முதல் நாள் பூங்கோதை அழைப்பு விடுத்ததற்கிணங்க மாலை பிருந்தாவனத்தில் நடைபெறும் வரலட்சுமி பூஜைக்காக அவசரமாக கிளம்பி கொண்டிருந்தாள் மீரா.
ஒவ்வொரு உடையாக எடுத்து தன் மீது வைத்து கண்ணாடியில் பார்த்தவளின் முகம் அதிருப்தியை மட்டுமே காட்டியது.
“எதுவுமே செட் ஆக மாட்டேங்கிது” என்று முகம் சுருக்கியவள், “ப்பா இங்க வாங்களேன்” என்று மூர்த்தியை அழைக்க,
உள்ளே வந்தவர் “என்ன பாப்பா?”என்றார்.
“இந்த டிரெஸ்ல எது நல்லா இருக்கும்னு சொல்லுங்கப்பா எதை போட்டுட்டு போறதுன்னு குழப்பமா இருக்கு” என்று பாவமாக மூர்த்தியை பார்த்தாள் மீரா.
“எல்லாமே நல்லா தான் இருக்கு” என்று பரப்பி வைத்த உடைகளில் ஆராய்ச்சி மேற்க்கொண்டவர் கபோர்டில் இருந்த வெண்ணிறத்தில், பாடரில் ஆகாய நிறம் கலந்து ஜரிகை இளையோடிய புடவை கண்ணில் பட, வேகமாக சென்று எடுத்து வந்து,
“ம் இது நல்லா இருக்கும் மீராம்மா பூஜைக்கு போற அதுக்கேத்த டிரெஸ் இது தான். கட்டிக்கோ உன்னோட அத்தை எடுத்து கொடுத்தது தானே கட்டிட்டு போனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று புடவையை கையில் திணித்தார் மூர்த்தி.
திகைத்து விழித்தவள் “இதையா ப்பா என்ன விளையாடுறீங்களா, இதை போய் எப்டி? போங்கப்பா உங்கள செலக்ட் பண்ண சொன்னேன் பாருங்க என்ன சொல்லணும். என்னால இதை கட்ட முடியாது எப்டி கட்டுறதுன்னு கூட தெரியாது. நமக்கு சுடி தான் பெஸ்ட் எடுத்தோமா போட்டோமா ஹாயா போயிட்டு வந்தோமான்னு இருக்கணும். இதுல ஏதாவது ஒன்னு சொல்லுங்க போட்டுட்டு போறேன்” என்று பரப்பி வைத்ததை காட்டினாள் மீரா.
“நாம போற இடத்துக்கு ஏத்த மாதிரி டிரெஸ் பண்ணணும்னு உனக்கு ஏற்கனவே சொல்லிருக்கேன் மீராம்மா. இது தான் நல்லா இருக்கும் கட்டி பாரு பிடிச்சிருந்தா இந்த டிரெஸ் போட்டுட்டு போ இல்லன்னா வேற மாத்திக்கோ”.
“ப்ச் இதை எனக்கு கட்ட தெரியாதுப்பா”என்று உதட்டை பிதுக்க,
“நா அமுதாவை வர சொல்றேன் நல்லா கட்டிவிடுவாங்க” என்றவர் அமுதாவிடம் விஷயத்தை சொல்லி அழைத்து வர, முகத்தை சுண்டி வைத்தபடி அமர்ந்திருந்தாள் மீரா.
உள்ளே நுழைந்தவர் அறையை தாழிட்டு “என்ன ம்மா அதிசயமா புடவை கட்டுற என்ன விஷயம்?” என்றவாறே புடவையை கட்டிவிட தொடங்கினார் அமுதா.
“நா புடவை கட்டுறது அதிசயமா ஓவரா ஓட்டாதிங்க பெரியம்மா”என்றவள், “இன்னைக்கு பூங்கோதை அத்தை வீட்டுல வரலட்சுமி பூஜை வச்சுருக்காங்க அங்க தான் போறேன்” என்றுவிட்டு அமுதாவின் கைவண்ணத்தில் கவனம் செலுத்தினாள்.
சற்று நேரத்தில் அழகாய் மடிப்பு வைத்து நேர்த்தியாய் புடவையை கட்டிவிட்டு தலைவாரி மூர்த்தி கொடுத்தனுப்பிய பூவை வைத்து, அரக்கு நிறத்தில் பொட்டை வைத்துவிட்டு கண்ணாடி முன் நிறுத்த, வியப்பில் ஆழ்ந்து போனாள் மீரா. இதுவரை சுடிதாரில் ஒளித்து வைத்திருந்த அழகெல்லாம் அப்பட்டமாய் வெளிப்பட கண்களை மூடி மூடி திறந்தாள்.
“அழகா இருக்க மீராம்மா என்னோட கண்ணே பட்டுரும் போல இருக்கு” என்று திருஷ்டி கழித்தவர், “வா போலாம்” என்று வெளியே அழைத்து வர,
மூர்த்திக்கு பேச்சே வரவில்லை. மகளின் கோலம் கண்டு பிரமித்து போனார்.
“என்ன மாமா அப்டி பாக்குறிங்க நம்ம மீரா தான் கல்யாண பொண்ணு மாதிரி இல்ல. இப்பவே கல்யாண கலை முகத்துல தெரியிது பாருங்க. சீக்கிரமே ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டி வைங்க” என்று உவகை பொங்க அமுதா சொல்ல,
“பெரியம்மா” என்று பல்லை கடித்தாள் மீரா.
“சரி சரி கோபப்படாத என்னைக்கா இருந்தாலும் நடக்க போறது தானே சொன்னா என்னவாம்” என்று நொடித்து கொண்டவர்,
“என்ன மாமா பாத்துட்டு நிக்கிறீங்க” என்ற அமுதாவின் உரத்த குரலில் சுற்றுப்புறம் உணர்ந்தவர் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார்.
“ஒரு நிமிஷம் இரும்மா” என்று வேக நடையில் அறைக்கு சென்று அதே வேகத்துடன் நகைபெட்டியோடு திரும்பினார் மூர்த்தி.
“அமுதா இந்த அட்டிகைய போட்டுவிடும்மா அப்டியே இந்த ஜிமிக்கியையும் போட்டுவிடு. இத்தனை வருஷமா பிரோவுல தூங்கிட்டு இருந்தது இப்போ தான் விமோச்சனம் கிடைச்சிருக்கு” என்று அமுதாவிடம் கொடுக்க,
“எதுக்கு ப்பா இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை. கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிட்டு இருக்கீங்க. இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரியே எனக்கு சந்தேகமா இருக்கு”என்றாள் மீரா.
“ஒரு குத்தும் இல்ல இடத்துக்கு ஏத்த மாதிரி” என்றவரின் வாயில் கைவைத்து தடுத்தவள்,
“நம்மள மாத்திக்கணும் அது தானே, அதான் மாத்தி விட்டுட்டீங்களே அப்றம் என்ன?. போதும் இதுக்கு மேல எதையும் எடுத்துட்டு வந்து போட்டு விடாதீங்க எனக்கே ஒரு மாதிரியா இருக்கு” என்று கடிகாரத்தில் நேரம் பார்க்க சரியாய் நான்கை தொடவிருந்தது.
“சரிப்பா வாங்க கிளம்பலாம் நேரமாச்சு”என்றதும் தயக்கத்துடன் மகளை பார்த்தார் மூர்த்தி.
“இல்லடாம்மா நா வரல நீ மட்டும் போயிட்டு வா. அப்பாவுக்கு முக்கியமான வேலை இருக்கு, அங்க நா வந்து என்ன பண்ண போறேன்”என்று சொல்ல,
“என்ன ப்பா எதையும் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? நா மட்டும் எப்டி போறது எந்த வேலையா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம் இப்ப என்கூட வாங்க”.
“இல்லம்மா ஆடிட்டர் சார் வர சொல்லிருக்காரு அவசரமா கோவை போகணும் நீ போயிட்டு வா” என்றவர் அமுதாவின் புறம் திரும்பி,
“ஏம்மா பாலா வந்துட்டானா” என்று கேட்க,
“வந்துட்டான் மாமா நீங்க கிளம்புங்க நா பாலாவை கூட்டிட்டு போக சொல்றேன்” என்றிட,
“சரிம்மா அப்ப நா கிளம்புறேன்” என்று வாசல் வரை சென்றவர் மகளின் வாட்டம் நிறைந்த முகம் கண்டு சகிக்காது திரும்பி வந்தார்.
“கோவிச்சுக்காத ம்மா வேலை எதுவும் இல்லன்னா கண்டிப்பா வந்துருவேன். புரிஞ்சிக்கோ மீராம்மா நா வரலைன்னா என்ன? அதான் பாலா வறானே, அப்பா போயிட்டு வறேன் கொஞ்சம் சிரிச்ச முகமா அனுப்பி வையேன் இல்லன்னா அப்பா மனசு கஷ்டப்படும்” என்று முகவாயை பிடித்து ஆட்டினார் மூர்த்தி.
“போங்கப்பா” என்று முகத்தை திருப்பி கொண்டவள் என்ன நினைத்தாளோ “சரி போயிட்டு வாங்க” என்று புன்சிரிப்புடன் அனுமதி அளிக்க,
தலையாட்டி புன்னகைத்தவர் இருவரிடமும் விடைபெற்று கொண்டு கிளம்பிட, மீராவை அழைத்து கொண்டு அவரது இல்லம் சென்றார் அமுதா.
வீட்டின் உள்ளே நுழைந்தவளை அதிசயமும் ஆச்சர்யமும் ததும்ப பார்த்தான் பாலமுரளிதரன்.
“ம்மா ஜன்னல் கதவு எல்லாத்தையும் சாத்தி வைங்க குன்னூரில் இடியோடு கூடிய பலத்த மழையும் சூறாவளி காற்றும் வீச கூடும்னு வானிலை அறிக்கையில சொல்லிருக்காங்க” என்று மீராவிடம் பார்வையை நிறுத்தி தீவிரமான குரலில் சொல்ல,
“நிஜமாவாடா சொல்ற?” என்று அதிசயித்தார் அமுதா.
“பெரியம்மா” என்று சிணுங்கியவள் “புடவை கட்டிருக்கேன்னு பாலாண்ணா கிண்டல் பண்றங்க நீங்களும் அவரு சொல்றதை உண்மைன்னு நம்பி கேக்குறிங்க பாத்திங்களா?”.
“பின்ன! என்னைக்கும் இல்லாத அதிசயமா அதுவும் சொல்லாம இப்டி கிளம்பி வந்து நின்னா கிண்டல் தான் பண்ணுவாங்க வாலு என்ன விஷயம்?. கல்யாண பொண்ணு மாதிரி கிளம்பிருக்க”.
“நா எங்க கிளம்புனேன் பெரியம்மாவும் அப்பாவும் சேந்து இந்த மாதிரி கிளப்பிவிட்டுடாங்க துணி கடை என்றன்ஸ்ல நிக்கிற பொம்மை மாதிரி இருக்கு என்னோட கோலம்” என்று தன் அலங்காரத்தை நிலைகண்ணடியில் பார்த்தபடி கூறினாள் மீரா.
“உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிருச்சு. இப்போ தான் பாக்க மகாலட்சுமி மாதிரி இருக்க அங்க வரவங்க போறவங்க கண்ணெல்லாம் உன்மேல தான் இருக்கும். நீ வேணா பாரு போற இடத்துலயே உனக்கு ஒரு சம்பந்தம் ஓகே ஆகுதா இல்லையான்னு” என்று அமுதா ஏகத்துக்கும் பெருமை பேச,
“விட்டா இப்பவே மாப்பிள்ளை பாத்து கட்டி வச்சுறுவிங்க போலயே நா கொஞ்ச நாள் சந்தோஷமா வாழணும்னு ஆசைபடுறேன் பெரியம்மா” என்று சீரியஸாக சொன்னவளின், தலையில் லேசாக தட்டினார் அமுதா.
“கல்யாணம் ஆனா சந்தோஷம் போயிருமா? வாலு. நானும் பாக்க தானே போறேன் இன்னைக்கு இப்டி பேசுற வாய் நாளைக்கு எப்டி பேச போகுதுன்னு” என்றார் அமுதா.
“சரி சரி பேசுனது போதும்” என்றவள் வந்த விஷயத்தை சொல்ல,
“நானும் அங்க தான் போறேன் பவி வர சொல்லிருக்கா உன்னையும் கூட்டிட்டு வர சொன்னா” என்றவன்”சரி நா போய் டிரெஸ் மாத்திட்டு வறேன் போலாம்” என்று அறைக்கு சென்றுவிட்டான் பாலமுரளிதரன்.
சற்று நேரம் தொலைகாட்சியில் கவனம் செலுத்தலாம் என்று அதை உயிர்ப்பித்து பார்க்க தொடங்கினாள் மீரா.
“இந்தா காஃபி குடிச்சுகிட்டே பாரு” என்று டம்ளர் நிறைய டிக்காஷன் கலந்த திரவத்தை அவள் முன்னால் வைத்தார் அமுதா.
“இது எப்போ போட்டிங்க பெரியம்மா இப்போ தானே கிச்சனுக்குள்ள போனீங்க கொண்டு வந்துட்டீங்க” என்று ஆச்சர்யமாய் கேட்டாள் மீரா.
“அப்பவே போட்டுட்டேன் பாலாவுக்கு ஊத்தி கொடுத்துட்டு குடிக்க இருந்த நேரத்துல மாமா வந்து அழைச்சதும் அப்டியே வந்துட்டேன்” என்று மீராவின் அருகில் அமர்ந்து, தனக்கும் சேர்த்து எடுத்து வந்த காஃபியை பருக தொடங்கினார் அமுதா.
சற்று நேரத்தில் கிளம்பி வந்தவன் “மீரா குட்டி போலாமா?” என்று கேட்க,
“ம் போலாம் பாலாண்ணா” என்றவள் அவன் அணிந்திருந்த உடையை கண்டு மெலிதாய் சிரித்தாள்.
அவள் சிரிப்பில் புருவம் நெறித்தவன் “என்ன?” என்று கேட்க,
“வொய்ட் கலர் டிரெஸ்ல செம்ம ஹேன்ஸமா இருக்கீங்க பாலாண்ணா. பெரியம்மா எதுக்கும் தயாரா இருங்க போற இடத்துல அண்ணாக்கு ஏதாவது உஷாராகிடும்” என்று கேலி பேசி சிரிக்க,
“நீ சொல்ற மாதிரி நடந்தா நல்லா தான் இருக்கும். ஆனா, நடக்குற மாதிரி தெரியலையே” என்று மகனை பார்த்து கொண்டே ஏக்கமூச்சை வெளியிட்டார் அமுதா.
“நடக்கும் நடக்கும் அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்” என்று சமாளிப்பாக பதில் பேசியவன் “லொடலோடன்னு பேசிட்டு இருக்காத வா” என்று கைபிடித்து இழுத்து செல்ல,
“டேய் பாத்து கூட்டிட்டு போய் கூட்டிட்டு வாடா” என்று குரல் கொடுத்தவருக்கு கையசைத்து பதில் கூறியவன் மீராவை அழைத்து கொண்டு பிருந்தாவனம் சென்றான்.