மனதில் பதிந்து போன மருண்ட பார்வை மனக்கண் முன்னே தோன்றி இம்சிக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் விஷ்வா.பஞ்சுமெத்தையும் பளிங்கு கல்லின் உணர்வை தோற்றுவித்து அசௌகரியத்தை ஏற்படுத்தியது. ‘காதல் வந்து அழைத்த போது தான் பெயர் வைத்ததன் அர்த்தம் புரிகிறது’, வைரமுத்துவின் கவிதை அவன் இதழில் அர்த்தமற்ற புன்னகையை சிந்த வைத்தது.
‘காதலா என்றால் தெரியவில்லை ஆனால் ஊண் உறக்கம் தொலைத்து நினைவுகளில் அவள் மட்டுமே வலம் வந்தால் அதற்கு காதல் என்று தானே பெயர்?. புவியீர்ப்பு விசைபோல தன் பக்கம் ஈர்த்து கொண்டவளின் மோகனம் நெஞ்சை விட்டு அகல மறுக்கின்றதே. காதல் வந்தாள் கண்டதையும் நினைக்க சொல்லும் போல கவிதைகள் மட்டும் தான் தோன்றவில்லை அதுவரை ஆசுவாசம் தான் இல்லையென்றால் பைத்தியம் போல எவன் சிந்தனையில் சிதருவது’ என்று இரவின் நீட்சியில் சிந்தையில் பேதையவளை நிறைத்து பித்தனாய் பிதற்றினான் விஷ்வா.
புரண்டு புரண்டு படுக்க புன்னகைகள் விரிவடைந்து கொண்டே சென்றன அவன் இதழில்.விட்டதை பார்த்து புன்னகைத்தவன் அனுமதியில்லாத நாணத்தில் முகத்தை மூடி கொள்ள அந்த அனுபவமும் அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது. “ரோஸ்பட் இம்சை பண்றடி உன்னால தூக்கமே போச்சு இதுவரைக்கும் இல்லாத தோணாத ஒரு உணர்வு நேத்து உன்ன பாத்த நிமிஷத்துல இருந்து பீல் ஆகுது. இதுக்கு பேர் சொல்ல தெரியலை ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு.
அவ்ளோ பயமா என்மேல பயத்தை விட நீ திருத்திருன்னு முழிச்ச அந்த முழி இருக்கே இப்போ நினைச்சு பாத்தாலும் சிரிப்பு வருது. ஆழமா பதிஞ்சு போச்சு என்ன தான் பண்ண பாவி என்னோட துக்கத்தை கலைச்சிட்டு நீ நிம்மதியா தூங்கிட்டு இருக்க” என்று வாய்விட்டு தனியாக புலம்பினான் விஷ்வா.
படுக்கையில் இருந்து எழுந்தவன் பால்கனியில் வந்து நின்று கொண்டான். குளிரின் பதமும் இரவின் இதமும் ஏகாந்தமாய் இருந்தது. கும்மிருட்டில் இலகற்று பார்வை செலுத்த தொடங்கிய நேரம் மெல்லிய இசையில் அலைபேசி சிணுங்கியது.
சத்தம் கேட்டு உள்ளே சென்றவன் அலைபேசியை எடுத்து பார்க்க அஜய் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்று காதில் வைத்தும் “ஹாய் கேட்பரி எப்டி இருக்க செம்ம ஜாலியா இருக்க போல” என்று துள்ளல் நிறைந்த குரல் கேட்க,
“ம் இருக்கேன் நீ என்ன பண்ற என்ன தீடீர்னு இந்த நேரத்துல கால் பண்ணிருக்க”, வழக்கத்திற்கு மாறாக ஒலித்த அவன் குரல் கேட்டு மறுமுனையில் அமைதி நிலவியது.
“என்னடா லைன்ல இருக்கியா?”.
“இருக்கேன் இருக்கேன் பேசுறது என்னோட பிரெண்ட் விஷ்வா தானே?” என்றான் சந்தோகம் கொண்டு,
“அதுல உனக்கு என்ன சந்தேகம் பக்கி”.
“சின்ன டவுட் வந்துருச்சு நீ பேசுறதை கேட்டு. சரி ஆபிஸ் எப்டி போகுது வேலை பிடிச்சிருக்கா?”.
“யாருக்கு தெரியும் அந்த பக்கம் போனா தானே” என்று விட்டேரியாக பதில் கூறினான் விஷ்வா.
“ஏண்டா நான் தான் சொன்னேனே ஒன் மன்த் ஒர்க் பண்ணு அப்றம் பாக்கலாம்னு. அங்கிள் மனசு இறங்கி வரணும்னா நா சொன்ன மாதிரி செய் விஷ்வா” என்று அஜய் சொல்ல,
“போடா பிடிக்காத ஒன்னை செய்ய சொல்லி கட்டாயபடுத்த கூடாது. என்ன நானே புரிஞ்சுகிற தனிமைகள் ஏன் எதுக்குன்னு கேக்காத சுதந்திரம் எனக்கு பிடிச்ச மாதிரியான ஒரு வாழ்க்கை இதையெல்லாம் மிஸ் பண்ணிட்டு இங்க குப்பை கொட்ட சொல்றியா? முடியவே முடியாது. ரெண்டு நாள் டைம் கேட்டிருந்தேன் அது நாளையோட முடியுது, சோ என்ன சொன்னா அவங்க நம்புவாங்களோ அதை சொல்லி மார்னிங் கிளம்பி வறேன்” என்று அறுதியிட்டு கூறினான் விஷ்வா.
“என்னமோ பண்ணு சொன்னா கேட்க மாட்ட” என்று அவன் பிடிவாதம் நிறைந்த குணம் அறிந்து வற்புறுத்தாமல். வேறுசில விஷயங்களை பேசிவிட்டு வைத்து விட, அவளை பற்றிய எண்ணங்கள் ஒதுங்கி அவனை பற்றிய சிந்தனைகள் சிதறின.மொத்தத்தில் அன்றைய இரவு, நித்திரை தேவி அவனை விட்டு நீண்ட தூரம் சென்றிருந்தாள்.
அந்தகாரம் பூசிக்கொண்டு ஆடி அசைந்து வரும் விடியலை காண்பதே தனிசுகம் தான். காதலியை கள்ளத்தனமாய் பார்ப்பது போல உதிக்கும் போதே மேகங்களின் இடையே ஒளிந்து கரைந்து உயிர்தெழும் பகலவனை காண ஆவலோடு மூர்த்தியை அழைத்து கொண்டு வந்திருந்தாள் மீரா.
“மழை பெஞ்சுருக்கு ம்மா ரோடேல்லாம் ஈரமா இருக்கும் நாளைக்கு போலாம் இல்லன்னா கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்” என்றவரின் பேச்சை கேட்காது பிடிவாதமாக கிட்டத்தட்ட இழுத்து கொண்டு வந்திருந்தாள்.
“பாத்து மீராம்மா வலிக்கிற போகுது” என்றவர் கவனமாக அடிகளை எடுத்து வைத்து நடக்க,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது ப்பா” என்றவள் உடலை ஊடுருவி செல்லும் குளிரையும் பொருட்படுத்தாது வேக நடை போட்டு எப்போதும் விடியல் காணும் இடத்திற்கு சென்றாள்.
முதல் நாள் பெய்த மழையில் ஜனித்த மழலைகள் ஆங்காங்கே வழிந்தோடி கொண்டிருந்தன. வெள்ளி காசுகளை உருக்கி ஓட விட்டதை போல அருவி ஆர்ப்பரித்து கொட்ட, வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தாள் மீரா.
அருகில் வந்த மூர்த்தியிடம் “ப்பா நேத்து வந்தப்போ இங்க அருவி இருந்ததுக்கான அடையாளமே இல்லாம இருந்துச்சு இன்னைக்கு பாருங்க எப்டி தண்ணி கொட்டுதுன்னு. செம்மையா இருக்குப்பா” என்று உடல் சிலிர்த்தாள் மீரா.
“மழை வந்தா மட்டும் தான் இங்க தண்ணி வரும் மீராம்மா தீடீர் அருவி கேள்விப்பட்டதில்லை குன்றுக்கு மேல இருக்குற குட்டை நிரம்பி, போக வேற வழி இல்லாத பட்சத்துல தாழ்வான பகுதிய நோக்கி தண்ணி வரும் அது தான் இந்த மாதிரி அருவியா கொட்டுது” என்று விளக்கம் அளித்தவர்,
“சரிம்மா நீ இங்கயே இரு நா கொஞ்ச தூரம் நடந்துட்டு வறேன்” என்று மூர்த்தி சென்றுவிட, இயற்கையின் எழில்மிகு சுந்தரத்தை உவகை பொங்க பார்த்து கொண்டிருக்க, அவள் எதிர்பார்த்த உதயமும் வந்தது.
ஆதவனின் வருகையை சிவந்து சிதறிய நிறங்கள் ஊர்ஜிதம் செய்ய அவள் மனதில் அத்தனை அமைதி பரவியது.வாழ்வை மகிழ்ச்சியுடன் பிறர் மனம் நோகாத வண்ணம் வாழ வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்து கொண்டவள் கைகளை விரித்து சூரிய குழந்தையை வரவேற்க, தூரத்தில் இருந்து அவள் செய்கையை சுவரஸ்யம் அரும்ப பார்த்து கொண்டிருந்தான் ஆடவன்.
முழுதும் விடியாத வேளை என்பதால் தூரத்தில் தெரிந்த உருவம் அவள் கண்களுக்கு அகப்படவில்லை. சிறிது தூரம் நடந்துவிட்டு மூர்த்தியும் வந்துவிட, இயற்கையை பற்றி இருவரும் விவாதித்து கொண்டே இல்லம் விரைந்தனர்.
வீட்டின் உள்ளே நுழையும் போதே தணிகாசலத்தின் குரல் சற்று பலமாய் கேட்டது.சட்டென பிரேக் இட்டபடி நின்றன விஷ்வாவின் கால்கள்.
“உன்னோட பையன் தானே எதையுமே திடீர் திடீர்ன்னு தான் செய்வான் முடிவெடுப்பான் தனி பிறவி இல்லையா” என்று எள்ளலாய் வெளிப்பட்ட குரலில் வெற்று புன்னகை உதிர்த்தவன் கால்களுக்கு உயிர் கொடுத்து எதுவும் பேசாமல் மாடியேறி செல்ல,
“டேய் விஷ்வா காஃபி குடிச்சிட்டு போடா” என்று அழைத்தார் பூங்கோதை.
“இல்லம்மா எனக்கு வேணாம்” என்றவன் தணிகாசலத்தின் மீது பார்வையை படிய வைத்து சென்றுவிட,
“அவன் கேட்ட ரெண்டு நாள் இன்னையோட முடியுது அவனோட முடிவை பத்தியெல்லாம் கேட்க போறதில்லை பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ வந்து வேலைய பாக்க சொல்லு கோதை” என்று கண்டிப்புடன் சொல்ல,
“ஏன் தான் இப்டி இருக்கீங்கன்னு எனக்கு தெரியலை. ஒரு நேரம் அவன் மேல பாசமா இருக்குற மாதிரி நல்லா பேசுறீங்க ஒரு நேரம் வேற மாதிரி அதிகாரமா பேசுறீங்க. இந்த விஷயத்துல மட்டும் உங்கள புரிஞ்சுக்கவே முடியலை” என்று ஆற்றமையுடன் பூங்கோதை சொல்ல,
“ஒரு சில விஷயங்களை விளக்கிட்டு இருக்க முடியாது கோதை தானா புரிஞ்சா தான் உண்டு. பவித்ராவை சொல்லு எல்லாத்துலயும் சரியா இருப்பா நடந்துப்பா நா சொன்னா மறுபேச்சு பேச மாட்டா. அதுவே இவன சொல்லு கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டான் இவரு சொல்லி நாம செய்யணுமான்ற மெத்தன போக்குல சொன்னதை செய்யாம இருப்பான். அவன்கிட்ட எப்டி பேசணுமோ அப்டி பேசுனா தான் வேலை நடக்கும்” என்றவரின் முகத்தில் கடுமை படர்ந்தது.
“அவனை குறை சொல்லாட்டி உங்களுக்கு வேலையே நடக்காது எப்ப பாரு ஏதாவது ஒன்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. எனக்கென்னமோ சரியா படலை தோளுக்கு மேல வளந்த பையன தோழன்னு சொல்லுவாங்க பாத்து பதமா பேச பாருங்க. நீங்க ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு யாரோ மாதிரி பேசுறது, கண்டுக்காம போறது நல்லா இல்ல சொல்லிட்டேன். நா சொன்ன மாதிரி நாளைக்கு அவன் ஆபிசுக்கு வருவான்” என்று உறுதியளித்தவர்,
“இன்னைக்கு சாயங்காலம் வீட்டுல வரலட்சுமி பூஜை வச்சருக்கேன் நீங்க லேட் பண்ணாம சீக்கிரம் வாங்க” என்றுவிட்டு வேலையை கவனிக்க சென்றுவிட்டார் பூங்கோதை.
கீழே இருவரும் பேசி கொண்டதில் கோபம் உண்டாக அக்கோபத்தில் பலியானது உயிரில்லா பூஜாடி தான். மனம் கொதித்தது கேட்டுக்கேட்டு அலுத்து போன வார்த்தைகள் தான் என்றாலும், கடந்து செல்ல முடியவில்லை.
ஓ வென்று கத்த வேண்டும் போல இருந்தது. டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென மண்டியவன் ரத்த கொதிப்பை குறைக்க தலையில் சிறிது தண்ணீரை தெளிக்கவிட்டு தலையை தாங்கியபடி தரையில் அமர்ந்து கொண்டான் விஷ்வா.
சற்று முன் இருந்த இதமான மனநிலை எங்கோ ஓடி மறைந்து கொண்டது. எத்தனை நேரம் அமர்ந்திருந்தானோ கதவு தட்டும் ஓசையில் உணர்வெழுந்தவன் எழுந்து சென்று கதவை திறக்க, பூங்கோதை நின்றிருந்தார்.
“மணி என்னாகுது இன்னும் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க” என்றவாறே அவனை விலகி கொண்டே உள்ளே வந்தவர் சில்லு சில்லாய் உடைந்த பொருளை கண்டு பதறி போனார்.
“சாரி ம்மா தவறுதலா கைப்பட்டு கீழ விழுந்துருச்சு சொன்னா நீங்க மனசு வருத்தபடுவீங்கன்னு தான் ரூமுக்குள்ளேயே இருந்துட்டேன் சாரிம்மா வேணும்னு பண்ணலை” என்று வருத்தி பேச,
“ப்ச் பரவாயில்ல விடுடா ஜாடி தானே. கையில எதுவும் அடிப்படலையே” என்று அவன் கரத்தினை பற்றி ஆராய்ந்தவர் காயம் ஏதும் இல்லையென்றதும் நிம்மதியாக உணர்ந்தார்.
அருகில் இருந்த குப்பை கூடையில் உடைந்த பூஜாடியின் துண்டுகளை போட்டுவிட்டு அறையை சுத்தம் செய்தவர் “குளிச்சிட்டு சாப்ட வாடா அப்பா அப்பவே கிளம்பி போயிட்டாரு. பூஜைக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்க மார்க்கெட் வரைக்கு போயிட்டு வரலாம்” என்று சொல்லிவிட்டு செல்ல, அவசரமாக கிளம்ப தொடங்கினான் விஷ்வா.
எப்போதும் போல பவித்ராவை அழைத்து செல்ல வந்தவனிடம் மருத்துவமனை செல்லாமல் வேறு எங்காவது செல்லுமாறு கூற வழக்கமாக செல்லும் தேநீர் கடைக்கு அழைத்து சென்றான் பாலமுரளிதரன். அவனை போலவே அவளுக்கும் அவ்விடம் பிடித்து போக,
“இந்த ஊர்ல இப்டி ஒரு இடம் இருக்குறதே இப்போ தான் பாக்குறேன் செம்மையா இருக்கு பாலா ரிலாக்ஸ் பண்ண ஏத்த இடம்”என்று சிலகிக்க,
“நீ இங்கயே உக்காரு பவி நா போய் டீ வாங்கிட்டு வறேன். நாயர் போடுற டீ நீ குடிச்சத்திலையே? ஒரு தடவை குடிச்சா மறுபடியும் வேணும்னு கேட்க தூண்டும் அப்டி ஒரு டேஸ்ட்” என்று பாலா தேநீர் வாங்க சென்றுவிட,
சுற்றி முற்றி அவ்விடத்தின் எழிலை பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா. இரண்டு கண்ணாடி கிளாசில் தேநீர் வாங்கி வந்தவன் அவளுக்கொன்றை கொடுத்துவிட்டு தனக்குறியதை பருகி கொண்டே எதிரில் அமர,
“என்ன பாலா மூடவுட்டு சரியாகிருச்சா இல்ல அப்டியே தான் இருக்கா” என்று சிறு சிரிப்பை உதிர்த்து பவித்ரா கேட்க,
“இல்ல சரியாகிருச்சு பவி” என்றவன் “என்ன திடீர்னு அவுட்டிங் கூப்டுருக்க, அதுவும் காலையிலேயே. ஏன் ஹாஸ்பிடல் போக தோணலையா?”.
“ப்ச் மைண்ட் ஒரு மாதிரி டிஸ்டாப்டா இருந்துச்சு ப்பா அதான் எதுக்கு ரிஸ்க்குன்னு போகலை” என்று அயர்வுடன் சொன்னவள்,
“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு பட் இப்டி ஒரு ரிலாக்ஸேஷன் ஏரியா இருக்கும்னு நினைச்சு கூட பாக்கலை பாலா ரொம்ப நல்லா இருக்கு கூடவே டீ அருமை” என்று பிரமாதமாக மூன்று விரல்களை காட்டி சிரித்து கொண்டே சொன்னாள் பவித்ரா.
“மிக்க மகிழ்ச்சி” என்று தலை தாழ்த்தி நகைத்தான் பாலமுரளிதரன்.
பெருமூச்சை வெளியிட்டவள் “உன்கிட்ட ஒன்னு சொல்லணும் பாலா நேத்து நா சொன்னேனே பாரின் மாப்பிள்ளை” என்று தொடங்கவும் நிர்மலமான முகம் சுருங்கி போனது.
“மாமாகிட்ட என்னோட முடிவை சொல்லிட்டேன் அவரும் சரின்னு சொல்லிட்டாரு” என்றவள் சிறு மௌனத்திற்கு பின்,
“கல்யாணம் இப்போதைக்கு வேணாம்னு சொல்லிட்டேன்” என்று தணிகாசலமும் அவளும் பேசி கொண்டதை விளம்ப, சற்று முன் இருந்த வாட்டம் மறைந்து உற்சாகம் பீறிட்டது.
“நிஜமாவா?” என்று நம்ப முடியாத பாவனையில் கேட்டவனை கண்கள் இடுங்க பார்த்தவள்,
“இதுல உனக்கு என்ன சந்தேகம் நீ ஏன் இவ்ளோ சந்தோஷப்படுற?”.
“சந்தோஷம்னு சொல்ல முடியாது ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன். உன்னோட மாமா சொல்லி நீ எதையும் கேட்காம இருந்தது இல்ல அதான் இந்த விஷயத்துல எப்டின்னு ஒரு சந்தேகம் வேற எதுவும் இல்ல” என்றவன் மனதில் அமுதாவிற்கு நன்றி கூறினான்.
நேற்று அவர் மட்டும் ஆறுதல் சொல்லவில்லை என்றால் இப்போது வரை அழுது கரைந்து தேவதாசின் மறு உருவமாய் மாறி சோக கீதம் வாசிக்க தொடங்கியிருப்பான்.
“நாம யோசிச்சு முடிவு எடுக்க வேண்டிய லிஸ்டுல கல்யாண விஷயம் ரொம்ப முக்கியம் பாலா. யாருன்னே தெரியாத ஒருத்தர் கூட வாழ போற வாழ்க்கைய பத்தி நிதானமா யோசிச்சு முடிவெடுக்கணும். அந்த நேரத்துல யோசிக்க தவருனோம் வாழ்க்கை முழுக்க தப்பு பண்ணிட்டோமேன்ற குற்றவுணர்ச்சியோட வாழ வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகிருவோம்.
அது நமக்கு மட்டும் கஷ்டமா இருந்தா தாங்கிக்கலாம் நம்மள நல்லா வாழ வைக்கணும்னு நினைச்சவங்களுக்கும் கஷ்டத்தை உண்டு பண்ணுச்சுன்னா நல்லா இருக்காது. அதுவுமில்லாம இப்போதைக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இல்ல பாலா”என்றவளை, அமைதியாக பார்த்தான் அவன் எதுவும் பேச தோன்றவில்லை அவனுக்கு.
“ஈவ்னிங் வீட்டுல பங்சன் இருக்கு கண்டிப்பா நீ வரணும்” என்று அழைக்க,
“என்ன பங்சன்?”.
“வரலட்சுமி பூஜை. அத்தை ஏற்பாடு பண்ணிருக்காங்க நிறைய லேடீஸ் வருவாங்க நல்லா இருக்கும்”.
“அங்க வந்து நா என்ன பண்ண போறேன் நா வரலை” என்று மறுப்பு கூறினான் அவன்.
“ப்ச் காரணமா தான் சொல்றேன் என்ன காரணம்னு அங்க வந்து தெரிஞ்சுக்கோ ஈவ்னிங் நீ வர அப்டியே மீராவையும் கூட்டிட்டு வா. வந்து ஒரு வாரம் ஆகுது இன்னும் அவ என்ன பாக்க வரலை. அவ்ளோ பெரிய மனுஷி ஆகிட்டா நியும் என்கிட்ட சொல்லவே இல்ல” என்று இதழ் சுளித்தவள் “சரி கிளம்புவோமா டைம் ஆச்சு” என்று எழுந்து கொள்ள பாலாவும் எழுந்து கொண்டான்.
தேநீருக்கான பணத்தை கொடுத்துவிட்டு வந்தவன் வாகனத்தை உயிர்ப்பிக்க பவித்ரா பின்னால் ஏறிக்கொண்டதும் நேராக மருத்துவமனை நோக்கி விரைந்தது இருசக்கர வாகனம்.
“ம்மா அவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா லிஸ்டுல இருந்த எல்லாமே வாங்கியாச்சு” என்று பூஜை பொருட்கள் அடங்கிய பையை பரிசோதித்து கொண்டே கேட்டான் விஷ்வா.
“அவ்ளோ தான்னு நினைக்கிறேன் ஏதாவது விட்டு போச்சுன்னா அப்பாவை வாங்கிட்டு வர சொல்லலாம். துணி கடைக்கு போய் புடவை மட்டும் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பலாம்” என்று பூங்கோதை சொல்ல,
“இன்னும் உங்க பர்சேஸ் முடியலையா? எவ்ளோ நேரம் ம்மா மணி என்னாகுதுன்னு பாத்திங்களா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா கடை கடையா ஏறி இறங்கி வாங்குனது போதாதுன்னு புடவை கடைக்கு போகணும்னு சொல்றிங்க. நீங்க கூப்டதும் வந்தேன் பாருங்க என்ன சொல்லணும்” என்று நொந்து கொள்ள,
“வர்றவங்களை வெறும் கையோட அனுப்புனா நல்லா இருக்காது விஷ்வா. இந்த மாதிரி பூஜை ஏற்பாடு பண்ணும் போது, முக்கியமா இந்த விசேஷத்துக்கு சுமங்கலி பொண்ணுங்களுக்கு புடவை மஞ்சள் குங்குமம் தாலிசரடு வச்சு கொடுக்கிறது முறை. அப்டி பண்ணா தான் பூஜையோட முழு பலனும் கிடைக்கும். சொன்னா உனக்கு புரியாது போனதும் எடுத்துட்டு வந்துறலாம் அம்மா லேட் பண்ண மாட்டேன் பிராமிஸ்” என்று மகனின் கையில் சத்தியம் செய்ய,அவரின் செய்கை அவனுக்கு சிரிப்பை உதிர்க்க செய்தது.
“நீங்க இருக்கீங்களே. பேசியே தாஜா பண்ணிருங்க வாங்க போலாம்” என்றவனிடம் எப்போதும் செல்லும் துணி கடைக்கு வாகனத்தை செலுத்துமாறு கூறினார் பூங்கோதை.
அவ்வீட்டிலேயே தோழியை போல சகஜமாக பழகுவது பூங்கோதையிடம் மட்டும் தான். அனுசரணையாக ஆறுதலாக இதுவரை இருப்பது அவர் மட்டுமே அதனாலேயே அவர் மீது கோபம் கொண்டாலும் அரை மணி நேரம் கூட தாங்காது தானே சென்று பேசிவிடுவான் விஷ்வா.
விரக்தியான நேரங்களில் விபரீத எண்ணங்கள் தோன்றும் அவையெல்லாம் காணாமல் போனது பூங்கோதையின் அன்பும் ஆறுதலும் நிறைந்த வார்த்தைகளினால் தான் இன்றுவரை அவரின் வார்த்தைகள் தான் அவனுக்கு உந்துதலாய் உடன் வருகின்றது.
சில மணி துளிகளில் இருவரும் துணி கடையை வந்தடைந்தனர்.விஷ்வா காரிலேயே அமர்ந்து கொள்ள, பூங்கோதை மட்டும் கடையின் உள்ளே சென்றார். எத்தனை பேர் வருவார்கள் என்று மனதில் கணக்கு போட்டவர் ஒரே மாதிரியான நிறத்தில் புடவைகளை எடுத்து விட்டு, அதற்கேற்ற நிறத்தில் சட்டை துணியும் எடுத்துவிட்டு,
அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு வீடு வந்து சேர, நேரம் பன்னிரெண்டை கடந்திருந்தது.வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைத்தவன் அயர்வாக உள்ளதென கூறி அவன் அறைக்குள் சென்று முடங்கி கொள்ள,
வாங்கி வந்த அனைத்து பொருட்களும் சரியாக உள்ளதா என்று பூங்கோதை பரிசோத்து பார்க்க, அதிலேயே அரைமணி நேரம் கடந்திருந்தது. அதன் பிறகு மதிய உணவு தயாரித்து தணிகாசலத்திற்கு கொடுத்தனுப்பி விட்டு அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினார் பூங்கோதை.
வீட்டில் வைத்து பூஜை என்பதால் அன்றைய தினம் ஓய்வுநேரம் என்பதே கிட்டவில்லை. அரை நாள் விடுப்பு எடுத்து கொண்டு பவித்ராவும் வந்துவிட இருவரும் வேலையை பகிர்ந்து கொண்டு கடகடவென முடித்தனர்.