அ34-2-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
Post Views:58
கொல்லை துளசி எல்லை கடந்தால் 34-2 (cont…)
பிரவீன் என்பவன் அலர்விழி வாழ்வில் எங்குமே இல்லை என்பதால் அவனைப் பற்றி பெண் என்றுமே நினைத்ததில்லை.
இன்றும் அப்படி தான். அவனை நினைக்கக் காரணம் இருக்கவில்லை. அவள் பார்வை, சிந்தனை என்று முழுவதுமே மனோவா எபெனேசர் மட்டுமே. திருமணம் முடித்து வீடு வந்து சேரும் வரையுமே தாலியைப் பார்ப்பதும் அதை வருடுவதுமாகச் சென்றது.
“தனியா வலியோட சுத்தி திரிஞ்ச உயிர், கூடு வந்து சேந்த மாதிரி ரொம்ப நிம்மதியா இருக்கு மனோ. ஏதோ மூச்சு குழாயில இருந்த அடைப்பை எடுத்துவிட்ட மாதிரி ஒரு பெரிய ரிலீஃப்”
“அப்பிடி பண்ண முடியும்னா பண்ணிடுவோம் மனோ. கல்யாணத்தில சட்ட சிக்கல் எதுவும் வேண்டாம்.”
திருமணத்திற்கு வந்த அனைவரோடும் வீடு வந்து சேர, மதிய உணவு வகைகளும் வந்திறங்கியது. உணவு முடியவும் கேக் வெட்டி கொண்டாடி, வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை கொடுத்து, தம்பதியரை வாழ்த்தி நண்பர்கள் வெளியேற மாலையானது.
“டின்னருக்கு கீழ வந்திடுங்க. எல்லாரும் அங்க தான் இருப்போம்” என்று பாயல் கூறி செல்லவும் அக்கடா என்று சோஃபாவில் அமர்ந்த இருவரிடமும் புதிதாய் முளைத்த கூச்சம்.
“ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரட்டா…” அவன் எழுந்து கொள்ள, அவளுக்கும் உடையை மாற்றினால் போதும் என்றிருக்க, உடை மாற்றி தேநீர் போட்ட பின்னும் அவனைக் காணவில்லை. தேநீரோடு அறைக்குச் செல்ல, குளித்து முடித்து ஈர உடலோடு அப்பொழுது தான் வெளியே வந்தான். நிற்கவா… வேண்டாமா என்ற புதிய தடுமாற்றம் அவளிடம்.
அவள் தடுமாற்றமும், அவஸ்தையும் பார்த்தவன் முகத்தில் புன்னகை பூக்க, பெண்ணை நெருங்கினான். “என்ன டி” என்று இடுப்பைக் கரங்கள் சுற்ற, பெண்ணிற்கு மூச்சு முட்டியது. கோப்பை இரண்டையும் வாங்கி மேலையில் வைத்தவன் கைக்குள்ளிருந்தவளுக்கு மெலிதான படபடப்பு.
“ஓய் பட்டு…”
“ம்ம்”
“என்ன டி இந்த நெளி நெளியிற?”
“ம்ம்ஹூம்”
“அப்போ என்னை பாக்கவேண்டியது தானே”
விழிகள் நான்கும் மோதிக்கொள்ள, அவன் குறும்பு பார்வையும், மந்தகாச புன்முறுவலும், பெண்ணை முதன்முதலாய் ஏதோ செய்ய, மார்பில் முகம் புதைத்தாள்.
“மிஸஸ் மனோ… இது தான் வெக்கமாங்க? உங்களுக்கு வெக்கம் எல்லாம் வரும்ன்னு இன்னைக்கு தான் தெரியுது.” அவன் வாய் விட்டுச் சிரிக்க,
“உங்களுக்கு தான் வெக்கமே இல்ல. துணிய போடுங்க…” என்றவள் ஓடியிருந்தாள்.
முதன் முதலாகப் பெண் மனம் எதையோ எதிர்பார்த்தது. அவன் ஸ்பரிசம் தந்த இதம் பிடித்தது. கண்களுக்குள் மெலிதான கனவு. ஏன் புதிதாக இந்த ஆசை? தாலியைப் பார்த்தாள். இது கொடுத்த புது உரிமையும், ஆசையும்!
கட்டிய புடவையிலிருந்து போட்டிருக்கும் தாலி வரை அனைத்துமே அவள் விருப்பத்திற்கேற்றார் போல் தான் வாங்கியிருந்தான். மிகச் சிறியதாய் சுண்டு விரல் நகம் அளவிற்கு இழுத்துவிட்ட இதய வடிவ தாலி, ஒருபக்கம் சிலுவை இருக்க மற்ற பக்கம் ஆங்கில ‘எம்’ இருந்தது.
என்றோ படம் பார்க்கும் வேளை அவள் தான் கூறினாள், அவன் கட்டப்போகும் தாலி எப்படி வேண்டுமென்று. “மாப்பிள வீட்டு பக்க தாலி தானே மனோ போடுவீங்க. ஆனா எனக்கு அத்தைது மாதிரி பெருசா வேண்டாம் மனோ. எல்லா ட்ரெசுக்கும் செட் ஆகாது. முறுக்கு தாலிசெயின் வேண்டவே வேண்டாம். நெஞ்சு நீள அழகான செயின்ல, சின்னதா… ரொம்பச் சின்னதா மாந்தளிர் மாதிரி ஒரு ஹார்ட், அதுல ஒரு பக்கம் உங்க சிலுவை இருக்கட்டும், ஆனா அடுத்த பக்கம் எம்-ன்னு உங்க நேம்மோட இனிஷியல் இருக்கணும்”
ஆசையை கூறினாலும், பெரியவர்கள் என்ன போட்டாலும் சரி தான் என்று நினைத்தாள். ஆனால் அவள் கேட்டதையே செய்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அது உன் கழுத்துல தான் டீ இருக்கப் போகுது. எத்தன தரம் அதையே பாப்ப? இந்தா டீ” என்று அறையில் விட்டுவந்த கோப்பையை நீட்டினான்.
அவன் இரு கரங்களிலும் தேநீர் கோப்பை இருக்க, கரத்திற்கு இடையே புகுந்தவள், எம்பி இதழைத் தீண்டி, “ஆயுசுக்கும்” என்று கூறி கோப்பையைக் கையில் வாங்கினாள்.
குளிர் காற்று மேனி தீண்ட, மனதை நிறைத்தவன் மார் சாய்ந்து, சுகம் தரும் அணைப்புக்குள் தன்னை மறந்து சூடான தேநீரைத் தொண்டைக்குள் இறக்குவதெல்லாம் இதயத்திற்கும், உறவிற்கும் இதம் தான். அதை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க போகும் நினைப்பும் சுகம் தான்.
சின்ன சின்ன விஷயத்தில் விட்டுக் கொடுத்து, அலர்விழியை இறுகப்பிடித்துக் கொண்டான். யாருக்காகவும் மனைவியை விட்டுக்கொடுக்கும் நோக்கம் அவனுக்குமில்லை, யாருக்காகவும் கணவனைப் பிரியும் எண்ணம் அவளுக்கும் இல்லை.