ஒரு சிண்ட்ரெல்லா கதை 5
திருவண்ணாமலை கோவிலில் செளமியாவைப் பார்த்துவிட்டு திண்டிவனம் வந்து சேர்ந்த ரவீந்திரன், சற்றே குழம்பிப் போய் தான் காணப்பட்டான். அவன் எண்ணவோட்டம் குறித்து அவனுக்குச் சற்றே கவலை கூட ஏற்பட்டது எனலாம். அவனுக்குப் பிடிக்காத செயல்கள் நடைபெறும் போது வழக்கமாக அவன் அச்செயலையோ, அச்செயல் செய்யும் நபரின் பேரிலோ துவேஷம் கொள்வான்.
தன்னை வேண்டாம் என்று மறுத்த செளமியாவைக் கண்ட போது, அவனுள் அமிழ்ந்திருந்த வெறுப்பு மேலோங்கி அவளைப் பேச்சால் காயப்படுத்தியிருந்தது. “இவ என்ன என்னை வேணாம்னு சொல்லறது?” என்ற ஆத்திரமே அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அவன் திரும்ப அச்செயலை நினைத்துப் பார்க்கையில் செளமியின் மீது கோபம் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித பச்சாதாபம் தோன்றியது.
“அவளை ரொம்ப ஹர்ட்டிங்கா பேசிட்டனோ? சே, பாவம் தான். திரும்ப ஒரு வார்த்தை கூட பதில் பேசாம அமைதியா போயிட்டா. நல்ல பொண்ணு தான் போல. அமைதியான குணமா தெரியுது” என்ற எண்ணம் தோன்ற, மெல்லத் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டான். அவனது மனமாற்றம் அவனுக்குமே ஆச்சர்யம் அளித்தது.
வீடே அதிரும் படிக்கு வாதாடும் அத்தையும், கீச் கீச்சென்று கத்தி சண்டிய போடும் அன்னையும், எதற்கெடுத்தாலும் அழுது அடம் பிடித்து வறட்டு கதறல், முரட்டுப் பிடிவாதம் என்று, தான் நினைத்ததைச் சாதிக்கும் அத்தை மகளையும் கண்டு வளர்ந்த ரவிக்கு, எதிராளியின் மீது தப்பு என்று தெரிந்திருக்கும் போதும், நாகரீகம் கருதி மெளனமாகக் கடந்து சென்ற செளமியின் மீது ஒரு தனி மரியாதையே பிறந்திருந்தது.
நன்றாக மழை பெய்து முடித்திருந்த ஒரு இரவில், நல்ல மன நிலையில் செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த போது, “பீபிள் யு நோ” (People You Know) என்று ஃபேஸ் புக்கில் செளமியின் பெயர் காட்டியது. குடும்ப புகைப்படம் ஒன்றைத் தனது புகைப்படமாக வைத்திருந்தாள். அவள், அவளது தம்பி, பெற்றோர் என சற்றே பழைய புகைப்படமாக இருந்தது. அன்று அவனிருந்த மகிழ்வான மனநிலையில் “ரெக்வெஸ்ட்” என்று அனுப்பினான். எப்படியும் அதை அங்கீகரிக்க மாட்டாள் என்று எண்ணியவன், அதைப் பற்றி மறந்தும் போய்விட்டிருந்தான்.
********
கோவிலில் அன்று ரவீந்திரனைப் பார்த்தது பற்றி வீட்டினரிடம் செளமி பொதுப்படையாகக் கூறினாள். “அம்மா, அந்த திண்டிவனத்தில இருந்து பொண்ணு பார்க்க வந்தாங்களே.”
“அதான் நீ வேணாம்னு சொல்லிட்டியே! அவங்களுக்கு என்ன இப்போ?” என்றார் கலாவதி. நல்ல வரனை மகள் எந்த உருப்படியான காரணமும் இல்லாமல் தட்டிக் கழித்துவிட்டாளே என்ற ஆத்திரம் அவர் பேச்சில் தொனித்தது.
“ம்மா.. ஏம்மா நீ? இன்னைக்கு அந்த மாப்பிள்ளை பையனைக் கோவில்ல பார்த்தேன்னு சொல்ல வந்தேன். இதுக்கும் என்னை திட்டணுமா?”
“ஓ. பேசினியா?” என்று கலாவதி கேட்க, செளமியா ஒரு நொடி தாயிடம் பேசவில்லை என்று பொய் சொல்லிவிடலாமா என்றே எண்ணினாள். “சே, இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு பொய் சொல்லணும்” என்று மனம் இடித்துரைக்க,
“ம்ம், பேசினேன். எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?ன்னு கேட்டாங்க. நானும் பதிலுக்கு கேட்டுட்டு வந்துட்டேன். அவளோ தான்”
“வேற எதும் பேசலையா? தனியாவா வந்திருந்தாங்க? அவங்க வீட்டில் வரலையா?”
“தெரியலைம்மா. அவங்களை மட்டும் தான் பார்த்தேன்.”
“ஒரு வேளை கல்யாணம் ஆகிடுச்சோ என்னவோ? புதுமாப்பிள்ளையா கோவிலுக்கு வந்திருக்கானோ என்னவோ?” என்று கலாவதி தன் போக்கி பேசிக் கொண்டிருந்தார். செளமி தன்னறைக்குள் வந்துவிட்டாள்.
அன்னையிடம் அவன் பேசியது முழுவதுமாக சொல்லிவிடும் மனதிடம் இருக்கவில்லை. “எப்படி பேசியிருக்கான் பாருங்களேன்?” என்று ஒரு வார்த்தை அவனைத் திட்டிவிட்டு, “அவன் அவளோ பேசறதையும் நீ கேட்டுட்டு சும்மா வந்தியா? நல்ல பொண்ணு போ? ஒரு சண்டையின்னா அததுக வரிஞ்சு கட்டிகிட்டு எப்படி நிக்குது. இது ஒரு மழுங்குன மட்டை. எல்லா திட்டையும் வாங்கிட்டு அமைதியா வந்திருக்கு. நீ யாருடா என்னைப் பத்தி பேசன்னு ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கணும்” என்று செளமி பேசாமல் அமைதியாக வந்தது அவள் தவறு என்று தன் மீதே திருப்பிவிடுவாரோ என்ற பயம் காரணமாகத் தாயிடம் வேறு எதையும் செளமி பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால், அன்று தன்னைப் பார்க்க வந்திருந்த தோழி சிந்துவிடம் ரவீந்தரன் பேசியது பற்றி பகிர்ந்து கொண்டாள். “என்னடி இப்படிலாம் பேசியிருக்கான்? பெரிய மன்மதன்னு நினைப்பு. நல்ல வேளை நீ வேண்டாம்னு சொல்லிட்ட. பிடிக்கலைன்னு சொன்னது ஒரு தப்பா? ஏன் இவன்லாம் ஒரு பொண்ணையும் பிடிக்கலைன்னு சொன்னதேயில்லையாமா? அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ குண்டா ஒரு அம்மா வந்தாங்களே அவங்க கூட. பீரோகிட்ட சேர்ல உட்கார்ந்திருந்தாங்களே”
“நியாபகம் இல்லை சிந்து.”
“எ, அதாண்டி, வீடு யார் பேர்ல இருக்குன்னு கூட கேட்டாங்கனு நான் சொன்னேனே”
“ம்ம் ஆமா, அவங்க அத்தையா இருக்கும். அவங்களுக்கு என்ன?”
“அந்தம்மா, ஹால்ல பேசிட்டு இருக்கப்போ, “இந்த இடமாவது இவனுக்கு மனசுக்குப் பிடிச்சு சரின்னு சொல்லணும். வாரா வாரம் இப்படி பொண்ணு பார்க்கப் போறதே ஒரு வேலையா செஞ்சிட்டு இருக்க கூடாது. உலகத்துல இருக்கற எல்லா பொண்ணுகளையும் கூட்டி வந்து வரிசை கட்டி நிக்க வக்கவா முடியும் உன் பையனுக்காகன்னு பையனோட அப்பாகிட்ட சொன்னாங்க. நான் கேட்டேன்” என்று நீட்டி முழக்கினாள்.
“ம்ம்ம்” என்றாள் செளமி யோசனையுடன்.
“இவன் எத்தனை பொண்ணுகளை வேணாம்னு ஒதுக்கியிருப்பான். அவனை ஒருந்தங்க வேண்டாம்னு சொன்னதும் கோபம் வருதோ” என்று செளமிக்கு ஆறுதலாகப் பேசினாள் சிந்து.
சிந்துவிடம் கொட்டி முடித்ததும் பெரும் மனபாரம் நீங்கியது போல இருந்தது. ரம்யா இப்போதெல்லாம் அவ்வப்போது மட்டுமே ஆன்லைன் வருகிறாள். அச்சமயம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதோடு சரி.
ரவீந்திரன் பேசிய வார்த்தைகள் செளமியை வெகுவாக சங்கடப்படுத்தியிருந்தது. இதுவரையிலும் அவளை இரண்டு பேர் பெண் பார்த்துச் சென்றிருக்கின்றனர். ஜாதகம் சரியில்லை, அதிகபடியாக நகை கேட்கிறார்கள் போன்ற காரணங்களால் மட்டுமே மேற்கொண்டு பேச்சு வார்த்தை தடை பட்டிருக்கிறது.
“நீங்க அவளோ கலர் இல்ல. சொல்லிக்கற மாதிரி வசதியும் இல்ல” என்று எவரும் இது வரையிலும் சொன்னதில்லை. காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சொல்லப்பட்டது என்னும் போதும், அவன் பேசிய விதமும், அந்த நக்கல் கலந்த சிரிப்பும், தூசு போல் பாவித்து அவன் நடந்து கொண்ட விதமும் செளமிக்கு வருத்தமே அளித்தது.
செளமியின் குணத்திற்கு அவள் சட்டென யாரையும் எடுத்தெறிந்து பேசிவிட மாட்டாள். ரவியின் சொற்கள் அவள் மனதைக் காயப்படுத்தியிருக்க, “நல்ல வேளை இந்த மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிட்டோம்” என்ற நிம்மதியே பிரதானமாக மிஞ்சியது அவள் மனதில்.
“நான் தப்பிச்சுட்டேன்” என்று அவன் நக்கலாகச் சொன்னதைத் திரும்ப நினைத்துப் பார்த்தவள், “நீ தப்பிக்கலைடா. உண்மையில நான் தான் உங்கிட்ட இருந்து தப்பிச்சிருக்கேன்” என்று மகிழ்ச்சியாகவே நினைத்தாள். சில நாட்களில் இந்த விஷயத்தை மனதிலிருந்து ஒரங்கட்டியும் வைத்துவிட்டாள்.
அன்று ரவீந்திரனீன் முகப்புத்தக ரெக்வெஸ்ட் அவள் கைப்பேசியை வந்து சேரும் வரையிலும் அவளுக்கு அவன் நினைப்பு வரவேயில்லை. அவன் நட்பு அழைப்பைப் பார்த்தவளுக்கு, அதை உடனே அங்கீகரிக்க, அவனை நண்பனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. ரிக்வெஸ்டை சிந்துவிடம் காட்டினாள்.
“என்னவாம் இவனுக்கு இப்போ? கலர் கம்மி, என் பர்சனாலிட்டிக்கு நீங்க என்னை வேண்டாம்னு சொல்லுவீங்களான்னு அன்னைக்கு டயலாக் பேசினான். இன்னைக்கு எதுக்கு ரிக்வெஸ்ட் குடுத்திருக்கான்? நீ அக்செப்ட் பண்ணாத! டெலீட் பண்ணு” என்று சிந்து கூறினாள். செளமிக்கும் அதுவே சரியென்று தோன்றியது. ஆனால் டெலீட் செய்தால், அது அநாகரீகமாகத் தோன்றும் என்பதால், ரெக்வெஸ்டை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாள்.
“நான் ரெக்வெஸ்டைப் பார்க்கலைன்னு நினைச்சிருப்பான். அப்படியே நினைச்சுக்கட்டும். அதான் நல்லது. கொஞ்ச நாள் அக்செப்ட் பண்ணாம விட்டுட்டா அவனா மறந்துடுவான்.” என்று கருதிய செளமி, ரெக்வெஸ்டை கண்ஃபர்ம், டெலீட் என இரண்டுமே செய்யவில்லை. (Ultram)
ஒரு வாரம் சென்றிருக்க, ஃபேஸ்புக் மெசஞ்சரில் அவனிடமிருந்து ““ஹாய்””என்ற செய்தி வந்திருந்தது. இதையும் செளமி சட்டை செய்யவில்லை.
அடுத்த நாள், “ஐம் வெரி சாரி. அன்னைக்கு நான் பேசினது தப்பு தான். ஒரு கோபத்தில பேசிட்டேன். என் ரெக்வெஸ்டை நீங்க அக்செப்ட் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் மனசு கேட்கலை. சாரி சொல்ல தான் ரிக்வெஸ்ட் அனுப்பினேன்” என்று மெசஞ்சரில் செய்தி வந்திருந்தது.
செளமி இதற்கு மறுமொழி அனுப்ப வேண்டுமா என்று தீவிரமா யோசித்தாள். அவளுக்கு ரவீந்திரனின் செய்கை விசித்திரமாகத் தோன்றியது. நேரில் கண்ட பொழுது மனம் நோகும் படிக்குப் பேசிவிட்டு, இப்போது என்ன மன்னிப்பும் கரிசனமும்? இவன் குணமே இது தானா அல்லது, தான் வேண்டாம் என்று கூறிவிட்ட கோபத்தில் அப்படி நடந்து கொண்டானா? எதுவாகிலும் இந்தக் குறுஞ்செய்தியையும் கண்டு கொள்ளாதது போல கடந்து விடுவது தான் சிறப்பு என்ற முடிவை எட்டியிருந்தாள் செளமி.
சிந்துவிடம் இதை பகிர்ந்து கொண்ட போது, அவளும் அதே கருத்தைத் தான் கூறினாள். “ இந்தாளு எப்படி வேணா நினைச்சுகிட்டு போகட்டும் செளமி. நீ ஏன் கண்டுக்கற? பேசறதெல்லாம் பேசிட்டு இப்போ என்ன மன்னுப்பு மண்ணாங்கட்டின்னு. நீ ரிப்ளை பண்ணாம இருக்கறது நல்லது.” என்றுசொல்லிவிட, செளமி எந்த மறுமொழியும் சொல்லாத விட்டிருந்தாள்.
இவள் மறுமொழி அனுப்பவில்லை எனும் போதே, இவள் மனதை அவன் புரிந்து கொண்டு விலகி விடுவான் என்று பெரிதுமாக எண்ணியிருக்க, அடுத்த தினம் செளமி எதிர்பாரா வண்ணம் அவனிடமிருந்து மற்றுமொரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
“ஐம் ரியலி சாரிங்க செளமியா. உங்களை நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் போல. அதான் நீங்க என் மன்னிப்பை கூட ஏத்துக்க மாட்டேங்கறீங்க.உங்களை அப்படிப் பேசினது என்னோட தப்பு தான். ஒரே ஒரு தடவை நீங்க மன்னிச்சுட்டேன்னு மட்டும் சொல்லிடுங்க. அப்பறம் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். எனக்கு உறுத்தலா இருக்குங்க. ப்ளீஸ். என் நிம்மதிக்காக வேணும் என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லிடுங்க. அது போதும்”என்ற செய்தியைப் படிக்கும் போது, செளமியின் மனம் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனது.
“இவ்வளவு தூரம் அவன் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை எனும் போதும், தானாக இறங்கி வந்து பேசுகிறானே!”என்ற எண்ணம் ஏற்பட, ரவீந்திரனைப் பற்றி நிறைய சிந்தித்த வண்ணம் இருந்தாள் செளமி. சிந்துவிடம் இச்செய்தியைக் காட்டிய போது, அவளுமே செளமியின் எண்ணத்திற்கு செவி சாய்த்தாள்.
“நீ சொல்லற மாதிரி பாவமா தான் இருக்கு செளமி அந்தாள நினைச்சா! இவளோ தூரம் மன்னிப்பு கேட்கணும்னு அவனுக்கு அவசியமில்லை தான். நிஜமாவே அவன் உன்னை திட்டினதை நினைச்சு மனசளவில கஷ்டப்படறான இருக்கும். அதான் இப்படி கீழ இறங்கி வந்து பேசறான்.”
“இப்போ என்ன சிந்து பண்ண? திரும்ப மெசேஜ் பண்ணாம இருந்தா ரொம்ப திமிரு பிடிச்சவ மாதிரி நினைச்சுக்குவானோ?”
“அவன் என்ன நினைச்சா உனக்கென்னன்னு தான் நான் கேட்பேன். ஆனா இவளோ தூரம் இறங்கி மன்னிப்பு கேட்கற ஆளுக்கு, “சரிங்க. எனக்கு எதும் வருத்தமில்லை. இந்த விஷயத்தை விட்டுங்கன்னு” பதில் சொல்லறது தான் நியாயம்னு தோணுது. நீ என்ன நினைக்கற?”
“எனக்கும் அப்படித்தான் தோணுது சிந்து. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கறப்போ அதை மதிக்காம நடந்துக்கறது தப்பு தானே. சரிங்க. எனக்கு வருத்தமில்லை. ஆல் த பெஸ்ட்” ன்னு ஒரு மேசேஜ் பண்ணிடலாம்னு நினைக்கறேன். அதுக்கப்பறம் அவன் எதுக்கு என்கிட்ட பேசப்போறான்?” என்று செளமி கைப்பேசியை யோசனையுடன் பார்த்துக் கொண்டே கூறினாள்.
“உன் மனசில என்ன நினைக்கறியோ அதை செய்டி. ஆல் த பெஸ்ட் சொல்லறதில என்ன தப்பு? உனக்கும் ஒரு மன நிம்மதி கிடைச்சிடும். அவனும் பேசாம அவன் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவான்” என்று சிந்து யோசனை கூற, செளமிக்கும் அதுவே சரியென்று தோன்றியது.
அதனால் அன்றைய தினம் இரவு, “பரவாயில்லைங்க சார். எனக்கு வருத்தமில்லை. ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் ஃப்யூச்சர்” என்று சற்றே ஒதுக்கம் காட்டி, வேண்டுமென்றே “சார்” என்ற அழைப்பைச் சேர்த்து அவனுக்கு செய்தி அனுப்பினாள் செளமி.
அவள் செய்தி அனுப்பிய அடுத்த நொடியே, “சார் ஆஹ்?” என்ற கேள்வியுடன் மறுமொழி வந்திருந்தது.இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை அவளுக்கு. தான் “சார்” என்று அழைத்தது சற்றே அதிகப்படியோ? இதற்கு என்ன மறுமொழி கூற என்று செளமி யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“என் மேல நிறைய கோபத்தில இருக்கீங்கன்னு தெரியுது. வெரி சாரி. நான் வேணா ஆயிரம் தடவை சாரி கேட்கறேன். ஆனா, சார் மோர்ன்னு ரொம்ப அந்நியமா என்னை பேசி நோகடிக்காதீங்க” என்று குறுஞ்செய்தியும், அத்தோடு சேர்த்து, சாரி, சாரி, சாரி, சாரி என அடுக்கடுக்காக இருபது மன்னிப்புகளும் அனுப்பியிருந்தான்.
செளமியா திடுக்கிட்டு அமர்ந்திருக்க, இன்னமும் அவள் கைப்பேசிக்கு “மன்னிப்பு”கள் வந்து கொட்டிக் கொண்ட இருந்தது. இவள் மறுமொழி அனுப்பும் வரையில் இந்த மன்னிப்புகள் நிற்கப் போவதில்லையோ என செளமி அச்சம் கொண்டு, “ரவிந்திரன் பரவாயில்லைங்க. ப்ளீஸ் சாரி சொல்லறதை நிறுத்துங்க” என்று பதில் அனுப்பினாள்.
இவள் பதில் கண்டதும் “சாரி” செய்திகள் நின்று போகும் என்றே பெரிதும் நம்பினாள்.அதனால் தான் இவள் மறுமொழி அனுப்பியதே! இவள் மறுமொழியைக் கண்ட அடுத்த நொடி, “சாரி” செய்திகள் நின்று போய் அதற்கு பதில், “ஃப்ரெண்ட்ஸ்?” என்ற செய்திகள் வரத் துவங்கியிருந்தன.
மன்னிப்பு செய்தி போலவே, நூற்றுக்கணக்கில் “ஃப்ரெண்ட்ஸ்?” என்ற கேள்வியுடன் கூறுஞ்செய்திகள் வந்தவண்ணம் இருக்க, மெசெஞ்சரின் செய்தி தெரிவிக்கும் ஒலியை நிசப்தமாக்கினாள் செளமி. வினாடிக்கு ஒரு முறை “டொங்க்” “டொங்க்” என அறிவிப்பு வந்த படிக்கே இருந்தது. ரவீந்திரனின் இந்த செய்கை செளமிக்கு சிரிப்பையும் அதே நேரம் சங்கடத்தையும் தோற்றுவித்தின.
“என்ன இவன்? மன்னிப்பை ஒப்புக் கொண்டால் போதும். அதற்கு மேல் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான். சரியெனச் செய்தி அனுப்பினேன். இப்போதானல் “ஃப்ரெண்ட்ஸ்?” என்று நூறு செய்திகளுக்கு மேல் அனுப்புகிறான். இவனைப் புரிந்து கொள்ள முடியவில்லையே? இவன் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை, எந்தக் கணக்கில் இவனை எடுத்துக் கொள்வது” என்று அவன் ஃப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்டை ஏற்றுக் கொள்ள மிகவும் தயக்கம் காட்டினாள் செளமி.
அன்றைய தினம் யோசனையுடன் உறங்கியவள், அடுத்த நாள் கைப்பேசியை எடுக்க, அதில் சில நூறு மன்னிப்புகளும்,சில நூறு “ஃப்ரெண்ட்ஸ்?” என்ற கேள்வி கொண்ட செய்திகளும் இருந்ததைக் கண்டு சிரித்துக் கொண்டாள். ரவீந்திரனின் செய்கை சற்றே சிறுபிள்ளைத்தனம் போலத் தோன்றிய போதும், அவன் குறும்புத்தனம் கண்டு செளமி அந்த நொடி அவனை ரசிக்கவே செய்தாள்.
ஃபேஸ்புக்கில் அவளுக்கு சில நூறு நண்பர்கள் இருக்கின்றனர் தான். அதில் சிலரை இவள் முன்பின் பார்த்தது இல்லை. தோழியின் தோழிகள், கல்லூரி விழாவில் ஒரே ஒரு முறை சந்தித்த சிலர் என முகமறியா நபர்கள் சில பேர் இருந்தனர். அதில் ஒருவனாக இந்த ரவீந்திரனும் இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன வந்தது?” என்று விபரீதம் தெரியாமல் ரவியின் நட்பு அழைப்பை ஏற்றிருந்தாள் செளமி.