அன்று காலை தந்தை ஏதோ முக்கிய திருமணம் இருப்பதாய் கூறி கல்லூரிக்கு விடுமுறை எடுத்து நண்பர்களோடு திருச்சி சென்றிருக்க அன்னையை கல்லூரியில் விடுவது தேவாவின் பொறுப்பானது.
அவனுடைய இருசக்கர வாகனத்தில் செல்வதை எப்பொழுதுமே நாயகி பயத்தோடு தவிர்த்துவிடுவார். அதற்காகவே அவன் தந்தையின் காரினை எடுத்து எப்பொழுதும் கிளம்பும் நேரத்திற்கு முன்பே அன்னையை விரட்டி வாகனத்தினுள் ஏற்றிக்கொண்டான்.
“என்னடா உனக்கு அவசரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வர வேணாம்?” அலுத்துக்கொண்டார் நாயகி.
“என்னமோ நீங்க தான் எல்லா வேலையும் பாக்குற மாதிரி தான் பேசுறீங்க?” சீண்டினான் அன்னையை தேவா.
“உன் பொண்டாட்டி வேலை பாக்குறா தான், அதுக்குன்னு நான் வேலை பாக்கலைனு அர்த்தம் இல்லை தேவா” கோவமாக பதில் கொடுத்தார்.
“சரி கோவம் வேணாம்” வாகனத்தை ஒரு கடையின் முன்பு நிறுத்தினான்,
“இங்க என்ன தேவா?” குழம்பினார் நாயகி.
“ஒரு பெட் வாங்கணும் ம்மா” என்றான் தேவா.
“ஏன் உன் ரூம்ல இருந்த பெட் என்னாச்சு?” கேள்வி கேட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தார் அவன் அருகில்.
“அது கேவலமா தான் இருக்கு. ஆனா நான் இப்போ என் பொண்டாட்டிக்கு பெட் வாங்க வந்தேன்” அன்னையிடம் பேசிக்கொண்டே கடையினுள் நுழைந்தான்.
“ரெண்டு பேரும் ஒரே பெட்ல படுக்கலையா தேவா?” கோவமாக பேசியவர் சுற்றம் கருதி அவன் கையை பிடித்து நிறுத்தினார்.
“எம்மா அதான் கல்யாணம் அன்னைக்கே சொன்னேன்ல, இத பத்தி எல்லாம் பேச வேணாம்னு” கோவத்தோடு இருந்தவர் படுக்கை ஒவ்வொன்றையும் எது சிறந்தது என கேட்டு கேட்டு அவர் கூறியதை தான் இறுதியாக வாங்கினான்.
மெத்தையை தான் இன்னும் அரை மணி நேரத்தில் எடுத்துக் கொள்வதாக கூறி வந்தவன் வாகனத்தை எடுக்க, “அப்டி என்னடா உன் அத்தை மகளுக்கு திமிரு, என் பிள்ளையை இப்டி தவிக்க விடுறா?” எரிமலையாய் வெடித்தது அவர் கோவம்.
“நாயகி பொறுமை பொறுமை” அன்னையை தடுத்து நிறுத்தினான் சிரிப்போடு.
“நீங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டாவே செஞ்சு பழகுன எனக்கு இன்னும் அந்த பழக்கம் போகல ம்மா” மகனிடம் அதே சிரிப்பு இன்னமும்.
“இப்ப அவ தான் உனக்கு வேணும் சொல்றேன். டிவோர்ஸ் குடுக்குறியா?” அந்த எண்ணமே அவருக்கு இல்லை ஆனாலும் நாயகி கேட்டார் மகனை வெறுப்பேற்ற.
தேவானந்த் எதற்கும் அசரவில்லை அதே வற்றாத சிரிப்பு அவனிடம், “வாய்ப்பில்லை மம்மி. இப்போ எனக்கு அவளை புடிச்சு போச்சு. விடுற ஐடியா அய்யாக்கு இல்லை” என்றான்.
“அப்டி என்ன தான்டா பண்ணி அவ உன்ன மயக்கி வச்சிருக்கா?” சுளித்த முகத்துடன் மகனை மட்டுமே பார்த்தார் நாயகி.
“எதுவுமே பண்ணல ம்மா, என் பைரவி என் பைரவியே இல்லை” புரியாமலே பேசினான் தேவா.
“இந்த புதிர் போட்டு பேசுற வேலை என்கிட்டே வேணாம் தேவா” கண்டித்தார் அன்னை.
“சரியா என் பாய்ண்டுக்கு வந்துட்டீங்க. இத தான் நானும் சொல்லணும்-னு யோசிச்சேன். நீங்களும் வீட்டுல தேவையில்லாம பேச வேணாம்” என்றான் சலனமே இல்லாமல்.
மகனை ஆழ்ந்து பார்த்தவர், “ஓ மஹாராணி எல்லாத்தையும் பத்த வச்சிட்டாளா? ஆமாடா நான் சொன்னேன் தான். எவனுக்கோ வாங்கி வச்ச பொருளை எல்லாம் என் மகனுக்குனு வந்து நிக்கிறப்போ கோவம் வரும் தானே?” உண்மையை அவனிடமே உடைத்துவிட்டார்.
“ஆமாடா, சொன்னேன். எனக்கு என்ன உன்ன மாதிரி உன் பொன்டாட்டினா பயமா?” என்றார் நாயகி, “தெரியாத மாதிரியே நடிக்கிறது பாரு” முணுமுணுத்தார்.
“இந்த மாதிரி எல்லாம் பேச்சு வரும்னு தான் அத்தை எல்லா பொருளையும் மறுபடியும் புதுசா வாங்கி குடுத்தாங்க. எப்படி ம்மா இப்டி கூசாம ஒருத்தர் மனச நோகடிக்கிறிங்க?” என்றான் மெதுவாக. அன்னையிடம் பதிலே வரவில்லை.
“ஏன் பைரவிகிட்ட கேட்ட அதே கேள்வியை நீங்க போன் பண்ணி அத்தைகிட்ட கேக்க வேண்டியது தானே? கேக்க மாட்டீங்க, எப்படி கேப்பிங்க? அதான் உங்க மக அங்க வாழப் போறாளே. ஏதாவது பேசி நாளைக்கு இஷாவ பேசிடுவாங்களோனு பயம்.
உங்க பொண்ணு சந்தோசமா இருக்கனும். ஆனா உங்க வீட்டுக்கு வந்த பொண்ணு சந்தோசமா இருக்க கூடாது. உங்களுக்கு அடிமையா நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்டிக்கிட்டே இருக்கணுமா?” கோவமாக பேசியவன் கையில் வாகனமும் வேகமெடுத்தது.
“நான் ஒன்னும் என் பசங்கள ஒழுக்கம் இல்லாம வளர்கல தேவா. பொம்பள புள்ளைய பத்தி பேசுறப்போ பாத்து பேசு” என எச்சரித்தவர் அவன் கையில் அடித்து வேகத்தை குறைக்கவும் சொன்னார்.
அவளோ அசையவே இல்லை, எதற்கும் அடங்காமல் திமிறுபவன் மனைவியை எவரிடமும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. “பொண்ணுங்கள பத்தி பேசுறப்போ பாத்து பேசணும், அடுத்தவனுக்கு உபதேசம் பண்றதுக்கு முன்னாடி நமக்கும் அது பொருந்துதான்னு யோசிச்சு பேசணும் மம்மி” என்றான் கேலியாக.
“தேவா…” அன்னையின் மிரட்டலை கை காட்டி தடுத்தான்,
“உங்க வளர்ப்பு தப்பாது, அத்தை வளர்ப்பு தான் தப்பிடுச்சே. இன்னும் ஏன் உங்க மகளை சந்தோஷ்க்கு குடுக்க துடிக்கிறிங்க. விட்ருங்க. நல்ல குடும்பத்துல பொண்ணு எடுத்துக்கலாம்”
“சந்தோஷ் நல்ல பையன்” என்றார் நாயகி வேகமாக.
“இருக்கட்டும். அதுக்காக எல்லாம் கல்யாணம் அன்னைக்கு ஓடி போனவ அண்ணனை என் தங்கச்சிக்கு கட்டி குடுக்க கூடாது”
வேண்டும் என்றே பேசும் மகனிடம் என்ன வாதாட முடியும் அவராலும்? பொறுமையாய் விளக்க முடிவெடுத்தார், “அதெல்லாம் நீ சொல்ல கூடாது தேவா, அவன் குணம் தங்கம். இஷாக்கு சந்தோஷ் புடிச்சிருக்கு”
“சந்தோஷ வளர்த்த மாதிரி தான் சீதா அத்தை பைரவியையும் வளர்த்தாங்க ம்மா. அண்ணனோட குணம் அப்டியே தங்கச்சிக்கு இருக்கும்” கோவத்தை குறைத்து அவரை போலவே எடுத்துரைத்தான் தேவா.
“குணத்தை விடு தம்பி, நல்ல பொண்ணு தான். ஆனா ஒழுக்கம் தவறிட்டாலே” என்றார் இழுவையாக.
பற்களை கடித்து கோவத்தை கட்டுப்படுத்தியவன் ஓரமாக வாகனத்தை நிறுத்தி அன்னையை பார்த்தான் முறைப்போடு.
“ஏன் ம்மா, நீங்கலாம் ஒரு ப்ரோபஷர் தான? இல்ல எங்களுக்கு தெரியாம நாங்க இப்டி இறக்கி விட்டதும் அப்டி போய் ஊசி பாசி வித்துட்டு வர்றிங்களா?”
“டேய்” மகனை அதட்டினார் நாயகி.
“என்ன டேய்? நல்லது சொல்ல வேண்டிய நீங்க இப்படியா பேசுவீங்க? உங்களுக்கு தெரியுமா பைரவி ஒழுக்கம் தவருனவ-னு? அவளுக்கு என்ன நடந்ததுன்னு இப்போ வர என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல. மொத்தமா உள்ள வச்சு அழுதுட்டே இருக்கா. பயம் பயம் மட்டும் தான் இருக்கு.
அவளை எப்படி இதுல இருந்து நான் வெளிய கொண்டு வர்றதுன்னு யோசிச்சிட்டு இருக்குற நேரத்துல நீங்க அத இன்னும் இன்னும் பேசியே மோசமா மாத்துறிங்க ம்மா. நீங்க நினைக்கிற மாதிரி ஒப்பாரி வச்சு என்ன தூண்டி விடுற ஆள் அவ இல்ல. என்ன விட்டு போறேன்னு அழுகுறா லூசு…”
மகனின் கண்களில் இருந்த வேதனையை பார்த்தவர் எதுவும் பேசவில்லை, அவனை பேச விட்டார், “முன்னாடி அவ வாழ்க்கை அவ விருப்பம் போல தப்பா இருந்ததோ இல்லையோ, எனக்கு கவலை இல்ல ம்மா. இனிமேல் அவளோட வாழ்க்கை என்கூட சந்தோசமா இருக்கும். இருக்க வைப்பேன்.
உங்கள அவளை தலைல தூக்கி வச்சு கொண்டாட சொல்லல ம்மா. அவ மனச நோகடிக்காம இருங்க. நான் அவளை பாத்துக்குறேன், எப்படி தேத்தணுமோ அப்டி தேத்தி சந்தோசமா நாங்க வாழ்ந்துக்குறோம்” என்று சொன்னவன் அவர் பதிலை கூட எதிர்பார்க்கவில்லை.
அதே அழுதத்தோடு அன்னையை கல்லூரியில் விட்டு வீடு திரும்பும் வரை பேசவே இல்லை தேவா.
வீடு திரும்புகையில் அன்னை தேர்ந்தெடுத்த படுக்கையை வீட்டிற்கு எடுத்து வர கேள்வியோடு அவனை தொடர்ந்தாள். அறைக்குள் வந்ததும் கட்டிலில் இருந்த மெத்தையை கீழே தூக்கி போட்டவன் புதிதாக வாங்கியதை கட்டிலில் போட்டான்.
“உங்க பெட்ல படுக்குறதுக்கு நான் தரைல படுத்துடுவேன் ஆனந்த்” என்ற அவன் மனைவி கைகள் புதிதாக வாங்கிய மெத்தையின் தரத்தை சோதித்தது.
“பத்து வருசமா என்கிட்ட இந்த பெட் தாங்குனதே பெருசு. அப்றம் என் பெட்ட உனக்கு நான் தர்றேன்னு யார் சொன்னது?” என்றான் மனைவியிடம்.
“அப்றம் ஏன் அத கீழ போட்டீங்க?” கணவனிடம் கேட்டாள்.
“நான் கீழ படுக்க போறேன். நீ என்ன பன்றனா ஆறு மாசத்துல அந்த பெட்ல உருண்டு புரண்டு மெத்து மெத்துன்னு மாத்தி வைக்கணும். அப்றம் நான் அத அழகா யூஸ் பண்ணிக்குவேனாம்”
அவனது ராஜதந்திரத்தின் பின் அர்த்தம் புரிந்தவள் மௌனித்துவிட அந்த மெத்தையை வாங்கிய கதையை சொன்னவன் வார்த்தைகள் கேட்காமல் விட்டாள் பைரவி.
அவளை உலுக்கி, “பெட் கவர் வாங்கணும் வர்றியா கூட?” என்றான்.
“ஏன் வீட்டுல அப்டி என்ன முக்கியமான வேலை இருக்க போகுது?” மனைவி அருகே வந்து அவள் பயந்த விழிகளை பார்வையிட்ட கேட்டான்.
“இல்லங்க எனக்கு வேலை இல்லை ஆனா கூட்டத்தோட என்னால ரொம்ப நேரம் இருக்க முடியல” என்றாள் இல்லாத வேலையை செய்வது போல் பாசாங்கு செய்து.
“ஏன் முடியல?” என்றான்.
“வரலன்னு சொன்னா விடுங்களேன்” வேண்டினாள் அவனை மட்டும் சென்று வர கூறி.
“சொல்லுடி, அப்டி என்ன பயம் வேண்டி இருக்கு உனக்கு நான் தான் இருக்கேன்ல?” அவள் கை பிடித்து தேவா வேகமாக திருப்பியதில் கோபமடைந்த மனைவி,
“நீங்க இருக்கீங்கன்னு நம்பி தான் அன்னைக்கு பட்டு எடுக்குறப்போ வந்தேன். என்ன பண்ணீங்க நீங்க? என்ன விட்டு தான போனீங்க? எவ்ளோ பயந்தேன் தெரியுமா? சுத்தி எல்லாரும் என்னையே ஒரு மாதிரி வித்யாசமா பாக்குற மாதிரியே இருந்தது. உங்கள நம்பி என்னால மறுபடியும் கடைக்குலாம் வர முடியாது”
அன்று தன்னை கண்ணீர் தேங்கி நின்ற விழிகளோடு மனைவி பார்த்ததற்கான அர்த்தம் இன்று தான் தேவாவிற்கு புரிந்தது.
எதையோ தோற்றது போன்ற உணர்வு அவனுக்கு. எந்த நிலையிலும் அவள் சுயம்புவாய் எழுந்து நிற்கும் வரை மனைவியை தனித்து நிற்க விட கூடாதென தங்கள் உறவு நிச்சயயித்த நாளில் முடிவெடுத்தவன் அடுத்த நாளே அதை தவறவிட்டிருந்ததை உணர்ந்து வேதனையடைந்தான்.
இன்று மனைவி சாதாரணமாக கூறினாலும் அவள் குரல் நடுக்கம் இன்னும் அதிலிருந்து அவள் வெளி வரவில்லை என தான் கூறியது. துணிகளை மடித்துக்கொண்டிருந்த பைரவியின் கையை பற்றியவன் அவள் கண்களை பார்த்து,
“சாரி சாரி சக்கரை. இனி நீயா என்ன போக சொன்னா தான் நான் உன்ன விட்டு போவேன் தவற, என் பொண்டாட்டிய விட்டு தனியா நான் எங்கையும் போக போறதில்லை” அழுத்தமாய் ஆழமாய் அவளை பார்த்து தேவா கூறிய பிறகும் ஒரு பயத்தோடே அவனோடு கிளம்பினாள்.
முதலில் பெரிய ஜவுளி கடைக்கு அழைத்து சென்றவன் வீட்டிற்கு தேவையான சில பொருட்கள், மெத்தை விரிப்பு வாங்க, அவன் சகோதரி ஒரு மணி நேரத்தில் சகோதரனுக்கு ஐந்தாயிரம் செலவு வைத்துவிட்டாள்.
“என்ன இது கடைய வாங்கிட்டியா?” கை நிறையா உடைகளோடு வந்து நின்ற சகோதரியிடம் கேட்டான் தேவா.
“டேய் வாங்கி தாடா. இத விட உனக்கு என்ன வேலை? கல்யாணம் ஆனதும் உங்கிட்ட நான் வர மாட்டேன்”
சகோதரனை உதறி தள்ளி சென்றவள் கை பிடித்து, “சரி உன் அண்ணிக்கு இதுல எது எடுத்திருக்க?” என்றான்.
பைரவியை பார்த்தவள் சகோதரனை முறைத்து, “அவங்க அவங்களுக்கு தேவையானதை அவங்க அவங்க தான் எடுத்துக்கணும். அடுத்தவங்களுக்கு சேவை செய்றது தான் என்னோட வேலையா?”
பட்டென பேசியவள் சகோதரன் கையில் துணியை திணித்து, “பில் போடுடா. நான் பார்க்கிங்ல நிக்கிறேன்” என சென்றாள்.
“திமிரு புடிச்சவ, நீ இப்போ ஒரு டிரஸ் எடுத்துட்டு உன் அண்ணிகிட்ட குடுக்கணும், இல்லையா இதெல்லாம் அப்டியே போட்டு கெளம்பிட்டே இருப்பேன்” என்றான் வேகமாக.
இருவரும் செய்வது குழந்தை போல் தான் காட்சியளித்தது பைரவிக்கு, ஆனால் தேவா இந்த முறை தீர்க்கமாக இருந்தான் சகோதரி மனைவிக்கும் ஓர் உடையை தேர்வு செய்ய வேண்டுமென.
இவன் விடப்போவதில்லை என உணர்ந்தவள், சென்று கண்ணில் முதலில் தென்பட்ட ஓர் உடையை எடுத்து வந்து அவன் கையில் திணித்து, “போடா” என்றாள் எரிச்சலோடு.
தேவா சகோதரி முதலில் பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்த உடையில் மேல் இருந்ததை மனைவி கையில் கொடுத்து இப்பொழுது இஷா தேர்வு செய்திருந்த உடையை அவளது உடையோடு வைத்தான்.
“டேய் அது என்னோடதுடா” பைரவியிடமிருந்து பறிக்க போன சகோதரி கை பிடித்து நிறுத்தினான்.
“தெரியும், இதுவும் நீ எடுத்த துணி தானே. வச்சுக்கோ” என்றான் தேவா நகைப்போடு.
அவன் கையை உதறி, “இருடா இன்னைக்கு உனக்கு சீனி சட்னி தான்” சகோதரனிடம் கருவி சென்றவளை பார்த்து பைரவிக்கு வருத்தம் கூட, “ஏன் அவளை இப்டி பண்றீங்க, அப்றம் என் மேல கோவம் தான் வரும்” கணவனிடம் வேதனையோடு கேட்டாள்.
“தப்பு செஞ்சா அப்டியே விட கூடாது சக்கரை. எது தப்புனு சொல்லி புரிய வைக்க வேண்டியது நம்ம கடமை. அப்பா அம்மா அவளுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் குடுகுத்துட்டாங்க.
இப்ப அவங்களே நினைச்சாலும் அவளை கண்டிக்க முடியல. அதான் நான் இப்டி மிரட்டி மிரட்டி பண்ண வைப்பேன். இனி அவ டிரஸ் எடுத்தா உனக்கு ஒன்னாவது எடுப்பா”