சொன்னது போலவே மகளுடன் அருகில் இருந்த கோவிலுக்கு வந்திருந்தார் மூர்த்தி. கோவிலின் உள்ளே நுழைந்ததும் மீராவின் உடலில் சிலிர்ப்பு உண்டாகி ரோமங்கள் எழுந்து நிற்க, மனதில் ஒருவித பரவசம் பரவியது. கவலைகள் பயங்கள் அனைத்தும் பனியாய் கரைவது போல உணர்ந்தாள்.
கருவறையில் சாந்த சொரூபமாக காட்சியளித்த அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் கோர்த்திட்டது மீராவிற்கு. எவரிடமும் சொல்லாததை கடவுளின் பாதத்தில் சமர்பித்தாள். ‘மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கும் எண்ணத்தை தகர்த்து வாழ்வில் அடுத்தடுத்த நிலையை நோக்கி செல்ல வேண்டும்.எதையும் கடந்து செல்லும் மன உறுதியை கொடு’ என்று மனமுருக வேண்டி கொண்டவள் கண்கள் கலங்குவதை எங்கே தந்தை பார்த்து விடுவாறோ என்று வேகமாக கண்களை துடைத்து கொண்டாள்.
“பிரகாரத்த சுத்திட்டு வரலாம் வாம்மா” என்று மூர்த்தி அழைக்க,
தீபாராதனையை கண்களில் ஒற்றி கொண்டவள் “இல்லப்பா நா இங்க உக்காந்திருக்கேன் நீங்க சுத்திட்டு வாங்க” என்றுவிட்டு தூணை ஒட்டி அமர்ந்து கொண்டாள்.
மகளை வற்புறுத்தாமல் “சரிம்மா” என்றவர் பிரகாரத்தை மூன்று முறை சுற்றிவிட்டு மகளின் அருகில் வந்து அமர்ந்து உடைத்து கொடுத்த தேங்காயை தரையில் தட்டி சிறு துண்டை எடுத்து மகளிடம் கொடுத்தவர்,
“என்ன முடிவு எடுத்துருக்க ம்மா?” என்றார் மொட்டையாக.
“எதை பத்திப்பா”.
“பாலா உன்கிட்ட பேசிருப்பானே ம்மா கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்துருக்க. கோவில்ல வச்சு உன்னோட விருப்பத்தை கேட்கலாம்னு தான் நீ சொன்னதுக்கு சரின்னு சொன்னேன். சொல்லும்மா உன்னோட முடிவு என்ன” என்று கேட்டு அவள் முகம் பார்க்க அமைதியை மட்டுமே பதிலளித்தாள் மீரா.
“என்னம்மா நா கேட்டதுக்கு பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஏதாவது பேசும்மா. சொன்னா தானே நீ என்ன நினைக்கிறன்னு என்னால புரிஞ்சிக்க முடியும்?” என்று கவலை தொனிக்க கேட்க,
“ப்ளீஸ் ப்பா பாலா ண்ணா கிட்ட சொன்னது தான் உங்களுக்கும். கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்தாதிங்க அதுல எனக்கு விருப்பமில்ல நா இப்டியே இருந்துட்டு போறேனே. அதுவுமில்லாம படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னப்பா அவசியம்” என்றாள் மீரா.
மலைப்பு தட்டியது அவளுக்கு. ‘ஒரே பேச்சை எத்தனை முறை பேசுவார்கள் அதற்கு எத்தனை முறை விளக்கம் அளிப்பது’ என்று எண்ணும் போதே ஆயசமாய் உணர்ந்தாள் மீரா.
“அவசியம் இல்லம்மா அவசரம். முன்ன மாதிரி ரொம்ப நேரம் நிக்க முடியலை உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்கிது நா இருக்கும் போதே நீ சந்தோஷமா வாழுறதை பாத்துட்டேன்னா எந்த பயமும் குற்றவுணர்ச்சியும் இல்லாம நிம்மதியா போய் சேந்துருவேன்” என்று கவலையும் பயமும் கலந்த குரலில் சொன்னார் மூர்த்தி.
அவரின் கவலை புரியாமல் இல்லை ஆனால் அவளின் நிலையை பார்த்தாள் மூர்த்தியின் கவலை சற்று குறைவு தான். உண்மையை சொல்லி ஆறுதல் தேட முடியாத நிலை.தன் நிலையை எண்ணும் போதே கழிவிரக்கம் தோன்றி கண்களில் நீர் அரும்பிட்டது.
உங்களுக்காக நா கல்யாணம் பண்றேன்னே வச்சுக்கோங்க அதுல என்னோட சந்தோஷம் எங்க இருக்கும்? பிடிக்காத வாழ்க்கைய எப்டி என்னால வாழ முடியும்னு நினைக்கிறீங்க. காலம் எல்லாத்தையும் மாத்தும்னு சொல்லாதிங்க சுத்த முட்டாள் தனமான வார்த்தை. மனசு பூ மாதிரி அதை கொன்னுட்டு வெறும் ஜடமா வாழ எனக்கு விருப்பமில்ல ப்பா,
என்ன கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. எனக்குன்னு சில ஆசைகள் இருக்கு அதை இப்போ நிறைவேத்தினா தான் உண்டு காலம் போன பிறகு எதுவும் பண்ண முடியாது ப்பா. இல்ல நா சொல்றதுல உங்களுக்கு உடன்பாடு இல்லைன்னா சொல்லுங்க இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன் யார வேணாலும் மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்துங்க. உங்க கடமை முடிஞ்சிருச்சுன்னு நீங்க சந்தோஷமா இருப்பீங்க ஆனா நா சந்தோஷமா இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க அதை என்கிட்ட எதிர்பாக்காதிங்க ப்பா” என்றபோதே துருத்தி கொண்டிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.
இதுவரை மகளின் சிறு சிறு கோபதாபங்களை பார்த்து அறிந்திருந்தவருக்கு இப்போது பேசிய வார்த்தைகளையும் வார்த்தைகளுக்கு சொந்தமானவளையும் திகைப்பு மாறாது பார்த்து கொண்டிருந்தார் மூர்த்தி. கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் எதிரில் பேச்சற்று அமர்ந்திருப்பவரை பார்க்க வேதனை படர்ந்தது.
“சாரிப்பா உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேன் ஆனா, எனக்கு வேற வழி தெரியலை எப்டி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியாம ஒரு வேகத்துல பேசிட்டேன் சாரி ப்பா” என்று மூர்த்தியின் கையை பிடித்து கண்ணீர் சிந்தினாள் மீரா.
“நீ எதுக்கு ம்மா மன்னிப்பு கேக்குற உன்னோட மனசுல இருந்ததை சொல்லிருக்க. கல்யாணம் வேணாம்ன்றதுக்கு காரணம் சொல்லிட்டதால இனி அந்த பேச்சை நா எடுக்கலை” என்றவர்
“உன்னோட ஆசைகளுக்கு நா தடையா இருக்க மாட்டேன் மீராம்மா அதுக்காக அப்டியே விட்டுறவும் மாட்டேன் கல்யாணம் பண்ணி தான் ஆகனுமன்ற இக்கட்டான சூழ்நிலை வந்தா என்னோட பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாம கல்யாணம் பண்ணிக்கணும்” என்றார் மூர்த்தி தீவிரமான குரலில்.
எதை எண்ணி கூறினாரோ இக்கட்டான நிலையை அவருக்கு நெருக்கமானவர்களே கொண்டு வருவார்கள் என்பதை அறியாமல் வார்த்தைகளை வெளியிட விதி தன் குறிப்பேட்டில் பத்திரமாய் பதிய வைத்து கொண்டது.
“ஓகே ப்பா” என்று தலையாட்டியவள் “என்மேல உங்களுக்கு கோபமா நா பேசுனது தப்பு தான் சாரிப்பா” என்று சமாதானம் செய்ய,
“கோபபட்டு என்ன ஆக போகுது மீராம்மா மகளோட கொஞ்சலை ரசனையா ஏத்துக்கும் போது கோபத்தை மட்டும் எப்டி ஏத்துக்க முடியாம போகும் சின்ன பொண்ணு விவரம் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் ரொம்ப நல்லாவே பேசுற மீராம்ம பெரிய பொண்ணுன்னு நிருபீச்சிட்ட” என்று மூர்த்தி பெருமையாய் உரைத்தாலும் வருத்ததின் சாயல் மெல்லிய நூலிழையாய் படர்ந்து மறைந்திருந்தது.
“சாரி ப்பா” என்று மீண்டும் வருத்தத்துடன் தொடங்க,
“விடும்மா நா எதுவும் நினைக்கலை நேரமாச்சு கிளம்பலாமா?”என்றார் சுரத்தே இல்லாத குரலில்.
“கிளம்பலாம் ப்பா ஆனா அதுக்கு முன்னாடி நா உங்ககிட்ட ஒரு விஷயம் விஷயம் பேசணும். கோவிலுக்கு கூட்டிட்டு வந்ததே அதுக்காக தான். நா சொன்ன பிறகு நீங்க கோபபடக் கூடாது” என்று தயக்கம் இயைந்த குரலில் கூற,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசுனயே அதுக்கே கோபம் வரல இப்போ சொல்ல போற விஷயத்துக்கு மட்டும் கோபப்படுவேனா என்ன? முதல விஷயம் என்னனு சொல்லு” என்று மூர்த்தி ஊக்க,
“நா வேலைக்கு போகலான்னு இருக்கேன் நீங்க என்ன ப்பா சொல்றிங்க? என்னோட ஆசைகள்ல இதுவும் ஒன்னு” என்றவள் ‘என்ன சொல்வாரே’ என்ற தவிப்பும் ஆவலும் கலந்து மூர்த்தியை பார்த்தாள்.
“ம் நல்ல முடிவு தான் உனக்கு விருப்பம்னா தாரளமா வேலைக்கு போம்மா நா எதுவும் சொல்ல மாட்டேன் ஆசைன்னு சொன்ன பிறகு மறுத்து பேசுவேனா?” என்று சட்டென விஷயத்தை ஏற்று கொள்ள,
அவளுக்கு தான் ஏமற்றமாய் போனது. வேண்டாம் முடியாது என்று மறுத்து பேசுவார் என்றெண்ணியவளுக்கு அவரின் சாதாரண பேச்சு காரணமில்லாமல் கவலையை பாய்ச்சியது.
“இதை சொல்றதுக்கு எதுக்கு இத்தனை பீடிகை. சரி எந்த ஊருக்கு ம்மா” என்று கேட்க,
“எந்த ஊருன்னா எனக்கு புரியலை ப்பா”.
“வேலைக்கு போறேன்னு சொல்லிட்ட அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” என்றவரின் குரலில் தெரிந்த விலகல் தன்மை மீராவிற்கு நன்றாகவே தெரிந்தது.
‘சற்று வேகமாக பேசியதினால் உண்டான கோபத்தின் வெளிப்பாடு’ என்றெண்ணியவள் “சாரிப்பா என்கிட்ட சாதாரணமா எப்பவும் போல பேசுங்க யாரோ போல பேசுறது கஷ்டமா இருக்கு ப்பா” என்றாள் கெஞ்சலாக.
மெலிதாய் புன்னகைத்தவர் “சின்ன வருத்தம் அது கொஞ்ச நேரத்துல சரியாகிரும் அதை விடும்மா வேலைக்கு எங்க அப்ளே பண்ணிருக்க சென்னையா இல்ல கோவையா?”.
“ரெண்டுமே இல்ல இங்க தான் இதே ஊர்ல தான் வேலை பாக்க போறேன். இத்தனை வருஷம் உங்கள பிரிஞ்சு இருந்தது போதும் இனிமேலாவது உங்க கூட இருக்கணும்னு ஆசைபடுறேன் ப்பா. எனக்காக எவ்ளவோ பண்ணிருக்கிங்க உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைய அமைச்சுக்காம இப்ப வரைக்கும் எனக்காக வாழ்ந்துட்டு இருக்கீங்க அப்படிப்பட்ட உங்கள நல்லா பாத்துக்க வேணாமா அந்த பொறுப்பு எனக்கு இருக்குப்பா” என்றவள் ஓரக்கண்ணால் மூர்த்தியை பார்த்தவாறு,
“ஒருவேளை நீங்க சொன்ன மாதிரியே இக்கட்டான சூழ்நிலை அமைஞ்சிருச்சுன்னா நா பாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிருவேன் அப்றம் உங்க கூட இருக்க முடியுமா இல்ல இருக்கத்தான் விடுவாங்களா?. அவங்களை விடுங்க. நீங்க விடுவிங்களா? மாப்பிள்ளை இல்லாம நா மட்டும் தனியா வந்தா என்ன எதுக்குன்னு கேட்டு அடுத்த நிமிஷமே அனுப்பிவிட்டுற மாட்டீங்க” என்று தீவிரமான பாவனையுடன் மீரா சொல்ல,
அவள் கூற்றில் மறைந்திருந்த கேலியை உணர்ந்து கொண்டவருக்கு சிரிப்பு பொங்கியது.
“வாலு நல்லாவே சூழ்நிலையை மாத்துற. உன்னோட விருப்பம் இது தான்னா எனக்கு முழு சம்மதம் மீராம்மா இந்த காலத்து பொண்ணுங்க சுயமா சம்பாதிக்கணும்னு நினைக்கிறது ரொம்ப நல்ல விஷயம்” என்றவரின் முகத்தில் தெரிந்த தெளிவை பார்த்த பிறகு தான் அவள் மனம் ஆசுவாசம் கொண்டது.
சுய சம்பாத்தியம் சுயமரியாதை சொந்த காலில் நிற்பது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் வெறும் வெளி பூச்சு மட்டுமே மற்றவர்களை நம்ப வைக்க அவள் ஏற்படுத்திய ஏற்படுத்தி கொண்ட பிம்பம். உண்மையான காரணம் மன ஆறுதலுக்காகவும் வேதனையில் நேரத்தை கடத்துவதை விட வேதனையோடு வேலையிலும் நேரத்தை கடத்தலாம் என்ற எண்ணத்திலும் தான் பணிக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தாள்.
‘ஒன்றை மறக்க வேண்டுமானால் வேறு ஒன்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும் அது தான் சரியாக இருக்கும்’ என்று எண்ணியவள்,
“தங்க்ஸ் ப்பா” என்று அழுகையும் சிரிப்பும் கலந்து சொல்ல, ஆறுதலாய் தோள் தட்டி கொடுத்தவர் மகளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டார் மூர்த்தி. பேச வேண்டியதை பேசிவிட்டதில் ஒரு வித திருப்தி படர்ந்தது மீராவிற்கு. மனதில் கடவுளுக்கு நன்றி உரைத்துவிட்டு எழுந்து கொள்ள,