கட்டில் போக மீதம் மிகவும் சிறிய இடைவெளி தான் இருந்தது அதுவும் மூன்று அடி இடைவேளை மட்டுமே இருக்க அவன் படுப்பதற்கான வாய்ப்பு குறைவு. வரவேற்பறையிலும் படுக்க முடியாது.
தேவா வரவேற்ப்பறையில் நிற அவனை தாண்டி வந்தவள் வீட்டின் கதவை பூட்டினாள்.
வாயிலை நோக்கி நகர்ந்தவன், “நான் போனதும் பூட்டு” என நடந்தவனை பிடித்து உள்ளே நிறுத்தி முறைத்துவிட்டு அறையினுள் நுழைந்தாள்.
அவளை கோவமாக பின் தொடர்ந்தவன் முகத்தில் கதவை மூடினாள். தேவா சோபாவில் அமர்ந்திருக்க சில நொடிகளில் உடையை மாற்றி நின்றாள் எளிதான ஒரு சுடிதார் அணிந்து.
“ஏண்டி நான் கோவப்படணும், நீ மூஞ்சிய தூக்கிட்டு சுத்துற?!” என்றான் அவளிடம். பைரவி அமைதியாக சென்று கண்ணாடி முன் நின்று மாஸ்டரைசரை முகத்தில் தடவினாலே தவிர பதில் சொல்லவில்லை.
கட்டிலில் அமர்ந்து அவளை முறைத்தவன், “உன்ன தான்டி கேக்குறேன். என்னமா அவன்கிட்ட சிரிச்சு பேசுற? அதுவும் ஒரே நாள்ல! மனுஷனுக்கு கோவம் வருமா வராதா” என்றான்.
“இந்தா பாரு, நாம கல்யாணம் அன்னைக்கே இதே பத்தி பேசியாச்சு, நான் பேச்சிலரா தான் இருக்கபோறேன்-னு”
“பேச்சிலர்னா இப்டி தான் பேசுவீங்களா?” எதிர்த்து உரிமையோடு கேள்வி கேட்கும் மனைவி இன்று இந்த சாதாரண உடையில் கூட கொள்ளை அழகாய் தெரிந்தாள்.
“அழகை வர்ணிப்பது ஒரு ஆணின் கடமை பொண்டாட்டி. என்னைக்கும் அந்த கடமை என்கிட்ட இருந்து போகாது” என்றான் ஆழமாக அவள் கண்கள் பார்த்து.
“அப்போ நான் நிரஞ்சன்கிட்ட அப்டி தான் பேசுவேன்” பிடிவாதமாக அவனிடம் சொன்னவள் அவன் தோளைத் தள்ளிவிட்டு மெத்தையின் ஒரு மூலையில் சென்று படுத்துகொண்டாள்.
கோவம் கோவம் கோவம் மட்டும் தன் அவளிடம். எப்படி ஆத்து மீனுக்காக காத்திருக்கும் கொக்குகளாய் சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் போலும். என் கணவன் என தெரிந்த பின்னும் அவனிடம் எப்படி உரிமையோடு மாமா கீமா என வந்து நிற்கிறார்கள்?
ஆம் நான் அவனுக்கு என் மீதான உரிமையை கொடுக்கவில்லை தான். அது எங்களது தனி விருப்பம், இவர்கள் யார் இடையில் வர? அதற்கு இவனும் சேர்ந்து அல்லவா புகைமூட்டுகிறான்!
என் மனதின் காயங்களை ஆற்ற எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இப்பொழுதும் தேவை தான் அதற்காக தன்னுடைய ஆனந்தத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தோன்றியது. சுவற்றை பார்த்து படுத்திருந்த மனைவியின் தோள் பற்றி திருப்பினான்.
“இங்க பாரு பைரவி, நான் இப்டி தான். எனக்கு சந்தோசமா எல்லாரோடையும் பேசிக்கிட்டே நாள் போகணும். சின்ன வயசுல இருந்தே பாத்து ஒண்ணா விளையாண்டு ஊற்றி சுற்றி அலைஞ்ச பொண்ணுங்க அவங்க எல்லாம்.
சட்டுனு அந்த உரிமை பேச்சு எல்லாம் மாத்திக்க முடியாது. அந்த பொண்ணுங்க பேச்சுளையும் தப்பு இருக்காது, என் பார்வையையும் மாற்றம் வராது” என்றான் ஸ்திரமாக.
பைரவி அவனை பார்வை அகற்றாமல் பார்த்திருக்க அறையின் ஜன்னல் கதவு திறந்திருந்த காரணத்தால் தென்னை மரத்தின் காற்று சத்தம் அவ்விடத்தையே அலச, அவளிடமிருந்து பார்வையை அகற்றி இறுக்கமான மனநிலையோடு ஜன்னல்களை மூடினான்.
காலையில் அவன் ஆச்சி கூறியதையும் இப்பொழுது தேவா கொடுத்த விளக்கத்தையும் உருவகப்படுத்தி பார்க்கும் பொழுது தான் அவன் வேதனை என்னவென தெரிந்தது.
அன்று கூட இதே கேள்வியை தானே கோவமாக கேட்டான்? அவன் பார்வையில் என்றும் உரிமை உள்ள அவள் மீதே தவறை கண்டதில்லை, இன்று தங்களது பாதுகாவலனாக எண்ணி தைரியமாக நிற்கும் பெண்களிடம் எப்படி தவறி போகும் அவன் பார்வை.
“வா வந்து கதவை சாதிக்கோ” தேவா கட்டிலை விட்டு இறங்கப் போக அவன் பனியனை பிடித்து நிறுத்தினாள் பைரவி, “வேணாம்” என்று.
“லூசு, நான் அசந்து தூங்கிட்டா என்ன பண்றது, ஒரு சேப்டிக்கு தான் பூட்ட சொல்றேன்” என்றான் அவள் கையை எடுத்துவிடும் முயற்சியில்.
தேவா ஒரு கையை எடுக்க முயற்சிக்க அவளோ அவனை இரு கைகள் கொண்டு பிடித்தாள், “உங்கள வெளிய போக வேணாம்னு சொன்னேன்” என்றாள்.
“அடியேய் குளுரு பட்டைய கெளப்புது. என்னால தரைல எல்லாம் படுக்க முடியாது, அதுவும் சிமெண்ட் தரை” என்றான் தேவா.
“உங்கள யார் கீழ படுக்க சொன்னது?” என்றாள் வேகமாக.
“கீழ படுக்காம இங்க உன்கூட பெ…” என்று தொடங்கியவன் பேச்சை நிறுத்தி மனைவியை பார்க்க அவன் பனியனை பற்றியிருந்த கையை விடுத்தவள் முகம் குப்பென சிவந்து போனது.
உள் பனியன் மட்டும் அணிந்திருந்தவன் மனைவியை சங்கடப்படுத்த விரும்பாமல் எழுந்து எளிமையான ஒரு காலர் இல்லாத டீ-ஷர்ட் அணிந்து வந்து படுக்கை அருகே நிற்க, சுவற்றோடு ஒட்டி நின்று அவனுக்கு இரண்டாம் முறையாக அவள் அனுமதி கொடுத்தாள்.
தேவா அவள் அருகே படுத்தான் மெதுவாக. மெத்தையில் படுத்திருந்தாலும் சௌரியமாக இல்லை இருவருக்கும். மேற்கூரையை வெறித்து படுத்திருந்த தேவா மனைவியை நோக்கி திரும்பி படுத்து அவள் முகம் பார்த்தான்.
எத்தனை நிமிடங்களாக தன்னையே பார்த்திருந்தாளோ, அவன் பார்க்கவும் கூட விழிகளை திருப்பவில்லை. வீட்டிற்கு வந்ததும் தலை முடியை அவிழ்த்து இலகுவாக பின்னலிட்டிருக்க பல காற்றை முடிகள் அவள் முகத்தில் மோதி நின்றது.
சரிந்து விழும் குழல் அழகில் ஆயிரம் ஜரிகை பாட்டாக மாறி மென்மையாய் தெரிந்த அவள் கன்னத்தினை வருடம் ஆசை எழ, ஏதோ ஒரு உந்துதலில் கன்னத்தை பெருவிரல் கொண்டு தேவா வருடியதில் பெண்ணவளின் கண்கள் மயக்கத்தில் மூடி இரண்டு நொடிகளில் மீண்டும் திறந்தது.
“என்ன இன்னைக்கு பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” கேள்வி கேட்டு அவள் அமைதி தந்த தைரியத்தில் கைகள் பின்வாங்க மறுத்தன.
“அப்டிலாம் இல்லையே” என்றவள் இதழில் மெல்லிய புன்னகை. சுகமாக இருந்தது இருவருக்கும், தன்னுடைய மன கசப்புகளை மறக்க வைக்கிறேன் என்னும் பெயரில் அதன் ரணத்தை பெரிதுபடுத்தாமல், ரணமான மனதின் போக்கை மாற்றி அவளையே மீட்டுக்கொண்டு வந்திருந்தான்.
குடும்பத்தையே ஒதுக்கி வைத்து தானும் வாடி, அவர்களையும் வாட்டி செய்த பிழைகள் எவ்வளவு மடத்தனமானது என புரிய வைத்தவன் அவனே.
புழையிலிருந்து கற்றுக் கொள்ளாவிடில் பிழைக்க முடியாது…! கற்றுக்கொண்டதோடு ஒத்தும்கொண்டாள், வாழ்க்கை அந்த ஒரு நாளில் நின்றுவிடாது, அவனோடு செல்லவேண்டிய பாதை ஏராளம் இன்னும் உள்ளதென.
ஆண்மையின் பரிமாணங்கள் எல்லாம் அவனிடம் சென்று விண்ணப்பித்து கற்றுக்கொள்ளலாம். அவன் சுவாசத்தில் பங்கு கொண்டு, வாசத்தில் குழல் நுகர்ந்து புன்னகையுடன் இன்பத்தில் மாள மட்டில்லா இன்பம் தருவதன் பெயர் தான் காதலோ?
“ஆச்சி சொன்னாங்க உங்க தாய்மாமா பத்தி…” அவன் முகம் மாறுவதை பார்த்தாள், “எல்லாம் சொன்னாங்க” என்று.
தேவாவின் கை அதன் வருடலை நிறுத்த, “ப்ச்… ஆனந்த் ஏன் நிறுத்துறீங்க” கேட்டாள் ஏக்கமாக.
“என்னடி பரிதாபத்துல பாக்குறியா?” என்றான் சற்று கோவம் ஏறிய குரலில்.
“இந்த கேள்வியை நான் ரெண்டு மாசமா கேக்குறேன், எனக்கு உங்க பதில் என்னவா இருக்குமோ அதே பதில் தான் நானும் உங்களுக்கு சொல்லுவேன்” என்றாள் அவள் கிண்டலாக.
தலை அசைத்தான், “எனக்கு ஆறுதலுக்கு சொல்லாத பைரவி” பெரிதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் தேவா.
“எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு நீங்க ஏன் ஆனந்த் தேவையில்லாம யோசிக்கிறீங்க? உங்க மேல நம்பிக்கை எனக்கு இருக்கு, உங்க உழைப்பு மேல, உங்க வார்த்தை மேல நம்பிக்கை இருக்கு”
நம்பிக்கை வார்த்தை கொடுத்த மனைவியை சொல்ல முடியாத உணர்ச்சிகளை அடக்கி பார்த்தான், “தப்பு என் மேல இல்ல பைரவி” என்றான்.
“அத நீங்க சொல்லி தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல ஆனந்த் எனக்கு…”
மனைவியை குறுக்கிட்டு, “என்ன பேச விடுடி” என்றான். பைரவி கண்களை மூடி திறக்க மேலும் தொடர்ந்தான்,
“மாமா பொண்ணுகிட்ட நான் ஏதோ பேசி தான் சண்டை வந்துச்சுனு எல்லாரும் சொல்றாங்கள்ல? அது பொய்” பைரவி கண்கள் அதிர்ச்சியில் விரிய, தலை அசைத்து உறுதிப்படுத்தினான்,
“ஆமா, பிரச்சனை நடந்தப்போ எனக்கு இருபத்தி நாலு வயசு தான் இருக்கும். அவளுக்கு இருவது தான் நினைக்கிறன். ஸ்கூல் படிக்கிற சமயத்துல இருந்தே என்ன லவ் பண்ணா. மூணு வருசமா இங்க வர்ற நேரம் எல்லாம் என் பின்னாடியே சுத்துவா.
அன்னைக்கு இதே மாதிரி சொல்றப்போ கோவத்துல ரெண்டு வார்த்தை திட்டிட்டேன். உடனே அழுதுட்டு எல்லார்கிட்டையும் நான் அவளை தப்பா பேசுனதா சொல்லிட்டா”
“நீங்க உண்மைய சொல்லிருக்கலாமே..”
“சொல்லிருந்தா பிரச்சனை பெருசாகிருக்கும் பைரவி. என்ன பத்தி தப்பா பேசுனா கூட பரவால்ல, ஒரு பொண்ண பத்தி பேசுறது நல்லா இருக்காதுல” அந்த நிலையிலும் அவள் நிலையை பற்றி யோசித்தவன் குணம் மேலும் மேலும் பைரவியை கவர்ந்தது.
கனிவு தெரிந்த அவளது கண்களை பார்த்து ஆசையும் கேள்வியாய் புருவம் தூக்கினான், “என்ன பார்வை இது?” என்று.
“இல்ல எதுனால உங்க மேல பலி விழுந்துச்சோ அந்த குணத்தை மாத்தாம அப்டியே வச்சிருக்கீங்க? உங்க இடத்துல வேற ஒருத்தர் இருந்தா இந்நேரம் இந்த மாதிரி இலகுவா இருந்திருக்க மாட்டாங்க. சொல்ல போனா இந்நேரம் பொண்ணுங்க மேல வெறுப்பை வளர்த்திருப்பாங்க” வியப்பு தான் அவள் குரலில் இருந்தது.
சிரித்தான், “நாம எப்பவும் சாப்டா இருக்கனும் பைரவி. இல்லனா நாம எப்படி இருக்க கூடாதுனு ஆசைப்படுறோமோ அந்த மாதிரி இந்த உலகம் நம்மள தானா மாத்தி விட்ரும்” பைரவி சரி என்று சிரிக்க, இன்னும் அந்த இதமான மெத்தை வசப்படவில்லை அவளுக்கு.
“சக்கரை…” தேவா அவளை ஆசையாய் அழைக்க அவனை பைரவி பார்த்ததும்,
“உன்ன ஒரே ஒரு தடவ ஹக் பண்ணிக்கவா?” ஆசை மின்ன மின்ன வேகமாக கேட்டுவிட்டு பிறகு தான் அவள் முகத்தை பார்த்து தவறை உணர்ந்தான்.
உடனே பின்னால் விலகி, “சாரி… ஏதோ தெரியாம கேட்டுட்டேன். எந்த தப்பான எண்ணமும் இல்லை” உண்மையாக ஒப்புக்கொண்டான்.
மௌனம் சிறகடித்து பறக்க, அன்பு மட்டுமே ப்ரதான ஈர்ப்பை காட்டி இழுக்கும் அதீத புரிதல்! நிர்பந்தமாய் நிற்கும் அவனுள் நிராசையாய் அவள் தொலைந்திட, அவனே ஏற்படுத்திய இடைவெளியை குறைக்கவே நெருங்கி வந்தவள் கந்தர்வ ராகம் போல் அவன் சிகை படர்ந்திருந்த கன்னத்தில் இதழ் அச்சாரமிட்டு அவன் மார்பினிலே தலை சாய்த்து படுத்துகொண்டாள்.
மடிந்துபோய்விடலாமா என்ற நிலையில் இருந்த அவளுக்கு எங்கிருந்தோ வந்த வரமாய் அவன் வரவு. சோகத்தை கழற்றிவிட்டு உற்சாகம் வந்தது அவனே, எள்ளளவு கூட வாழ்க்கையை வாழ விருப்பமில்லாதவளுக்கு இன்று ஊரே பொறாமைப்படும் படி வாழ்ந்துகாட்ட வேண்டுமென பேராசை தந்த அவனின் ஆசையை நிறைவேற்றாவிடில் அவனது உழைப்பிற்கு ஏது பயன்? தடைகளை தகர்த்து உன் அன்பு போதுமென்று மாரோடு சாய்ந்து மனதிற்கு போதையேற்றிவிட்டாள் அவனுக்கு.
எல்லாம் ஒரு சில நொடிகள் தான். தேவா மோனநிலையிலுருந்து விடுபட்டு சுகத்தை அனுபவிக்கும் முன்பே வீட்டின் கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்டு இருவரும் பிரிந்து எழுந்தார்கள்.
“ஆனந்த் யார் இந்த நேரத்துல?” தேவா எழுந்து கதவை நோக்கி செல்ல, “டேய் கதவை திற” என்றது நிரஞ்சன் குரல்.
தேவா வந்ததும் அவன் பின்னே ஓடி வந்து வீட்டினுள் நுழைந்திட அவனை துரத்தி வந்த அவன் இரண்டு நாட்டு நாய்களையும் பிடித்து தேவா சமாதானம் செய்தான்.
“இந்நேரம் நீ எங்கடா இங்க வந்த?” என்றான். “ஒரு முக்கியமான விசியம் பேசணும். பைரவி உள்ளையா இருக்காங்க?” என்றவன் பார்வை வீட்டையே அலசியது.
“ஆமா, முதல நீ வெளியவா” என வெளியில் அழைத்து சென்று வீட்டை விட்டு சற்று தூரமாக நிறுத்தினான். “இப்போ இறந்தார்ல செந்தில்… அவருக்கு இதுக்கு முன்னாடி இந்த ஆஸ்துமா, வீசிங் எதுவும் இருந்ததா?” என்றான்.
“எனக்கு தெரிஞ்சு இல்ல” நிரஞ்சன் முகத்தில் இருந்த தீவிரம் தேவாவையும் தீவிரமாக்கியது.
“ஸ்விம்மிங்?”
“நல்லாவே தெரியும். சொல்லப்போனா இங்க ஊர்ல நெறைய பசங்களுக்கு அவர் தா ஸ்விமிங் சொல்லி கொடுத்ததே. ஏன் கேக்கற?” புரியாமல் கேட்டான் தேவா.
“ஏண்டா வெண்ண… யோசிக்க மாட்டியா நீ? நீச்சல் தெரிஞ்சவர் எப்படிடா இந்த குளத்துல மூழ்கி சாவாறு? இது என்ன கடலா பிரஷர் அதிகமாகி வெளிய வர முடியாம போக?”
“டேய் தெளிவா சொல்லு… யாரையும் பகைச்சுக்குற மனுஷன் இல்ல அவர். இதுவரை எனக்கு தெரிஞ்சு ஒரு சண்டைக்கு கூட போனதில்லை. அவரை எப்படி…” தேவா யோசிக்கவே தயங்கினான்.
“பகை இருந்தா தான் சாகணும்னு அவசியம் இல்ல தேவா. பணம் இருந்தாலும் சாகலாம்” அழுத்தி நிரஞ்சன் கூறியதில் கண்களை மூடி தலையை கோதி நடப்பதை கிரகிக்க முயன்றான்.
தேவாவின் தடுமாற்றம் புரிந்த நிரஞ்சன் தன்னுடைய கைபேசியை எடுத்து சில புகைப்படங்களை கட்டினான்.
“இது நீ மூணு மாசம் முன்னாடி காப்பாத்துன பொண்ணு. விசாரிச்சேன், அவளோட கால் பச்சை கொடில சிக்குனாதா நீ காப்பாத்தி கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க” அடுத்த புகைப்படத்தை காட்டினான்.
அது செந்தில் சடலத்தின் புகைப்படம், ஆற்றங்கரையில் அவர் உடலை கிடத்தியிருந்தது.
“இதுல அவர் கால பாரு” என்றான்.
தேவா பார்க்க அதே போல் கொடி சுற்றப்பட்டதற்கான தடயம் காலில் தெளிவாக இருந்தது.
“கொடியா?” என்றான் பிரமிப்பாக.
“ஆமா, இதோட இன்னொரு கோ-இன்சிடென்ஸ் இருக்கு. இவரை ஊர் மக்கள் யாரும் பயத்துல காப்பாத்தப் போகல, அதுனால ரெண்டு பேர் காசு அதிகம் கேட்டு பாடிய வெளிய எடுத்துட்டு வந்துருக்காங்க. அதே மாதிரி அந்த பொண்ணுக்கும்…”
நிரஞ்சன் கூறும் முன்பு, “காசு கேட்டு நினைப்போ நான் தடுத்து உள்ள போனேன்” என்றான் தேவா.
“அதே தான்… சோ இது இயற்கை மரணம் இல்லை…” நிரஞ்சன் அழுத்தமாக தேவாவின் முகத்தை பார்த்து கூறவும் நள்ளிரவில் தென்னை காற்றில் சீற்றலில் பித்து பிடித்தார் போல் நின்றான் தேவா.