“டேய் கேமரா எடுத்துட்டு வா, குளத்துக்கு உன்ன கூட்டிட்டு போக ஆள் வந்துருக்கு” அவன் காதில் விழும்படி கத்தினான் தேவா.
“யோவ், நான் மதியம் தான் வருவேன், இப்போ தூங்க போறேன். வேணும்னா கேமரா தர்றேன் நீ ரெண்டு போட்டோ எடுத்து வை”
பொறுப்பை அவன் கையிலே நிரஞ்சன் ஒப்படைக்க கடுப்பானவன், “அடிங்க..” கீழே குனிந்து கல்லை தேடி தலையை தூக்க நிரஞ்சன் அங்கு இல்லை.
மதிய உணவை முடித்து சில மணி நேரங்களில் நிரஞ்சன் மற்றும் ராமை குளத்திற்கு அனுப்பிவைத்தவன் தானும் அங்கு மனைவியோடு சென்றான். வீட்டிற்கும் குளத்திற்கும் தூரம் அதிகம் இல்லாத காரணத்தால் நடந்தே சென்றனர்.
குளத்தை தூரத்தில் இருந்தே பார்த்த பொழுதே பைரவி வாயை பிளந்தாள், “இவ்ளோ பெரிய குளமா?” என்று.
“ஆமா இந்த குளத்தை ஒவ்வொரு பத்து வருசத்துக்கு ஒருக்க தூர் வருவோம். வைகை ஆத்துல தண்ணி கிடைக்காத நேரம் எல்லாம் இது தான் கை குடுக்கும், இங்கன தான்…”
தூரத்தில் கை காட்டி எதையோ கூற வந்தவன் அப்படியே பேச்சை நிறுத்திட, கணவன் முகத்திலோ குறும்பின் சாயல்! “என்ன புள்ள சாந்தி பாத்தும் பாக்காத மாதிரி அப்டியே போற?”
அருகில் வரும் மனைவியை கூட மறந்து போனான் தேவா. தேவாவை திரும்பி முறைத்தவள், “நீங்க தானே மாமா என்ன ஏமாத்திட்டீங்க அதான் கோவமா போறேன்” என்றாள் அந்தப் பெண்.
“என்னது ஏமாத்திட்டேனா?” வேகமாக நடந்தான் தேவா அவளை நெருங்கிவிடும் நோக்கத்தில், “என் மாமா மக யாரும் ஏமாத்த விட மாட்டாளே” என்றான் அவனும்.
தேவாவிற்கு பின்னால் வந்த பைரவியை பார்த்த சாந்தி, “அக்கா இவரு ஊர் மகா ஏமாத்துக்கார்க்கா. கொஞ்சம் உஷாரா இருங்க. ஊர்ல இருக்க அம்புட்டு பொம்பள புள்ளைங்ககிட்டையும் கட்டிக்கிறேன் கட்டிக்கிறேன்-னு டாவு விட்டுட்டு சுத்துறார்”
பைரவிக்கு எச்சரிக்கை கொடுத்த கையேடு, “யாருக்கு தெரியும் சொன்ன மாதிரி எந்த புள்ளையையாவது கல்யாணம் பண்ணிருக்க போறார்” என்றாள்.
பைரவி அமைதியாக வர தேவா இப்பொழுதும் சாந்தியிடம், “இப்ப கூட ஒன்னுமில்ல, என் பொண்டாட்டி பெர்மிஷன் வாங்கி உன்னையும் ரெண்டாம் தாரமா கட்டிக்கிறேன். சரி சொல்லு பாப்போம்” என்றான் விடாமல்.
பைரவிக்கு அருகில் இருந்த பெரிய பாறையை அவன் தலையில் போடும் கோவம் வந்தது. அவளை துரத்திக்கொண்டே சென்றவர்கள் குளத்தை அடைய சாந்தியோ தேவாவிடம் சிறிது பேசி தன்னுடைய கோவத்தின் அளவை கட்டிவிட்டு சிரிப்போடு நகர்ந்தாள்.
குளத்தின் கரையை எட்டிய நேரம் அங்கு ராம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க நிரஞ்சன் அங்கிருந்த மூன்று நபரிடம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
மாலை வெயில் மங்கியிருக்க குளத்தில் சற்று கூட்டம் இருந்தது. குளத்தை சுத்தப்படுத்தும் வேலை சிறிது முடிந்திருக்க ஆட்கள் தங்கள் பொருட்களை எடுத்து வைத்து காத்திருந்தனர்.
வேலை செய்பவர்களுக்கு அன்றைய நாளின் பணத்தை கொடுத்து வரும் வரை பைரவி கரையின் ஓரம் அமர்ந்திருக்க அவளை அடையாளம் கண்டுகொண்ட பெண்கள் பலர் அவளோடு வந்து இதமாக பேச துவங்கினர்.
அரை மணி நேரம் பிறகு தேவா மனைவி அருகில் வர, “பாருங்க உங்க பொண்டாட்டி வந்ததும் எங்களை கண்டுக்கவே மடிக்கிறிங்க?” குற்றம் சாட்டிய பெண்ணை பார்த்து சிரித்த தேவா கால்களை அப்படியே திருப்பி அவள் அருகில் சென்று நின்றுகொண்டான்.
“யார் சொன்னா கண்டுக்கலனு… வரப்போ கண்ண கசக்கிட்டே வந்த, இப்ப முகம் பளிச்சுனு ஆகிடுச்சே, எல்லாம் மாமனை பாத்தா தெம்பு தான?” கண்ணடித்து அவன் கேட்டதில் வெட்கமே வந்துவிட்டது அவளுக்கு.
“வெளி அழக பாத்து பேச கூடாது. என் ஊர் பிள்ளைக மனசு தான்டே அத விட அழகு” என்றான் தேவா.
“அழகான மனசு இருக்கத்தால தான நான் வந்த ஒடனே இவங்க எனக்கு தண்ணி எல்லாம் குடுத்தாங்க. அதான் சொல்றேன் ஊர் அழக விட, அவங்க அழக பாருடா… சென்னைல அம்புட்டும் கிரீம், ஸ்பா, பார்லர்-னு கண்டதையும் பண்ணிட்டு இருக்குறப்போ எந்த கிரீமையும் போடாம இவ்ளோ அழகா இருக்காங்கல்ல அதான் சொன்னேன்” என்றான் நிரஞ்சன்.
“ஓ அப்போ வெளி அழகு தான் முக்கியம் தான்னு சொல்றியா?” – தேவா
“யோவ் நான் எப்பயா அப்டி சொன்னேன்?” முந்திக்கொண்டு வந்தான் நிரஞ்சன்.
“இப்ப சொன்னியே… எங்க ஊர்ல கெழவி கூட ஒரு தனி அழகுடா.. அதுவும் என் அத்தை மக காயத்திரி பாத்துருக்கியா? அந்த மல்லியப்பூ மாதிரி வெள்ள வெளீர்னு அழகு, அந்த கோலிக்குண்டு கண்ணு, இதெல்லாம் விட அவளோட குணம்னு ஒன்னு இருக்கேடா…!” என இழுத்த தேவாவின் முகத்தை திருப்பி பைரவியை பார்க்க வைத்தான் நிரஞ்சன்.
கணவன் தன்னை பார்த்ததும் ஒற்றை புருவம் உயர்த்தி கோணலாக அவள் சிரித்த சிரிப்பு அவனை அமைதியாக்கியது.
“ம்ம்ம் வந்த வேலை முடிஞ்சது… நாம அப்டியே அந்த பக்கம் இருக்க செடி பத்தி பேசலாமா?”
பெண்களை நிரஞ்சன் வாகாக அழைத்து செல்ல பார்க்க, “என் ஊறுகார பிள்ளைங்க கிட்ட ஏதாவது வம்பு பண்ணணு தெரிஞ்சது தோலை உரிச்சிடுவேன்”
பெண்களிடம் திரும்பியவன், “இந்தா போங்க எல்லாரும் அந்த பக்கம்” அவர்களையும் விரட்டி அவர்கள் பின்னாலே செல்லப் போன நிரஞ்சன் சட்டையை பிடித்து வேறு பக்கம் திருப்பி விட்டான்.
“ஆம்பளைங்ககிட்ட பேச கொஞ்சமாவது கத்துக்கோடா” என்றான் தேவா.
“நீ என்னமோ உத்தமன் மாதிரி பேசுற? ஏங்க உங்களுக்கு இவனப் பத்தி முழுசா தெரியாதுல?” பைரவியிடம் கைபேசியை எடுத்து காட்டினான்.
அதில் அன்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் தேவா அருகில் அந்த பெண் ஆடியது காணொளியாக ஓடியது, “பாத்திங்களா? உஷாரா இருந்துக்கோங்க” எச்சரிக்கை விடுத்து ஓடிவிட்டான்.
இது எப்படி இவனுக்கு கிடைச்சது என்ற சந்தேகத்தோடு தேவா சென்றவனையே பார்க்க அவள் தோள் சுரண்டி தன் பக்கம் கவனத்தை திருப்ப வைத்தாள் பைரவி.
“கெளம்பலாமா? இல்ல இன்னும் வேலை இருக்கா?” கேட்டாள் நேரடியாக.
“போகலாம் சக்கரை” என்றவன் அமைதியாக செல்லும் மனைவியோடு வீடு வந்து சேர்ந்தான்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக உண்டு கிளம்ப அந்த நேரமும் நிரஞ்சன் ராம் இருவரும் வீடு வந்து சேரவில்லை. கைகேசியில் அழைத்து பார்த்தும் பதில் வராமல் போக மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய தோட்டம் அழைத்து சென்றான்.
“தோட்டத்துக்கு எதுக்கு?” என்றாள் இரவில் எட்டுக்களை பார்த்து எடுத்து வைத்து.
“தோட்டத்துக்கு இல்ல வீட்டுக்கு” என்றவன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே பாய்ந்து வந்த தேவாவின் இரு நாய்கள் பைரவியை சுற்றி நின்று அவ்விடத்தையே சிதறவிடும் சத்தத்தில் குறைத்தனர்.
மனைவி பயந்துவிடுவாளோ என்ற பயத்தில் தேவா அவளை தனக்கு பின்னால் நிறுத்திக்கொண்டு இருவரையும் அதட்டினான், “டேய் வேங்கையா நம்ம அக்காடா”
அதன் கழுத்தில் கட்டியிருந்த பெல்ட்டை பிடித்து தேவா நிறுத்த, பைரவன் அவளை பின்னால் இருந்து குறைந்துகொண்டே இருக்க சிறிதும் பயம்கொள்ளாமல் நொடியில் அதன் கன்னத்தை பற்றி அதன் உயரத்திற்கு குனிந்தாள்.
“அவன் கோவக்காரன்டி, கடிச்சிட போறான்” தேவா பயத்தில் தடுக்க அவளோ அதன் கன்னத்தை பற்றி கொஞ்சிக்கொண்டிருந்தாள்.
“அதெல்லாம் மாட்டான்” என்றவள் இரண்டு காவலாளிகளிடமும் தன்னுடைய அன்பை பொலிந்து சில நிமிடங்களில் நண்பனாக்கினாள்.
இவரிடமிருந்து மனைவியை பிடித்து தோட்டத்து வீட்டிற்கு அழைத்து செல்வதே பெரிய வேலையாகிப் போனது. அந்த தோட்டத்து வீடு மிகவும் சிறிய வீடு தான்.
வரவேற்பறை, ஒரு படுக்கையறை அதனோடு ஒரு குளியலறை மற்றும் சிறிய சமையலறை தான். வீட்டை சுற்றி விசாலமாக நாலாபுறமும் காலியிடம் இருக்கும். அதனை இருளில் பார்க்க முடியாவிட்டாலும் ஓரளவு அந்த பெரிய தோட்டத்தின் வனப்பு தெரிந்தது.
“நீ உள்ள படுத்துக்கோ, நான் வெளிய படுத்துக்குறேன்” அங்கிருந்த கயிற்று கட்டிலை எடுத்து போட்டு சொன்னான்.
“வெளிய வேணாம்” அவன் மேல் இருந்த கோபத்தினால் பைரவி அதோடு உள்ளே சென்றிட, பைரவியின் குரலின் பேதம் அறிந்து உள்ளே சென்றான்.
வரவேற்பறையில் மூவர் அமரக்கூடிய மர சோபா ஒன்று இருந்தது. அதற்கு நேர் எதிரில் சுவற்றில் மாட்டியிருந்தது ஒரு தொலைக்காட்சி. வரவேற்பறையை அளந்தவள், அறைக்குள் செல்ல அங்கு ஒரு குயின் சைஸ் மார்க்கட்டில், பெட் இருந்தது.
“நான் சின்ன காட்டில் தான் வாங்க சொன்னேன் இந்த கேனை வெற்றி தான் இத வாங்கிட்டான்” என்றான் உண்மையாக.
கணவன் எதற்கு வெளியில் படுத்துக்கொள்கிறேன் என கூறியதன் அர்த்தம் இப்பொழுது பைரவிக்கு புரிந்தது.