கள்ளிபால் கொடுத்த குழந்தை கதறி துடிப்பதை போல அவன் காதலும் கதறியது.காரிகையானவள் கள்ளதனமாய் குடியேறிய அந்த தருணம், அவன் மனதில் சொல்ல முடியாத பரவசம். அன்றிலிருந்து இன்றுவரை காதலின் அளவீடுகள் அதிகரித்து கொண்டு தான் சென்றனவே தவிர அணுவளவும் குறையவில்லை.
வீட்டின் முன்பு பைக்கை நிறுத்த, இறக்கி கொண்டவள் “சரி பாலா நாளைக்கு பாக்கலாம்” என்று அவன் முகம் பார்க்க, கண்கள் கலங்கி கண்ணீர் தள்ளாடி ததும்பி கொண்டிருந்தது.
கசங்கிய முகம் கண்டு பதறியவள் “என்னாச்சு பாலா முகமே சரியில்ல அழுகுற மாதிரி தெரியிது என்னடா?”.
“ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்ல பவி நார்மலா தான் இருக்கேன். வேகமா ஓட்டிட்டு வரும் போது கண்ணுல பூச்சி பட்டுருச்சு நா எதுக்கு அழுக போறேன்” என்று கண்களை துடைத்து கொண்டு சிரிப்பை உதிர்த்தான்.
“பூச்சி விழுந்ததுமே சொல்ல வேண்டியது தானே? எங்க காட்டு” என்று கண்ணருகே கைகளை கொண்டுவர,
“போயிருச்சு பவி விடு நா கிளம்புறேன்” என்றவனை பொருட்படுத்தாது பார்வையை கூர்மையாக்கி அவன் கண்களில் ஆராய்ச்சியை மேற்க்கொண்டவள் மலரில் சிக்கெடுப்பது போல மெல்ல ஊதிவிட, பாலாவின் விழிகள் கண்ணீர் வெளிப்படுத்த தயாராய் இருந்தது.
அவனின் சொல்லப்படாத காதல். சொல்லில் அடங்காத காதல். பார்வையிலேயே பதியம் வைத்து பார்த்து பார்த்து அவளறியாமல் வளர்த்த காதல். பூவாய் பூத்து குலுங்கும் முன்பே புயல் காற்றிலே சிதைந்து தடம் தெரியமால் போனதை போல அவளின் வார்த்தையில் கசங்கி போனதை எண்ணி ஊமையாய் அழுதான்.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரின் செய்கையும் வேறு மாதிரியான பிம்பத்தை தோற்றுவிக்கும் விதமாய் இருக்க, ஜன்னல் வழியே கீழே நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தவனுக்கு சுறுசுருவென்று கோபம் உச்சந்தலைக்கு ஏறியதில் விறுவிறுவென கீழே விரைந்தான் விஷ்வா.
“ம் அவ்ளோ தான் இதுக்கு போய்” என்று பவித்ரா பாலாவின் தலையில் லேசாய் தட்ட,
“சரி நா கிளம்புறேன் பவி” என்றவனை கண்கள் இடுங்க பார்த்தவள்,
“என்னாச்சு உனக்கு எது கேட்டாலும் அளவா பதில் சொல்ற. நானே போறேன்னு சொன்னாலும் போகவிடாம நிறுத்தி வச்சு அரை மணி நேரமாவது பேசிட்டு தான் கிளம்புவ இன்னைக்கு என்ன? போறேன் போறேன்னு பறக்குற. என்னமோ போ இன்னைக்கு உன்னோட பேச்சே சரியில்ல என்னவோ மாதிரி பேசுற நடந்துக்கிற” என்று அலுத்து கொண்டவள் கேட்டை திறந்து உள்ளே செல்ல, பெண்ணவளின் உருவம் மறையும் வரை பார்த்து கொண்டிருந்தவன் அதன்பிறகே அங்கிருந்து கிளம்பி சென்றான்.
தனிமை கிட்டியிருந்தால் நிச்சயம் ஒருமூச்சு அழுது தீர்த்திருப்பான். சில நேரங்களில் கண்ணீர் மட்டுமே துணையாய் வரும் அத்துணையே ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகவும் அமையும்.அவள் முன்பு மனதை காட்டாது தனிமையை நாடி யாருமில்லாத இடம் தேடி சென்றான் பாலமுரளிதரன்.
கோபமாக இறங்கி வந்த விஷ்வா. பவித்ராவை வழிமறித்து நிற்க, என்னவென்று பார்த்தவளிடம் “இந்த குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுத்துறாத. உன்மேல நிறைய நம்பிக்கை வச்சுருக்காங்க முடிஞ்சளவு அந்த நம்பிக்கைய காப்பாத்த பாரு தேவையில்லாத அவமானத்தை உண்டு பண்ணிறாத”என்று வெறுப்பாக மொழிந்துவிட்டு மீண்டும் அறைக்கு சென்றுவிட்டான்.
‘என்னாச்சு இவருக்கு. அவரா வந்தாரு பேசுனாறு போயிட்டாரு’என்றெண்ணியவளை சமையல் அறையில் இருந்து வந்த வாசனை ஈர்த்தது.
“அத்தை” என்று சமையல் அறைக்குள் நுழைய முற்பட்டவள், அணிந்திருந்த உடையும் வந்திருந்த கோலமும் கண்டு நின்றுவிட்டாள்.
“வாம்மா என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட” என்ற பூங்கோதை அவள் தயங்கி நிற்பதை பார்த்து “போய் குளிச்சிட்டு வா டீ போட்டு வைக்கிறேன்” என்று சொல்ல,
சரியென்று தலையாட்டி வேகமாக அறைக்கு சென்று புத்துணர்வு குளியலை போட்டுவிட்டு வந்தாள் பவித்ரா. தட்டில் சில மிளகாய் பஜ்ஜிகளை எடுத்து வைத்து பவித்ராவிடம் கொடுத்தவர் “நீ சாப்டுட்டு இரும்மா நா போய் விஷ்வாவுக்கு கொடுத்துட்டு வறேன். டீ பிளாஸ்க்குல ஊத்தி வச்சுருக்கேன் சூடா இருக்கும் பாத்து ஊத்திக்கோ” என்று விட்டு சென்றிட,
தேநீரை டம்ளரில் ஊற்றியவள் தட்டில் வைத்து கொடுத்த மிளகாய் பஜ்ஜியை எடுத்து கொண்டு சமையல் அறையில் இருந்து பக்கவாட்டு வழியாக வெளியே செல்லும் வாசலில் வந்து அமர்ந்தாள். சற்று முன்பு இருட்ட தொடங்கியிருந்த வானம். இப்போது அடை மழையாய் பொழிய தொடங்கியிருந்தது.
“என்ன பவி இங்க வந்து உக்காந்துட்ட” என்றவாறே தனக்கொரு டம்ளரில் தேநீரை ஊற்றி கொண்டு வந்தவர் பவித்ராவின் எதிரில் அமர்ந்து கொள்ள,
“சும்மா தான் அத்தை” என்றவள் தட்டில் இருந்ததை சுவைக்க தொடங்க,
எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம் மேலோங்க அமர்ந்திருந்தவர் “எப்டி இருக்கு பவி” என்றார் பூங்கோதை.
“உப்பு சரியா இருக்கா ம்மா எண்ணெய் அதிகமா இழுக்கலையே?”.
“இல்லை அத்தை எல்லாமே சரியா இருக்கு ஏன் கேக்குறிங்க உங்க சமையல் மேல உங்களுக்கே டவுட்டா” என்று பவித்ரா சிரிக்க,
“இல்லம்மா போட்டேனா இல்லையான்னு மறந்துட்டேன்” என்று சமாளிப்பாய் சிரித்து வைத்தார் பூங்கோதை.
என்றுமில்லாமல் இன்று வித்தியாசமாய் நடந்து கொள்பவரை புருவம் சுருங்க பார்த்தவள் “என்ன அத்தை ஏதோ சொல்ல வர்றிங்க ஆனா, அதை சொல்லாம சம்பந்தமில்லாததை பேசிட்டு இருக்கீங்க என்னனு சொல்லுங்க” என்று ஊக்க,
“இல்லம்மா காலையில மாமா உன்கிட்ட பேசுனாரே அதை பத்தி தான்”.
“அதை பத்தி பேசுறதுக்கு என்ன அத்தை இருக்கு” என்றாள் விட்டேரியாக.
“நீ என்ன முடிவெடுத்துருக்க பவி. மாமா யோசிச்சு பொறுமையா பதில் சொல்ல சொன்னாரே அதான் என்ன பதில் சொல்ல போறேன்னு”.
மெலிதாய் புன்னகைத்தவள் பூங்கோதையின் கரத்தினை பற்றி அழுத்தி”என்ன மாதிரி முடிவெடுத்தா என்னோட அத்தை சந்தோஷபடுவாங்க?” என்றவளின் கேள்விக்கு பதில் அளிக்க இடம் கொடாமல் “அம்மா” என்று கத்தினான் விஷ்வா.
“இவனுக்கு வேற வேலை இல்ல முக்கியமான நேரத்துல தான் கூப்பிடுவான்” என்று முணுமுணுத்தவர் “இரும்மா என்னனு போய் கேட்டுட்டு வறேன்” என்று எழுந்து செல்ல,
எதற்கு அழைத்தான் என்று பூங்கோதைக்கு தெரியமால் இருக்கலாம் ஆனால் பவித்ராவிற்கு தெரியும் அழைத்ததின் காரணம் என்னவென்று. வெறுமையான புன்னகை படர, தட்டில் இருப்பதை காலி செய்து ரசிப்பு தன்மை சிறிதும் இல்லாமல் தேநீரை பருக்கிவிட்டு எழுந்து அறைக்கு சென்று விட்டாள் பவித்ரா.
“என்னடா வேணும்?”, பூங்கோதை எரிச்சலாய் கேட்க,
“எனக்கு இன்னும் ரெண்டு பஜ்ஜி வேணும்” என்று காலியான தட்டை நீட்டினான் மைந்தன்.
கடுகடுவென வந்த கோபத்தை அடக்கி கொண்டவர் “நீயே கீழ வந்து எடுத்துக்க வேண்டியது தானே. முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கும் போது தான் கூப்பிடுவியா?” என்று கொதிக்க,
“சாரிம்மா, நீங்க பேசிட்டு இருக்குறது எனக்கு எப்டி தெரியும்? நா சாப்பிடுறதுல கவனமா இருந்ததால எனக்கு கேட்கலை” என்று அசட்டையாக கூற,
“எனக்கு கேட்கலை” என்றவன் “எடுத்துட்டு வாங்கம்மா பசிக்கிது” என்றதும், கோபமெல்லாம் தணிந்து போக அவன் கேட்டது போலவே இரண்டு பஜ்ஜிகளை எடுத்து சென்று கொடுத்தவர் கீழே இறங்கி வர, தணிகாசலம் உள்ளே நுழைந்தார்.
“கோதை தண்ணி கொடும்மா” என்று களைப்புடன் சோபாவில் அமர, தலை விண்விண்னென்று வலிக்க தொடங்கியது.
அன்றைய நாளின் அலைச்சல் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே இருந்தது. தேயிலை தோட்டத்தில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது மட்டுமல்லாது வேலையாள் ஒருவனை தூக்கி எறிந்து விட, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துவிட்டு நாசம் செய்த பயிர்களுக்கான இழப்பீடு தொகை வேண்டி விண்ணப்பித்து,
மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவனின் குடும்பத்திற்கு வேண்டிய நிவாரண தொகையை வழங்கி, ஃபாரஸ்ட் அழுவலகத்திலும் குன்னூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துவிட்டு அலுவலகம் வர, ஆடிட்டரிடம் இருந்து உடனே அந்த ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை கொண்டுவருமாறு அழைப்பு. அவசரமாக கோப்புகளை எடுத்து கொண்டு கோவை சென்று வீடு திரும்ப நேரம் ஆறை கடந்து பயணம் செய்து கொண்டிருந்தது.
தண்ணிர் கொண்டு வந்து கொடுத்தவர் “என்னங்க ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி தெரியிது மதியம் வீட்டுக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் ஏன் என்னாச்சு வெளிய எங்கயும் போயிருந்திங்களா?”.
“இல்லம்மா ஒரு சின்ன பிரச்சனை அதை சரிபண்ணிட்டு வர லேட் ஆகிருச்சு” என்று தண்ணீரை பருக்கியவர் காலி செம்பை நீட்டி “பவித்ரா வந்துட்டாளா?” என்று கேட்க,
“அப்பவே வந்துட்டா இப்ப வரைக்கும் இங்க தான் இருந்தா. ஏன் கேக்குறிங்க?”.
“சும்மா தான் கேட்டேன்” என்றவர் எழுந்து அறைக்கு சென்றுவிட இரவு உணவை தயாரிக்க தொடங்கினார் பூங்கோதை.
வந்ததும் எதுவும் பேசாமல் அறைக்குள் அடைந்து கொண்ட மகனை எண்ணி கவலை மேலோங்க மெல்ல பாலாவின் அறைக்கு சென்றார் அமுதா.
டைரியில் முகம் புதைத்து படுத்திருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தவர் “பாலா ப்பா” என்று அழைக்க,
அவன் பார்வையை கண்டு “என்னடா பாக்குற மாப்பிள்ளை தானே பாத்துருக்காங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணலையே? அந்த பொண்ணே முடிவெடுக்காத போது நீ ஏண்டா அழுது வடியிற. நமக்கு கிடைக்கணும்னு இருந்தா நிச்சயம் கிடைக்கும். சூழ்நிலை எந்த நேரத்துலயும் எப்டி வேணாலும் மாறலாம் பாலா.
வாழ்க்கையோட பயணிக்கிறது பெரிய விஷயமில்ல அந்த பயணத்துல நமக்கு பிடிச்சத்தை அடைய எவ்ளோ பொறுமையா இருக்கோம்ன்றது தான் விஷயமே. இப்ப வரைக்கும் அந்த பொண்ணு மனசுல நீ இல்லன்றது தெரிஞ்சு போச்சு அதனால ஓவரா ஃபீல் பண்றத விட்டுட்டு குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சாதாரணமாக கூறியவர்,
“சொல்லாமலயே புரிஞ்சிக்கிறதுக்கு அவ என்ன ஞானியா? சாதாரண மனுஷி. முதல மனசை வெளிப்படுத்து அதுக்கு பிறகு நடக்கிறதை பாக்கலாம்” என்று உரைத்துவிட்டு சென்றுவிட,
அதுவரை இருந்த இறுக்கம் சோர்வு கவலை அனைத்தும் மெல்ல மெல்ல அவனிடமிருந்து விடுபட தொடங்கியது. அமுதாவின் வார்த்தைகளை உறுபோட்டவனின் மனம் ‘அதான் சொல்லவே இல்லயே அப்றம் எதுக்குடா இந்த சோகம். முதல அவகிட்ட சொல்லு ஆ ஊன்னா முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இப்டி நடந்திருமோ அப்டி நடந்திருமோன்னு கற்பனையில மிதக்காத’ என்று அவனுக்கு உரைக்குமாறு பலமாய் இடிக்க, சற்று முன்பு வரை தான் இருந்த நிலையை எண்ணி மெலிதாய் புன்னகைத்து கொண்டான்.
கண்களை துடைத்து கொண்டவன் அன்றைய நாளில் அவளுடனான நிகழ்வுகளை டைரியில் பதிப்பித்துவிட்டு நிமிர, மனம் நிர்மலம் அடைந்தது. இருக்கையில் இருந்து எழுந்தவன் மாற்று உடையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்து கொண்டான் பாலமுரளிதரன்.
தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க எண்ணிய விஷ்வா தணிகாசலம் வரும் முன்பே இரவு உணவை முடித்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டான்.
பவித்ரா தணிகாசலம் இருவர் மட்டுமே அமர்ந்திருக்க, இருவருக்கும் பரிமாறி கொண்டிருந்தார் பூங்கோதை.
“பவிம்மா சாப்டுட்டு ஆபிஸ் ரூமுக்கு வாடா கொஞ்சம் பேசணும்” என்று தணிகாசலம் எழுந்து சென்றுவிட,
மாப்பிள்ளை பற்றி பேசியது நினைவில் வர, என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தவள் பூங்கோதையை ஏறிட்டாள்.
“என்னம்மா?”.
“என்ன சொல்றதுன்னு தெரியலை அத்தை” என்றாள் கண்களில் நீர் திரள.
“உன்னோட விருப்பத்தை சொல்லு. மாமா எதுவும் சொல்ல மாட்டாரு நீ என்ன சொன்னாலும் சரின்னு தான் சொல்வாரு பயப்படாத” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்க,
உள்ளே சென்றவள் “மாமா” என்று வந்துவிட்டதை உணர்த்தினாள்.
நிமிர்ந்து பார்த்தவர் கையில் இருந்த கோப்பை டேபிளின் ஓரமாக வைத்துவிட்டு “வாம்மா என்ன சொன்னா உன்னோட அத்தை” என்றதும் திருதிருவென விழிக்க,
“தனியா பேசணும்னு சொன்னதும் ஏதாவது சொல்லிருப்பாளேஅதான் கேட்டேன்”.
“இல்ல மாமா அத்தை எதுவும் சொல்லலை” என்று அவருக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள் பவித்ரா.
“ம் என்னம்மா முடிவெடுத்துருக்க. மாப்பிள்ளையோட போட்டோ இதோ” என்று காக்கி நிற கவரை நீட்டியவர் “பாத்துட்டு பிடிச்சிருந்தா சொல்லு மேற்கொண்டு பேசலாம். பிடிக்கலைன்னாலும் சொல்லிரு அவங்களுக்கு என்ன மாதிரி பதில் சொல்லணுமோ சொல்லிக்கிறேன். உன்னோட விருப்பம் தான்” என்று பாரத்தை அவள் மீது திணித்துவிட்டு வாகாக இருக்கையில் சாய்ந்து கொண்டார் தணிகாசலம்.
சில நொடிகள் மௌனத்தில் பிரயாணித்தவள் திருவாய் மலர்ந்தாள் “சாரி மாமா பாக்காமலே வேணாம்னு சொல்றாளேன்னு தப்பா நினைக்காதீங்க, எனக்கு இதுல விருப்பம் இல்ல மாமா. கல்யாணத்தை பத்தி இப்ப வரைக்கும் நினைச்சு பாக்கலை அப்டி ஒரு எண்ணமும் வந்ததில்லை. ஒருவேளை, அப்டி ஒரு எண்ணத்தை எனக்குள்ள ஏற்படுத்துற ஒருத்தரை பாத்தா நிச்சயம் உங்க விருப்பதோட, நீங்க ஆசீர்வாதம் பண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் கல்யாண பேச்சு வேண்டாம் மாமா” என்று தீர்க்கமாய் உரைத்தவளை மெச்சுதலோடு பார்த்தார் தணிகாசலம்.
‘பக்குவமாய் பேசுகிறாளே’ என்றெண்ணியவருக்கு அவளின் வார்த்தைகளை கொண்டாட முடியவில்லை. காரணம் ‘காதல் துளிர்த்தால் தானே கலியாணம் வரை செல்ல முடியும் அப்படி ஒன்று நடவாத போது எப்படி சாத்தியம் எப்போது சாத்தியமாகும்?’ என்ற எண்ணம் கேள்விக்குறியிட்டு நிறுத்தியது.
“என்ன மாமா எதுவுமே பேச மாட்டிங்கிறீங்க?.
“என்ன பேசுறதுன்னு தெரியலை ம்மா நீ பேசுறதை கேட்டு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையா இருக்கு. நீ சொல்றது எப்போ நடக்கும் எப்டி நடக்கும்னு நினைச்சு பாத்தா மலைப்பா இருக்கு ம்மா” என்று அலுத்து கொள்ள,
“நடக்கும் மாமா நம்பிக்கை தானே எல்லாம்” என்றவள் “சரி மாமா லேட் ஆகிருச்சு நீங்க தூங்குங்க இன்னைக்கு வேலை அதிகம்னு அத்தை சொன்னாங்க என்ன பத்தின கவலை வேண்டாம்” என்று ஆறுதலான சிரிப்பை உதிர்த்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள் பவித்ரா.
“ம்ஹும் என்ன பொண்ணோ. எதையுமே ஒரு சிரிப்புல கடந்து போயிடுறா கடந்து போகவும் வச்சுட்டுறா யாருக்கு யாருன்னு படைச்சவனுக்கு தெரியாதா என்ன?. சூழ்நிலைகள் எப்டி வேணாலும் மாறலாம் அதுகேத்த மாதிரி நாம தான் மாற பழகிக்கணும்” என்று தனக்கு தானே சொல்லி கொண்டவர் வேலைகளை ஒதுக்கிவிட்டு உறக்கத்தை நாடி சென்றார்.
உண்மைதான். சூழ்நிலைகள் நீரை போல இடத்திற்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் மாறி கொள்ளும். ஆனால், மனிதனின் மனம் தான் அதை ஏற்க மறுத்து முரண்டு பிடிக்கும்.
இங்கேயும் அப்படி தான் எதிர்பாராத சூழ்நிலையால் அரங்கேற போகும் நிகழ்வுகளினால் பின்னி பிணைந்த மனங்களின் இடையே நம்பிக்கை உடைந்து வெறுப்பும் குரோதமும் உருவாகி, பிருந்தாவனம் அசோகவனமாக மாற போவதை முன்பே அறிந்திருந்த விதி அவல புன்னகையை சிந்தியது.