‘தன்னை பற்றி தான் பேசுகிறாள்’ என தெரிந்தும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் பேச்சின் நாயகன். வந்தவர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்துவிட்டு வந்தவனின் காதில் மீராவின் குரல் சங்கீதமாய் ஒலிக்க,
அடுத்த வேலையை கவனிக்க மனமில்லாமல் தன்னை பற்றி என்ன பேசுகிறாள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சில நிமிடம் நின்று பேச்சை ஒட்டு கேட்டவன் சுற்றம் உணர்ந்து இதழில் புன்னகை உறைய அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.
“இதை விஷ்வா மாமா கேட்டா என்னாகும்?”.
“என்னாகும்” என்று அவன் இல்லையென்ற தைரியத்தில் மிடுக்குடன் கேள்வி கேட்டவள் “எனக்கு ஒன்னும் பயமில்லை அவர பாத்ததும் கொஞ்சம் நவர்ஸ் ஆகுறேன் அவ்ளோ தான். மத்தபடி எனக்கென்ன பயம் வேணும்னா இப்பவே அவர வர சொல்லுங்க பவிக்கா,
ஏ முன்னாடி நிக்க சொல்லுங்க. பாலாண்ணா பக்கத்துல இருக்குறப்போ யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை”என்று உள்ளே ஊசலாடிய பயத்தை மறைத்து கொண்டு தைரியமாக பேசினாள் மீரா.
“நா என்ன வர சொல்றது அதோ அவரே வந்துட்டாரு உன்னோட வீரதீர பிராதப தைரியத்தை அவருக்கிட்ட காட்டு” என்று மீராவின் பின்னால் பவித்ரா கை காட்ட,
கூட்டத்தில் ஒருவனாக அடையாளம் காணாதபடி மாடியில் இருக்கும் அவன் அறைக்கு சென்றவன், சற்று நேரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் பளிச்சென்று பல்லை காட்டியபடி இறங்கி வந்து கொண்டிருந்தான் விஷ்வாமித்ரன். கருப்பாய் இருந்தாலும் கலையாய் இருந்தான் அதுவும் பாந்தமாக பொருந்தி கொண்ட நாகரிக உடையில்.
வந்திருந்த இளசுகளின் பார்வையெல்லாம் அவன் மீது மொய்திருக்க, அவனின் பார்வையோ அவளிடம் நின்றது. அதுவரை இருந்த மனதுணிவு இருந்த இடம் தெரியமால் மறைந்துவிட பாலாவை ஒட்டியவாறு நின்று கொண்டாள் மீரா.
அவளின் பயம் மேலும் மேலும் அவன் மனதை ஈர்த்து, அவள் புறம் சாய்த்தது. மனதை இழுத்து பிடித்து கட்டுக்குள் வைக்கும் திடம் தற்சமயம் அவனுக்கு இல்லை. ஒருவரின் தனித்துவமான பாவனை மற்றவரின் கவனத்தை மட்டுமல்ல ஆர்வத்தை தூண்டும். அவளின் செயல் அவனுக்குள் ஆர்வத்தை தூண்ட இம்சையை இருமடங்கு அனுபவித்தான் விஷ்வா.
‘அச்சோ சுனாபாணா’ என்றவளின் இதழ் முணுமுணுப்பின் வார்த்தை புரியாமலேயே சன்னமாய் சிரித்து கொண்டவன் நெருங்கி வர,
“பாலாண்ணா” என்றாள் மீரா.
“நான் தான் இருக்கேனே பின்ன என்ன மீரா?” என்றவன் முகத்தில் கடுமையை தேக்கி கொண்டு அவனை பார்த்தான்.
அருகில் வந்த விஷ்வா “என்ன பாலா எப்டி இருக்க?” என்று தோளில் உரிமையுடன் கரம் வைக்க,
வெடுக்கென உதறி தள்ள எண்ணிய மனதை அடக்கி கொண்டு, “எனக்கென்ன நல்லா இருக்கேன்” என்று மெல்ல கரத்தினை விலக்கினான் பாலமுரளிதரன்.
இதழ் சுழித்து நிந்தனையாய் புன்னகைத்தவன் பரிகாசம் செய்யும் பார்வையில் பாலாவை பார்த்தான். விஷ்வாவின் பார்வைக்கு சற்றும் சளைக்காமல் முறைப்பை காட்டினான் பாலமுரளிதரன். இந்த பார்வை இன்று நேற்று முளைத்ததல்ல,
பள்ளி பயிலும் காலத்திலேயே தொடங்கியது. இன்னார் என்று பழகி கொள்ளாமலேயே ஒரு வித வெறுப்பு இருவருக்கும் இடையில் ஒட்டி உறவாடியது. பவித்ரா பாலா விஷ்வா மூவரும் ஒரே வகுப்பு தானே தவிர வேறு வேறு பிரிவு. இம்மென்றால் கோபம் கொள்ளும் விஷ்வாவும், அந்த கோபத்திற்கு முறைப்பை காட்டியே கடந்து செல்லும் பாலாவும் அக்னிநட்சத்திரம் தான். அன்று முதல் இன்று வரை இருவரிடத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை.
மிருகக்காட்சி சாலையில் கர்ஜிக்கும் சிங்கத்தை மிரட்சியுடன் பார்ப்பது போல விஷ்வாவை பார்த்து கொண்டிருந்தாள் மீரா.
திகிலடையும் பார்வை மருண்ட விழிகள் மயக்கும் வனப்பு என்று பார்வையை மேலிருந்து கிழே வரை பரவ விட்ட விஷ்வா “மாமா வரலையா” என்று இயல்பாய் கேட்க,
“வ வரலை” என்றாள் நடுங்கும் குரலில்.
‘சற்று முன்பு பேசிய பேச்சு என்ன இப்போது பேசும் குரல் என்ன அப்பப்ப தன் மீது இத்தனை பயமா?’ என்று எண்ணியவனுக்கு சிரிப்பு பொங்கியது. அவ்விடத்தில் நின்று அவளின் பயத்தை அதிகரிக்காது புன்னகையுடன் நகர்ந்து சென்று விட்டான் விஷ்வா.
அவன் சென்ற பின்பு தான் அதுவரை நிறுத்தி வைத்த மூச்சை வெளியிட்டு, அதுவரை பதட்டத்தை அனுபவித்த மனதை அமைதிப்படுத்தினாள் மீரா.
“இந்தா துடைச்சுக்கோ” என்று பவித்ரா கைக்குட்டையை நீட்ட,
குழப்பத்துடன் பார்த்தவள் “இது எதுக்கு பவிக்கா?”.
“முகத்துல லிட்டர் கணக்குல வியர்வை வழியிது மீரா. போட்ட மேக்கப் கூட இடம் தெரியாம அழிஞ்சு போச்சு அதான் முகத்தை துடைக்க துணி” என்று கிண்டல் செய்ய,
“போங்க க்கா உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான். அது என்னமோ தெரியலை அவர பாத்ததும் என்னோட துணிச்சல் எல்லாம் மறைஞ்சு போயிருது. ஒரு விஷயம் ஆழமா பதிஞ்சு போச்சுன்னா அதை மாத்திக்க முடியாது.
அவரு பண்ணதை என்னால மறக்க முடியலை, கடந்து போயிறணும்னு நினைச்சாலும் ஆட்டோமேட்டிக்கா ஆன் ஆகி பிளாஷ்பேக் எல்லாம் கண் முன்னாடி படமா வந்து பயத்தை கொடுக்குது. நா என்ன பண்ண?” என்று கேள்வி கேட்டு நிறுத்தியவளின் முகம் காந்தள் மலராய் வாடி வாசமிழந்து போனது.
“சரி ஃப்ரியா விடு” என்று தோள் தட்டி இயல்பாக்க முயற்சி செய்தாள் பவித்ரா.
வந்தவர்களை கவனித்து கொண்டிருந்த பூங்கோதை பவித்ராவின் அருகில் நிற்பவளை பார்த்து “மீரா கண்ணு” என்று அதிசயம் ததும்ப அழைத்தவர், வேக நடையில் அவள் அருகில் வந்து,
“நீ எப்போ வந்த அதுவும் புடவை கட்டிட்டு வந்துருக்க அழகா இருக்கு” என்று கன்னம் வழித்து நெட்டி முறிக்க,
“கிண்டல் பண்ணாத கண்ணு” என்று முகத்தை மறைக்க குனிந்து கொள்ள, மூவரும் சிரித்தனர்.
“சரி மாமா எங்க அத்தை ஆளையே ணோம்” என்று மீரா பார்வையை சுழலவிட,
“ரெடியாகிட்டு இருக்காரு இப்போ வந்துருவாறு கண்ணு. சரி அப்பா வரலையா?”.
“இல்ல அத்தை என்ன அனுப்பிவிட்டுட்டு ஏதோ வேலை இருக்குன்னு கோயம்புத்தூர் கிளம்பி போயிட்டாரு முக்கியமான வேலையாம்”.
“சரி சரி உள்ள வாங்க வாசல்ல நின்னு பேச வேணாம், வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்”என்ற பூங்கோதை,
“பவி உள்ள கூட்டிட்டு போம்மா அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடு” என்று பணித்து விட்டு பரபரப்புடன் அடுத்த வேலையை கவனிக்க சொன்றுவிட்டார்.
எதிரில் நின்றவளின் அலங்காரத்தை ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தவள் “என்ன மீரா இது அழகா புடவை கட்டிட்டு வந்துருக்கியே அதுக்கு ஏத்த மாதிரி வளையல் போடணும்னு தோணலை, வெறும் கையோட வந்துருக்க. நல்லவேளை, அத்தை பாக்கலை பொண்ணுங்க வெறும் கையோட இருந்தா அவங்களுக்கு பிடிக்காது கோபம் வரும்” என்று வெறுமையாய் இருந்த கரத்தினை பார்த்து செல்லமாய் கடிந்தாள் பவித்ரா.
“சாரிக்கா அவசரத்துல மறந்துட்டேன்”.
“ம் வளையல மறந்துட்டு வாட்ச் மட்டும் கட்டிட்டு வந்துட்ட” என்று புருவம் உயர்த்தி கேட்க,
“வாட்ச் காட்டுறது வழக்கம் அதான் எப்பவும் போல எடுத்து கட்டிட்டு வந்துட்டேன் அதுவுமில்லாம, இந்த சேரிக்கு மேட்ச்சா என்கிட்ட பேங்கில் இல்ல தேடி பாத்தேன் அவசரத்துக்கு எதுவும் சிக்கலை” என்று தோளை குலுக்கினாள் மீரா.
“பாலா நீ இங்கயே வெய்ட் பண்ணு நா வந்துடுறேன்” என்றவள் “வா மீரா” என்று அறைக்கு அழைத்து சென்றாள்.
டிரெஸிங் டேபிள் பக்கவாட்டில் இருந்த வளையல் ஸ்டேண்டில் இருந்து புடவைக்கு பொருத்தமான கண்ணாடி வளையலை எடுத்து கொடுக்க,
“அச்சோ கண்ணாடி வளையலா? வேண்டாம் க்கா” என்று வேகமாக மறுத்தாள் மீரா.
“ஏன் வேணாம்னு சொல்ற? போட்டுக்கோடி நல்லா இருக்கும் எனக்கு வாங்கினது தான். ஆனா சைஸ் கொஞ்சம் சிறுசா இருக்கு உனக்கு சரியா இருக்கும் போட்டுக்கோ” என்று மாட்டிவிட்டாள் பவித்ரா.
“அழகான வளையலை போய் எனக்கு போட்டு விடுறீங்க கொஞ்ச நேரம் கூட தாங்காது, கவன குறைவா எதுலயாயவது முட்டி மோதி உடைச்சிருவேன் பவிக்கா” என்று கவலையுடன் சொல்ல,
“ப்ச் அதெல்லாம் உடையாது அப்டியே உடைஞ்சாலும் பரவாயில்ல வேற வாங்கிக்கலாம்” என்று மாட்டி விட்டு வெளியே அழைத்து வர, தணிகாசலம் அவர் அறையில் இருந்து வெளிப்பட்டார்.
“அக்கா நா மாமாகிட்ட பேசிட்டு வறேன் நீங்க போங்க” என்றுவிட்டு அவர் அருகில் சென்றவள் “ஹாய் தணிஷ்க் மாமா எப்டி இருக்கீங்க” என்று உற்சாக குரலில் நலம் விசாரிக்க,
“ப்ச் பாருடா புதுசா விருந்தாளியெல்லாம் வந்துருக்காங்க” என்று அதிசயித்து,
“நா நல்லா இருக்கேன் மூர்த்தி சொன்னான் நீ வந்துருக்கன்னு நீ எப்டி இருக்க? எக்ஸாம் எப்டி எழுதியிருக்க ம்மா இந்த வருஷத்தோட உனக்கு படிப்பு முடியிதில்ல”.
“ஆமா மாமா. நல்லா இருக்கேன், சூப்பரா பண்ணிருக்கேன் நிச்சயம் நல்லா ரேங்க் வரும் ரிசல்ட்காக வெய்ட்டிங் ரெண்டு நாள்ல வந்துரும் மாமா” என்று சொல்ல,
“ம்..” என்று சிந்தனைகளை அசைபோட்டபடி “சரி நெக்ஸ்ட் பிளான் என்ன மாஸ்டர் பண்ண போறியா இல்ல ஒர்க் எதுவும் ட்ரை பண்ண போறியா?” என்று தாடையை தேய்த்தபடி கேட்டார்.
“இப்போதைக்கு மாஸ்டர் பண்ற ஐடியா இல்ல மாமா ஒர்க் பண்ணனும் சில கம்பெனியில அப்ளிகேஷன் போட்டு வச்சுருக்கேன் இண்டர்வியூக்கு கால் பண்றோம்னு சொல்லிருக்காங்க”.
சிந்தனையை ஒதுக்கிவிட்டு “நீ எதுக்கு ம்மா வேற எங்கயோ போய் வேலை தேடுற நம்ம ஆபிஸ்ல வந்து ஜாயின் பண்ணிக்க வேண்டியது தானே? உன்கிட்ட பேசனும்னு இருந்தேன் ஆனா அதுக்கான சந்தர்ப்பம் தான் அமையலை ஃபங்கஷன் முடியட்டும் நாம பேசலாம்” என்றவர் வந்துருந்த உறவுகளின் மீது கவனத்தை செலுத்த தொடங்கினார்.
சற்று நேரத்தில் பூஜை தொடங்க, வந்திருந்த அனைவரும் பூஜையில் கவனத்தை செலுத்தினர். பூங்கோதை ஸ்லோகம் பாட அவருடன் சேர்ந்து மற்ற பெண்களும் பாடினர் பார்க்கவே அத்தனை அருமையாய் இருந்தது. மந்திரங்கள் சொல்லும் முறை அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு செய்கையும் சுவாஸ்ரயமாக மீராவின் கருத்தை கவர்ந்தது.