“ஹாலோ” என்று மறுமுனையில் ஒலித்த ஆண் குரலை கேட்டு மனதில் நிம்மதி பரவியது. ‘எங்கே இரண்டு நாட்களை போல அழைப்பை ஏற்காமல் அலைக்களித்து விடுவானோ’ என்று எண்ணி இருந்தவளுக்கு அவன் முதல் அழைப்பிலேயே எடுத்துவிட, அவளுக்கு தான் பேசுவதற்கு சற்று தயக்கமாக இருந்தது.
அழைத்து விட்டாள் ஆனால் என்ன பேசுவது எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் மருகி தவிக்க,
மறுமுனையில் “ஹாலோ” என்று முன்னைவிட சத்தமாய் கேட்டது அவன் குரல்.
“என்ன பேசணும் இனி பேசுறதுக்கு எதுவும் இல்ல. அதான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டியே அப்றம் என்ன?” என்று யாரிடமோ பேசுவது போல பேசினான் மறுமுனையில் இருப்பவன்.
“நா பேசுனது தப்பு தான் ஆனா பிடிக்காத விஷயத்தை செய்துக்க சொல்லி வற்புறுத்துனா கோபம் வராதா. அந்த கோபத்துல நாலு வார்த்தை பேசிட்டேன் உடனே கோவிச்சுட்டு போயிருவீங்களா?”.
“நாலு வார்த்தையா இருந்தாலும் நறுக்குன்னு பேசிட்ட மீரா”என்றான் அவன் வேகமாக.
“ப்ளீஸ் ண்ணா இதுக்கு மேல எப்டி உங்க ரெண்டுபேருக்கும் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியலை நீங்களும் அப்பா மாதிரியே பேசுறீங்க. இப்போ நா இருக்குற நிலைமையில கல்யாணம் பண்ண சான்ஸே இல்ல அதை பத்தி உங்ககிட்ட பேசணும்னு தான் கால் பண்ணேன் உடனே உங்கள பாக்கணும் எங்க இருக்கீங்க?”.
“மலை அடிவாரத்துல இருக்குற கிராமத்துல இருக்கேன் கேம்ப் போட்டுருக்கோம். இப்போ என்னால வர முடியாது மீரா கொஞ்ச நேரம் கழிச்சு நானே உன்ன கூப்பிடுறேன் அதுவரைக்கும் வெய்ட் பண்ணு” என்று விட்டு அணைப்பை துண்டித்துவிட்டான் பாலமுரளிதரன்.
அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறான்.
சட்டென முகம் சோர்ந்து போக உயிரிழந்த அலைபேசியை வெறித்தவள் அவன் அழைப்புக்காக காத்திருக்க தொடங்கினாள்.
மீராவிற்கு கிட்டத்தட்ட அண்ணன் உறவு. அருகருகே இல்லம் என்பதால் மூர்த்தி பணிக்கு கிளம்பி சென்றதும் பாலாவின் வீட்டில் தஞ்சம் அடைந்து கொள்வாள் மீரா. அவனின் தாய் அமுதாவும் அத்தனை பிரியமாய் பார்த்து கொள்வார் அவளை. எது செய்தாலும் மீராவின் பங்கு இல்லம் தேடி வந்துவிடும் அல்லது “வீட்டுக்கு வாம்மா” என்று அழைத்து கொடுத்து விடுவார் அமுதா.
அவளின் பேச்சும் சிரிப்பும் அத்தனை பிடிக்கும் அவனுக்கு. பள்ளிக்கு அழைத்து செல்வதில் இருந்து பாடம் சொல்லி கொடுப்பது வரை பாலா தான்.பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்தவள் என்ற காரணத்தினாலேயே அவளை அக்கறையோடும் அதீத பாசத்துடனும் பார்த்து கொள்வான்.
இதுவரை அவனிடம் கலந்தாலோசிக்காமல் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை படிப்பில் கூட அவனை கேட்டு தான் பாட பிரிவை தேர்ந்தெடுத்தாள் அவனிடம் கேட்டு அவனுக்கு நிறைவாய் இருந்தால் மட்டுமே முழுமனதுடன் ஏற்று செய்வாள் மீரா.
உடல் நிலை நன்றாக இருக்கும் போதே படித்து முடித்த கையோடு ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டால் தன் வாழ்நாளின் ஏக்கம் தீர்ந்துவிடும் என்று மூர்த்தி திருமண பேச்சை தொடங்க, பிடிவாதமாக வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.
வருத்தத்துடன் பாலாவிடம் சென்று பேசியவர் திருமணத்திற்கு அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள, அவனும் அவளிடம் சென்று இதமாகவே சூழ்நிலையை விளக்கி பொறுமையாக எடுத்துரைத்தான்.
யாரும் தலையிட வேண்டாம் என்னுடைய வாழ்வை நானே பார்த்து கொள்கிறேன் என்று வேகமாக பேசிவிட்டதில் வருத்தம் உண்டாகிட, அதிலிருந்து பேசுவதை நிறுத்தி கொண்டான் பாலா.
இரண்டு நாட்களாகியும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு செல்பவனை பார்த்து வருந்தியவள் சமாதானம் செய்யவே அழைப்பு இப்போது விடுத்து பேசினாள்.
சற்று நேரம் கழித்து அழைப்பு விடுத்தவன் இடத்தை கூறிவிட்டு அணைத்து விட, அவன் வர சொன்ன இடத்திற்கு விரைந்தாள் மீரா.
பசுமை நிறைந்த தேயிலை தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருந்தது அந்த இடம். மலைகளும் சிறு குன்றுகளும் அதனை உரசியபடி செல்லும் மேகங்களும், சரிவில் மரகத நிறத்தில் போர்த்திவிட்டது போல இருந்த தேயிலை செடிகளும், சன்னமாய் பனியும் படர்ந்து பார்க்கவே ரம்மியமாய் இருந்தது. சுற்றுலா வருபவர்கள் ஆசுவசப்படுத்தி கொண்டு தேநீர் அருந்த ஏற்ற இடம். இயற்கையை உள்வாங்கி கொண்டே தேநீரையும் குளம்பியையும் பருகலாம்.
தனக்கொரு தேநீரை ஆர்டர் செய்து பருகிவிட்டு மீராவிற்காக காத்திருந்தான் பாலமுரளிதரன்.
தமாதிக்காமல வந்து சேர்ந்தவள் “சாரிண்ணா ரொம்ப நேரமா வெய்ட் பண்றிங்களா?” என்று கேட்க, இல்லையென்று தலையாட்டினான் அவன்.
‘கோபம் குறையவில்லை போல’ என்று எண்ணியவள் அமைதியை கடைபிடிக்க,
‘பேச வேண்டும் என்று அழைத்து விட்டு மௌனத்தை கையாண்டால் என்ன அர்த்தம்’ என்று எண்ணியவன் “என்ன மீரா வர சொல்லிட்டு அமைதியா இருக்க இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு மௌன விரதம் முடிய. பேச எதுவும் இல்லன்னா நா கிளம்புறேன்” என்று வேகமாக எழுந்து கொண்டவனை தடுத்து நிறுத்தினாள் மீரா.
“ப்ளீஸ் உக்காருங்க பாலா ண்ணா நா பேசுனது தப்பு தான் அதுக்காக பாத்தாலே ஏதோ விரோதிய பாக்குற மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டு போனா என்ன அர்த்தம்”.
“ம் சம்பந்தமில்லாதவங்க கிட்ட பேச எதுவும் இல்லன்னு அர்த்தம், பாக்க விருப்பமில்லைன்னு அர்த்தம்” என்று விலகல் தன்மையுடன் பேசினான்.
“பாத்திங்களா யாரோ கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க கஷ்டமா இருக்கு பாலா ண்ணா. கோபத்துல நிதானம் தவறி பேசிட்டேன், அதை மனசுல வச்சுக்காதீங்க ப்ளீஸ் என்கிட்ட எப்பவும் போல பேசுங்க ண்ணா. நீங்க பேசாம இருக்குறது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு அழுகையா வருது” என்றவளின் விழிகளில் லேசாய் ஈரம் படர்ந்தது.
அதை கண்டும் காணாதவன் போல “நா எதுக்கு உன்கிட்ட பேசணும் நீ யாரு எனக்கு அதான் முகத்துல அடிச்ச மாதிரி சொன்னியே தனிப்பட்ட விஷயத்துல யாரும் தலையிட வேணாம்னு மனங்கெட்டு போய் பேசுறதுக்கு நா என்ன மடையனா?” என்று காரம் குறையாமல் கடுகடுத்தான் பாலா.
“அதையே சொல்லி காட்டாதிங்க நா பேசுனது தப்பு தான். எனக்கு மன்னிப்பு கிடையாதா? சின்ன பொண்ணு தப்பு பண்ணா மன்னிக்க மாட்டீங்களா?” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு பேசினாள் மீரா.
நிதானமாக அவள் முகம் பார்த்து “மன்னிக்க முடியாது” என்றான் உள்ளே எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு.
“சரி மன்னிக்க வேணாம் பேசலாமில்லையா முகத்துக்கு நேரா பேச வேணாம் திரும்பி நின்னு எப்பவும் போல பேசலாம் தானே?” என்று அவனை சிரிக்க வைக்க கேலியாய் பேசியவள் அவன் முறைப்பை கண்டு,
” ப்ளீஸ் ண்ணா என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க எனக்கு விருப்பமில்லாத ஒன்னை திணிக்க முயற்சி பண்ணாதிங்க. வேணாம்னு கொஞ்சம் வேகமா பேசுனதுக்கு ரெண்டு நாளா பேசாம இருக்கீங்க பேச வந்தா விலகி போறீங்க ஃபோன் பண்ணா கட் பண்றீங்க உங்கமேல கோபப்பட கூடாதா இல்ல அந்த உரிமை எனக்கு இல்லையா?”,வேகமாக கேட்டாள்.
“உரிமை இருக்கு இல்லை அது வேற விஷயம். காரணமே சொல்லாம வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்? படிச்சு முடிச்சுட்ட கல்யாணம் பண்ணிக்க சொன்னா மொட்டையா கல்யாணமே வேணாம்னு சொல்ற. ரீசன் என்னனு சொல்லு நியாமான காரணமா இருந்தா நானே அங்கிள் கிட்ட பேசுறேன்” என்று தணிவான குரலில் கேட்டான்.
“மறுபடியுமா” என்று மனதில் தோன்றிய அலுப்பை வெளிப்படையாக காட்டினாள் “ப்ச் முதல இருந்து ஆரம்பிக்கிறீங்க கல்யாணம் ஒன்னு தான் வாழ்க்கையா ஏன் கல்யாணம் பண்ணாம வாழ முடியாதா?.எனக்கு அதுல விருப்பம் இல்ல அதுக்கு அவசியமும் இல்ல. என்னால இப்போ எதுவும் சொல்ல முடியாது ண்ணா கல்யாணத்தை தவிர வேற எதை வேணாலும் சொல்லுங்க மறுக்காம செய்யிறேன்.
ப்ளீஸ் ண்ணா என்ன புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீங்க மட்டும் தான் இந்த விஷயத்துலயும் என்ன புரிஞ்சுக்கோங்க இந்த விஷயத்தை இப்டியே விட்டுருங்க ண்ணா இதுக்கு மேல அதை பத்தி பேச வேணாமே” என்று கெஞ்சலாய் வேண்டினாள் மீரா.
“இல்ல ம்மா அப்டியே விட முடியாது உன்னோட வாழ்க்கைய நிர்ணயிக்கிற பொறுப்பு உன்னோட அப்பாவுக்கு அடுத்து எனக்கு இருக்கு. அந்த அளவுக்கு உன்மேல எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்.உன்ன ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுத்து அதை கண்குளிர பாத்துட்டா போதும், உங்கப்பாவுக்கு நூறு ஆயுசு வாழ்ந்த திருப்தி கிடைச்சிறும்”என்று தீவிரமாக உரைத்தவன்,
“வேற ஏதோ காரணம் இருக்கு அது என்னனு வெளிப்படையா சொல்லு, மனசுல உள்ளதை சொன்னா தானே அதுகேத்த மாதிரி தீர்வு சொல்ல முடியும். சொல்லும்மா என்ன பிரச்சனை உனக்கு எதனால வேணாம்னு சொல்ற? கல்யாணத்தை பத்தி பேசணும் உடனே பாக்கணும்னு சொன்ன என்ன விஷயம்?” என்று கேள்விகள் கேட்டு நிறுத்தியவன் பார்வையை மீராவின் முகத்தில் நிலை நிறுத்தினான்.
வலியை பிரதிபலிக்கும் முகமும் கன்னம் தாண்டி தொட்டு செல்லும் கண்ணீருமாய் ‘என்னவென்று சொல்வேன் என் நிலையை’ என்று விழிகளால் ஊமை பாஷை பேசியவளை கண்டு பதறி போனான் .
“ஏய் மீரா எதுக்கு அழுகுற. உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்ல ம்மா நீ பேசாம வேற யார் என்கிட்ட கோபமா பேசுவாங்க. என்கூட சண்டை போட கோபமா பேச ஏன் அடிக்க கூட உனக்கு உரிமை இருக்கு. நா உன்கிட்ட பேசாம இருந்ததுக்கு சாரி இனி யாரோ மாதிரி நடந்துக்க மாட்டேன் அழுகாத”என்று அவள் கரங்களை ஆறுதலாய் பற்றி கொள்ள,
அழுகை கூடியதே தவிர குறையவில்லை. பாலாவின் கரத்தை இறுக பற்றி கொண்டு விசும்பியவள்
“சாரிண்ணா உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேன் எனக்கு கல்யாணம் வேணா நா இப்டியே இருந்துக்கிறேன். நீங்க அப்பா அமுதா ஆன்ட்டி இதுவே போதும் இந்த வாழ்க்கைக்கு புதுசா எந்த உறவும் எனக்கு வேணாம்.
உங்களுக்கே தெரியும் எனக்கு எல்லாமே அப்பா தான்னு எனக்கு தெரிஞ்சு அவருக்கு சொந்தம்னு யாருமில்லை அவர விட்டுட்டு என்னால எப்டி ண்ணா என்னோட வாழ்க்கைய பாத்துகிட்டு போக முடியும் என்ன விட்டா அவருக்கு வேற யார் இருக்கா சொல்லுங்க” என்று அழுதாள் மீரா.
‘ஹப்பாடா’ என்று பெருமூச்சை வெளியிட்டவன் “இது தான் காரணமா நா கூட வேற என்னமோன்னு நினைச்சுட்டேன், கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டியே ம்மா. நா எதுக்கு இருக்கேன் அவரு எனக்கும் அப்பா தான் அவர நா பாத்துக்க மாட்டேனா?”.
“நல்லாவே பாத்துப்பிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா அவர விட்டுட்டு போக எனக்கு மனசில்ல, கொஞ்ச நாள் போகட்டுமே ண்ணா இப்போதைக்கு கல்யாணத்தை பத்தி பேச வேணாம். நாலு வருஷம் படிப்புக்காக அவர பிரிஞ்சு இருந்தேன் கொஞ்ச நாள் அவரு கூட இருக்குறேனே.
கல்யாணம் பண்ணிட்டு போயிட்டேனா புகுந்த வீட்டு மனுஷங்க எப்டி பட்டவங்களோ தெரியாது. உங்கப்பா வீட்டுக்கு போக கூடாது அவர பாக்க கூடாது பேச கூடாதுன்னு சொல்லிட்டா நா என்ன பண்ணுவேன்” என்று தோன்றாத கற்பனையை அவன் நம்ப வேண்டுமென்று அவிழ்த்து விட, பக்கென்று சிரித்துவிட்டான் பாலா.
“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?”,கோபமாக கேட்க,
“பின்ன சிரிக்காம நீ சொல்றதை கேட்டு அழ சொல்றியா? கற்பனைக்கு வரைமுறை இல்ல தான் ஆனா, அளவு இருக்கு மீரா. சீரியல் பாத்து ரொம்ப கெட்டு போயிட்ட” என்றவன்,
“கண்டதையும் கற்பனை பண்ணிக்காத நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது நல்லது தான் நடக்கும் இது தான் விஷயம்னு அப்பவே என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே. லூசு நா அங்கிள் கிட்ட பேசுறேன்” என்று செல்லமாய் கடிந்து கொண்டான் பாலமுரளிதரன்.
நம்பிவிட்டான் என்பதே அவளுக்கு இளைப்பாறுதலை அளிக்க “என்ன புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தங்க்ஸ் ண்ணா” என்றாள் புன்னகை மிளிர.
“இதை சொல்றதுக்கு தான் ஃபோன் பண்ணியா நா கூட சம்மதம் சொல்ல தான் வர சொல்றயோன்னு நினைச்சுட்டேன்”.
“உடனே பாக்கணும் பேசனும்னு சொன்னா தானே நீங்க வருவீங்க. அதான் அப்டி சொன்னேன் கோட்டை சாமிக்கு இப்போ கோபம் போயிருச்சு தானே?” என்று மிடுக்குடன் கேட்டு சிரிக்க,
“நா கோட்டை சாமியா வாலு” என்று காதை பிடித்து வலிக்கமால் திருக்கினான் பாலமுரளிதரன்.
இருவருக்கும் தேநீரை ஆர்டர் செய்தவன் “சரி கல்யாணம் வேணாம்னு சொல்லிட்ட அதுவரைக்கும் என்ன செய்ய போற மீரா குட்டி ஏதாவது வேலைக்கு போற மாதிரி ஐடியா இருக்கா?”.
“கண்டிப்பா வேலைக்கு போகணும் பாலா ண்ணா படிச்ச படிப்புக்கு வேலை பாக்காம வெட்டியா இருந்தா எப்டி. அதுவும் கோல்ட் மெடலிஸ்ட்”என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கெத்தான தோரணையில் கூறினாள்.
சன்னமாய் சிரித்தவன் “சரி அங்கிள் கிட்ட பேசி சம்மதம் வாங்கு வேலைக்கு போனா தான் உனக்கும் ரிலாக்ஸா இருக்கும். இல்லன்னா தேவையில்லாம கோபம் வரும் சிம்பன்சி மாதிரி உர்ருன்னு முகத்தை வச்சிட்டு இருப்ப, அதாவது கொஞ்சம் சிரிக்கும் அந்த நேரத்துல உன்கிட்ட சிரிப்பை எதிர்பார்க்க முடியாது. அதனால சீக்கிரமே வேலைக்கு போ” என்று சிரிக்காமல் சொன்னவன் அவள் முறைப்பை கண்டு,
“உண்மைய தான் சொல்றேன் அடுத்த முறை நீ கோபப்படும் போது போட்டோ எடுத்து காட்டுறேன் உனக்கே தெரியும் நா சொன்னது சரி தான்னு” என்று நமட்டு சிரிப்பை உதிர்க்க,
“கிண்டல் பண்றிங்களா, நா சிம்பன்சியா? என்ன பாத்தா குரங்கு மாதிரியா இருக்கு” என்று வேகமாக எழுந்து கொண்டவள் “நா கோவமா போறேன்” என்று அழுத்தமாக அடிகளை வைத்து நடந்து செல்ல,
அவளின் கோபம் அவனுக்கு சிரிப்பை உண்டு பண்ணியது “மீராகுட்டி போயிறாத நானும் வீட்டுக்கு தான் போறேன்” என்று கத்தியவன் தேநீர் அருந்தியதற்கான பணத்தை கொடுத்துவிட்டு அவள் பின்னே ஓடினான் பாலமுரளிதரன்.
ஒரு கப் காஃபியை ஆர்டர் செய்து வந்ததில் இருந்து இருவரின் சம்பாஷணைகளை சுவாரஸ்யம் கலந்த வெறுப்போடு பார்த்து கொண்டிருந்தவன் கோப்பை காலியானதும் தான் குடித்த காஃபிக்கான பணத்தை கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு கிளம்பினான்.
மாலை வரை வீடு செல்ல மனமில்லாமல் காரில் ஊர் சுற்றி கொண்டிருந்தவன் ‘அடுத்து என்ன செய்வது எப்படி சொல்லி புரிய வைப்பது’ என தெரியமால் தவித்து கொண்டிருக்க, மின்னலாய் அஜயின் நினைவு வந்து அவனுக்கு காணொளி அழைப்பு விடுத்தான் விஷ்வா.
எடுத்ததும் “சொல்லுடா கேட்பரி அதிசயமா இருக்கு நீ கால் பண்றது. என்ன விஷயம் காரணமில்லாம எனக்கு ஃபோன் பண்ண மாட்ட சொல்லு என்ன பிரச்சனை” என்று கேட்டான் அஜய்.
“பிரச்சனையே தான். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை ஏஜே கடுப்பாகுது ஏண்டா இந்தியா வந்தோம்னு இருக்கு”என்று கடுப்பாக பேசியவன் தணிகாசலத்திற்கும் அவனுக்கும் நடந்த விவாதத்தை பற்றி சொல்லி,
“நா ஃபாரின் போய் வேலை பாக்குறதுல இவங்களுக்கு என்ன கஷ்டம்.ஓவரா கண்டிஷன் போடுறாங்க இங்க இருந்து தப்பிச்சா போதும்னு இருக்கு எதாவது ஐடியா இருந்தா சொல்லுடா எனக்கு எந்த ஐடியாவும் வர மாட்டேங்கிது கோபம் தான் வருது” என்று காணொளி அழைப்பில் வெளிநாட்டில் உடன் பணிபுரியும் நண்பனிடம் புலம்பி தள்ளினான் விஷ்வா.
“அச்சோ என்னோட கேட்பரி இவ்ளோ டென்ஷன் ஆனா உருகிடுமே பாக்கவே நல்லா இருக்காது” என்று நேரம் தெரியாமல் கொஞ்சி பேசியவனை கடுப்புடன் பார்த்தான் விஷ்வா.
“டேய்..” என்று பல்லை கடித்தவன் “நீயும் என்ன சோதிகாத செம்ம கடுப்புல இருக்கேன் நேர்ல வந்தேன் கொன்னுருவேன்” என்று கோபத்தை அடக்கி கொண்டு பேச,
“கூல் மை பாய் உன்னோட டீனா பேசுன மட்டும் ஏத்துகிற நா பேசுன கடுப்பாகுதா” என்ற அஜய் சரி விஷயத்துக்கு வறேன் என்று மேடையில் பேச போவது போல தொண்டையை கனைத்து கழுத்தோடு ஒட்டியிருந்த டையை சரி செய்ய,
“டேய் என்னடா பண்ற?”.
“பேச போறேண்டா இப்டி தானே என்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி பண்ணுவா”, நேரம் பார்த்து பழிவாங்கினான் அஜய்.
“ப்ச் உனக்கு போய் கால் பண்ணேன் பாரு என்ன சொல்லணும். நா போனை வைக்கிறேன்” என்று அழைப்பை துண்டிக்க போக,
“கட் பண்ணிறதா ஐடியா தானே சொல்றேன் விஷ்வா. பொசுக்குன்னு கோபப்பட்ட எப்டி. உனக்கு அங்க இருக்க விருப்பமில்லை அதானே?”.
“ஆமா”.
“அப்டின்னா அவங்களுக்கு புரியிற விதத்துல பக்குவமா எடுத்து சொல்லு உன்னோட ஆசைய சொன்னா அவங்க மறுத்து பேச மாட்டாங்க நிதானமா எடுத்து சொல்லி புரிய வை விஷ்வா” என்றான் கேலியாய் புறம் தள்ளி தீவிரமான பாவனையில்.
“அட நீ வேற கால்ல விழாத குறையா கெஞ்சி பாத்துட்டேன் அவரோட முடிவுல இருந்து கொஞ்சம் கூட இறங்கி வர மாட்டிங்கிறாரு” என்று அலுத்து கொண்டான் விஷ்வா.
தீவிர சிந்தனையில் இறங்கிய அஜய் “ஓகே நீ ஒன்னு பண்ணு உங்கப்பா சொல்ற மாதிரியே கொஞ்ச நாள் ஆபீஸ்ல வேலை பாரு” என்றதும் திடுக்கிட்டு போனான் விஷ்வா.
“என்னடா சொல்ற இங்க வேலை பாக்குறதா. முடியவே முடியாது என்னோட லட்சியமே ஃபாரின்ல செட்லாகுறது தான். ஒரு மாசம் லீவ் எடுத்து வந்தது என்ஜாய் பண்றதுக்கு தானே தவிர இங்கயே இருந்து குப்பை கொட்டுறதுக்கு இல்ல” என்று காரம் குறையாமல் பேசிய விஷ்வா, வெளிநாட்டு வாழ்க்கையின் சுக போகங்களை எண்ணி கனவுகளில் மிதந்தான்.
“நா சொல்றதை முதல கேளுடா இந்த லீவ்ல சும்மா சுத்தி பாக்குறதுக்கு பதிலா ஆபீஸ்ல போய் வேலைய பாரு பொழுது போன மாதிரியும் இருக்கும் அங்க என்ன மாதிரி பிஸ்னஸ் ரன் பண்றாங்கன்னு தெரிஞ்சுகிட்ட மாதிரியும் இருக்கும் உங்கப்பவை கன்வைன்ஸ் பண்ண நல்ல சான்ஸ் கிடைக்கும்”என்று யோசனை சொல்ல,அவன் கூற்றில் ஆழ்ந்து சிந்திக்க தொடங்கினான் விஷ்வா.
“என்னடா எதுவும் பேச மாட்டிங்கிற அவங்களுக்கு உன்ன பிரிய மனசில்ல அதனால தான் ஆபிஸ் பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சிட்டு பக்கத்துலயே வச்சுக்கணும்னு நினைக்கிறாங்க ஆற அமர யோசிச்சு பாரு உனக்கே புரியும். நான் தான் யாருமில்லாம ஊர் தாண்டி பொழைக்க வந்துருக்கேன் உனக்கு சொந்தம் பந்தம்னு ஆசையா பாசத்தை பகிர்ந்துக்க நிறைய பேர் இருக்காங்க உன்னோட பக்கம் இருக்குற ஆடம்பர ஆசைய பாக்காத அவங்க பக்கம் இருக்குற அத்தியாவசிய ஆசைய பாரு என்று சற்று வருத்தம் தேய்ந்த குரலில் பேசியவன் அப்றம் உன்னோட டீனா நீ எப்ப வருவன்னு கேட்டா அவளுக்கு என்ன பதில்டா சொல்ல”.
“ஒன்னும் சொல்ல வேணாம் அந்த வெள்ளாச்சிய பத்தி எதுக்கு பேசுற” என்று விஷ்வா சிடுசிடுக்க,
அவுட்டு சிரிப்பு சிரித்தவன் “சரிடா எனக்கு மீட்டிங் டைம் ஆச்சு நா ஃபிரியானதும் கால் பண்றேன்” என்று காணொளி அழைப்பை துண்டித்து விட்டான் அஜய்.
அவன் பேசியதில் குழப்பமுற்றவன் “எதாவது யோசனை சொல்லுவான்னு பாத்தா மொத்தமா குழப்பிட்டு போயிட்டான் எல்லாம் என்னோட கிரகம் இங்க வந்துருக்கவே கூடாது” என்று தனக்கு தானே முணுமுணுப்பாய் பேசி கொண்டவன் வாகனத்தை இயக்கி செய்து பாடலை ஒலிக்கவிட,
திருவருட் செல்வர் படத்திலிருந்து சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலில் கண்ணதாசன் எழுதிய “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” என்று பாடல் வரிகள் ஒலிக்க தொடங்க, சட்டென அணைத்து விட்டான் ஒலிபெருக்கியை.
‘இது கூட நம்மளை பழிவாங்குது’ என்று கோபத்துடன் ஸ்டியரிகை அழுத்த வாகனம் நூறை தாண்டி வேகம் பெற்றது இலக்கில்லாமல் எதிர்திசையை நோக்கி.