Skip to content
Post Views: 468
பாலா பணிபுரியும் இருபத்தி நான்கு மணிநேர சேவையில் ஈடுபட்டிற்கும் மருத்துவமனை அது. நடுசாமம் என்றும் பாராமல் இரவு உறக்கத்தை தொலைத்து கிச்சை அளிக்க தொடங்கினர் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் இரண்டு செவிலியர்கள்.
அவசர சிகிச்சை பிரிவு அறையின் முன்பு பதட்டமும் பயமும் கலந்த தவிப்புடன் அமர்ந்திருந்தார் மூர்த்தி. பாலா உள்ளே சென்று சில நிமிடங்கள் தான் கடந்திருந்தது ஆனால், பல மணி நேரம் கடந்த உணர்வை தோற்றுவித்தது மூர்த்திக்கு. என்னவோ ஏதோ பயத்துடன் கலக்கம் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருக்க,
“இன்னைக்கு நைட் முழுக்க ட்ரிப்ஸ் ஏறட்டும் சிஸ்டர். ஃபீவர் சரியாகலைன்னா மார்னிங் ப்ளட் டெஸ்ட் எடுத்துறுங்க, நா வர்ற வரைக்கும் வெய்ட் பண்ண வேணாம்” என்று நர்ஸிடம் சொல்லி கொண்டே அறையில் இருந்து வெளிப்பட்டான் பாலமுரளிதரன்.
“ஓகே டாக்டர்” என்று அவனிடமிருந்து கேஸ் சீட்டை வாங்கி கொண்டு செவிலிய பெண்மணி சென்றுவிட,
Advertisement
அவனை கண்டதும் வேகமாக எழுந்து அவன் அருகில் சென்றவர் “பாலா என்னாச்சு மீரா கண்முழிச்சுட்டாளா?” என்று பதட்டதுடன் கேட்க,
“இல்ல அங்கிள் கண்முழிக்க எப்டியும் நாலு மணி நேரம் ஆகும். நீங்க பதட்டப்படாதீங்க இப்போ காய்ச்சல் மட்டும் தான் இருக்கு. நடுக்கம் குறைஞ்சிருச்சு மயக்கத்துல இருக்கா ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு சரியாகிரும் நீங்க வாங்க ரூமுக்கு போலாம்” என்று ஆறுதல் கூறி அவன் அறைக்கு அழைத்து சென்றான் பாலமுரளிதரன்.
விஷ்வாவின் மீதான கோபம் உள்ளுக்குள் கட்டுகடங்காமல் கனன்று கொண்டிருந்தது. அவன் மட்டும் கை ஓங்காமல் இருந்திருந்தால் இன்னேரம் மீராவிற்கு இப்டி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என்று எண்ணியவன் மூர்த்தியை அமர வைத்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க,
Advertisement
வாங்கி குடித்தவர் பதட்டம் தணிந்த மனதுடன் “என்னாச்சு ப்பா போன இடத்துல என்ன நடந்துச்சு பவிக்கா மேல தப்பில்ல என்மேல தான் தப்புன்னு புலம்பிட்டே இருந்தா அவ இப்டி அழுது நா பாத்ததே இல்ல பாலா. போகும் போது ரெண்டு பேரும் நல்லா தானே போனீங்க அங்க எதுவும் பிரச்சனையா?,
Advertisement
முதல அதை சொல்லு நல்லா இருந்த பொண்ணு இப்டி பயந்து போயிருக்கான்னா எனக்கு மனசு திக்குதிக்குங்குது” என்று அமைதியாக கேட்டவரின் உள்ளம் படபடத்தது.
“அங்கிள் அது வந்து ” என்று சொல்ல தயங்கியவன் “போன இடத்துல ஒரு சின்ன ப்ராப்ளம் அங்கிள் நாங்க யாருமே அப்டி நடக்கும்னு எதிர்பாக்கலை. விஷ்வா.. பவித்ராவை அடிச்சிட்டான்” என்று தயங்கி கொண்டே பாலா சொல்லி முடிக்க,
சட்டென எழுந்து கொண்டார் மூர்த்தி. “என்ன சொல்ற? எதுக்கு அடிச்சான். பூங்கோதையும் தணிகாசலமும் அங்க தானே இருந்திருப்பாங்க” என்று அதிர்ச்சியுடன் கேட்க,
Advertisement
“அவங்க மட்டும் இல்ல அங்கிள் பூஜைக்கு வந்த அத்தனை பேரும் அங்க தான் இருந்தாங்க. அவங்க முன்னாடியே தான் கை ஓங்கிட்டான்”.
“ப்ச் சொல்றதை கொஞ்சம் விளக்கமா சொல்லுப்பா எனக்கு எதுவும் புரியலை எதுக்கு அடிச்சான் என்ன காரணம்? அப்டி சட்டுன்னு கை ஓங்குறவன் கிடையாது என்னோட விஷ்வா”என்று அந்த நேரத்திலும் அவனை பற்றிய எண்ணம் உயர்வாகவே இருந்தது மூர்த்தியினிடத்தில்.
விஷ்வா அதிக கோபம் கொள்பவன் என்று மூர்த்திக்கு தெரியும் ஆனால் அவர் அறிந்த வரை கை ஓங்கும் அளவிற்க்கு முரடன் கிடையாது. பவித்ராவின் மீது வெறுப்பும் புரிந்து கொள்ள முடியாத வன்மமும் வைத்திருப்பது மூர்த்தி அறிந்தது தான்.
ஏன் இந்த கோபம் என்று கேட்டால் ஒற்றை சிரிப்பில் கடந்து சென்றுவிடுவான் ஆனால் அந்த சிரிப்பில் ஒளிந்திருக்கும் வலியை எவராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது. பவித்ராவை அடித்து விட்டான் என்றதும் மூர்த்தியின் உள்ளம் பதறியது.
“எல்லாம் நல்லபடியா தான் போயிட்டு இருந்துச்சு அங்கிள்” என்றவன் பிருந்தாவனம் சென்றதையும் அங்கு நடந்தவற்றையும் விளம்ப தொடங்கினான்.
பிருந்தாவனம். சூரியன் மலைகளின் பின்னால் மறைந்து கொண்ட மாலை வேளை. அந்தகாரம் பூச தொடங்கிய வானத்திற்கு ஈடாக சீரியல் பல்புகளும் வண்ண விளக்குகளும் போட்டி போட்டு கொண்டு எரிய தொடங்கியிருந்தன.
பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் அரங்கேறி கொண்டிருக்க,பரபரப்புடன் கால்கள் தரையில் படமால் அங்குமிங்குமாக நடமாடி கொண்டிருந்தார் பூங்கோதை.
ஐயர் வரும் முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டால் வந்ததும் பூஜையை தொடங்கலாம் என்று ஒவ்வொரு வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு கவனமாக செய்து கொண்டிருந்தவர் வெண்கலத்திலான சிறிய வடிவ லட்சுமி சிலையை எடுத்து வந்து,
“பவிம்மா இந்தா இந்த சிலையை கொண்டு போய் தண்ணி வச்சு துடைச்சு எடுத்துட்டு வாம்மா, அப்டியே அலங்காரம் பண்ணிரு. அலங்காரம் பண்ண தேவையான துணி பூ நகை எல்லாம் எடுத்து வச்சுருக்கேன் பாரு” என்று அவசரமாக கூறிவிட்டு, வந்தவர்களை கவனிக்க சென்றுவிட்டார் பூங்கோதை.
அவர் கூறியது போலவே சிலையின் முகத்தை துடைத்து முழுதேங்காயோடு சேர்த்து கட்டி பச்சரிசியினால் நிரப்பட்ட கலசத்தை அலங்கரிக்கபட்ட பீடத்தில் வைத்து, பட்டால் நெய்யப்பட்ட புடவையை கலசத்திற்கு சுற்றிவிட்டு மாலையிட்டு கலசத்தின் வாய் பகுதியில் மாவிலைகளை வைத்து அதன் மீது சிலையின் தலையை வைத்தாள். அதன்பிறகு நகைகள் அணிவித்து கண்ணாடி வளையல்களை பக்கவாட்டில் கோர்த்து தொங்கவிட்டு என அழகாய் அலங்கரித்திருந்தாள் பவித்ரா.
அருகில் குடியிருப்போர் தெரிந்த உறவுகள் என அனைவரையும் பூஜைக்கு அழைத்திருந்ததால். உறவுகளின் வரவுகள் சற்று அதிகமாகவே காணப்பட்டது. எங்கும் குடும்ப பெண்களின் தலைகள் தான் தலைமையாய் தெரிந்தது.
நுழைவாயிலை கடந்து உள்ளே நுழையும் போதே ஒரு வித படபடப்பு தொற்றி கொண்டது மீராவிற்கு. வந்தவர்களை கண்டு அல்ல வந்திருபவனை நினைத்து. எங்காவது தென்படுகின்றனா என்று அஞ்சனமிட்ட நயனங்கள் ஒருவித பரபரப்புடன் அலைபாய, எங்கும் அவன் உருவம் கண்ணிலும் கருத்திலும் படவில்லை.
எச்சிலை கூட்டி விழுங்கியவள் வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைக்க, இதயம் பலமாக துடிக்க தொடங்கியது.
சென்ற முறை வந்த போது இல்லாத தயக்கம் அச்சம் இம்முறை அவனை எண்ணிய நொடி அனுமதியில்லாமல் ஒட்டி கொள்ள, சட்டென பாலாவின் கரத்தினை பற்றி கொண்டாள் மீரா.
அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவன் என்னவென்று அவளை பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த பயம் கண்டு “நா இருக்கேன் மீரா குட்டி உன்ன எதுவும் பண்ண மாட்டான் தைரியமா வா அவன் ஒரு ஆளுன்னு அவனுக்கு போய் பயப்படுற” என்று அலட்சியமாய் உரைத்து, திடம் அளித்தவன் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்றான்.
‘சொல்றது சுலபம் எனக்கு தானே தெரியும் அந்த சுனாபாணா என்ன பண்ணுவாருன்னு’ என்ற எண்ணமே மீராவின் வதனத்தில் வியர்வையை சுரக்க செய்தது. இருந்தும் பாலா அருகில் இருக்கும் தைரியம் பயத்தை சற்று அமிழ்த்திட, நிமிர்வுடன் வெளியே எதையும் காட்டி கொள்ளாது இயல்பாக அவனுடன் சென்றாள் மீரா.
suganya mahesh
House wife
error: Content is protected !!