“மீரா கண்ணு” என்ற அழைப்பொலியில் இருவருமே திருப்பி பார்க்க, வதனத்தில் புன்னகை பூக்க நின்று கொண்டிருந்தார் பூங்கோதை.
“அத்தை” என்று முகம் பிரகாசித்தவள் எழுந்து வேகமாக அவர் அருகில் சென்றாள்.
வாஞ்சையோடு கையை பற்றி கொண்டு “சென்னையில இருந்து எப்போ வந்த, வறேன்னு சொல்லவே இல்ல, எப்டிடா இருக்க, ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி தெரியிது சரியா சாப்பிடுறது இல்லையா?” என்று அவளை பார்த்த சந்தோஷ மிகுதியில் படபடவென பேசினார் பூங்கோதை.
“அத்தை எதுக்கு இப்டி மூச்சு வாங்க பேசுறீங்க கொஞ்சம் கேப் விடுங்க. நா நல்லா இருக்கேன் வந்து ஒரு வாரம் ஆச்சு”என்றதும் பூங்கோதையின் முகம் வாடி போனது.
“ஏ கண்ணு வந்து ஒரு வாரம் ஆகிருக்கு இந்த அத்தைய பாக்கணும்னு உனக்கு தோணலைல” என்று வருத்தம் கொள்ள,
“சாரி அத்தை உங்கள பாக்க வந்துருப்பேன் ஆனா..” என்று நிறுத்தினாள் மீரா.
“என்ன ஆனா ஆவன்னான்னு சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்க. நேரா என்ன பாக்கணும்னு சொல்லி வர வேண்டியது தானே” என்றவர் மூர்த்தியிடம் திருப்பி,
“ஏ ண்ணே நீங்களாவது கூட்டிட்டி வந்துருக்க வேண்டியது தானே முன்னெல்லாம் அடிக்கடி வருவீங்க இப்போ எப்பயாவது ஒரு முறை வேலை விஷயமா வந்துட்டு அவர மட்டும் பாத்துட்டு போயிடுறீங்க” என்று குறைபட்டு கொள்ள,
“என்னம்மா பண்றது வேலை அந்த மாதிரி அதுவுமில்லாம அடிக்கடி அலைய முடியலை உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்கிது. ஒரு எட்டு போய் பாத்துட்டு வாம்மான்னு சொன்னா அவரு இருக்காரு நா போக மாட்டேன்னு சொல்லுறா நா என்ன பண்ண முடியும் சொல்லு? என்று மகளை பார்த்தார் மூர்த்தி.
“அவரா யார ண்ணா சொல்றிங்க?” என்று பூங்கோதை புரியாமல் விழிக்க,
“வேற யாரு நம்ம விஷ்வா தம்பி தான். வெளிநாட்டுல இருந்து வந்துருக்காருன்னு பாலா சொல்லிருப்பான் போல, வீட்டுல தம்பி இருப்பாருன்னு பயப்படுறா” என்று மகளிடம் பார்வையை பதித்து கொண்டே சிரித்தார்.
“அவன பாத்து நீ ஏன் ம்மா பயப்படுற. முன்ன மாதிரி இல்ல மீரா கண்ணு ரொம்ப மாறிட்டான் இப்பெல்லாம் காரணமில்லாம கோபப்பட மாட்டான் ரொம்ப சாதுவா இருக்கான் தெரியுமா?” என்று மைந்தனின் குணத்தை பெருமையாய் அடுக்கினார் பூங்கோதை.
‘சாதுவா’ என்றெண்ணியவள் நெற்றியின் ஓரத்தில் ஆழமாக பதிந்து போன காயத்தின் தழும்பை தடவி பார்த்தாள். சிறு பிராயத்தில் உண்டி வில்லினால் அடித்து காயப்படுத்தி திமிராக பேசியதையும்,ராத்தம் சொட்ட சொட்ட வழியில் அழுததையும் நினைக்கும் போதே தழும்பில் சுருக்கென்று குத்தியது.
மீராவின் பயம் எதனால் என்பது மூர்த்திக்கு மட்டுமல்ல பூங்கோதைக்குமே தெரியும். அவளின் பயம் படர்ந்த முகத்தையும் காயத்தை தடவி பார்த்ததையும் கவனித்தவருக்கு கனிவும் வருத்தமும் ஒன்றுசேர தோன்றிட.
“அவன பாத்தெல்லாம் பயப்படாத பிஸ்கோத்து பையன். நாளைக்கு வீட்டுல வரலட்சுமி பூஜை வச்சுருக்கேன் கண்டிப்பா வரணும் உன்ன ரொம்ப எதிர்பார்ப்பேன் கண்ணு. நீ வரலை நானே உன்ன கூப்பிட வீட்டுக்கு வந்துருவேன்” என்று கண்களை உருட்டி பூங்கோதை மிரட்ட,
மெலிதாக புன்னகைத்தவள் “கண்டிப்பா அத்தை நானும் அப்பாவும் வர்றோம் உங்கள பாத்துட்டு வீட்டுக்கு வராமா இந்த ஊர்ல இருக்க முடியமா?” என்று கேலி இழையோட கூறி சிரிக்க, மற்ற இருவரின் முகத்திலும் புன்னகை படர்ந்தது.
“சரிங்க அத்தை நேரமாச்சு நாங்க கிளம்புறோம்” என்று இருவரும் விடைபெற்று கிளம்பினர்.
நீண்ட காலமாக அந்த சுற்று வட்டாரத்திலேயே பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவமனை அது. மருத்துவமனைக்கே உண்டான பரபரப்புடன் காணப்பட்டது. நடையில் வேகத்தை நிரப்பி பரபரப்பான முகபாவனையுடன் பிரசவ அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா.
அவள் நுழையும் நேரம் செவிலிய பெண்மணியும் பிரசவத்திற்கு வந்திருந்த பெண்ணின் உறவு பெண்மணியும் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
“என்ன பிரச்சனை சிஸ்டர்” என்று பவித்ரா கேட்க,
“டாக்டர் இந்தம்மா கொஞ்ச நேரம் போகட்டும் அப்றமா ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னு சொல்றாங்க. காரணம் கேட்டா ஜோசியர் ஜாதகம்னு ஏதேதோ சொல்றாங்க டாக்டர். அந்த பொண்ணு வலியில துடிச்சிட்டு இருக்கா பேபி பொசிஷன் மாறிருச்சு”என்று சங்கடம் நிறைந்த பார்வையை செலுத்த,
“என்னம்மா நீங்க. தாயும் சேயும் நல்லா இருக்க வேணாமா? இந்த காலத்துல போய் இப்டி பேசிட்டு இருக்கீங்க. நடக்குறது தான் நடக்கும் எல்லாம் நம்ம நினைக்கிறதுல தான் இருக்கு” என்று பொறுமையாக எடுத்து சொல்ல,
“அப்டியில்ல டாக்டர் எங்க குடும்ப ஜோசியர் அவரு எது சொன்னாலும் சரியா தான் இருக்கும். அவரு சொல்லி எத்தனை விஷயம் நடந்துருக்கு தெரியுமா?. நல்ல நேரம் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு அதுவரைக்கும் கொஞ்சம் பொறுங்க.
சரியா பத்து மணிக்கு பிள்ளை பொறந்தா தாய் மாமனுக்கு பேரும் புகழும் வந்து சேருமாம் பொறக்க போற பிள்ளையும் நீண்ட ஆயுசோட ஆரோக்கியமா இருக்குமாம்” என்று தீவிரமாக உச்சகட்ட நம்பிக்கையில் சொல்ல,
அழுவதா சிரிப்பதா என தெரியாமல் எதிரில் நின்ற பெண்மணியை மலைப்புடன் பார்த்தாள் பவித்ரா. ‘நாள் பார்த்து நேரம் பார்த்து பிறக்கும் முன்பே ஜாதகம் குறித்து இந்த தேதியில் இந்த கிழமையில் இத்தனை மணிக்கு என்று சுக பிரசவத்தில் பிறக்க வேண்டிய குழந்தையை அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெரும் பாணி இப்போது நடைமுறையில் வழமையாகி போனது’ என்று எண்ணமிட்டவள் மெலிதாய் எழுந்த புன்னகையை அதக்கி கொண்டு பேச தொடங்கினாள்.
இல்ல நீங்க சொல்ற மாதிரி தான் நாங்க கேட்கணும்னா ப்ளீஸ் உங்க பொண்ணை வேற ஹாஸ்பிடல்லுக்கு அழைச்சிட்டு போங்க”என்று கறாராய் கூறிட, எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு நகன்றுவிட்டார் அப்பெண்மணி.
அதன் பிறகு வலிக்கான ஊக்க மருந்துகள் கொடுத்து அதோ இதோ என்று குழந்தையை கையில் ஏந்திய அந்த நொடி. பவித்ராவின் விழிகளில் நீர் கோர்த்தது.
ஏனோ இதுவரை அவளறியாமலே அனுமதியில்லாமல் அந்நேரத்தில் முனுக்கென்று தோன்றி விடும் கண்ணீர். இதுவரை அதை ஆராய்ந்து பார்த்ததில்லை அதை தடுக்க எண்ணியதுமில்லை, ஆனால் உள்ளத்தில் தோன்றும் தாய்மையின் இதத்தை ஒவ்வொரு முறையும் உணர்வாள்.
‘பெண்ணிற்கு பிரசவம் என்பது உயிர் போய் உயிர் வரும் நிலை. நாற்பது எலும்புகள் ஒன்றாக உடைந்தால் உண்டாகும் வலிக்கு ஒப்பானது பிரசவ வலி’.பவித்ரா மருத்துவம் படிக்க தொடங்கும் முன்பே அதை பற்றி ஒரு சிலரிடம் கேட்டு அறிந்து கொண்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. குழந்தை பேறு வலியை நினைத்து பார்த்தவளுக்கு சிலிர்ப்பும் அடிமனதில் அச்சமும் உண்டாகியது.
வீறிட்டு அழும் குழந்தையை பார்த்து மெலிதாய் புன்னகை சிந்தியவள்”நர்ஸ்” என்ற குரல் கொடுக்க, ஓடி வந்து ரத்த பசை நிறைந்த குழந்தையை சுத்தம் செய்ய வாங்கி சென்றாள் செவிலிய பெண்மணி.
அதன்பிறகு அப்பெண்ணிற்கு செய்ய வேண்டிய சில மருத்துவங்களை செய்து வார்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு தனது அறையில் வந்து அமர்ந்தவளுக்கு அதுவரை எழாத எண்ணங்கள் முண்டியடித்து நின்றன. அதை எண்ணிய நிமிடம் சோர்வும் மேலோங்க, கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள் சிறிய முள் இரண்டு ஒன்றுகளை தொடவிருந்தது.
“இவ்ளோ நேரமாகிருச்சா” என்றவாறே பாலாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள் பவித்ரா.
அதுவே நோயாளியின் நிலையை உணர்த்த “அவ்ளோ முக்கியம்னு சொல்ல முடியாது பாலா கொஞ்சம் உன்கிட்ட பேசணும்”.
“ஆப்ரேஷன் முடிய எப்டியும் ஒரு நாலு மணி நேரம் ஆகிரும் ரெண்டு பேசண்ட் இருக்காங்க முடிச்சிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று மறுமுனையில் சொல்ல,
“ஓகே” என்று அழைப்பை துண்டித்து ஓரமாய் அலைபேசியை ஒதுக்கியவளுக்கு தணிகாலம் கூறி செய்தியை ஒதுக்க முடியவில்லை.
என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தவள், நடப்பு உணர்ந்து எண்ணத்தை ஒதுக்கிவிட்டு பணியில் கவனத்தை செலுத்த தொடங்கினாள் பவித்ரா. புறநோயாளிகளை கவனித்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு.
அறுவை சிகிச்சை முடிந்து பாலாவும் அவளது அறைக்கு வந்துவிட,
“என்ன பவி ஏதோ பேசனும்னு சொன்ன என்ன விஷயம்?”என்று அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான் பாலமுரளிதரன்.
முகம் சற்று அயர்வை பூசி இருக்க”என்ன பவி முகமே சரியில்லாத மாதிரி இருக்கு ஏதாவது பிரச்சனையா? காலையில கேட்டேன் எதுவும் இல்லன்னு சொல்லிட்ட, இப்போ பேசனும்னு வர சொல்லிட்டு காஃபி குடிக்கலாமான்னு கேக்குற?”.
‘பீடிகை பலமாய் இருக்கிறதே’ என்று எண்ணியவனுக்கு அடுத்ததாக நினைவில் வந்து நின்றது விஷ்வாவின் முகம் தான். உணர்ச்சிகள் எதையும் அவள் முன்பு காட்டாது சரியென்று அழைத்து சென்றவன், இரண்டு காப்புகள் நிரம்பி தள்ளாட காஃபியை வாங்கி வந்து அவள் முன்பு வைத்தான்.
காஃபியை எடுத்து பருக தொடங்கியவளுக்கு சற்று இதமாய் இருக்க,
“சொல்லு என்ன பேசணும். விஷ்வா உன்ன எதுவும் சொன்னானா?” என்றவனை அமைதியாக பார்த்தாள் பவித்ரா.
அவளின் அமைதி, தான் எண்ணியது சரி தான் என்பதை உறுதிபடுத்த அவன் முகம் கறுத்தது. விஷ்வாவின் மீது அளவில்லா கோபம் உண்டாக மொத்தமாக திரட்டி அவள் மீது காட்ட தொடங்கினான் பாலமுரளிதரன்.
“நினைச்சேன் அவன் தான் ஏதாவது பேசிருப்பான்னு. என்னோட வீட்டுக்கு வான்னா வர மாட்டேன்கிற அம்மா கூட உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க நீ தான் அதெல்லாம் நல்லா இருக்காது அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு இருக்க உனக்கு தேவையா அவன் கிட்டயெல்லாம் பேச்சு வாங்கணும்னு.
நமக்கு மரியாதை இல்லாத இடத்துல இருக்குறது அவமானம் தெரியுமா?. சுயமரியாதை கௌரவும் தன்மானம்னு பேசுவியே அது வெறும் பேச்சு அளவுல மட்டும் தானா” என்று கடுகடுத்து பேச,
குளம்பியை பொறுமையாக பருகி முடித்தவள் “பேசிட்டியா இப்போ நா பேசலாமா? நா என்ன சொல்ல வறேன்னே தெரியாம அடுத்தவங்க மேல வீணா பழி போட கூடாது பாலா. விஷ்வா மாமா மேல உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம் அவரு உன்ன என்ன பண்ணாரு” என்று அவன் முகம் பார்க்க, இன்னும் கடுப்பின் தடம் குறையாமல் அமர்ந்திருந்தான்.
“நா பேச வந்த விஷயம் வேற இன்னைக்கு பெரிய மாமா என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாரு அதை உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கலாம்னு பேச கூப்ட்டா நீ வேற எதையோ பேசிட்டு இருக்க” என்று கோபம் கொள்ள,
“எதுவா இருந்தாலும் உன்கிட்ட கேட்டு தான் முடிவெடுப்பேன் இது உனக்கே தெரியும். இப்போ எனக்கு என்ன முடிவெடுக்குறதுன்னு தெரியலை குழப்பமா இருக்கு ப்பா.பெரிய மாமா எனக்கு மாப்பிள்ளை பாத்துருக்காரு” என்றதும் அவன் முகம் மட்டுமல்ல அகமும் துயரத்தை அப்பி கொண்டது.
“நல்ல குடும்பம் மாப்பிள்ளையும் டாக்டர் தானாம் ஃபாரின்ல ஒர்க் பண்ணிட்டு இருக்காரு” என்று காலி கப்பை சுழற்றி கொண்டே பேச்சை நிறுத்தியவள் அவனை பார்க்க,
எந்த வித உணர்ச்சியும் காட்டாது மரத்துபோன மனதுடன் அமர்ந்திருந்தான் அவன்.
“என்ன பாலா நா பேசிட்டு இருக்கேன் நீ எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க”.
“என்ன சொல்லணும் பவி” என்றான் சுரத்தே இல்லாத குரலில்.
“இப்டி சொன்னா எப்டி பாலா நா ஓகே சொல்லவா வேணாம்னு சொல்லவா, அவரு சொன்னதுல இருந்து இது தான் என்னோட மைண்ட்ல ஓடிட்டு இருக்கு தெளிவா ஒரு முடிவெடுக்க முடியல மருத்துவம் மட்டுமே வாழ்க்கைன்னு இப்ப வரைக்கும் நினைச்சிட்டு இருக்குறேன். ஆனா அவருக்கு சாதகமா என்னால பதில் சொல்ல முடியுமான்னு தெரியலை சொல்லு பாலா நா என்ன பதில் சொல்ல?” என்று ஆவலோடு அவனை ஏறிட்டாள்.
தேநீரை பருகி முடித்தவன் எதுவும் கூறாமல் எழுந்து கொள்ள,
“என்னாச்சு ப்பா?”.
“நா கிளம்புறேன் எனக்கு வேற வேலை இருக்கு பவி. பொண்ணு பாக்க வர சொல்றதும் வேணான்னு சொல்றதும் உன்னோட விருப்பம் என்ன கேட்டா இதுல நா பதில் சொல்றதுக்கு எதுவும் இல்ல” என்று பார்வையை எங்கோ பதித்தபடி கூறிவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டான் பாலமுரளிதரன்.
‘இவனுக்கு என்னாச்சு திடீர்ன்னு யார் கிட்டயோ பேசுற மாதிரி பேசிட்டு போறான்’ என்று புரியாமல் அவன் செல்வதை பார்த்தவள், தற்சமயம் தன் சிதறும் சிந்தனைகளுக்கு கடிவாளமிட்டு பணியை கவனிக்க சென்றாள்.