Skip to content
Post Views: 13,909
இரண்டு நாள் கழித்துதான் மேகலை வந்தார். பரஸ்பர விசாரிப்பிற்கு பிறகு, “விஷாலினி சம்மதிப்பாளா மேகலை?” என்றார் பிரபாவதி.
“நீங்க கேட்டு மறுப்பாளா அண்ணி?” என்றார்.
“மத்ததும் கல்யாணமும் ஒன்னில்லையே. மனசுக்கு பிடிக்கனுமே” என்றார் கவலையாக.
“இந்த வாரம் வர சொல்லியிருக்கேன் அண்ணி, நேர்ல கேட்டுடறேன்” என்றவர், “ஆனா என் அண்ணன் மகன்தான் என்ன சொல்லியும் கேட்க மாட்டேங்கிறான்” என்றார் சிறு கோபத்தோடு.
Advertisement
“விஷாலினிக்கு பேசி முடிச்சாச்சுனு சொல்ல வேண்டியதுதானே?”
“சொல்லியும் நம்ப மாட்டேங்கிறான், அவனை மறுக்க காரணம் சொல்றேன்னு நினைக்கிறான். பழசை மனசுல வைக்காதிங்கன்றான், மகன் விருப்பத்தை நிறைவேத்த என் அண்ணனும் விரும்பறார். என் அண்ணனுக்கு விருப்பம்ன்னு தெரியவும், அண்ணி, அப்பா எல்லாரும் ஆசைப்படுறாங்க.
எனக்கு என்ன சொல்லனே தெரியல. விஷாலினிக்கு பேசி முடிக்கலனாலும் கிருஷ்ணனை கட்டிக்கமாட்டானும் சொல்லிட்டேன். ஆனாலும் நாங்க பேசிப் பார்க்குறோம்னு சொல்றாங்க. இதுக்கு மேல புரிய வைக்க என்னால ஆகல. பேசாம கிளம்பிட்டேன்.
Advertisement
அம்மா இறந்து மூனு மாசம் ஆகாம நல்ல விசயம் பேச மாட்டாங்க. அதுக்குள்ள நாம விஷாலினிக்கும் விஷ்ணுக்கும் நிச்சயத்தை முடிச்சிடலாம்” என்றார் மேகலை.
Advertisement
“விஷாலினி படிப்பு முடியட்டும்னு விஷ்ணு சொன்னானாம், அப்புறம் எப்படி நிச்சயம் வைக்கிறது?” என்றார்.
“விஷாலினி படிப்பு பத்தி யோசிக்காதிங்க. எப்படினாலும் அவ படிச்சிக்குவா” என்றார்.
“நாளைக்கே கல்யாணம்னாலும் எனக்கு சம்மதம்தான். விஷாலினி படிப்புல கெட்டிதான். என் மகனும் அவளுக்கு தோதாதான் நடந்துப்பான். என் பிரச்சனை வேற மேகலை” என்றார் கவலையாக.
Advertisement
“என்ன பிரச்சனை அண்ணி?” என்றவருக்கு தன்போல் விளங்கிட, “வயசு பிள்ளையை வச்சிக்கிட்டு மகனுக்கு பண்றது கஷ்டம்தான் அண்ணி, அந்த பையனும் காவ்யா கண்டிஷனுக்கு இணங்கி வரமாட்டான் போல. கண்டிஷனுக்கு ஒத்துக்காம காவ்யாவும் போகமாட்டா, நாமளும் அப்படி அனுப்பக்கூடாது. ஆனா என்ன பண்ணி காவ்யா பிரச்சனையை தீர்க்குறது?” என்றார் தானும் கவலையாக.
“அதான் எனக்கும் கவலையா இருக்கு மேகலை, நிச்சயம் வச்சாலும் எங்க பக்கத்து ஆளுங்க எல்லாரும் காவ்யா பத்தி கேட்பாங்க. என் கொழுந்தனார் இப்படிப்பட்டவனைலாம் அத்துவிடறதுல தப்பே இல்ல, வயசு போய்ட்டே இருக்கு. விவாகரத்து பண்ணிட்டு வேற பையனை பார்ப்போம்னு சொல்றார்.
எனக்கு அதுல உடன்பாடு இல்லைனாலும் காவ்யாகிட்ட கேட்டுடுவோம்னு கேட்டு பார்த்தேன். என் வாழ்க்கையில கல்யாணம் முடிஞ்சி போன ஒன்னு, நான் உங்களோடவே இருந்திடறேனு சொல்றா” என்றார் கவலையாக.
“என்னை மாதிரி ஆக விடக்கூடாது அண்ணி, நான் காவ்யாகிட்ட பேசுறேன். கவலைப்படாதிங்க, எதாவது செய்வோம்” என்றார் நம்பிக்கையோடு.
மகளின் நிலையை தன்னிலையில் இருந்து மேகலை யோசிக்கவும் பிரபாவதிக்கு நிம்மதியாகிட, காவ்யா பற்றிய கவலையை தள்ளி வைத்து, “விஷாலினிக்கும் விஷ்ணுவுக்கும் சின்ன வயசுலயிருந்தே ஆகாது. இப்போ டக்குனு கல்யாணத்துக்கு கேட்டா சம்மதிப்பாளா?” என்றார்.
“விஷ்ணு தம்பியை கட்டிக்க கசக்குமா அவளுக்கு? பெத்தவங்க மேல பாசமா இருக்காரு, நல்ல வேலை, லட்சணமான முகம், செதுக்கினாப்புல உடம்பு” என்று மருமகனை ரசித்துக்கூறி, “எல்லாத்துக்கும் மேல அவளுக்கு பிடிச்ச அத்தை மாமனே மாமனார் மாமியாரா ஆகப்போறாங்க. சின்ன வயசுலயிருந்து பழகிய நெருங்கின தோழியே நாத்தனார் ஆகப்போறா… வேற என்ன வேணும் இன்னும்?” என்றார் பெருமையாக.
பிரபாவதிக்கும் சந்தோசமாகிட, காவ்யா வாழ்வு பற்றியும், விஷாலினி விருப்பம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.
இரண்டு நாள் கழித்து விஷ்ணுவிற்கு அழைத்தார் கோபாலன். விஷ்ணு அழைப்பை ஏற்க, “மேகலை நிச்சயம் மட்டுமாவது சீக்கிரம் வச்சிக்கலாம்னு சொல்லுது” என்றார்.
“ஏன்ப்பா?”
“காலைல மேகலையோட அண்ணி பேசுனாங்களாம். அவங்க பையன் கட்டினா விஷாலினியைத்தான் கட்டுவேனு சொல்றானாம். நிச்சயம் முடிஞ்சிட்டா அண்ணன் மகன் புரிஞ்சிப்பானாம்”
“மத்தவங்களுக்கு பயந்து நாம எதையும் செய்ய முடியாதுப்பா. கல்யாணம் மட்டுமில்ல, அதை சார்ந்த விசயங்களும் முழுமனசோட ரசிச்சு செய்யனும். படிச்சிட்டிருக்க பிள்ளைகிட்ட நிச்சயத்துக்கு கேக்குறது தப்பில்லையா?” என்றான்.
“விஷாலினி சம்மதம் சொல்லிடுச்சு”
“நான்தான் அவகிட்ட இப்போ இதைப்பத்தி பேச வேண்டாம்னு சொல்லியிருந்தேனே, எதுக்கு கேட்டிங்க?” என்றான் கோபமாக.
“மேகலையோட அண்ணன் மகன் பண்ற அலப்பறையில மேகலை அவசரப்பட்டு கேட்டுடுச்சு”
இணைப்பை துண்டித்த விஷ்ணு விஷாலினிக்கு அழைக்கலாமா என்று நினைத்தான். அவள் வீட்டில் இருப்பதாக பிரபாவதி சொல்லியிருக்க, ஆன்ட்டி பக்கத்துல இருந்தா பேச கஷ்டம். நாளைக்கு காலேஜ் போய்டுவா, ஈவ்னிங் பேசலாம் என நினைத்துக்கொண்டான்.
இவன் வேற கோபமா கட் பண்ணிட்டானே என்று கோபாலன் புலம்ப, மாடியிலிருந்து கோபாலன் பேசியதை கேட்டிருந்த விஷாலினி விஷ்ணுவிற்கு ‘கால் பண்ணட்டுமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். அழைத்தாள்.
செய்தி பார்த்ததும் விஷ்ணு அழைக்க, அழைப்பை ஏற்றதும் “எல்லாரும் ஹாஸ்பிட்டல்ல வச்சே பேசி முடிச்சிட்டு என்கிட்ட சொல்லல” என குறைபட்டாள்.
அவளின் குறையை புறம்தள்ளி “எதுக்கு நிச்சயத்துக்கு சம்மதம் சொன்ன?” என்றான் கோபமாக.
“அம்மா டென்ஷன் இல்லாம இருப்பாங்க, அதோட அந்த கிருஷ்ணனுக்கும் அப்போதான் புரியும். இன்னைக்கு காலைல கூட அம்மாவோட அண்ணி போன்ல கால்மணி நேரம் பேசிட்டிருந்தாங்க. என்னைப் பத்தி அவங்க பேசுறது எனக்கு பிடிக்கல. நிச்சயம் செய்துட்டா அவங்களுக்கும் புரிஞ்சிடும். அதான்”
“கட்டிப்புடிச்சா விறப்பா நிற்குற… நிச்சயம் ஒன்னுதான் இப்போ குறைச்சலா?” என கடிந்து, “இன்னைக்கு சாயங்காலம் அந்த கிறுக்கன்கிட்ட நான் பேசுறேன். நிச்சயம்லாம் கல்யாணத்தோட ஒன்னா வச்சிக்கலாம். ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு” என்றான்.
விஷாலினி அமைதியாகிட “என்ன? சொல்றது புரியுதா?” என்றான்.
“நிச்சயம் செய்தாலும் நல்லாத்தான் படிப்பேன்” என்றாள் சன்னக்குரலில்.
“நீ நல்லா படிப்ப, ஆனா என்னால ஒழுங்கா டியூட்டி பார்க்க முடியாது. நிச்சயம் முடிச்சிட்டு ஒரு வருசத்துக்கு கல்யாணத்தை தள்ளி போடறதுக்கு ஒரேடியா உன் படிப்பு முடிஞ்சதும் பண்ணிக்கலாம்” என்றான்.
“ம்” என்று சோர்வாய் சொல்லி, “வைக்கவா?” என்றாள்.
இவளின் சோர்வில் மனம் சற்று இதமாக, “விஷாலினி” என்றான் கோபமில்லாமல்.
விஷ்ணுவின் கனிவான அழைப்பில் மனம் படபடக்க, “ம்” தேய்ந்த குரலில்.
“உன்னை மாதிரி ஹார்மோன் குறைபாடு உள்ளவன் இல்ல நான். நல்ல ஆரோக்யமான ஆம்பிளை. ஹார்மோன்லாம் பர்ஃபக்ட்டா வேலை செய்யும். அன்னைக்கு உன்னை பக்கத்துல பார்த்ததும் கட்டிக்க தோணுச்சு. நிச்சயம் செய்துட்டா இன்னும் என்னென்ன தோணுமோ… என்னை படுத்தாம படிக்கிற வேலையை பாரு” என்றான் கெஞ்சலாக.
விஷ்ணுவின் குழைவான பேச்சில் அதிர்ந்தாலும், “எனக்கு எந்த குறையும் இல்ல, நானும் ஆரோக்யமான பொண்ணுதான்” என்று ரோசமாய் சொல்லி இணைப்பை துண்டித்தாள் விஷாலினி.
அவளின் பதிலில் சிரித்தவன், கிருஷ்ணனின் எண்ணை விசாரித்து அழைத்து, அவனோடு பேச விருப்பம் தெரிவித்தான். கிருஷ்ணன் மறுக்க, என்னை சந்திச்சுதான் ஆகனும் என்று கட்டளையாய் சொல்லி அவனின் அலுவலகத்திற்கு சென்றான்.
“என் பர்மிஷன் இல்லாம கேபின்க்கு எதுக்கு மேன் வந்த?” என்றான் முறைப்போடு.
பொறுமையை வரவழைத்தவன், “உன் மேல கை வைக்கக்கூடாதுனு ஆன்ட்டி ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க. விஷாலினி பாட்டி முகத்துக்காகவும் பார்க்க வேண்டியதாயிருக்கு. நல்லவிதமா சொல்றேன். விஷாலினியை கல்யாணம் செய்துக்கிற எண்ணத்தை மறந்துடு” என்றான் தன்மையாக.
“ஓ… அந்த விஷ்ணுவர்தன் நீதானா?” என்று பார்வையால் அளந்தவன், “DSP னா பயந்துடுவோமா?” என்றான்.
“நீ பயந்துடக்கூடாதுனுதான் யுனிஃபார்ம்ல வரல. உன்னை பயப்பட வைக்கும் எண்ணமும் எனக்கில்ல. இனி விஷாலினியை தொல்லை பண்ணாத” என்றான் கட்டளையாக.
“அவளுக்கு எங்க குடும்பத்து மேல சாஃப்ட் கார்னர் இருக்கு. பழைய பிரச்சனைல எங்களை அவாய்ட் பண்றா. கொஞ்சநாள் போனா சரியாகிடுவா. இல்ல, சரி பண்ணிடுவேன்” என்றான்.
கன்னத்தில் அரைவதுபோல் கையை ஓங்கியவன், “அவ இவனு பேசின… தொலைச்சிடுவேன்” என்று எச்சரித்து, “அவ என்னைத்தான் விரும்புறா. எதாவது பைத்தியக்காரத்தனம் செய்த, இப்போ போல பேசிட்டிருக்கமாட்டேன்” என்றான் முறைப்போடு.
மனதால் அடிவாங்கினாலும், “அதை விஷாலினி சொல்லட்டும்” என்றான்.
“லூசு… நானாவது டீசன்ட்டா சொல்றேன். அவகிட்ட போனா… சாவுறமாதிரி கேள்வி கேட்பாடா. பொறுமையா சொன்னா புரிஞ்சிக்கமாட்டியா?” என்று சிறுவனுக்கு போல் எடுத்துரைத்து, “கம்பெனியை நடத்தினோமோ… நாலு காசு பார்த்தோமா… உனக்கேத்த பொண்ணை பார்த்து கல்யாணம் செய்தோமானு இரு.
அவ பேச ஆரம்பிச்சா உன்னை மட்டும் பேசமாட்டா. மொத்த குடும்பத்தையும் இழுப்பா. எவ்வளோ ரோசம் இருந்தா உன் வீட்டுல இரண்டு நாள் இருந்தும் ஒருவாய் சோறுகூட திண்ணாம இருந்திருப்பா? அப்படியிருக்கவ உன்னை கட்டிப்பாளா? தேவையில்லாத வேலை செய்து உன்னோட சேர்த்து மொத்த குடும்பத்தார் மனசையும் ரணமாக்க வச்சிடாத” என்று எடுத்துரைத்து கிளம்பியிருந்தான்.
இரண்டு வாரம் கழித்து மூன்று நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்தாள் விஷாலினி. விஷ்ணுவிடம் வீட்டிற்கு வருவதாய் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
ஒருமணிநேரம் கழித்து செய்தியை பார்த்தவன், விஷாலினிக்கு அழைத்து “சரி அதுக்கு நான் என்ன பண்ண?” என்றான்.
“ஒன்னும் பண்ண வேண்டாம். உங்களை பார்க்கத் தோணுச்சு, சொன்னேன். டைமிருந்தா வாங்க. இல்ல விடுங்க” என்றாள். மனம் இதமாக இணைப்பை துண்டித்து, இன்றிரவு சென்னை செல்ல திட்டமிட்டான்.
அன்னையின் பதினாறாம் நாள் காரியத்திற்கு இரண்டு நாள் முன்புதான் சென்று வந்தார் மேகலை. அன்னை சென்று வந்ததில் விஷாலினிக்கு உடன்பாடில்லை.
நம் வீட்டிலேயே பாட்டியின் படத்தை வைத்து கும்பிட்டா ஆகாதா என்றிருந்தாள். இது அங்குபோய்தான் செய்ய வேண்டும் என்று அன்னை வீட்டிற்கு சென்று வந்திருந்தார் மேகலை.
*** *** *** ***
இரண்டு நாளாய் உண்ணவில்லை என்று மருத்துவர் சொன்னபின்னேதான் மேகலையின் குடும்பத்திற்கு தெரிந்தது. அதற்கு பிறகும் கூட பாட்டியின் நிலையை தாளமுடியாமல் உண்ணாமல் இருந்திருப்பாள் என்று நினைத்திருந்த கிருஷ்ணனுக்கு, விஷ்ணு சொன்னதற்கு பிறகுதான் விஷாலினி ரோசத்தோடு உண்ணாமல் இருந்திருக்கிறாள் என்று புரிந்தது.
பாட்டியை தவிர்த்து வீட்டில் வேறு எந்த பகுதிக்கும் செல்லவில்லை என்று புரிய இன்னும் சற்று ஆழ்ந்து யோசித்த பிறகுதான், யாரிடமும் பேசவில்லை என்பதும், பாட்டியை இடுகாட்டிற்கு எடுத்து செல்லும்போது தனது அன்னையிடம் கூட உறவு சொல்லி பேசாமல் உங்க அண்ணன், உங்க அப்பா என்று பேசியது நினைவிற்கு வந்தது.
விஷ்ணு பேசியதை தந்தையிடம் சொன்னான் கிருஷ்ணன். “மேகலையும் சொன்னுச்சு கிருஷ்ணா, விஷாலினியை விஷ்ணுக்கு பேசி முடிச்சிட்டாங்களாம், மேகலைக்கும் உன்னை மருமகனாக்கிக்க விருப்பம் இருக்காது. விஷாலினியை மறந்துடு. வேற பொண்ணு பார்க்குறேன்” என்று வேலவனும் சொன்னார்.
இரண்டு பகல் ஓர் இரவு மட்டுமே விஷாலினியை பார்த்தான். ஆசையாய் என்றில்லை, இயல்பாய் கூட ஓர்வார்த்தை பேசவில்லை. ஆனால் மொத்தமாய் ஈர்த்திருந்தாள் கிருஷ்ணனை.
அன்னையும் அத்தையும் வெளியில் அமர்ந்து பாட்டியின் உடல்நிலை குறித்து கவலையோடு பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பாட்டியின் கழிவை சுத்தம் செய்தபோது நெகிழ்வான கண்ணீரோடு பாட்டி மறுக்க, “எனக்கும் என் அம்மாக்கும் இந்த கையால எத்தனை முறை செய்திருப்ப பாட்டிம்மா? இப்போ எனக்கான வாய்ப்பு” என்று சிறிதும் முகம் சுருக்காமல் அவள் செய்த பணியில் மொத்தமாய் வீழ்ந்துவிட்டான் கிருஷ்ணன்.
தன் அன்னையை தவிர யாரும் பாட்டிக்கு அப்பணியை செய்ததில்லை. கூப்பிட்ட குரலுக்கு தங்கை செல்வாள். தண்ணீர் கொடுப்பது, சற்று நேரம் பேசியிருப்பது போன்றவைகளை செய்திருக்கிறாள். ஆனால் விஷாலினி போல் ஓர்நாளும் செய்ததில்லை.
விஷ்ணு, அம்மா, அப்பா, தாத்தா என்று யார் சொல்லியும் அடங்க மறுத்தது கிருஷ்ணன் மனம். ஒரே ஒருமுறை நேரில் சென்று பேசிப்பார்ப்போம் என்று மனம் தவிக்க, இதோ கிளம்பிவிட்டான் விஷாலினி வீட்டிற்கு.
error: Content is protected !!