ஆகாயம் 11:
“அப்பா என்னப்பா சொல்றிங்க..? கண்டிப்பா என்னால முடியாது. இந்த விஷயத்துக்கு நான் சம்மதிப்பேன்னு நீங்க எப்படி நினைச்சிங்க..?” என்று துவாரகி எரிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா, நீ ரொம்ப சந்தோஷப்படுவன்னு நினைச்சேன் துவாரகி. ஆனா, நீ இந்த அளவுக்கு அதிர்ச்சியாவன்னு நினைக்கலை. அப்படி ஒன்னும் பெரிய விஷயத்தையும் நான் சொல்லலை..” என்றார் கருணைநாதன்.
“அப்பா உங்களுக்கு வேணுமின்னா இது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனா, கண்டிப்பா எனக்கு இது பெரிய விஷயம் தான். என்னோட கனவு, லட்சியம் எல்லாமே வேற. எனக்கும் அரசியலுக்கும் சுத்தமா செட்டாகாது. வீணா என்னை வேட்பாளரா அறிவிச்சு, உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க..” என்றாள் துவாரகி.
“என்ன துவாரகி..? காரணமில்லாமையா அப்பா சொல்லுவார். இப்போ நம்ப கட்சியோட நிலைமை ரொம்ப சரியில்லை. மக்கள் நம்ம மேல கோபத்துல இருக்காங்க. அதை மாத்தனும்ன்னா, சில விஷயங்களை செஞ்சு தான் ஆகணும். அட்லீஸ்ட் தேர்தல் முடியற வரைக்குமாவது நாங்க சொல்றதை நீ கேட்குறது தான் நல்லது. எங்களுக்காக நீ இதைக் கூட செய்ய மாட்டியா..?” என்றான் சசிதரன்.
“இதுவரைக்கும் எனக்காக நீ என்னண்ணா பண்ணிட்ட..?” என்றாள் ஆழ்ந்த குரலில்.
“துவா..” சசியின் குரல் ஆழ்ந்து ஒலித்தது.
“சொல்லு, இதுவரைக்கும் நீ என்ன பண்ணிட்ட..? அதுவும் போக, கட்சிக்கும் எனக்கும் சுத்தமா எந்த சம்பந்தமுமே இல்லையே. பிறகு நான் எப்படி முதல்வர் வேட்பாளரா நிற்க முடியும்..?” என்றாள்.
“அந்த கவலையெல்லாம் உனக்கெதுக்கு துவாரகி. நீ கண்டிப்பா எலக்சன்ல நிக்குற. நாமினேஷன் தாக்கல் செய்யும் போது மட்டும் நீ வந்தா போதும். மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்..” என்றார் கருணைநாதன்.
“சாரிப்பா..! கண்டிப்பா என்னால முடியாது..” என்றாள்.
“கொஞ்சமாவது புரிஞ்சு நடந்துக்கோ துவாரகி. நாங்க யார் நின்னாலும் ஆதித்யாவோட சப்போர்ட் கிடைக்காது. அதே நேரம், நீ நின்னா, கண்டிப்பா அவனோட சப்போர்ட் உனக்குத்தான். அதுக்குத்தான் சொல்றோம்..” என்று சசி உளறி வைக்க,
“அப்போ, ஆதியோட சப்போர்ட் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தான் இத்தனை பிளான் இல்லையாப்பா. என்னோட கல்யாணமும் இந்த பிளானோட ஒரு பகுதி தானா..?” என்றாள் வெற்று சிரிப்புடன்.
“அப்படியெல்லாம் இல்லை துவா..! அப்பாவுக்காக நீ இதைப் பண்ணித்தான் ஆகணும்..” என்றார்.
“நீங்க சிஎம்மா இருந்த இந்த அஞ்சு வருஷத்துல மக்களுக்கு ஏதாவது பண்ணியிருந்தா, இப்போ நீங்க யார்கிட்டயும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எல்லாத்தையும் விட, மக்கள் சப்போர்ட் தான் பெரிய சப்போர்ட். அது உங்களுக்கு சுத்தமா இல்லைன்னு உங்களுக்கே நல்லா தெரிஞ்சிருக்கு. சோ, என்ன பிளான் பண்ணணுமோ எல்லாம் பக்காவா பண்ணியிருப்பிங்களே..! அது தான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே..?” என்றாள் நக்கலாய்.
“துவா, நீ அப்பாகிட்ட பேசிட்டு இருக்க..?” என்று சசி எச்சரித்தான்.
“நானும் இல்லைன்னு சொல்லலையே அண்ணா..” என்றாள்.
“நாங்க ஒன்னும் பெரிசா எதிர்பார்க்கலை. ஆதி எங்களுக்கு சப்போர்ட் பண்றதுல என்ன தப்பு..?” என்றான் சசி.
“நீங்க கேட்குறது தப்பில்லை. கேட்ட விதம் தான் தப்பு. ஆதியை கார்னர் பண்ணி, என்னை அனுப்ப மாட்டேன்னு சொல்லி, இப்படி எல்லா வகையிலும் நீங்க முயற்சி செஞ்சு பார்த்துட்டிங்க. ஆனா, எதுவுமே நடக்கலை. சோ, கடைசி ஆயுதமா என்னை அரசியலுக்குள்ள இழுக்குறிங்க.. நான் சொல்றது சரி தானே..?” என்றாள்.
“பொது வாழ்க்கைன்னு வந்துட்டா, இதெல்லாம் சகஜம் துவா..” என்றார் கருணைநாதன்.
“எப்படி, அன்னைக்கு ஆதி நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேட்டுட்டு போனாரே..அப்பவும் அமைதியா இருந்திங்களே..? இப்போ வரைக்கும் ரோஷம் வந்த மாதிரி தெரியலையே..?” என்றாள் துவாரகி.
“என்னாச்சு துவா..? நீ இப்படி எல்லாம் அப்பாவை எதிர்த்து பேச மாட்டியே..? இன்னைக்கு என்னாச்சு..?” என்றான் சசி.
“பேச வேண்டிய நேரத்துல நான் பேசாம இருந்ததுக்கு முக்கியமான காரணம் நிறைய இருக்கு. அதெல்லாம் கூடிய சீக்கிரமே உங்களுக்குத் தெரிய வரும்..” என்றாள்.
“இப்போ உன்னோட முடிவு என்ன..?” என்றான் சசி.
“முடியாது..” என்றாள்.
“உன்கிட்ட தகவல் தான் சொன்னோம். அனுமதி கேட்கலை. நீ நாமினேஷன் தாக்கல் பண்ணும் போது வர்ற. அப்படி பிடிவாதம் பிடிச்சா என்ன நடக்கும்ன்னு உனக்கு நல்லாவே தெரியும்..” என்றார் கருணைநாதன்.
“நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்லை. எல்லா நேரமும் இப்படி மிரட்டியே காரியம் சாதிக்க முடியாது.” என்றாள்.
“உன்மேல கொஞ்சம் அதிகமா பாசம் வச்சுட்டேன் துவாரகி. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்..” என்றார் கருணைநாதன்.
“அப்பா, பிளீஸ்..! என்னை கட்டாயப்படுத்தாதிங்க..” என்றாள்.
“சரிம்மா..! நான் உன்னை கட்டாயப்படுத்தலை. இதை எப்படி டீல் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். என்ன? நாலு கலவரத்தை உண்டாக்கணும். எத்தனை பேர் சாவனுகளோ தெரியலை..” என்று அவர் போறபோக்கில் சொல்வதைப் போல சொல்ல, அதிர்ந்தாள் துவாரகி.
“ஒரு உயிரோட மதிப்பு எங்களுக்குத்தான் தெரியும். வீணா, பல உயிரோட விளையாடாதிங்க..?” என்றாள்.
“பல உயிர் போகக் கூடாதுன்னா… நான் சொன்ன விஷயத்துக்கு நீ தயாரா இரு துவா..” என்றவர், அதற்குமேல எதுவும் பேசவில்லை.
துவாரகிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனதிற்குள் நிறைய போராட்டம் அவளுக்கு. அதை வெளியே சொல்ல முடியவில்லை. சிறுவயதில் இருந்தே பார்த்துப் பழகிய அரசியல் தான் என்றாலும், ஏனோ அவளுக்கு அரசியல் என்றால் அழுக்கு என்றே மனதில் பதிந்திருந்தது. ஒரு நல்ல அப்பாவின் பிம்பம் எப்போதும் அவள் மனதில் பதிந்ததில்லை. கருணை’நாதன் என்னதான் பாசமாக பேசினாலும், துவாரகியிடம் எப்போதும் ஒரு ஒதுக்கம் இருக்கும். அருணாவிடம் மட்டுமே கொஞ்சம் சகஜமாக பேசுவாள்.
அவள் விரும்பியதை படித்தாள். அதில் முன்னேற்றமும் கண்டாள். வேண்டாம் என்று அவள் சொன்ன பிறகும் கருணைநாதன் கட்டிக் கொடுத்த மருத்துவமனை தான் அவள் வேலையிடம் என்றானது. அவள் கொஞ்சம் இதமாக உணரும் ஒரே இடமும் அது தான். அதிக நேரம் அங்கு மட்டுமே செலவிட்டாள்.
அறைக்குள் சென்ற துவாரகிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த விஷயம் மட்டும் ஆதித்யாவிற்கு தெரிந்தால், அவன் என்ன சொல்லுவான் என்று யோசிப்பதிலேயே அவளின் பாதி நேரம் கழிந்தது.
அவனை நினைத்தவுடன், இன்று அவனின் வருகையும், அதைத் தொடர்ந்து அவனின் செய்கையையும் நினைத்தவளுக்கு அவளையும் மீறி உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டது.
‘சாரி ஆதி..! என்னைப் பத்தி நீங்க என்ன நினச்சு வச்சிருக்கிங்கன்னு தெரியாது. ஆனா, நீங்க நினைக்கிற எதுவுமே உண்மையில்லை..’ என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள் துவாரகி.
இன்று ஏனோ அவன் பார்கவியை பார்க்க வந்த மாதிரி அவளுக்குத் தெரியவில்லை. தன்னைத்தான் மறைமுகமாக பார்க்க வந்தானோ..? என்ற குழப்பமும் அவளுக்குள் இருந்தது.
அப்பா சொன்ன விஷயத்தை ஆதியிடம் சொன்னால் என்ன? என்று அவளுக்குள் தோன்ற, அதை எப்படி சொல்வது என்ற தயக்கமும் அவளிடம் இருந்தது.
அவனிடம் பேசலாமா? வேண்டாமா? என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியவள், ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவனுக்கு அழைத்தாள்.
முதலில் துவாரகியின் அழைப்பைப் பார்த்த ஆதிக்கு அதை நம்ப முடியவில்லை. ஆனால், அழைப்பது அவள் தான் என்று உறுதியாக தெரிந்த பின்பு, யோசனை தான் அதிகமானது அவனுக்கு.
“அவளா போன் பண்றான்னா..என்ன விஷயமா இருக்கும்..?” என்று புருவத்தை நெரித்தபடி, அட்டேர்ன் செய்து காதில் வைத்தான் ஆதி.
முதல் இரண்டு நிமிடமும், இரண்டு பக்கமும் பேரமைதி மட்டும் தான் நிலவியது. துவாரகி கொஞ்சம் தயங்கி பேசாமல் இருக்க…
“சொல்லுங்க டாக்டர் மேடம்..” என்றான், வலிய வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்.
“நான் துவாரகி..” என்றாள் பட்டென்று.
“தெரியுது..!” என்றான் அவனும் பட்டென்று.
“எனக்கு ஒரு விஷயம் கேட்கனும்..?” என்றாள்.
அவள் அப்படி கேட்டவுடன் அவனுக்கு ஆச்சர்யம். துவாரகி முதன் முறையாக அப்படி பேசுகிறாள்.
“என்ன விஷயம்..?” என்றான்.
“நான் வரப்போற எலக்சன்ல சிஎம் கேண்டிடேட்டா நிற்கட்டுமா..?” என்றாள்.
“என்னது..?” என்றவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. அவள் என்னவோ கேட்கப் போகிறாள் என்று அவன் நினைத்திருக்க, அவள் இப்படி ஒரு விஷயத்தை பற்றி பேசுவாள் என்று அவன் நிச்சயமாக நினைத்திருக்கவில்லை.
“ஹலோ..” என்றாள்.
“இருக்கேன்..! என்ன திடீர்ன்னு..?” என்றான் சந்தேகத்துடன்.
“அப்பா தான்..” என்று அவள் இழுக்க, அவள் சொல்லாமலேயே அவனுக்கு விஷயம் புரிந்து போனது.
“இதையெதுக்கு என்கிட்டே கேட்குறிங்க டாக்டர் மேடம். அதான் உங்கப்பா சொல்லிட்டாரே… அவர் சொன்னா நீங்கதான் அப்படியே கேட்பிங்களே..?” என்றான் நக்கலாய்.
“ஆதி..! நான் என்ன சொல்ல வரேன்னு..” என்று அவள் முடிப்பதற்குள்,
“எதுவும் பேச வேண்டாம் துவாரகி. நான் கூட பொண்டாட்டி நம்ம கூட பேசத்தான் போன் பண்றாளோன்னு நினைச்சுட்டேன். அதான, உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் ஏதாவது காரியம் ஆகணும்ன்னா மட்டும் தான, எங்க நியாபகம் எல்லாம் வரும்..” என்றான் நக்கலாய்.
அவன் பேசப் பேச அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அதற்குள் அவன் போனை கட் பண்ணியிருந்தான்.
‘அவன் சொல்றதும் நியாயம் தானே துவாரகி. இன்னும் எத்தனை நாளைக்கு இவங்க சொல்றதையே கேட்டுட்டு இருக்க போற..? எதையும் தைரியமா பேஸ் பண்றதை விட்டுட்டு, இப்படி எதுக்கெடுத்தாலும் கண்கலங்கிகிட்டு..’ என்று அவளின் மனமே அவளுக்கு ஆலோசனையும் வழங்கி உந்து சக்தியாக இருந்தது.
அவள் வேகமாக சம்பத்திற்கு அழைத்தாள். விஷயத்தை கேள்விப்பட்ட சம்பத்திற்கு அதை நம்பத்தான் முடியவில்லை.
“நிஜமாவா துவாரகி..?” என்றான்.
“ஆமா சம்பத். இப்போ என்ன பண்றதுன்னு தான் தெரியலை..” என்றாள்.
“இப்படி ஒரு வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது. நீ சரின்னு சொல்லிடு..” என்றான்.
“ஆனா, ஆதிக்கு இதுல விருப்பம் இருக்குற மாதிரி தெரியலை..” என்றாள்.
“அதையெல்லாம் விடு. அவன் சம்மதம் சொல்லுவான், அதுக்கு நான் பொறுப்பு..!” என்றான் சம்பத்.
“எப்படி..?” என்றாள்.
“உண்மையை சொல்ல போறேன்..” என்றான்.
“வேண்டாம் சம்பத். விஷயம் தெரிஞ்சா ஆதி எப்படி ரியாக்ட் பண்ணுவார்ன்னே தெரியாது..” என்றாள்.
“இதுவரைக்கும் அப்படி நினைச்சு அமைதியா இருந்தது எல்லாமே போதும். இனியும் சும்மா இருந்தா, எல்லாருக்கும் குளிர் விட்டுப் போய்டும். சில விஷயங்களை, சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லித்தான் ஆகணும்..” என்றான் சம்பத்.
“எனக்கு இது சரியாப்படலை..” என்றாள்.
“எல்லாம் சரியா வரும்..” என்றவன், அடுத்த கட்ட வேலையில் இறங்கினான்.
அமைச்சரவை கூட்டத்தில் கருணைநாதன் விஷயத்தை எடுத்துச் சொல்ல, அங்கிருந்த அமைச்சர்கள் நடுவே சலசலப்பு.
“என்ன தலைவரே இப்படி சொல்றிங்க..? நம்ம கட்சியிலேயே உங்களுக்கு அடுத்து நிறைய பேர் இருக்கும் போது, இதெப்படி சரியா வரும்..? அதுமட்டுமில்லாம பாப்பா சின்ன பொண்ணு வேற..?” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்ல, கனகவேல் மட்டும் அமைதியாக இருந்தார்.
“என்ன கனகு..?நீ மட்டும் ஏன் அமைதியா இருக்க? உன்னோட பங்குக்கு நீயும் ஏதாவது சொல்ல வேண்டியது தான..?” என்றார் கருணைநாதன்.
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு தலைவரே..? நமக்கு வந்திருக்கிற கருத்துக் கணிப்புப்படி இந்த தடவை நம்ம ஜெயிக்கிறது ரொம்ப சிக்கல் தான்..” என்றார் மேலோட்டமாய்.
“நீயே இப்படி சொன்னா எப்படி கனகவேலு..? அதுக்குத்தான் நான் துவாரகியை நிறுத்தலாம்ன்னு சொல்றேன்.” என்றார்.
“நீங்க சொல்றதும் சரிதான் தலைவரே. ஆனா, இந்த தடவை எனக்கு தொழில்துறை எல்லாம் வேண்டாம் தலைவரே. எனக்கு துணை முதல்வர் பதவி தான் வேணும்..” என்றார் கனகவேல் உறுதியாக.
“என்னய்யா விளையாடுறியா..? இங்க நம்ம ஜெயிக்கிறதே பெரிய கேள்விக்குறியா இருக்கு. இதுல துணை முதல்வர் அது இதுன்னு சொல்ற..? அப்படி ஒரு பதிவியே கிடையாது. எல்லாம் நம்மளா எற்படுத்திகிட்டது தான். என்னால முடியாத பட்சத்துல என்னோட சில துறையை கண்காணிக்க சொல்லி சொல்லலாம். ஆனா, நான் தான் நல்லா இருக்கேனே..?” என்றார்.
“அப்போ இந்த எலக்சன்ல நான் சுயேட்சையா களம் இறங்கலாம்ன்னு இருக்கேன்..” என்றவர், அங்கிருந்து கிளம்பிவிட்டார். அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட,
“என்னப்பா? இந்த கனகவேல் இப்படி சொல்லிட்டு போய்ட்டார்..?” என்றான் சசி.
“அவன் தொகுதியில அதிக ஓட்டு வித்யாசத்துல ஜெயிச்ச திமிர் தான் இப்படி பேச வைக்குது..” என்ற கருணைநாதனுக்கு யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.
இறுதியில் ஒருவழியாக, துவாரகிக்கு அனைவரும் ஆதரவு தருவதென்று ஒரு மனதாக சம்மதித்தனர். அதில் பலருக்கு உள்ளுக்குள் புகைச்சல் இருந்தாலும், அதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அங்கே கனகவேல் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார் கனகவேல்.
“இப்போ எதுக்கு டாடி இவ்வளவு டென்ஷன் உங்களுக்கு..?” என்றாள் திவ்யா.
“நான் கேட்ட உடனே அவர் சரின்னு சொல்லுவார்ன்னு நினைச்சேன். ஆனா, உடனே மறுப்பு சொன்னதைத்தான் என்னால தாங்க முடியலை திவ்யா..?” என்றார்.
“இதை நான் எதிர்பார்த்தேன் டாடி..!” என்றாள்.
“நீ என்னம்மா சொல்ற..?”
“ஆமா டாடி..! எப்பவுமே அவங்க குடும்பத்தை சேர்ந்தவங்க மட்டும் தான் ஆட்சியில இருக்கனும்ன்னு நினைப்பாங்க. நம்மளை பயன்படுத்துற வரைக்கும் பயன்படுத்திப்பாங்க..!” என்றாள்.
“இப்போ என்னம்மா பண்றது..?” என்றார் கனகவேல்.
“எல்லா பிளானும் பக்காவா இருக்கு டாடி..! இப்ப பாருங்க..” என்று யாருக்கோ அவள் போன் செய்து பேச, அடுத்த சில மணி நேரங்களில், தகவல் தீயாய் பரவியது.
“நடிகர் ஆதித்ய வர்மா புது கட்சி தொடங்குகிறார்..! வருகிற தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..” என்ற செய்தி தான் அனைத்து டிவியிலும் தலைப்பு செய்தியாய் ஓடிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் அறியாத ஆதித்ய வர்மா அறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
ஹாஸ்ப்பிட்டலில் இருந்த டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த துவாரகிக்கும் அதிர்ச்சிதான்.
‘ஆதி கட்சி ஆரம்பிக்க போறாரா..? நேத்து பேசும் போது கூட சொல்லலையே..?’ என்று யோசித்தவள், வேகமாக சம்பத்திற்கு அழைத்தாள்.
“என்ன சம்பத் இதெல்லாம்..?” என்றாள்.
“இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை துவாரகி..” என்றான் அவன்.
“நான் நம்ப மாட்டேன்..!” என்றாள்.
“சத்தியமா நான் இல்லை..!” என்றான் அவன்.
“பிறகு எப்படி..? ஒருவேளை உண்மையாவே ஆதி அரசியலுக்கு வர்றாரா..?” என்றவளுக்கு குழப்பம் தான் அதிகரித்தது.
விஷயம் காட்டுத் தீயாய் நாடு முழுவதிலும் பரவியிருந்தது. ஆதியின் போனிற்கு மாற்றி மாற்றி போன் வந்த வண்ணமே இருந்தது. கவினுக்கு தான் விழி பிதுங்கிப் போனது.
ஒருவழியாக ஆதித்ய வர்மாவின் செவிகளை எட்டியது விஷயம்.
“முட்டாள்..! அப்பவே என்கிட்டே சொல்லியிருக்க வேண்டியது தானே..?” என்று கவினை கடிந்து கொண்டான்.
“சார்..! நானும் இல்லைன்னு சொல்லிப் பார்த்துட்டேன். ஆனா, மீடியாக்காரங்க வீட்டு முன்னாடியே வந்து நிற்க ஆரம்பிச்சுட்டாங்க..” என்றான் கவின்.
“வாட்..! வீட்டு முன்னாடியா..?” என்றவனுக்கு, குழப்பம் தீர்ந்தபாடில்லை.
‘இந்த மீடியா உலகத்துல வதந்திக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கு..” என்று கடுப்பானவன், வந்த செய்தி உணமையல்ல என்று மறுப்பதற்காக, செய்தியாளர்களை சந்திக்க கிளம்பிக் கொண்டிருந்தான்.
கனகவேல் வீட்டில்…
“என்ன திவ்யா? இப்படி பண்ணிட்ட..? இதனால நமக்கு என்ன லாபம்..?” என்றார் கனகவேல்.
“என்னப்பா நீங்க..? மகளை நிறுத்தி, மருமகன் சப்போர்ட்ல சிஎம் ஆக, உங்க தலைவர் பிளான் போடுறார். அதே மருமகனை அவருக்கு எதிரா திருப்பி, எலக்சன்ல நிக்க வெச்சு, ரெண்டு பேருக்கும் இருக்குற பகையை நான் பெரிசாக்கப் போறேன்..” என்றாள்.
“அதனால நமக்கு என்ன லாபம்..? இதுல நாம எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்..” என்றார்.
“கண்டிப்பா முடியும்ப்பா..! நீங்க ஆதித்ய வர்மா கட்சியில சேரப்போறதா விஷயம் கசிஞ்சா போதும். உங்க தலைவர் உங்களைத் தேடி வருவார்..” என்றாள்.
“அதுக்கு அவன் முதல்ல கட்சி ஆரம்பிக்கணும்..” என்றார்.
“கண்டிப்பா ஆரம்பிப்பான்..” என்றாள் திவ்யா.
“இப்பப் பாருங்க..!” என்றவள், சசிதரனுக்கு அழைத்தாள்.
“சொல்லுமா திவ்யா..” என்றான் சசி.
“அண்ணா, நியூஸ் பார்த்திங்களா..? இந்த ஆதி ஏன் இப்படி பண்றார்..?” என்றாள்.
“பார்த்தேன் திவ்யா. அவனுக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கு..” என்றான் சசி.
“அவன் கிறுக்கன் இல்லைண்ணா..! காரியக்கார கிறுக்கன். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அப்பாவுக்கு போன் பண்ணி, சந்திக்கனும்ன்னு சொல்லியிருக்கான். அப்பா விஷயத்தை என்கிட்டே சொன்னார். அதான் உங்களுக்கு போன் பண்ணேன்..” என்று அவள் சரளமாக பொய் பேச,
“அவரை எதுக்கு அவன் சந்திக்கணும்..?” என்றான்.
“என்ன அண்ணா..? இன்னும் விபரம் புரியாத ஆளா இருக்கீங்க..? அவரை ஆதியோட கட்சியில சேர சொல்லி சொன்னாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்லை. அதுமட்டுமில்லை, நம்ம கட்சியில இன்னும் சில அமைச்சரை எல்லாம் அவன் விலை குடுத்து வாங்கப் போறதா வேற பேசிக்கிறாங்க..” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள்.
“அது நாங்க இருக்குற வரைக்கும் நடக்காது..” என்றவன் விஷயத்தை கருணைநாதன் காதிற்கு கொண்டு சென்றான்.
“அந்த பயலுக்கு அவ்வளவு தைரியம் வந்திருச்சா. அவனை வச்சு நான் பிளான் பண்ணின்னா, அவன் என்னைய கவுக்க பிளான் பன்றானா..?” என்று வெகுண்டெழுந்தவர், கனகவேலிற்கு அழைத்தார்.
“சொல்லுங்க தலைவரே..!ஏதோ கோபத்தில் வந்துட்டேன்..” என்றார் கனகு.
“என்னய்யா கனகு..? நமக்குள்ள இதெல்லாம் நடக்குறது புதுசா என்ன..? இந்த கட்சி தானய்யா உனக்கு எல்லாமே செஞ்சது. உனக்கு என்ன தேவையோ அதை நான் செஞ்சு தரேன்யா…நீ முதல்ல கட்சி ஆபீஸ்க்கு வாய்யா நாளைக்கு..” என்றார் கருணைநாதன்.
“அங்க வராம எங்க போய்ட போறேன் தலைவரே. எனக்கு என்ன இருந்தாலும் நம்ம கட்சி தான் முக்கியம்..” என்று போனை வைத்த கனகவேல் முகத்தில் வெற்றியின் சாயல்.
“எப்படிப்பா..?” என்றாள் திவ்யா.
“நீ என்னோட பொண்ணுன்னு நிரூபிச்சுட்டம்மா..” என்ற கனகவேலிற்கு மகளை நினைத்து பெருமையாக இருந்தது.
கருணைநாதன் இல்லத்தில் அனைவரும் கூடியிருக்க,
“என்ன நினைச்சுட்டு இவன் இப்படி பண்ணிட்டு இருக்கான்..? இவனை இப்படியே விடக் கூடாதுப்பா..” என்று சசிதரன் குதித்துக் கொண்டிருந்தான்.
“அவன் பி.ஏவுக்கு போனை போடு..!” என்றார் கருணைநாதன். ஒரு பொய்யான தகவல், தீயாய் பரவி, அனைவரையும் கதிகலங்க வைத்திருந்தது.
“சார்..!” என்றான் கவின் பவ்யமாக.
“எங்கய்யா அவன்..” என்று கருணைநாதன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, போன் கைமாறியிருந்தது.
“என்ன விஷயம்..?” என்றான் ஆதி. அவன் குரலே தனியாய் ஒலிக்க, ஒருநிமிடம் அமைதியானவர்,
“என்னடா..? போனாப்போகுது மருமகன்னு நினைச்சு பேசாம இருந்தா ஓவரா ஆடிட்டு இருக்க. அரசியல்ன்னா என்னன்னு தெரியுமா உனக்கு..? இதென்னா சினிமாவா..? டயலாக் பேசிட்டு போக. யார்கிட்ட மோதிகிட்டு இருக்க..?” என்று வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தார் அவர்.
அவர் பேசுவது ஆதித்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. வந்த தகவலை பொய்யென்று அவன் சொல்லுவதற்குள், அவனின் தன்மானத்தை சீண்டிக் கொண்டிருந்தார் கருணைநாதன்.
“நீயென்ன அவ்வளவு பெரிய ஆளாடா..? இருக்குற இடம் தெரியாம அழிச்சுடுவேன் பார்த்துக்கோ..” என்றார், மிரட்டலாக.
“யோவ்.. நீயென்ன லூசா..?” என்றான் ஆதி.
“மரியாதையா பேசுடா..! கட்சி ஆரம்பிச்சுடுவியா நீ. அந்த அளவுக்கு உனக்கு தைரியம் வந்திருச்சா..?” என்றார்.
“இப்ப வரைக்கும் அந்த எண்ணமே இல்லை. ஆனா, அப்படி பண்ணின்னா நீ என்னைத்தைப் பிடுங்கிருவன்னு யோசிக்கிறேன்..?” என்றான் கோபமாக.
“டேய்..!”
“மரியாதையா மாப்பிள்ளைன்னு சொல்லுங்க மாமா..” என்றான் ஆதி படு நக்கலாக.
“உனக்கு இருக்குடா..!” என்றவர் போனை வைக்க, ஆதித்யாவிற்கு அப்படி ஒரு கோபம்.
அவனைச்சுற்றி நின்ற செய்தியாளர்கள் அவனிடம் கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்க, அவனோ என்ன சொல்வதென்று தெரியாமல் முதன் முறையாக திகைத்து நின்றான்.
“என்ன சார்..? அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?” என்றனர் விடாமல்.
“என்னோட பதிலை நாளைக்கு காலையில் சொல்றேன்..!” என்றவன் வீட்டிற்குள் வந்துவிட்டான்.
“யார் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருப்பாங்க ஆதி..?” என்றார் பார்கவி கவலையாக.
“யார்ன்னு தெரியலைம்மா..!” என்றவன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.
“இப்பவே சொல்லியிருக்கலாமே? வந்த தகவல் பொய்யானதுன்னு. எதுக்கு நாளைக்கு சொல்றதா சொல்லியிருக்க ஆதி..?” என்றார் சேது.
“அந்த கருணைநாதன் ஓவரா பேசுறார். அவரை ஒருநாளாவது தூங்கவிடாம செய்ய வேண்டாம். அதுக்காகத் தான்..!” என்றான்.
“அப்போ, நீ கட்சி ஆரம்பிக்கலை அப்படித்தானே..” என்றார் சேது.
“என்னப்பா நீங்க..? கண்டிப்பா இல்லை. இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை..!” என்றவன், சிரித்தபடி அந்த நிமிடங்களை கடந்து விட்டான்.
அங்கே துவாரகிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே இருக்கிற பிரச்சனை போதாதென்று இப்போது இந்த பிரச்சனை வேறு.
அவள் போன் செய்தாலும் ஆதி எடுக்கவேயில்லை. கருணைநாதன் ஒரு பக்கம் அவளிடம் அவனைப் பேசித் தீர்த்திருந்தார்.
“அவன் உனக்கு பக்கபலமா இருப்பான்னு பார்த்தா, அவன் கட்சி ஆரம்பிக்க போறானாமே..? நீ என்ன செய்வியோ தெரியாது துவாரகி. அவன் கட்சி ஆரம்பிக்கக் கூடாது..” என்று சொல்லி விட்டு சென்றிருந்தார் கருணைநாதன்.
ஆனால், அரசியலுக்கு வர மாட்டேன் என்று சேதுராமனிடம் சொன்ன ஆதித்யா, கட்சியை ஆரம்பித்து மனைவியை எதிர்த்து தானும் மனுத் தாக்கல் செய்வோம் என்று அவன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.
பெற்றோருக்காக கோபத்தை குறைத்திருப்பவன், மீண்டும் அதே கோபக்கார ஆதித்ய வர்மாவாக மாறப் போகும் நாளும் தொலைவில் இல்லை.