ஊரில் உள்ள மேலும் சிறிய வேலைகள் சிலவற்றை முடித்து வீடு திரும்ப தேவாவிற்கு இரவு பத்தரையை தாண்டி இருந்தது.
வீட்டினர் உறங்கியது போல் மொத்த வீடும் அமைதியாக காட்சியளிக்க, தன்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து வந்தான். கையில் ஒரு பார்சலோடு. அவளுக்காக.
அரை மணி நேரம் பயணம் செய்து அதிகம் ருசியாக இருக்கும் ஒரு கடையில் வாங்கி வந்தான். இப்பொழுது வீடு இருக்கும் அமைதியில் அவளும் உறங்கியிருக்க கூடும் என்ற ஏமாற்றத்தில் இருவருக்காகவும் வாங்கியிருந்த உணவை உணவு மேஜையில் வைத்து மேலே ஏறி தன்னுடைய அறைக்கு வெளியில் நின்றான்.
சற்று தயக்கமாக, மனைவியிடம் என்ன தான் தைரியமாக உனக்கான இடம் தருகிறேன் என கூறினாலும் அவளோடு ஒரே அறையில், அடிக்கடி அவள் முகம் பார்த்து எந்த விதமான ஆசையையும் வளர்க்காமல் இருக்க முடியுமா என கேட்டால் சந்தேகம் தான்.
‘தேவா நிதானம், கண்ணு எங்கையும் எல்லை மீறி போக விட்டுடாதடா சோளமுத்தா’ தனக்கு தானே போதித்து மெதுவாக கதவை திறந்து உள்ளே செல்ல, கண்களில் வெளிச்சம் பட்டு கண்ணை ப்ரகாசமாகியது.
கட்டிலில் அமர்த்த வாக்கிலே உறங்கும் மனைவியை பார்த்ததும் மெல்லிய புன்னகை சிந்தியது.
‘ஏன் இப்டி தூங்குறா, நல்லா படுத்து தூங்கிருக்கலாமே’
மெல்ல முணுமுணுத்தவன் விளக்கை அனைத்து குளிக்க தேவையான உடையை எடுக்க நினைத்து அலமாரியை திறக்க நினைக்கையில் தான் அது இருந்த கோலம் நினைவு வர, இதை திறந்தால் நிச்சயம் சத்தத்தில் வீடே எழுந்துவிடுமென குளியலறை சென்று குளித்து உள் பனியன், த்ரீ பை போர்த் ஷார்ட்ஸ் அழுக்கு ஒன்றை அணிந்து வந்தான்.
மீண்டும் விளக்கை போட்டு கண்ணாடி முன்பு நிற்க, அதன் அருகில் இருந்த பெரிய பை ஒன்று புதிதாக பட, லேசாக திறந்து பார்த்தவன் வேகமாக சென்று அலமாரியை மெல்ல திறக்க, எந்த துணியும் கீழே விழவில்லை.
நன்றாக திறக்க இது தன்னுடைய அறை தானா என்ற சந்தேகம் வந்தது. அத்தனையும் அழகாக அடங்கியிருந்தது, எது எது தேவையோ அது மட்டும் இருக்க, மற்ற அலமாரிகளை திறந்து பார்த்தான், அத்தனையும் நேர்த்தியாக அடுக்கியிருந்தது.
“சாரி உங்களுக்கு புடிக்குமான்னு தெரியல” திடீரென மனைவி குரல் கேட்டு தேவா திரும்ப, நின்றுகொண்டிருந்தாள் சோர்வாக.
“பிரீயா இருந்தேன், அதான் அரேஞ் பண்ணேன், அப்டியே அங்க என்னோட திங்ஸ் வச்சிட்டேன். உங்களுக்கு ப்ராபலம் இல்லையே?” என்றவள் தயக்கம் முகத்திலே தெரிந்தது.
அதிர்ச்சியிலிருந்தவன் முகம் உடனே புன்னகைத்தது, “எனக்கே என் ரூமை அடையாளம் தெரியல சக்கர”
அவன் சிரிப்பில் தானும் மெல்ல சிரித்தவள் முகத்தை பார்த்து, “சாப்ட்டியா?” என்றான்.
தலையை ஆட்டினாள், “உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன்” எத்தனை சந்தோசத்தை அவள் வார்த்தைகள் தந்ததென அவளுக்கு தெரியவில்லை.
எப்பொழுதும் தேவா இல்லம் திரும்பும் நேரம் அவன் வீட்டினர் அனைவரும் உறங்கியிருப்பார்கள், இல்லை விழித்திருந்தால், “சாப்பாடு டைனிங் டேபிள்ல தான் தேவா இருக்கு, வச்சு சாப்புடு” என தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் அவன் அன்னை சமையலறை பக்கமே வர மாட்டார்.
காலை நேரம் பெரும்பாலும் தேவா விடியகாலையிலே தோட்டம் சென்றிடுவான், அப்படி வீட்டில் இருந்தாலும் அவன் அன்னை கல்லூரி செல்லும் பரபரப்பில் அவனுக்கு உணவு வைப்பதில்லை.
வீட்டில் அன்னை தனக்காக காத்திருந்து உணவு பரிமாறி பல வருடங்கள் ஆகியது. தனிமையிலே உண்டு, உறங்குபவனுக்கு அவள் காத்திருப்பு தேனாய் தித்தித்தது.
“இங்கையே இரு” என்றவன் அவள் உடையை பார்த்து, “உனக்கு எந்த டிரஸ் கம்பர்ட்டபிலா இருக்கோ அதை போட்டுக்கோ”
கீழே வந்து தான் வாங்கிய உணவு, இரண்டு தட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து ஆம்லெட் இரண்டை போட்டு மேலே வர அவன் மனைவியும் எளிமையான ஒரு சுடிதார் அணிந்து முகம் அலம்பி குளியலறை விட்டு வந்தாள். கணவன் கையிலிருந்த உணவை பார்த்து,
“கீழயே போய் சாப்பிடலாமே ஆனந்த்” அவனோ அதற்குள் கீழே அமர்ந்து இருவருக்குமான உணவை பரிமாற துவங்கினான்,
“அட ஒக்காரு. கீழ போனா யாராவது சத்தம் கேட்டு வருவாங்க” அளவிற்கு மீறி அவன் தன்னுடைய தட்டில் உணவை வைக்க, “போதும், நான் இவ்ளோ எல்லாம் சாப்புட மாட்டேன். அப்றம் இந்த ஆம்லெட் வேணாம்” என்றாள் வேகமாக.
“அதெல்லாம் சாப்பிடலாம். ஆமா ஏன் இவ்ளோ நேரம் சாப்புடாம இருந்த? மதியமும் நீ ஒழுங்காவே சாப்டல” என தக்காளி சாஸ் கொஞ்சம் தட்டின் ஓரம் வைத்தான்.
“சும்மா தான்…” மங்கி போன அவள் குரலிலே ஏதோ சரியில்லை என யூகித்தவன் சரி என தலை அசைத்து உண்ண துவங்கினான்.
“போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?” – பைரவி
“கொஞ்சம் பிரச்சனை தான், ஆனாலும் வெற்றி நமக்கு தான்” என்றவன் பசியில் வேகமாக உணவை உண்ண, “சின்ன இடம் தான், ஆனாலும் அது வேற ஒரு காரணத்துக்காக வாங்குறேன்” என்றான்.
“ஓ… டெய்லி முக்காமணி நேரம் ட்ராவல் பண்ணி போய்ட்டு வருவீங்களா?” – பைரவி
“ஆமா பைரவி, வீட்டுலையும் அம்மா அப்பா அதிகம் இருக்க மாட்டாங்க, இஷாக்கு துணைக்கு நான் இருக்கணும்ல, அதான் ட்ராவல் பண்றது பத்தி எல்லாம் யோசிக்க மாட்டேன்” சாதாரணமாக கூறினான்,
“எனக்கு பைக் ரொம்ப புடிக்கும், அதான் எவ்ளோ தூரம் போக சொன்னாலும் அசராம போவேன், சில நேரம் வேலை அதிகம்னா மட்டும் நைட் அங்க தங்கிட்டு அடுத்த நாள் வருவேன்” – தேவா
சரி என தலை அசைத்து உண்ணவை உண்ண, “டேஸ்ட் நல்லா இருக்கு?” என்றாள்.
“நல்லா இருக்குல்ல? அதான் வாங்குனேன், ஆம்லெட் விட ஹால்ஃப் பாயில் தா நல்லா இருக்கும். அங்கையே வாங்கி சாப்ட்டா இத இப்டி ஒரு வாய் எடுத்து, முட்டையை ஒரே வாயில தூக்கி போட்டுடுவேன்” பைரவியின் முகம் சுருங்கியது ஒவ்வாமையில்.
“ஏய் என்னடி முகத்தை சுளிக்கிற? மதுரைகாரன் சாப்பாடை கொண்டாடுறவன். எத எது கூட வச்சு அடிச்சு சாப்ட்டா ருசி வரும், எது கூட வச்சு சாப்பிட்ட சொர்கம் வரும், எப்படி பொரட்டுனா சரக்கே இல்லாம போதை ஏறும், எங்க சாப்டா அய்யர் வீடு ருசி வரும்,
எங்க சாப்பிட்ட கடல்ல வச்சு பொரிச்ச மாதிரி ருசி வரும்னு ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வகையா கண்டு புடிச்சு வச்சிருப்போம். இனி இங்க தான இருப்ப, உன்ன எப்டி மாத்துறேன்னு மட்டும் பாரு” உணவை பற்றி கூறவும் அவனுக்கு வந்த கோவத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது பைரவிக்கு.
“ஒரு வாய் சாப்பிட்டாலும் ருசியா சாப்புடனும்” உணவை ருசி பார்த்து சாப்பிட்டவள் அவனுக்கு கூற தலை தூக்கி பார்த்தான், “தாத்தா சொல்லுவாங்க. உங்கள பாக்குறப்போ எனக்கு தாத்தா தான் நியாபகம் வர்றாங்க. நீங்க தாத்தா மாதிரி தான்” – பைரவி
ஆர்வமாக அவள் விழிகளை சந்தித்தான், அதன் தாக்கம் அதிகமிருக்க பைரவி தலையை தாழ்த்தி உணவை உண்டாள், “என்ன தான் ருசியா இருந்தாலும் அவங்க சாப்புடுறது அளவா தான் இருக்கும், உங்கள பாருங்க” அவன் தட்டை காட்டினாள்.
பேச்சில் இருந்த அவன் தீவிரம் உணவில் இல்லை, ஒரு பொட்டலத்தை கூட முடிக்காமல் மிச்சம் வைத்திருந்தான். அடித்து உணவை உள்ளே தள்ளும் பழக்கம் அவனிடம் எப்பொழுதும் இல்லை.
அதுவும் கடையில் வாங்கும் உணவிற்கு எப்பொழுதும் தேவா பிரியமானவன் அல்ல. ஆனால் எப்பொழுதும் இருப்பதை விட இன்று இன்னும் குறைவு. ஏதோ மகிழ்ச்சி அவன் வயிற்றை நிறைத்தது போல்.
தலையை தாழ்த்தி உணவோடு விளையாடிக்கொண்டே, “இதுக்கு காரணம் பசி இல்ல சக்கரை, சந்தோசம்” பைரவி அவனை புரியாமல் பார்த்தாள்.
“மாடா உழைச்சாலும் வீட்டுக்கு வந்தா கூட பேச நாலு பேர் வேணும்னு மனசு சொல்லும்ல? நாலு பேர் இல்லனாலும் ஒருத்தர்? அப்பா அம்மா எப்பவும் பிஸி காலேஜ், எக்ஸாம்ஸ், எவாளுவேஷன், மீட்டிங் லொட்டு லொசுக்குன்னு. தங்கச்சி நான் கிண்டல் பண்ணுவேன்னு பக்கத்துலயே வர மாட்டா” சிரித்தான் சன்னமாக.
“காலேஜ் நேரத்துல ப்ர்ன்ட்ஸ் கூட ஒக்காந்து சாப்பிட்டது. அப்றம் அப்பா அம்மாக்கு நான் வேலைக்கு போகாம தோட்டம் பாக்குறேன்னு கோவம். சோ டிஸ்டன்ஸ் நீண்டுடுச்சு. ஆச்சி வீட்டுல அவங்க தூங்குற நேரம் தான் நான் மதிய சாப்பாடு சாப்புட போவேன்.
அத்தி பூத்தார் போல அவங்க கூட எப்போவாவது சேந்து சாப்புடுவேன் கூட நாலஞ்சு பேர் இருக்கப்போ. ஆனா எனக்கே எனக்காகன்னு ஒருத்தர் கூட இருந்ததில்லை”
நிறுத்தினான் சில நொடிகள், “துணைக்கு ஒருத்தர் கூட பேசிட்டே சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு, அதான் பேச மட்டும் தான் தோணுது சாப்புட தோணல” என்றவன் வேகமாக தன்னுடைய உணவை முடித்து தலையை அவளை பார்க்க தூக்க பல வகையான எண்ணங்களோடு அவனை கண் சிமிட்டாமல் பார்க்கும் அவன் மனைவியின் பார்வை புதிது.
“ஹே என்ன பீல் ஆகிட்டியா? சாப்புடு, ஏதோ ஒரு வேகத்துல மனசுல தோணுனத சொல்லிட்டேன். சாப்பாடு பத்தலையா? இன்னொன்னு வேணா வாங்கிட்டு வரவா?” அவள் தட்டினை ஆராய்ந்து கேட்டான்.
வேண்டாம் என கூறியவள் தான் இன்னும் எடுக்காமல் இருந்த உணவை அவன் தட்டில் வைத்தாள். “என்னால இதையே சாப்புட முடியல சொல்றேன், நீ இன்னும் வக்கிர? சாப்புடு ஒழுங்கா”
அவன் மிரட்டலை தவிர்த்தவள், “சாப்புடுங்க ஆனந்த் எப்பவும் நீங்க சாப்புடுறத விட ரொம்ப கம்மியா தான் சாப்டிங்க” ஆணையாக கூற, “முடியவே முடியாது” என்றான் கணவன்.
“நீங்க சாப்ட்டா தான் நான் இத சாப்புடுவேன், இல்லையா நானும் சாப்புடல” அந்த மிரட்டல் வேலை செய்ய உடனே உண்டான் கடினப்பட்டு. வயிறு நிறைந்ததோ, மனம் ததும்பி நிறைந்தது.
இருவரும் உண்ணவும் பார்சல் கவர், தட்டு அனைத்தையும் எடுத்து தேவா கீழே போக, அவன் பின்னே வந்த அவன் மனைவி அடுப்பில் சூடாக தண்ணீர் ஊற்றி அவன் முன் நீட்டினாள், “லேட் நைட் சிக்கன் முட்டை எல்லாம் சாப்ட்ருக்கோம், சூடா தண்ணி குடிக்கிறது நல்லது” எனவும் அமைதியாய் வாங்கி குடித்தான்.
தேவா அமைதியாக தண்ணீரை குடிக்க அவனையே பார்த்திருந்தவள் ஏதோ அவன் கேட்க வர, பின் தயங்க என இருப்பது தெரிந்தது. அவள் முகம் பார்த்தவன், “வெளிய போகலாம் வர்றியா?” என்றான்.
பைரவி எதுவும் பேசாமல் இருக்க, “இப்ப” என்றான் அழுத்தி.
உடல் இளக்கமுற்று துவண்டது பைரவிக்கு, இவ்வளவு ஆசையாய் கேட்பவனிடம் எப்படி அவனிடம் மறுப்பு தெரிவிப்பது? பயம் மனதெங்கும் வியாபித்து மீண்டும் கூட்டிற்குள் சென்றடைய தூண்டியது.
அவள் முகத்தையே ஒரு ஏக்கத்தோடு பார்த்தவனின் பார்வையை தவிர்ப்பதே தவிர வேறு எதுவும் அந்த பெண்மானால் செய்ய முடியவில்லை.
“பொண்டாட்டி என்ன அமைதியா இருக்க?” கேட்டவன் குரலில் சிறுக சிறுக ஏமாற்றம் உதிக்க மூச்சும் பைரவிக்கு பலமானது.
மீண்டும் மனைவியிடம் அமைதியே கிடைக்க அவள் முகம் பார்த்தவன் தன்னுடைய ஏமாற்றத்தை உள்ளித்து, “ஹே சக்கரை இதுக்கு ஏன் முகம் இப்டி வாடுது? சரி விடு” பிரிட்ஜெ திறந்து உள்ளே இருந்த ஐஸ் கிரீம் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“ம்ம்ஹ்ம் வேணாம்” என்றவள் எடுத்த இடத்திலே அதை வைத்து, “போகலாம்” என்றாள்.
“சரி வா” என படி ஏறி செல்லவிருந்தவனை தடுத்து, “நான் வெளிய சொன்னேன் ஆனந்த்” என்றாள் மெதுவாக.
மனைவி தன்னோடு வெளியே வருகிறேன் என சொன்னது உலகையே தன்னுடைய கைக்குள் கொண்டு வந்தது போல் மகிழ்ச்சி கரைபுரண்டோட, துள்ளி குதித்தான் தேவா.