“ஏண்டா, செந்தில் அண்ணா உடம்பு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல இத பத்தி எதுவும் சொல்லலையா?” குணாவிடம் கேட்டான்.
“இல்ல மாப்பிள்ளை. நான் தான் ரிப்போர்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன், தண்ணில மூச்சு விட முடியாம தான் உயிர் போயிருக்கும்-னு சொன்னாங்க” வெற்றி கூறினான்.
“அது எப்படிடா.. ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் தோண்டி துறுவிறுப்பானுங்களே இந்நேரம், எங்கையோ ஆட்டைய கலைச்சிட்டானுங்க”
தீவிரமாக தேவா யோசிக்க, “யார்ரா இப்டி ஈவு இரக்கமே இல்லாம பண்ணிருப்பாய்ங்க? வர்ற ஆத்தரதுக்கு கொடல உருவி சாவடிக்கணும் டா. ஒரு மனுஷன் இல்லாம அந்த குடும்பம் படுற கஷ்டம் இவிங்களுக்கு தெரியாமயா இருக்கும்? அந்த பிள்ளைங்க கதறுனது இப்ப வர கண்ணு முன்னாடியே நிக்குதேடா” குணா ஆத்திரமாக தொடங்கி கலங்கி நின்றான்.
தேவா, “கோவப் பட வேண்டிய நேரம் இது இல்ல மாப்பிள்ளை. சிந்திக்கணும், என்ன காரணம், ஆணிவேர் யாரு, ஐடியா குடுத்தது யாரு, யாரை டார்கெட் பண்ணிருக்கானுங்க-னு எல்லாத்தையும் யோசிக்கணும்”
“அப்போ முதல உள்ள போய் ஆள தூக்கிட்டு வந்தவிங்கள விசாரிக்கணும்” என்றான் வெற்றி.
“ஏன்டா, அன்னைக்கு பிள்ளையை தூக்கிட்டு வர்றேன்னு சொன்னவிங்களும், இன்னைக்கு செந்தில் அண்ணனை வெளிய எடுத்த ஆளுங்களும் ஒண்ணா?” அந்த நேரம் தான் அங்கு இல்லாத காரணத்தால் நண்பர்களிடம் கேள்வி கேட்டான் தேவா.
“இல்ல மாப்பிள்ளை, ஊருக்குள்ள லோட் ஏத்த வந்தவனுங்க அவிங்க” என்றான் குணா.
தேவா, “எந்த லோட்?” குணா, “அய்யனார் வயல்ல இருந்து நெல்லு எடுத்த வண்டிடா. அவன் தான் உன் மில்லுல குடுக்க மாட்டிக்கிறானே இப்போ”
தேவா தீவிரமாக யோசிக்க, “அய்யனாரை வயலுல மூட்டை எடுக்க வந்தவனுக்கு குளத்துல என்னடா வேலை?”
“ஏன்டா லூசு, குளத்துக்கு போறது இவங்க தான் போகணும்-னு இருக்கா என்ன?” நண்பனின் யோசனை போகும் போக்கில் அர்த்தமே இல்லை என தோன்றியது குணாவிற்கு.
“அது ஏன் பங்கு, அந்த ஆளோட வயலும் குளமும் என்ன கிட்டகையா இருக்கு? ஒவ்வொன்னும் ஊருக்கு ஒவ்வொரு மூலைல இருக்கு” என்றான் வெற்றி சந்தேகமாக.
“அத தான் நானும் யோசிக்கிறேன். விசியம் கேள்விப்பட்டு வந்துருந்தாலுமே என்னமோ இடிக்கிதுடா”
தாடையை தடவியபடியே அமர்ந்திருந்தான் தேவா, “அன்னைக்கு உதவி பன்றேன்னு கேட்டது யாரு?”
கணக்கு பிள்ளையின் உயிரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்த தேவாவிற்கு தன்னை தடுத்து நிறுத்த வந்த அந்த முகம் சரியாக நினைவில் இல்லை.
இன்றும் அந்த குரலை, முகத்தை நினைவுபடுத்த முயன்றும் தோல்வியே கிட்ட நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் என எண்ணினான்.
“தெரியலடா, பெருசா நான் கவனிக்கல” என குணா கூற வெற்றியும் அதே போல் தோளை குலுக்கி தனக்கும் தெஇர்யவில்லை என்றான்.
“இப்ப அந்த ஆள எங்க போய் புடிக்கிறது, மூட்டை எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாய்ங்க இனி அவுங்கள எங்க போய் விசாரிக்கிறது?”
குணா ஏமாற்றமாய் தலையை கோத, “அய்யனார்க்கிடையே கேட்டுடுவோம் வா” என எழுந்த நண்பனை தடுக்காமல் உடன் மூவரும் ஒரே வாகனத்தில் அய்யனாரின் இருப்பிடம் அறிந்து வயலோடு ஒட்டி போட்டிருந்த கொட்டகைக்கு வாகனத்தை விட்டான்.
மதிய நேரத்து வெயிலின் தாக்கத்தில் பம்ப் செட்டின் அருகில் குளிர்ச்சியாக ஸ்டீல் கட்டிலில் படுத்திருந்தார். வாகனத்தை சாலையில் நிறுத்தி அய்யனார் இருக்கும் இடத்தை வந்தடைந்தனர்.
“அய்யா அந்த தேவா வந்துருக்கான்” ஒருவன் சற்று தூரத்திலிருந்து மெல்ல குரல் கொடுத்தான் ஒருவன்.
“தெரியுது நீ மூடிட்டு வேலை பாரு” என்றார் அதே மெல்லிய குரலில். தாங்கள் வருவதை கவனித்து அய்யனார் உடனே கண்களை மூடியதையும், அவரின் ஆட்கள் சற்று தூரம் தள்ளிச் சென்று தங்கள் வேலையை தொடர்வதையும் தேவா கவனித்து தான் வந்தான்.
“தலைவரே” அவரை நெருங்கி வந்து நின்று அழைத்தான் வெற்றி. குணாவிற்கு இங்கு வந்ததே பிடிக்கவில்லை, அதிலும் இவனை தலைவர் என்றா அழைக்க வேண்டும் என்ற ஆத்திரம்.
தேவா அழைத்தும் அய்யனார் அயர்ந்த உறக்கத்தில் இருப்பது போல் அசையாமல் இருக்க மீண்டும் மீண்டும் அழைத்தான் தேவா. “வாங்கடா போகலாம்” குணா ஆத்திர மிகுதியில் நண்பர்களை அவ்விடம் விட்டு அகற்ற முயன்றான்.
தேவாவோ நகரவில்லை, “என்ன மாப்பிள்ளை, ஆயிரம் தான் இருந்தாலும் ஊர் தலைவர் கவடைக்கு கீழ நல்ல பாம்பு இருந்ததுன்னு தெரிஞ்சும் நாம போனா ஊர் நம்மள நாளைக்கு தப்பா பேசிடும்ல?”
அப்பாவி குழந்தை போல பேசியவன் பேச்சை அய்யனார் கிரஹித்து சில நொடிகளில் பதறியடித்து காட்டில் மேலே ஏறி நின்றார்.
“பாம்பு எங்கடா?” ஆயிரம் தான் வயல், தோட்டம், என இருந்து நண்டு, மீன்கள், தண்ணீர் பாம்பு என அடிக்கடி பார்த்திருந்தாலும் மடிமீது பாம்பை வைத்து பார்த்து எவரானாலும் துரிதமாக செயல்பட முடியாதே.
“பாம்பா?” தேவா புரியாமல் கேட்டான்.
“ஆமா, இப்ப நீ தானேடா சொன்ன, கீழ பாம்பு இருக்குன்னு” என்றார் அய்யனார்.
“ஐயோ நீங்க அப்டி நினைச்சிட்டீங்களா?”
தலையில் மெல்ல அடித்து சிரித்தான், “தலைவரே, நான் என் கனவுல வந்தத சொன்னேன். என்னடா வெற்றி?” நண்பனை இழுத்தான்.
“ஆமா தலைவரே, இப்ப தான் உங்க பேர்ல அர்ச்சனை ஒன்னு பண்ணிட்டு நாகராஜனுக்கு பால் வாங்கி குடுத்துட்டு வந்தோம்” அப்டியா என்னும் விதமாய் தேவா பார்த்தான். மூவரையும் பார்த்து கண்ணாலே நெருப்பை கக்கிய அய்யனார், அதே வெறியோடு அவர்களை பார்த்தார் அமைதியாக.
“சொல்ல வந்த விசயத்துக்கு வந்துர்றேன், நம்ம செந்தில் அண்ணன் ஒடம்ப எடுக்க உதவுவது உங்க வயலுல இருந்த மூட்டையை எடுக்க வந்த ஆளுங்க தானாம். அதான் அவிங்கள கண்ணுல காட்டுனா ஒரு நன்றியை சொல்லிட்டு போவோம், அவிங்க இல்லனா இந்நேரம் அதுவே பெரிய தத்தளிப்பா இருந்திருக்கும்” நயமாக பேசி நம்பவைத்தான்.
“என்னது இங்க மூட்டையை தூக்க வந்த பயலுகளா?” அய்யனார் முகம் அதிர்ச்சியை காட்டியது,
“ஒரு பயலும் இத எனக்கு சொல்லலையே, யோவ் சீதாராமா என்னையா சொல்றான் இவன்?” அங்கு வேலை செய்யும் ஒருவரை அழைத்தார் அய்யனார்.
“அய்யா ஆமாங்க, ஆனா மூட்டை எடுத்த ஆளுங்க இல்ல, எஸ்.கே லாரி மாத்து டிரைவரும், அவன் கூட வந்த ஒரு பயலும் தான்” என்றார் அவர்.
செய்தியை கேட்டு அய்யனார் பெருமை போங்க பார்த்தார் மூவரையும், “பாத்தியாடா, நான் மட்டும் இல்ல என் சுத்தி இருகவனுங்க எல்லாரும் ஊருக்கு சேவை செய்றானுங்க பாரு” என்றார் பெருமையாக.
“அது என்னவோ உண்மை தான்” தேவாவின் நக்கலை கவனித்தும் பொருட்படுத்தவில்லை.
“அடுத்த வாரம், இன்னொரு லோட் ஏத்தணும், வர சொல்லிருக்கேன் அவிங்கள அப்போ வந்து பாரு” என்றவர் மீண்டும் படுக்கையில் விழ மூவரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
சாலையை அடைந்ததும், “இந்த ஆள் மேல தப்பு இல்ல போலயே தேவா” யோசனையாய் வெற்றி கூறினான்.
“அடுத்த வாரம் வரட்டும் அப்போ பாக்கலாம். அதுக்கு முன்னாடி குளத்தை சுத்தி கொஞ்சம் கேமரா மாட்டிவிட்டுடலாமா?” நண்பர்களை பார்த்து கேட்டான் தேவா.
குணா, “இது இப்டியே நிக்காதுனு சந்தேகப்படுறியா மாப்பிள்ளை?”
“சந்தேகம் இல்லடா, கண்டிப்பா நடக்கும். பண்ணவன் யார்னு ஊர் மக்கள் சந்தேகப்படுற வர நடந்துட்டே தான் இருக்கும்-னு சொல்றேன்” உறுதியாக பேசிய தேவாவின் எண்ணம் கூட சாத்தியமோ என்ற யோசனைக்கு வர உடனே ஒத்துக்கொண்டனர்.
“சரி நான் மதுரல வாங்கியாறேன்” மூவரும் வாகனத்தில் செல்ல குணாவின் தோட்டத்தின் முன்பு மற்ற இருவரையும் இறக்கிவிட்டு தேவா நகரப்போக அவனை நிறுத்திய வெற்றி, “என்ன இது மூக்குல காயம்?”
திருட்டு பூனை போல் விழித்த தேவா, “பைரவன் கடிச்சிட்டான்டா” என்றான் மனைவியை பாராட்டி. அவள் யோசனை கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் இன்னும் அதிகமாகவே விழித்திருப்பானே.
“கடிச்சிட்டானா?” குணா நண்பனின் தாடையை பற்றி அங்கும் இங்கும் திருப்பி பார்த்தான்.
“ஆழமா இல்ல, ஆனாலும் டாக்டர்கிட்ட போகலாமா?” என்றான் குணா.
“ஊசி எதுக்கு?'” தேவா புரியாமல் கேட்டான்.
“டேய் உனக்கு கல்யாணம் ஆனதுல நீ ஆறு மாசத்துக்கு ஒருக்க அவனுக்கு போட வேண்டிய ஊசியை மறந்துட்ட. இனபெக்ஷன் ஆகியிருக்க போகுது. வா போகலாம்” குணா கூற, வெற்றி அவன் பின்னே ஏறி அமர போக, தேவா நண்பனை பிடித்து தள்ளி நிறுத்தினான்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சும்மா இருடா” என்றான் பல்லை கடித்து.
“நீ சொல்ல கூடாது, டாக்டர் சொல்லணும். வாய மூடு. டேய் வெற்றி நீ போ” குணா வெற்றியை ஏவினான்.
தலையில் அடித்த தேவா, “வேணாம்னு சொல்றேன்டா, விடுங்களேன்டா” மன்றாடினான்.
“அப்டிலாம் விட முடியாது, நீ அசால்ட்டா தான் இருப்ப, வாடி இல்லனா நடக்குறதே வேற” வெற்றி மிரட்டினான்.
“கடிச்சது பைரவன் இல்ல, பைரவி. போதுமா?” வெட்கம் பிடுங்கி திங்க, தேவா முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
நண்பன் கூறியதில் சிரிப்பு வயிற்றை வெடித்து வர வீதி என்றும் பாராமல் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர், “இந்த கடிக்கு டாக்டர் கூட மருந்து தர முடியாது” என மேலும் கேலி பேச நண்பன் தலையில் கொட்டிவிட்டு தேவா வாகனத்தை எடுத்துக்கொண்டு பறந்தான் தோட்டம் நோக்கி.
‘மானத்த வாங்கிட்டடி சக்கரை’ செல்லமாக மனைவியை திட்டிய தேவாவிற்கு அதன் பிறகு அந்த நாள் மெல்லிய புன்னகையோடும், பெரிய குழப்பங்களோடும் நீந்தியது.
மாலை ஐந்து மணி போல் தந்தையிடமிருந்து தேவாவிற்கு அழைப்பு வந்தது, “விருதுநகர் போகணும் இந்த வாரம், வியாழக்கிழமை, புதன்கிழமையே வந்துடுடா” என்றார் அவன் தந்தை.
“எதுக்கு ப்பா?” என தேவா கேட்க, “உன் தங்கச்சி விஷயமா பேச தான்டா” என்றார்.
தன்னுடைய திருமணத்தை பற்றியே தேவா யோசித்ததில்லை, சகோதரி திருமணம் முடிந்த பிறகு தான் தனக்கான வாழ்க்கை என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.
ஆனால் திடீரென நடந்த தன்னுடைய திருமணத்தினால் சகோதரி எண்ணமும் வராமல் இல்லை. சந்தோஷ் இருப்பதனால் சற்று இளக்கமாக இருந்தான்.
இப்பொழுது தந்தை தன்னிடம் அபிப்ராயம் கேட்காமல் தகவல் கூறுவது கூட சினத்தை தூண்டினாலும் சகோதரியை எண்ணி அமைதியானான்.
தந்தையிடம் பேசிவிட்டு அங்கிருந்த சில வேலைகளை முடித்து ஸ்கார்பியோ வாகனத்தை எடுத்து உயிப்பித்த நேரம் மனைவி இதில் வர மாட்டேன் என கூறியது நினைவிற்கு வர அவன் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் தலையை சொறிந்தவன் ஸ்டேரிங் வீலில் கை ஊன்றி யோசிப்பதை சில நிமிடங்களாகவே கவனித்த ஒருவர்,
“என்ன தம்பி வண்டி வேலை செய்யலைன்னா நம்ம வண்டி எடுத்துக்குறீங்களா?” கபடம் இல்லாமல் தன்னுடைய சைக்கிளை காட்டினார் அந்த பெரியவர்.
சிரித்தான் தேவா, ‘இதை எடுத்து சென்று அவளை மடியில் அமர்த்தியா அழைத்து வருவது?’
“இருக்கட்டும்ங்க தாத்தா” என அவரை அனுப்பி வைத்தவனுக்கு அதில் தானும் மனைவியும் செய்வதை யோசித்து பார்த்து சிரிக்க, அந்த நொடி அவனுள் பெரிய ட்யூப்லைட்டே எரிந்தது.
முகம் எல்லாம் புன்னகையோடு காரிலிருந்து இறங்கி இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து மதுரை நோக்கி பயணப்பட்டான்.
செல்லும் வழி எங்கும் பைத்தியம் போல் சிரித்துக்கொண்டே செல்ல அலைகள் வந்து கால்களை மணலோடு மென்மையாக வருடி செல்லும் உணர்வு.
இன்பச்சுவையை ஆசையாக அனுபவித்தவன் அவளது மனதார அழகினில் கட்டுண்டு கிடக்க வாகனத்தின் வேகத்தை அதிகரித்தான்.
மெல்ல முன்னேறி வரும் உறவின் அழகு வார்த்தைகளால் கோர்க்க முடியாதது. நிகழ்தல் ஒரு பெயர்காரனை, வாழ்தல் அதன் உயிர்க்காரணி! எங்கோ படித்தது நினைவில் வந்தது தேவாவிற்கு. இபோழுத்து மொத்த காரணமாக அவளே தெரிந்தாள்.
இரண்டு மாடி கட்டிடமதை ஏக்கமாக பார்த்தவாறு கிளம்ப தயாராக வாகனத்தை திருப்பி நிறுத்தியிருந்தான் தேவா. கணவனை அதிகம் காத்திருக்க வைக்காமல் சில நிமிடங்களே பைரவி வர, இவனை தூரத்தில் இருந்தே பார்த்தவள் இதழ்களில் தித்திக்கும் புன்னகை.
அவனை நெருங்கி வந்து, “ஏன் பைக்?” என்றாள் தெரியாதது போல்.
அவளது சித்திர நயனங்களில் சொக்கி கிடந்தவன் விழித்தெழுந்து, “ஏன் வேணாமா?” என்றான்.
வாகனத்தில் கண்களை ஓட்டவிட்டு, “வேணாம், யார் உங்கள இதுல கொண்டு வர சொன்னது?” கோவத்தை வரவழைத்து முறைத்தாள்.
அவளை முறைத்தவன், “ஏய் ஏறுடி” என்றான்.
“மாட்டேன்” அவன் மனைவி.
“அடிங்க… ஏறு” என்றான்.
“முடி…யாது” அழுத்தமாய் நின்றாள் பைரவி.
‘உன்ன…’ மனதிலே திட்டியவன் வாகனத்திலிருந்து இறங்கி மனைவி கையை பற்றி சாலையோரம் இழுத்தான், “ஆட்டோ” என அழைத்தவாறே.
“ஆனந்த்…” பைரவி அதிர்ந்து விழித்தாள்.
தேவா கை காட்டி அழைத்ததில் பரபரப்பான சாலையில் உடனே ஒரு ஆட்டோ வந்து நிற்க, “போய் ஏறுடி” என்றான் கோவமாக.
“நான் போகமாட்டேன்” கண்களில் பயத்தை தேக்கி வைத்து அவன் கையை உதறி தேவா வாகனம் இருந்த இடத்திற்கு வந்து நிற்க, மறைக்கப்பட்ட புன்னகையோடு வந்து வாகனத்தை எடுத்தான் தேவா.
கணவன் அழைக்காமல் வாகனத்தில் இருபக்கமும் கால் போட்டு பைரவி அமர தேவா வாகனத்தை சாயலையில் செலுத்தினான். வாகனம் சற்று விரைவாக செல்லவும் பிடிமானத்திற்காக தேவாவின் தோளை பைரவி பற்றிட, அவள் கையை எடுத்துவிட்டு,
“நீ தான வர மாட்டேன்னு சொன்ன, இப்ப என்ன மேல கை வக்கிர?”
அவள் பக்கம் சற்று முகத்தை திருப்பி அவன் கேட்டு பொழுது அவன் கேள்வியில் அவள் கவனம் இல்லை, அடங்கவே மாட்டேன் என அவனை போலவே திமிறி ஆடும் அந்த கருமையான சிகையில் தான் பெண்ணவள் கவனம் பதிந்தது.
பைரவி மீண்டும் அவன் தோளில் கை வைக்க மீண்டும் எடுத்துவிட்டான். பெருமூச்சை விட்டு இருகைகளையும் அவன் இடையோடு பின்னிருந்து கட்டிக்கொண்டாள்.
அடிமானது அடிக்கடி அவள் காதில் கத்திகொண்டே இருக்கும், அடுத்தவர் எண்ணங்களை பார்த்து உனக்கான வாழ்க்கையை நீ வாழாமல் விட்டுவிடாதே என.
அவனது வாசத்தை நுகர்வதற்கு சித்தமாகி அவன் முதுகோடு கன்னத்தை வைத்து சாய்ந்தாள்.
அவள் சுவாசத்திற்கு விருந்து படைக்கவே அவன் வியர்வை வாசமாக காத்திருக்க அந்த வாசனை முன்னாள் கந்தங்கள் (செண்ட்) எல்லாம் தோற்று நின்றன.
மனைவியின் மாயவலை எதனால் என புரியாத தேவா வேறோர் உலகில் அவளோடு ஜனித்திருந்தான். உடல் ஒட்டி பசியால் உணவை தேடி அலையும் உறவுகளற்ற நாயை போல் அல்லவா அவளின் உணர்வுகளை தேடி அலைந்தான்.
இன்று அதுவே உச்சக்கட்டம் அடைந்து திக்குமுக்காடி தன்னுடைய மார்பில் சாய்ந்து நிற்க, முதல்மழையில் சிலிர்க்கும் உடல் போல் சிலிர்த்து அடங்கியது ஆசைகள்.
“இப்ப போதுமா?” என்னுடைய திருப்த்தியை கேட்டு அதை நிறைவேற்றினால் இந்த ஆயுள் போதாதே உனக்கு!
அவளிடமே அதை கூற வார்த்தைகள் கூறாமல், தூணை அணைத்து விளையாடும் குழந்தை போல் பட்டும் படாமலும் தரும் அணைப்புகள் போதாது. மனைவி கணவனுக்கு தரும் அணைப்பு தான் வேண்டுமென அவள் கையை பிடித்து இன்னும் தன்னை இறுக்கமாக அணைத்துக்கொள்ள வைத்தான்.
“நான் எப்படியும் போதும் சொல்ல மாட்டேன்” என்றான் வானளாவிய புன்னகையோடு.
புதிய காதலர்கள் போல் கட்டியணைத்து பயணம் செய்வதும் ஒரு காவியமாக தான் இருந்தது. வெட்கம் கொண்டாள் பெண்.
குளத்து மீனிற்கு இறையிட்டு சந்தோஷத்தில் குதிக்கும் சிறிய பாலகன் போல் தான் அவள் மனமும் துள்ளி துள்ளி ஆடியது. வைகையின் அழகும் அவளின் வெட்கப் புன்னகையில் தோற்றுப் போனது
பைக்கின் ரிவியூ மிரரில் மனைவியை பார்க்க முனைய அவள் முகத்திற்கு பதில் தன்னுடைய பிரகாசமான முகம் தான் தெரிந்தது. அதில் பொட்டு வைத்தது போல் அவள் கடித்த சிவந்த தடயம்.
“உன்னால இன்னைக்கு என் மானமே போச்சு தெரியுமா?” அப்பாவியாய் அவன் பேசவும் தலையை உயர்த்தி கண்ணாடி வழியாக கணவனை பார்த்தாள்.
பைரவி, “நானா?”
தேவா, “நீ தான். பைரவன் கடிச்சிட்டானு சொன்னே. வாடா ஊசி போடலாம்னு இழுக்குறாய்ங்க அந்த ரெண்டு கேனப்பயலுக”
வாய் விட்டு சிரித்தாள் அவன் தோளில் சாய்ந்தே, “அப்றம்?” ஆசையாக கேட்டாள்.
“ம்ம்ம் அப்றம் என்ன நாய் கடிக்கல, ஒரு பேய் கடிச்சதுன்னு சொல்லி ஓடியாந்துட்டேன்”
இந்த முறை சத்தமாக சிரிப்பது தேவா முறையாகியது. கணவன் தன்னை பேய் என சொன்னதை கேட்டு அவன் முதுகில் அடி வைத்து அடி வைத்து தனக்கு கை வந்தது தான் மிச்சமானது.