சில மணி துளிகளில் பூஜை நிறைவு பெற, வந்திருந்த சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வைத்து மஞ்சள் குங்குமம் எடுத்து கொடுத்து கொண்டிருந்த பூங்கோதை பவித்ராவை அழைத்தார்.
“என்ன அத்தை” என்று வந்தவளிடம்,
“பூஜை ரூம்ல வந்தவவங்களுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலம் கொஞ்சம் இருக்கு, அதை எடுத்துட்டு வாம்மா அப்டியே மஞ்சள் குங்குமமும் சேர்த்து எடுத்துட்டு வா” என்று பணிக்க,
வேகமாக பூஜை அறை சென்ற பவித்ரா ஒவ்வொரு தாம்பூலமாக எடுத்து கொடுக்க, பாலா அவளுக்கு உதவி கொண்டிருந்தான்.
பவித்ராவின் அறையில் அரை மணி நேரமாய் அடித்து கொண்டிருந்த அலைபேசியின் மெல்லிய சத்தம் கேட்டு உயிர்ப்பித்து பேசியவள் மறுமுனையில் கூறிய அவசர செய்தியை பவித்ராவிடம் உரைக்க வேண்டி, வேக நடையில் வந்தவள் சந்தனம் குங்குமம் அடங்கிய தட்டை எடுத்து சென்றவளின் மீது பதட்டத்தில் மோதிட,
தட்டில் இருந்த குங்குமம் சிதறி நடந்தேறும் பூஜையை அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தவனின் மீது படிந்தது. ஆசையாய் அணிந்த உடையில் சிவப்பு நிற கரையை கண்டதும் கோபம் கொப்பளிக்க, காரணமானவளை உறுத்து விழித்தவன் அவள் மீது இருந்த வெறுப்பில் பளார் என அறைந்திட,
நடந்ததை யூகித்து அதற்கு பதில் கூறும் முன்பே கன்னத்தில் பதிந்த கைரேகையில் சட்டென கண்கள் கலங்கிட அழுகையை அடக்கி கொண்டு நின்றாள் பவித்ரா.
“அறிவில்ல கண்ணு என்ன குருடா நல்லா தானே இருக்க இடியட் உன்ன” என்று பல்லை கடித்து கொண்டு மீண்டும் அடிக்க கையை ஓங்கினான் விஷ்வா.
வேகமாக இடை புகுந்த பாலா பவித்ராவை மறைத்தபடி நின்று விஷ்வாவின் சட்டையை கொத்தாக பற்றி “எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே அவள அடிப்ப” என்று கர்ஜிக்க,
புருவங்கள் உயர பரிகாசம் மேலோங்க பார்த்தவன் “பாருடா அங்க தட்டினா இங்க எரியுது” என்று எள்ளல் தொனிக்க கேட்டவனை ஆத்திரத்துடன் விழித்தான் பாலமுரளிதரன்.
“அவளுக்கு ஒன்னுண்ணனா நா கேட்பேண்டா யாரும் இல்லாதவன்னு நினைச்சியா, அவளுக்கு நா இருக்கேன். குங்குமம் தானே பட்டுச்சு என்னமோ நெருப்பை அள்ளி வீசுன மாதிரி குதிக்கிற” என்று சீறினான் பாலமுரளிதரன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஷ்வாவின் கோபத்தை கண்ட மீராவிற்கு உடல் நடுங்கி உள்ளம் பதறியது. விஷ்வா பாலா இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நிற்க, வந்திருந்த அத்தனை பேரும் திகைத்து பார்த்து கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்களின் சலசலப்புகள் வேறு பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியது.
மகனின் சட்டையை பற்றிய பாலாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் பொங்கியது பூங்கோதைக்கு. வேகமாக இருவரின் அருகில் வந்தவர்,
“பாலா சட்டையில இருந்து கைய எடு எல்லாரும் உங்கள தான் பாக்குறாங்க. அவனுக்கு இல்லாத உரிமையா?, அவ ஒன்னும் யாரோ இல்ல அவனோட அத்தை பொண்ணு அவளே பேசாம இருக்கும் போது உனக்கென்ன” என்று குரலை தாழ்த்தி கோபமாக கீறிச்சிட்டவர் வேகமாக பாலாவின் கரத்தினை எடுத்து விட,
“என்ன ஆன்ட்டி நீங்க, உங்க பையன் பண்ணது தப்புன்னு உங்களுக்கு தெரியலையா? வந்திருக்குற அத்தனை பேர் முன்னாடி பொண்ணுன்னு கூட பாக்காம அடிக்கிறான் நீங்க உரிமைய பத்தி பேசுறீங்க’ என்று மனம் தாளாமல் கொதிப்புடன் கேட்டான் பாலமுரளிதரன்.
“என்ன பவி அமைதியா இருக்க அவன்கிட்ட எடுத்து சொல்லு சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். எதுவா இருந்தாலும் பூஜை முடியவும் பேசிக்கலாம் வந்தவங்க எல்லாருக்கும் ஈவ்னிங் ஷோ காட்டனுமா என்ன?” என்று அவள் காதில் கிசுகிசுத்தார் பூங்கோதை.
கண்களை அழுந்த துடைத்தவள் “பாலா ப்ளீஸ் போதும். இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம் நீ மீராவை கூட்டிட்டு கிளம்பு” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.
“ஏய் உனக்காக தானே பேசிட்டு இருக்கேன்”.
“எனக்காக யாரும் பேச வேணாம் தயவுசெய்து இங்க இருந்து போ, அவரு என்னோட மாமா எல்லா உரிமையும் அவருக்கு இருக்கு. இது என்னோட குடும்ப விஷயம் நீ எதுக்கு தலையிடுற, இங்க இருக்குற எல்லாரும் வேடிக்கை தானே பாக்குறாங்க நீ மட்டும் எதுக்கு எனக்காக வக்காலத்து வாங்குற”.
“பைத்தியம் மாதிரி பேசாத பவி அவன் உன்ன அடிக்கிறதை வேடிக்கை பாத்துட்டு இருக்க சொல்றியா? என்னால முடியாது. உன்னோட குடும்ப விஷயம்னா உங்களுக்குள்ள வச்சுக்கணும்னு இப்டி எல்லார் முன்னாடியும் அடிச்சு அவமானப்படுத்துனா என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது பவி” என்றவன் விஷ்வாவை முறைத்து பார்த்தான்.
அதே கேலி இழையோடும் புன்னகை அவன் இதழில் உறைந்திருந்தது. அவனை பார்க்க பார்க்க பற்றி கொண்டு வந்தது பாலாவிற்கு. அங்கு நடப்பவைகளை கண்டு மீராவின் மனம் திக் திக் என்று அடித்து கொள்ள,
“பாலா ண்ணா” என்று அவன் கரம் பற்றினாள் மீரா. பற்றிய கரத்தினையும் பற்றியவளையும் சுவாரஸ்யம் கலந்த வெறுப்போடு பார்த்தான் விஷ்வா. கண்களில் பொறாமை துளிர்விட்டது.
“ப்ளீஸ் பாலா பிரச்சனை பண்ணாம இங்க இருந்து கிளம்பு உனக்கு புண்ணியமா போகும். பூஜை இன்னும் முடியலை அதோட முழு பலனும் கிடைக்கணும்னா நீ இங்க இருந்து கிளம்புனா தான் கிடைக்கும்” என்று கரம் கூப்பியவள் பார்வையால் இறைஞ்சினாள்.
“எப்டி பவி? கண்ணு முன்னாடி உன்ன அடிக்கிறதை பாத்துட்டு என்னால போக முடியும். நீயும் வா, இங்க இருக்க வேணாம் என்னோட வீட்டுக்கு போலாம் உன்ன தனியா விட்டுட்டு போக மனசில்ல” என்று கையை பற்ற,
அவன் செயலில் திடுக்கிட்டு போனவள் “பாலா என்ன பண்ற உனக்கென்ன பைத்தியமா? எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க கைய விடு” என்று சங்கடத்தில் நெளிந்த பசித்ரா, அவன் பிடிவாதம் அறிந்து அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மனதை திடப்படுத்தி கொண்டு கன்னத்தில் அறைந்திட,
அவள் செயலில் உறைந்து போய் நின்றது அவன் மட்டுமல்ல மீராவும் தணிகாசலமும் தான். பவித்ரா கை ஓங்குவாள் என்று எதிர்பார்க்கவில்லை, பாலா செய்தது சரி என்று மனதிற்கு பட்டாலும் தணிகாசலம் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
“உன்ன வான்னு கட்டாயப்படுத்தி கூப்ட்டதுக்கு ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்ட ரொம்ப நன்றி. தயவுசெய்து இங்க இருந்து கிளம்பு இனி ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது. என்மேல, இவங்களுக்கு இல்லாத அக்கறையா? உன்னோட லெவல் என்னமோ அதோட நிறுத்திக்கோ” என்று எடுத்தெறிந்து பேசியவளை வலியோடு பார்த்தான் பாலமுரளிதரன்.
சற்று முன் இருந்த மனநிலையும் சூழ்நிலையும் தலைகீழாய் மாறி போனது. “பவி” என்று குரல் கமற அழைத்தவனை போதும் என்று கரம் தடுத்து முகம் திருப்பி கொண்டாள் பவித்ரா. அழுகை முட்டி கொண்டு வந்தது அவளுக்கு.
“மீரா அவனை கூட்டிட்டு கிளம்பு எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என்று கடுமையாக முகத்தை வைத்து சொல்ல,
“சாரி பவிக்கா” என்று விசும்பினாள் மீரா.
“நீயாவது புரிஞ்சிக்கோடி அவனுக்கு தான் நிலைமை புரியலை உனக்குமா புரியலை?. அவன கூட்டிட்டு போ” என்றாள் கெஞ்சலாய்.
“வாங்க பாலாண்ணா” என்றவள் அவன் கரம் பற்றி இழுத்து செல்ல,
கலங்கிய விழிகளுடன் அவளை திரும்பி பார்த்தபடி மனமில்லாமல் நடை சோர்ந்து சென்றான் பாலமுரளிதரன். அவளை தனியே விட்டு செல்ல துளியும் விருப்பமில்லை,
அதுவும் கண் முன்னே அநியாயம் என்று தெரிந்தும் மகனை கண்டிக்காமல் அவானை அடக்கிய பூங்கோதையின் மீதும் ‘தங்கை மகள் தங்கை மகள்’ என்று மற்ற விஷயங்களில் கொண்டாடும் தனிகாசலத்தின் மீதும் கோபம் எழுந்தது.
அவன் உருவம் மறையும் வரை கூடத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த பவித்ரா வேகமாக அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்.
“சாரி பாலா” என்று படுக்கையில் விழுந்து அழுகையில் கூடியவள் “எனக்கு வேற வழி தெரியலை அதான் அடிச்சிட்டேன் சாரிடா” என்று தனியாக புலம்ப,
பிரச்சனைக்கு வினையாய் அமைந்த அலைப்பேசி மீண்டும் ஒலி எழுப்பியது. அதை எடுத்து பார்த்தவளுக்கு திரையில் மின்னிய எண்ணை கண்டு பரபரப்பு தொற்றி கொள்ள, கண்களை அழுந்த துடைத்து கொண்டு உயிர்ப்பித்து காதில் வைத்தாள் பவித்ரா.
“ஹாலோ டாக்டர்” என்ற குரலே அவசரத்தை பிரதிபலிக்க,
“சொல்லுங்க பிரியா சிஸ்டர்”
“எமர்ஜென்சி கேஸ் டாக்டர் உடனே கிளம்பி வர்றிங்களா பேசண்ட் வெரி கிரிட்டிக்கல் என்ன பண்றதுன்னு தெரியலை டாக்டர்” என்று மறுமுனையில் பயத்துடன் பேசினாள் பிரியா.
“ஓகே நீங்க பதட்டப்படாதீங்க நா நா உடனே கிளம்பி வறேன்” என்றவளின் விரல்கள் அன்னிச்ச்சையாய் பாலாவின் எண்ணை தட்ட, சற்று முன் நடந்த நிகழ்வுகள் கண்முன்னே படமாய் விரிய எண்களை அழித்தவள் அழுகையை ஓரம் கட்டி எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள்.
அவசரமாக உடை மாற்றி கொண்டு கைப்பையுடன் வெளியே வர, கூடத்தில் எவருமில்லை. தாம்பூலம் வாங்கி கொண்டு வந்தவர்கள் சென்றிட, தணிகாசலம் மட்டும் கூடத்தில் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் சென்றவள்,
“மாமா எனக்கு நைட் டியூட்டி இருக்கு நா கிளம்புறேன் வர மிட் நைட் ஆகிரும்” என்று தகவலாய் சொன்னவள் அவர் பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென சென்றுவிட்டாள்.
‘தன் மீது கோபமோ’ என்றெண்ணியவருக்கு விஷ்வா நடந்து கொண்ட விதம் கோபத்தை அளித்தது. ஆனால் அக்கோபம் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ‘அடித்த பிறகும் மகனை அதட்டாமல் அமைதியாய் நின்றது எத்தகைய தவறு அவளுக்கு அநீதி இழைத்ததற்கு சமம் தானே?’ என்று தணிகாசலம் தன்னையே கோபமாக நொந்து கொண்டார்.
ஆனால் அவன் நடந்து கொள்ளும் விதத்திற்கு என்ன காரணம் எவர் காரணம் என்பதை அறிந்து கொள்ள எவரும் முற்படவில்லை.
இல்லம் வந்து சேரும் வரை மீரா எதுவும் பேசவில்லை சத்தமில்லாமல் அழுது கொண்டே வந்தாள். நடந்த நிகழ்விற்கு தான் தானே காரணம் என்ற எண்ணம் குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியது.
“இறங்கு மீரா” என்றதும் தான் இல்லம் வந்து சேர்ந்ததை உணர்ந்தாள்.
உணர்ச்சிகள் துடைத்த அவன் முகத்தை பார்த்தவள் “சாரி பாலா ண்ணா என்னால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை வந்துருச்சு சாரி ண்ணா” என்று தேம்பினாள்.
“நீ எதுக்கு சாரி கேக்குற கேக்க வேண்டியவனே திமிரா நின்னுட்டு இருந்தான். அவன் பண்ண காரியத்துக்கு சப்போர்ட் பண்ணவங்களே குற்றவுணர்ச்சியிலாமா இருக்கும் போது நீ எதுக்கு சாரி கேக்குற விடு மீரா.
அவங்கவங்க வாங்கிட்டு வந்த வரம் அப்டி, நாமா எதுவும் செய்ய முடியாது இன்னைக்கு பிரச்சனை நடக்கணும்னு இருந்துருக்க நடந்துருச்சு நீ எதுக்கும் காரணமில்லை உன்னால தான் எல்லாம் நடந்துச்சுன்னு மனச போட்டு வருத்திக்காத ஃப்ரியா விடு” என்றவன் இருசக்கர வாகனத்தை செட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிட,
மனம் சாந்தம் அடையவில்லை தன்னால் தானே என்ற எண்ணம் மேலும் தவிப்பை உண்டாக்க, வயிற்றுக்கு விடுமுறை அளித்து அறையில் சென்று படுத்து கொண்டாள்.
கோவை சென்ற மூர்த்தி பதினோரு மணியளவில் இல்லம் வந்து சேர, விளக்குகள் அணைக்கப்படாமல் ஒளிரி கொண்டிருந்தன,
‘இன்னுமா தூங்காம இருக்கா!’ என்ற சிந்தனையோடு இல்லம் நுழைந்தவர் “மீராம்மா” என்று குரல் கொடுக்க, பதில் ஏதுமில்லை.
கதவை சாத்திவிட்டு மீராவை தேடி அறைக்கு செல்ல, உடலை குறுக்கி தேகம் நடுங்க “பவிக்கா பவிக்கா” என முணங்கியபடி படுத்து கொண்டிருந்தாள்.
“மீராம்மா” என்று அருகில் சென்று அமர்ந்தவர் “பாப்பா எந்திரிடா” என தட்டி எழுப்ப, உடல் உரைத்த செய்தியில் பதறி போனார்.
காய்ச்சல் சதம் அடித்து அளவு மீறி கடந்து சென்றிருந்தது.
“மீரா மீரா” என்று கன்னம் தட்டி எழுப்ப,
விழிக்க முடியாமல் மெல்ல மெல்ல இமை திறந்தவள் “ப்பா” என்று மூர்த்தியின் கழுத்தை கட்டி கொண்டு அழ தொடங்கினாள்.
“பாப்பா என்னாச்சு எதுக்கு அழுகுற?” என்று பதட்டத்துடன் கேட்டவர் “வா ஹாஸ்ப்பிடல் போலாம் ஜுரம் ரொம்ப அடிக்கிது” என்று குரலில் அவசரத்தை நிரப்பி எழுப்பி நிறுத்த,
எழுந்து நிற்க தெம்பில்லாமல் அமர்ந்திருந்தவள் “ப்பா என்மேல தான் தப்பு பவிக்கா மேல தப்பில்லை, அவங்க எதுவும் பண்ணலை ப்பா பாவம் பவிக்கா” என்று சுயநினைவில்லாமல் அரற்றி, தேம்பி தேம்பி உதட்டை பிதுக்கி அழுதாள்.
விபரீதம் என்று புரிந்தவருக்கு காரணம் விளங்கவில்லை. சிலநிமிடம் அழுகையில் கரைந்தவள் உடல் சோர்வுற கண்கள் சொருக மூர்த்தியின் மடியிலேயே மயங்கி சரிந்தாள் மீரா.
கன்னம் தட்டி தண்ணீர் தெளித்து எழுப்பி பார்த்தும் அவளிடம் எந்த பதிலும் இல்லை, அசைவற்று கிடந்தவளை காண உள்ளே கிலியை கிளம்பியது.
வேகமாக அமுதாவின் இல்லம் சென்று விஷயத்தை கூறி பாலாவை அழைத்து வந்தார் மூர்த்தி.
மீராவின் கரம் பற்றி பரிசோதித்தவன் “அங்கிள் பீவர் ஜாஸ்தியா இருக்கு டேப்லட் கொடுத்தாலும் சீக்கிரம் கேட்காது ஹாஸ்பிடல் கொண்டுபோலாம் இல்லன்னா ஜன்னி வந்துடும்” என்று சொல்லி, கால் டாக்சிக்கு தொடர்பு கொண்டான் பாலமுரளிதரன்.
சற்று நேரத்தில் கால்டாக்சி வந்திட மீராவை கைதாங்களாக பற்றி காரில் படுக்க வைத்தவன் “ம்மா கதவை பூட்டிகோங்க காலையில தான் வருவேன் போயிட்டு என்ன எதுன்னு தகவல் சொல்றேன்” என்று வாகனத்தில் ஏறி கொள்ள,
வாகனம் அவன் பணிபுரியும் மருத்துவமனையை நோக்கி விரைந்தது. மகளின் தலையை எடுத்து மடியில் வைத்து கொண்டவர் “பாலா சீக்கரம் போக சொல்லுப்பா” என்றார் கரகரப்பான குரலில்.
“அங்கிள் பயப்படாதீங்க எல்லாமே ரெடி பண்ணி வைக்க சொல்லிட்டேன் பத்து நிமிஷத்துல ரீச் ஆகிறலாம்” என்று அவரின் பதட்டத்தை தணிக்கும் விதமாய் பேசினான் பாலமுரளிதரன்.
அழும் நிலையில் இருந்தவருக்கு ஆறுதல் சொல்ல கூட வழியில்லாது அமர்ந்திருந்தான் அவன். மருத்துவமனை அடையும் வரை அடிக்கொரு தரம் விஷ்வாவின் செயல் நினைவில் தோன்றி அக்னி பர்வதமாய் உள்ளத்தை எரித்தது.
நடந்ததை விளம்பி முடித்தவன் “சாரி அங்கிள் மீராவோட நிலைக்கு ஒருவகையில நானும் காரணம் தான். அவன்கிட்ட மல்லுக்கு நிக்காம அவள கூட்டிட்டு வந்துருந்தா நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிருக்காது” என்று மனம் வருந்தி பேசினான் பாலமுரளிதரன்.
“அவங்கவங்க இடத்துல இருந்து பாத்தா எல்லாம் நியாயமா தான்படும் விடு பாலா நடக்கணும்னு இருந்துருக்கு நடந்துருச்சு யாரையும் தப்பு சொல்ல முடியாது, எல்லாத்துக்கும் மூல காரணமே கோபம் வெறுப்பு தான். ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்திருந்தா பிரச்சனை இவ்ளோ தூரம் வந்துருக்காது. சரி மீரா எப்டி இருக்கா க்யூர் ஆகிடுவா தானே” என்று நடப்பு நிலவரம் பற்றி கேட்க