“ரெண்டு மாசம் வர மாட்டேன்னு சொன்னிங்க போங்க. ஏன் இப்போ வந்திங்க?” மீண்டும் மீண்டும் அவனுக்கு அடி தான் கிட்டியது.
பைரவி கைகளை பற்றிக்கொண்ட தேவா அவள் கன்னத்தை தொடப்போக, பின்னுக்கு சென்றதையும் பொருட்படுத்தாமல் விழிகள் ஓரம் பூத்திருந்த கண்ணீரை துடைத்துவிட்டவன், “என் சக்கரையோட கண்ணு என்ன ரொம்ப தேடுச்சு போல?” என வினவினான் ஆசையாக.
அதை கணவன் கேட்ட பிறகு தான் பைரவிக்கு இன்னும் அழுகை வந்தது, கன்னம் பற்றியிருந்த அவன் கைகளை தன் இரு கைகள் கொண்டு பிடித்தவள் அந்த கைகளிலே இதமாக கண்களை மூடி இளைப்பாறினாள், “இல்லை” என்ற பொய்யோடு.
சன்னமாக சிரித்த தேவா என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் அவள் நெற்றியில் அனுபவித்து முத்தம் ஒன்றை வைத்து,
“நமக்கு அங்க ஊர்ல வீடு பாத்துட்டேன் பைரவி. என்னாலயும் இந்த சக்கரை இல்லாம இருக்க முடியல” என்றான்.
அவன் வார்த்தைகளை கேட்ட பைரவி இம்மியளவும் அசையவில்லை, கண்களை மட்டும் திறந்து அவனை பார்த்து சிரித்தாள் திருப்தியாக.
அவள் சம்மதம் கிடைத்த திருப்த்தி அவனிடமும் வர குறும்பும் எட்டி பார்த்தது, “இப்டியே நான் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னா வீட்டுக்கு இல்லை, முதுகு ஒடஞ்சு ஹாஸ்பிடல்க்கு தான் போவோம்”
அவன் கூறியதை ஆராய்ந்தவள் சடுதியில் அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்து முகம் சிவக்க கட்டிலில் நன்றாக தள்ளி அமர்ந்தாள்.
மனைவியை விட்டு விலகி நின்ற தேவா முதலில் ஸ்பீக்கரை அணைத்துவிட்டு மனைவி கையில் ஒரு கவரை கொடுத்தான்.
ஏதோ என வாங்கி பார்த்த பைரவி தேவாவை தீயாய் முறைத்தாள், “உங்களால என்ன பாத்துக்க முடியலைன்னா ஓப்பனா சொல்லிடுங்க ஆனந்த். இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க என்ன பாத்துக்கணும்னு அவசியமே இல்லை.
இல்லை உங்களுக்கு நான் சம்பாதிக்கிற காசு தான் வேணும்னா அப்டி ஒன்னும் உங்க சந்தோசத்தை நிறைவேத்தணும்னு எனக்கு விதி இல்லை. என் அம்மா வீட்டுக்கு நான் போறேன், நீங்க வேற ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு உங்களுக்கு தோணுறது எல்லாம் பண்ணிக்கோங்க”
மனைவி இத்தனை கோவம் கொள்வதன் காரணம் அவளை மதுரையில் உள்ள ஒரு கட்டுமான அலுவலகத்தில் சேர்ப்பதற்கான வேலையை நண்பன் ஒருவன் மூலம் நடத்தி வெளியில் சேர்வதற்கான கடிதத்தை தான் அவளிடம் நீட்டினான்.
பைரவி பேசியதில் கோவம் ஊற்றாய் பெருகினாலும் பொறுமையாய் அவளை பார்த்தான் தேவா, “எனக்கு உன்னோட காசு வேணாம். எனக்கு நீ வாங்கி தரேன்னு சொன்ன அந்த பிளாட்டினம் செயின் வேணும்.
அத வாங்கி குடுத்துட்டு நீ வேலைக்கு போக மாட்டியோ இல்லை வேலைக்கு போயி அந்த சம்பளத்தை தெருவுல விதைச்சிட்டு வருவியோ எனக்கு கவலை இல்லை” அவனது குரலில் இருந்த அழுத்தம் நீ எதுவேனாலும் பேசிக்கொள் நான் கேட்டது எனக்கு வேண்டும் என்றது.
“நான் உங்க கூட வரல” முகத்தை தூக்கி வைத்து பதில் கொடுத்தாள் பைரவி.
“ரொம்ப சந்தோசம், கிராமத்துக்கு வந்தா வாரம் ரெண்டு நாள் தான் வேலைக்கு போகணுமே உனக்கு எக்ஸ்போஷர் கிடைக்காதோன்னு நினைச்சேன். இப்ப வாரத்துல அஞ்சு நாளும் தாராளமா போகலாமே” அதில் ஒரு திருப்தி அவனுக்கு.
“நான் எங்க இருந்தாலும் வேலைக்கு போக மாட்டேன்” விடாப்பிடியாக பைரவி.
“அப்போ ஒரு நல்ல ஐடியா, உன்ன விருதுநகர்ல விட்டுடுறேன். உன் அப்பா கடைல வேலை பாக்கலாம், உன் தாத்தா கடைல வேலை பாக்கலாம். ரெண்டே மாசத்துல ஷிபிட் கணக்குல வேலை பாத்து எனக்கு செயின் வாங்கிடலாம் நீ” என்றான் தேவா.
“ஏன் என்ன நிம்மதியாவே விட மாட்டிக்கிறீங்க? சந்தோசத்தை நான் ஒரு நிமிஷம் கூட நிம்மதியா அனுபவிக்க கூடாதா? வீட்டுல அம்மா விரட்டி விரட்டி விட்டாங்க. இங்க நீங்க” ஏமாற்றமான குரலில் குற்றம் சாட்டினாள் அவன் மனைவி.
“இங்க உன்ன யாரும் விரட்டி விடலயே ஆபீஸ் போறேன்னு சொன்னா நானே கூட்டிட்டு வந்து நானே கூட்டிட்டு போய்டுவேன், இதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம்?” அவளை சமாதானம் செய்து அனுப்பும் முயற்சி மட்டும் தான் தேவாவிடம்.
“எனக்கு புடிக்காதத என்ன செய்ய சொன்னா எனக்கு கோவம் வர தானே செய்யும். உங்களுக்கு புடிச்ச வேலைய நீங்க பாக்குறீங்க. அதுக்கு நான் சப்போர்ட்டிவா இருக்கேன். அதையே உங்ககிட்ட எதிர் பாக்குறது தப்பா ஆனந்த்?” நியாயம் கேட்டு நின்றாள்.
மனைவிக்கு பதில் சொல்லாமல் அவள் முன்னே ஒரு புகைப்படத்தை காட்டினான் தேவா. அதை பார்த்ததும் பைரவி கண்ணில் நீர் திரண்டோட துடைக்கும் தைரியம் கூட அவளிடம் இல்லை.
“ரெண்டு வருஷம் முன்னாடி பெஸ்ட் எம்ப்லாய் ஆஃப் தி இயர் அவார்ட் வாங்குன யாரும் தன்னோட வேலைய புடிக்காம செஞ்சிருக்க மாட்டாங்க. ஜாயின் பண்ண ஒரே வருசத்துல இந்த அவார்ட் உன் கைக்கு வந்திருக்குனா உன்னோட வேலைல நீ எவ்ளோ மும்முரமா இருந்திருப்பனு எனக்கு தெரியும் பைரவி.
பைனல் இயர்ல உன் தாத்தா வீட்டை கட்டுறப்போ எவ்ளோ திறமையா பாத்துக்கிட்டனு தாத்தா சொல்லி ரொம்ப பெருமைப்படங்க. கொட்டி இருக்குற திறமையை வச்சுருக்க என்னோட மனைவியை நாலு சுவருக்குள்ள அடைச்சு வைக்க எனக்கு விருப்பம் இல்லை.
இப்ப உன்னோட பிடிவாதத்துல லூஸ்ல நான் விட்டு நாளைக்கு அதுவே உனக்கு ஒரு ஏக்கமா வந்து நிக்க கூடாதுனு தான் சொல்றேன். இதுக்கும் மேல உன் இஷ்டம் தான்”
ஒரு பையை எடுத்து தன்னுடைய உடைகளை தேவா அமைதியாக எடுத்து வைக்க சில நிமிடங்களில் அவளும் வந்து அவனுக்கு உதவினாள். தேவா தன்னிடம் ஏதேனும் கேள்வி கேட்பான் என நம்பியிருக்க அவனோ அமைதியின் உருவமாய் நின்றான்.
“அத்தை மாமாகிட்ட சொல்லிட்டீங்களா?”
அவளே கேள்வியை வைத்தாள். எதை பற்றி பைரவி கேட்கிறாள் என்பதை தெரிந்தே, “ம்ம் மூணு மாசம் தான இருக்க போறோம். காலைலயே அப்பாகிட்ட பேசிட்டேன். அம்மாக்கும் பிரச்சனை இல்லை” என்றான்.
பைரவி உச் கொட்டி, “நான் அத கேக்கல. நான் வேலைக்கு புகுத்த பத்தி கேட்டேன்” என்றாள் சற்று சோர்வாக.
மனைவியை திரும்பி பார்க்காமல் அவள் தன்னை தான் பார்த்துக்கொண்டுள்ளாள் என அறிந்த தேவாவின் இதழ்களில் அரும்பியது மெல்லிசான புன்னகை ஒன்று.
மறு நாள் அதிகாலை மனைவியை அழைத்து தங்கள் வாகனத்தில் அயன்தென்கரை நோக்கி தேவா பயணிக்க மனைவிக்கு செல்லும் வழி எங்கும் ஒவ்வொரு கிராமங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கிக்கொண்டே செல்ல அவன் ஊரின் எல்லையை நெருங்கிய சமயம் ஒரு நியூஸ் வாகனம் நிற்க அதன் வெளியில் இரண்டு ஆண்கள் வாகனத்திற்கு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
முன் பின் பார்த்திராத மனிதர்கள் அதுவும் தொலைக்காட்சியிலிருந்து வந்திருக்க விசாரிக்கும் எண்ணத்தோடு ஓரம் நிறுத்தினான்.
“யாருங்க நீங்க என்ன வேணும்?” என்றான்.
தங்களை நெருங்கி வந்து நின்ற வாகனத்தை பார்த்தவன் அருகில் சென்று கேள்வி கேட்டவனிடம், “அயன்தென்கரைல குளத்துல ஏதோ பிரச்சனைன்னு தகவல் வந்தது அதான் ஒரு நியூஸ் கலெக்ட் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம்” என்றான் ஒருவன்.
“டேய் கேனைப் பயலே இன்னும் அஞ்சு நிமிசத்துல வண்டி ரெடி ஆகலனு வை, உன்ன அறுத்துப் போட்டு உன் கரிய தின்னுடுவேன் பாத்துக்கோ” காரின் பேனட்டில் தலையை விட்டு நின்றவனிடம் எச்சரித்து வாகனத்தினுள் இருந்து கீழே இறங்கி வந்தான் வேறொருவன்.
“டேய் ராமு அந்த வண்டில இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டையாவது திருடிட்டு வாடா” என்றான் மேலும் பரிதவிக்கும் குரலில்.
அவன் பேசியதை கேட்டு பைரவி சிரித்துவிட, கணவனிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
தங்களிடம் பேசிக்கொண்டிருந்த ராமிடம் அதை கொடுத்து, “என்ன ப்ரோ பிரச்சனை?” என்றான் மீண்டும்.
“வண்டி ஸ்டார்ட் ஆகல. நைட் மூணு மணில இருந்து இங்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ப்ரோ. ஒருத்தரும் சிக்கலை” என்றான் ராம்.
“அவ்ளோ தானா? உங்க ஐ.டி தாங்க” என தேவா கேட்கும் பொழுது சரியாக மற்றொருவனுக்கு வந்துவிட, “சார் எந்த ஏரியா இன்ஸ்பெக்டராம் நம்ம ஐ.டி வாங்கி செக் பன்றார்?” அவன் கேலியாக கேட்டு தேவாவை எட்டி பார்த்துவிட்டு மீண்டும் சென்றுவிட்டான்..
தேவா அலட்டிக்கொள்ளவே இல்லை, ராம் தேவாவிடம் தங்கள் அடையாள அட்டையை கட்டினான், “அவன் ஒரு கிறுக்கன் ப்ரோ. பசில என்ன பேசுறோம்னு தெரியாம பேசுறான். முடிஞ்சா ஊர்குல போய் ஒரு வண்டி ஏற்பாடு பண்றிங்களா?”
தேவா மனைவியை பார்த்து, “வண்டி ஏற்பாடு பண்ண முடியுமா தெரியல, மெக்கானிக்கு கால் பண்றேன், அப்றம் நானே வந்து உங்கள கூட்டிட்டு போறேன். ஒரு கால் மணி நேரம் வெயிட் பண்ணுவிங்களா?” என தேவா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே மற்றொருவன் வந்து வாகனத்தின் பின் கதவை திறந்து அமரப் போக ராம் அவனை பிடித்து நிறுத்தினான்.
“எதுக்கு பெட்ரோல் வேஸ்ட் பண்ணனும்? இப்பயே போகலாமே” என்றான் நிரஞ்சன், அகம் பத்திரிகையின் முக்கிய பத்திரிக்கையாளர்களில் ஒருவன்.
“டேய் உள்ள ஒரு பொண்ணு இருக்குடா, மூடிட்டு கீழ இறங்கிடு. வந்த லிப்ட்டும் போய்ட போகுது” நண்பனை எச்சரித்தான் ராம்.
“அதுக்காக தானே நான் போறேன்” நண்பன் காதில் நிரஞ்சன் கிசுகிசுத்து அவனிடமிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்க, தேவா வாகனத்திலிருந்து கோவமாக கீழ் இறங்க சென்ற நேரம் அவன் கையை பிடித்தாள் பைரவி.
“ப்ரோ உள்ள ஏறுங்க” என்றான் தேவாவும் ராமிடம் சில நொடிகள் யோசனைக்கு பிறகு.
நிரஞ்சன் ஆசையாக உள்ளே ஏறி அமர்ந்துகொள்ள பைரவியிடம், “ஹாய்ங்க நீங்க இந்த ஊரா?” என்றான்.
கணவனை பார்த்தவள் பின் சிரிப்போடு அவனிடம் திரும்பி, “உங்கள மாதிரியே நானும் இன்னைக்கு தான் இந்த ஊருக்கு வர்றேன்” என்றாள்.
“பார்றா, அப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ஊற சுத்தி பாக்கலாம்” என்றான்.
ராம் நண்பனை சீட்டின் பின்னால் தள்ளி அவன் கையில் கேமரா மற்றும் இதர பொருட்களை திணித்தான், “அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பக்கத்துல இருக்கவன் தான் புருஷன் போல” என எச்சரித்தான்.
அதே நேரம் தேவாவும், “டேய் அந்த கவலை உனக்கு வேணாம். என் பொண்டாட்டிக்கு நான் ஊர சுத்தி காட்டிக்குவேன்” சிறிய அளவு இல்லை பெரிதும் பொறாமை இருந்தது அவன் குரலில்.
“இது அத விட நல்லதுங்க, கூடவே கைட் வச்சு நிம்மதியா இருக்கலாம்” நிரஞ்சன் பேச பேச பைரவி கணவனை பார்த்து வெளிப்படையாகவே சிரித்தாள், “அவ்ளோ தான போகலாம்” என்று.
மனைவி பேசுவதை கேட்ட தேவாவின் கைகளில் வாகனம் மின்னல் வேகத்தில் சீறி பாய, அவன் உணர்வை புரிந்தவள் கியரில் இருந்த அவன் கையை மெதுவாக பற்றிட, மனைவியின் கையை உதறி அவளை திரும்பி முறைத்தான் தேவா.