம் சரின்னு நினைக்கிறனால தான் அத பொக்கிஷமா நினைச்சு, நம்ம எண்ணப்படி வாழ்க்கையை வாழறோம். நம்ம எண்ணம் தான் நாம! அதனால் தான் நம்ம எண்ணமும், கொள்கையும் கொல்லையில இருக்க துளசி மாதிரி பரிசுத்தமா, உயர்ந்ததா இருக்கணும். சில நேரம் அப்பிடி இருக்கது இல்ல, அப்போ அந்த எல்லையை விட்டு வெளியில வரது தப்பில்ல!”
வாழ்க்கையில் மரணத்தை அருகில் பார்த்த சௌந்தர்யா இதை ஏற்க வெகு நேரம் எடுக்கவில்லை. மகளிடம் “வர சொல்லு. பேசுவோம்” என்று கூறினார். அதன் காரணமாக, அமெரிக்கா விட்டு வந்ததுமே எபி, பெற்றோர்களோடு நேரே கடலூர் சென்றான். சௌந்தர்யாவிற்கு எபி குடும்பத்தை முன்பே பிடிக்கும் என்றதால் அவரிடமிருந்து எதிர்ப்பில்லாமல் போனது. அவர்களும் பார்க்கத்தானே செய்தனர் அபிகேலை அவர்கள் பார்த்துக் கொண்ட விதத்தை.
ஜாதி, மதம் என்ற எல்லையை மனிதம் வென்றிருக்க, அலர்விழி எபெனேசர் கணவன் மனைவியாய் கைபிடித்தனர்.
விபத்தில் பிரவீன் இறந்துவிடவே, ஒரு வருடம் கழித்து நகுநா-வினோ திருமணம் என்று முடிவெடுக்கப்பட்டது.
சௌந்தர்யாவால், அவரை சுற்றி அவர் எழுப்பி இருந்த கோட்டை சுவரை உடைத்து வர முடிந்தது. இன்று குடும்பமாய் பிள்ளைகளோடு மகிழ்ச்சி கடலில்.
வைத்திய நாதன் – பாக்கிய லக்ஷ்மியால் அவர்கள் எண்ணக்கூட்டிலிருந்து வெளிவர முடியவில்லை, மகனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிலர் அப்படி தான். வாழ்க்கை கொடுக்கும் பாடத்தை பயில்வதும் இல்லை.. புரிந்துகொள்வதும் இல்லை.
எந்த குறையுமின்றி வரவேற்பு முடிய, பெற்றோர் ஆசியோடு திருமண வாழ்விற்குள் புகுந்த அலர்விழி-மனோவா எபெனேசர் என்றும் சுகித்து வாழ, வாழ்த்தி விடை பெறுவோம்.