ஆகாயம் 2:
துவாரகியின் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் மனதில் தோன்றியது எல்லாம் ஒரே எண்ணம் தான். அது ‘அந்த ஆளின் மகளா இது..? இவங்க வீட்ல இப்படி யாரும் அழகா இல்லையே..?’ என்ற எண்ணம் தான். பார்த்தவுடன் காதலில் விழ, அவன் ஒன்றும் விடலைப் பையன் அல்லவே. பல கதாநாயகிகளோடு டூயட் பாடியவனுக்கு, பெண்கள் என்றாலே சலிப்புத் தட்டியிருந்தது. அவன் இருக்கும் துறை அப்படி. அவனின் ரசிகைகள் தான் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார்களே..!
“சார்..!” என்றபடி கவின் மீண்டும் வந்தான்.
“என்ன கவின்? போன வேகத்துலையே திரும்பி வந்திருக்க..?” என்றான் யோசனையுடன்.
“அந்த பிரடியூசர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு சொல்லிட்டாங்க சார். இன்னைக்கு ஈவ்னிங் அவரை நீங்க பார்க்கலாம்..” என்றான்.
“ஓகே..!” என்றவன், அவன் இன்னும் நகராமல் இருப்பது கண்டு,
“என்ன பிரச்சனை கவின்..?” என்றான் அழுத்தமான பார்வையுடன்.
“இந்த படம் ரிலீஸ் ஆகுறதுல ஏகப்பட்ட பிரச்சனை வரும் போல சார். நீங்க இறங்கிப் போய்…சிஎம் கிட்ட மன்னிப்பு..” என்ற வார்த்தையை அவன் பாதியில் நிறுத்த,
“என்னது..?” என்று உறுமினான் ஆதி.
“நியூஸ் அப்படித்தான் வருது சார்..” என்றான் கவின்.
“அவங்க சொன்னதுக்காக சில காட்சிகளை நீக்கிட்டோம். அதுக்கு மேல என்ன வேணும்..?” என்று கத்தியவன்,
“ஓகே..! ஐ நீட் சம் ரெஸ்ட். ஐ வில் கால் யு..” என்றவன் முகத்தில் என்ன இருந்தது என்று கவினுக்குத் தெரியவில்லை. ஆதி ஏதாவது ஏடாகூடமாய் செய்து விடக் கூடாது என்பதே அவனின் வேண்டுதல். அவனைப் பற்றி தான் கவினுக்கு நன்றாகத் தெரியுமே.
“நீ கிளம்பு கவின், ஆதித்யா பார்த்துப்பான். இதெல்லாம் அவனுக்கென்ன புதுசா..? இந்த இண்டஸ்ட்ரீல இதையெல்லாம் கடந்து தான் வரணும். இதுவும் கடந்து போகும். பார்க்கலாம்..” என்று சேது ராமன் சொல்ல, கவினுக்கும் அதுவே சரியென்று பட்டது.
அன்று மாலையே ஹாஸ்ப்பிட்டலில் இருந்த அந்த பிரடியூசரை சென்று பார்த்தான் ஆதித்ய வர்மா. அவனுடைய நேரத்தை ஒதுக்கி, அவன் இப்படி வருவதெல்லாம் அரிதிலும் அரிது.
அவனை பார்த்த அந்த தயாரிப்பாளர்,
“வாங்க வர்மா சார்..” என்று எழுந்து அமர முற்பட,
“இட்ஸ் ஓகே..! நீங்க அப்படியே இருங்க..” என்றவன்,
“எதுக்காக, இப்படி ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்திங்க..? மரணம் எதுக்கும் தீர்வாகாதுன்னு உங்களுக்குத் தெரியாதா..?” என்றான் சற்று கோபம் கலந்த குரலில்.
“நீங்க சொல்றது எனக்கும் புரியுது வர்மா சார். ஆனா, என்னோட இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க.. வரிசையா நான் பிரடுயூஸ் பண்ண எல்லா படமும் பிளாப். நீங்களும் எனக்காக இந்த படத்துல நடிச்சுக் குடுத்திங்க. ஆனா, ரிலீஸ்க்கு இதுவும் தள்ளிப் போயிட்டே இருக்கும் போது, பினான்சியர் சைட் ரொம்ப பிரஷர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்த படம் ரிலீஸ் ஆகும்ன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை சார்..” என்றார் தொய்ந்து போன குரலில்.
அவரை அப்படி பார்த்த ஆதிக்கும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதுக்காக அவன் இறங்கிப் போக முடியாதே.
“கவலைப் படாதிங்க சார்..! கண்டிப்பா உங்களை இறங்கிப் போக சொல்ல மாட்டேன். இதுனால என்ன நட்டம் வந்தாலும் பரவாயில்லை. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் சார்..” என்றார் அவர்.
அவர் அப்படி சொல்லவும் ஆதிக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருந்தது.
“நான் என்ன பண்ணா, இந்த ப்ரோப்ளம் முடிவுக்கு வரும் சார்..?” என்றான் ஆதித்ய வர்மா.
“அதெல்லாம் வேண்டாம் சார். நீங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிசு சார். கண்டிப்பா உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, இந்த நேரத்துக்கு அவங்க வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க..” என்றார் அவர்.
“நீங்க, சிஎம் கருணைநாதனை மீட் பண்ணி பேசுனா, இந்த பிராப்ளம் முடியும் சார்..” என்று அந்த பிரடியூசரின் உதவியாளர் சொல்ல, பல்லைக் கடித்தான் ஆதித்ய வர்மா. ஒரு நிமிடம் யோசித்தவன்,
“கவின்.. சிஎம்ம மீட் பண்ண ஏற்பாடு பண்ணு..” என்றான். அவன் முகம் கொஞ்சம் தீவிரமாக இருந்ததைப் போல் இருந்தது கவினுக்கு.
“சார் எதுக்கும் யோசிச்சு..” என்று கவின் இழுக்க,
“இதுல இன்னும் யோசிக்க என்ன இருக்கு கவின். இந்த படத்துக்கு பின்னால என்னோட உழைப்பு மட்டும் இல்லை. எத்தனையோ பேரோட உழைப்பும், கனவும் இருக்கு. அதெல்லாம் என்னால வீணாப் போகனுமா..? நான் ஒருத்தன் இறங்கிப் போறதால, எவ்வளவு பேருக்கு நல்லது நடக்கும்..? அதை கெடுப்பானேன்..? நீ அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ணு..” என்றான் ஆதி.
“ஓகே சார்..!” என்றான் கவின்.
“ரொம்ப நன்றி வர்மா சார். நான் இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்…” என்று அந்த ப்ரடியூசர் அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட,
“என்ன சார்..? நீங்க போய்…” என்று அவரின் கைகளை இறக்கியவன்,
“நேரம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது சார். கடிகார முள் ஆரம்பிச்ச இடத்துக்கு வந்தாத்தான், அடுத்து அதால மறுபடியும் சுத்த முடியும். இப்ப நீங்களும் அதே மாதிரி தான்னு நினைச்சுக்கோங்க. மறுபடியும் நீங்க மேல வந்திடுவிங்க… தைரியமா இருங்க. இனி ஒரு தடவை இப்படி ஒரு முடிவைப் பத்தியெல்லாம் யோசிக்காதிங்க..” என்றவன், அடுத்த நிமிடம் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
அவருக்காக, அவன் கருணைநாதனை சந்திக்க சம்மதம் சொன்னாலும், உள்ளுக்குள் மனம் வெம்பிக் கொண்டே தான் இருந்தது.
ஆதித்ய வர்மா ஒரு முன்னணி நடிகன். அவனுக்காக எதையும் செய்யும் கோடிக்கணக்கான ரசிகர்கள். இது தான் அவன் உலகம். அவன் அமைதியாக இருந்தாலும், இடையில் இருக்கும் சில ஜென்மங்கள், அவர்களின் சுயலாபத்திற்காக, அவனை அரசியல் பக்கம் இழுக்கப் பார்க்க, அதுவே அவனுக்கு வினையாக அமைந்தது. அவனின் ஒவ்வொரு படத்திற்கும் முட்டுக் கட்டை போட ஆரம்பித்தார் கருணை நாதன். அவனும் ஒவ்வொன்றையும் மீறி மேலே வந்து கொண்டு தான் இருந்தான். அதனால் தான் ஆதிக்கு அவர் மீது அப்படி ஒரு வெறுப்பு. அவரும் தன்னால் முயன்ற வரை அவனை வளைக்கப் பார்த்தார். ஆனால் ஆதித்ய வர்மா கொஞ்சமும் அசராமல் அவருக்கு டப் கொடுக்க, அவருக்கு மனதின் ஓரத்தில் பயம் முளைக்க ஆரம்பித்தது. அந்த பயத்தின் வெளிப்பாடு தான், அவனுடைய எல்லா படங்களும் ரிலீசுக்கு தாமதம் ஆவது.
மறுநாள் மாலை, அவருடைய வீட்டில் வைத்து சந்திக்க, அவனுக்கு நேரம் தரப்பட்டிருந்தது. அந்த நேரத்தை எதிர்நோக்கியிருந்தான் ஆதித்ய வர்மா.
சிஎம் கருணை நாதன் வீடு..
“என்னங்க..? இன்னைக்கு எதுவும் வேலையில்லையா..?” என்றார் அருணா, கணவரைப் பார்த்து.
“என்ன அருணா.. கிண்டலா..? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு..?” என்றார் கோபமாக.
“இல்லை, எப்பவும் இந்த நேரத்துக்கு வீட்ல இருக்க மாட்டிங்களே.. அதான் கேட்டேன்..” என்றார் அருணா.
“இன்னைக்கு முக்கியமான ஒரு ஆளை மீட் பண்ண வேண்டியது இருக்கு. நம்ம வீட்டுக்கு தான் வர சொல்லியிருக்கேன். அதான்..” என்றார் கருணை நாதன்.
“யாருங்க அது..?” என்ற அருணாவின் கேள்வியில், அவரை முறைத்தார் கருணை நாதன்.
“இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம் அருணா. இதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..?” என்றார் பட்டென்று.
“நான் ஒன்னும் கேட்கலை..” என்று அவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசும் போதே, உள்ளே வந்தார் கருணை நாதனின் உதவியாளர் முருகேசன்.
“சார் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்களாம் சார்..” என்று அவர் சொல்ல,
“ம்ம்..!” என்றவரின் மனதிற்குள் பலவிதமான யோசனைகள்.
“நான் சொல்லும் போது, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடுத்தனுப்பு..” என்றவர்,
“இல்லையில்லை… நீயே கொண்டு வா அருணா..” என்றார்.
“சரிங்க..” என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்லும் போது, அந்த அரண்மனை போன்ற வீட்டின் முன்னால், ஜம்மென்று வந்து நின்றது ஆதித்ய வர்மாவின் உயர் ரக மெர்சிடஸ் கார். அவன் கார் வந்து நிற்கும் போதே, அதற்கு பின்னால் வந்த ஆடி காரும் அவன் கார் அருகே நின்றது.
அன்று முழுவதும் வேலை அதிகமாக இருந்ததால், துவாரகி கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தாள். சோர்வுடன் அவள் இறங்கும் போதே,
“யாரோட கார் இது..?” என்ற யோசனையுன் தான் இறங்கினாள்.
“யார் இது..?” என்று காரின் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா. அவனின் கண்களில் சோர்வுடன் இறங்கிய துவாரகி பட, ஒருநிமிடம் மறந்த நிலையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
“சார்..! போகலாமா..?” என்று கவின் நியாபகப் படுத்த, சரியாக அவள் அருகில் வரும் போது காரில் இருந்து இறங்கினான் ஆதித்ய வர்மா. ஒருநிமிடம் திகைத்துப் போனவளுக்கு, அவனை அங்கு பார்த்ததை நம்ப முடியவில்லை.
“ஆதித்யா வர்மா தானே இது..?” என்ற யோசனையுடனே, அவனை கடந்து சென்றாள் துவாரகி. ஏனோ, அவள் அவனிடம் பேசாமல் சென்றது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“இவங்க சிம் டாட்டர் சார்..” என்றான் கவின்.
“ஐ நோ..! போகலாமா..?” என்றவன் அவளுக்கு பின்னால் செல்ல, ஏனோ அவள் பின்னால் தான் செல்வதைப் போன்ற பிரம்மை அவனுக்குள்.
“என்னடா இவ்வளவு டயர்டா இருக்க..?” என்ற கருணை நாதனுக்கு மகளைக் கண்டு பாசம் பொங்க,
“இன்னைக்கு கேஸ் கொஞ்சம் அதிகம் டாட்..!” என்றவள், யோசனையுடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். ஆதி உள்ளே வர,
“அடடே..! வாங்க வர்மா தம்பி..” என்றார் முகமெல்லாம் பல்லாக. அவருடைய அந்த வரவேற்பை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.
“ஹெலோ சார்..!” என்றவன், கவின் கையில் இருந்த பூங்கொத்தை வாங்கி அவரிடம் நீட்ட,
“பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்கு தம்பி..” என்றவர் அதை வாங்கி, அவரின் உதவியாளரிடம் கொடுக்க, அங்கிருந்து கிளம்ப முயற்சித்தாள் துவாரகி.
“நீயும் இரும்மா..” என்ற கருணை நாதன்,
“என் பொண்ணு டாக்டர் துவாரகி” என்றார் ஆதியிடம்.
“ஹெலோ..! ஆக்டர் ஆதித்ய வர்மா..” என்றவன் அவளை நோக்கி கையை நீட்ட, வேறு வழியின்றி அவளும் கையை கொடுத்தாள். அவளுடைய கையைப் பிடித்து குலுக்கும் போது, அவன் மனதிற்குள் ஏதோ ஒன்று குலுங்கியது. அவன் கை பிடித்த இடம் அவளுக்கு சிவந்து போயிருக்க, அவனை முறைத்தாள்.
“உட்காருங்க தம்பி..!” என்றவர்,
“நீயும் உட்காருமா…” என்றார்.
“சாரி டாட். ஐ பீல் சோ டயர்ட்..! எக்ஸ்கியூஸ்மி..” என்று ஆதியைப் பார்த்து சொன்னவள், அடுத்த நிமிடம் அங்கு நிற்கவில்லை. அவள் வேண்டுமென்றே செல்வதாக நினைத்துக் கொண்டான் ஆதி.
“சொல்லுங்க வர்மா தம்பி, என்ன விஷயம்..?” என்றார் எடுத்த எடுப்பில்.
எல்லாமே தெரிந்தும், அவர் ஒன்றும் தெரியாததைப் போல் பேசியதைப் பார்த்த கவினுக்கே உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது. ஆதித்யாவுக்கு சொல்லவா வேண்டும்? மனதிற்குள் எழுந்த கனலை அப்படியே அடக்கிக் கொண்டான். அவரிடம் இறங்கிப் போக மனம் ஒரு சதவிகிதம் கூட அவனுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை.
“சொல்லுங்க தம்பி..” என்றார் மீண்டும் வேண்டுமென்றே.
“சொல்றதுக்கு ஒண்ணுமில்லை சார்…! இந்த படம் ரிலீஸ் ஆகப் போறதே உங்களால தான். நீங்க இப்படி நான் கேட்காமலேயே எல்லாம் பண்ணுவிங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை சார். தேங்க்யு சோ மச்..” என்றான் ஆதி, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“நான் ஒன்னும் பண்ணலையே..? இது எப்படி நடந்திருக்கும்..?” என்று கருணை நாதன் மனதிற்குள் யோசிக்க, அவரின் முகத்தைப் பார்த்த ஆதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“நான் எதுவும் பண்ணலையே தம்பி..” என்றார் யோசனையுடன்.
“நீங்க எதுவும் பண்ணலைங்கிறது தான் எனக்குத் தெரியுமே..?” என்றான்.
“என்ன குழப்புறிங்க வர்மா தம்பி… என்ன இதெல்லாம். நீங்க ஏதோ மன்னிப்பு கேட்க வரதா சொன்னாங்க..” என்றார் கோபமாய்.
“சொல்லியிருப்பாங்க..! ஏன்னா, அவங்களுக்கு சொன்ன தகவல் அதான் பாருங்க..!” என்று இடைவெளி விட்டவன்,
“அப்பறம் எப்படி படம் ரிலீஸ் ஆகும்..?” என்றார் கோபமாய்.
“ஆகுமே..! இப்ப நான் என்ன பண்றேன், நேரா போய், உங்க எதிர்க்கட்சித் தலைவரை மீட் பண்றேன். அவர்கிட்ட என்ன சொல்றேன்னா, அடுத்த எலக்சன்ல, நான் உங்களுக்கு சாதகமா பேசறேன். உங்க கட்சிக்கு ஆதரவா ஒரு அறிக்கை விடுறேன் அப்படின்னு சொன்னேன்னு வைங்க..என்ன நடக்கும்..?” என்றான்.
“என்ன நடக்கும்..?” என்று கவின் தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான்.
“இருக்குற பாதி தியேட்டர், அவங்க பினாமி தியேட்டர் தான். நான் சொன்ன அடுத்த நிமிஷம் எல்லாமே சரியாகும். உங்க செல்வாக்குல இருக்குற தியேட்டர்ல மட்டும் தான் படம் ரிலீஸ் ஆகாது. அதுக்கு நான் என்னோட சம்பளத்தையே வேண்டாம்ன்னு சொல்லுவேன். படத்தோட தயாரிப்பாளர் நன்மைக்காக, சம்பளம் முழுவதையும் விட்டுக் கொடுத்த நடிகர்ன்னு என்னோட இமேஜ் உயரும். உங்க எதிர்கட்சிக்கும் அடுத்த எலக்சன்ல ரிசல்ட் தெரியும். நான் சொல்றது புரியும்ன்னு நினைக்கிறேன் சார்..! என்ன இருந்தாலும் நீங்க சிஎம். நீங்கதான் பார்த்து பண்ணனும்..” என்றான் பவ்யமாக.
அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டனர். அவன் வேண்டாம் என்று சொன்ன சம்பளம் எவ்வளவு என்று கவினுக்குத் தெரியும். பலகோடிகளை ஒரே நேரத்தில் வேண்டாம் என்று சொல்ல யாரால் முடியும். அதே சமயம் அவன் எதிர்கட்சி பக்கம் சென்றால் என்ன நடக்கும் என்று கருணை நாதனுக்கும் தெரியும்.
வலை போட்டு அவனை தன் பக்கம் இழுக்க கருணை நாதன் நினைத்திருக்க, அவர் விரித்த வலையில் விழுவதைப் போல் விழுந்து அந்த வலையையே அறுத்து எறிந்திருந்தான் ஆதித்ய வர்மா.
“நீங்க என்னைப் பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க தம்பி. படத்துல அரசியல் பேசியிருக்கிங்கன்னு தான், அதை நிறுத்த சொன்னேன்..” என்று அவர் கொஞ்சம் இறங்கி வர,
“யார் தான் அரசியல் பேசலை. டீக்கடையில ஆரம்பிச்சு எல்லாரும் தான் அரசியல் பேசுறாங்க. இன்னும் தெளிவா சொல்லனும்ன்னா கழுவி ஊத்துறாங்க. அவங்களையெல்லாம் என்ன பண்ண முடியும் உங்களால. உங்களை ஓட்டுப் போட்டு உட்கார வச்ச எங்களுக்கு அந்த உரிமை கூட இல்லைனா எப்படி சார்..?
எப்படி நாட்டைக் கொள்ளையடிச்சு நீங்க சொத்து சேர்க்கும் போது உங்களுக்கு சந்தோஷமா இருக்கோ, அதே மாதிரி நாங்க கழுவி ஊத்துறதையும் நீங்க சந்தோஷமா ஏத்துகிட்டு தான் ஆகணும். என்னமோ இதெல்லாம் உங்களை பெரிசா பாதிக்கப் போற மாதிரி, பிளாக் மெயில் பண்ணிட்டு இருக்கீங்க..? அப்படி உங்களை பாதிச்சிருந்தா, நீங்கல்லாம் எப்பவோ திருந்தியிருப்பிங்க சார்..” என்றான் ஆதித்யா.
அவன் பேசபேச கருணை நாதனுக்கு உள்ளுக்குள் எரிந்தது. அவர் நினைத்தது என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன..? அவர் அதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“காபி எடுத்துக்கோங்க தம்பி..!” என்றபடி வந்தார் அருணா.
“தேங்க்ஸ் ஆன்ட்டி..!” என்றவன் காபியை ரசித்து குடிக்க ஆரம்பிக்க,
“நீங்க தான் வரப்போறிங்கன்னு இவர் சொல்லவே இல்லை தம்பி. உங்க படமெல்லாம் பார்ப்பேன், ரொம்ப நல்லா நடிக்கிறிங்க..” என்றார் அருணா, வெகுளியாய்.
“நீங்க பாராட்டுறது என்னோட பாக்கியம் ஆன்ட்டி..” என்றான் ஆதி சிரிக்காமல்.
“என்ன தம்பி இப்படி சொல்லிட்டிங்க..? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா..? உங்க அளவுக்கு வர முடியுமா தம்பி..” என்றார் அருணா.
“சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க பெரிய ஆள் தான் ஆன்ட்டி. நீங்க சிஎம் மனைவி…மறந்துடாதிங்க.. காபி ரொம்ப அருமையா இருந்தது..” என்று அவரிடம் கப்பை நீட்ட,
“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, ஒரு செல்பி எடுத்துக்கலாமா..?” என்றார் அருணா.
“ஷ்யர்..” என்றவன் எழுந்து நிற்க,
“ஒரு நிமிஷம் தம்பி,,!” என்ற அருணா, உள்ளே சென்று,
“துவாரகி, பூமிகா..!” என்று அவர்களையும் அழைத்தார் சத்தமாய். இங்க கருணைநாதன் எரிச்சலுடன் இருக்க,
“என்னம்மா..?” என்றபடி வந்தனர் இருவரும்.
“என்ன அத்தை..? எதுக்கு கூப்பிட்டிங்க..?” என்று பூமிகா கேட்க,
“அங்க ஆதித்ய வர்மா தம்பி வந்திருக்கார், வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்..” என்றார் அருணா.
“நிஜமாவா அத்தை..” என்ற பூமிகா, ஆவலுடன் செல்ல,
“அம்மா உங்களுக்கு வேற வேலை இல்லையா..?” என்று எரிச்சல் பட்டாள் துவாரகி.
“துவா…ப்ளீஸ்மா..! வாயேன்..” என்று அவர் கெஞ்ச, அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை. வேண்டா வெறுப்பாக அவருடன் வந்தாள்.
“சார் கூட நின்னே எல்லாரும் எடுத்துக்கலாம் ஆன்ட்டி..” என்று அவன் சொல்ல,
“அதுவும் சரிதான் தம்பி..” என்றவர், கருணை நாதனின் அருகில் சென்று நின்றார். அவர்கள் அனைவரையும் ஒரே போட்டோவிற்குள் அடக்கினான் கவின்.
“சாப்பிட்டு தான் போகணும் தம்பி..” என்று அருணா விடாமல் சொல்ல,
“இருக்கட்டும் ஆன்ட்டி. அம்மா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..! இன்னொரு நாள் கண்டிப்பா வந்து சாப்பிடுறேன்..” என்றான் துவாரகியைப் பார்த்துக் கொண்டே.
கருணை நாதனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. அவர் நினைத்தது ஒன்று. இப்போது நடந்திருப்பது ஒன்று. இதை எப்படி சரி செய்வது என்ற யோசனை தான் அவருக்கு.
“அப்போ நான் கிளம்புறேன் சார்..!” என்றான் ஆதி, படு கெத்தாக.
“மன்னிக்கணும் தம்பி. நான் எதுவும் தப்பா நினைச்சு செய்யலை. அதுக்காக நீங்க எதிர்க்கட்சிக்கு ஆதரவு குடுக்கணும்ன்னு அவசியம் இல்லை. உங்க ஆதரவு எங்களுக்கு இருக்கனும்ங்கிறது தான் என்னோட ஆசை..” என்றார் கருணை நாதன்.
“அப்படி வா வழிக்கு..” என்று மனதிற்குள் நினைத்த ஆதி,
“நீங்க இந்த பிரச்சனையை சுமூகமா முடிச்சு விடுங்க சார். அது போதும் எனக்கும்..” என்றான் அவனும் விடாமல்.
“கண்டிப்பா தம்பி..! நான் இந்த பிரச்சனையை முடிச்சு வச்சா, நீங்க என்ன செய்வீங்க..?” என்றார்.
“நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறிங்க..?” என்றான் இடுங்கிய பார்வையுடன்.
“பெரிசா ஒண்ணுமில்லை தம்பி. நேரம் வரும் போது நானே சொல்றேன்..” என்றார் அவர்.
“வந்த வேலை முடிஞ்சது சார்..! அப்போ நான் கிளம்புறேன்..” என்றவன், ஏதோ தோன்ற மேலே நிமிர்ந்து பார்த்தான். பட்டென்று யாரோ உள்ளே செல்வதைப் போல் இருந்தது. தலையை உலுக்கிக் கொண்டவன் வெளியே வந்துவிட்டான்.
“என்ன சார்..? அவன் மன்னிப்புக் கேட்பான்னு பார்த்தா, உங்களை மன்னிப்பு கேட்க வச்சுட்டு போயிருக்கான்..?” என்றார் உதவியாளர் முருகேசன்.
“இவனை சாதாரணமா எடை போட்டது என்னோட தப்பு முருகேசா. நம்ம இவனுக்கு ஆப்பு அடிக்கனும்ன்னு நினைச்சா, நமக்கு எங்க ஆப்பு வைக்கணும்ன்னு இவனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. இவனைப் பார்த்து தான் டீல் பண்ணனும். இவன் தலையாட்டினா, தமிழ்நாட்ல பாதி ஒட்டு நமக்குத் தான். இவனை எதிர்க்கட்சி பக்கம் சாய விடாம பார்த்துக்கறது தான் முக்கியம்..!” என்றார் கருணை நாதன்.
“எனக்கு ஒரு யோசனை தோணுது. சொன்னா நீங்க தப்பா நினைக்க மாட்டிங்களே..?” என்றார் முருகேசன்.
“என்னனு சொல்லு..” என்றார்.
“ஆள் பார்க்க, ராஜா கணக்கா ஜம்முன்னு இருக்கான். வசதியிலையும் குறைச்சல் இல்லை. பேசாம நம்ம பாப்பாவுக்கு இந்த பையனை முடிச்சுட்டா, எல்லாமே நமக்கு சாதகமாவே இருக்கும் பாருங்க..” என்றார் முருகேசன்.
“இது சரியா வருமா முருகேசா..?”
“சரியா வரும் சார். நம்ம வீட்டு மாப்பிள்ளையானதுக்கு அப்பறம் நம்ம சொல்றதைத் தான கேட்டாகணும். அதுமட்டுமில்லாம, இவரை மாப்பிள்ளை ஆக்கிட்டா, இவர் ரசிகருங்க ஒட்டு எல்லாமே நம்ம கட்சிக்கு தானுங்களே..” என்றார்.
“இதுக்கு துவாரகி சம்மதிக்கணுமே..?” என்றார் கருணை நாதன்.
“நம்ம பாப்பா நீங்க சொன்னா கேட்டுக்கும் சார். ஆனா, இந்த பையன் தான் சம்மதிக்கணும்..” என்றார் முருகேசன்.
“என் பொண்ணை கட்டிக்க, இவன் தான்யா குடுத்து வச்சிருக்கணும்..” என்ற கருணை நாதன் யோசனைக்கு போக, வெளியே கவினும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
காரில் சென்று கொண்டிருந்த ஆதிக்கு நினைவில் நின்றது எல்லாமே துவாரகி மட்டும் தான். அவளின் அமைதியான அந்த முகமே மீண்டும் மீண்டும் மனதில் வந்து போனது.
“சூப்பர் சார்..” என்ற கவினின் குரலில், நிஜத்திற்கு வந்தவன்,
“என்ன சூப்பர் கவின்..?” என்றான் ஆதி.
“நான் கூட நீங்க இறங்கிப் போய் மன்னிப்பு கேட்டுருவிங்களோ அப்படின்னு நினைச்சேன் சார். ஆனா, இதை நான் எதிர்பார்க்கலை..” என்றான் கவின்.
“மன்னிப்புக் கேட்கிறதில் தப்பில்லை கவின். அதை யார்கிட்ட கேட்கணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு. இவர் அதுக்குள்ளே வரமாட்டார்..” என்றான் ஆதி.
“உண்மை தான் சார்..! நீங்க அவர்கிட்ட சொன்னது எல்லாம் உண்மையா சார்..”
“எங்க..? சும்மா பேசிப் பார்த்தேன். நான் நினைச்ச மாதிரியே தான் எல்லாம் நடந்தது. இதுவும் நல்லதுக்கு தான்..” என்றான் ஆதி.
“அவர் பொண்ணை இதுவரைக்கும் அதிகமா வெளி பங்க்ஷன்ல நான் பார்த்ததே இல்லை சார்..” என்ற கவின், அவனை ஆழம் பார்க்க,
“அவங்களுக்கு அது பிடிக்காம இருக்கலாம். ஆமா, போட்டோ உன்னோட மொபைல்லையும் ஒன்னு எடுத்த தானே. அதை எனக்கு சென்ட் பண்ணு..” என்றான் ஆதி.
“அப்பவே பண்ணிட்டேன் சார்.!” என்றான் கவின் உற்சாகமாக.
“எதுக்கு நீ இவ்வளவு உற்சாகமா இருக்க..?” என்றான் ஆதி கேள்வியாக.
“எனக்கு ஒன்னு தோணுது சார்..” என்றான் கவின்.
“என்ன தோணுது..?”
“நீங்க மட்டும் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டிங்கன்னா, அவர் குடுமி உங்க கைல சார். அவருக்கு நீங்க மாப்பிள்ளை ஆகிட்டிங்கன்னா, அவர் உங்க வழிக்கு வந்து தானே ஆகணும் சார்..” என்றான் கவின்.
“இதுக்கு அந்த பொண்ணு சம்மதிக்கணும்..” என்றான் ஆதி சிரிப்புடன்.
“உங்களைப் பிடிக்காம இருக்குமா சார். அப்படியே பிடிக்கலைன்னாலும், கழுத்துல தாலியை கட்டிட்டா, உங்க வழிக்கு வந்து தான சார் ஆகணும்..” என்று கவின் அவன் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க,
“கவின்..!!!” என்று ஆதி உறுமிய உறுமலில், டிரைவர் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.
“சார்..!!” என்று அதிர்ந்தான் கவின்.
“ஒரு பொண்ணை, அவ விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி, அது மூலமா காரியம் சாதிக்கிற அளவுக்கு நான் தரங்கெட்டுப் போயிடலை. எந்த ஒரு பிரச்சனைக்குள்ளையும் பொண்ணுங்களை இழுக்கக் கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..!” என்று வார்த்தைகளை அவன் கடித்துத் துப்ப,
“சாரி சார்..! ஏதோ விளையாட்டா..இப்படி பேசிட்டேன்..” என்றான் கவின்.
“இனி விளையாட்டுக்குக் கூட இப்படி பேசாத. விருப்பமில்லாம தாலிகட்டி, நம்ம இஷ்ட்டத்துக்கு இழுத்துட்டு வர, அவங்க ஒன்னும் ஆடு மாடு கிடையாது. அப்படி ஒரு வெற்றியும் எனக்குத் தேவையில்லை. இது தான் முதலும் கடைசியுமா இருக்கணும். இனி இப்படி பேசினா, நீ வேற ஒரு ஆதித்யாவைத் தான் பார்க்க வேண்டி வரும்..” என்றவன் அவனை முறைத்து விட்டு, சீட்டில் சாய்ந்து கொள்ள, அவனையும் மீறி, துவாரகியின் முகம் மீண்டும் அவன் கண்களுக்குள் வந்தது.
“என்ன இது..? ரெண்டு நாளா, இவ முகம் என் கண்ணுக்குள்ளயே இருக்கு..!!!” என்று யோசித்துக் கொண்டிருக்க, அந்த முகத்திற்கு சொந்தக்காரியும், அங்கே இவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.